Tuesday, January 3, 2012
மயக்கம் என்ன - திரைப்பார்வை
ஆனால் ஒரு (புகைப்படக்) கலைஞனின் ஆசைகள், நிராசைகள் இவற்றை ஒரு சாமானியன் உணர்ந்து கொள்ளும் அளவு உண்மையாகவும், அலட்டல்கள் இல்லாமலே மனதைத் தொடும் அளவுக்கும் ரொம்ப நேர்த்தியாகக் காட்டி இருக்கிறார். தனுஷ் பிரமிக்க வைக்கிறார். பல இடங்களில் வாய் விட்டு வாவ் சொல்லவைத்தது அவரது நடிப்பு.
முக்கியமாக ஹீரோயிசம் இல்லாமல் ஹீரொவைக் காட்ட முடிவதற்கே ஒரு தைரியம் வேண்டுமே! அதற்காகவே பாராட்டலாம். புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் தான் எடுத்த புகைப்படத்தைத் தனதென்று சொல்லி பேட்டி கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொப்புளிக்க அவனை உதைக்கக் கிளம்பாமல், அவரிடம் மெல்லச் சென்று, "அது என்னோடதுன்னு சொல்லிடுங்க ஸார், உங்களுக்கு இது ஒரு விஷயமா, ஆனா எனக்கு இது லைஃப் ஸார்..." என்று கையாலாகாத்தனத்துடன் தனுஷ் கெஞ்சுவது புதுமை தானே?
தனுஷ் பாட்டியைப் படம் எடுக்கும் காட்சி, அது முடிந்ததும் தலை நிமிர்ந்து யாமினிக்குப் ஃபோன் செய்து பேசுவது - க்ளாஸ்!!
யாமினியாக வரும் ரிச்சா கண்டிப்பாக வரவேற்க வேண்டிய நடிகை. கண்கள் அப்படிப் பேசுகின்றன. சிரிப்பும் கொள்ளை அழகு! வீட்டைக் காலிசெய்யச் சொல்லும் நரசிம்மனிடம் அவர் பேசுவது அதிரடி. திருமணம் ஆனதும் ஹீரோயின்கள் மொத்தமாக அவுட் ஆஃப் கேரக்டர் ஆகிவிடுவார்கள். இந்தப் படத்தில் அது ரொம்ப இல்லையென்றாலும் திருமணத்துக்குப் பின் முழுதும் சேலையிலேயே வருவது, சாமி படத்துக்கு முன் நின்று கும்பிடுவது போல் காண்பிப்பது எல்லாம் கொஞ்சம் அந்த ரகத்தில் இழுத்துக் கொண்டு தான் போகிறது. கடைசியில் பாசிட்டிவாக முடித்திருப்பது சந்தோஷமே என்றாலும் படம் முழுதும் இருந்த க்ளாஸ் மிஸ்ஸிங்.
காட்சிகளை மீறி உறுத்தாமல் ரம்மியமாக இசை அமைத்திருக்கிறார் ஜீவீ பிரகாஷ்.
எங்கிருந்து சுட்டாரோ, ஆனால் நன்றாகவே சுட்டுப் போட்டிருக்கிறார் பாடல்களை. :-)
ஒரு வெற்றிகரமான ஆணின் பின்னால் சகல வித கஷ்டங்களையும் சகித்துக் கொள்வதைத் தவிர வேறு சிறப்பில்லையா பெண்ணுக்கு? அவனது பர்ஸில் காதல்மனைவி ஃபோட்டோவாக இடம் பெறுவதும் அவனின் குழந்தையைச் சுமப்பதும் தான் அவள் அடையக் கூடிய அதிகபட்ச சந்தோஷம், அந்தஸ்து எல்லாமா? என்றெல்லாம் மனதில் தோன்றினாலும், யாமினியும் கார்த்திக்கும் மனதில் அதைவிட அதிக இடத்தைப் பிடித்து கொண்டுவிட்டார்கள்! ஸோ, எனக்குப் படம் பிடித்திருந்தது.
Tuesday, October 5, 2010
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------
ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.
தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''
படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!
ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...
வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?
நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.
மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?
ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.
படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!
"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
- சமஸ்
Wednesday, September 8, 2010
எரின் ப்ரோக்கோவிச்

பதில் பேசாமல் எதிராளியான பெண்மணி தண்ணீர் குடிக்க எத்தனிக்கிறார்; "ஓ! அந்தத் தண்ணி உங்களுக்காகப் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. ஹின்க்லியிலிருந்து!" என்கிறார் எரின்! அந்தப் பெண்மணி திடுக்கிட்டுத் தண்ணீரைக் குடிக்காமல் க்ளாஸைக் கீழே வைக்கிறார்.
"எரின் ப்ரோக்கோவிச்"கள் வெற்றி பெறுவது அமெரிக்காவில் தான் போலும்.
Tuesday, July 13, 2010
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்
சின்ன வயதில் டிவியில் தான் முதலில் பார்த்தேன். வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படமென்றால் அது நல்ல படம் என்று ஒரு கருத்து உண்டு. (அதாவது எனக்குப் புரியாது, அல்லது போரடிக்கும்!)
அதனால் அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மிக எளிமையான வசனங்களும், அந்தத் தாத்தா மற்றும் அர்ச்சனாவின் தங்கையின் குறும்புகள், அர்ச்சனாவின் மிகையில்லாத நடிப்பும், மிக முக்கியமாக இளையராஜாவின் மனதை உருக்கும் பின்னணி இசை இவையெல்லாம், என்னை வெகு விரைவில் படத்தோடு ஒன்றச் செய்தன.
ஒரு வீடு கட்ட அந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் படும் பாட்டுக்கு இடையே வரும் சின்னச் சின்ன விஷயங்களும் நெகிழ்வாக மனதில் பதிந்தது. (பட்டுப் பாவாடை கேட்கும் தங்கையை முதலில் திட்டி விட்டுப் பின்பு வாங்கி வைத்திருப்பது, தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையே இருக்கும் பாசம், அர்ச்சனாவின் காதலராக வருபவரின் பண்பைக் காட்டும் காட்சிகள், கடன் கேட்க்ப் போன தோழி (கூட வேலை பார்க்கும்) வீட்டில் கணவனின் அதிகாரம்+அலட்சியப் பேச்சு).
நாயகியை முன்னிறுத்தி, (அதுவும் மிகக் கண்ணியமான முறையில்) நான் பார்த்த முதல் படம் அது தான். இப்படிப் பல முதல்களைச் சொல்லலாம்.
ஆபாசம், குத்துப்பாட்டு, போரடிக்கும் சண்டைக்காட்சிகள் மருந்துக்கும் இல்லாதது வெகு ஆறுதலாக இருந்தது. இது மாதிரியே படங்கள் வந்தாலென்ன? என்று கூடத் தோன்றியது. இறுதியில் அந்த அதிர்ச்சியூட்டும் முடிவுக்குப் பிறகு அப்படி அழுகை வந்தது. வீடு மனதில் இன்றும் பாரமாக நிற்கிறது.
http://www.youtube.com/watch?v=0lb96KF5r58&feature=related
http://www.youtube.com/watch?v=w7SyVmEj4oA&feature=related
புஷ்பக்
இந்தப் படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. அவ்வளவு பிடிக்கும். கவிதையைப் போன்ற படம் இது. கமலின் அற்புதமான நடிப்புக்கு அமலாவும் அழகாக ஈடு கொடுத்திருப்பார். நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம் இருந்தாலும் மனதை உருக்கும் முடிவுடன் இதன் தாக்கம் நெடுநேரம் மனதில் இருக்கும். வசனங்களே தேவைப் படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இதன் சிறப்பம்சம். உலக அரங்கில் புகழ்ந்து பேசப்பட்ட இந்தியத் திரைப் படங்களுள் இதுவும் முக்கியமான ஒன்று.
http://www.youtube.com/watch?v=PheG5DHgnps
http://www.youtube.com/watch?v=B-20x0tf9CQ&feature=related
இன்னும் இருக்கு; இப்போதைக்கு இது போதும்!. காட்சிகள் பிடித்திருந்ததா?
