Saturday, October 29, 2011
முகில் பூக்கள்
ஆம், மழை எப்போதையும் விட அழகாய்த் தெரிகிறது பிகு சரவணனின் முகில்பூக்களை வாசித்த பிறகு.
இக்கவிதைகளில் அழகு கொஞ்சுகிறது; உண்மையும் மிளிர்கிறது. கவிதைக்குப் பொய் அழகு என்பதை உடைத்தெறிகிறது எளிமையும் உண்மையும் கம்பீரமாய் நடைபயிலும் இக்கவிதைகள்.
கவிதை என்றாலே அலர்ஜி, யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் கவிதை, மடக்கி மடக்கி எதையோ எழுதி விட்டுக் கவிதை என்கிறார்கள் என்று கவிதைகள் குறித்த எதிர்மறையான பார்வை கொண்டோர் எல்லாம் இவரது கவிதைகளைப் படித்தால் கவிதைக் காதலர்களாகி விடுவது நிச்சயம்.
எல்லாமே நேரடிக் கவிதைகள். ஆனாலும் மீள்வாசிப்பில் பல கவிதைகளில் பலவிதமான மறைபொருள்களும் உருவகங்களும் தெரியவரும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது.
இயந்திரமயமாகிப் போன இப்பிளாஸ்டிக் உலகத்தில், பல்வேறு தர்க்கங்களும் வேறுபாடுகளும் நிறைந்த இணைய இலக்கியச் சூழலில், தான் மெய்மறந்து ரசிக்கும் இயற்கையையும் குறிப்பாய் மழையையும் விதவிதமாய் வியந்தோதிக் கொண்டிருப்பது பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது.
ரொம்பவும் பிடித்துப் போன சில இங்கே உங்களுக்காக:
பெய்கிறது மழை
அசைந்து
நடந்து பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை.
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்.
சிணுங்கிப் பூக்கும் அன்பு
மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்
வழித்துணை
யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது
இசைக் குறிப்புகள்
கடந்து போன
நாட்களில் தொலைந்த
இசைக் குறிப்புகளை
பாடிக் காட்டுகிறது
அந்தக் குயில்
நிறைய, இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கும் அற்புதமான எழுத்து.
முகில் பூக்கள்
பி.கு. சரவணன்
தகிதா பதிப்பகம்
Wednesday, March 23, 2011
A handful of rice (ஒரு பிடி சோறு) - கமலா மார்க்கண்டேயா

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை.
தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டி
களுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.
மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.
நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.
ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.
பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் கனவிலியும் நடக்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார்.
கடின உழைப்பு, உற்சாகம், காதல், கனவுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.
இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத பட்சத்தில் தாமோதருடன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ணம் அவன் மனதோரத்தில் இருந்து வருகிறது.
இந்திய நடுத்தர வர்க்கக் கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கை முறை மிகவும் எதார்த்தமான முறையில் கதையில் விரிகிறது. புதிதாகத் திருமணமானவர்களுக்காகப் வாடகைக்குக் கட்டில் எடுப்பதும் பத்து நாளானதும் அது திருப்பப்பட்டு விடுவதும், ஒரே அறையின் இடையில் தடுப்பு அமைத்து இரு குடும்பங்கள் படுத்துக் கொள்வதும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை கருவுறுவதும் நமக்குப் புதிதான சங்கதிகள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட விதம் நம்மை அடித்துத் தான் போடுகிறது.
குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்காரரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது பட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவர் பதறுவதும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு தரவேண்டுமே என்று ரவி குழந்தையை அடித்து நொறுக்குவதும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத சோக நாடகம்.
மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.
அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.
'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான்.
கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.
ஆங்கில வாசகர்களுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுவதற்காக எழுதப்பட்ட புத்தககமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் கமலா மார்க்கண்டேயா சந்தேகத்துக்கிடமின்றி ஓர் இடதுசாரியாக மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதாலேயே இந்தக் கதை முக்கியமாகப் படுகிறது.
Wednesday, February 2, 2011
செகாவின் மீது பனி பெய்கிறது
Monday, December 13, 2010
கந்தர்வன் கதைகள்
Monday, August 23, 2010
சோறு வடிக்கிற ராச்சியம்
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
இந்த நூலை வெகு நாட்கள் கழித்து மறுவாசிப்பு செய்தேன்.எத்தனை முறை படித்தாலும் மனதில் நின்றது வெளிப்பாடு ம் வீட்டின் மூலையில் ஒரு சமையலறையும் தான்.
முதல் கதை ஆசிரியரின் சொல்வழி வெளிப்படுகிறது. கிராமப்புறத்தில் வீட்டுப் பெண்களின் வாழ்க்கைமுறை பற்றிய ஆராய்ச்சிக்காக ஆசிரியை இரு வீடுகளுக்குச் செல்கிறார்.
வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாத, "சோறு வடிக்கிற ராச்சியந்தான்" என்று பெருமை பேசுகிற, "சமுத்திரம் பார்க்கணும்" என்கிற ரகசியக் காதலைத் தனக்குள் வைத்துப் புழுங்கிய, சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூர் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்பட்டு அப்படி அடம்பிடிக்கும் போதெல்லாம் புருசனிடம் அடி வாங்குவதை மிக இயல்பாகப் பகிர்ந்து கொள்கிற ஐம்பது வயதுப் பெண்மணியைச் சந்திக்கிறார்.அவர் வாழ்வில் எத்தனை இட்லிகள் தோசைகள், அடைகள் சுட்டிருப்பார் என்பதைக் கணக்குப் போட்டு மலைக்கிறார்.
மேலும், இவர் படித்தவர் என்பதால் சற்றே மரியாதையுடன் பேசும் அந்த வீட்டுக் குடும்பத் தலைவன் தன் மனைவியிடம் இவர் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பது கண்டு வியந்து "இவ கூட என்ன பேசிட்டிருக்கீங்க? இவளுக்கு ஒன்றும் தெரியாது, மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா" என்கிறார்.
இன்னொரு வீட்டில் இதே கதை. ஆனால் இங்கு ஓர் இளம் பெண். அவளுக்கும் வீட்டில் சோறு சமைப்பது, சகோதரர்களின் துணிகளைத் துவைத்துக் காப்பது, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளில் கதைகள் படிப்பது என்பதைத் தவிர வேறு உலகம் தெரியாது. தெருவில் காலை வீசி நடக்க வேண்டும் என்பதே அவளுக்கு இருக்கும் ரகசியக் கனவாக இருக்கிறது.
திருமணம் செய்து கொண்டால் கணவனுடன் நாலு இடங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிடைக்கும் என்பதற்காகவே திருமணத்தை எதிர்நோக்கி நிற்கிறாள் இந்தப் பெண். என்ன, தன்னை மணந்து கொள்ளப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டும்; அதாவது கை நீட்டி அடிக்கக் கூடாது என்று மட்டும் விரும்புகிறாள்.
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் பெண்கள் நிலை சிறிதும் மாறவில்லை என்பதை அழகாகச் சொல்கிறது இந்தக் கதை.
'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு ராஜஸ்தானி குடும்பம். பல அறைகள் கொண்ட விசாலமான அந்த வீட்டில் சமையலறை மட்டும் ஓர் இருண்ட மூலையில்.
வாயில் நீரூற வைக்கும் பலவிதமான பதார்த்தங்கள் நாள் தோறும் தயாராகிற, விருந்திர்னர்கள் வந்தால் தேனீருடன் நிறுத்தாமல் உபசரிக்கப் பலவிதமான பண்டங்கள் தயாரிக்கப்படுகிற அந்த வீட்டின் சமையலறையில் எரிவது ஒரு பூஜ்யம் வாட் விளக்கு. பாத்திரங்கள் தேய்க்கச் சரியான தொட்டி இல்லை. வெளிச்சமோ காற்றோ புக சரியான சாளரம் இல்லை.
இதில் தான் அந்தக் குடும்பத்தலைவியான ஜீஜீ தனது ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டுள்ளாள். அவளது மருமகள்களும் விடுமுறைக்கு வரும் நாட்களில் அங்கேயே அடைந்து கிடக்க வேண்டி வருகிறது.
கடைசி மருமகளான மீனாட்சி தான் அந்தச் சமையலறையின் கேடான நிலையைப் பற்றி முதல் முறை அக்குடுமப்த்த் தலைவர் பப்பாஜியிடம் வாய் திறக்கிறாள். இது வீட்டினரிடையே மிகப் பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. அது அந்த வீட்டுப் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அமைதியான அடக்குமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.
