Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, June 13, 2011

குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்

அது கிராமமெல்லாம் இல்லை. சென்னை நகரம் தான். ஆனால்...

"அனு, அனு, அனூஊஊ"

"ஏ அனும்மா...தீபா விளிக்கின்னு."

"அனு, அனு, அனூஊஊ!"

"ஏ..தோ வரேன்பா இரு"

"சீக்கிரம் வா விளையாடலாம்!"

ஓடி வ‌ந்த‌ அனு வீட்டுக் கேட்டையெல்லாம் ஒரு பொருட்டாக‌ ம‌திக்க‌வில்லை. இரு வீடுகளுக்கிடையே பேருக்கு இருந்த‌ க‌ம்பி வேலியின் பெரிய‌ ஓட்டை வ‌ழியே நுழைந்து இந்த‌ப்ப‌க்க‌ம் வ‌ந்து விட்டாள். (காம்பவுண்ட் சுவர்களெல்லாம் அரிது அப்போது.)

"கேக் ப‌ண்ணி விளையாட‌லாமா?"

"ஓ!"

"சரி போய் ஒரு ச‌ர்ட்டை எடுத்துட்டு வா!"

"ச‌ட்டையா அது எதுக்கு?, ம்...ச‌ரி" வேக‌மாக‌ உள்ளே ஓடியவள் வீட்டில் அம்மாவைப் பிடுங்கி ஒரு ப‌ழைய‌ ச‌ட்டையைக் கொண்டு வ‌ருகிறாள்.

"அய்யோ! ச‌ர்ட்டை, ச‌ர்ட்டை...தேங்காய் உடைச்சா கிடைக்குமே..."

"ஓ! கொட்டாங்குச்சியா? அப்ப‌டிச் சொல்ல‌ வேண்டிய‌து தானே?"

ஒரு வ‌ழியாக‌க் கொட்டாங்குச்சி ஒன்றைத் தேடி, வீட்டு முன்புறம் க‌ளிம‌ண்ணில் த‌ண்ணீர் ஊற்றிக் குழைத்துக் கொட்டாங்குச்சி அச்சைக் கொண்டு வித‌விதமாய்க் கேக்குக‌ள். பின்பு அதில் கனகாம்பரம், ந‌ந்தியாவ‌ட்டைப் பூ கொண்டு அல‌ங்கார‌ங்க‌ள். தீக்குச்சி தான் மெழுகுவர்த்தி. வீட்டு வ‌ராந்தா பூரா க‌ளிம‌ண் திட்டாக‌ அழுக்கு. அவர்கள் உடைக‌ளிலும் தான்.

ச‌மைய‌ல் ப‌ண்ண‌லாமா? க‌ளிம‌ண் சாத‌ம், கூழாங்க‌ல் பிரியாணி, ப‌ச்சை இலை காய்க‌றிகள், செங்க‌ல் பொடி அரைத்துக் குழ‌ம்பு. இந்த‌ச் செங்க‌ல்பொடியை ம‌ட்டும் நாளெல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள். யார் அதிக‌ம் அரைக்கிறார்க‌ள் என்று போட்டி வேறு.

எங்கிருந்தோ வ‌ந்து விடுவார்க‌ள் த‌ம்பி வான‌ர‌ங்க‌ள். "நாங்க‌ சாப்பிட்டுப் பாக்கிறோம்... நிஜ‌மாக‌வே வாயில் வைத்துச் சுவைத்துத் "அய்யோஒ தூ தூ" என்று துப்புவார்க‌ள். இத‌ற்கு அப்படி ஒரு சிரிப்பு, துர‌த்திக் கொண்டு அடிக்க‌ ஓடுவ‌து...

அடிபட்ட அணிலொன்றைப் பிடித்துக் கொண்டு வந்து அதைப் படுத்திய பாடு. "அதை விட்டுடுங்கடா, பாவம்" ன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை. இங்க்ஃபில்லரில் அதற்குப் பாலூட்டுவது, பழம் கொடுப்பது என்று இவர்களின் உற்சாக வைத்தியத்தில் அது விரைவில் குணமாகி ஓடிப் போய்விட்டது.

கிண‌ற்ற‌டியில் அடிமுத‌ல் கிளைக‌ள் ப‌ர‌ப்பி நின்ற‌ கொய்யா மர‌ம். அனு நிஜ‌மாக‌வே ந‌ன்றாக‌ ம‌ர‌மேறுவாள். ஆளுக்கொரு கிளையில் அம‌ர்ந்து கொண்டு ஏதாவ‌து விளையாட்டு.

பாண்டிக் க‌ட்ட‌ம் போட்டு நொண்டிய‌டித்து விளையாடுவ‌து. பாண்டிச்சில்லுக்கு ஒரு அஞ்சாறு சில்லு வைத்திருப்பது. அவ‌ர‌வ‌ர் அதிர்ஷ்ட‌ச் சில்லு கொண்டு தான் விளையாடுவ‌து.

குல்மோஹ‌ர் பூக்க‌ளின் மொட்டுக்க‌ளை உரித்து அந்த‌ இத‌ழ்க‌ளை ஐந்து விர‌ல்க‌ளிலும் ந‌க‌ம் போல் ஒட்டிக் கொள்வ‌து... (ச‌ரியாக‌ ஐந்து இத‌ழ்க‌ள் தான் இருக்கும் அதில்) ஆஹா!

தென்ன‌ங்குறும்பியில் ஈர்க் குச்சி குத்தி வ‌ண்டி, ப‌ம்ப‌ர‌ம், செய்வ‌து அதையே ஸ்ட்ராவாக‌ வைத்து இள‌நீர் விற்ப‌து...

இதெல்லாம் விரைவில் போரடித்து விடும். அப்புறம் இருக்கவே இருக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஓராயிரம் வகைகள். கண்ணா மூச்சி, கல்லா மண்ணா, லாக் அன்ட் கீ, நொண்டியடிப்பது, காலைத் தொட்டுப் பிடிப்பது, சங்கிலியாகச் சேர்த்துக் கொண்டி பிடித்து விளையாடுவது ...ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வகைகள்?
ஊரிலிருந்து வருபவர்கள் "இதை நாங்க‌ எப்ப‌டி விளையாடுவோம் தெரியுமா" என்று ஆர‌ம்பித்துச் சொல்லிக் கொடுப்ப‌து அந்த‌ப் புதிய‌வ‌ருக்கு இருக்கும் வ‌ர‌வேற்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள‌வோ நிராக‌ரிக்க‌வோ ப‌டும்!

கண்ணாமூச்சி என்றால் கையில் மண் குவித்து அதில் ஒரு பூவையோ கல்லையோ நட்டு வைத்து, அவர் கண்ணைமூடி வீட்டைச் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ அழைத்துச் சென்று ஒரு இடத்தில் மண்ணைக் கொட்டச் சொல்ல வேண்டும். பின்பு மீண்டும் கண்ணைமூடி அழைத்து வந்து வேறோரிடத்தில் விட்டு விட வேண்டும். இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். (இது நாங்கள் அதிகம் விளையாடாத, என‌க்கு ரொம்ப‌ப் பிடித்த‌ விளையாட்டு!)

உட்கார்ந்து விளையாடுவதென்றால் க‌ருங்க‌ல் பொறுக்கி, சிமென்டுத் த‌ரையில் ஓர‌த்தையெல்லாம் தேய்த்து ம‌ழ‌ம‌ழ‌வென்றாக்கி, அஞ்சு க‌ல் விளையாடுவ‌து...
குச்சிக‌ளைப் பொறுக்கிக் க‌லைத்துப் போட்டு அசையாம‌ல் எடுப்பது.

இது தவிர கதைகள் சொல்லி மகிழ்வது. விளையாட்டுகளில் பின் த‌யங்கினாலும் அம்புலிமாமா, ரத்னபாலா என்று க‌தைப் புத்தகங்கள் அதிகம் படிப்பவர்களுக்குத் மவுசு கூடுவது இப்போது தான்! :-)


ஆச்சு, பொழுதாகி விட்ட‌து. குளிக்க‌ வேண்டும். கிண‌ற்றடிக்குப் போய்க் க‌யிற்று வாளியைத் தொப்பென்று கிண‌ற்றில் போட்டு, 'ப்ளக்' என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் வாளி நிர‌ம்புகிற‌து. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌ க‌யிற்றை இழுப்ப‌த‌ற்குள் உள்ள‌ங்கை சிவ‌ந்து வ‌லிக்கிற‌து. வாளியைக் கைப்பிடித்து இழுத்து மேலே கொட்டிக் கொள்ளும் போது...ஆஹா!

குழந்தைகளின் பாத‌ங்க‌ளிலும் கைந‌க‌ங்க‌ளில் உறைந்து போன‌ க‌ளிமண் க‌ரைந்து வெளியேறுவ‌தைப் பார்த்துக் கொண்டே அந்திச் சூரிய‌ன் விடைபெறுகிற‌து.

இன்று...

இருந்த கொஞ்சம் க‌ல்லும் ம‌ண்ணும் கான்க்ரீட் க‌ல‌வையில் சேர‌ப் போய்விட்ட‌ன‌. ம‌ர‌ங்க‌ள் எல்லாம் ஃப்ளாட்டுக‌ள் க‌ட்ட‌ வ‌ழிவிட்டு பூமிக்குள் ப‌துங்கி ம‌க்கிவிட்டன. கூடுக‌ட்ட‌க் குச்சிக‌ளில்லாம‌ல் குருவிக‌ளே காணாம‌ல் போய்விட்ட‌ன‌.

அனுவுக்கு இருமகள்கள். தீபாவுக்கும் அப்படியே. இருவரும் இன்றும் அருகருகே தான் வசிக்கிறார்கள். குழ‌ந்தைகள் டிஸ்க‌வ‌ரி சான‌லில் "அணிலையும் குல்மோஹ‌ர் பூவையும் க‌ண்டு "இது என்னம்மா?" என்று அதிச‌யித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.
(பி.கு: அலுவலகத்தில் இருந்தபோது நேஹா நினைவு வந்தது. கொஞ்ச நேரம் டிவி பார்த்த பிறகு பாட்டியுடன் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அப்போது தோன்றியது, இதே வயதில் நம்ம என்ன பண்ணிட்டிருந்தோம்?)

Sunday, February 27, 2011

What's (not) in a name?!

என்னத்த எழுதறதுன்னு ஒரு மனநிலையில் இருக்கும் போது இப்படி தொடர் பதிவு, அதிலும் சொந்தக் கதை எழுதக் கூப்பிட்டா ஈஸியாத்தான் இருக்கு. அஃப்கோர்ஸ் எழுதற எனக்கு மட்டும் தான் ஈஸி!

என் முழுப்பெயர் தீபலக்ஷ்மி. இதை இப்போதெல்லாம் தீபலட்சுமி என்றும் எழுதினால் ஏற்றுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பிடிக்காது.

என் அக்காவுக்கும் அண்ணனுக்கும் உண்மையில் அரிதான் அழகான பெயர்கள். காதம்பரி, ஜெயசிம்மன். நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், உனக்கு மட்டும் ஏன் அப்படி அழகான பெயர் வைக்கலன்னு. என் அண்ணனும் அவன் பங்குக்கு முடிந்தவரை இது பற்றி வெறி கொட்டியிருக்கிறான்.

வீட்டில் கேட்ட போது நீ தீபாவளி அன்னிக்குப் பிறந்ததால் தீபான்னு வெச்சோம். லக்ஷ்மி சேத்தா இன்னும் நல்லா இருக்குமேன்னு நினைச்சோம்னு. எனக்கு என் பெயர் பற்றிப் பெருமையும் இல்லை, பெரிதாக வருத்தமும் இல்லை. என் நெருங்கிய தோழி ஜோதிலட்சுமி. அவளுக்கும் பெயரில் லட்சுமி இருப்பது பிடிக்காது. எங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. எந்த ஆசிரியையாவது என்னை தீபா எனறும் அவளை முழுப் பெயர் சொல்லியும் அழைத்து விட்டால் போச்சு. அவள் மூட் அவுட் ஆகி விடுவாள். இது ரிவர்சில் நடந்தால் நான் ரொம்பப் பொருட்படுத்த மாட்டேன். மீ குட் கேர்ல் நோ!?

ஆனால் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களான போது பலரும் எங்கள் பெயர்ப் பொருத்தத்தைக் குறிப்பிட்டுப் பேசும் போது இருவருக்குமே பெருமையாக இருக்கும். நாங்கள் சேர்ந்து சொந்தமாக லைபரரி வைக்க வேண்டும், ஸ்கூல் நடத்த‌ வேண்டும் என்றெல்லாம் கனவுகளுடன் பேசிக் கொண்ட போது அதற்கு 'தீப்ஜோதி' என்று நாமகரணம் சூட்டிப் பரவசப்பட்டிருக்கிறோம்.

ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் அதிகம் படித்த காலத்தில் இங்கிலிஷ் பெயர்களின் மீது மோகம் இருந்தது. எனிட் ப்ளைடன் கதைகளில் வரும் சிறுமிகளின் பெயர்களெல்லாம் அழகாகத் தோன்றி இருக்கின்றன. பெஸ்ஸி, கோனி, ஜார்ஜினா என்ற பெயர்களெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.அதே போல் ஆர்ச்சி காமிக்ஸில் வரும் பெட்டி, வெரோநிகா.

அம்புலி மாமா கதைகளில் வரும் அழகான தமிழ்ப்பெயர்கள் மீதும் காதல் இருந்தது. வெயில்கால மதிய‌ நேரங்களில் உட்கார்ந்து 'கதை பண்ணி' விளையாடும் போது ராஜா ராணி இளவரசிக்கெல்லாம் அழகழகாக்ப் பெயர் சூட்ட உதவியது அம்புலிமாமா கதை மாந்தர்கள் தாம்.

குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் தான் சூட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் நேஹா என்ற பெயருக்கு 'அன்பு' என்று அர்த்தம் இருப்பதாலும் ஏனோ ரொம்பப் பிடித்துவிட்டது.

என் சித்தப்பா தனது மூன்று மகள்களுக்கும் அழகான தமிழ்ப்பெயர் சூட்டி இருக்கிறார். பூங்குழலி (பொ.செ இன்ஸ்பிரேஷன்), வண்டார்குழலி, மற்றும் கார்குழலி.
வீட்டில் இவர்கள் முறையே அமுதா அருணா மற்றும் வனிதா. இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியைகள் "ஏங்க நீங்க மட்டும் வீட்ல கூப்பிட ஈஸியான பேரா வெச்சிட்டு, எங்கள இப்டி ட்ரில் வாங்குறீங்களே" என்று கமென்ட் அடித்ததுண்டு.

தன் பெயரைக் "காதுக்குள்ள ஈ" என்று சக மாணவர்கள் கேலி செய்வதாகக் கார்குழலி சொல்லிச் சிரித்ததுமுண்டு. ஆனாலும் குழலி சிஸ்டர்ஸ் பெயருக்காகவே பிரபலம் தான்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஊரெல்லாம் வைத்த அளவு என் பெயர் ரொம்பப் பிரபலமும் (common) அல்ல, ரொம்ப அரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. ஆனாலும் தீபா என்ற என்ற பெயர்ச் சுருக்கம் எனக்குப் பிடிக்கும் தான். அதிலும் என் மீது மிக்க அன்புள்ளவர்கள் தீபூ என்று அழைப்பது மிகவும் பிடிக்கும். அப்படி என்னை அழைப்பவர்கள் ரொம்பக் கம்மி. என் ரூம்மேட் சுதா, எப்போதாவது அங்கிள், சில உறவினர்க்ள், இப்போது ஜோ! என்ன கோபமாக இருந்தாலும் தீபூ என்று அழைத்துச் சண்டை போட்டால் நான் தணிந்து விடுவேன். இந்த ரகசியம் அவருக்குப்பல சமயம் மறந்து விடுகிறது, என்ன செய்வது!

கல்லூரியில் பெரும்பாலும் நண்பர்களுக்கு நான் 'தீப்ஸ்'. அப்போது தான் ஒரு சுவாரசியமான விஷயம் கண்டுபிடித்தேன். நடந்து செல்லும் போது சில சமயம் பசங்க ஸ்பீட் ஸ்பீட் என்று கத்துவார்கள். எதுக்குடா நமக்கு இப்படி ஒரு பெயர்னு எனக்குக் குழப்பம். பிறகு தெரிந்தது Deeps ஐத் திருப்பி எழுதினால் Speed என்று. அட நம்ம பேர்ல இப்படி ஒரு விஷய்ம் இருப்பது நமக்கே இதுவரை தெரியவில்லையே என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!

இத்துடன் என் பெயர்ப் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்! அழைத்த அகில்ஸுக்கு நன்றி!

Thursday, December 9, 2010

சைக்கிள்...


எனக்கு மிகவும் பிடித்த வாகனம் என்றால் யோசிக்காமல் சொல்வேன், சைக்கிள் தான்.
சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி, செலவும் இல்லை, சுற்றுச் சூழல் மாசும் இல்லை. இருந்தும் இந்த அழகிய வாகனத்தை நாம் புறக்கணிப்பது ஏன்? பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் டூ வீலர் வாங்கித் தருகிறார்கள். இது சரியான போக்காக எனக்குப் படவில்லை.

எனக்குச் சைக்கிள் ஆசை வந்ததே பள்ளியில் பெரிய வகுப்புப் பெண்கள் ஒயிலாக ஏறி அமர்ந்து வருவதைப் பார்த்துத் தான். அதுவும் துப்பட்டாவைப் பின்புறம் கவனமாக முடிச்சிட்டு, ஸ்டாண்டைத் தள்ளி விட்டு ரன்னிங்கில் ஏறும் அக்காக்களைக் கண் கொட்டாமல் பார்ப்பேன்.முதன் முதலில் சைக்கிள் கற்றுக் கொண்டது அண்ணன் வைத்திருந்த சின்ன பைசைக்கிளில்.

நான் ஆறாவது வரை ரிக்ஷாவில் தான் பள்ளிக்கூடம் போனேன். ஏழாவது வரும் போது 'சே, இன்னுமா இந்த ரிகஷாவில் சின்னப் பிள்ளைகளுடன் போவது? எப்படியாவது இந்த வருடத்துக்குள் சைக்கிள் வாங்கி விட வேண்டும்' என்ற எண்ணத்தில், ரிக்ஷாவில் போகமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் ஏழாவதும் எட்டாவதும் நடந்தே சென்றேன். ஒன்பதாம் வகுப்பு வந்த போது தான் அப்பாவுக்கு எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க மனம் வந்தது. அப்போது தான் நான் ஓரளவு ஒழுங்காக ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.

சைக்கிள் ஓட்டப் பழகிய காலங்கள்...ஆஹா! எட்டாவது லீவில் எனக்கும் பக்கத்து வீட்டு அனுவுக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலையே வாடகை சைக்கிள் எடுக்க‌ச் செல்வது தான். இரண்டு ரூபாய் கொடுத்து "அனு, தீபா" என்று பெயர் சொல்வாள். (எப்போதும் அவள் பெயரைத் தான் முதலில் சொல்வாள். டாமினேட்டிங் ஃப்ரென்ட்!)

சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும்.
பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது. போனால் போகிறதென்று கடைசி பத்து நிமிடங்கள் அவளது தம்பிகளுக்குக் கொடுப்போம். அவர்களிட்மிருந்து சைக்கிளைப் பிடுங்கிக் கடைக்குக் கொண்டு செல்வது பெரும்பாடு.

சைக்கிளின் மீது தீராத மோகம் வந்ததற்கு இன்னொரு காரணம் நூலகம். அப்போதெல்லாம் உலகிலேயே நீ மிகவும் விரும்பும் பொருள் என்னவென்று கேட்டால் அசோக் பில்லர் பப்ளிக் லைபரரியில் ஒரு மெம்பர்ஷிப் கார்டும் ஒரு சைக்கிளும் தான் என்று சொல்லி இருப்பேன். சைக்கிளில் லைப்ரரிக்குச் சென்று கேரியர் கொள்ளாமல் புத்தகங்கள் அள்ளி வருவது தான் என் கனவு. ஆனால் அந்த மெம்பர்ஷிப் கார்டு வேண்டுமென்றால் பள்ளித் தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும். போய்க் கேட்டிருந்தால் "அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம், பாடங்களைப் படிக்கிறதை விட்டுட்டு லைப்ரரி கார்ட் எதுக்கு?" என்று கடி வாங்குவது நிச்சயம் என்பதால் கேட்கத் தைரியம் வரவே இல்லை.

ஆசைகளில் ஒன்று நிறைவேறியது. ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் சைக்கிள் வந்தது. ஆனால் வாடகைக் கடையில் எடுத்து ஓட்டியதெல்லாம் ட‌யர் பெரிதாகவும் உயரம் கம்மியாகவும் இருந்த‌ ஹீரோ சைக்கிள்கள். புதிதாக வாங்கிய பி.எஸ்.ஏ எஸ் எல் ஆர் உயரமாகவும் டயர்கள் மெலிதாகவும் கொஞ்சம் பயமுறுத்தியது. அதனால் பேலன்ஸ் தவறி விழுந்து வாரியது, மெயின் ரோட்டில் புத்தகப்பை கேரியரிலிருந்து நழுவி ஓடிச் சென்று எடுத்தது என்று காமெடிகள் ஏராளம் அரங்கேறின.

ஆனால் ஒரு சில வருடங்களிலேயே பெல்லும் இல்லாமல் ப்ரேக்கும் இல்லாமல் துரைசாமி சப்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓட்டும் அளவுக்குக் கேடி ஆகி விட்டேன்! டபிள்ஸ் அடிக்கவும் தான்.

அந்தச் சைக்கிளைத் தான் கல்லூரிக்கும் கொண்டு சென்றேன். கோவை மாநகர வீதிகளிலும் கல்லூரி கேம்பஸிலும் ஆனந்தமாய் உலா வந்தது என் அருமை பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆரில் தான்.