Saturday, June 26, 2010
ராவணன்! அனுமாரை மிஞ்சிய கோமாளி

Thursday, April 15, 2010
கதைகளைப் பேசும் விழியருகே...
ஒரு படத்துக்குச் சென்று டிக்கெட் இல்லை ஹவுஸ் ஃபுல் என்று சொன்னதற்காக முதன் முதலில் மகிழ்ந்தது இதற்குத் தான்! ஆம், முதல் நாள் போய்க் கேட்ட போது "பையா" க்கு வேணா இருக்கு. அங்காடித் தெரு இரண்டு நாளைக்கு ஃபுல்." என்று சொன்ன போது ஏமாற்றத்தையும் மீறி ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. யதார்த்தமான நல்ல படத்துக்கு மக்கள் அங்கீகாரம் அதிகரித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? அடுத்த நாள் இரவுக் காட்சிக்குத் தான் செல்ல முடிந்தது.
படத்தைப் பற்றிய விமர்சனமோ என் பார்வையோ எழுத என்னால் முடியாது. அதிர்ச்சி கலந்த உணர்வுகளின் கலவை மனதை அந்தப் பக்குவத்துக்குக் கொண்டு வரவில்லை. சுற்றி உள்ள வாழ்க்கையையே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைத்த படத்தைத் தள்ளி நின்று எந்தப் பார்வை கொண்டு பார்ப்பது? எனக்கெல்லாம் இப்படிப்பட்ட படைப்புகள் பலவிதத்தில் பாடங்கள். பாடங்களை விமர்சிப்பதை விடவும அவற்றிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் நலம்.
ஆனால் இசையைப் பொறுத்தவரை மட்டும் சொல்லக் கொஞ்சம் இருக்கிறது.
மூன்று பாடல்கள் போட்டி போட்டுக் கொண்டு மனதை ஆக்கிரமிக்கின்றன.
1. கதைகளைப் பேசும் விழியருகே - எப்போது கேட்டாலும் அற்புதமான அந்த ஒவ்வொரு காட்சியும் மனதில் திரையோடிக் கண்களின் ஓரம் கரிக்கிறது.
2. உன் பேரைச் சொல்லும் போதே - ஆஹா... ! சொல்ல ஒன்றும் இல்லை. Wonderful rendering by Shreya Goshal and Haricharan.
இவர்கள் இருவரையுமே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். வேற்று மொழிப் பாடகர்களில் தமிழைத் தமிழாகப் பாடும் ஒரே பாடகி ஷ்ரேயா கோஷல் தான். அற்புதமான குரலும் திறமையும் ஒரு புறம்; மேலும் ஒரு மொழி தெரியாவிட்டாலும் அதன் ஜீவன் சிதையாமல் கற்றுக் கொண்டு பாடும் அவரது அந்த சின்சியாரிடிக்கு Hats Off!
ஹரிசரண்: காதல் படத்தில் பாடியது முதலே இவர் all time favorite ஆகி விட்டார். எத்தனையோ பாடகர்கள் பெருகி விட்டாலும் உணர்ச்சி, பாடலின் பாவம் உணர்ந்து பாடுவதில் இவருக்கு நிகர் இவர் தான். (உனக்கென இருப்பேன் - காதல், தொட்டுத் தொட்டு என்னை - காதல், சரியா தவறா - கல்லூரி.)
3. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - ரம்மியமான தாலாட்டைப் போல் இருக்கிறது. ஓகே!
இந்த அளவுக்குச் சிலாகித்துப் பின்னணி இசையைச் சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே பல இடங்களில் காட்சியுடன் ஒன்றுவதைத் தடுக்கும் வகையில் உறுத்தியது. அதனாலேயே அதன் பிழை கவனத்தையும் ஈர்த்தது.
கனியும் லிங்குவும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். மறக்கவே முடியாத பாத்திரப்படைப்பு. உயிர் கொடுத்த அஞ்சலிக்கும் மகேஷுக்கும்.. ஓஹோ! பிரமிக்க வைக்கும் நடிப்பு.
