Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Sunday, October 24, 2010

என்ன கொடுமை ஸார் இது?

http://www.zeenews.com/news662852.html

இந்துக்கள் நம்புவதாலேயே ராமர் பிறந்த இடமென்று அறிவித்தது.
இப்போது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று பயந்து வரதட்சணை கொடுத்தால் அது குற்றமல்ல என்கிறது. இதில் எது மிகப்பெரிய அபத்தம் என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல.
இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆவது? யோசித்துப் பார்க்கலாமா?

1. கொலை மிரட்டலுக்குப் பணிந்து லஞ்சம் கொடுக்கலாம்.

2. ஆட்டோ அனுப்புவேன் என்று அச்சுறுத்தினால் கஞ்சா கடத்தலாம்

3. அட, உன் பிள்ளைக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது என்று பயமுறுத்தினால் ஊழலுக்குத் துணை போகலாம்.

இப்ப‌டி அடுக்கிக் கொண்டே போக‌லாமே?

வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தும் வாங்குவ‌தும் குற்ற‌ம் என்ற‌ ச‌ட்டமே எழுத்தளவில் தான் இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கே நமது பலவீனமான சமுதாயத்தால் முடியவில்லை. ஏற்கென‌வே ஆயிர‌ம் ஓட்டை உடைச‌ல்க‌ள் இருக்கும் ச‌ட்ட‌த்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது?

Sunday, June 7, 2009

டோபா டேக் சிங்

சாதத் ஹஸன் மாண்டோவின் மிகப் புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்றான ”டோபா டேக் சிங்” திரைப்படமாக வெளிவர உள்ளது.
பான் நளின் என்ற இயக்குநர் எடுக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஆமிர் கானும் ”டைட்டானிக்” நாயகி கேட் வின்ஸ்லெட்டும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

2005 ல் இதே கதை ஆஃபியா நதானியல் என்ற பாகிஸ்தானி இயக்குநரால் குறும்படமாக வெளிவந்துள்ளது.

டோபா டேக் சிங் என்பது தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ள சிற்றூர் ஆகும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரண்டு நாடுகளிலும் உள்ள
மனநலம் பாதிக்கப் பட்டவர்களின் இடமாற்றம் பற்றியும் அவர்களது பார்வையில் பிரிவினையும் இடப் பெயர்ச்சியும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை
நையாண்டியாகவும அதே சமயம் நெஞ்சை உருக்கும் உணர்வுகளுடனும் சொல்லும் கதை தான் டோபா டேக் சிங்.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சாதத் ஹஸன் மாண்டோ. உருது எழுத்தாளர்; இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மனித வெறியாட்டங்களையும் இவர் அளவுக்கு அழுத்தமாகப் பதிவு செய்தவர் யாருமில்லை எனலாம்.

சர்ச்சைக்குரிய பல களங்களில் அநாயாசமாய் எழுதக் கூடிய இவர் சமூகத்தின் அவலங்களை இடக்கரடக்கலின்றி அப்பட்டமாகத் தோலுரித்து எழுதினார். தனது பாத்திரங்கள் எத்தன்மையினராக இருந்த போதும் அவர்களை எந்த விதப் போலிப் பூச்சுமின்றி உலவ விட்டார்.

தனது எழுத்துக்கள் பற்றி அவர் கூறுவது: ”எனது கதைகள் உங்களுக்கு அருவருப்பாக இருந்தால் அப்படிப்பட்ட அருவருப்பான சமூகத்தில் தான் வாழ்கிறீர்கள் என்று
உணருங்கள். என் கதைகளின் மூலம் உண்மையைத் தான் வெளிப்படுத்துகிறேன்”

காலீத் ஹாசன் என்பவர் இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றைப் படித்து இரவில் தூக்கம் வராமல் தவித்த நாட்கள் பல. அப்படி ஒரு ஆளுமை உண்டு அவரது எழுத்துக்களில்.

தமிழில் யாராவது இவரது படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

என் மொழிபெயர்ப்பு சகிக்கும் படியாக இருப்பதாகப் பலர் ஒத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் பதிவுலக நண்பர்களூக்காக இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!