பாரதியார் ஒரு அசாத்திய தீர்க்கதரிசி என்று காலத்தைத் தாண்டி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
ஆனால் அவருக்குத் தான் எத்தகைய பேராசை?
உண்மை தான், அந்தக் காலத்தைக் காட்டிலும் பலவிதமாக நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றாலும் இத்தனை ஆண்டுகளில் அடிப்படை பிரச்னைகள் நம் நாட்டில் இன்னும் தீர்வு காணப்படாத நிலை ஏன்? வெட்கக்கேடான பல விஷயங்கள் நாட்டில் ஊடுருவி இருப்பது ஏன்?
ஒன்றும் வேண்டாம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடினானே அந்தப் பித்தன், உழவர்களுக்குச் சாவு மணி அடித்து விட்டுத் தொழிலைப் பரங்கியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறோமே ஏன்?
இப்பாடலை ஒரு இந்தியனாவது வெட்கமில்லாமல், உண்மையான உள்ளத்துடன், கண்கள் கலங்காமல், சிறிது கசப்பு கூடத் தோன்றாமல் பாட முடியுமானால் அன்று தான் நாம் பரிபூரண சுதந்திரம் அடைந்தோம் என்று கொள்ள் முடியும் என்று தோன்றுகிறது.
ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு;
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே – இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சகக் காரருக்கும் நாசம் வந்ததே
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடல் ஓயமாட்டோம்
நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் – பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.
ஆனால் பாரதியை நாம் மொத்தமாக ஏமாற்றி விடவில்லை. இப்படியும் நடக்குமோ என்று இன்னொரு ஐயம் எழுந்துள்ளது அந்த அறிவுச்சுடருக்கு. கீழ்வரும் பாடல் நமக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் கொடியேற்றிக் கொண்டாடுவதோடு இப்பாடலின் கருத்தை அரசியலாரும் ஒவ்வொரு குடிமகனும் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆசை தான்! இல்லையா?
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ
விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ?
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!