உல்லாசப்பயணம் போகலாமென்று முடிவு செய்த நாளன்று வீட்டுப் பெண்கள் அத்தனை பேரும் அந்த வெக்கையான சமையலறையில் அதிகாலை நான்கு மணி முதல் கடுமையாக வேலை செய்ய வேண்டி வருகிறது. இருபது பேருக்கு நூறு பூரிகள், சான்ட்விச்சுகள், தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது தவிர குழந்தைகளுக்குப் பால் பாட்டில்கள், மாலை பக்கோடா சாப்பிடுவதற்கும் அடுப்பு, அரிந்த வெங்காயம், எண்ணெய், என்று எடுத்து கொள்ள வேண்டி வருகிறது. குழந்தைகளை எழுப்பிக் குளிக்க வைத்துக் கிளப்புவதும் பெண்கள் வேலை தான்.
இடையே இவர்கள் சத்தத்தால் தூக்கம் கலைகிற ஆண்கள் போடும் அதட்டலால், ரகசியமாகவே பேசிக் கொண்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். எல்லா மருமகள்களும் படித்தவர்கள் என்பதும் இருவர் நல்ல வேலையில் இருப்பவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கணவனை இழந்தவர்களுக்கு மாமிசம் உணவும் இனிப்பு வகைகளும் மறுக்கப்படுவது அங்கே மரபென்பதால் படி ஜீஜீ என்கிற வயதான பெண்மணி சில நாள் தன்மீது பெண்தெய்வம் அம்பை வந்து விட்டதாகச் 'சாமியாடி'த் தான் விரும்பும் உணவு மற்றும் மதுவகைகளைக் கேட்டு உண்பது ஒரு சோக நாடகம்.
இறுதியில் உடல் நிலை மோசமடைந்த நிலையில் படுத்திருக்கும் ஜீஜீ தான் திருமணமாகி வந்த புதிதில் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தாள் என்பதையும் அலங்காரமும் சமையலறை ஆதிக்கமும் தான் வீட்டில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துபவை என்று தன் தாய் சொன்னதை சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு முன்னூறு பூரிகள் சுட்டதையும் ஐந்து கிலோ கோதுமை மாவு பிசைந்ததையும், அதைக் கண்டு அவள் கணவன் பூரித்து "நீ நல்ல உழைப்பாளி" என்று மகிழ்ந்ததையும் மீனாட்சியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
ஆனால் தன் முதல் மகன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து இறந்த போதிலும் அந்தக் கொடூரமான நேரத்திலும் சமையலறையில் நுழைந்து பாதியில் விட்ட பூரிக்களைப் பொரித்தெடுத்ததைச் சொல்லும் போது மீனாட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் அங்கமெல்லாம் அதிர்கிறது.
பெண்கள் தங்கள் ராஜ்ஜியமென்று வரித்துக் கொண்டவை எதுவுமே அவர்களுடையதல்ல, அதனால் அவர்களுக்கு யாதொரு சிறப்புமல்ல என்பதை அழுத்தமாக நிறுவுகிறது இக்கதை.
இக்கதையைப் படிக்கும் போது இப்போதிருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான நடுத்தர வர்க்க வீடுகளில் சமையலறைகள் அவ்வளவு மோசமாக இல்லை. வெளிச்சமும் காற்றோட்டமும், எளிதில் சுத்தம் செய்ய்க்கூடிய மேடைகளுமாய் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனாலும் சமையலறை ராஜ்ஜியத்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாகக் கருதும் மனப்போக்கு மட்டும் மாறிவிட்டதா என்ன?
நூற்குறிப்பு: வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. எழுத்தாளர் : அம்பை. க்ரியா வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 1998, விலை: ரூ. 60, பிரிவு: சிறுகதைகள்.
Monday, May 31, 2010
ஆனி ஜைதி: Known Turf
http://www.hinduonnet.com/fline/fl2318/stories/20060922005900400.htm
நாட்டில் எங்கெல்லாம் கையால் மலம் அள்ளுவதும் சேகரிப்பதும் நடைமுறையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் நேரில் போய் அவர்கள் வாழ்க்கையைப் படம்பிடித்திருந்தார். இன்னும் எத்தனை இடங்களில் manual scavenging நடைமுறையில் இருக்கிறதென்ற உண்மை புரிந்தது. அவமானமாகவும் இருந்தது.
பரம்பரை பரம்பரையாக வேறு வேலைக்கும் செல்ல முடியாமல், பிடிக்காமலே இந்தத் தொழிலில் உழன்று வருபவர்கள் ஆயிரமாயிரம் பேர்.
சாக்கடை அள்ளுபவர்களில் நிலை இன்னும் பரிதாபம். நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அருவருப்பைச் சகித்துக் கொள்வதோடல்லாமல் உயிருக்கும் ஆபத்தான வேலையது.
நாம் வெளியேற்றும் கழிவுகளைத் தங்கள் உயிரைக் கொடுத்துச் சுத்தப்படுத்திச் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் இவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு: தீண்டாமைக் கொடுமை. உலகம் அநியாயத்தின் மொத்த உருவாகத் தான் இருக்கிறது.
சிறுவயதில் படித்தவொரு கதை நினைவுக்கு வருகிறது. யார் எழுதியதென்று நினைவில்லை; ஒரே ஒரு விஷயம் மட்டும் அதிர்ச்சியாய் மனதில் பதிந்திருக்கிறது: ஒரு வீட்டில் கழிவறைச் சுத்தம் செய்ய வந்த முதிய பெண்மணி ஒருவர், வேலை முடிந்ததும் இயற்கை உபாதை தாளமுடியாமல் கதவைத் தாளிட்டுக் கொண்டு அங்கேயே அமர்ந்து விடுகிறார். இதையறிந்த வீட்டுப் பெண்மணி, கத்திக் கூச்சல் போட்டு...ஐயோ...
அப்போது நம்பவே முடியவில்லை. இப்படியெல்லாம் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே குழந்தை மனம் நம்ப விழைந்தது. ஆனி ஜைதியின் கட்டுரையைப் படித்த பின்பு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது.
ஃப்ரன்ட்லைனுக்குப் பிறகு இப்போது Midday யில் பணியாற்றி வருகிறார். www.anniezaidi.com என்ற இவரது வலைப்பூவிலும் தன்னைப் பாதித்த பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிச் சுவாரசியமாக எழுதி வருகிறார். எழுத்திலும் சிந்தனைகளிலும் பல இடங்களில் அருந்ததி ராயை நினைவுபடுத்துகிறார்.
சமீபத்தில் "Known Turf" என்ற தலைப்பில் தனது பத்திரிகையாளர் அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே:
http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?pageid=15&pagesize=&edid=&edlabel=TCRM&mydateHid=15-05-2010&pubname=&edname=&publabel=TOI
http://www.tehelka.com/story_main44.asp?filename=hub220510salt_shakers.asப்
http://pareshaan.blogspot.com/2010/04/annie-zaidi-rocks-house.html#comment-forம்
இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு எழுத்து ஆளுமை மற்றும் அவரது நூலின் அறிமுகம் மட்டுமே. புத்தகத்தை படித்த பின்பு அதைப் பற்றிய விரிவான பார்வையோடு வருகிறேன்.
Saturday, January 30, 2010
அழகிரிசாமி சிறுகதைகள்
இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று என்னிடம் இருக்கிறது. எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. இன்று அதைக் கையிலெடுத்த போது அதைப் பற்றிப் பகிரலாமே என்று தோன்றியது.
மிக இயல்பான எளிமையான நடை. கதை மாந்தர்களும், கதைக்களமும் கூட எதார்த்தத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் நெஞ்சைத் தொடும் நுட்பமான விஷயங்களும் எழுதுவார். நகைச்சுவை மிளிரும் வண்ணம் நையாண்டியாகவும் எழுதுவார்.
”சிதம்பர நினைவுகள்” இல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சொன்னது நினைவுக்கு வருகிறது - “மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே”
இதில் இன்னொன்றும் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். அது, குழந்தைகள். (சொந்தக் குழந்தைகள் அல்ல.) மற்றவர் குழந்தைகளிடம், அவர்கள் பெற்றோரோ வேறு யாருமோ அருகில் இல்லாத போது நாம் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது நமது மனப்பண்பைப் பெரிதும் கணிக்கும் ஒரு விஷயம்.