கல்லூரி விட்டு வரும் போது யாரோ கேட்டார்கள் என்று யோசனையில்லாமல் அதை முன்னூறு ரூபாய்க்கு விற்று விட்டு வந்து விட்டேன். (அது இருந்த நிலைமைக்கு அது நல்ல பேரம் தான்!)

வீட்டுக்கு வந்ததும் வேலை தேடும் படலங்களில் முக்கிய அம்சங்களான கம்ப்யூட்டர் க்ளாஸ், ப்ரௌசிங் சென்டர், இவற்றுக்குப் போய் வருவதற்காக வாகனம் தேவைப்பட்டது. வழக்கமாக இந்தக் காலகட்டத்திலாவது சைக்கிளிலிருந்து பலரும் ஸ்கூட்டி அல்லது கைனடிக் ஹோண்டாவுக்கு மாறுவார்கள். என் தோழிகளில் பலரும் கல்லூரிப் பருவத்திலேயே அவற்றுக்கு மாறி இருந்தார்கள். அனு சைக்கிளை விட்டொழித்து டிவிஎஸ் 50 வைத்திருந்தாள் அப்போது. ஆனால் நான் சைக்கிளே வேண்டுமென்று கேட்டேன். ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது என்பதும், பெட்ரோல் செலவுக்கு அப்பாவைத் தொந்தரவு செய்யப் பிடிக்கவில்லை என்பதும் காரணம்.

மீண்டும் ஒரு சைக்கிளே வாங்கினேன். (செகன்ட் ஹான்ட் என்றாலும் நன்றாகவே இருந்தது.)

இந்தச் சைக்கிளில் தான் என் முதல் வேலைக்குச் சென்றது. வீட்டுக்கு மிக அருகிலேயே அலுவலகம் இருந்ததால் பஸ், ஆட்டோ, நடை என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல் சைக்கிளில் சென்றேன். ஆனால் அதே தொலைவில் இருந்து வந்த என் மற்ற அலுவலகத் தோழிகள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தும் கூட அதில் வரக் கூச்சப்பட்டது ஏனென்று எனக்குப் புரியவே இல்லை.

அனுவின் தம்பி (அப்போது கல்லூரி மாணவனாகி இருந்தான்) நான் சைக்கிளில் கிளம்பும் போதெல்லாம் "அய்யோ தீபா, ஏன் இப்படி தம்பி மானத்த வாங்கறே. ஆட்டோல போகக் கூடாதா" என்று கிண்டல் செய்வான். சிரித்து விட்டுச் சொல்வேன். "டேய், உங்கப்பா ரிட்டையராகற வரைக்கும் அதோ நிக்குதே அந்த சைக்கிளில் தானேடா 35 கிலோமீட்டர் ஒட்டிட்டு வேலைக்குப் போனார்? எனக்கு சைக்கிள்ல போறது பெருமையாத் தான் இருக்கு." அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு முறை சிக்னலில் நிற்கும் போது, கேரியரில் வைத்திருந்த என் பர்ஸை எவனோ (அல்லது எவளோ) அடித்து விட்டார்கள். அதனால் அப்பா என் சைக்கிளுக்குப் பக்கவாட்டில் பூட்டுப் போட்ட ஒரு பெட்டி பொருத்தித் தந்தார். இது இன்னும் கேலிப் பேச்சுகளுக்கு வழி வகுத்தது. "டப்பா சைக்கிள்!" நான் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே.
விபத்து ஒன்றுக்குள்ளாகி அந்தச் சைக்கிள் நசுங்கிப் போகும் வரை அதில் தான் அலுவலகம் சென்று வந்தேன்.

அலுவலகத்துக்கு மட்டுமல்ல, டி.நகரில் ஷாப்பிங் செய்ய, துரைசாமி சப்வேக்கு மேலே இருந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் அம்மாவுக்கு மருந்து வாங்கி வர, தண்ணி டாங்கிலிருந்து கயிறுகட்டிக் குடங்கள் எடுத்து வர என்று எல்லாவற்றுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது சைக்கிள் தான். அது நொறுங்கிய போது மிகவும் வேதனைப்பட்டேன்.

சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சைக்கிள் வாங்கினேன்; அது வீம்புக்காக. ஜோவை நேசிக்கத் தொடங்கிய காலத்தில் அவன் சொன்னான், "நான் பைக் வாங்கும் போதே ஸாரி கார்ட் எல்லாம் வெச்சு வாங்கினேன். என்னிக்காவது நீ உட்காருவேன்னு." என்று. ஏனோ இது சந்தோஷம் அளித்தாலும், 'பைக்கின் பின்னாடி உட்கார்வது' என்பது ஏனோ என் கௌரவத்துக்கு இழுக்காகத் தோன்றியத.

அடுத்த சில நாட்களிலேயே ஒரு புத்தம்புதிய லேடிபேர்ட் சைக்கிள் வாங்கினேன். அதிலேயே அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தேன். ஜோவுக்குச் செம கடுப்பு. ரொம்பக் கோபமாக இருந்தான், சைக்கிள்லே வராதே என்று கெஞ்சவும் ஆரம்பித்தான்.

சில மாதங்களுக்குள் இருவருக்கும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துப் பிரிந்தவுடன், சைக்கிளுக்கு வேலையில்லாமல் போனது. (பைக்குக்கு அதிகமாக வேலை வந்தது!)
அவசர வாழ்க்கைக்கு உதவும் வகையில் இப்போது ஸ்கூட்டி இருந்தாலும் சைக்கிள் மீதிருந்த ஆசையும் மதிப்பும் என்றுமே போகாது.

Monday, October 18, 2010

ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்!

நேஹாவை நேற்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தோம்.சென்ற மாதமே சேர்த்துவிட விரும்பினேன். ஆனால் அடுத்தமாதம் விஜயதசமியோடு தான் சேர்க்கை நடக்கும் என்று சொல்லி விட்டார்கள்.அவளும் ஒரு மாதமாக அந்தப் பள்ளியின் பெயரைக் கூறிச் சேரப்போவதாக எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள்.

நேற்றுப் போய் பணம் கட்டி விட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்து, சொன்ன விதிமுறைகளுக்கெல்லாம் சிறிது நேரம் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்து விட்ட பின் குழந்தைகளையும் பெற்றோரையும் ஆக்டிவிட்டி ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள்.

நான்கு பேர் அமரக்கூடிய தாழ்வான மேஜை நாற்காலிகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோரையும் ஒரு மேஜையைச் சுற்றி அமரச் செய்து, வண்ணம் தீட்டும் புத்தகம் ஒன்றைக் கொடுத்து வர்ணம் தீட்டச் சொன்னார்கள்.

சில குழந்தைகள் சமர்த்தாகச் செய்ய ஆரம்பித்தன. நேஹா வயதுடைய ஒரு சிறுமி அழகாக கோடுகளுக்குள் சொன்னபடி தீட்டிக் கொண்டிருந்தாள்.
நேஹா என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமும் படபடப்பும் வந்தது எனக்கு. அவளை அழைத்து அமரச் சொல்லித் தேடினேன். பார்த்தால், அங்கு கரும்பலகையருகே நின்று கொண்டு சாக்பீஸால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். யார் கூப்பிட்டாலும் வரவே இல்லை. அழைப்பவர்களுக்கு சரமாரியான வசவு வேறு. :(

அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு சிறுவனும் எழுந்து போய் கிறுக்கத் தொடங்கி விட்டான். அவனிடம், "நீ ஏ எழுது, நான் பி எழுதறேன். ஏய், இந்தப் பக்கம் இல்ல, அங்க போய் எழுது" என்று கட்டளைகள் தூள் பறந்தன. " ஆசிரியை எவ்வளவு அன்புடன் அழைத்தும் "ம் வரமாட்டேன்.. போ!" எங்கள் மேஜைஅருகே வரவும் இல்லை அந்தப் புத்தகத்தைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. என்ன வளர்த்திருக்கிறார்கள் என்று நினைத்திருப்பார்களோ? :-(


கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். அவளாகவே கூட இருந்த‌ சிறுமியைப் பார்த்து "உன் பேர் என்ன, என் பேர் நேஹா" என்றாள். பொதுவாக அங்கிருந்த குழந்தைகளுடன் பேசவும் விளையாடவும் விரும்பினாள். பெரியவர்களை மதிக்கவே இல்லை. தர்மசங்கடத்துடன் அழைத்து வந்தோம். அவள் அப்பா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக்குத் தான் இவள் எப்படிப் பள்ளியில் ஒழுங்காக இருப்பாளா, டோட்டோ சான் மாதிரி விரட்டப்பட்டு விடுவாளா என்றெல்லாம் விபரீதக் கற்பனை வளர்ந்தது.

இன்று முதல் நாள். காலையில் எழுப்பிக் குளிக்க வைத்து, எப்படியோ ஒரு தோசை சாப்பிட வைத்து அழைத்துச் சென்றோம். புறப்படும் முன் அவளுக்கு வாங்கி இருந்த பை, ஸ்னாக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்தாயிற்றா என்று நூறு முறை கேட்டுச் செக் செய்து கொண்டாள்.


அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பிஞ்சுகளின் அழுகுரல்கள் காதைக் கிழித்தன. அந்தப் பெரிய கறுப்பு கேட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நான்கைந்து அம்மாக்கள் தவிப்புடன் நின்று கேட்டில் இருந்த சின்ன இடைவெளி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்திலெல்லாம் கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் தர்மசங்கடம், கொஞ்சம் வேதனை,அதையும் மீறி சேய்ப்பறவைக்கு முதல் சிறகு முளைத்து விட்ட ஒரு வகையான ஏக்கம் கலந்த நிம்மதி என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்ச்சிக் கலவை தென்பட்டது. எனக்கும் தான்!


நேஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு கண்ட காட்சி!மூன்று ஆசிரியர்கள், மூன்று காப்பாளர்கள், அனைவரும் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாய் அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்தும் பிரம்மபிரயத்தனத்தில் இருந்தார்கள். குழந்தைகளைவிட இவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதுவரை அழாதவள் எங்கே இந்தக் களேபரத்தைப் பார்த்து அழத்தொடங்கிவிடுவாளோ என்று பயந்தேன்.


அதற்குள் அவளை வந்து வாங்கிக் கொண்ட ஆசிரியை 'குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேகமாக வெளியே சென்று விடுங்கள்' என்று எங்களைக் கிட்டத் தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுவிட்டார்கள். ஏனென்றால் லேசாகக் கதவு திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விடத் தயாராக இருந்தன.

ஆனாலும் பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிய பெரிய திறந்தவெளியும் காற்றோட்டமான கூடங்களும் அங்கு இருந்தததால் (ஏசி இல்லை!) எனக்கு அந்தப் பள்ளி பிடித்துத் தான் இருந்தது.

முதல் ஒரு வாரம் ஒரு மணிநேரம் மட்டும் விட்டு விட்டு வந்து அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார்கள். நான் அலுவலகம் செல்லும் போது என்னைப் பிரிந்து இருந்து பழக்கம் தான் என்பதால் அவள் அழமாட்டாள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் முதல் முறை முன்பின் அறியாதாவர்களிடம் விட்டு வந்ததால் கொஞ்சம் ஒரு மாதிரியாகவும் இருந்தது.

பத்தரை மணிக்கு நாங்கள் (நாளை முதல் அவளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போகும் அகிலா அக்காவும் நானும்) சென்ற போது பெரும்பாலான பிள்ளைகள் அழைத்துச் செல்லப் பட்டு இருந்தார்கள். "நேஹா எங்கே" என்று கேட்ட போது, சிரித்துக் கொண்டே வ்ந்த ஒரு ஆசிரியா, "நேஹா அழவே இல்லை. ரொம்ப எஞ்சாய் பண்ணினா. என்ன, அவளுக்கு நீங்க குடுத்த் ஸ்ந்னாக்ஸைத் தவிர எல்லார் ஸ்னாக்ஸையும் வாங்கிச் சாப்பிட்டா." என்றார். அசடு வழிந்து கொண்டே "ஹி ஹீ." என்றேன்.மனதிற்குள் "அதுக்குள்ளே மானததை வாங்கிட்டாளே...வாடி, உனக்கு இருக்கு" என்று கறுவிக் கொண்டேன்.

புதுவிதமாய் ஒரு அனுபவம் வாய்த்த சந்தோஷத்துடன் வெளியே வந்தவள்எங்களைப் பார்த்தவுடன் ஓடியெல்லாம் வரவில்லை. வழக்கம் போல் "என்ன வாயின்ட்டு வந்துக்கே" என்றாள். பின், "ஜூலா கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரேன்" என்று வெளியிலிருந்த் ஊஞ்சலிலும் சீசாவிலும் அமர்ந்து விளையாடினாள். அங்கிருந்து அழைத்து வரத்தான் கொஞ்சம் பாடுபட்டோம்.

இன்று இப்படி. இனி வரும் நாட்கள் எப்படியோ! அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்து புகார் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருக்கிறது.

Tuesday, October 12, 2010

நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...

குடியைப் பற்றி இந்தப் பதிவைப் படித்த‌தும் எனக்கு இன்னொரு விஷயத்தைப் பற்றி எப்போதோ எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்த இந்த‌ இடுகை நினைவுக்கு வந்தது. அது வேறோன்றுமில்லை - சிகரெட்! எனக்குச் சின்ன வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.

ரோட்டோரமாக‌ வெட்டியாக நின்று போகிற வருகிற பெண்களைக் கவர்வதற்காகப் பிலிம் காட்டுவார்களே, அதுவல்ல‌. சீரியஸாக ஏதாவது வேலை செய்து கொண்டே, (அல்லது புத்தக‌ம் படித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு) சிகரெட் பிடிப்பதைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.

வீட்டில் மோட்டார் ரிப்பேர் பார்க்க, ப்ளம்பிங் வேலை செய்ய ஒருவர் வருவார். அவர் வாயில் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். வேலையினூடே சிகரெட்டைத் தன் அசிஸ்டென்டிடம் கொடுத்து விட்டு, அவ்வப்போது திரும்பிப் பார்க்காமல் கை நீட்டி வாங்கிக் கொள்வார். அந்த‌ச் செய்கையை ஏனோ ரொம்ப‌ ர‌சித்திருக்கிறேன்.

என் வீட்டில் எல்லா ஆண்களுமே (except Joe) இந்த விஷயத்தில் கெட்டுக் குட்டிச் சுவ‌ரான‌ த‌ண்ணி தெளிச்சு விட்ட‌ கேஸ்க‌ள் தான். அதுவும் நம் அபிமானப் ப‌திவர் இருக்கிறாரே, ஆண்டு தோறும் கடமை தவறாமல் என் அக்காவின் பிறந்த நாளன்று இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்துவார்!

அப்பா சிகரெட்டாகப் பிடித்துப் பார்த்ததில்லை. பைப்பில் புகையிலை போட்டுப் பிடிப்பார். ஆனால் எனக்கு பைப்பை விட விரல்களினூடே மெல்லிசாய்ப் புகை கசியும் சிகரெட் மீது தான் ஈர்ப்பு!

வளர்ந்ததும் பெண்ணாகி விடுவோம், நமக்கென்று வேறு வரையறைகள் இருக்கும் என்றெல்லாம் உணராத பருவம் அது. சயின்டிஸ்டாக வேண்டும் என்ற கனவு இருந்த போது கூட, தாடியும் கண்ணாடியுமாக என்னை உருவப்படுத்திப் பார்த்துக் கொண்ட ஞாபகம் வருகிறது! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் நாமும் சிகரெட் பிடிக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன்.

க‌ல்லூரியில் எப்போதும் ரேனால்ட்ஸ் பேனாவை வாயில் வைத்து ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பிறந்த நாளன்று ந‌ண்ப‌ர்கள் சிக‌ரெட்டும் திப்பெட்டியும் ப‌ரிச‌ளித்ததும், நானும் வீம்புக்கு வ‌குப்ப‌றையிலேயே அதைப் ப‌ற்ற‌ வைத்த‌தும் ப‌யந்து அவ‌ர்க‌ள் ஓட்ட‌மெடுத்த‌தும் நினைவுக்கு வ‌ருகிற‌து. ஆனால் என‌க்குச் சரியாகப் பிடிக்க‌த் தெரிய‌வில்லை. க‌ச‌க்கி எறிந்து விட்டேன்.

பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின், சிகரெட்டால் விளையும் கேடுகள், சீர் குலைந்த குடும்பங்கள், முக்கியமாய்ச் சதா சிகரெட் பிடித்து டிபி வந்து இறந்த எத்தனையோ பேரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு சிகரெட் மீது தீரா வெறுப்பு வந்தது உண்மை. குடிப்ப‌தை விட‌ மோச‌மாக‌வும் வேக‌‌மாக‌வும் ஆட்கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இது என்ப‌தையும் உண‌ர்ந்து கொண்டேன்.

இருந்தாலும் புகையிலைக்குப் ப‌திலாக‌, வேறேதாவ‌து, புகையாக‌ உட‌லுள்ளே சென்றால் ந‌ன்மை அளிக்க‌க் கூடிய‌ மூலிகை சிக‌ரெட் த‌யாரிக்க‌லாம் தானே?அப்ப‌டி சிக‌ரெட்டுக‌ள் வ‌ரும் நாளில் பெண்க‌ள் கூட ஸ்டைலாகப் புகை பிடித்துக் கொண்டு பாட‌லாம்..."நான் த‌ம்ம‌டிக்கிற‌ ஸ்டைல‌ப் பாத்து த‌ன‌சேக‌ர் விரும்புச்சு..."

Thursday, September 2, 2010

ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்

முந்தா நேற்று மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். பெண் குழந்தை; எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண். என் மகள் நேஹாவைப் பார்த்த‌தும், ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். இவளும் 'அக்கா அக்கா' என்று அவளுடன் விளையாட‌த் துவ‌ங்கி விட்டாள்.

நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. "ஆன்டி, உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்..."

சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, "அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ ஆன்ட்டி கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை. அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.
அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.

ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ப‌த்து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி?

நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?

பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, 'கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க' என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.

அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் ஆயாசமடைந்து நேஹாவே ‌ச‌ம‌த்தாக‌ என் ம‌டியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!

அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது, டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, "யாரு உங்க‌ பொண்ணா?" என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், "தேங்க்யூ மேம்" என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.

உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.

பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?

உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.

அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?

இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:
அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த‌ இடுகையினைப் பாருங்க‌ள். முர‌ட்டுத்த‌ன‌ம் மிகுந்த‌ ஒரு சிறுவ‌னை ஒரு ப‌ள்ளியில் எப்ப‌டி மாற்றி இருக்கிறார்க‌ள் என்று.

ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?

Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: "க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை" என்று. அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.

போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய‌ வியாபார உல‌க‌த்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்ட‌தோ?

Friday, August 13, 2010

ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு

நண்பரொருவர் தன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாக் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுப‌வ‌த்தைப் பகிர்ந்து கொண்டார். கேட்கவே உற்சாகமாக இருந்தது. தொடர்ந்து நினைவலைகள் என் பள்ளி நாட்களின் ஆண்டுவிழா அனுபவங்களை நோக்கிச் சென்றது. ஹார்மோனியம் தபேலாவுடன் திரைமறைவில் பின்னணி இசைக்குழுவின‌ர், திரை மூடும் திறக்கும் தருண‌ங்கள், மேடைக்குப் பின் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த நிமிடங்கள்...

இப்போதெல்லாம் பள்ளிகளில் ஆண்டுவிழா என்ற சாக்கில் பெரிய மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது, செலவுக்கெல்லாம் மாணவர்களிடமே நிதி வசூலிப்பது, கண்ட கண்ட சினிமாப் பாடல்களை ஓடவிட்டுப் பிள்ளைகளை இடுப்பை நெளித்து ஆடவிடுவது, என்று தொடங்கி இருக்கிறார்கள்.

எங்கள் பள்ளி சின்னப் பள்ளி தான். மைதானமும் சிறியது தான். ஆனாலும் அங்கு நடந்த ஆண்டு விழாக்கள் மிகவும் சிறப்பாகவே இருந்தன். அங்கு படித்த மாணவியான எனக்கும் ஒவ்வொரு ஆண்டு விழாவும் பசுமையாக நினைவிலிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சான்று வேண்டும் இதற்கு?

நிகழ்ச்சிகளும் தரமாக இருந்தன. சினிமாப்பாடல்களுக்கும் நடனம் ஆடி இருக்கிறோம். ஆனால் அந்தந்த நேரத்து ஹிட்பாடல்களுக்குக் குத்தாட்டம் போடுவது போலல்ல. நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு மட்டுமே.

பள்ளியில் எப்போதும் பிப்ர‌வ‌ரி மார்ச் மாத‌த்தில் தான் ஆண்டுவிழா ந‌ட‌த்துவார்க‌ள். அனேக‌மாக‌ மூன்றாம் ப‌ருவ‌த் தேர்வுக்கு முன்பாக.அத‌ற்குப் ப‌த்துப் ப‌தினைந்து நாட்க‌ளுக்கு முன்பாக‌வே க‌ளைக‌ட்ட‌த் தொட‌ங்கி விடும். ந‌ட‌ன‌ம், நாட‌க‌ம், சேர்ந்திசை என்று நிக‌ழ்ச்சிக‌ள் திட்ட‌மிட்டு அத‌ற்கேற்ப‌ பிள்ளைக‌ளைத் தேர்வு செய்வார்க‌ள். எதிலும் சேர்க்காத பிள்ளைகள் வருந்தத் தேவையில்லை. அவர்கள் விழா இறுதியில் பாடப்படும் சேர்ந்திசையில் சேர்க்கப்பட்டு அதற்கும் பயிற்சி நடக்கும். வெள்ளை உடையில் கையில் மெழுகு வர்த்தி வைத்துக் கொண்டு பாடும் அந்த நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தது தான்.

விழாவை விட அதிகம் குதூகலம் தருவது அதற்கு முன் பயிற்சி நடக்கும் நாட்கள் தான். வகுப்புகள் பெரும்பாலும் நடக்காது. சில வகுப்புகளில் ஒத்திகைக்காக வேண்டி பெஞ்சுகளையெலாம் சுவரோரமாக நகர்த்தி வைத்திருப்பார்கள். அதனால் அந்த வகுப்புகள் மரத்தடியில் நடக்கும். ஜாலி!

