Wednesday, December 30, 2009

உதிரிப்பூக்கள் - 31/12/09

ஊருக்குப் போய் விட்டு வ‌ந்தோம். ஆஹா, ஏழு நாட்க‌ள் சென்னையை முற்றிலும் ம‌ற‌ந்து வேறொரு உல‌க‌த்தில் இருந்து விட்டு வ‌ந்த‌து போலிருந்த‌து.

ஒன்றும் பெரிதாக‌ இல்லை. குடும்ப‌த்தில் ஒவ்வொரு வேளையும் அனைவ‌ரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்ட‌து, அர‌ட்டை அடித்த‌து, குழ‌ந்தைக‌ளின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் குடும்பமே க‌வ‌னித்து ம‌கிழ்ந்த‌து, வாச‌ல் தெளித்துக் கலர் கோல‌ம் போட்ட‌து, அத்தை அதிர‌ச‌ம் சுட உத‌வியாக‌ மாவு த‌ட்டிக் கொடுத்த‌து, அவ்வளவு ஏன், மொட்டைமாடியில் காய்ந்த‌ துணிக‌ளை அவ‌ச‌ர‌மில்லாம‌ல், காற்று வாங்கிக் கொண்டே ம‌டித்த‌து கூட‌ பேரின்ப‌மாக‌ இருந்த‌து.

நேஹாவை அவளது தாத்தா, பாட்டி, அத்தை, மாமா , சித்தி, சித்தப்பா, அத்தாச்சி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணா, என்று உறவுகளின் அன்பில் நனைய விட்டதும், அவ‌ள் எல்லாரையும் முறை சொல்லி அழைக்கப் பழகிவிட்டதும் சொல்லிலட‌ங்கா சந்தோஷங்கள்! தரையிலிறங்கியாயிற்று இன்று! ஹூம்!

புத்தகக் கண்காட்சி
ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்க்கிறேன் . முத‌ல் முறை நான் சென்ற‌து அக்காவுட‌ன் தான். அக்கா ப‌டித்த‌ க‌ல்லூரியில் தான் அப்போது கண்காட்சி ந‌ட‌க்கும். எட்டு வ‌ய‌தான் என்னை அழைத்துச் சென்று ப‌ழ‌னிய‌ப்பா பிர‌தர்ஸ் ஸ்டாலில் கதைப்புத்த‌க‌ங்க‌ள் வாங்கிக் கொடுத்து (”எல்லாத்தையும் வீட்டுக்குப் போன‌வுட‌னே ப‌டிச்சுத் தீர்த்துடாதே. ஒவ்வொண்னா மெதுவா ப‌டி!”) கேன்டீனில் ஐஸ்க்ரீமும் ம‌சாலா தோசையும் வாங்கிக் கொடுத்த‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.
ப‌ள்ளியிலிருந்து ஒரு முறை சென்றிருந்தோம்; க‌ண்காட்சி திற‌ப்பு விழாவில் சேர்ந்திசை பாடுவதற்காக. "உண்மை அழ‌கு" என்ற பாட‌ல். பின்ன‌ணி இசையோடு பாட‌ல் முழுதும் நினைவிருக்கிற‌து. அப்போது செயின்ட் எப்பாஸ் ப‌ள்ளியில் நட‌ந்த‌து. பிற‌கு ப‌ல‌ ஆண்டுக‌ள் செல்ல‌ இய‌ல‌வில்லை. 2003க்குப் பின் தொடர்ந்து சென்றேன். க‌ட‌ந்த‌ இரு ஆண்டுக‌ளாக‌ மீண்டும் இடைவெளி.

இந்த ஆண்டு ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரின் ப‌டைப்புக்க‌ள் வெளிவ‌ருவ‌தில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். படைப்பாளிகளாகப் பரிணமித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்க‌ள்!
ஒவ்வொருமுறையும் கை நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளோடு தான் திரும்ப‌ வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் தேன் குடத்தினுள் விழுந்து மயங்கிய‌ வண்டு கணக்காய், கடல் போல் குவிந்த புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்து விட்டு வீட்டுக்கு வ‌ந்த‌தும், இவ்வ‌ள‌வு தானா வாங்கினோம் என்று ஏக்க‌ம‌டைவேன். இம்முறை அதை மாற்ற‌ வேண்டும்!

