மகளிர் கல்லூரி விடுதி. மாலை ஆறு மணி.
கடைசி மாதாந்திரத் தேர்வு முடிந்திருந்த வெள்ளிக்கிழமை.
அனைத்து அறைகளும் பெண்களின் அரட்டைக் கச்சேரியில் அமளிப்பட்டுக் கொண்டிருந்தன. முதல் நாளிரவு கண்விழித்துப் படித்திருந்த ஒரு சில ”படிப்ஸ்” மட்டும் அத்தனை அமளியிலும் போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்க முற்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஜோதியின் அறையில் வழக்கமான ஜமா சேர்ந்திருந்தது.
ஜோதி - மூன்றாம் ஆண்டு இஞ்சினியரிங் மாணவி. படிப்பு, பாட்டு, அரட்டை, இனிய சுபாவம் என்று கல்லூரியில் ஓரளவு, இல்லை நிறையவே பிரபலமானவள்.
”ஹேய்! ரோலிங் லோட்ஸ் ப்ராப்ளம் அட்டெண்ட் பண்ணிங்களாப்பா? எனக்கு ஆன்ஸர் 12 கிலோ நியூட்டன் வருது..” மூக்குக் கண்ணாடியை ஏற்றி விட்டுக்கொண்டபடி வந்தமர்ந்தாள் லதா.
“அய்யோ! இந்தப் பூச்சி தொல்லை தாங்கலப்பா! யூனிட் டெஸ்டுக்கே ஏண்டி இந்த பில்டப்பு? மேன்ஸ்... சாப்பிட ஏதாச்சும் இருக்கா? பசிக்குது."
”ஒண்னுமில்ல. கொஞ்ச நேரம் இரு, மெஸ்ஸுக்குப் போயிடலாம்”
"அய்யோ இன்னிக்கு வெள்ளிக்கிழமையா.. சப்பாத்தி மெஸ்ஸில.. உவ்வே!”
”ம்ம்கும் இப்டி தான் சொல்லுவ, ஆனா ஃபுல் கட்டு கட்டுவே. நீ வந்தாலே மெஸ்ல எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க. உனக்கு சாப்பாடு போட்டு மாள.....” சொல்லி முடிக்கவில்லை. ஜெயந்தி விட்ட எத்தில் கீழே விழுந்தும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் ரம்யா.
ஜோதிக்கு எதிலும் மனம் லயிக்கவில்லை. அந்தக் கண்கள்....அந்தப்பார்வை.
இவர்கள் எல்லாரும் அவரவர் ரூமுக்கு ஒழிந்தால் என்ன என்று ஒரு நிமிடம் தோன்றியது.
”லதாக்குட்டி.. நீ எப்படியும் ராஜகோபால் சாரோட செல்லம். உனக்கு ஃபுல் மார்க்ஸ் தான் இண்டெர்னல்ல.. கடுப்பேத்தாம உக்காருடா, ஒரு கை குறையுது பார்” சொல்லிக் கொண்டே சீட்டுக்கட்டைக் கலைத்தாள் ஜெயந்தி.
“ஹேய் ஜோதி! என்னடி ட்ரீம் அங்க? சீட்டை எடும்மா கையில... ”
“அவ இன்னும் ஷாந்தனு விட்ட லுக்கையே நெனச்சிட்டு இருக்கா போல” சொல்லி விட்டு சேர்ந்தாற்போல் ஏதோ கிசு கிசுத்து விட்டுச் சிரித்தனர் கூடப் பிறக்காத இரட்டையர் அருணாவும் ஸ்மிதாவும்.
கோபத்துடன் அவர்களை அடிக்கக் கையை ஓங்கினாலும் உள்ளுக்குள் ஜில்லென்றிருந்தது ஜோதிக்கு.