நம்முடைய நிகழ்ச்சிக்கான‌ பயிற்சி முடிந்தாலும் பெரிய க்ளாஸ் மாணவர்கள் போடும் நாடகம், நடனம் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது; "ஒதெல்லோ ட்ராமால‌ யாசீன் அண்ணா சூப்பரா நடிக்கிறார். அவருக்குத் தான் இந்த தடவை பெஸ்ட் ஆக்டர் ப்ரைஸ்..." "இல்லல்ல‌ எப்பவும் போல ப்ரின்ஸியோட ஃபேவரிட் அஜிதாவுக்குத் தான் குடுப்பாங்க பாரேன்!" அப்பொவே சிலருக்குப் பாலிடிக்ஸ் எல்லாம் புரிந்திருந்தது எப்படி?

பெரிய‌ க்ளாஸ் பிள்ளைக‌ளின் நாட‌க‌ங்க‌ளில் வ‌ரும் வ‌ச‌ன‌த்தை எல்லாம் நாமும் அதே போல் சொல்லிப் பார்த்து ம‌கிழ்வ‌து; ச‌ரியாக‌ ந‌டிக்காத‌வ‌ர்க‌ளை டீச்ச‌ர்க‌ள் திட்டும் போது வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்ப‌து; அந்த‌ அண்ணாக்களும் அக்காக்களும் ந்ம்மை, "வெளிய‌ வா வெச்சுக்க‌ரேன்" என்ப‌து போல் முறைப்ப‌து! ஆஹா!

எப்படியோ, எதற்குத் தான் அவ்வளவு உற்சாகமோ?வீட்டுக்கு வந்தாலும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது. விழாவுக்கு முதல்நாள் தூக்கமே வராது!

நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும் போது சின்ட்ரெல்லா நாட‌க‌த்தில் சின்ட்ரெல்லாவைச் சுற்றி ஆடும் கூட்ட‌த்தில் ஒரு பெண்ணாக‌ இருந்தேன். என் தோழி தான் சின்ட்ரெல்லா. அவளுக்குத் தங்க நிறத்தில் முழு நீள‌ கவுன். எங்களுக்கெல்லாம் வயலட் நிறத்தில் ஃப்ரில் வைத்த ஃப்ராக்.
வேறுபாடெல்லாம் தெரியாமல் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது! ஆனால் கூட‌ ஆடிய‌ பைய‌னுட‌ன் என‌க்கு ஆகாது என்ப‌தால் அவ‌னுட‌ன் கை கோத்து ஆடுவ‌து வெறுப்பாக‌ இருந்த‌து!

பின்பு இர‌ண்டாம் வ‌குப்பில் ஜப்பான் ந‌ட‌ன‌ம். 'ல‌வ் இன் டோக்யோ' இந்திப் ப‌ட‌த்தில் வ‌ரும் ச‌ய்னோரா பாட‌லுக்கு ஆடினோம். நான் ந‌ன்றாக‌ ஆடினாலும் த‌லையைக் குனிந்து கொண்டு, சிரிக்காம‌ல் உம்மென்று இருப்பேன். அத‌னால் முத‌ல்வ‌ரிசையில் நின்றிருந்த‌ என்னை இர‌ண்டாம் வ‌ரிசைக்கு அனுப்பி விட்டார்க‌ள். அப்பாடாவென்று அத‌ன்பின் நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ஆடினேன். டீச்ச‌ருக்குத் தான் ப‌ல்ப்!

ஐந்தாம் வ‌குப்பில் தான் செம‌ காமெடி. ஆங்கில‌ ஆசிரிய‌ர், த‌மிழ் ஆசிரிய‌ர் இருவ‌ருமே அவ‌ர‌வ‌ர் நாடக‌த்தில் என்னைச் சேர்த்து விட்டார்க‌ள். த‌மிழ் நாடகத்தில் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற கதையில் வரும் புல‌வ‌ர்க‌ளில் ஒரு வேட‌ம்.

ஆங்கில‌ நாட‌க‌த்தில் சொத‌ப்பி விட்டேன். ஒரு விடுதியில் வேலைக்கார‌ன் வேட‌ம்; ராஜா வ‌ர‌ப்போகிறார்; விடுதியை ஒழுங்காக‌ச் சுத்த‌ம் செய்து வை என்று எஜ‌மான‌ர்க‌ள் மிர‌ட்டி விட்டுப் போவார்க‌ள். மாறுவேட‌த்தில் வ‌ந்த‌ ராஜாவையே வேலைக்கு அம‌ர்த்தி ஏவுவது, பின் எஜ‌மானார்க‌ள் வ‌ந்து அதிர்ச்சிய‌டைவது, ஆனால் ம‌ன்ன‌ரோ வேலை செய்வ‌து த‌ன‌க்கு மிக‌வும் பிடித்திருந்தது என்றும் அந்த‌ வேலைக்கார‌னைப் பாராட்டிப் ப‌ரிசு கொடுப்ப‌து என்றும் முடிய‌ வேண்டும். இதில் ம‌ன்ன‌ரை மேசைக்கு அடியில் சுத்த‌ம் செய்ய‌ விட்டு ம‌ற்ற‌ இட‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்வ‌து போல் நான் ந‌டிக்க‌ வேண்டும்.

நாட‌க‌ம் ந‌டைபெறும் நாள் வ‌ரை மேசை வைத்து ஒத்திகை ந‌ட‌க்க‌வில்லை. அத‌னால் என்ன‌ ஏதென்று புரியாம‌ல் நான் மேசைக்கு அடியில் சென்று புகுந்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து எழுந்து வ‌ந்து வ‌ச‌ன‌ம் பேசிக் கொண்டிருந்தேன். பார்வையாள‌ர்க‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.

நாட‌க‌ம் முடிந்த‌தும் டீச்ச‌ரிட‌ம் செம‌ டோஸ். ஆனால் அவ‌ர் என்னை ரொம்ப‌த் திட்டாம‌ல் த‌மிழாசிரிய‌ர் ஆறுத‌ல் கூறி அணைத்துச் சென்று விட்டார். பின்னே, அவங்களோட த‌மிழ் நாட‌கமாவது சொத‌ப்பாம‌ இருக்க‌ணுமே! அதில் ஒழுங்காக‌ ந‌டித்தேன். ஆனாலும் அந்த‌ ஆங்கில‌ நாட‌க‌த்தைச் சொத‌ப்பிய‌தை நினைத்தால் இன்றும் வெட்க‌மாக‌ இருக்கிற‌து!

ஏழாவ‌து ப‌டிக்கும் போது க‌ர‌காட்ட‌க்கார‌ன் பட‌ப்பாட‌லுக்கு நான்கு பேர் க‌ர‌காட்ட‌ம் ஆடினோம். யாரோ ஒருவ‌ர் க‌ர‌க‌ங்க‌ள் கொண்டுவ‌ந்து தலையில் வைத்துக் க‌யிற்றினால் தாடைக்குக் கீழ் இறுக்க‌க் க‌ட்டிவிட்டார். ரொம்ப‌வே வ‌லித்த‌து. த‌லையை அப்ப‌டி இப்ப‌டி அசைக்க‌க் கூடாதென்று விட்டார். என் தோழி ஜோதி ம‌ற்றும் இருவ‌ரும் ச‌ம‌ர்த்தாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். ந‌ம‌க்குத் தான் அர்த்தமில்லாமல் எந்த‌ அசௌகரிய‌த்தையும் கொஞ்சநேரம் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதே. 'என்ன‌ இது விழாம‌ல் இருக்க‌ லேசாக் க‌ட்டினா போதாதா' என்று நைஸாக‌ முடிச்சைத் த‌ள‌ர்த்தி விட்டுக் கொண்டேன். அத‌ன் விளைவு நிக‌ழ்ச்சி முடிந்து ப‌ட‌ங்க‌ள் பார்க்கும் போது தெரிந்த‌து. என்னுடைய‌ க‌ர‌க‌ம் ம‌ட்டும் பைசா கோபுர‌ம் போல் ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று கொண்டிருந்த‌து!

ப‌த்தாம் வ‌குப்பில் ஒரு பிராம‌ண‌க் குடும்ப‌த்தை ஒட்டி ந‌ட‌க்கும் நாட‌க‌த்தில் என்னைக் க‌தையின் நாய‌கியாக‌ (ம‌டிசார் கட்டி மாமியாக‌) ந‌டிக்க‌ வைத்தார் நாட‌க‌த்தின் ஆசிரியை. எனக்கு என்ன ஆச்ச‌ரிய‌மென்றால் அந்தப் பாஷையை இய‌ல்பாக‌வே நன்றாகப் பேச‌க் கூடிய‌ மாண‌விக‌ள் இருக்கையில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ப‌து தான். ஆனால் யாருமே, என்னுட‌ன் ப‌டித்த‌ பிராமண‌‌‌வ‌குப்பைச் சேர்ந்த‌ தோழிகள், ஆசிரியர்கள் உட்ப‌ட‌ இத‌ற்கு மாற்றுக் க‌ருத்தே தெரிவிக்காத‌துட‌ன் நான் ந‌ன்றாக‌ப் பேசி ந‌டித்த‌தாக‌வும் பாராட்டினார்க‌ள். என்னால் ம‌ற‌க்க‌ முடியாத‌ அனுப‌வ‌ம் அது.

ஆண்டு விழாவென்றால் அதிக‌ம் எதிர்பார்க்கிற‌ இன்னொரு விஷ‌ய‌ம் ப‌ரிச‌ளிப்பு. மேடையில் ந‌ம‌து பேர் வாசிக்க‌ப்ப‌டுவ‌தும் க‌ர‌கோஷ‌த்துக்கிடையில் மேடையேறிச் சென்று சிற‌ப்பு விருந்தின‌ரின் புன்ன‌கையோடு ப‌ரிசை (புத்த்கங்கள் தான்) வாங்குவ‌தும் ப‌ட‌ப‌ட‌ப்பான‌ த‌ருண‌ங்க‌ள்.

வாங்கி இருக்கைக்கு வ‌ந்த‌ பின் அம்மா ம‌ற்றும் அக்காவின் கொஞ்ச‌ல்க‌ளுக்கிடையில் அது என்ன‌ புத்த‌க‌ம் என்று பிரித்துப் பார்ப்ப‌து அதை விட‌ ஆன‌ந்த‌ம்!

ப‌ள்ளியில் பேச்சு, கட்டுரை (ஆங்கில‌ம், த‌மிழ், ஹிந்தி) பாட்டு, ந‌ட‌ன‌ம், ஓவிய‌ம், மாறுவேட‌ம், ம‌ற்றும் வினாடிவினா ஆகிய‌ போட்டிக‌ள் ந‌ட‌க்கும்.இதில் பேச்சு, க‌ட்டுரை, பாட்டு, ஓவிய‌ம் இவ‌ற்றுள் எதிலாவ‌து இரண்டு மூன்று ப‌ரிசுக‌ள் கிடைத்து விடும். 'உன‌க்கு எத்த‌னை ப்ரைஸ் என‌க்கு எத்தனை' என்று என் தோழி ஜோதிக்கும் என‌க்கும் எண்ணிக்கையில் போட்டி துவ‌ங்கும். ஒரு முறை அவ‌ளை விட‌ என‌க்கு ஒரு ப‌ரிசு கூடுத‌லாகி நான் முன்ன‌ணியில் இருந்தேன். த‌லை கொள்ளாத‌ பெருமை தான். வேறென்ன‌ என‌க்கு ஒரு புத்த‌க‌ம் அதிக‌மாக‌க் கிடைக்குமே!

ஆனால் ஒரு விஷ‌ய‌த்தை நான் ம‌ற‌ந்து விட்டேன்! 'ஜென‌ர‌ல் ப்ரொஃபிஷியென்சி' என்ற‌ பிரிவில், அதாவ‌து ஆண்டு முழுதும் வ‌குப்பில் முத‌ல்மாண‌வியாக‌ வ‌ந்த‌த‌ற்குப் பெரிய‌ ப‌ரிசு அறிவிக்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் அந்த‌ ஒரு பிரிவிலேயே அவ‌ளுக்கு நான்கைந்து புத்த‌க‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌. வ‌ந்து என்னிட‌ம் காட்டிச் சிரித்த‌போது ஆஹா, வ‌டை போச்சே என்றிருந்த‌து!

ஹூம்! அதெல்லாம் ஒரு கால‌ம். க‌ள்ள‌ம் க‌ப‌ட‌மில்லாம‌ல் சுற்றித் திரிந்த‌ அந்த‌க் கால‌ங்க‌ளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தாவ‌து அத்த‌கைய‌ இத‌ய‌த்தைத் த‌க்க‌ வைத்துக் கொள்ளும் முய‌ற்சி தான் இந்த‌க் கொசுவ‌த்திக‌ள். கொசுவத்தி அணையாமல் மீண்டும் ப‌ற்ற‌ வைக்க‌ இவ‌ர்க‌ளை அழைக்கிறேன்.

ஹுஸைன‌ம்மா - இவ‌ர‌து இய‌ல்பான‌ ந‌கைச்சுவை எழுத்தை வெகுவாக‌ ர‌சிக்கிறேன். இவ‌ர‌து 'ச‌ப்பாத்தி டேஸ்' ப‌டித்துவிட்டீர்க‌ளா?

அம்பிகா - இப்பவே இவ்ளோ சேட்டைக்காரியா இருக்க்ற‌ இவ‌ங்க‌ ப‌ள்ளிக் கால‌த்துல‌ எப்ப‌டி இருந்திருப்பாங்க? எழுதுங்க‌க்கா உங்க‌ள் ப‌ள்ளி ஆண்டு விழா அனுப‌வ‌ங்க‌ளை.

ஸ்ரீஅகிலா - பதிவுலகில் நம்பிக்கை தரும் புதுவரவு. இவரது பள்ளிக்கால நினைவுகளை அசைப்போடச் சொல்வோமா. வாம்மா மின்னல்!

ச‌ந்த‌ன‌முல்லை - அழுத்த‌மான‌ ச‌மூக விஷயங்களுக்கு ம‌ட்டும‌ல்ல, அழகான நினைவலைகளை எழுதுவதிலும் என் டாப் ஃபேவ‌ரிட் இவ‌ர்தான். வாங்க‌ மேட‌ம். வ‌ந்து சுத்துங்க‌!

வெறும்ப‌ய‌ - இப்போது தான் இவ‌ரைப் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிறேன். இய‌க்குந‌ர் ட‌ங்க‌ன் ப‌ற்றி அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ளைப் ப‌கிர்ந்திருக்கிறார். புட்டு ச‌மைத்த‌ க‌தையை எழுதிய‌ வித‌ம் சுவார‌சிய‌ம். இப்ப‌திவினையும் அதே போல் சுவாரசியமாக‌த் தொட‌ர்வார் என்று ந‌ம்புகிறேன்.

ஜோ ஆனந்த் - ‍இவரையும் இப்போது தான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவர் எழுதும் விஷயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்ற இவரது இடுகை மிகவும் முக்கியமானது.

பி.கு. 1: விளையாட்டுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் என்பதால் விளையாட்டு விழாவைப் பற்றி எழுதவில்லை. விருப்பமுள்ளவர்கள் அதையும் எழுதலாம்.

பி.கு. 2: ப‌திவு கொஞ்ச‌ம் நீ....ள‌ம்; பொறுத்த‌ருள்க‌.

Tuesday, July 13, 2010

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்

வீடு
சின்ன வயதில் டிவியில் தான் முதலில் பார்த்தேன். வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படமென்றால் அது நல்ல படம் என்று ஒரு கருத்து உண்டு. (அதாவது எனக்குப் புரியாது, அல்லது போரடிக்கும்!)
அதனால் அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மிக எளிமையான வசனங்களும், அந்தத் தாத்தா மற்றும் அர்ச்சனாவின் தங்கையின் குறும்புகள், அர்ச்சனாவின் மிகையில்லாத நடிப்பும், மிக முக்கியமாக இளையராஜாவின் மனதை உருக்கும் பின்னணி இசை இவையெல்லாம், என்னை வெகு விரைவில் படத்தோடு ஒன்றச் செய்தன.

ஒரு வீடு கட்ட அந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் படும் பாட்டுக்கு இடையே வரும் சின்னச் சின்ன விஷயங்களும் நெகிழ்வாக மனதில் பதிந்தது. (பட்டுப் பாவாடை கேட்கும் தங்கையை முதலில் திட்டி விட்டுப் பின்பு வாங்கி வைத்திருப்பது, தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையே இருக்கும் பாசம், அர்ச்சனாவின் காதலராக வருபவரின் பண்பைக் காட்டும் காட்சிகள், கடன் கேட்க்ப் போன தோழி (கூட வேலை பார்க்கும்) வீட்டில் கணவனின் அதிகாரம்+அலட்சியப் பேச்சு).

நாயகியை முன்னிறுத்தி, (அதுவும் மிகக் கண்ணியமான முறையில்) நான் பார்த்த முதல் படம் அது தான். இப்படிப் பல முதல்களைச் சொல்லலாம்.
ஆபாசம், குத்துப்பாட்டு, போரடிக்கும் சண்டைக்காட்சிகள் மருந்துக்கும் இல்லாதது வெகு ஆறுதலாக இருந்தது. இது மாதிரியே படங்கள் வந்தாலென்ன? என்று கூடத் தோன்றியது. இறுதியில் அந்த‌ அதிர்ச்சியூட்டும் முடிவுக்குப் பிற‌கு அப்ப‌டி அழுகை வ‌ந்த‌து. வீடு மனதில் இன்றும் பார‌மாக‌ நிற்கிற‌து.

http://www.youtube.com/watch?v=0lb96KF5r58&feature=related

http://www.youtube.com/watch?v=w7SyVmEj4oA&feature=related

புஷ்பக்‍
இந்தப் படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. அவ்வளவு பிடிக்கும். கவிதையைப் போன்ற படம் இது. கமலின் அற்புதமான நடிப்புக்கு அமலாவும் அழகாக ஈடு கொடுத்திருப்பார். நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம் இருந்தாலும் மனதை உருக்கும் முடிவுடன் இதன் தாக்கம் நெடுநேரம் மனதில் இருக்கும். வசனங்களே தேவைப் படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இதன் சிறப்பம்சம். உலக அரங்கில் புகழ்ந்து பேசப்பட்ட இந்தியத் திரைப் படங்களுள் இதுவும் முக்கியமான ஒன்று.

http://www.youtube.com/watch?v=PheG5DHgnps

http://www.youtube.com/watch?v=B-20x0tf9CQ&feature=related

இன்னும் இருக்கு; இப்போதைக்கு இது போதும்!. காட்சிகள் பிடித்திருந்ததா?

Friday, July 2, 2010

Today's status - Life is beautiful!

என்ன சொல்வது. சில சமயம் வாழ்க்கை அதிசயங்களை அள்ளித் தருகிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து முகமறியாத யாரோ ஒருவரிடமிருந்து மிகப்பெரிய உதவியும் அக்கறையும் கிடைக்கும் போது அதற்கு எந்த வகையில் தகுதி பெற்றிருக்கிறோம் என்று மனம் நெகிழ்கிறது.
எதற்காக இந்தப் பீடிகை?

ஒரு மாதம் முன்பு தான் (அலையோ அலை என்று அலைந்து) எடுத்திருந்த என் ஒரிஜினல் ட்ரைவிங் லைசென்ஸைச் சில நாட்களுக்கு முன்பு தொலைத்து விட்டிருந்தேன்.

கைப்பையில் பக்கவாட்டுப் பாக்கெட்டில் அலட்சியமாக வைத்திருந்திருக்கிறேன். அதை ஜெராக்ஸ் எடுத்து ஒரிஜினலை வீட்டில் வைக்குமாறு நூறு முறையாவது ஜோ சொன்னதையும் அலட்சியப்படுத்தி இருந்தேன். ஒரு நாள், 'இவர் நச்சரிப்பு தாங்க முடியலையே. சரி ஜெராக்ஸ் எடுப்போம்' என்று பையைத் தேடினால் காணோம்!

வீடு முழுவதும் தேடியாகிவிட்டது. நேஹா எடுத்து எங்காவது போட்டிருப்பாள் என்று அவள் பாட்டி வீட்டிலும் தேடச் சொல்லி ட்ரில் வாங்கியாகி விட்டது. கிடைத்தபாடில்லை.

அப்படி இருக்க, நேற்று திடீரென்று ஜோ அதைக் கொண்டு வந்து கொடுத்தார். சந்தோஷக்கூக்குரலிட்டு அடங்கியதும் "எங்கே இருந்திச்சு? ஒளிச்சு வைச்சு விளையாடினியா" என்று கேட்டதற்குப் பதிலே பேசாமல் ஒரு கடிதத்தை நீட்டினார்.

"உங்கள் டிரைவிங் லைசன்ஸ் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் கிடந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு தான் பெற்றிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். அதற்குள் தொலைத்து விட்டீர்களே. கவனமாக இருங்கள்." என்ற அறிவுரையுடன்; பெயர் கூடக் குறிப்பிடாமல் இருந்தது.

ஒரே ஒரு இமெயில் முகவரி மட்டும். அதில் அவர் பிறந்த ஆண்டு 87 என்று இருந்தது. ஆணோ பெண்ணோ, என்னை விட வயதில் ரொம்பவும் இளையவர்; எத்தனை பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்? வெகு நேர‌ம் அந்த‌க் க‌டித‌த்தைக் கையில் வைத்துக் க‌ண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தேன்.

அவரது முகவரிக்கு மெயில் அனுப்பி என் நன்றியையும் மகிழ்ச்சியையும் இயன்றவரை தெரிவித்துக் கொண்டேன். இத‌ன் ம‌திப்பு தெரியாத‌ எவ‌ர் கையிலாவ‌து, ஏன் பிராணிக‌ள் ஏதாவ‌து க‌வ்விக் கொண்டு போயிருந்தால்? இன்னொரு லைச‌ன்ஸ் எடுப்ப‌து மிக‌க் கொடுமையான‌ காரிய‌மாமே.