அழகிரிசாமி, அந்த வகையில் மிகச்சிறந்த பண்பாளர் என்பது அன்பளிப்பு என்ற கதையின் மூலம் புலனாகிறது.
எல்லாக் குழந்தைகளிடம் அதீதப் பிரியமாகவே இருக்கும் இவர் தன் மீதுள்ள அளவற்ற அன்பினால் தொல்லை செய்யும் ஒரு சிறுவனைப் பற்றிச் சொல்கிறார்.
“என்னுடைய முயற்சி இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும் திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது; தடுக்க முயலுவது அமானுஷிகத் தனம்...”
ராஜா வந்திருக்கிறார் என்பது அற்புதமான கதை. குழந்தைகள் உலகத்தை அதனுள்ளேயே போய் விவரிப்பது எல்லாருக்கும் கைவராத ஒன்று. குழந்தைகள் விளையாடும் “தற்பெருமை” விளையாட்டையும் அவர்களின் சிந்தனைகளையும் இயல்பாகப் படம் பிடித்திருக்கிறார். மேலும் மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாழும் தாய் ஒருத்தியின் உள்ளம் எவ்வளவு செம்மையுடன் இருக்கிறது என்பதையும் மிக அழகாகக் காட்டி இருக்கிறார்.
ஏமாற்றம், ஞாபகார்த்தம் இரண்டும் இளமை ததும்பும் அழகிய காதல் கதைகள்.
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இவ்விரண்டு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. இவ்விரண்டிலும் தான் தாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவையாளர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
இரண்டு பெண்கள் கதையில் திருமணமாகாத ஒரு சராசரி இளைஞனின் மன ஓட்டங்களையும் நடவடிக்கைகளையும் சித்தரித்திருப்பது காலத்துக்கும் பொருந்தும்!
”மதுரையிலிருந்து திடீரென்று சென்னைக்கு என்னை மாற்றி விட்டார்கள். மனித வாழ்க்கைக்கு மதுரையென்றாலும் ஒன்று தான் சென்னையென்றாலும் ஒன்று தான். மதுரையிலும் வீட்டு வாடகை அதிகம்; சென்னையிலும் வீட்டு வாடகை அதிகம். மதுரையிலும் பொறாமைக்காரர்கள் உண்டு; சென்னையிலும் பொறாமைக்காரர்கள் உண்டு. மதுரையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரமச்சாரிகள் பேசக்கூடாது; சென்னையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரமச்சாரிகள் பேசக்கூடாது.”
இரண்டு ஆண்கள் கதையில் ’அல்காப் பேர்வழியாகிய’ தன் மாமாவைப் பற்றி நாயகன் சொல்கிறான்.
”...ஒரு நாள் அவர் மிகுந்த கோபாவேசத்துடன் அடிக்கக் கூடாத ஒரு சாமானை எடுத்து என் மாமாவின் முகத்தில் அடித்து விட்டார். அதனால் வலி ஏற்படாவிட்டாலும் நிச்சயம் அவமானம் ஏற்படும். ஆனால், என் மாமாவுக்கோ இரண்டும் ஏற்படவில்லை. பெரியவர் பார்த்தார். அதற்கு மறுநாளே சாப்பாடு போட முடியாதென்று பிடரியைப் பிடித்துத் தள்ளி விட்டார். உடனே மாமா தம் தங்கை வீட்டுக்கு, அதாவது எங்கள் வீட்டுக்கு வந்ர்க்ய் சேர்ந்தார். என் தாயார் ஒரு பைத்தியம்; தகப்பனாரோ ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய பைத்தியம். அதனால் “ஐயோ பாவம்” என்று மாமா மீது இரக்கம் காட்டி...”
சிரிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கும், மறக்க முடியாத வார்த்தையாடல்கள் இவரது தனிச்சிறப்பு என்றே கருதுகிறேன்.
நான் படித்ததிலே இவரது “காற்று” என்ற ஒரு சிறுகதை தான் சோகத் தன்மை வாய்ந்தது. நகர வாழ்க்கையில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கும் சிறுமியொருத்திக்குச் சில்லென்று வீசும் காற்று கூட கிடைக்கப் பெறாத அரிய விஷயமாகிப் போவதை மனம் பதைக்கும் சோகத்துடன் சொல்லி இருப்பார். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்பது எவ்வளவு வேதனை?
என்னிடம் இருப்பது 1952 இல் வெளிவந்த பழைய பதிப்பு. (பதிப்பகத்தின் பெயர் சக்தி காரியாலயம் என்று போட்டிருக்கிறது!)
தற்போது வானதி பதிப்பகம், சாகித்ய அகாதெமி ஆகியவை இவரது எழுத்துக்களையும் உயிர்மை இவரது கடிதங்களையும் வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்.
Sunday, January 24, 2010
பார்வை இழந்தோருக்காக வாசித்தல்
சனிக்கிழமையாக இருந்ததாலும், அப்போது வேறு கமிட்மெண்ட்ஸ் இல்லாததாலும் ஆர்வத்துடன் சென்றேன்.
ஒரு கூடம் நிறைய மாணவர்கள். பல்வேறு கல்லூரிகள், துறைகளில் படிப்பவர்கள். அங்கங்கு சிலர் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவராகவோ ஒரு குழுவுக்கு ஒருவராகவோ வாசித்துக் கொண்டிருந்தனர்.
நிர்வாகி ஒருவர் வந்து முகமன் கூறி என்னை அழைத்துச் சென்றார். இளங்கலை தமிழ் பயிலும் மூன்று மாணவிகளுக்கு வாசிக்கும் படி சொன்னார். புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது. ”திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டுமா” என்று கேட்டேன். அவர்களோ, “நீங்க பாட்டுக்குப் படிங்க அக்கா; வேணும்னா நாங்க சொல்றோம்.” என்றனர். மேலும் அவர்கள் ஏற்கனவே படித்தது தான் என்றும் தேர்வுக்கு முன் மறுவாசிப்பு செய்வதாகவும் சொன்னார்கள்.
இரண்டரை மணி நேரம் படித்திருப்பேன். அதற்குள் என்னிடம் மிகவும் நெருங்கி விட்டனர். நான் தெளிவாகவும், அவர்களுக்கு வேண்டியது போலவும் வாசித்ததாகச் சொன்னார்கள் . அவர்களின் அந்த வார்த்தைகள் எனக்கு அதுவரை அனுபவித்தறியா மனநிறைவைத் தந்தது. பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் நான் தவற விட்ட பரிசுகள் எல்லாம் ஒன்றாய்க் கிடைத்தது போல் இருந்தது.
வீட்டுக்குத் திரும்பிப் போக எனக்குச் சுலபமான வழியும் கூடச் சொன்னார்கள்.
அடிக்கடி வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பின் ஏனோ அழைப்பு வந்தும் செல்ல முடியவில்லை. அந்தச் சிறுமிகளின் நட்பையும் தவறவிட்டு விட்டேன்.
பாடப்புத்தகங்கள் என்றில்லை, நாம் படித்து மகிழும் எத்தனை புத்தகங்கள் பார்வையற்றோருக்கு வாய்க்கும்? ப்ரெயிலில் மிக முக்கியமான புத்தகங்கள் வருவதே அரிது தான். புத்தகம் வாசிப்பு என்பதே அகக்கண்களுக்காகத் தானே? அது இருக்கும் யாருக்குமே அந்த அனுபவம் மறுக்கப் படக்கூடாதல்லவா?
அது மட்டுமல்ல நாம் ரசித்த புத்தகத்தைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மனதுக்கும் இது நிறைவாக இருக்குமே?
ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்கள், விருப்பமுள்ளவர்கள் வழிகாட்டினால் தொடரலாம் என்று மிகவும் விரும்புகிறேன்.
Wednesday, December 30, 2009
உதிரிப்பூக்கள் - 31/12/09
ஒன்றும் பெரிதாக இல்லை. குடும்பத்தில் ஒவ்வொரு வேளையும் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டது, அரட்டை அடித்தது, குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் குடும்பமே கவனித்து மகிழ்ந்தது, வாசல் தெளித்துக் கலர் கோலம் போட்டது, அத்தை அதிரசம் சுட உதவியாக மாவு தட்டிக் கொடுத்தது, அவ்வளவு ஏன், மொட்டைமாடியில் காய்ந்த துணிகளை அவசரமில்லாமல், காற்று வாங்கிக் கொண்டே மடித்தது கூட பேரின்பமாக இருந்தது.