“என்னடி? ஏதோ ராங் ரூட்ல போற மாதிரி இருக்கு?” ஜோதியின் அறைத்தோழியும் ஹாஸ்டலின் சுயம்பு மாமியார் பொற்ப்பேற்றுக் கொண்டவளுமான மேனகா தொண்டையைச் செருமினாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மேன்ஸ். இதுங்களுக்கு வேற வேலை இல்ல. ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்ஸ் நோட்ஸ் கேட்டான். கொடுத்துட்டு வந்தேன்”
“இன்னிக்குத் தான் டெஸ்டே முடிஞ்சுது, அதுக்குள்ள அவனுக்கு எதுக்கு நோட்ஸ்? ம்ஹும், எனக்கென்னவோ அவனுக்கு ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்ஸ்ல இண்ட்ரெஸ்ட் இருக்கற மாதிரி தெரியல ஜோதி.” தொடர்ந்து குபீரென்ற சிரிப்பு.
”ஆமாமாம், அவன் ரூம்மேட் கார்த்திக் கூட சொல்லிட்டு இருந்தான். உன் பேரக் கேட்டாலே உருகறானாமே பையன்! ஆனா சும்மா சொல்லக் கூடாது ஆளு செம ஸ்மார்ட்டா தான் இருக்கான்.” இது ரம்யா.
ஜோதிக்கு மறுபடியும் ஜிலீர்! “சீ! ஃபில்த்தி மைண்ட்ரி உனக்கு. அவன் பாவம் ரொம்ப இன்னசெண்ட். தமிழே தெரியாது அவனுக்கு. என் ஒருத்திக்குத் தான் எங்க க்ளாஸ்ல ஹிந்தி தெரியும். அதான்.”
“ஹேய்! சரியாப் போச்சு... கேர்ள்ஸ்! எல்லாரும் கேட்டுக்குங்க.. இங்க ஒரு விக்கெட் கூடிய சீக்கிரம் அவுட் ஆகப் போகுது. மேடம் என்னமா சப்போர்ட் பண்றா பாருங்க. மனசப் பாத்துக்கடீ!” என்று ரம்யா இழுக்க கிண்டலும் சிரிப்புகளும் ஆளாளுக்குத் தொடர்ந்தன.
அன்று மெஸ்ஸுக்குப் போகும் போதும், ஓளியும் ஒலியும் பார்க்கும் போதும், யார் கையிலோ பார்த்த ரமணிசந்திரன் நாவலை இரவல் வாங்கி ரூமுக்குத் திரும்பி வந்த போதும் அதே நினைவு தான். அந்தப் பார்வை, தோழிகளின் சீண்டல். நினைக்க நினைக்க இனித்தது. உலகப்பேரழகி போன்றதொரு கர்வம் வந்தது.
சில நாட்களுக்கு முன் யாரிடமோ கேட்டுக் கற்றுக் கொண்டு “நீ ரும்ப அழ்கா இர்க்கே” என்று அவன் கொஞ்சு தமிழில் சொன்னது நினைவுக்கு வந்தது. ரமணிசந்திரன் நாவலின் நாயகன் அவனாக நாயகி அவளாக, மனமெல்லாம் புல்லரித்தது.
திங்கட்கிழமை காலை. வழக்கமாக எட்டரை மணி வரை தூங்குபவள் ஏழரை மணிக்கெல்லாம் எழுந்து (ஸாரி அவளால் அதற்கு முன் என்றுமே முடியாது!) குளித்து, ’வாவ் ரோஸ் ஏஞ்சல் மாதிரி இருக்கேடி’ என்று தோழிகள் முன்பு பாராட்டிய ரோஸ் சுடிதார் அணிந்து, பூக்காரியிடம் பூ வேறு வாங்கி (மூன்று முழங்கள் வாங்கி இரண்டு முழங்களை ரூம்மேட்ஸுக்கு வெட்டி வைத்த பின்) வைத்துக் கொண்டாள்.
கண்ணாடியில் பல முறை பார்த்துக் கொண்ட பின், “என்னடி ரெடியா, போலாமா” என்றவளை அறைத் தோழிகள் வித்தியாசமாய்ப் பார்த்தனர்.