காலையில் இந்த‌ப் ப‌ர‌வ‌ச‌த்தோடே இருந்தேனா, மாலையில் இன்னொரு இன்ப அதிர்ச்சி! ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன் காணாம‌ல் போன மோதிர‌ம் (அது மிக‌வும் விசேஷ‌மானது!) படு யதார்த்தமாக ஏதோ அடுக்கி வைத்திருந்த துணிகளுக்கிடையே அகப்பட்டது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

ஆக, வழக்கமாகக் காலையில் தோன்றும் சிடுசிடுப்பும் பதட்டமும் இல்லாமல்
வாழ்க்கை என்னை எவ்வளவு அன்புடன் நடத்துகிறது என்ற‌ நன்றியுணர்ச்சியுடன் இன்று காலையில் பரிபூரண‌ சாந்தமான, மனநிலையுடன் எழுந்தேன். அந்த மனநிலையுடன் அடுப்படிக்குச் செல்ல இஷ்டமில்லை. இன்று மதிய உணவு சமைக்கவில்லை என்று முடிவெடுத்தாகி விட்டது. :)

நேஹா நேர‌ம்!
சுவ‌ரில் கிறுக்க‌க் கூடாது என்ப‌தாக‌ ஒரு க‌தையைச் சொல்லி இருந்தேன். அது முத‌ல் சுவரில் கிறுக்காத‌து ம‌ட்டும‌ல்ல‌, ஏற்கென‌வே கிறுக்கி வைத்த‌ சுவ‌ர்க‌ளைப் பார்த்து விட்டு, "செவ‌‌த்துல‌ கிறுக்க‌க் கோடாது. பேப்ப‌ர்ல‌ தான் கிற்க்க‌னும். ப‌க்கெட் த‌ண்ணி புட்ச்சுத் தொடக்கனும்‌..." என்று சுவ‌ரைக் காட்டுகிறாள்.
****
அம்மா...சாக்கீ, சாக்கீ, தாங்க...
"நோ நேஹா, ஒன்னு சாப்டேல்ல‌, அதிகமா சாப்டா வயத்துல பூச்சி வரும்."அடம் பிடித்து அழ ஆரம்பிக்கிறாள்.
அப்போது முதல்நாள் இரவு சூப் செய்து த‌ர‌ச் சொல்லிக் கேட்ட‌து என் நினைவுக்கு வ‌ருகிற‌து.

"குட்டிம்மா, அம்மா சூப் செஞ்சு த‌ரேன் என்ன? அழ‌க்கூடாது" என்றேன். உட‌னே அழுகையை நிறுத்தி விட்டுக் க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு "சூப்" என்று சிரித்தாள்.

அப்பாடா, என்று சூப் வைக்க‌ப் போனேன்.

வ‌ந்து காலைக் க‌ட்டிக் கொண்டு, "அம்மா, ல‌வ் யூம்மா. சாக்க்கி சாப்ட‌க் கோடா‌து. வ‌ய்த்துல‌ பூச்சி வ‌ரும். இல்லம்மா?"
"?!!!!" - நான்.

Tuesday, June 22, 2010

ஆணா பொண்ணா? கறுப்பா சிவப்பா?

மைத்துனருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. ஆரோக்கியமான அழகான பெண் குழந்தை. உற்சாக‌த்துட‌ன் ம‌கிழ்ச்சியைப் ப‌கிர்ந்து கொண்ட‌வ‌ர் சொன்னார், "ந‌ல்ல‌ வேளை, அண்ணி! எல்லாரும் ஆண் குழ‌ந்தை தாங்க‌ற‌ மாதிரி சொல்லிட்டிருந்தாங்க‌. என‌க்குப் பொண்ணு தான் வேணும்னு இருந்துச்சு" என்றார். என் வாழ்த்துக்க‌ளையும் ம‌கிழ்ச்சியையும் தெரிய‌ப் ப‌டுத்திவிட்ட‌ பின் யோசித்தேன்.

ஆமாம், நேஹா வ‌யிற்றிலிருந்த‌ போதும் இப்ப‌டித்தான். சில‌ பேர் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஸ்கேன் எடுத்து விடுவார்க‌ள். வ‌யிறு உருண்டு ஃபுட்பால் மாதிரி இருந்தா பைய‌னாம்! (ஏன்னா ப‌ச‌ங்க‌ தானே ஃபுட்பால் விளையாடுவாங்க‌!) படர்ந்து விரிஞ்சு இருந்தா பொண்ணாம்.

அது கூட‌ப் ப‌ர‌வாயில்லை. எத்த‌னை பேருக்கு எத்த‌னை நாள் ஆசையோ! என் முக‌ம் பார்க்க‌ ச‌கிக்கலையாம். சுண‌ங்கிப் போயி என்ன‌மோ மாதிரி இருக்காம். அப்ப‌டி இருந்தா நிச்ச‌ய‌ம் பைய‌னாம். இப்ப‌டியே ஒன்ப‌து மாச‌ம் சொல்லிட்டு வ‌ந்த‌வ‌ங்க‌ளை நேஹா பிற‌ந்த‌வுட‌னே தேடிப் போய் அடிக்க‌ணும்னு நென‌ச்சேன்! பொண்ணு பிற‌ந்த‌துக்காக‌ இல்ல‌, ரொம்ப‌த் தெரிஞ்ச‌ மாதிரி ஆருட‌ம் சொல்றேன்க‌ற‌ பேர்ல‌ இஷ்ட‌த்துக்கும் வெறி கொட்டிக்கிட்டாங்க‌ளே அதுக்குத் தான்! :)

க‌ர்ப்ப‌மா இருக்க‌ற‌ பொண்ணோட‌ வ‌யித்தைப் பாத்து "உன‌க்கு ஆண் குழ‌ந்தை" ந்னு சொல்ற‌து தான் ஆசிர்வாத‌ம்னு நினைக்க‌றாங்க‌ போல‌.இந்த‌க் கால‌த்துலையும் ஆண்குழ‌ந்தை பிற‌ந்தா தான் பெருமைன்னு நினைக்கிற‌வ‌ங்க‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்ச‌ப்போ ரொம்ப‌ ஆச்ச‌ரிய‌மா இருந்துச்சு. ஆத்திர‌மெல்லாம் வ‌ர‌லை. ஏன்னா என்னைப் பொருத்த‌வ‌ரைக்கும் அவ‌ங்க‌ல்லாம் காமெடி பீஸுங்க‌ தான்!

உற‌வுக்கார‌ர்க‌ளில் ஒருத்த‌ர், ரொம்ப‌ப் ப‌டிச்சுப் பெரிய‌ ப‌த‌வியில‌ இருக்க‌ற‌வ‌ர், நேஹா பிற‌ந்த‌ப்போ, ஜோ கிட்ட‌ வ‌ந்து " க‌வ‌லைப் ப‌டாதேப்பா, அடுத்த‌ த‌ட‌வை பாத்துக்க‌லாம்" னாராம்! சந்தோஷத்துல இருந்த ஜோவுக்கு முத‌ல்ல‌ ஒண்ணுமே புரிய‌லை. புரிஞ்ச‌வுட‌னே வ‌ந்த‌து பாருங்க‌ கோப‌ம்! ஹூம்! இவங்கல்லாம் எப்பத் தான் திருந்துவாங்களோ!

அடுத்தது கலர்! காது க‌ல‌ரைத் திருப்பித் திருப்பிப் பாக்க‌ற‌து; அம்மா க‌ல‌ர் வ‌ர‌லை. அப்பா க‌ல‌ர் வ‌ர‌லைன்னு எதையாவ‌து உள‌ர்ற‌து! தாங்க‌ முடியாத‌ எரிச்ச‌ல் இது தான். ஆனா இவ‌ங்க‌ளையும் காமெடி பீஸா எடுத்துக்க‌ வேண்டிய‌து தான். ஏன்னா இதுக்கெல்லாம் கோப‌ப்ப‌ட்டா ந‌ம‌க்கும் அந்த‌ ஆத‌ங்க‌ம் இருக்குன்னு ஒத்துக்க‌றா மாதிரி!

நேஹாவைப் பாக்க வந்த ஒருத்தங்க‌ அவ‌ க‌ல‌ர் க‌ம்மின்னு ரொம்ப‌ நேர‌ம் புல‌ம்பிட்டிருந்தாங்க‌. 'ந‌ல்ல‌ வேளை அக்கா, நல்ல கலர் மட்டும் இருந்து மூஞ்சியும் முழியும் உங்களை மாதிரி இருந்திருந்தா? யோசிச்சுப் பாருங்க...' அப்படின்னு சொல்ல நினைச்சு வேண்டாம்னு விட்டுட்டேன்.

ஸோ! இனிமே உங்க நெருக்கமானவங்களுக்குக் குழ‌ந்தை பிற‌ந்த‌ செய்தியை யார் கிட்டெயாச்சும் சொல்லும் போது "குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க! மண்ட காயட்டும்.

Wednesday, June 16, 2010

உதிரிப்பூக்கள் 16/06/10

சமையல் தளங்கள்!
இரண்டு நாட்களாக வேறு பக்கமே பார்க்கவில்லை.
தமிழ் ஆங்கிலம், தென்னாடு, வடநாடு, சைவம், அசைவம், இத்தாலியன், சைனீஸ் என்று ஒரு சமையல் பக்கம் விடாமல் மேய்ந்து கொண்டிருக்கிறேன்.முக்கியமாக இந்தியப் பெண்களின் பக்கங்கள் தான்.
சமையல் குறிப்புகள் ஏதும் கற்கவா? இல்லை, சும்மா சப்புக் கொட்ட!

ஆனால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை பெண்கள், பெரும்பாலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் எத்தனை சமையல் குறிப்புப் பக்கங்கள் வைத்திருக்கிறார்கள். சமைப்பதே கஷ்டம். அதை அழகாகச் செய்து, படங்கள் பிடித்து, குறிப்பு எழுதி வலையேற்றி...அப்பாடி!

இதில் அவ்வப்போது போட்டிகள் வேறு. Show me your breakfast event, Rice recipes challenge இத்யாதிகள்! யாராவது ஒரு பதிவர் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். த‌மிழில் ச‌மைய‌ல் ப‌க்க‌ங்க‌ள் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளும் இதைச் செய்ய‌லாமே! (சும்மா free advice!)

நேஹா!
இப்போது அநியாய‌த்துக்குப் பேசுகிறாள். யாரிட‌மிருந்து க‌ற்றுக் கொண்டு வ‌ந்தாள் என்று தெரிய‌வில்லை (பின்னே என் கிட்டேர்ந்துன்னு ஒத்துக்க‌வா போறேன்!) யாரையோ பார்த்து "எடுமை மாடே" என்று க‌த்தினாள்.
"நேஹா அப்ப‌டில்லாம் சொல்ல‌க் கூடாது, அம்மா அடிப்பேன்." - கோப‌ம் காட்டுகிறேன்.
"அம்மா...ஐ ல‌வி யூ! " உடனே சிரித்துக் கொண்டு வ‌ந்து க‌ட்டிக் கொள்கிறாள்.
போச்சுடா! எதற்காவது கொஞ்ச‌ம் கண்டித்தால் போதும், இதையே சொல்லி ஆளைக் க‌விழ்த்து விடுகிறாள்.

ராவணன்!
ரொம்ப நாள் கழித்து ஒரு பெரிய பேனர் படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன். காரணம் விக்ரம்! ஜோ என்ன தான் விக்ரம் இமேஜை என்னிடம் உடைக்கப் பார்த்தாலும் என் ஃபேவரிட் ஹீரோ விக்ரம் தான். ஐஸ்வர்யாவும் கொள்ளை அழகாக இருக்கிறார். பாட‌ல்கள் தான் ஈர்க்கவில்லை. ஆனால் ரஹ்மானின் பல பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடித்துப் போகும். பார்ப்போம்.

ச‌ரி, தேவையில்லாம‌ இவ்ளோ பெனாத்திட்டேன். அத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ இந்த நெகிழவைக்கும் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌துச் சிறுவ‌ன் சிந்தித்திருப்ப‌தைப் பாருங்கள்!

http://news.rediff.com/report/2010/jun/15/twelve-yr-old-summons-anderson.htm
Please read and spread it across!

Friday, May 21, 2010

யாதெனின் யாதெனின் நீங்கியான்...

சொந்தக் கதை சோகக் கதை எழுதக் கூப்பிட்டா மொத ஆளா ஓடி வந்துடுவேங்கற நம்பிக்கையோட அம்பிகா அக்கா இந்தத் தொடர்பதிவுக்குக் கூப்பிடிருக்காங்க. எழுதிடுவோமே!

விரும்பியதும் கிடைத்ததும்

படிப்பு மற்றும் வேலை விஷயத்தில் நான் என்ன விரும்பினேன்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டேன். அண்டவெளியில் கோடிக்கணக்கான காலக்ஸிக்களும் கிரகங்களும் இருப்பதாகவும் பூமியை விடப் பன்மடங்கு பெரிதான கோளங்கள் சுற்றுவதாகவும் அறிந்த போது ஏற்பட்ட பிரமிப்பு அந்த ஆசையைத் தோற்றுவித்தது. நில‌வில் கால் பதியாமல் மிதந்து செல்லும் ஆராய்ச்சியாளர்களை டிவியில் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்திருக்கிறேன்.

டாக்டர், எஞ்சினிய‌ர், வெளிநாடு க‌ன‌வெல்லாம் பெரிதாக‌ இருக்க‌வில்லை.
பள்ளி இறுதி வகுப்புகளில் ப‌டிக்கும் போது, கணினிக் க‌ல்வி ஏதாவ‌து க‌ற்று ஒரு ந‌ல்ல‌ க‌ம்பெனியில் ஓரளவு கௌரவமான சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் யதார்த்தமான‌ ஆசையாக இருந்தது.

ஆனால் உள்ளுக்குள் வேறு கனவுகளும் இருந்தன. இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். விட்டுப் போன பாட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்கி மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற கனவுகள் இருந்தன.

ஆனால் அவற்றை நிறைவேற்றப் போதுமான முயற்சியும் உத்வேகமும் ஏனோ இல்லாமல் போனது. கல்லூரியில் பேராசிரியர்களே கூட "உனக்கு கேம்பஸ்ல வேலை கிடைக்காட்டிக் கூட கவலை இல்லம்மா. நீ நிச்சயம் பாடகி ஆயிடலாம்" என்ற ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனால் எனக்கு என் ஸ்டான்டர்டு தெரிந்திருந்தது. இசையில் உயரங்களை எட்ட வேண்டுமானால் குரல் மட்டும் போதாது; பல ஆண்டுகள் தொடர்ந்த முறையான உழைப்பும் பயிற்சியும் வேண்டும்.

"பெர்ஃபார்ம‌ன்ஸ்" என்பது ஹாபியாக இருக்கும் போது கிடைக்கும் தன்னிறைவும் கௌரவமும் தொழிலாக ஏற்றுக் கொள்ளும் போது கிடைக்குமா என்று ஒரு பயமும் த‌ய‌க்க‌மும் வேறு என் ம‌ன‌தைக் க‌ட்டிப் போட்ட‌து.
நாம் பாடுவ‌து ந‌ம‌க்காக‌வும் ந‌ம் அன்புக்குரிய‌வ‌ர்க‌ளுக்காக‌வும் ம‌ட்டும் இருந்தால் போதுமே என்ற‌ எண்ண‌மும் என்னை அந்த‌ப் பாதையில் அடியெடுத்து வைக்க‌ விடாம‌ல் த‌டுத்து விட்ட‌து. போயிருந்தாலும் வெற்றி கிடைத்திருக்கும் என்ப‌து நிச்ச‌ய‌ம‌ல்ல‌வே. :)

நல்ல இசையை ரசிக்கவும் அனுபவிக்கவும் நம்மால் இயல்கிறது என்பதே எவ்வளவு பெரிய சந்தோஷம் என்ற ஞானம் இப்போது வந்திருக்கிறது. வேலை முடிந்து வந்து சூப்பர் சிங்கர் ஜூனியரில் குட்டீஸ் பாடுவதைக் கேட்டால் மெய்மறந்து போகிறது. மன இறுக்கத்தை வெகுவாகத் தளர்த்த வல்லது அந்த நிகழ்ச்சி. சில குறைகளை நிவர்த்தி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்.

இன்னொரு விஷயம் விரும்பியும் நடக்காமல் போனது பேராசிரியை ஆக வேண்டும் என்பது. சிவில் பொறியியல் படித்து முடித்த போது எஞ்சினியராக வேலை பார்ப்பதை விடக் கல்லூரியில் பேராசிரியையாகவே விரும்பினேன்.
ஆறுமாதம் பாலிடெக்னிக்கில் வேலை பார்த்த போது அந்த அனுப‌வம் அலாதியாக இருந்தது. நாங்கள் படித்த போது முட்டி மோதிப் பயின்ற எஞ்சினியரிங் ட்ராயிங்கை மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியாக‌ இருந்தது.

அதற்கு முந்தைய செமஸ்டர் வரை பாதிக்கும் மேல் தோல்வியுற்ற அப்பாடத்தில் அனைத்து மாணவர்களும் பிள்ளைகளும் 80க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து முழுத் தேர்ச்சியடைந்ததும் சீனியர் பேராசிரியைகள் வியந்து பாராட்டியதும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நினைவுக‌ள். ந‌ல்ல‌ வேலை கிடைக்க‌வில்லையே என்ற‌ குறையை ம‌ற‌க்கடித்துப் புதுத்தெம்பூட்டிய‌ ப‌ருவ‌ம் அது.

ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் சிவிலுக்கு ரொம்பவும் மதிப்பு இல்லாததால் கல்லூரிகளிலும் பேராசிரியை வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. அதனால் கணனித் துறைக்குத் தடம் மாறிய கதையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். (கற்றது சிவில்)

பாட்டைத் தொலைத்த‌தை விட‌வும் ஏமாற்ற‌ம் ஆசிரிய‌ர் துறையைத் த‌வ‌ற‌ விட்ட‌து தான். இப்போது வேலை செய்யும் இட‌ங்க‌ளில் ஜூனியர்களுக்குப் பயிற்சி கொடுப்ப‌து போன்ற‌ ப‌ல‌ரும் விரும்பாத‌ வேலைக‌ளை அதனால் தான் விரும்பிச் செய்கிறேனோ என்ன‌வோ.

வேலை, சம்பளம், பதவி இதிலெல்லாம் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாததாலும், கொஞ்சம் 'பேக்கு' என்று அறியப்பட்டாலும் என் மனதின் சந்தோஷமும் நிம்மதியும் எதில் இருக்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருப்பதாலும், நான் விரும்பியவையே எனக்குக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானவை அன்பும் நட்பும்.

மேலும் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விடாமலிருப்பதும் ஒரு வரம் தான்! என் அம்மா சொல்லி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த குறளை இங்கு நினைவு கூர்வதை அவசியமெனக் கருதுகிறேன்.

"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோத‌ல்
அத‌னின் அத‌னின் இல‌ன்"


எதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்று வருந்துகிறோமோ அவற்றுடன் சேர்ந்து வரும் துன்பங்களையும் நாம் இழக்கிறோம் என்று உணர்ந்து நிம்மதியுற வேண்டும். (இது எனது படு சுமாரான விளக்கம். பொறுத்தருள்க!)

Wednesday, May 12, 2010

என் முதல் பாய்ஃப்ரென்ட்!

மணி ரிக்ஷா மேன்!

நான்கு வயது முதல் பத்து வயது வரை இவரது ரிக்ஷாவில் தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். எட்டரை மணியாகி விட்டால் கணகணவென்று மணியடித்துக் கொண்டு வீட்டுக்கு முன் வந்து நிற்பார். அப்போது தான் என் வாயில் அக்கா இட்லியை ஊட்டிக் கொண்டிருப்பார். இந்தப் பக்கம் அப்பாவோ மாமியோ காலில் ஷூவை மாட்டி விட்டுக் கொண்டிருப்பார்கள். "லேட் ஆயிடுச்சு ரிக்ஷாமேன் திட்டப் போறார்" என்று சிடுசிடுத்துக் கொண்டிருப்பேன். (கடைக்குட்டியாகப் பிறந்ததால் சின்ன வயசில் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்டிருந்தேன்.)

"வாம்மா வாயாடி மங்கம்மா" என்று என்னைத் தூக்கி ஏற்றி விட்டுப் பறப்பார் ரிக்ஷாமேன். எம்.ஜி.ஆரின் பரம பக்தரான அவர் கர்ண கடூரமாக "விவசாயி..." என்று பாட ஆரம்பிப்பார்.
அவ்வளவு தான் எங்கள் ஜமா ஒன்று சேர்ந்து கொண்டு அவரைக் கலாய்க்க ஆரம்பிக்கும்.பேச்சு மட்டுமல்ல; மற்ற ரிக்ஷாக்களை முந்திக் கொண்டு செல்ல வேண்டுமென்று அவர் முதுகில் சரமாரியாக அடிப்போம்.விய‌ர்வையில் ஊறித் திளைத்த‌ அவ‌ர் ச‌ட்டையின் ஈர‌ம் உள்ள‌ங்கையில் ப‌டிந்த‌தது நினைவுக்கு வ‌ருகிற‌து.

கறுப்பாக நல்ல உடற்கட்டோடு இருப்பார். அவர் முகம் களையாக இருக்கும். சிரிக்கும் போது தெரியும் அவரது வெள்ளைப் பற்களின் அழகு இப்போதும் நினைவில் இருக்கிறது.
பெரும்பாலும் சீட்டில் அம‌ர‌வே மாட்டார். பெல்லடிக்கும் முன் எங்களைப் பள்ளிக்குள் சேர்த்து விடவேண்டும் என்று மாங்கு மாங்கென்று நின்றபடியே சைக்கிள் பெட‌ல்க‌ளை மிதிப்பார்.