மாரிமுத்து வாக வந்த் "பாண்டி" அடேயப்பா... இவருக்குள் இத்தனை திறமையா? Overall, brilliant cast.
(பி.கு 1: ராமனாதன் தெருவுக்குச் சென்று அந்த மெஸ் இருக்கிறதா என்றும் அதைப் பார்வையிட வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. செய்வேனா என்று தெரியவில்லை.
பி.கு 2:
எதற்காக இந்தத் தலைப்பு என்று கேட்பவர்கள் இங்கே செல்லவும்:
http://www.youtube.com/watch?v=tBkmKr0iVQk
இறுதியாக, நன்றி வசந்தபாலன்! மிக்க நன்றி.
Sunday, June 7, 2009
டோபா டேக் சிங்

பான் நளின் என்ற இயக்குநர் எடுக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஆமிர் கானும் ”டைட்டானிக்” நாயகி கேட் வின்ஸ்லெட்டும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
2005 ல் இதே கதை ஆஃபியா நதானியல் என்ற பாகிஸ்தானி இயக்குநரால் குறும்படமாக வெளிவந்துள்ளது.
டோபா டேக் சிங் என்பது தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ள சிற்றூர் ஆகும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரண்டு நாடுகளிலும் உள்ள
மனநலம் பாதிக்கப் பட்டவர்களின் இடமாற்றம் பற்றியும் அவர்களது பார்வையில் பிரிவினையும் இடப் பெயர்ச்சியும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை
நையாண்டியாகவும அதே சமயம் நெஞ்சை உருக்கும் உணர்வுகளுடனும் சொல்லும் கதை தான் டோபா டேக் சிங்.
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சாதத் ஹஸன் மாண்டோ. உருது எழுத்தாளர்; இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மனித வெறியாட்டங்களையும் இவர் அளவுக்கு அழுத்தமாகப் பதிவு செய்தவர் யாருமில்லை எனலாம்.
சர்ச்சைக்குரிய பல களங்களில் அநாயாசமாய் எழுதக் கூடிய இவர் சமூகத்தின் அவலங்களை இடக்கரடக்கலின்றி அப்பட்டமாகத் தோலுரித்து எழுதினார். தனது பாத்திரங்கள் எத்தன்மையினராக இருந்த போதும் அவர்களை எந்த விதப் போலிப் பூச்சுமின்றி உலவ விட்டார்.
தனது எழுத்துக்கள் பற்றி அவர் கூறுவது: ”எனது கதைகள் உங்களுக்கு அருவருப்பாக இருந்தால் அப்படிப்பட்ட அருவருப்பான சமூகத்தில் தான் வாழ்கிறீர்கள் என்று
உணருங்கள். என் கதைகளின் மூலம் உண்மையைத் தான் வெளிப்படுத்துகிறேன்”
காலீத் ஹாசன் என்பவர் இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றைப் படித்து இரவில் தூக்கம் வராமல் தவித்த நாட்கள் பல. அப்படி ஒரு ஆளுமை உண்டு அவரது எழுத்துக்களில்.
தமிழில் யாராவது இவரது படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.
என் மொழிபெயர்ப்பு சகிக்கும் படியாக இருப்பதாகப் பலர் ஒத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் பதிவுலக நண்பர்களூக்காக இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!