”ஜோதி!” குரல் கேட்டுத் திரும்பியவள், மேனகாவும் லதாவும் சீரியஸாக நின்றிருப்பதைப் பார்த்தாள். நெஞ்சில் ஒரு சின்ன திடுக். அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று யூகித்திருந்தாள். இரண்டு வருடங்களாக ஒரே அறையில் இருந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாயிற்றே.
“என்ன மேன்ஸ் ”
“சொல்றேனேன்னு தப்பா நெனச்சிக்காதே. அவளும் இவளும் ஏத்தி விடறாங்கன்னு கண்டபடி மனசை அலைய விடாதேடி. அந்த ஷாந்தனு நடந்துக்கறது சரி இல்ல. இது அடானமஸ் காலேஜ். நல்ல பேரோட படிச்சு முடிக்கணும்.”
“சீ..சீ.. நான் போய் அப்படி எல்லாம் விழுவேனா. சும்மா ஜாலிக்குத் தானே ஓட்டிட்டு இருந்தாங்க. அவன் சும்மா ஃப்ரெண்டு, அவ்ளோ தான். ”
உதட்டைப் பிதுக்கிய மேனகா அதற்கு மேல் பேசவில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு வகுப்புக்குக் கிளம்பினார்கள்.
மூவரும் வெவ்வேறு டிபார்ட்மெண்ட். தன் வகுப்பில் நுழைந்ததுமே அவர்களை மறந்து போனாள். எங்கே அவன், ஓரக்கண்ணால் பாய்ஸ் பக்கத்தை மேய்ந்தாள். கடைசி பெஞ்சில் சாய்ந்து அமர்ந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நெஞ்சு படபடக்கத் திரும்பிக் கொண்டாள். உச்சி முதல் உள்ளங்கால் முழுதும் பரவிய இரத்தம் இப்போது அவள் கன்னத்தைச் சிவக்கச் செய்து சுடிதார் கலருக்கு மாற்றிக் கொண்டிருந்தது. அதற்குள் லெக்சரர் வரவே தற்காலிகமாக மனதை மூடினாள்.
பிரேக்கில் லேடிஸ் ரூம் சென்று வர அழைத்த தோழிகளை மறுத்து விட்டு இடத்திலேயே அமர்ந்திருந்தாள். பையன்கள் கூட்டமும் குறைந்தவுடன் அவன் மெதுவாக வந்து அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
“ஹாய்.. ஜோதி.. ”
”ஹாய்..."
“இன்னிக்கு என்ன உன் பிறந்த நாளா?” ஆங்கிலத்தில் கேட்டான்.
”இல்லையே ஏன்?” அவளும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னாள்.
“வெல்.. யு லுக் சிம்ப்லி ராவிஷிங்” (நீ சும்மா அசத்தலா இருக்க!)
”சும்மா இரு ஷாந்தனு, நீ இப்டி எல்லாம் பேறது எனக்குப் பிடிக்கல” - இது தான் அவள் சொல்லவேண்டும் என்று நினைத்தது. ஆனால் வந்ததென்னவோ... கொஞ்சலாக ஒரு “ஷட்டப்” தான்.
“நோ ரியலி. லிஸன். நான் உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். லஞ்ச் பிரேக்கில் போஸ்ட் ஆஃபிஸ்க்கு வர முடியுமா?”
நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள, “அபௌட் வாட்? எதா இருந்தாலும் இங்கயே பேசு”
“நோ ஜோதி.. ப்ளீஸ்! ஜஸ்ட் டென் மினிட்ஸ்...” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்கவும் அதற்கு மேல் அவளால் மேலோட்டமாகக் கூட மறுக்க முடியவில்லை.
‘அக்காக்குப் பிறந்த நாள். மறந்துட்டேன். ஃபோன் பண்ணி விட்டு வருகிறேன்’ என்று சாக்கு சொல்லித் தோழிகளை அனுப்பிவிட்டு வருவதற்குள் அவன் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
”ஸாரி... லேட்டாயிடுச்சு“ என்று சிரித்தாள்.