ஒரு பெண் அவர் சீட்டுக்குப் பின்புறம் இருக்கும் மரச்சீட்டில் (அதாவது ரிக்ஷாவின் மெயின் சீட்டுக்கு எதிர் சீட்டில்) நின்று கொண்டு அவரது தோளைப் பிடித்த படியே வரும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு மிகவும் பாதுகாப்பாகவே ஓட்டுவார்.எனக்கு மிகவும் பிடித்த இடம் டாப்!அதாவது மெயின் சீட்டுக்கு மெலே, பின்னம்பக்கம் பார்த்தவாறு, மடக்கி வைக்கப்பட்டிருக்கும் ரிக்ஷாவின் டாப்புக்கு இடையில் காலை விட்டுக் கொண்டு உட்காருவது! காலையில் அங்கு உட்கார மாட்டேன். வீட்டில் பார்த்தால் திட்டுவார்கள். இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால் ரிக்ஷாவின் மிதமான வேகம் ஆபத்துக்கு இடம் கொடுக்காது.

அடை ம‌ழையானாலும் ரிக்ஷா முழுதும் க‌வ‌ர் போட்டு எங்க‌ளை ந‌னையாம‌ல் அழைத்துச் செல்வார். (மழையில் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு அவர் ரிக்ஷாவை இழுக்கப் பாடுபட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது.)

மேலும், எங்க‌ள் ப‌ள்ளிப் பிள்ளைக‌ளை அழைத்துக் கொண்டு ப‌க்க‌த்துப் ப‌ள்ளியிலும் அழைக்க‌ச் செல்வோம். அப்போது அங்கு காத்திருக்கும் நேர‌த்தில் ஐந்து பைசா ஆர‌ஞ்சு மிட்டாய்க‌ள் எல்லாருக்கும் வாங்கித் த‌ருவார். அத‌ற்காக‌ அவ‌ரைப் ப‌டாத‌ பாடு வேறு ப‌டுத்துவோம்.

இதையெல்லாம் எங்க‌ள் வீட்டில் சொல்ல‌வே மாட்டார். ஒரு நாள் நான் ப‌ள்ளி செல்லாத‌ போது குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்த‌தாக‌ ம‌ற்ற‌ பிள்ளைக‌ள் என்னை வெறுப்பேற்றினார்க‌ள். "ரிக்ஷாமேன்! என‌க்கு..?" என்று அழுதேன். "வாங்கித் த‌ர்றேன்மா" என்று சொல்லிக் கொண்டே க‌டைசி வ‌ரை ஏமாற்றி விட்டார். என‌க்கு அடிக்க‌டி ச‌ளி ஜுர‌ம் வரும். வேண்டுமென்று தான் நான் இல்லாத‌ நாள் பார்த்து ஐஸ் வாங்கித் த‌ந்திருக்கிறாரோ என்று அப்புற‌ம் யோசித்தேன்.

லீவு நாட்களில் சம்பளம் வாங்க வீட்டுக்கு வருவார். அப்போது எனக்கு அவரைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். அவர் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது காலியாக இருக்கும் ரிக்ஷாவில் ஆசை தீர ஏறி விளையாடுவது, அவரது சீட்டில் அமர்ந்து கயிற்றில் கட்டப்பட்ட அந்த மணியை இழுத்து இழுத்து அடிப்பது என்று லூட்டியடிப்பேன்.

ரிக்ஷா ரிப்பேர் ஆன‌ நாட்க‌ளில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். மற்ற பிள்ளைகளின் வீட்டுக்கு முன்பே சென்று சொல்லி விடுவார். என்னை மட்டும் தான் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக ஞாபகம்.

சில‌ ச‌ம‌ய‌ம் அவ‌ருக்கு உட‌ம்பு முடியாத‌ போது அவ‌ர் ம‌னைவியைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். எங்க‌ள் புத்த‌க்ப் பைகளைச் சும‌ந்து கொண்டு வீட்டுக்குப் ப‌த்திர‌மாக‌ அழைத்து வ‌ர! இப்போது நினைத்தால் ரொம்பப் பெரிய விஷயமாக்த் தெரிகிறது. தொழிலாக‌ ம‌ட்டும் பார்க்காம‌ல் குழ‌ந்தைக‌ளான‌ எங்க‌ளை அக்கறையுடனும் அன்புடனும் நேசித்திருக்கிறார் என்று புரிகிறது. அவருக்கு எத்தனை குழந்தைகள் அவர்கள் எங்கு படித்தார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை. நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

ரிக்ஷாவில் மோட்டர் பொருத்த வேண்டுமென்பது அவரது நெடுநாளைய ஆசை. அப்போது மோட்டார் ரிக்ஷாக்கள் கூடுதல் மவுசைப் பெற்றிருந்தன. (ரொம்ப பெடல் மிதிக்க வேண்டாம். வேகமாகவும் போகும்.) ஆனால் நான் பார்த்தவரை அவர் அதைச் செய்யவே இல்லை.

ஏழாவது முதல் என் தோழியுடன் நடந்தே செல்ல விரும்பியதால் ரிக்ஷா வேண்டாமென்று நானே சொல்லி விட்டேன்.
பின்பு சைக்கிளில் செல்லும் போது என்றாவது எதிரில் பார்த்தால் புன்னகைப்பார். "பாத்து ஓட்டும்மா.. வாயாடி மங்கம்மா" என்பார். சில ஆண்டுகள் வரை எதார்த்தமாக கண்களில் பட்டுக் கொண்டிருந்தவர் அப்புறம் என்னவானார் என்றே தெரியவில்லை.

மோட்டார் பொருத்தியிருப்பாரா அல்லது அந்த ரிக்ஷாவை விற்று ஆட்டோ வாங்கியிருப்பாரா? அவரது குழந்தைகளை ஒரு நாளாவது அந்த் ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பாரா?

Thursday, April 15, 2010

கதைகளைப் பேசும் விழியருகே...

அங்காடித் தெரு...எல்லாரும் சென்று சிக்கி மீண்டு கொண்டிருந்த நேரத்தில் போய்ச் சிக்கிக் கொண்டேன். இன்னும் மீள‌ முடியாம‌ல் அங்கேயே உழ‌ன்று கொண்டிருக்கிறேன்.

ஒரு படத்துக்குச் சென்று டிக்கெட் இல்லை ஹவுஸ் ஃபுல் என்று சொன்னதற்காக முதன் முதலில் மகிழ்ந்தது இதற்குத் தான்! ஆம், முதல் நாள் போய்க் கேட்ட போது "பையா" க்கு வேணா இருக்கு. அங்காடித் தெரு இரண்டு நாளைக்கு ஃபுல்." என்று சொன்ன போது ஏமாற்றத்தையும் மீறி ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. யதார்த்தமான நல்ல படத்துக்கு மக்கள் அங்கீகாரம் அதிகரித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? அடுத்த நாள் இரவுக் காட்சிக்குத் தான் செல்ல முடிந்தது.

ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ விமர்சனமோ என் பார்வையோ எழுத என்னால் முடியாது. அதிர்ச்சி க‌ல‌ந்த‌ உண‌ர்வுக‌ளின் க‌ல‌வை ம‌னதை அந்த‌ப் ப‌க்குவ‌த்துக்குக் கொண்டு வ‌ர‌வில்லை. சுற்றி உள்ள வாழ்க்கையையே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைத்த படத்தைத் தள்ளி நின்று எந்தப் பார்வை கொண்டு பார்ப்பது? எனக்கெல்லாம் இப்படிப்பட்ட படைப்புகள் பலவிதத்தில் பாடங்கள். பாடங்களை விமர்சிப்பதை விடவும அவற்றிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் நலம்.

ஆனால் இசையைப் பொறுத்த‌வ‌ரை ம‌ட்டும் சொல்லக் கொஞ்சம் இருக்கிற‌து.
மூன்று பாட‌ல்க‌ள் போட்டி போட்டுக் கொண்டு ம‌ன‌தை ஆக்கிர‌மிக்கின்ற‌ன‌.

1. கதைகளைப் பேசும் விழியருகே - எப்போது கேட்டாலும் அற்புதமான அந்த ஒவ்வொரு காட்சியும் ம‌ன‌தில் திரையோடிக் க‌ண்க‌ளின் ஓர‌ம் க‌ரிக்கிற‌து.

2. உன் பேரைச் சொல்லும் போதே ‍- ஆஹா... ! சொல்ல‌ ஒன்றும் இல்லை. Wonderful rendering by Shreya Goshal and Haricharan.
இவ‌ர்க‌ள் இருவ‌ரையுமே என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும். வேற்று மொழிப் பாட‌கர்க‌ளில் த‌மிழைத் த‌மிழாக‌ப் பாடும் ஒரே பாட‌கி ஷ்ரேயா கோஷ‌ல் தான். அற்புதமான குரலும் திறமையும் ஒரு புறம்; மேலும் ஒரு மொழி தெரியாவிட்டாலும் அதன் ஜீவன் சிதையாமல் கற்றுக் கொண்டு பாடும் அவ‌ர‌து அந்த‌ சின்சியாரிடிக்கு Hats Off!

ஹ‌ரிச‌ரண்: காத‌ல் ப‌ட‌த்தில் பாடிய‌து முத‌லே இவ‌ர் all time favorite ஆகி விட்டார். எத்தனையோ பாடகர்கள் பெருகி விட்டாலும் உண‌ர்ச்சி, பாடலின் பாவ‌ம் உண‌ர்ந்து பாடுவ‌தில் இவ‌ருக்கு நிகர் இவர் தான். (உனக்கென இருப்பேன் ‍- காதல், தொட்டுத் தொட்டு என்னை ‍- காதல், சரியா தவறா ‍- கல்லூரி.)

3. அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை - ர‌ம்மிய‌மான‌ தாலாட்டைப் போல் இருக்கிற‌து. ஓகே!

இந்த அளவுக்குச் சிலாகித்துப் பின்னணி இசையைச் சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே பல இடங்களில் காட்சியுடன் ஒன்றுவதைத் தடுக்கும் வகையில் உறுத்தியது. அதனாலேயே அதன் பிழை கவனத்தையும் ஈர்த்தது.

கனியும் லிங்குவும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். மறக்கவே முடியாத பாத்திரப்படைப்பு. உயிர் கொடுத்த அஞ்சலிக்கும் மகேஷுக்கும்.. ஓஹோ! பிரமிக்க வைக்கும் நடிப்பு.
மாரிமுத்து வாக வந்த் "பாண்டி" அடேயப்பா... இவருக்குள் இத்தனை திறமையா? Overall, brilliant cast.

(பி.கு 1: ராம‌னாத‌ன் தெருவுக்குச் சென்று அந்த‌ மெஸ் இருக்கிற‌தா என்றும் அதைப் பார்வையிட‌ வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிற‌து. செய்வேனா என்று தெரியவில்லை.

பி.கு 2:
எத‌ற்காக‌ இந்த‌த் த‌லைப்பு என்று கேட்ப‌வ‌ர்க‌ள் இங்கே செல்ல‌வும்:
http://www.youtube.com/watch?v=tBkmKr0iVQk

இறுதியாக, நன்றி வசந்தபாலன்! மிக்க நன்றி.

Friday, April 9, 2010

எலிஃபென்ட் சாமியும் தாடி தாத்தாவும்

என் நாத்தனார் மகள் படு சுட்டி. ஒன்றரை வயதில் பேசத் தொடங்கிய அவள் மூன்று வயதுக்குள் நீட்டி முழக்கிப் பாட்டி கணக்காய்ப் பேசத் தொடங்கி விட்டாள். ஊருக்குப் போகும் போது அவள் வீட்டில் இருந்தால் பொழுது போவதே தெரியாது.

அவளது அம்மாச்சி (என் மாமியார்) பேசுவதைக் கேட்பது போலவே இருக்கும் பாவமும், பெரியமனுஷத்தனமும்.
அவள் பேசியதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் தனிப்பதிவே போட வேண்டும். முன்பொரு முறை போட்டும் இருக்கிறேன். இப்போது விஷயம் அதுவல்ல.

கடவுள் பக்தி அதிகம் உள்ள என் மாமியார் அவளுக்கு நிறைய ஜெபங்களூம் தோத்திரங்களும் சொல்லிக் கொடுத்திருந்தார். மேலும் "தற்குறிப்பேற்ற அணி" யாகக் குழந்தைக்கு இயற்கையிலேயே கடவுள் பக்தி அதிகம் எனவும் சொல்லி ம‌கிழ்வ‌து அவ‌ர்க‌ள் வ‌ழ‌க்க‌ம்.

ஒரு நாள் எல்லாரும் அம‌ர்ந்திருக்கத் தான் சொல்லிக் கொடுத்த‌ ஜெப‌ங்க‌ளையெல்லாம் வ‌ரிசையாக‌ச் சொல்ல‌ச் சொன்னார்க‌ள். அவ‌ள் அழ‌காக‌ ம‌ழ‌லைக் குர‌லில் சொல்லிக் கொண்டிருந்த‌தை எல்லாரும் ர‌சித்துக் கொண்டிருந்தோம். அத்தை மட்டும் க‌ண்க‌ள் மூடி ஜெபிக்க‌வே தொட‌ங்கி விட்டார்க‌ள். இறுதியாக‌ "ம‌ன்மத‌ராசா ம‌ன்ம‌த‌ராசா..." என்று அதே சிரத்தை‌யுட‌ன் குழ‌ந்தை பாட‌வும் ப‌த‌றிப் போய் அதை அத‌ட்டி உட்கார‌ வைத்தார்க‌ள்.

எல்லாருக்கும் சிரிப்புத் தாங்க‌ வில்லை. சுட்டித் தனமான குழந்தை எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பார்த்தாலும் பிடித்துக் கொண்டு அழகாகச் சொல்கிறது. அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுங்கள் என்று சமாதானப் படுத்தினோம்.

நான் குழ‌ந்தையாக‌ இருந்த‌ போதும் இப்ப‌டித் தான் அண்ண‌னும் அக்காவும் சொல்கிறார்க‌ள் என்று ஆவேச‌த்துட‌ன் நானும் க‌ந்த‌ர் ச‌ஷ்டிக் க‌வ‌ச‌ம் முழ்தும் க‌ஷ்ட‌ப்பட்டு வாசித்து முடிப்பேன். என் அம்மாவும் "பொண்ணுக்கு என்ன‌ ப‌க்தி" என்று ம‌கிழ்ந்திருக்க‌க் கூடும். ப‌க்த‌ துருவ‌ மார்க்க‌ண்டேய‌ன் ப‌ட‌ம் பார்த்து விட்டு வ‌ந்த போதோ, ஞாயிற்றுக் கிழ‌மை வீட்டில் "க‌ந்த‌ன் க‌ருணை" பார்த்த‌ போதோ ப‌க்தி பீறிட்டு ம‌ன‌தில் எழுந்த‌தை நானும் உண‌ர்ந்திருக்கிறேன்.

அது ம‌ட்டும‌ல்ல, மூன்றாவது படிக்கும் போது புனித‌ வெள்ளிய‌ன‌று "தேவ‌ மைந்த‌ன் போகின்றான்" பாட்டை ஒளியும் ஒலியும் ‍இல் பார்த்து விட்டுக் க‌த‌றிக் க‌த‌றி அழுததும் அத‌ற்காக‌ அண்ண‌னும் அக்காவும் என்னை ஓட்டித் த‌ள்ளிய‌தும் நான் ம‌ற‌க்க‌ விரும்பும் த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ங்க‌ள்.

வீட்டில் பெரிதாக‌ப் பூசை, விர‌த‌ம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அமாவாசை, கிருத்திகை, ச‌ஷ்டி இத்யாதிக‌ள் பார்க்கும் வ‌ழ‌க்க‌மெல்லாம் அம்மாவுக்கு இருந்த‌தில்லை. மாலையில் தின‌மும் சாமி விள‌க்கேற்றுவார்க‌ள்.ப‌ண்டிகைக‌ள் வ‌ந்தால் சாமி ப‌ட‌ங்க‌ளுக்குப் பூ போட்டு, ப‌டைய‌ல் வைத்துக் க‌ற்பூர‌ம் காட்டுவார்க‌ள். ச‌னிக்கிழ‌மைக‌ளில் காக்காவுக்குச் சாத‌ம் வைப்பார்க‌ள். அவ்வ‌ள‌வு தான்.

நானும் பெரிதாக‌ப் ப‌க்தி என்றும் இல்லாம‌ல், நாத்திக‌மென்றும் இல்லாம‌ல் கோயிலுக்கெல்லாம் போய் வ‌ந்து கொண்டு தானிருந்தேன்.எங்க‌ள் க‌ல்லூரிக்க‌ருகிலும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்த‌து. அதற்குப் பேரே செம‌ஸ்ட‌ர் பிள்ளையார் கோயில். ஏனென்றால் ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் காத்தாடும் அந்தக் கோவிலில் செம‌ஸ்ட‌ர் ச‌ம‌ய‌ம் கால் வைக்க‌ முடியாத் அள‌வு கூட்ட‌ம் அம்மும்.

அதே போல் மார்க‌ழி மாத‌ங்க‌ளில் காலையில் ஐந்து ம‌ணிக்குப் போனால் ச‌ர்க்க‌ரைப் பொங்க‌ல் பிர‌சாத‌ம் தொன்னையில் த‌ருவார்க‌ள். ஓரிரு முறை சென்று வாங்கிய‌தாக‌ ஞாப‌க‌ம். (காலை உண‌வுக்கு மெஸ்ஸுக்குப் போய் அழ‌ வேண்டாமே!)

ரொம்ப‌ எரிச்ச‌ல் வ‌ந்த‌து எத‌னாலென்றால் கூட்டம்; ஜ‌ன‌ நெருக்க‌டி. விசேஷ நாட்க‌ளில் கோவில் ப‌க்க‌ம் எட்டிக் கூட‌ப் பார்க்க‌ மாட்டேன்.‌
பூசாரிக‌ளின் அத‌ட்ட‌லும் அர்ச்ச‌னைத் த‌ட்டுக‌ளில் போட‌ப்படும் காசுக்கேற்ப‌ த‌ரும் ம‌ரியாதையும், பொது வ‌ழி சிற‌ப்பு வ‌ழி என்று பிரித்து வைத்து ர‌க‌வாரியாக‌ப் பிசின‌ஸ் செய்வ‌தும் கோவில் வ‌ழிபாடுக‌ள் மீது முத‌ல் அவ‌ந‌ம்பிக்கை ஏற்ப‌ட‌ச்செய்த‌து.

கடவுள் பக்தி அதிகமிருக்கும் சிலர் (எம்மதமாக இருந்தாலும்) பேசுவதில் ஒரு மேட்டிமைத் தனமும் Self righteousness ம் இருப்பதையும் உணர முடிந்தது. (சிறு வய‌தில் இப்ப‌டிப் பேசுப‌வ‌ர்க‌ளைப் பார்த்தால் ஒரு தாழ்வு ம‌ன‌ப்பான்மை தோன்றும். நாம் இப்ப‌டியெல்லாம் சாமி கும்பிடுவ‌தில்லையே, ந‌ம‌க்கு இந்த‌ அள‌வு ப‌க்தி இல்லையே என்று.)

எனக்கொரு தோழி இருந்தாள். நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருந்தாள். வயதும் அப்போது இருபத்திரண்டோ மூன்றோ தான். கல்யாணமாகவில்லை என்று அவளை அவள் பெற்றோர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை. 'வெள்ளிக் கிழமையா? ஒரே வேளை சாப்பிட்டு விரதம் இரு. திங்கட்கிழமையா? சோமவார விரதம் இரு. அஞ்சு விரல்லயும் அதிர்ஷ்டக் கல் மோதிரம் மாட்டு. பிரதோஷமா? சாயங்காலம் வேலை முடிஞ்சு எவ்ளோ நேரமானாலும் சரி, கோவிலுக்குப் போயிட்டு வா.'
பிரதோஷமென்றால் சிவன் கோவிலில் கூட்டம் கேட்கவே வேண்டாம். கூட்டத்தில் சென்று இடிபட்டு நசுங்கி, அதன் பின் பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அவள் விழி பிதுங்கி விடும். ஒரே ஒரு நாள் அவளுக்காகத் துணைக்குச் சென்று படாத பாடு பட்டேன்.

இது போன்ற சம்பவங்களால் பொதுவாக‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் மீதும், வ‌ழிபாடுக‌ளின் மீதும் கொஞ்ச‌ கொஞ்ச‌மாக‌ அசிர‌த்தை ஏற்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து. க‌ட‌வுள் ப‌க்திக்கும் ம‌த‌வெறிக்கும் இடையே பெரிதாக‌ வேறுபாடில்லை என்று ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளும் கொடூர‌ங்க‌ளும் ந‌ம்ப‌ வைத்த‌ன‌. (இது என் ஆழமான ந‌ம்பிக்கை ‍ அவ்வ‌ள‌வு தான்.)

மேலும், "நட்ட கல்லைத் தெய்வமென்று..." போன்ற பாடல்களும், அபு பென் ஆதம் கதைகளும், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள் பேச்சிலும் எழுத்திலும் (மதமென்பது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட அபினி) நாட்டமேற்பட்டதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஓஷோவின் discource களையும் ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தேன். போதாதா? Life is a better word than God என்ற அவரது வாசகம் மனதில் ஆழமாகப் பதிந்தது.