நேஹாவை அவளது தாத்தா, பாட்டி, அத்தை, மாமா , சித்தி, சித்தப்பா, அத்தாச்சி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணா, என்று உறவுகளின் அன்பில் நனைய விட்டதும், அவள் எல்லாரையும் முறை சொல்லி அழைக்கப் பழகிவிட்டதும் சொல்லிலடங்கா சந்தோஷங்கள்! தரையிலிறங்கியாயிற்று இன்று! ஹூம்!
புத்தகக் கண்காட்சி
ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் . முதல் முறை நான் சென்றது அக்காவுடன் தான். அக்கா படித்த கல்லூரியில் தான் அப்போது கண்காட்சி நடக்கும். எட்டு வயதான் என்னை அழைத்துச் சென்று பழனியப்பா பிரதர்ஸ் ஸ்டாலில் கதைப்புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து (”எல்லாத்தையும் வீட்டுக்குப் போனவுடனே படிச்சுத் தீர்த்துடாதே. ஒவ்வொண்னா மெதுவா படி!”) கேன்டீனில் ஐஸ்க்ரீமும் மசாலா தோசையும் வாங்கிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது.
பள்ளியிலிருந்து ஒரு முறை சென்றிருந்தோம்; கண்காட்சி திறப்பு விழாவில் சேர்ந்திசை பாடுவதற்காக. "உண்மை அழகு" என்ற பாடல். பின்னணி இசையோடு பாடல் முழுதும் நினைவிருக்கிறது. அப்போது செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நடந்தது. பிறகு பல ஆண்டுகள் செல்ல இயலவில்லை. 2003க்குப் பின் தொடர்ந்து சென்றேன். கடந்த இரு ஆண்டுகளாக மீண்டும் இடைவெளி.
இந்த ஆண்டு பதிவுலக நண்பர்கள் பலரின் படைப்புக்கள் வெளிவருவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். படைப்பாளிகளாகப் பரிணமித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ஒவ்வொருமுறையும் கை நிறைய புத்தகங்களோடு தான் திரும்ப வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் தேன் குடத்தினுள் விழுந்து மயங்கிய வண்டு கணக்காய், கடல் போல் குவிந்த புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்து விட்டு வீட்டுக்கு வந்ததும், இவ்வளவு தானா வாங்கினோம் என்று ஏக்கமடைவேன். இம்முறை அதை மாற்ற வேண்டும்!
கார்க்கியின் தாய்
இந்த நாவலை ebookகாக ப் படித்து முடித்து வெகு நாட்களாகின்றன. பகிரத்தான் சமயம் கிடைக்கவில்லை. படித்து முடித்த கையோடு ஆங்கிலத்தில் ஒரு பதிவு எழுதினேன். அந்த இளைஞர்களைப் பற்றிப் படிக்கையில் பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் எத்தகைய உலகத்துக்காகப் போராடினார்களோ அது இன்னமும் நிறைவேறவில்லை. ஆனாலும் போராடுவதற்கும் புரட்சிக்குமான இடம் சிறிதும் இல்லாமல் இன்றைய சமுதாயம் மழுங்கடிக்கப் பட்டுள்ளதோ என்று மனம் வெதும்புகிறது.
ராதிகா (தாய்), பா.விஜய் (பாவ ல்) நடிக்க கலைஞர் எழுதிய தாய் காவியம் திரைப்படமாக வெளிவரப்போவதாக இணைய செய்திகள் அறிவிக்கின்றன. பார்ப்போம்!
இன்னொரு புதிய ஆண்டு
Roller coaster ride என்பார்களே அதைப் போல் தான் இருநதது கடந்த ஆண்டு! பலவிதமான புது அனுபவங்கள். முக்கியமாக என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
நானும் பதிவெழுத வந்து ஓராண்டு நிறைவுறுகிறது. இன்னும் எதையும் ஒழுங்காக எழுத வில்லையென்றாலும், தமிழ் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும், அற்புதமான நட்புகள் கிடைத்ததற்கும் பதிவுலகம் தான் காரணம். நன்றி ப்லாக்கர்.காம்!
அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Wednesday, September 2, 2009
ரொம்ப நாளைய ஏக்கம்
ஒன்று Jane Austen எழுதிய Pride and Prejudice என்ற பழைய ஆங்கில நாவலின் மறு மறு மறு வாசிப்பு. 19 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மேல்தட்டு மக்களையும் குறிப்பாக இளம்பெண்களையும் அவர்களது அக வாழ்வையும் பற்றியே எழுதிய இவரது எழுத்துக்கள் ரமணிசந்திரனின் நாவல்களைத் தான் நினைவூட்டும். ஆனாலும் அழகான மொழியும் ரசமான நடையும் சுகமான வாசிப்பனுபவம் தரக்கூடியவை. Just light and luxury reading!
இன்னொரு நாவல் – இல்லை அது நாவல் இல்லை, சுயசரிதை. அதிகமாக பரபரப்புடன் பேசப்பட்ட கமலாதாஸ் அவர்களின் என் கதை.
மேலே படிக்கும் முன் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். இது அவரது நூலின் விமர்சனம் அல்ல. படிக்கும் போதும் படித்து முடித்த பின்னும் என் மனதின் உணர்வுகளைப் பதிக்கிறேன். அவ்வளவே.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனதை உருக்கும் சோகக் காவியம் என்று நினைத்துக் கொண்டு படிக்கத் தொட்ங்கினேன். ஆனால் பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்களும் ஆச்சரியங்களும் அதிர்ச்சகளும் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த நாயர் குடும்பத்தில் பிறந்த கமலா தாஸ் கல்கத்தாவில் கழித்த தனது சிறு வயது அனுபவங்களுடன் தொடங்குகிறார்.
பிரிட்டிஷ் குழந்தைகள் படிக்கும் பணக்கார ஆங்கிலப்பள்ளி ஒன்றில் படித்த போது அனுபவித்த இனவேறுபாடுகள், ஆங்கிலேய முறையில் அங்கு சில காலம் வாழ்ந்த வாழ்க்கை, பின்பு மலபாரில் நலாபட் வீட்டில் வாழ்ந்த காலத்தை விவரிக்கும் போது அந்த வீட்டின் பிரம்மாண்டம், தோட்டங்களின் அழகு, வீட்டில் தன் அண்ணனுடன் சேர்ந்து நடத்தி நடித்த மேடை நாடகங்கள், பெரும் பண்டிதரான அவரது தாத்தா, பாட்டிகள், அத்தைகள் பற்றிய வர்ணனைகள் என்று கேரளத்துக் கிராம வாழ்க்கையைக் கண் முன் நிறுத்தும் அவரது சிறு வயது நினைவுகள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன.
பின்பு இளம் பதின்ம பருவத்தில் அவர் செல்லும் கன்னியாஸ்திரிகளின் பள்ளியை நினைவு கூர்கிறார்.
அங்கிருந்து எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் கன்னியாஸ்திரிகளால் எடிட் செய்யப்படும் என்பதால் வழக்கமாக சரளமாகவும் நகைச்சுவையாகவும் எழுதும் கமலா ஒழுங்குப் பிள்ளை போல கடிதம் எழுதியதை அவரது அண்ணன் கேலி செய்ததைப் படிக்கும் போது நம்மால் அந்தச் சிறுமியின் நேர்ந்த சிறு அவமானத்தை உணர முடிகிறது.
பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் கவிதைகள் புனையும் அளவுக்குத் திறமை சாலியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. கேரள மண்ணுக்கே உரிய அழகும் வனப்பும் இருந்தாலும் மாநிறத்தவர் என்பதால் குடும்பத்தாரிடமே இருந்து கூட விதைக்கப் பட்ட தாழ்மை உணர்ச்சியும் வெகுவாகப் பாதித்ததாகக் குறிப்பிடுகிறார்.
அவர் வாழ்ந்த காலம், அவரது மேல் தட்டு வர்க்கம், (நடுத்தர வர்க்கம் என்று அவர் சொல்லிக் கொண்டாலும்) மொழி, ஊர், என்று எதையுமே நெருங்கித் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாததால் ஒரு வித அந்நியத் தன்மை ஏற்பட்டாலும் பெண்மை உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் நாம் அறியாமலே சில இடங்களில் உள்ளத்தைத் தொடுகிறார்.