”இட்ஸ் ஆல்ரைட். நீ வரவே மாட்டியோன்னு நெனச்சேன்” என்று பதிலுக்குச் சிரித்தான். அவன் முகத்தில் ஒரு தனிப் பரவசம். தான் தனியே பேச அழைத்து அவள் வந்து விட்டதில் அதிகபட்ச குதூகலம் தெரிந்தது அவன் முகத்தில்.
அவளுக்கு அது நேரம் வரை இருந்த பரவசம் எல்லாம் காணாமல் போயிருந்தது. கல்லூரி தபால் அலுவலக்த்தை ஒட்டிய வெராந்தாவில் மரநிழலில் நின்றிருந்தனர். வெளிப் பார்வைக்குச் சற்றே ஒதுங்கித் தான் இருந்தது என்றாலும் குறுக்கும் நெடுக்கும் போகும் பேராசிரியர்களின் சந்தேகப் பார்வையும் மாணவர்களின் கிறீச்சொலியும் அவளுக்குப் பெரிய தர்மசங்கடமாக இருந்தது.
திக்கித் திக்கித் தன் காதலை அவன் படு சீரியஸாகச் சொல்லச் சொல்ல இவளுக்கு நாவுலர்ந்து போயிற்று. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனது குறும்புப் பார்வைக்கும் பேச்சுக்களுக்கும் பின் இத்தனை ஆழ்ந்த உணர்வுகள் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனைச் சந்திக்கவே வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது.
”நான் எத்தனையோ ஊர்களில் தங்கி இருக்கிறேன். உன்னைப் போல் ஒரு பெண்ணை நான் இது வரை பார்த்ததேயில்லை”
கரகரப்பான குரலில் அவனது கெஞ்சல் மொழி காதுகளைச் சூடேற்றிக் கொண்டிருந்தன.
ஆனால் அதையும் மீறி ஒரு காட்சியில் மனம் பதிந்தது. தூரத்தில் மரத்தடியில் அனிதா. சுரேஷுக்காக அவள் வழக்கமாகக் காத்திருக்கும் இடம் அது தான். சற்று நேரத்தில் சுரேஷ் அவளைக் கடந்து மூன்றாவது கேட் வழியாக வெளியில் செல்வான். சற்றுப் பொறுத்து அவளும் செல்வாள். பக்கத்து காஃபி ஷாப்பில் பேசிவிட்டு லஞ்ச் முடியும் சமயம் அரக்கப் பரக்க வகுப்புக்கு ஓடி வருவார்கள். விடுமுறை நாட்களில் சினிமா, ஆழியாறு என்று எங்காவது சுற்றப் போய் விடுவார்கள். விடுதியில் பெரும்பாலும் தனியாகவே தான் இருப்பாள். எப்போதாவது அவளுடன் ஒட்டிக்கொள்ளும் குட்டிப்பிசாசு சசிப்ரியாவைத் தவிர்த்து.
டி.வி. ரூம் கலாட்டாக்கள், சீட்டுக்கச்சேரிகள், பிறந்தநாள் பார்ட்டி, டிப்பார்ட்மெண்ட் கல்ச்சுரல்கள், க்ளாஸ் டூர், கும்பலாகச் சேர்ந்து போகும் சினிமாக்கள் எதிலும் அவளைப் பார்ப்பது அரிது. பெரும்பாலும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் சுரேஷைச் சந்திக்கச் சென்று விடுவாள். ஏனோ அவளைப் பார்த்துப் பாவமாகத் தான் இருக்கும். கல்லூரி வாழ்வின் இயல்பான அத்தனை சந்தோஷங்களையும் தவற விடுகிறாளே.
தன்னால் அது முடியுமா? ஆர்க்கெஸ்ட்ரா ஒத்திகைகள், கல்லூரிப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், தனது தோழிகள், அவர்களுடன் மணிக்கணக்காய் அரட்டை, வார இறுதியில் டே ஸ்காலர்ஸ் வீடுகளுக்குச் செல்வது இவற்றை எல்லாம் தியாகம் செய்ய முடியுமா இவனது காதலுக்காக?