ஒன்று, இதையெல்லாம் நம்ப வேண்டும். இல்லை கடவுளை நம்ப வேண்டும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடியாது என்று தீர்மானம் ஏற்பட்டது.
கோவிலுக்குப் போவ‌தில்லை. சாமி கும்பிடுவ‌து என்றொரு வ‌ழ‌க்க‌ம் என்றுமே ஒழுங்காக‌ இருந்த‌தில்லை. இதனாலெல்லாம் பெரிதாக‌ எந்த‌ மாற்ற‌மும் ஏற்ப‌ட‌வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌து வேற்று ம‌த‌த்த‌வ‌ரை. அவ‌ரும் என்னைப் போல‌வே தான்; மதச் சம்பிரதாயங்களுக்கும் கற்பிக்கப்பட்ட புனிதங்களுக்கும் பின்னால் இருக்கும் போலித் தனங்களை உணர்ந்து வெறுத்தவர். இருவ‌ரும் எந்த‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌த்துக்கும் செல்வ‌தில்லை. எல்லாப் பண்டிகைகளையும் எந்தவிதமான பூசை வழிபாடுகள் இல்லாமலும் கொண்டாடப் பழகி விட்டோம். இருந்தாலும் திரும‌ண‌மான பின்பு சில‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளுக்கு உட்ப‌ட‌வேண்டி இருந்த‌து. பிற‌கு இருதரப்பினரும் எங்க‌ளைப் ப‌ற்றிப் புரிந்து கொண்டு விட்டார்க‌ள். வ‌ருத்த‌ம் தான் ஆனாலும் எங்கள் சுதந்திரத்தில் பெரிதாக‌த் த‌லையிடுவ‌தில்லை.

நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன். கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே! வாழ்க்கையில் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று. நான் கொண்டிருப்பது கடவுள் மறுப்பு என்பதை விடக் கடவுள் வழிபாட்டு மறுப்பு. இது என்னளவில் சரி. அவ்வளவு தான்.

கடவுள் நம்பிக்கை என்பதையெல்லாம் தாண்டி சில பழக்கங்களை (திருமணமானவர்கள் வீட்டுக்கு வந்து விடை பெறும் போது குங்குமம் கொடுப்பது, இளம் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் பூ வாங்கிச் செல்வது) போன்றவற்றை விட மனமில்லை; விடுவதாகவும் இல்லை! அவையெல்லாம் காரணமே இல்லாமல் பிடித்துத் தான் இருக்கின்றன‌.

நேஹாவும் மிக‌ச் சுத‌ந்திர‌மாக‌த் திரிகிறாள். இயேசு ப‌ட‌த்தைப் பார்த்தால் "தாத்தா தாடி" என்றும் பிள்ளையார் ப‌ட‌த்தைப் பார்த்தால் "எலிஃபென்ட்" என்றும் சொல்கிறாள். தாத்தா பாட்டிக‌ள் "அப்ப‌டிச் சொல்ல‌க் கூடாது... சாமி சொல்லு" என்று சொன்னாலும் நாங்கள் த‌டுப்ப‌தில்லை. நம்மை விட நிச்சயம் அறிவும் தெளிவுடனும் இருக்கப் போகும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவள் தனது விருப்ப‌த்தைத் தானே தேர்வு செய்ய‌ட்டுமே. அப்ப‌டி என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம் இது?

எல்லாருக்குள்ளும் ஏதாவ‌து ச‌ம‌ய‌ம் இப்ப‌டி ஒரு ம‌னப்போராட்ட‌ம் வ‌ந்திருக்கலாம்; அல்லது இவ்விதமான குழப்பங்களுக்கெல்லாம் இடமில்லாத வகையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கலாம். என்னவாக இருப்பினும் அவர்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.

அவ்விதம்‌ நான் அழைக்க‌ விரும்புவ‌து:

அண்ணாம‌லையான்
தமிழ்நதி
நாஸியா
ம‌யில் விஜி
ச‌ந்த‌ன‌முல்லை
ராகவ‌ன்

Wednesday, March 31, 2010

தெருவோடு உறவாடி...

நான் சிறுவயது முதல் இன்றுவரை ஒரே பகுதியில் ஒரே தெருவில் தான் வசித்து வருகிறேன் - நான்கு வருட வெளியூர் கல்லூரி வாழ்வைத் தவிர.
திரும‌ண‌த்துக்குப் பிற‌கும் அதே தெருவில் வேறு வீட்டில் தான் க‌ண‌வருட‌ன் இருக்கிறேன். இதைப் ப‌ற்றிப் பெரிதாக‌ நான் யோசித்த‌தில்லை; ஆனால் ஊர் உல‌க‌மெல்லாம் சுற்றி வ‌ரும் தோழிய‌ரைப் பார்த்து நான் விய‌க்கையில் அவ‌ர்க‌ளோ, 'நீ குடுத்து வெச்ச‌வ‌' என்ற‌ ரீதியில் பேசும்போது தான் யோசித்துப் பார்க்கிறேன்.

இதே தெருவில் அக்காவின் இடுப்பில் உட்கார்ந்து போயிருக்கிறேன். அம்மாவின் கைவிர‌லைப் பிடித்த‌ப‌டி ந‌டைப‌ழ‌கி இருக்கிறேன்.
ம‌ணி ரிக்ஷா எனக்காக‌ ம‌ணிய‌டித்துக் காத்து நின்றிருக்கிற‌து. சைக்கிளில் விழுந்து வாரி இருக்கிறேன். ஜோவுட‌ன் பைக்கில், என‌து ஸ்கூட்டியில்,...இப்போது என் ம‌க‌ளின் கை பிடித்து மெதுவாக‌ ந‌ட‌ப்ப‌தும் இதே தெருவில் தான்.

என்னைப் போலவே தெருவும் ஏகத்துக்கும் மாறி இருக்கிறது.தெரிந்தவர்கள் இருந்த பல‌ ப‌ழைய‌ வீடுக‌ள் இடித்து அடுக்குமாடிக் குடியிருப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌ன. அத‌ன் பிற‌கு அங்கு குடியிருப்போரும் மாற்றிச் செல்வோரும் ப‌ற்றி அவ்வ‌ளவாகப் ப‌ரிச்ச‌ய‌ம் இல்லாது போய்விட்ட‌து. டான்ஸ் மாஸ்ட‌ர் ஒருவ‌ர் இருந்த‌ வீட்டில் க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ந‌ர்ஸ‌ரி ப‌ள்ளி ஒன்று ந‌ட‌க்கிற‌து.

ஆனால் எங்கள் தெருவின் சுவார‌சிய‌மான‌ ப‌குதியே அத‌ன் இன்னொரு ப‌குதி தான். முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முந்தைய‌ விஷ‌ய‌ம் இது.
ஏழு தெருக்க‌ள் சேர்ந்த எங்கள் செக்ட‌ர் என‌ப்ப‌டும் தொகுதியின் திட்டத்தில் ஒரு பூங்கா அல்ல‌து விளையாட்டு மைதான‌மும் இட‌ம் பெற்றிருந்த‌து. எங்க‌ள் செக்ட‌ரைத் த‌விர‌ ஏனைய‌ செக்ட‌ர்க‌ளில் அப்ப‌டி உண்டு.

ஆனால் அர‌சாங்க‌ம், எங்கள் செக்டரில் மட்டும் பூங்காவுக்கான இட‌த்தைக் குடிசை மாற்று வாரிய‌ப் ப‌ணிக்காக‌ ஒதுக்கி ஹ‌வுசிங் போர்டு குடியிருப்புக‌ள் க‌ட்ட‌ப் போவ‌தாக‌ அறிவித்த‌து. அப்போது இப்ப‌குதியில் இருந்த சிலர் இதை எதிர்த்துப் போர‌டிய‌தாக‌வும் அப்பாவும் இன்னும் சிலரும் ந‌ம‌க்குப் பூங்கா என்ப‌தையும் விட‌ ப‌ல‌ நூறு பேர்க‌ளுக்கு வீடு என்ப‌து முக்கிய‌ம் என்று ம‌றுத்துவிட்ட‌தாக‌வும் சொல்வார்க‌ள்.

ஆக‌வே என‌க்கு நினைவு தெரிந்து எங்க‌ள் தெருவில் இர‌ண்டு வ‌ர்க்க‌ ம‌க்க‌ளும் வாழ்கிறார்க‌ள். இந்த‌ப்ப‌க்க‌ம் அமைதியாக‌ வீடுக‌ளுக்குள் பூட்டிக் கொண்டு வாழும் நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ம்.

அந்த‌ப் ப‌க்க‌ம், தெருவுக்கும் வீட்டுக்கும் அதிக‌ பேத‌மில்லாம‌ல் எந்நேர‌மும் ஜேஜேவென‌ இருக்கும் ச‌ற்றே எளிய ம‌‌த்திய வ‌ர்க்க‌ம்.வெளிப்படையாகப் பார்த்தால் நிறையவே வித்தியாசம் தெரியும் இரண்டு பகுதிக்கும். செக்டரின் சங்க நிர்வாகிகள் முயற்சி எடுத்து ரோடு போடும் போது கூட சரியாய்ச் சாலையின் பாதி வரை புதிய தார் போடப்பட்ட கூத்துகளும் அரங்கேறி இருக்கின்றன. அந்தப் பக்க அம்மன் கோயில் விசேஷத்துக்காக அலறும் மைக்செட்களில் தொடங்கி தண்ணீர் லாரிப் பிரச்னை வரை பல சண்டைகளும் நடந்திருக்கின்றன.

வீட்டிலிருந்து மெயின்ரோட்டுக்குச் செல்ல‌ இட‌து புற‌மும் போக‌லாம், வ‌ல‌து புற‌மும் போக‌லாம். இட‌து புற‌ம் சென்றால் அமைதியாக‌, வேக‌மாக‌ ந‌ட‌ந்து போய் விட‌லாம். வ‌ல‌து புற‌ம் திரும்பினாலோ, "அம்மூஊ... எப்டிரா இருக்கே.." என்ற பெரிய பொட்டு வைத்த மாவுக்கார‌ம்மாவின் அழைப்பையோ, (நிறைய பேர் அக்காவின் பெயரான அம்முவைச் சொல்லித் தான் என்னையும் அழைப்பார்கள். சிறுவயதில் திருத்திக் கொண்டிருந்தேன். இப்போது விரும்பி ரசிக்கிறேன்.) "பாப்பா எங்க? அம்மாவூட்ல வுட்டுட்டியா" என்ற தண்ணி விடும் கிழவியின் குரலையோ, தண்ணீர் குடத்துடன் எதிர்ப்படும் அவரது மகளின் சினேகமான சிரிப்பையோ லேசில் கடந்து போக முடியாது.

"டேய் டேய், அவுட்டுறா நீ, போடா‌ அந்த‌ண்ட" என்றும் "டேய் அக்கா வருது, இருடா.. நீ போக்கா" என்று பெரியமனுஷத்தனம் பேசியபடி அரை டவுசர் பொடியன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்க‌ள்.

ம‌தியான‌ வேளையில் ம‌ர‌நிழ‌லில் அம‌ர்ந்த‌ப‌டி இர‌ண்டு மூன்று கிழ‌வ‌ர் கிழ‌விக‌ள் ஆடுபுலி ஆட்ட‌மோ தாய‌பாஸோ விளையாடுவார்க‌ள். இன்னொரு ப‌க்கம் ஆடுகளும் எருமைமாடுக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு நின்று கொண்டிருக்கும். சின்னதாக இருப்பதால் எருமைக் க‌ன்னுக்குட்டியைப் பார்த்து நேஹா "மே மே ..ஆடு" என்றாள் ஒரு முறை. 'ஆடு அதில்ல‌டா.. இங்கெ இருக்கு பாரு' என்று சிரித்துக் கொண்டே காட்டினார் அங்கே அமர்ந்திருந்த ஒரு அம்மாள்..

இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாய் மடிசார் மாமி ஒருவரும் வெகு நாளாக அங்கொரு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார். படுத்தபடுக்கையாயிருந்த கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த அவர் வற்றல் வடகம் போட்டு விற்பது, மாவு அரைத்துக் கொடுப்பது என்று சதா உழைத்துக் கொண்டே இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்து விட்டார். இன்னும் அதே வேலையைத் தொடர்ந்து செய்தபடி அதே தெருவில் வளைய வருகிறார் மாமி. இந்தப் பக்கத்துப் பிராமணர்கள் சிலர் வீட்டில் சமையல் வேலையும் அவர் செய்ததுண்டு.

இந்தப்பக்க‌ ம‌க்க‌ளுக்கு வீட்டு வேலைக‌ளுக்கு வ‌ருவ‌தெல்லாம் வ‌ல‌து ப‌க்க‌ப் ப‌குதிப் பெண்க‌ள் தாம். வீட்டுக்கு அருகே இருக்கும் ரேஷ‌ன் க‌டையின் ம‌ண்ணெண்ணெய்க்காகவும் அரிசிக்காகவும் மணிக்கணக்காய் வெயிலில் உட்கார்ந்திருக்கும் கூட்ட‌த்தில் நன்கு ப‌ரிச்ச‌ய‌மான‌ முக‌ங்களைக் காண்பது சில நேரங்களில் ஏதோவொரு நெருட‌ல் ஏற்ப‌டுத்தும்.

முன்னை விட‌ இப்போது அங்கு ப‌ல‌ர‌து வாழ்க்கைத் த‌ர‌ம் உய‌ர்ந்திருக்கிற‌து. சில‌ குடியிருப்புக‌ளின் முன் பைக்குக‌ளும் ஆட்டோக்க‌ளும் நிற்கின்றன. ஆனாலும் தெருவோடு உறவாடி அவர்கள் வாழும் வாழ்க்கை முறை மட்டும் பெரிதாக மாறவில்லை.

முக்கியமாய் ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
நேஹா வ‌யிற்றில் இருந்த‌போது அப்பா உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்தார். அலுவ‌ல‌க‌ம், ம‌ருத்துவ‌ம‌னை, வீடு என்று சில‌ நாட்க‌ள் அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நாள் வீட்டுக்கு வ‌ந்த‌போது வீட்டு வேலை செய்ப‌வ‌ர் வ‌ந்திருக்க‌வில்லை. எல்லாம் போட்ட‌து போட்ட‌ப‌டி கிட‌ந்த‌து. ம‌ற்ற‌ ச‌ம‌ய‌ம் என்றால் எப்ப‌டியோ செய்திருப்பேன்; அன்று சுத்த‌மாக‌ முடிய‌வில்லை. அவ‌ர் வீட்டுக்குச் சென்று அழைத்துவ‌ர‌லாமென்று போனேன். போகும் வ‌ழியிலேயே ஒரு வீட்டில் என்னை ம‌றித்த‌ பெண்ணொருத்தி "என்ன‌ அக்கா, இந்நேர‌த்துல் யாரைத் தேடி வ‌ந்தீங்க‌?" என்றாள். அவ‌ள் புதிதாக‌க் க‌ல்யாண‌மான‌வ‌ள். அவ‌ளும் அப்போது மாச‌மாக‌ இருந்தாள்.

"அம்சா வீடு எங்க‌ம்மா...வேலைக்கு வரலம்மா அவங்க இன்னிக்கு" அவரது வீடு கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லையே என்று லேசான வெட்கத்துடன் கேட்டு வைத்தேன். இதற்கு முன் எப்போதோ இந்தப் பெண்ணைப் பார்த்ததோடு சரி, பெயரும் தெரியாது; பேசியதுமில்லை.

"நீங்க‌ இங்க‌ இருங்க‌க்கா. இதோ என் த‌ம்பியை அனுப்பிப் பாத்துட்டு வ‌ர‌ச் சொல்றேன். அந்தக் குடியிருப்பின் வாசலில் ஒரு சின்ன்னக் கோயில் உண்டு. அதன் திண்டில் அமர்ந்தேன்.

அங்கு கூடி இருந்த‌ ம‌ற்ற‌ பெண்க‌ளும் அன்புட‌ன் என்னை விசாரிக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

உள்ளே சென்ற‌வ‌ள் சூடாக‌க் காப்பியுட‌ன் வ‌ந்தாள். என‌க்குத் திடுக்கிட்டுப் போய்விட்ட‌து... யாரென்றே தெரியாத‌ என‌க்கு இவ்வள‌வு அன்புட‌ன் உப‌ச‌ரிக்கிறாளே. க‌ளைப்பும், ம‌ன‌ச்சோர்வும், அச‌தியுமாய் இருந்த‌ என‌க்கு அந்த‌ அன்பு ச‌ட்டென்று க‌ண்ணில் நீர் வ‌ர‌வ‌ழைத்து விட்ட‌து. வயதிலும் படிப்பிலும் வசதியிலும் கூட‌ அவளைவிட உயர்ந்தவளாகத் தென்படும் நான் முன்பின் தெரியாத‌ யாருக்காவது இம்மாதிரி குறிப்பறிந்து அன்பு செய்திருக்கிறேனா என்று நினைக்கும் போதே அவமானமாக இருந்தது.

ரொம்ப நாள் பழகியது போல் க‌ல‌க‌ல‌வென்று பேசிக் கொண்டே போன‌து அந்த‌ப் பெண். வ‌ர‌ப்போகும் குழ‌ந்தையைப் ப‌ற்றி, க‌ண‌வ‌ரைப் ப‌ற்றி, புகுந்த‌ வீட்டுக் காமெடிக‌ள் ப‌ற்றி என்று வெகுளித் த‌னமாக‌ப் பேசிக் கொண்டிருந்த‌வ‌ளை ர‌சித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நேர‌மாக‌வே, நீங்க வீட்டுக்குப் போங்க‌க்கா, நான் அம்சாக்காவை அனுப்பி வெக்கிறேன், என்றாள்.

அம்சா வ‌ர‌வில்லை. ஆனால் இந்த‌ப் பெண்ணின் எதிர்பாராத அன்பு கொடுத்த‌ தெம்பில் வீட்டுக்குப் போய் க‌ட‌க‌ட‌வென்று எல்லா வேலைக‌ளையும் நானே முடித்துவிட்டேன்.

என்ன தான் சொன்னாலும் நமது நடுத்தரவர்க்க சுகாதாரம், நாகரிகம், privacy இலக்கணங்களை அல‌ட்சிய‌மாக‌ மீறும் இப்ப‌குதியைக் க‌ட‌க்கையில் முன்பொரு ச‌ம‌ய‌ம் அசூசைப் ப‌ட்ட‌துண்டு. ஆட்டோவில் வ‌ரும்போது, நாங்க‌ள் இந்த‌ இட‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இல்லை' என்று சொல்ல‌ விரும்புவ‌து போல் "இந்த‌ இட‌ம் தாண்டி, அந்த‌ப் ப‌க்க‌ம்" என்று சொல்ல‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட்ட‌துண்டு. அத்த‌கைய போலி கௌரவங்கள் உடைந்து சிதறிய நாள் அது. முன்னெப்போதையும் விட‌ அப்ப‌குதியை ம‌ரியாதையுட‌னும் வாஞ்சையுட‌னும் பார்க்க‌ வைத்த‌து அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் தான்.

Tuesday, March 30, 2010

பேருந்து அவனது போதிமரம்!

அய்யோ! அலாரம் அடிச்சதே தெரியாம தூங்கிட்டேனே... மணி ஏழு இருபதா?
இன்னும் பத்து நிமிஷத்துல நான் சிக்னல் கிட்ட நிக்கணும்!

அவசர அவசரமா குளிச்சிட்டு வெளிய வரேன்.

பெட்ரூமுக்கு வந்து லைட்டைப் போட்டா...வயிறெரியுது! என்னமா அச‌ந்து தூங்கறாங்க அம்மாவும் பொண்ணும்...
என் குட்டிம்மா. குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச‌ணும் போல‌ இருக்கு. தொட்டா இவ‌ சாமியாடிடுவா. 'போற‌நேர‌த்துல என் தூக்க‌த்தை கெடுக்க‌ற‌துக்காக‌வே அவ‌ளை எழுப்பி விட்டுட்டுப்போற‌. ஸாடிஸ்ட்' அது இதுன்னு.. அம்மாடி, வேண்டாம்பா.

என்ன லைட்டா சிணுங்குறாங்க பெரியமேடம்! ஓ! லைட் போட்டது தொந்தரவா இருக்காம்மா.. ஸாரி ஸாரி. இரு என் ட்ரெஸ்ஸை எடுத்துக்கிட்டுப் போயிடறேன்... இந்தா, லைட்ட‌ ஆஃப் பண்ணியாச்சு.. நிம்மதியா தூங்குமா. ஹூம்!

காலங்காத்தால புருஷன்காரன் எழுந்து வெறும் வயித்தோட ஓடறானே. ஒரு காபி போட்டுக் குடுப்போம்.. மூச்! பேசக்கூடாது..எதையாவது கிறுக்கித் தொலைச்சு நமக்கும் அந்த லிங்கை அனுப்பி வைப்பா...எத்தனை நாளைக்குத் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? போக‌ட்டும் ந‌ம்ம‌ த‌லையெழுத்து ஓட‌றோம். அவ தூக்க‌த்தை ஏன் கெடுக்க‌ணும்.

எல்லாம் இந்த‌ புது க‌ம்பெனிக்குப் போக‌ ஆர‌ம்பிச்ச‌துலேந்து தான். அதுக்கு முன்னாடி ம‌காராஜா மாதிரி ஒன்பது மணி வ‌ரைக்கும் தூங்கிட்டிருந்தேன். மேட‌ம் பாவ‌ம் சீக்கிர‌ம் எழுந்து (என்னை வசை பாடிக்கிட்டே) ச‌மைய‌ல் செஞ்சுட்டுக் குளிக்கப் போகும் போது வந்து ஒரு எத்து விடுவாங்க...

அப்போதான் எழுந்திருப்பேன். ல‌ஞ்ச் பேக் ப‌ண்றதும் பாப்பாவை எழுப்பி அவங்க அம்மா வீட்ல கொண்டு விடறதும் தான் என் வேலை. அது ரொம்ப‌க் க‌ஷ்ட‌ம் மாதிரிக் கொஞ்ச‌ம் சீன் போட்டுக்கிட்டே செஞ்சுட்டிருந்தேன்.

ஊருக்கு வெளிய‌ இருக்க‌ ஐடி பார்க்ல ஜாயின் ப‌ண்ண‌துலேந்து எல்லாம் மாறிப்போச்சு.