மேலும் கணவனின் முழு அன்பு தனக்கு எப்போதுமே கிடைக்கவில்லை என்று ஏங்கியதாகச் சொன்னாலும் சில சமயங்களில் இவரது கணவர் இவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டதையும் ஆதுரத்துடன் இவரைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருந்ததையும் சொல்கிறார்.
அதிகம் யோசிக்கும் பெண்ணுக்கு இச்சமூக வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது என்று தனது வாழ்க்கையிலிருந்தே இவர் சொல்லும் பாடத்தை மட்டுமே முழுமனதுடன் ஏற்க முடிகிறது.
கூர்மையான அறிவும், பெற்றோர்களின் தலையீடு பெரிதாகப் பாதிக்காமல் இள வயதில் கிடைத்த பரந்து பட்ட சுதந்திர அனுபவமும், வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் தாகமும் கூடிய பெண் ஒருத்தி பதினைந்து வயதில் ஏற்பட்ட பொருந்தாத திருமண வாழ்க்கையால் மனமும் உடலும் அலைக்கழிக்கப் படுவதை உண்மையுடன் அலாதியாகச் சொல்லி இருக்கிறார்.
வாசகர்களுக்குத் தன் மீது இரக்கம் ஏற்படவேண்டுமென்ற நோக்கமோ, தனது பொறுப்பற்ற பல செய்கைகளுக்குப் நியாயம் கற்பிக்கும் எண்ணமோ கமலா தாஸுக்குச் சிறிதும் இல்லை. அதனால் எனக்கும் அவர் மீது இரக்கமோ நியாயமோ தோன்றவில்லை.
அவரே சொல்லி இருப்பது போல் அவருடைய முழுப் பலமான உண்மை கதையில் தொனிக்கிறது. முற்பாகத்தில் சில இடங்களில் வெளிப்படும் மழுப்பல்கள் கூட இறுதியில் அவராலேயே விளக்கம் கொடுத்து விடப்படுவதால் மதிப்பில் உயர்ந்து தான் நிற்கிறார்.
இதை முதலில் படிக்கும் போது ஏற்படும் உணர்வுகளுக்கும் மறு வாசிப்பு செய்யும் போதோ இல்லை சில ஆண்டுகள் கழித்து இதை வாசிக்கும் போதோ ஏற்படும் உணர்வுகளுக்கும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதுவே ஒரு சிறந்த சுயசரிதை நூலின் வெற்றி என்று கருதுகிறேன். ஒருவரை நன்கு புரிந்து கொள்ள காலமும் ஒரு முக்கிய காரணம் அல்லவா?
My Story
Autobiography
by Kamala Das
Rs. 100
D C Books, Kottayam 686 001
Website: http://www.dcbooks.com/
Online shopping: http://www.dcbookshop.net/
e-mail: info@dcbooks.com
Thursday, July 30, 2009
”நான் உன்னை மாதிரி இருந்தப்போ…”
நம் சிறு வயதில் நம் வீட்டில் கூட இப்படி நமக்குக் கதைகள் சொல்லி இருப்பார்கள். ”நான் சின்னப் பொண்ணா இருக்கும் போது உங்க பாட்டி...” என்றும், ”உங்க அப்பாவும் உன்னை மாதிரி தான்” என்று தொடங்கி உங்கள் பாட்டிகளும் சொன்ன சுவாரசியமான சம்பவங்களை நீங்கள் மறந்திருக்கவே மாட்டீர்கள்.
என் சிறு வயதில் When Daddy was a little boy என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதன் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ராஸ்கின் தனது ஆறு வயது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவளைக் களிப்படையச் செய்ய தனது குழந்தைப் பருவச் சம்பவங்களை நகைச்சுவையாகக் கூற ஆரம்பித்ததாகவும் அதை அவள் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததால் அதையே நூல் வடிவில் கொண்டு வந்ததாகவும் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.
எப்போதும் தங்களையே கவனித்துக் கொண்டு தங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அப்பா அம்மாவும் ஒரு காலத்தில் தங்களைப் போலவே குழந்தைகளாக இருந்திருப்பார்கள்;
குறும்புகள், சண்டைகள், அசட்டுத்தனங்கள் நிரம்பியவர்களாகவும், அதற்காகத் திட்டும் தண்டனைகளும் கூடப் பெற்றிருப்பார்கள் என்பதும் குழந்தைகள் அறிந்து கொள்வது அவர்களுக்குச் சுவாரசியமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட என்கிறார் திரு. ராஸ்கின்.
ரொட்டி சாப்பிட மறுத்த தன்னை வழிக்குக் கொண்டு வர தனது பாட்டி ஒரு வாரம் ரொட்டியே சாப்பிட வேண்டாம் என்று அறிவித்ததும் எப்படி மகிழ்ந்தார் என்றும் மூன்றாம் நாள் உடல் சோர்ந்து பசி மேலிட ரொட்டியைத் திருடித் தின்றது உட்பட இந்தப் புத்தகத்தில் பல நகைச்சுவையான, சிந்திக்க வைக்கும் விஷயங்கள் உள்ளன.
அதே போல் தன்னைப் பற்றி சொல்ல எதுவும் தோன்றாவிட்டால் பிற அப்பா, அம்மாக்கள், அதாவது தனது நண்பர்கள், குழந்தையின் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, என்று யாரைப் பற்றியும் நல்ல கதைகள் சொல்லலாம்.
ஹாரிபாட்டர் கதையில் ஹாரியின் தலைமை ஆசிரியர் சொல்வார்; ”Old men are guilty if they forget what it was to be young” என்று. அது சத்தியமான வார்த்தை.
எனவே நாமும் நமது குழந்தைப்பருவத்தை நினைவு கூர்ந்து நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வோம். அது நிச்சயம் நமக்கும் நம் குழ்ந்தைகளுக்குமான புரிதலையும் பிணைப்பையும் பலப்படுத்தும்.
Sunday, July 19, 2009
பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை
இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால் அவ்விதழ்கள் வருவதும் நின்று போயின.
இது தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்.
ஏனென்றால் என் அக்காவும் அண்ணனும் படித்துச் சேர்த்து வைத்த இதழ்களைத் தான் நான் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஏன் அந்த இதழ் வருவதில்லை என்று கேட்ட போது அதன் ஆசிரியர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். ரத்னபாலா இனிமேல் வரவே வராது என்பது ஒரு தனிப்பட்ட சோகமாக எங்களுக்கு இருந்தது.
முட்டாள் பட்டணம், மதியூகி மாப்பிள்ளை, ஜாம் ஜிம் ஜாக் போன்ற எண்ணற்ற கதைகளும் சித்திரக்கதைகளும் தாங்கிக் கனவுலகம் போல் வலம் வந்த அந்த இதழுக்கு ஈடாக வேறெதையுமே சொல்ல முடியாது.
குழந்தை இலக்கியமென்றால் நீதிக் கதைகள் இருந்தே ஆகவேண்டுமென்ற நியதி எல்லாம் இல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் அலாதியான நகைச்சுவைக் கதைகள் இடம்பெற்றிருந்தன.
எனக்கு நினைவில் நிற்கும் கதை ஒன்றை குட்டீஸ்களுக்கும் அவர்களுக்குக் கதை சொல்லும் பெற்றோருக்காகவும் தருகிறேன். இது ரத்னபாலாவில் வந்தது. எழுதியது யாரென்று உறுதியாகத் தெரியவில்லை.
மூலக்கதை இதைப்போல் பதின்மடங்கு சுவாரசியாமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். என் நினைவில் நின்ற வரை மீட்டெடுத்திருக்கிறேன்.
பொம்மன் திம்மன் வம்பன்
ஒரு ஊரில் பொம்மன், திம்மன், வம்பன் என்று மூன்று சகோதரர்கள் தங்கள் வயதான தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். அப்போது அவர்கள் ஊரில் திடீரென்று புயல் மழை பெய்தது. பயிர்களெல்லாம் நாசமாகிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
அப்போது பொம்மன் சொன்னான். “அப்பா, நீங்கள் பயிரிட்டதெல்லாம் நாசமாகி விட்டதே என்று வருந்தாதீர்கள். நான் பக்கத்து ஊருக்குச் சென்று ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்.”