Saturday, April 4, 2009
பேஜ் த்ரீ - சினிமா
தெலுங்கில் எடுக்கப்பட்ட அருந்ததி என்ற பரம மசாலாப் படம் டப் செய்யப்பட்டு செம போடு போடுகிறது. நன்றாகவே ஒடிய ஆனால் நல்ல படங்கள், ஏன் டப் செய்யப்படுவதில்லை? (விருதுப் படம், கலைப் படம், ஜனரஞ்சகப் படம் என்று பிரிக்க எனக்குச் சம்மதமில்லை)
வெயில், இயற்கை, ஆட்டோகிராஃப் இவற்றை வடநாட்டில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அதே போல் பிற மொழிகளில் எடுக்கப்படும் நல்ல படங்கள் எத்தனை நம்மை வந்து சேர்கின்றன?நான் பார்த்து மிகவும் ரசித்து வியந்த ஒரு இந்திப் படத்தைப் பற்றிச் சொல்லலாமென்று நினைக்கிறேன். இந்தி என்றால் உடனே சிலர் முகம் சுளிப்பது தெரிகிறது. இதில் கான்களோ கபூர்களோ இல்லை. மதுர் பண்டார்கர் என்ற நம்பிக்கை தரும் இளம் இயக்குனர் எடுத்த் படம் இது. (கார்ப்பொரெட், ட்ராஃபிக் சிக்னல், ஃபாஷன் இவரது வேறு சில படங்கள்)
பத்திரிகை உலகில் பெரிதாகச் சாதிக்கும் கனவுகளுடன் நுழையும் ஒரு இளம்பெண்ணின் பார்வையில் இந்தச் சமூகத்தின் அவலங்கள், மேல்தட்டு மக்களின் பார்ட்டி கலாசாரங்கள், போலி முகங்கள், ஊடகங்களை ஆட்டி வைக்கும் நிழல் மனிதர்கள் என்று பல்வேறு புதிய விஷயங்களை அநாயாசமாகத் தொட்டுச் செல்கிறது படம்.
யாராவது பணக்காரனைத் (வயதானவனாக இருந்தாலும் சரி) திருமணம் செய்து கொள்வதே லட்சியமாக இருக்கும், சிகரெட் பிடிக்கும், படு அலட்சிய பாவம் கொண்ட நவ நாகரிகப் பெண்ணாகக் காட்டப்படும் பேர்ல், காயத்ரி கருவும் கலைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் போது சமூகத்தின் மொத்தப் பெண் குலத்துக்காகவும் வருந்துவது போல் கதறியழும் காட்சி...
விநாயக்காக வரும் அதுல் குல்கர்னியைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. (ரன் படத்தில் வில்லன்) பாத்திரத்துடன் அப்படியே பொருந்திப் போகிறார்.
போதைமருந்து வாங்கிய பணக்கார இளைஞன்: “ஏய்! எங்க அப்பா யாருன்னு தெரியுமா உனக்கு?”
இன்ஸ்பெக்டர்: “ஏன் உனக்கு யாருன்னு தெரியாதா? எனக்கு உங்க அப்பாவை மட்டும் இல்ல, உங்க அம்மாவையும் தெரியும். அவ இப்ப யார் கூட இருக்கான்னும், நீ ஏன் இப்படி போதை மருந்து தேடி அலையறேன்னும் தெரியும்.”(இளைஞன் கண் கலங்கித் தலை குனிகிறான்”
இன்ஸ்பெக்டர்: ”Cool dude.. it happens.. வண்டியில ஏறுப்பா!”
பிடித்தால் சந்தோஷம். பிடிக்கவில்லை என்றால் என்னைத் திட்டாதீர்கள். :-)ஏனென்றால் எனக்கே பிடிக்காத அல்லது தேவையில்லாத ஒரு சில சிறு அம்ச்ங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி எதற்குப் பேசுவது என்று விட்டு விட்டேன்.
Wednesday, October 22, 2008
சினிமா ரசிகரா நீங்கள்? மதுமிதாவின் அதிரடிக் கேள்விக் கணைக்குப் பதில் அளித்து மகிழுங்கள்! http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html
நான் ஆடிய ஆட்டம் இதோ!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
2 அல்லது 3 வயதிருக்கலாம். எனக்கும் டிக்கெட் எடுத்து அழைத்துச் செல்வார்கள் வீட்டில். தண்டம்! படம் தொடங்கியதும் தூங்க ஆரம்பித்து விடுவேன்.
1. அ. நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?
தூங்காமல் ரசித்த முதல் படம் சரியாக நினைவில்லை. ஞாயிறு மாலை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் பல பழைய பட்ங்கள் வீட்டில் அனைவருடனும் அமர்ந்து ரசித்ததுண்டு. (குறிப்பாக அக்காவுடன்!)