அப்பாடி ஒரு வழியா பஸ் வந்துடுச்சு.. கடைசி சீட்ல மட்டும் தான் இடம் இருக்கு..உக்காந்தாச்சு.. போய்ச்சேர ஒண்ணரை மணிநேரம் ஆகுமே, விட்ட இடத்திலேந்து தூக்கத்தைக் கன்டினியூ பண்ணலாம்னா நமக்கு என்னமோ அந்த மாதிரி தூக்கமே வரமாட்டேங்குது. தூங்குனா குறைஞ்சது மூணு நாலு மணி நேரம் வேணும். வீட்ல இருக்காளே ஒரு குட்டிப் பிசாசு அஞ்சு நிமிஷம் கெடச்சாலும் குட்டித் தூக்கம் போட்டுடுவா.

முன்னாடி சீட்டுங்க நிறைய பொண்ணுங்க தான் ஜாஸ்தி. ஹேய் தப்பா நினைக்காதம்மா.. எல்லாம் சிஸ்டர்ஸ் அன்ட் ஆன்ட்டீஸ்!

எல்லார் கையிலையும் ஹேன்ட்பேக், ஒரு டப்பர்வேர். நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கறாங்க. இவங்கல்லாம் இன்னும் முப்பது கிலோமீட்டார் முன்னாடிலேந்து வராங்க.

பாவம் நடுராத்திரியே எழுந்து குளிச்சு, வேலையெல்லாம் முடிச்சு சமைச்சு எடுத்துக்கிட்டு ...ஹைய்யோ! நினைக்கும் போதே தலை சுத்துது...

முதல்நாள் பாத்தப்போ முக்காவாசிப் பொண்ணுங்க‌ தலையை விரிச்சு விட்டிருந்தாங்க.. அரை இருட்டில பாத்துட்டுப் பயந்துட்டேன். ஆஃபீஸ் கிட்ட பஸ் வரும் போது திடுதிப்னு எழுந்து அவசர அவசரமா பேகத் தொறக்கறாங்க‌. சீப்பை எடுக்கறாங்க. கிளிப்பை எடுக்கறாங்க...ரென்டு நிமிசத்துல தலையை வாரி..ஹேர்ஸ்டைல் ஓவர். ஓ!..குளிச்ச தலையைக் காய வைக்கக்கூட நேரமில்லாம ஓடி வர்ராங்க. பேசாம‌ அழ‌கா தலையை பாப் வெட்டிக்க‌லாம்; நேர‌மும் மிச்சம், வேலையும் மிச்சம்.

என்னடா பொண்ணுங்களைப் பத்தியே பேசறானேன்னு பாக்கறீங்களா? என்ன பண்றது, கம்பெனியில பாதிக்கு மேல பொண்ணுங்க தான். அப்புறம் பல் தேய்ச்சு குளிச்சு ட்ரஸ்ஸ மாட்டிட்டு வர்றதுக்கே நாம அலுத்துக்கறோமே, வீட்டு வேலங்களையும் முடிச்சு நமக்கு முன்னாடி பஸ்ல உக்காந்திருக்காங்களேன்னு இன்னொரு ஆச்சரியமும் அட்மிரேஷனும் தான்.
வேறென்ன?

நல்லவேளை அவளுக்கு ஆஃபிஸ் பக்கத்துல தான். இவ்ளோ தூரம்லாம் அவளால ட்ராவல் பண்ண முடியாது.

என்ன இது சத்தம்.. எவண்டா அவன்? பக்கத்து சீட்ல ஒரு பையன். காதுல என்னமோ மாட்டிருக்கானே..ஹியரிங் எய்டா? ஊமையோ...ஏதாவது வலியில கத்தறானோ? அடச்சே.. ஐபாட்!
மறுபடியும் ஆரம்பிச்சான்.
"என்னாவ.. ளே அடி என்னா வளேஏஏ " குரல் ஏகப் பிசிறல். இதைக் கேக்கணும் அவள். நானே சூப்பராப் பாடறேன்னு ஒத்துக்குவா.

ஏன் இப்டிக் க‌த்த‌றான். தாங்க‌ முடிய‌ல‌..தூக்க‌க் க‌ல‌க்க‌ம் வேற‌..

யாருக்குமே கேக்க‌லியா? எல்லாரும் ஒண்ணு ந‌ல்லாத் தூங்க‌றாங்க‌, இல்ல‌ இவ‌னை மாதிரியே காதுல‌ மாட்டி இருக்காங்க‌. நான் ம‌ட்டும் தான் மாட்டிக்கிட்டேன்!

ஹப்பாடி ஒரு வழியா நிறுத்திட்டான்..
"மும்பே வாஅ என் அம்பே வா..ஊஊ" அய்யோ! அடுத்ததா...கடவுளே
உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்கிக்கறேன்.


அடுத்த ஸ்டாப்பிங்கில் நாலு பேர் ஏற்ராங்க‌. நேரா இங்க தான் வ‌ராங்க‌..
"டேய் டேய், வால்யுமைக் குறைடா.."
க‌ண்ணைத் திற‌ந்து திருதிருன்னு முழிக்கிறான். "அவ்ளோ ச..த்..த‌மாவா கேட்டூதூ?"

"இல்ல‌ பாஸ்.. நானும் ட்ரைவ‌ரும் ம‌ட்டும் தான் கேட்டுக்கிட்டு இருந்தோம்"

"ஹீஹீ"

ஆச்சு.. காலையில‌க் க‌தை இப்ப‌டின்னா, சாய‌ங்காலம் இன்னொரு க‌தை...

இந்த‌ப் பொண்ணுங்க‌ இருக்காங்க‌ளே.. த‌ற்காத்துத் த‌ற்கொண்டார் பேணுவ‌து எப்ப‌டின்னு அவ‌ங்க‌ கிட்ட‌க் க‌த்துக்க‌ணும்.

ஆற‌ரை ம‌ணிக்குப் ப‌ஸ்ல‌ ஏறினா ஏழு ம‌ணிக்கு ஆளுக்கு ஒரு சின்ன‌ ட‌ப்பாவைத் திற‌க்க‌றாங்க‌.. இந்தா இந்தா ந்னு அவ‌ங்க‌ளுக்குள்ள‌ ஷேர் ப‌ண்ணிக்கிட்டு முறுக்கு பிஸ்க‌ட், ப‌ழ‌ம்னு ஏதோ ஒண்ணு...

'வீட்ல மேடத்தையும் இந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கிட்டுப் போக‌ச் சொல்ல‌ணும்.. நீட்டி முழக்கி நியாயம் பேசச் சொல்லு, பேசுவா... இதெல்லாம் தெரியாது. வீட்டுக்கு வ‌ரும்போதே பசியோட‌ ட‌ய‌ர்டா வ‌ர‌ வேண்டிய‌து. ந‌ம்ம‌ கிட்ட‌ எரிச்ச‌லைக் காமிக்க‌ வேண்டிய‌து'

நம்ம முன்சீட் அம்மணிகள் சாப்டுட்டுத் துப்பட்டாவை மூஞ்சில போத்திட்டுத் தூங்கிட்டாங்க‌. ஒரு அரை ம‌ணி நேர‌ம் போயிருக்கும். ஒரு மேட‌ம் எழுந்து ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌வ‌ர‌ங்க‌ளை எழுப்ப‌றாங்க‌..

என்ன இது, இவ‌ங்க‌ ந‌ம‌க்கும் அப்ப‌ற‌ம் போக‌ணுமே..எங்க‌ இற‌ங்க‌ப் போறாங்க‌ன்னு பாத்தா, த்தோடா.. ஏதோ க்ரீம் எடுத்துக் கையில‌ முக‌த்துல‌ எல்லாம் த‌ட‌விக்க‌றாங்க‌..

இப்ப‌ என்ன‌டா மேக்கப் வேண்டி இருக்குன்னு நான் கூட‌த் த‌ப்பா நின‌ச்சுட்டேன். கொஞ்ச நேர‌ம் க‌ழிச்சுத் தான் உண்மை புரிஞ்சுது.. பேயாப் ப‌டை எடுத்து வருது பெரிய பெரிய கொசுக்கள். அய்யோ... நாள் பூரா ப‌ஸ் ஸீட்க‌ளுக்கு அடியில ஒளிஞ்சு கெட‌ந்த‌ கொசு எல்லாம் வ‌ந்து பிச்சுப் பிடுங்குது. கவலையே இல்லாம‌ தூங்குறாங்க‌ முன்சீட் ம‌காராணிக‌ள். ஆஹா. அது க்ரீம் இல்ல‌டா சோச‌ப்பு, ஓடோமாஸ்!
இந்தப் பொண்ணுங்களோட முன் ஜாக்கிரதை உணர்வு தாங்கலடா சாமி!

வீட்டுக்குப் போய் சாப்டுட்டு நிம்ம‌தியா மேட்ச் முன்னாடி உக்கார‌ணும்னு நினைக்கும் போதே இந்த‌ப் பொண்ணுங்க‌ என்ன‌ ப‌ண்ணுவாங்க‌ன்னு நினைக்காம‌ இருக்க‌ முடிய‌ல. ஓடிப்போய்க் குழந்தைங்களைக் கவனிக்கணும். சமையல் பண்ணனும். வீட்ல புருஷன்காரன் ஏதாவது உதவி பண்ணுவானா தெரியாது...

ம்க்கும்.. நம்ம என்ன பண்றோம்? அவள் நாலு நாள் கத்தினா ரெண்டு நாள் ஹெல்ப் பண்றேன். அதுவும் சலிச்சுக்கிட்டே. சே... தப்புடா சோசப்பு.. இனிமே அவளுக்குச் சரிக்குச் சரியா வீட்ல வேலை செய்யணும்.

அட்லீஸ்ட அவளோட "டார்ச்ச‌ர் லின்க்ஸ்" வரவையாச்சும் குறைக்கலாம்னு ஒரு சுயநலம் தான்...பார்ப்போம்!

Monday, February 22, 2010

இன்னும் மீளாமலே...

அந்த அனுபவத்தின் பரவசம் இன்னும் தெளியவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த என் தோழி அன்று பார்த்ததே போல் இருந்ததையும், அவளுடன் பேசி மகிழ்ந்ததையும், இங்கு எழுதலாம்.

கல்லூரி வளாகம் முழுதும் சுற்றிப் பார்த்து அறிந்த மாற்றங்களையும், மாறாத தோற்றங்களையும் விவரிக்கலாம்.

ஆனால், உள்ளே நுழைந்தவுடன் அந்தப் பூவரச மரங்கள் உதிர்த்த மலர்களின் வாசமும், ஒருவர் மறந்து மற்றவரிடமிருந்து மீட்டெடுத்த சின்னச் சின்ன நினைவுகளின் பரவசத்தையும், மறந்தே போயிருப்பார்கள் என்று நினைத்த எங்கள் பேராசிரியர்கள் பார்த்தமாத்திரத்தில் அடையாளம் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமாய் வாஞ்சையைச் சொரிந்த கணங்களையும் அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழுதவே முடியாது.

எங்க‌ள் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளால் ம‌ட்டுமே முக்கிய‌ வ‌ள‌ர்ச்சி பெற்ற‌ பாபா ஸ்டோர்ஸ் பாபா கிஃப்ட் ஆர்டிகிள்ஸ் க‌டை யொன்றும் திற‌ந்திருந்த‌து.
ப‌ழ‌முதிர் நிலைய‌ம் இருந்த‌ இட‌த்தில் ரிலைய‌ன்ஸ் ஃப்ரெஷ் க‌டை வ‌ந்திருந்த‌து. பார்த்த‌விட‌மெங்கும் யூனிநார் விள‌ம்ப‌ர‌ங்க‌ள்.

விடுதியில்: இறுதியாண்டு மாணவியர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
பார்வையாள‌ர் கூட‌ங்க‌ள் கொசுவலைகள் அடிக்கப்பட்டு இன்ட‌ர்நெட் சென்ட‌ர் க‌ளாக‌ மாற்ற‌ப்ப‌ட்டிருந்த‌ன.

மாண‌வ‌ர் எண்ணிக்கை அதிக‌ரித்திருப்பதால் மூன்று பேர் இருந்த‌ அறையில் ஐந்து பேரும், ரீடிங் ரூம் என‌ப்ப‌டும் விஸ்தார‌மான‌ கூட‌மெங்கும் க‌ட்டில்க‌ள் போட‌‌ப்ப‌ட்டு அங்கும் முப்ப‌து மாண‌விய‌ர் த‌ங்கி இருந்த‌து க‌ஷ்டமாக‌ இருந்த‌து. இடநெருக்கடி சந்தேகத்துக்கிடமில்லாமல் இருந்தது. புதிய‌ விடுதி அறைக‌ள் க‌ட்டும் ப‌ணி விரைவில் ந‌ட‌க்க‌ப் போவ‌தாக‌க் கூறினார்க‌ள்.

எல்லோர் கையிலும் செல் ஃபோன்க‌ள் இருந்த‌ன‌. நாள்தோறும் ம‌திய‌ம் க‌டித‌ங்க‌ளும் கார்டுக‌ளும் இறைந்து கிட‌க்கும் மேஜையில் ப‌ர்மிஷ‌ன் கார்டுக‌ள் (ஊருக்குச் செல்ல‌)மட்டுமே வ‌ருவ‌தாக‌க் கூறினார்க‌ள்.

சில‌ர் அறைக‌ளில் க‌ம்ப்யூட்ட‌ரும் லேப்டாப்பும் கூட‌ வைத்திருந்த‌ன‌ர்.

எல்லா அறைக‌ளிலும் மின்விசிறி இருந்த‌து. (ஸாரி, இது ஓவர் தான், ஆனா நாங்க‌ள் ப‌டிக்கும் போது இதற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌து. சில வருடங்களுக்கு முன் யாரோ ஃபானில் தூக்கு மாட்டித் த‌ற்கொலை செய்து கொண்டார்க‌ளாம்.)

Civil: நாங்கள் படித்த காலத்தில் மதிப்புக் குறைந்திருந்த‌ பார்க்கப்பட்ட சிவில் துறை டாப் லிஸ்டில் இருந்தது. உண்மையில் இது தான் ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.(மேடையேறி அறிமுகப்படுத்திக் கொண்ட போது சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே அதற்குச் சான்று!)
ஆனால் நாங்கள் அத்துறையை விட்டு விலகி விட்டதைத் தெரிவித்த போது ஏமாற்றமடைந்தனர்.

இறுதியாண்டு சிவில் மாணவர்களில் பாதிப்பேருக்கு அதே துறையில் வேலை ஏற்கென‌வே கிடைத்திருந்த‌து. மேலும் அவ‌ர‌வ‌ர் ப‌டிக்கும் பொறியிய‌ல் (core) துறையிலேயே வேலை பார்க்கும் ஆர்வ‌ம் அதிக‌ம் உள்ள‌வ‌ர்களாக‌த் தெரிந்தார்க‌ள். த‌ய‌க்க‌மின்றி மேடையேறிப் ப‌ல‌ரும் பேசினார்க‌ள். (த‌மிழிலும் ஆங்கில‌த்திலும்) எங்க‌ள் கால‌த்தில் யாராவ‌து ஒரு சில‌ரே இத‌ற்குத் த‌யாராக‌ இருப்பார்க‌ள். அதுவும் ஆங்கில‌த்தில் சரளமாகப் பேச‌க்கூடிய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே.


ஆர்க்கெஸ்ட்ரா: இதைப் ப‌ற்றிக் கேட்ட‌துமே ம‌ற்ற‌ மாண‌‌வ‌ர்க‌ள் உற்சாக‌மாக‌ப் பேசினார்க‌ள். ப‌ல‌ போட்டிக‌ளில் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌வும் எல்லாருமே ரொம்ப‌வும் திற‌மைசாலிக‌ளாக‌ இருப்ப‌தாக‌வும் சொன்னார்க‌ள். பூட்டியிருந்த‌ அந்த‌ அறைக்குள் செல்ல‌ நான் விரும்புவ‌தாக‌ச் சொன்ன‌தும் ஓடிப்போய் சாவி எடுத்து வ‌ந்து திற‌ந்த‌ன‌ர். பியானோ ம‌ட்டும் அப்ப‌டியே இருந்த‌து. நாங்க‌ள் உப‌யோகித்த‌ அந்த‌ ட்ர‌ம் செட் இல்லை. த‌ங்க‌ள் சொந்த‌ கிட்டார், ம‌ற்றும் வ‌ய‌லின் வைத்திருந்தார்க‌ள். ஏனைய கருவிகளை நிக்ழ‌ச்சிக‌ள் ந‌ட‌த்தும் போது ஓரிரு வார‌ங்க‌ளுக்கு மொத்த‌மாக வாட‌கை எடுத்துக் கொள்வ‌தாக‌க் கூறினார்க‌ள். எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன் காலப் போல" பாட்டையும் அழகாகப் பாடிக் காண்பித்தன‌ர்.

1970 க‌ளிலும் 80க‌ளிலும் ப‌டித்த‌வ‌ர்க‌ள் அதிக‌ எண்ணிக்கையில் வ‌ந்து அள‌வ‌ளாவிக் கொண்டிருந்த‌ போது க‌ட‌ந்த‌ சில ஆண்டுக‌ளில் ப‌டித்த‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌ எண்ணிக்கை தான். அது ரொம்ப‌வும் வெட்க‌மாக‌வும் வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து. அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டி திட்ட‌மிட்டு ஒருமுறை வ‌ர‌வேண்டும் என்றி நினைத்துக் கொண்டோம்.

பெண்க‌ள் விடுதி மாலை 6.30 ம‌ணிக்குப் பூட்ட‌ப்ப‌ட்டு விடும் என்ற‌ விதியில் இம்மிய‌ள‌வும் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌வில்லை! அடுத்திருக்கும் வேளான் பல்கலை வளாகமே தெரியாத அளவு அடர்ந்திருக்கும் மரங்களில் நிறைய வெட்டப்பட்டிருந்தன.

சிவில் துறை என்ன‌தான் முன்னேறி இருந்தாலும் வேலைக்குத் தேர்வு செய்ய வ‌ரும் நிறுவனங்கள் இன்னும் பெண்க‌ளை உதாசீனப்படுத்துவது பத்து ஆண்டுகளாகியும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது நம்பவே முடியாத கொடுமை. "ABC யும் பாய்ஸ் மட்டும் தாங்கா எடுத்தாங்க. XYZ கம்பெனி எங்களை இன்டர்வ்யூவே அட்டென்ட் பண்ண விடலை" என்று அழாக்குறையாக மாணவிகள் சொன்ன போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் சொன்ன அதே வார்த்தைகள்.
இத‌ற்குக் க‌ல்லூரி நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து ஏதாவ‌து செய்ய‌ முடியுமா என்று தெரிய‌வில்லை.

மாலை நான்கு ம‌ணிவ‌ரை க‌ல்லூரியில் சுற்றி விட்டு ஒருவ‌ருக்கொருவ‌ர் விடைபெற்றோம். அத‌ன்பின் நிகழ‌ந்த‌து இன்னொரு ம‌ற‌க்க‌முடியாத‌ அனுப‌வ‌ம். முன்பின் பார்த்தறியாத ந‌ப‌ர் ஒருவ‌ரிட‌ம் ஆண்டாண்டு கால‌மாய்ப் ப‌ழ‌கிய‌தே போன்ற உள்ள‌ன்புட‌னும் உரிமையுடனும் ப‌ழ‌க‌ ஒரு சில‌ரால் தான்‌ முடியும். விஜி ராம் அவ‌ர்க‌ள் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு த‌னிப்பிற‌வி. அவ‌ர்க‌ளைச் ச‌ந்தித்த‌து ப‌ற்றித் த‌னி இடுகையில்!

Thursday, February 18, 2010

கல்லூரிக்குப் போகிறேன்!

விடிய விடிய எங்கள் சிரிப்பையும் பேச்சையும் எதிரொலித்த விடுதி அறையையும்,
காய்ந்து போன ரொட்டிகளும் உருளைக்கிழங்கு குர்மாக்களும் மணத்த மெஸ்ஸையும்,
எங்கள் காட்டுக் காட்டுக் கத்தல்களை அஞ்சா நெஞ்சுடன் தாங்கிக் கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவையும்,
கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்ட தேர்வுக் கூடங்களையும்,
ஏனென்றே தெரியாமல் மைதானத்தைச் த‌‌லை தெறிக்க ஓடுவது போல் என்னையும்,

இத்தனை வருடங்களாக நூறு முறையாவ‌து க‌ன‌வுக‌ளில் பார்த்திருப்பேன்.

என் பதின்ம வயதின் முக்கியமான நான்கு ஆண்டுகளை நான் கழித்த இடத்துக்குக் கடைசியாகச் சென்றது, ம‌திப்பெண் சான்றித‌ழ் வாங்கத் தான். அதன் பிறகு எத்தனையோ தீபாக்களையும் கவிதாக்களையும், பாலமுருகன், சக்திவேல்களையும் உருவாக்கி விட்டுக் கம்பீரமாய் நிற்கும் என் கல்லூரியையும் பேராசிரியர்களையும் மீண்டும் ஒரு முறை நாளை காணப் போகிறேன்.
ப‌ட‌ப‌ட‌ப்பாக‌ இருக்கிற‌து. சொல்லத் தெரியாத சிலிர்ப்பாக‌வும்!

நேஹாவை அழைத்துச் செல்ல‌ மிக‌வும் விரும்பினாலும் ந‌டைமுறைச் சிக்க‌ல்களா‌ல் முதன் முறையாக அவ‌ளை விட்டுச் செல்கிறேன். அவள் அப்பாவுக்கும் All the best சொல்லுங்கள்! :-)

Tuesday, February 16, 2010

டாக்டர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2

சென்ற இடுகையின் தொடர்ச்சி:

முதல் பகுதி இங்கே.

கேள்வி: ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் நாம தான் வித்தியாசம் காட்டறோமா இல்ல அதெல்லாம் மரபணுக்களிலேயே வருவதா? இது பத்தி உங்க விளக்கம் என்ன டாக்டர்?

டாக்டர்: இதுவரைக்கும் நடத்திய பரிசோதனைகளில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் விருப்பங்கள் வித்தியாசப்படும் என்பது தான் கணிப்பு. Even with the same set of toys, they'll have different preferences.

ஒரு ஆறு வயது ஏழு வயது ஆகும் போது நாம அவர்களை எப்படி நடத்தறோம், எந்த விதமான exposure குடுக்கறோம்ங்கறதைப் பொறுத்து அவர்களோட விருப்பங்கள் மாறலாம்.