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பொம்மன் அண்டை ஊருக்குக் கால் நடையாகவே சென்று அடைந்தான். அந்த ஊரின் பண்ணையாரிடம் போய் வேலை ஏதாவது தருமாறு கேட்டான்.
அந்த ஊர்ப் பண்ணையாரோ மகாக் கஞ்சப் பேர்வழி. ஈவிரக்கம் இல்லாதவர். அவர் பொம்மனைப் பார்த்துச் சொன்னார்.
”தம்பி, உனக்கு தாராளமாக என் பண்ணையில் வேலை தருகிறேன். வேலை முடிந்ததும் சம்பளமும் சாப்பாடும் தருவேன்.
ஆனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.”
“என்ன ஐயா அது?”
“எக்காரணம் கொண்டும் நீ என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. நானும் உன்னிடம் கோபித்துக் கொள்ள் மாட்டேன். மீறி நீ என்னிடம் கோபம் கொண்டால் உன்னை வேலையை விட்டு நீக்கி விடுவேன். கூலி எதுவும் தரவும் மாட்டேன்.” என்றார்.
“நீங்கள் என்னிடம் கோபித்தால்” பொம்மன் கேட்டான்.
“அப்போது நான் உனக்கு இருபதாயிரம் ரூபாய் தருவேன்”
பொம்மனுக்கு இந்த நிபந்தனை நியாயமாகத் தோன்றியது. மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். உடனே தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யலானான்.
கடும் உழைப்பாளியான பொம்மன் உற்சாகமாக வேலை செய்தான். நாளெல்லாம் தோட்டத்தைச் சுத்தம் செய்தான், பாத்தி வெட்டிச் செடிகள் நட்டான், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான்.
மாலையில் மிகவும் களைத்துப் போனான். பயங்கரமாகப் பசி எடுத்தது. பண்ணையாரிடம் சென்று வேலை முடிந்தது என்று கூறிப் பசிக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தினான்.
பண்ணையார் மலர்ந்த முகத்துடன் அவனைத் தன் பின்னால் வரும்படி அழைத்தார். தோட்டத்தின் மூலையில் ஒரு அறிவிப்புப் பலகை சாத்தி வைக்கப்பட்டிருந்தது. புன்னகையுடன் அதைச் சுட்டிக் காட்டினார். அதில்,
“பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு நாளை சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்”
பொம்மனுக்குக் கோபமாக வந்தது. ஒப்பந்தத்தை எண்ணி ஒன்றும் பேசாமல் திரும்பினான். கஷ்டப்பட்டுப் பசியை அடக்கிக் கொண்டு உறங்கிப் போனான்.
மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து விரைவாக வேலைகளை முடித்துவிட்டு பண்ணையாரிடம் சென்று ஊதியம் கேட்டான்.
பண்ணையார் மறுபடியும் சிரித்துக் கொண்டே அதே அறிவிப்பினைக் காட்டினார்.
பொம்மன் அமைதியாகக் கேட்டான், “என்ன ஐயா இது, நேற்று தான் நாளை தருவதாகச் சொன்னீர்களே?”
அதற்குப் பண்ணையார் சொன்னார், “ஆமாம், நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு எல்லாம் என்னிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சுத் தான்” என்று சிரித்தார்.
பொம்மனுக்குக் கோபம் பீறிட்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் பண்ணையாரிடம் சென்றான். அன்றும் அவர் அதே பலகையைக் காட்டியதும் பொம்மனால் பொறுக்க முடியவில்லை.
“யோவ், என்ன ஆள் ஐயா நீர்? முதுகொடிய வேலை செய்பவனை இப்படி ஏமாற்றுகிறீர்? நீர் மனிதன் தானா?” என்று ஆத்திரம் தீரக் கத்தினான்.
நயவஞ்சகமான அந்தப் பண்ணையாரோ முகத்தில் புன்னகை மாறாமல், “அடடா, தம்பி பொம்மா, ஒப்பந்தத்தை மீறி விட்டாயே. என்னிடம் கோபித்துக் கொண்டு கத்தி விட்டாயே. நீ போகலாம்“ என்றார்.
அவமானமும் கோபமும் தாங்காமல், பொம்மன் ஊர் திரும்பினான். வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும் தம்பியரிடமும் தனக்கு நேர்ந்த அநியாயத்தைச் சொன்னான்.
அடுத்த சகோதரனான திம்மன் தான் அப்பண்ணையாரிடம் சென்று நியாயம் கேட்பதாகக் கூறிச் சென்றான். அவனையும் பண்ணையார் இதே போல ஏமாற்றி அனுப்பி விட்டார்.
இறுதியாகக் கடைக்குட்டி வம்பன் சொன்னான். “அண்ணன்மார்களே, நான் போகிறேன் அந்தப் பண்ணையாரிடம் வேலை செய்ய. அவரை என்ன செய்கிறேன் பாருங்கள்”
”அடேய் வம்பா, நீ சின்னவன். உன்னால் சும்மாவே பசி தாங்க முடியாது. வேலையும் எப்படியடா செய்வாய்? வேண்டாமடா” என்றனர் பொம்மனும் திம்மனும்.
வம்பன் அவர்களைக் கவலைப்படவேண்டாம் என்று கூறிப் புறப்பட்டான். துணைக்குத் தன் செல்ல நாயையும் அழைத்துச் சென்றான்.
பண்ணையார் வம்பனுக்கும் அதே நிபந்தனைகளைக் கூறி வேலைக்கமர்த்திக் கொண்டார்.
முதல் நாள் மாலை வேலை நேரம் முடிந்ததும் வம்பன் தன்னிடம் வருவான் என்று எதிர்பார்த்தார். அவன் வரவில்லை. அப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. வம்பன் அவரைப் பார்த்தால் முகம்மலர்ந்து வணங்குவதும் உற்சாகமாக வளைய வருவதுமாக இருந்தானே தவிர ஊதியமும் கேட்கவில்லை, சாப்பாடும் கேட்கவில்லை.”
அவனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தார். அவனைத் தேடிச் சென்ற போது தோட்டத்தில் மல்லாந்து படுத்துச் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் வம்பன்.
“வம்பா, நீ எப்படி இத்தனை நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாய்?
பெரிதாகச் சிரித்த வம்பன், “நானா? சாப்பிடவில்லையா? நல்ல வேடிக்கை போங்கள், என்னால் ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாது. மூன்று வேளையும் செட்டியார் கடையில்
மூக்குப் பிடிக்கச் சாப்பிடுகிறேனே. என் அம்மா கைப்பக்குவம் அவருக்கு அப்ப்டியே இருக்கிறது.”
“காசு...” என்று பண்ணையார் இழுக்க,
“இதோ நம் பண்ணையிலிருந்து தான் நெல் மூட்டைகளைக் கொடுத்துப் பதிலுக்குச் சாப்பாடு வாங்கிக் கொள்கிறேன். என் நாய்க்குக் கூடக் கஞ்சி ஊற்றாமல் சுடு சாதம் போடுகிறார். பாருங்கள் எப்படி வாலாட்டுகிறதென்று.” சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டு குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.
பண்ணையாருக்குக் கோபத்தில் மீசை துடித்தது. சின்னப் பயல் எவ்வளவு சாதுர்யமாக நம்மை ஏமாற்றி இருக்கிறான் என்று கறுவினார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபப்பட்டால் இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே.
பொறுத்திருந்து தான் யோசிக்க வேண்டும் என்று திரும்பி விட்டார்.
மறு நாள் வம்பன் அவரிடம் வந்தான். “எசமான், பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டிகட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தான்.
பண்ணையாரும் பேராசைப்பட்டு அவனுடன் போகச் சம்மதித்தார். வம்பன் தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினான். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “டேய் மெதுவாடா மெதுவாடா”, என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.
பொழுது சாய்ந்து விட்டது. அவர்கள் கடந்து சென்ற சாலை ஓரமாக ஒரு சேற்றுக் குட்டை தென்பட்டது. அதனுள் பன்றிகள் விளையாடித் திளைத்துக் கொண்டிருந்தன.
சடக்கென்று வண்டியைச் சாய்த்தான் வம்பன்; பண்ணையார் ’தொபுக்கடீர்’ என்று குட்டையில் விழுந்தார். அவர் உடலெல்லாம் சேறு படிந்தது. அருகில் ஒரு பன்றி வேறு அவரை நோக்கி உறுமிக் கொண்டே கடிக்க வந்தது.