சுரேஷ் கடந்து சென்றான். அவன் தலை மறைந்ததும் அனிதா யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் நோக்கிவிட்டு, அந்த மொட்டை வெயிலில் தன்னந்தனியே கல்லூரி கேட்டைத் நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
சட்டென்று எல்லாம் தெளிந்ததைப் போல் உணர்ந்தாள் ஜோதி.
தன் மனதில் இருந்தது வெறும் மயக்கம், தன் அழகையும் சுபாவத்தையும் ஒருவன் ஆராதிக்கிறான் என்ற பூரிப்பு தவிர வேறில்லை என்று புரிந்தது.
தீர்க்கமான குரலில், “ஷாந்தனு. நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் எதிர்பார்க்கல. வேண்டாம். லெட்ஸ் பீ ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஊரு விட்டு ஊரு படிக்க வந்திருக்கோம். அதுவும் ப்ரொஃபஷனல் கோர்ஸ். அந்த வேலையை மட்டும் பார்ப்போம்.” சிரிப்புடன் சொல்லிவிட்டு, ”உனக்கு கோபம் இருக்கலாம். ஆனா நல்லா யோசிச்சுப் பாரு. நீ ஒண்ணும் முட்டாள் இல்ல. க்ளாஸ் டாப்பர் லிஸ்ட்ல இருக்கறவன். இப்பக் கஷ்டமா இருந்தாலும் நாளைக்கு நீயே எனக்கு நன்றி சொல்லுவே. பை ஷாந்தனு. இனிமே தனியா சந்திக்கக் கூப்பிடாதே.”
அவன் முகத்தைத் திரும்பிப் பார்க்காமலே விடுவிடுவென்று விடுதி நோக்கி நடந்தாள்.
அன்று மாலை நடந்ததையெல்லாம் மேனகாவிடமும் லதாவிடமும் மட்டும் பகிர்ந்து கொண்டாள்.
”ஹூம், பரவால்லியே. பொறுப்போட தான் நடந்துட்டிருக்க.. ஆனா நான் சொன்னதுக்காகவா? உண்மையில் உனக்கு அவன் மேல ...” குற்ற உணர்ச்சியுடன் ஆரம்பித்த மேனகாவை இடைமறித்தாள் ஜோதி.
“இல்ல மேனகா, அவன் பேசற வரைக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. ஆனா சீரியஸா காதல் பண்ற அளவுக்கெல்லாம் அவனைப் பத்தி... இல்ல, இல்ல, என்னைப் பத்தியே எனக்கு இன்னும் சரியாத் தெரியாது.” சொல்லிவிட்டுச் சிரித்தாள் ஜோதி.
”ஹேய் ஜோதி, ஷாந்தனு ப்ரபோஸ் பண்ணானாமே.. வேண்டான்னு சொல்லிட்டியாமே... பாவண்டி.” ஜெயந்தி கவலை தோய்ந்த குரலுடன் வந்தாள்.
”ப்ச்.. ஸோ ஸேட். பாய்ஸ் ஹாஸ்டல் முழுக்க இப்போ இதான் பேச்சாம். ரொம்ப அப்செட்டா இருக்கானாம்; செந்தில் சொன்னான். ஏண்டி உனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்னு நெனச்சோமே” பின்னாடியே ரம்யா.
“பிடிக்காதுன்னு யாரு சொன்னா? அதுக்காக...? பை த வே.. ரொம்ப கவலைப்படாதீங்க. உங்கள மாதிரி ஏத்தி விடற ஃப்ரெண்ட்ஸ் இல்லாம இருந்தாலே போதும், அவன் சீக்கிரம் நார்மலாயிடுவான். ஒரு ரம்மி போடலாமா?” சொல்லிவிட்டு மேனகாவைப் பார்த்துக் கண்ணடிக்க, குறும்புச் சிரிப்புடன் அதை ரசித்தாள் மேனகா.
பி.கு. அன்பானவர்களே, என் முதல் சிறுகதை முயற்சி! பார்த்து, ரொம்ப வலிக்காம திட்டிட்டுப் போங்க! நன்றி.