கேள்வி: இந்த ஆண் பெண் சமத்துவம்கிறது எப்போ டாக்டர் சாத்தியமாகும்? சிலர் சொல்றாங்க, இது சாத்தியமே இல்ல. ஏதாவது ஒரு இனம் இன்னொண்ணை ஆதிக்கம் செலுத்தினாத் தான் எல்லாம் சரியா நடக்கும்னு.

டாக்டர்: கண்டிப்பா சமத்துவம் வரணும்; இப்போதைக்கு நம்ம நாட்டுல அது இல்ல. வீட்டு வேலைகளும் சமையலும் நம்ம வேலையும் தானனு (உதவி செய்றது மட்டுமில்ல) ஆண்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தான் வரும்.

கேள்வி: இதுக்குப் பெண்களால என்ன செய்ய முடியும்? இந்த எண்ணம் ஆண்கள் மனத்தில் வரணும்னா அவங்க எந்த விதத்துல போராடணும்?

டாக்டர்: பல காலமா அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் உரிமைக்காக்ப் போராடும் போது வேகம் வர்றது இய்ல்பு தான். ஆனா ஒரு விஷயம் கவ்னிக்கணும்.
அரசியல் புரட்சி ஏற்படணும்னா கூட மக்கள் மனதில் மாற்றம் முதல்ல வரணும். இது சமூகத்தில, குடும்பங்களில் ஏற்பட வேண்டிய புரட்சி. அதனால நிதானமா, பக்குவமா ஆண்களுக்குப் புரிதலை ஏற்படுத்தித் தான் சாதிக்க முடியும்.


கேள்வி: சரி, ஆண் குழந்தை வித்தியாசம் இருக்கு சரி But generally are we products of genes or environment? உதாரணமா, இப்போ பாரம்பரியமா ரொம்ப புத்திசாலியான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை ஒண்ணு சந்தர்ப்பவசமா ரொம்ப அறியாமையோட‌ இருக்கற‌ பெற்றோர் கிட்ட வளர்ந்தா இயற்கையா அதுக்கு இருக்கற புத்திசாலித்தனம் வெளிப்படுமா?

டாக்டர்: பிறக்கும் போது இருக்கக்கூடியது ஒரு basic capacity. ஒரு பாத்திரம் மாதிரி. அதுல நாம எவளோ போடறோம்கறதைப் பொறுத்துத் தான் அதோட வளர்ச்சி இருக்கும். அது வளர்ற சூழ்நிலையைப் பொறுத்துத் தான் அமையும்.

இய‌ல்பான‌ கொள்ள‌ள‌வுங்க‌ற‌து சில‌ பேருக்கு அதிக‌ம், சில‌ பேருக்குக் குறைச்ச‌ல். குழந்தைக்கு இயல்பா எவ்வளவு கொள்ளளவு இருந்தாலும் சூழ்நிலை அமையலேன்னா வளர்ச்சி சாத்தியமில்லை.

அதே மாதிரி ஓட்டைப் பாத்திரமா இருந்தா எவ்ளோ தான் போட்டாலும் நிறையாது!

அதனால தான் சில பேர் தங்கள் குழந்தைகளை இஞ்சினியரிங் தான் படிக்கணும்னு போட்டுப் படுத்தி அவங்க ப்ரேக் டவுன ஆகறாங்க. அவங்களுக்கு அந்த விஷயத்தில aptitude ம் இருக்காது. ஆர்வமும் இருக்காது.

கேள்வி: சரி, சின்ன வயசிலயே ஒரு துறையில ஆர்வம் இருக்கா இல்லையான்னு எப்படிக் கண்டு பிடிக்கறது?

டாக்டர்: அது கஷ்டம்மா; நம்ம கல்வி முறையைப் பொறுத்த் வரைக்கும். இங்கே கல்வி முறையே ஞாபக சக்தியை முக்கியமா வெச்சுத் தானே இருக்கு. அது மாறணும் முதல்ல.

கேள்வி: இந்த left brain, right brain னு சொல்றாங்களே. சிஸ்டமாட்டிக் மூளை, க்ரியேட்டிவ் மூளை அப்படின்னு. அதை வெச்சு ஒருத்த‌ரோட‌ திற‌மையை அள‌விட‌ முடியுமா?

டாக்டர்: அது பாப்புலர் மனவியல்ல ஒரு பிசகான தியரி.
மூளையில நிறைய பகுதிகள் இருக்கு Fine motor areas, language areas னு லெஃப்ட் ரைட் பிரிஞ்சு தான் இருக்கு.

எல்லாராலையும் கவிதை எழுத முடியறதில்ல, அதை ரசிக்கவும் முடியறதில்ல. அந்தந்த மூளைப் பகுதி எப்படித் தூண்டப்படுதுங்கறது அப்படிங்கறதை வெச்சுத் தான், ஒரு குறிப்பிட்ட‌ ப‌குதியில‌ நியூரான்க‌ள் எவ்வ‌ள‌வு செய‌லாக்க‌த்தோட‌ இருக்குங்க‌ற‌தைப் பொறுத்துத் தான் அந்த‌ விஷ‌ய‌த்தில் ஈடுபாடும் திற‌மையும் இருக்கும்.

அப்புறம் தூண்டறதுங்கறதும் திணிக்கறது இல்ல.
ஒரு விஷயத்தைப்பத்தி ஆர்வம் உண்டாகற மாதிரி சொல்லிட்டு விடறது. அப்படி விடற அந்த இடைவெளியில தான் தான் அவங்க உள்ள வர்றாங்களா இல்ல அப்ப‌டியே ஓடிப் போயிடறாங்களான்னு தெரியும்.

மேலும் மனவியல் மருத்துவம், பரிசோதனைகள் எல்லாமே என்ன ‌கோளாறுன்னு (abnormalities) க‌ண்டுப்பிடிக்க‌ற‌துக்காக‌ வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்ட‌வை தான்.
ஏதாவ‌து த‌ப்பா இருக்கான்னு க‌ண்டுபிடிக்க‌றதுக்காக‌. எது ரொம்ப சரியா இருக்குன்னு க‌ண்டுபிடிக்க‌ற‌து முடியாது.
(To find out what is wrong. Not to find out which is more right!)

கேள்வி: அப்போ ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ம் த‌த்துவார்த்த‌மான‌து தானா?

டாக்டர்: இலலை., அது pure science. (மூளையில) இந்தக் கெமிக்கல் கூடுது குறையுது. அதனால இந்தப் பிரச்னை; எந்த மருந்து கொடுத்தால் அது சம‌நிலைக்கு‌ வ‌ரும்னு பார்த்து வைத்திய‌ம் ப‌ண்ற‌து தான் ஸைக்யாட்ரி. அவ்வ‌ள‌வு simple and straight forward. என்ன, வர்றவங்க‌ ஒரு அன்பில‌ பேச‌றாங்க‌. நானும் அன்பால‌ கேட்டுக்க‌றேன். அதான் நேர‌மாகுது. இல்ல‌னா ஜென‌ர‌ல் ப்ராக்டிஸ் மாதிரி தான்; கொஞ்சம் பேசினவுடனேயே diagnosis முடிச்சிடலாம்!

கேள்வி: மனநோய் இருக்கற‌ ஒருத்தரைப் பாத்த‌வுடனே கண்டுபிடிச்சிடலாமா டாக்டர்?

டாக்டர்: பார்த்த‌வுட‌னே இல்ல‌, பேசின‌வுட‌னே க‌ண்டுபிடிச்ச‌ட‌லாம்.
நம் எண்ணங்கள் எல்லாமே, உட‌ல்மொழியாவும் வாய்மொழியாவும் தானே வெளிப்ப‌டுது. இதுல‌ ஒரு relevance, coherence, logic, continuity இருக்க‌ணும். (பொருத்தமாக‌, தொடர்புடன், அறிவுபூர்வமாக‌, தொட‌ர்ச்சியாக‌)

அதீத‌உண‌ர்ச்சி வெளிப்பாட்டுடன் (exaggerated) நடவடிக்கைகள், சூழ்நிலைக்குப் பொருத்த‌மில்லாத‌ பேச்சு, இதெல்லாமே இந்த வேதிப் பொருட்கள் கூடறதாலயோ குறைய‌ற‌தால‌யோ ஏற்ப‌ட‌லாம். மொத்த‌ம் 116 வித‌மான‌ மனநோய்கள் டாக்குமென்ட் பண்ணி இருக்கு.

ஸைக்காலஜி, ஸைக்கியாட்ரி வித்தியாசம் தெரியும்ல.
(தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தை பார்க்க‌வும்!)

ந‌ம்மூர்ல‌ பொதுவா ரெண்டையும் குழ‌ப்பிக்க‌றாங்க‌. பொதுவா குடும்ப‌த்துலயோ திரும‌ண‌ வாழ்க்கையில‌யோ பிர‌ச்னை இருந்தாலோ, இல்ல இப்ப‌ல்லாம் குழ‌ந்தைங்க‌ ஸ்கூலுக்குப் போக‌ மாட்டேன்னு ரொம்ப‌ அட‌ம்பிடிக்கிறாங்க‌. இதெல்லாம் ஒரு ஸைக்கால‌ஜிஸ்டே க‌வுன்ச‌லிங் மூல‌மா ச‌ரிப‌ண்ணிட‌லாம்.

ஆனா, ஒரு வேளை அப்படி சரியாகலைன்னா அந்த‌க் குழ‌ந்தைக்கு அடிப்ப‌டையிலேயே மூளையில‌ ஏதோ ஒரு வேதிப் பொருளின் ச‌ம‌நிலை த‌வ‌றி இருந்தா அதைச் ச‌ரி ப‌ண்ண‌ற‌துக்கு ஒரு ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர் ஸைக்க்யாட்ரிஸ்ட் தேவை.

நம்மூர்ல ஸைக்யாட்ரின்னாலே ஒரு mystic (தெய்வீகமான) பார்வை பாக்கறாங்க. குரு மாதிரி பார்க்கறது, எல்லாத்துக்கும் அவங்க கிட்ட ஆலோசனை கேக்கறது அப்படி ஆயிடுது. என் கிட்ட அது ரொம்ப அதிகம் எதிர்பார்க்கப்படுது. என்னோட‌ தோற்ற‌ம் கார‌ண‌மா இருக்க‌லாம்.


கேள்வி: உட‌ல் மொழின்னு சொல்றாங்க‌ளே. அது எவ்வ‌ள‌வு தூர‌ம் துல்லிய‌மான‌து? அதைப் ப‌த்தி நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌?

டாக்டர்: I believe in it. It can be made more of a science than what it is now. சில குறிப்பான பாவனைகள், நடவடிக்கைகள் இருக்கு. காலம்காலமா இருந்துட்டு வர்ற விஷயம் இது. டார்வின் தான் முத‌ல்ல‌ இதை அறிவிய‌ல் பூர்வ‌மா பார்க்க‌ முய‌ற்சி ப‌ண்ண‌வ‌ர்.

ந‌ம்ம ஊர்ல‌யும் நாட்டிய‌ம் நாட‌க‌ம் இதிலெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ற அபிந‌ய‌ங்க‌ளுக்கு அடிப்ப‌டை பாடி லேங்வெஜ் தானே. மெய்ப்பாட்டிய‌ல்னு தொல்காப்பிய‌ர் சொல்லி இருக்கார். இதுவும் ஸைக்யாட்ரி மாதிரி தான். ஒரு ஆளோட‌ அந்த‌ நேரத்து ம‌ன‌நிலை (mood status) தெரிஞ்சுக்க‌லாமே த‌விர‌ ஒருத்த‌ர் ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா, புத்திசாலியா முட்டளான்னெல்லாம் க‌ண்டுபிடிக்க‌ முடியாது.

கலை, ஓவியம், எழுத்து என்று தொடர்ந்த டாக்டரின் பேச்சு அவர் மிகவும் ரசித்த லா.ச.ரா வின் அபிதா பக்கம் சென்றது.

டாக்டர்: அதுல கதை என்று பெரிசா ஒண்ணும் இல்லை. அத‌ன் மொழிய‌ழ‌குக்காக‌வே ம‌ய‌ங்கிடலாம். க‌தை இல்லாத‌ குறையை அந்த‌ அற்புத‌மான‌ மொழி நிறைவு செய்துடும். த‌மிழ் மொழியை எப்ப‌டியெல்லாம் அழ‌காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்க்றதுக்கு எடுத்துக்காட்டு லா.ச‌.ராவின் அபிதா.
அத‌னாலேயே அதை மேடை நாட‌க‌மாக‌ப் போட்ட‌ போது எடுபடல. மேடை நாட‌க‌த்துக்குக் க‌தையும் பாத்திர‌ப்ப‌டைப்பும் ரொம்ப‌ முக்கிய‌ம்.

(டாக்டரின் நாடக அனுபவங்களை அவரே அழகாக எழுதி இருக்கிறார்.)

கேள்வி: கனவுகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு டாக்டர்? கனவுகள் ஏன் வருது?

டாக்டர்: கனவுங்கறதே ந‌ம்மோட‌ உள் ம‌ன‌ ஆசைக‌ள் அல்ல‌து ப‌யங்கள் தான். உறக்கத்தில் நிறைய நிலைகள் உண்டு.ஓரிரு மணி நேர ஆழ்ந்த உறக்கம், அடுத்து சில நேரம் லேசான உறக்கம் என்றுமாறி மாறி தான் வரும். உறக்கத்தில் அப்படி ஆழம் குறையும் சில நிலைகளில்தான் மூளை கனவுகளை உருவாக்குகிறது.

கனவுல நேரம் ரொம்பக் குறுகிய விஷயம். அப்புறம் குறியீடுகள். ஒருத்தருக்குப் பதிலா இன்னொருவர் அதே குணாதிச‌ய‌ங்க‌ளோட‌ வர‌லாம்.
அப்புறம் நேற்று வந்த கனவு இன்னிக்குத் தொடர்றதும் நார்மல் தான். தூங்கற நேரம் முழுக்க கனவு வந்து அது நினைவும் இருந்தா அது தப்பு. மூளைக்கு ஓய்வில்லைன்ன்னு அர்த்தம். நார்மலா அப்படி இருக்காது.

எத்தனை கனவு கண்டாலும் கடைசியில் வர்ர கனவு மட்டும் காலையில ஞாபகம் இருக்கும். மற்றதெல்லாம் மறந்துடும். கனவு வர்ரதே தூக்கத்தில சில நிலைகள்ல தான். கண்ணிமைகள் படபடக்கறது, கருவிழி அசையறதெல்லாம் கனவு வரும்போது நடக்கும்.

கேள்வி: க‌ன‌வுக‌ளே வ‌ராம இருந்தா அது ப்ர‌ச்னையில்லையா?

டாக்டர்: அப்ப‌டி யாருக்கும் இருக்காது. மறந்து போயிடுதுன்னு தான் அர்த்த‌ம். அது ரொம்ப‌ நிம்ம‌தியான‌ விஷ‌ய‌ம்!

அப்புறம் கனவுகளைப் பத்தி உறுதியா எந்த ஆராய்ச்சியும் பண்ண முடியாது. கனவு வரும்போது மூளையோட செயல்பாடு என்ன மாதிரி இருக்குன்னு graph பண்ணிப் பார்க்கலாம். பொருளைப் பண்ண முடியாது.ஃப்ராய்டு எழுதினதெல்லாம் பாதி தியரி தான்.

கேள்வி: ஓருபாலின‌ ஈர்ப்புங்கறது ம‌ன‌ந‌ல‌க் கோளாறா?

டாக்டர்: இல்லை. அதுக்காக‌ அது இய‌ல்பான‌ விஷ‌ய‌மும் இல்லை. அதை மாற்றவும் முடியாது. சில‌ பேர் bisexual (ஒரு பாலின‌ ஈர்ப்பு, எதிர்பாலின‌ ஈர்ப்பு இர‌ண்டுமே இருத்த‌ல்) ஆக‌ இருக்க‌லாம். ஆனா முழுமையா ஹோமோ வாக‌ இருந்தா ஒண்ணும் ப‌ண்ண‌ற‌‌‌துக்கு இல்லை.

ச‌மூக‌ அழுத்த‌ங்க‌ளுக்காக‌ அவ‌ங்க எதிர் பாலினத்தைத் திரும‌ண‌ம் ப‌ண்ணிக்கிட்டாலும் அத‌னால‌ இரு த‌ர‌ப்புக்குமே கேடு தான்.
ஹோமொசெக்சுவ‌ல் ஆணால‌ க‌ண்டிப்பா ம‌னைவியையும் திருப்திப் ப‌டுத்த‌ முடியாது. குழ‌ந்தைப் பேறும் இருக்காது.

ஹோமோசெக்சுவ‌ல் ஜோடிக‌ளுக்கு ஆண் பெண் உற‌விலிருக்கும் அத்த‌னை உணர்வு ரீதியான அம்ச‌ங்க‌ளும் கூட ஈகோ, பொறாமை, possessivness, அப்படியே இருக்கும். ஆனா ரெண்டு பேர்ல ஒருத்த‌ர் அதிக‌ ஆளுமை உடைய‌வ‌ரா இருப்பார்.
ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ ரீதியா இதுக்கு ஒண்ணும் ப‌ண்ண‌ முடியாதுங்க‌ற‌துனாலேயே நான் பெரிசா இந்த‌ விஷய‌த்துக்குள்ள‌ போற‌தில்ல‌.

ஆனா ஒரு ஹோமோ உண்மையிலேயே எதிர்பாலின‌ விருப்ப‌முள்ள‌வ‌ரா மாற‌ விரும்பினா (அப்படி சிலர் உண்டு)அதுக்கு முய‌ற்சி ப‌ண்ண‌லாம். ஆழ்நிலை உற‌க்க‌த்துக்குக் கொண்டு போய் suggestion சிகிச்சை கொடுக்க‌லாம். எதிர்பாலின‌ விருப்ப‌த்தைத் தூண்டும் வ‌கையில் ப‌ட‌ங்க‌ளோ புத்த‌க‌ங்க‌ளோ பார்க்க‌ வைக்க‌லாம். இது எதுவுமே பலன் தரலைன்னா விட்டுட‌ வேண்டியது தான்.

கேள்வி: ஓரின‌த் திரும‌ண‌த்தைப் ப‌த்தி என்ன‌ நினைக்கிறீங்க?
டாக்டர்: திருமணம் என்னம்மா. பிடிச்சா அவங்க தாராளமா சேர்ந்து வாழ வேண்டியது தானே. முன்னாடி இது குற்றமாவே பார்க்கப்பட்டது. இப்போ தான் அது இல்லையே.

கேள்வி: இல்லை, ச‌ட்ட‌ப்ப‌டி அங்கீகாரம் வேண்டும், குழ‌ந்தைத் த‌த்தெடுக்கும் உரிமை வேண்டும்னெல்லாம் இவ‌ர்க‌ளில் சில‌ர் போராட‌றாங்க‌ளே? அது ச‌ரியா? ஓரின‌ப் பெற்றோரிட‌ம் வள‌ரும் குழ‌ந்தை இய‌ல்பான‌ வ‌ள‌ர்ச்சி இருக்குமா? அதுக்கும் அவங்களைப் பாத்து அதே மாதிர்யான விருப்பம் வர வாய்ப்பு இருக்கா?

டாக்டர்: இல்ல, அப்படிலாம் பாத்துக் கெட்டுப் போக முடியாது. ஒரு aversion வரலாம். இயல்பான குடும்ப அமைப்பு இல்லாததுனால நிச்சயம் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கு.

கேள்வி:
ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் பத்தி ஒரு கேள்வி. மகனுக்கு அப்பா மேல வரும் பொறாமை அல்லது வெறுப்புணர்வு மாதிரி ஒரு அப்பாவுக்கு மகன் மேல வருமா?

டாக்டர்: வெறுப்புன்னில்ல, கடந்து போன தன்னோட இளம் வயதை அவன் கிட்ட பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சு வரலாம். That is quite normal.

கேள்வி: அப்படி இல்ல, மகன் தன்னை விட உயர்வா வளர்ந்துடக் கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு அவன் வளர்ச்சியைத் தடைபண்ற அளவுக்கு இந்தக் காம்பிளக்ஸ் வருமா?

டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு அப்படி யாருக்கும் வந்து நான் பார்த்ததில்ல, ஆனா சாத்தியக்கூறுகள் இருக்கு.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டாக்டரின் பொன்னான நேரத்தை விரயம் செய்து விட்டிருந்தோம்! போதுமென்று தோன்றியதால் விடைபெற எழுந்தோம்.

வீட்டிலேயே மிகப்பெரிய அறையை டாக்டர் புத்தகங்களுக்கு ஒதுக்கி இருந்தார். அதைப் பார்க்காமல் எப்படிக் கிளம்புவது?
கம்ப இராமாயணம் முதல் காஃப்கா வரை, ஓஷோ முதல் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் வரை சகலமும் இருந்த அந்த நூலகம் அவர்களின் பரந்து பட்ட ரசனைக்கும் அறிவுக்கும் சான்றாக இருந்தது. ஆனால் தான் நம்புவதும் ஆதரிப்பதும் இடது சாரி சிந்தனைகளைத் தான் என்பதை உறுதியாகக் கூறுகிறார் டாக்டர்.

அன்பளிப்பாக டாக்டர் கொடுத்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு மிகுந்த மன்நிறைவோடு வீடு திரும்பினோம்.

தொழில் ரீதியாகவோ, அவரது துறை சார்ந்தோ எவ்வித தகுதியும் இல்லாமல் நாங்கள் கேட்டுக் கொண்ட போதும் எங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு சம்மதித்ததோடு, பொறுமையாக எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு நன்றி என்பதை வார்ததைகளால் சொல்லி முடிக்க முடியாது.

தனது அலுவலகப் பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி எங்களுடன் அன்புடன் அளவளாவிய திருமதி. உமா ருத்ரன் அவர்களுக்கு எங்கள் அன்பும் நன்றியும்.