அவ்வளவு தான். கோபம் பொத்துக் கொண்டு, வம்பனைப் பார்த்துக் கண்டபடி ஏச ஆரம்பித்தார் பண்ணையார்.
சாலை மேலே நின்று கொண்டிருந்த வம்பன் புன்முறுவலுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். பின் சொன்னான்.
“எசமான், ஒப்பந்தத்தை மீறிட்டீங்களே? கோபப்பட்டு என்னைத் திட்டிட்டீங்களே? எடுங்கள் ரூபாய் இருபதாயிரம்.” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணும் முடியாது போடா” என்றார் பண்ணையார்.
“அப்படியா. அப்போ இந்தச் சேத்துக் குட்டையிலேயே கிடங்க. இரவாகிவிட்டது, காலையில் யாராவது வந்து கை தூக்கி விடற வரைக்கும் இந்தப் பன்றிகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள்” என்று சிரித்தான்.
“சரி தர்றேன், கை தூக்கி விடுடா”
“ஹீம். இந்தக் கையில் பணம், இந்தக் கையால் தூக்கி விடுவேன்!” என்று கை நீட்டினான்.
வேறு வழியின்றி முனகியபடியே பணத்தை எடுத்து வம்பனிடம் கொடுத்தார் பண்ணையார்.
அவரைக் கைதூக்கி விட்டபின், வெற்றிக் களிப்புடன் பணத்துடன் தன் சொந்த ஊரை நோக்கி நடந்தான் வம்பன். அவனது செல்ல நாய் உற்சாகத்துடன் குரைத்தபடி அவனைப் பின்தொடர்ந்தது.
***************
முல்லை தங்கராசன் அவர்கள் தனியாகக் கதைகள் எழுதியும் நூல்கள் வெளியிட்டதாக ஞாபகம். அவை பற்றியும், பழைய ரத்னபாலா இதழ்கள் எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து வெளியிடவும்.
கன்னிமாரா நூலகத்தில் தேடிய போது கிடைக்கவில்லை. ரத்னபாலா பழைய இதழ்களும் அவர்களிடம் இல்லையாம்.
ஒரு பழைய மணிப்பாப்பா இதழுக்குச் சுட்டி இதோ!:
http://www.tamilcc.org/thamizham/ebooks/7/655/TM655.pdf
Sunday, June 7, 2009
டோபா டேக் சிங்
பான் நளின் என்ற இயக்குநர் எடுக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஆமிர் கானும் ”டைட்டானிக்” நாயகி கேட் வின்ஸ்லெட்டும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
2005 ல் இதே கதை ஆஃபியா நதானியல் என்ற பாகிஸ்தானி இயக்குநரால் குறும்படமாக வெளிவந்துள்ளது.
டோபா டேக் சிங் என்பது தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ள சிற்றூர் ஆகும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரண்டு நாடுகளிலும் உள்ள
மனநலம் பாதிக்கப் பட்டவர்களின் இடமாற்றம் பற்றியும் அவர்களது பார்வையில் பிரிவினையும் இடப் பெயர்ச்சியும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை
நையாண்டியாகவும அதே சமயம் நெஞ்சை உருக்கும் உணர்வுகளுடனும் சொல்லும் கதை தான் டோபா டேக் சிங்.
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சாதத் ஹஸன் மாண்டோ. உருது எழுத்தாளர்; இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மனித வெறியாட்டங்களையும் இவர் அளவுக்கு அழுத்தமாகப் பதிவு செய்தவர் யாருமில்லை எனலாம்.
சர்ச்சைக்குரிய பல களங்களில் அநாயாசமாய் எழுதக் கூடிய இவர் சமூகத்தின் அவலங்களை இடக்கரடக்கலின்றி அப்பட்டமாகத் தோலுரித்து எழுதினார். தனது பாத்திரங்கள் எத்தன்மையினராக இருந்த போதும் அவர்களை எந்த விதப் போலிப் பூச்சுமின்றி உலவ விட்டார்.
தனது எழுத்துக்கள் பற்றி அவர் கூறுவது: ”எனது கதைகள் உங்களுக்கு அருவருப்பாக இருந்தால் அப்படிப்பட்ட அருவருப்பான சமூகத்தில் தான் வாழ்கிறீர்கள் என்று
உணருங்கள். என் கதைகளின் மூலம் உண்மையைத் தான் வெளிப்படுத்துகிறேன்”
காலீத் ஹாசன் என்பவர் இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றைப் படித்து இரவில் தூக்கம் வராமல் தவித்த நாட்கள் பல. அப்படி ஒரு ஆளுமை உண்டு அவரது எழுத்துக்களில்.
தமிழில் யாராவது இவரது படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.
என் மொழிபெயர்ப்பு சகிக்கும் படியாக இருப்பதாகப் பலர் ஒத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் பதிவுலக நண்பர்களூக்காக இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!
Wednesday, April 15, 2009
டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி
நேஹாவுக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது. ஆனால் இப்போதே அவளை எந்தப் பள்ளியில்
சேர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டோம்!கூடுமானவரை வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், தரமான கல்வியுடன் விளையாட்டு மைதானமும் இருக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான் எப்போதோ படித்த இந்தப் புத்தகம் நினைவுக்கு வந்தது. பெற்றோர்களும் முக்கியமாக ஆசிரியர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி ஜப்பான் நாட்டில் இரண்டாம் உலகப் போரின் போது சிறுமியாக இருந்த டெட்சுகோ குரோயாநாகி என்பவர் தனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதாகத் தான் படித்த பள்ளியைப் பற்றியும் அதன்
தலைமை ஆசிரியரைப் பற்றியும் கூறியுள்ளார்.
புகழ்பெற்ற ஒரு பள்ளியிலிருந்து முதல் கிரேடிலேயே வெளியேற்றப் படும் டோட்டோ சான் என்ற சிறுமி கோபயாஷி என்பவர் நடத்தும் வித்தியாசமான பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.
”டோமோயி” என்ற அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கைவிடப்பட்ட ரயில்பெட்டிகளில் வகுப்பறைகள், சுதந்திரமான பாடத் திட்டங்கள், ”கடல்களிலிருந்து கொஞ்சம், மலைகளிலிருந்து கொஞ்சம்” என்று சரிவிகித உணவு முறை, உடல் ஊனமுற்ற குழந்தைகள் கொண்டாடி மகிழும் வண்ணம் விளையாட்டுப் போட்டிகள், இயற்கையிலிருந்து நேரட்டியாக கற்பிக்கும் முறை, உதாரணத்துக்கு விவசாயப் பாடம் கற்பிக்க விவசாயி ஒருவரையே கௌரவ ஆசிரியராக அழைத்து வருதல், அசெம்பிளி ஹாலில் கூடாரமடித்துத் தங்கும் கேளிக்கைகள், இசையுடன் கூடிய உடற்பயிற்சி வகுப்புகள், திறந்தவெளிச் சமையல் வகுப்புகள் என்று படு எளிமையாகவும் அதே சமயம் குழந்தைகளுக்குக் குதூகலம் நிறைந்ததாகவும் விளங்குகிறது அந்தப் பள்ளி.
முந்தைய குறும்பு செய்து பள்ளியில் வகுப்பையே கெடுப்பதாகச் சொல்லி வெளியேற்றப்பட்ட டோட்டோ சான் இந்தப் பள்ளியில் உற்சாகமாகப் பள்ளி சென்று ஆர்வத்துடன் கல்வி கற்கிறாள்.
நூலிலிருந்து:
”டோட்டோ சானை விட ஒரு வகுப்பு கூடுதலாகப் படித்த ஒரு பையன் அப்பள்ளியை விட்டுச் செல்ல
நேர்ந்த போது தன் மனக் கசப்பை வெளியிட தலைமை ஆசிரியரின் முதுகில் புளி மூட்டை ஏறிக்
கொண்டு கண்களில் நீர் வழிய கைகால்கள்:ஐ உதைத்து அடம்பிடித்தான். அவன் சென்று மறையும்
வரை கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள பள்ளியைப் பிரிய மனமின்றிச் சென்றான், தலைமையாசிரியர் கண்கள் சிவக்க அழுதே விட்டார்.”
”நாம் போன தடவை போனப்ப அங்குள்ள குளத்தில் பாம்பு பார்த்தோம்” சாக்கோ சான் சொன்னாள்.
