Showing posts with label பட்டாம்பூச்சி. Show all posts
Showing posts with label பட்டாம்பூச்சி. Show all posts

Tuesday, August 17, 2010

பட்டுப்பூச்சியும் ஆந்துப்பூச்சியும்

பட்டாம்பூச்சி

பட்டுப்பூச்சி, வண்ணத்துப் பூச்சி என்றும் அழைக்கப் படுகிற இந்தச் சின்னப் பூச்சிக்கு மட்டும் நம்மிடையே ஒரு தனி அந்தஸ்து இருக்கிறது. கண்ணைக் கவரும் சிறகுகள், கைக்கு லேசில் அகப்படாமல் படபடவெனப் பறந்து திரியும் அழகு; பொதுவாகவே அழகான மலர்களும், புற்தரையும் இருக்கும் ரம்மியமான சூழலில் மட்டுமே காணப்படும் தன்மை இதெல்லாம் தான்.

நேஹாவுக்கு மிகவும் பிடித்த உயிரினமும் பட்டுப் பூச்சி தான். பட்டுப்பூச்சி எப்படிப் பறக்கும் என்று கேட்டால் கைகளை இரண்டு ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலோடு சேர்த்து அழகாக அசைத்து "திகுதிகுதிகுன்னு போகும்" என்பாள். (அவள் மாமிப்பாட்டி சொல்லிக் கொடுத்தது.)

ஆந்துப்பூச்சி

Moth என‌ப்படும் ஆந்துப்பூச்சியும் பட்டுப்பூச்சியின் வகையைச் சேர்ந்தது என்றாலும் இதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன‌. பட்டுப்பூச்சிகளுக்கு பலவித பளிச் நிறங்களில் சிறகு இருக்கும்; ஆந்துப் பூச்சிகளுக்குப் பெரும்பாலும் பழுப்பு அல்ல கறுப்பு நிறத்தில். ஆனால் இரண்டுமே அதன் தனித்தன்மைக்கேற்ப அழகு தான்.

உன்னிப்பாகப் பார்த்தால் பட்டுப் பூச்சி அமரும் போது சிறகுகளை மூடிக் கொண்டு அமரும். Moth சிறகினை விரித்தபடியே அமரும். ஆந்துப்பூச்சி பூக்களிருக்கும் இடம் தான் இருக்கும் என்பதில்லை. பட்டுப்பூச்சி பெரும்பாலும் பகல்நேரங்களில் பறக்கும்; ஆந்துப்பூச்சி இரவு நேரங்களில். இது தவிர உடற்கூறுகளிலும் சில வேறுபாடுகள் உண்டு.

ஒரு நாள் மாலை வீட்டுக்குள் ஒரு மாத் வந்தது. நேஹா ஒரேயடியாக உற்சாகமாகி அதைப் பிடிக்க அதன் பின்னாடியே ஓடினாள். பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி என்று உற்சாகக் கூச்சல்!

அவளது உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. அங்கும் இங்கும் பறந்த அது திடீரென்று எங்களுக்கருகில் தரையில் உட்கார்ந்தது. நானும் நேஹாவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தவாறே அதைப் பிடிக்கக் கை நீட்டினோம். லேசாக நேஹாவின் விரல் பட்டதும் பூச்சி பறந்து வெளியே போய் விட்டது.

அவ்வளவு தான், உடனே முகமெல்லாம் மாறி அழுகை. "பட்டுப் பூச்சி போச்சு! பட்டுப்பூச்சி போச்சு... பாப்பா அடிச்சா, பாப்பா அடிச்சா..." முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது; தான் அடித்ததால் தான் அது பறந்து விட்டதாக நினைத்து அழுகிறாள் என்று. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானப் படுத்தினேன்.

"அதுக்குத் தொப்பை பசிச்சுதாம். வீட்டுக்குப் போய் சாப்பிடப் போயிருக்கும்மா. சாப்டுட்டு வந்து உன் கூட விளையாடும் என்ன?" என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கையில் 'வீல்' என்ற கூச்சலுடன் இடுப்பை விட்டு இறங்கி விட்டாள். புயலாக சன்னல் வழியே உள்ளே மீண்டும் நுழைந்த அந்தப் பூச்சியுடன் விளையாடத் தயாராகி விட்டாள்; என்னை மறந்தே போனாள்!

(பி.கு: தேவையில்லாம எதுக்கு உயிரியல் பாடம்னு கேட்காதீங்க, சும்மா ஒரு ஜெனரல் நாலட்ஜுக்குத் தான்!)