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? கல்லூரி. என் மகள் 8வது மாதம் வயிற்றில் இருந்தபோது ஜோவுடன் (என் கணவர்) பார்த்தது. நல்ல படம். விமர்சனம் என் ஆங்கிலப் பக்கத்தில்: http://deepajoe.blogspot.com/2008/01/i-am-great-fan-of-balaji-sakthivel-ever.html
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? வெள்ளித்திரை. அக்கா வீட்டில். நல்ல கதை. பண்பட்ட கருத்துக்கள். அருமையான நடிப்பு (பிரகாஷ் ராஜ்)
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? - காதல், வீடு
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? சினிமா கதாநாயகர்களை நிஜ நாயகர்களாக அப்பாவி மக்கள் நம்பி ஏமாறுவது.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?தொழில்நுட்பம் பற்றியெல்லாம் ரொம்ப அக்கறை இல்லை. காதலன் படத்தில் முக்காலா பாட்டு பார்த்து அதிசயித்திருக்கிறேன்.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா? ஹும்! எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சினிமா செய்திகள் தானே. வாசிப்பதுண்டு!
7. தமிழ் சினிமா இசை?நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.
பிடித்த பாடல்கள் பற்றி நானும் த்னியே எழுதுகிறேன்!
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தி:
காமோஷி - காது கேளாத பெற்றோருக்கு மகளகப் பிறந்து பெரிய பாடகியாகும் பெண்ணின் கதை. மனிஷா கொய்ராலா, நானா படேகர்.
ஹம் ஆப்கே ஹை கோன் - பாட்டுக்கும் கூத்துக்கும் மட்டுமே ரசிக்கலாம்!
அப்புறம், வெகு சமீப காலமாகத் தான் ஆங்கிலப் படங்கள் பார்க்கிறேன். அதுவும் பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள்.அதில் பிடித்தவை:
Titanic - எதுவும் சொல்லத் தேவையே இல்லை!
Father of the Bride - ஒரு தந்தை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் அனுபவங்கள்.
Three men and a Baby - மூன்று திருமணமாகாத ஆண்களிடம் ஒரு கைக்குழந்தை வந்து சேர்கிறது.
Life is beautiful - இது ஒரு இத்தாலியப் படம். ஒரு யூத இளைஞன் தன் புத்தி சாதுரியத்தலும் நகைச்சுவைத்திறனாலும் ஒரு இத்தலியப் பெண்ணைக் காதலித்து மணக்கிறான். அதே குணாம்சங்களினால் தன் மகனை ஜெர்மன் நாஜி முகமிலிருந்து காப்பாற்றும் கதை. இந்தப்படத்தைப் பல தடவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கண் கலங்கி விடுவேன்.
Color of Paradise - http://mathavaraj.blogspot.com/2008/09/blog.html
7. தமிழ் சினிமா இசை? நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெகு சில பட்ங்கள் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எப்போது இல்லாத அளவு நல்ல படங்கள் வெற்றி பெறுகின்றன. அதே அளவு வியாபாரத்துக்காக மட்டுமே எடுக்கப்படும் குப்பைகளும் பெருமளவில் வெற்றி பெறுகின்றன.
ஆனால் பொதுவாகப் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது. தேசிய விருது பெற்ற ஒரு நடிகை அப்படி ஒரு சிறந்த பாத்திரத்தில் நடித்ததற்காக வருந்தும் நிலையில் இருக்கிறார். பெரிய நடிகர்கள் குத்தாட்டம் போட அழைப்பதில்லை என்பதே அவரின் மிகப் பெரிய சோகம். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தான் இருக்கிறது தமிழ்ச் சினிமா உலகம்.
ஆகவே பட்ங்களின் தரம் உயர்ந்தாலும் சினிமா உலகில் (எந்தத் துறையையும் போல்) பெண்களின் நிலை சரியாக (உயர்வது அடுத்த படி!) இன்னும் பல காலம் பிடிக்கும். நம்புவோம்!