குழந்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். வானம் நீலமாக இருந்தது. காற்ரு படபடக்கும் பட்டாம்பூச்சிகளால்
நிறைந்திருந்தது. அவர்கள் பத்து நிமிடம் ந்டந்த பின்பு டீச்சர் நின்றார். சில மஞ்சள் பூக்களைக் காட்டிச் சொன்னார்,
“இந்தக் கடுகுப் பூக்களைப் பாருங்கள். பூக்கள் ஏன் பூக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?”
இப்புத்தகத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. டோட்டோசான் என்ற துடிப்பான சிறுமியின் பார்வையில் அன்பும் குழந்தைகளின் இயல்பைச் சற்றும் கெடுக்காத கல்விமுறை எவ்வளவு சிறந்தது என்பது புலனாகிறது.
டெட்சுகோ குரோயாநாகி ஜப்பான் தொலைக்காட்சியில் “டெட்சுகோ அரங்கம்” என்ற பிரபல நிகழ்ச்சி நடத்தி வந்தவர். இவரது சொந்த அனுபவமே இப்புத்தகம். நூலின் இறுதியில் தன்னுடன் படித்தவர்களையும் பேட்டி கண்டு டோமோயி பற்றிய அவர்களின் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோருக்குச் சுட்டி இங்கே:http://gyanpedia.in/tft/Resources/books/Tottochan.pdf
தமிழில்:
டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி
ஆசிரியர் : டெட்சுகோ குரோயாநாகி
தமிழாக்கம் : சு. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்
வெளியிடு : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்
South Asian Books6/1, Thayar Sahib II LaneChennai - 600 002
Friday, December 19, 2008
ஒரு கால் சென்டரில் ஓரிரவு
இந்தப் புத்தகத்தைப் பற்றி வெகு நாட்களாக அறிந்திருந்தாலும் 2 நாட்களுக்கு முன்பு தான் படிக்க முடிந்தது.
இந்தியா முழுவதும் பல்வேறு சிறு நகரங்களில் 18 முதல் 30 வயது வரை சுமார் 300,000 இளைஞர்கள் கால்சென்டர் துறையில் பணிபுரிகிறார்கள்.அமெரிக்க நுகர்வோருக்கு வாஷின் மெஷினைப் பழுது பார்க்கவும் மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கவும் தொலைபேசியில் பொறுமையாகச் சொல்லித்தர வேண்டியது அவ்ர்களது வேலை. அவர்களுக்கு இவர்கள் இந்தியர்கள் என்பது எக்காரணம் கொண்டும் தெரிந்து விடக் கூடாது. அமெரிக்கப் பெயர்கள் வைத்துக் கோண்டு அமெரிக்க ஆங்கிலம் பேசுவதோடு மட்டுமல்லாமல், அன்னாட்டு மக்களின் சின்னச் சின்னப் பண்டிகைகள், லோக்கல் செய்திகள் ஆகியவற்றிலும் அத்துப்படியாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு கால்சென்டரில் இரவு நேர ஷிப்டில் பணிபுரியும் ஆறு நண்பர்கள், (மூன்று ஆண்களும் மூன்று பெண்களும்)அவர்க்ளது வாழ்வின் அவலங்கள்,அவர்களது கோளாறான வாழ்க்கை முறை,அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், இவற்றில் இலகுவாகப் பயணிக்கிறது கதை. ஒரு நாள் இரவு அவர்களுக்கு வினோதமான் தொலைபேசி அழைப்பு வருகிறது. கடவுளிடமிருந்து! அது அவர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் என்னவிதமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதைச் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார் இப்புத்தகத்தை எழுதிய சேத்தன் பகத்.
சின்ன நெருடல். கதை மாந்தரை வட மாநிலங்களின் க்ள்ப் கலாசாரங்களைப் பொதுவாக நம் நாட்டு இளைஞர்களின் கலாசாரமாகப் பொதுநிலைப் படுத்தியுள்ளதை ஏற்க முடியவில்லை. அதுவும் அவர்களின் கால்சென்டர் கலாசாரத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு என்பதை ஆசிரியர் அழுத்தமாக முன்வைக்க வில்லை. இது போல் சில இடங்களில் பாத்திரங்கள் கொஞ்சம் அந்நியப்பட்டுப் பொகிறார்கள். மற்றபடி முற்போக்கு இலக்கியங்கள் விரும்பும் வாசகர்கள் படிக்க வேண்டிய நூல்.
தமிழில் மொழிபெயர்க்கத் தகுந்ததா என்று படித்துவிட்டு (அல்லது ஏற்கனவே படித்தவர்கள்) யாராவது சொல்லுங்கள்.
Tuesday, October 21, 2008
பதில்களை விடவும் கேள்விகள் முக்கியமானவை
எழுத்தாளர் திரு மாதவராஜ் அவர்களின் கேள்விகளுக்கு எனது பதில்கள்:
1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது ? ஏதோ ஒரு பாக்கெட் நாவல். ராஜேஷ் குமாரோ ராஜேந்திர குமாரோ நினைவில்லை.
2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்? 8 அல்லது 9 வயதில்.
3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
அ. சமூக நாவல்கள்
இ. ஹரிபாட்டர் _ இதற்கு மட்டும் நான் தீவிர ரசிகை. இவ்வகையான எல்லா நாவல்களும் அல்ல.
4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை
6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து
7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
200 முதல் 300
8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
அவ்வளவு அதிக நேரம் ஒதுக்கிப் படிக்கும் அளவுக்குத் தகுதி வாய்ந்த்தா என்று யோசிப்பேன்! ஆம் எனில் விட்டு விட்டாவது படித்து முடிப்பேன்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை. வேறு வழி இல்லாமல் பொழுதைக்கழிக்க பாக்கெட் நாவல்கள் படித்த சில சமயங்களில் மட்டும்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
வீட்டில் மற்ற வேலைகளெல்லாம் ஓய்ந்த பின்பு.
11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை? பல இருக்கின்றன. குல்சாரி, புத்துயிர்ப்பு, சிவகாமியின் சபதம், இன்னும் பல.
12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
பாட்டிமார்களும் பேத்திமார்களும் _ ஜெயகாந்தன்ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் _ ஜெயகாந்தன்பெர்சுவேஷன் _ ஜேன் ஆஸ்டென்
13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை? போரும் அமைதியும் _ டால்ஸ்டாய் மோகமுள் _ ஜானகிராமன்
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுத்தான், எனக்காக அழு (குறுநாவல்கள்) _ ஜெயகாந்தன், காளான், sivaசங்கரி
முற்றுகை _ மேலாண்மை பொன்னுச்சாமி
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
காட் ஆஃப் ச்மால் திங்ஸ் _ அருந்ததி ராய்.
16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
Little Women, Da Vinci Code, ஜமீலா, நமது இதயங்கள், அன்னை வயல், Uncle Tom's Cabin, Pride and Prejudice, Harry Potter (parts 1-6 ), Agatha Christie's many novels, Crime and Punishment
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
Little Women, Jamila, நமது இதயங்கள்
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
ஆம்
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
இல்லை
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
கலாசாரம்
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
-
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
நமது இதயங்கள்
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி ஆ.பேச்சு வழக்கு இ.வட்டார வழக்கு - நாவலின் தன்மையைப் பொறுத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை? பெண்களின் மனதின் நுட்பமான உணர்வுகள், மனித நேயம்
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது? அப்படிஎதுவும் இல்லை.
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா? சூழ்நிலையயும் நாவலின் சுவாரசியத்தையும் பொறுத்தது.
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை? ஜெயகாந்தன், ஹாரிபாட்டர் நாவல்கள் (ஜே.கே. ரௌலிங்)
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது? அப்படி எதுவும் தோன்றியதில்லை
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
இல்லை
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா? இல்லை. சிறுகதைகள் தாம் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன.
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது? :-) வெகு நாட்கள் ஆகின்றன... படிக்க வேண்டும்!
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
உண்டு.
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை? அந்தத் தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல கருப்பொருள் கிடைக்க வேண்டும்.
சரி. படித்து விட்டீர்களா? முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். அல்லது நேர்மையாக மௌனமயிருங்கள். ஆனாலும் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். முடிந்தவரையில் உங்கள் நண்பர்கள் இந்தக் கேள்விகளைப் படிக்கச் செய்யுங்கள். தமிழ் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும் சிறு தொண்டாக அது இருக்கலாம்.