கார்க்கியின் தாய்
இந்த‌ நாவலை ebookகாக‌ ப் ப‌டித்து முடித்து வெகு நாட்க‌ளாகின்ற‌ன‌. ப‌கிர‌த்தான் ‌சமய‌ம் கிடைக்க‌வில்லை. படித்து முடித்த கையோடு ஆங்கிலத்தில் ஒரு பதிவு எழுதினேன். அந்த இளைஞர்களைப் பற்றிப் படிக்கையில் பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் எத்தகைய உலகத்துக்காகப் போராடினார்களோ அது இன்னமும் நிறைவேறவில்லை. ஆனாலும் போராடுவ‌தற்கும் புரட்சிக்குமான‌ இட‌ம் சிறிதும் இல்லாமல் இன்றைய ச‌முதாய‌ம் மழுங்கடிக்கப் ப‌ட்டுள்ள‌தோ என்று ம‌ன‌ம் வெதும்புகிற‌து.
ராதிகா (தாய்), பா.விஜ‌ய் (பாவ ‌ல்) ந‌டிக்க‌ க‌லைஞ‌ர் எழுதிய‌ தாய் காவிய‌ம் திரைப்ப‌ட‌மாக‌ வெளிவ‌ர‌ப்போவ‌தாக‌ இணைய‌ செய்திக‌ள் அறிவிக்கின்ற‌ன‌. பார்ப்போம்!

இன்னொரு புதிய ஆண்டு
Roller coaster ride என்பார்க‌ளே அதைப் போல் தான் இருநத‌து க‌ட‌ந்த‌ ஆண்டு! ப‌ல‌வித‌மான‌ புது அனுப‌வ‌ங்க‌ள். முக்கியமாக என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
நானும் ப‌திவெழுத‌ வ‌ந்து ஓராண்டு நிறைவுறுகிற‌து. இன்னும் எதையும் ஒழுங்காக‌ எழுத வில்லையென்றாலும், த‌மிழ் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும், அற்புத‌மான நட்புகள் கிடைத்ததற்கும் ப‌திவுல‌க‌ம் தான் கார‌ண‌ம். ந‌ன்றி ப்லாக்க‌ர்.காம்!

அனைவ‌ருக்கும் ம‌ன‌ம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!

Sunday, November 29, 2009

வற்றாத கிணறும் அதே போன்ற மனிதர்களும்!


கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளிப்பது போல் ஒரு காட்சி டி.வியில் வந்தது. இது போல் குளித்த அனுபவம் இருக்கிறதா என்று நானும் ஜோவும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம்.
சென்னையில் கோடை வந்தாலே ப்ளாஸ்டிக் குடமும் கையுமாய் அலைந்த காலங்களின் சூடு கூட முன்னொரு காலத்தின் பசுமையான நினைவுகளை உறிஞ்சிவிடவில்லை.

சிறுவயதில் கோடை விடுமுறையில் நாளெல்லாம் புழுதியிலும் மண்ணிலும் ஆசை தீர விளையாடிய பின் அந்தி சாயும் நெரத்தில் வாளி வாளியாய்க் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளித்த அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தோம்.
ஹூம்.. பேசி முடித்து நேஹாவைப் பார்த்த போது தான் உறைத்தது. கிணறு என்பது அவளுக்கெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அரிய பொருளாகி விடுமல்லவா?


கிணறு என்றவுடன் எங்கள் பக்கத்து வீடு தான் நினைவுக்கு வரும். என் விளையாட்டுத் தோழியின் வீடு அது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் சாப்பிடவும் தூங்கவும் தவிர எந்நேரமும் அவர்கள் வீட்டிலேயே தான் இருப்பேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். என் தோழியின் சித்தி பிள்ளைகள் தவிர அத்தை பிள்ளைகளும் விடுமுறை என்றால் வந்து விடுவார்கள். ஒரே விளையாட்டுத் தான். அப்புறம் எனக்கு மட்டும் வீட்டில் கால் தங்குமா என்ன?


அவர்கள் வீட்டில் வெகு காலத்துக்கு (2000 ஆண்டு வரை என்று நினைக்கிறேன்.) மோட்டாரும் குழாய் வசதிகளும் கிடையாது. ஒரே ஒரு கிணறு தான் உண்டு. வாளியால் இறைத்துத் தான் குளிப்பது, துணிதுவைப்பது, பாத்திரம் துலக்குவது, எல்லாமே. கார்ப்பரேஷன் தண்ணீருக்கு மட்டும் பின்னர் ஒரு அடிபம்ப் பொருத்தினார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், தெருவில் ஏனைய வீடுகளில் எல்லாம் மோட்டர் போட்டு அவரவர் கிணறுகளை வற்ற வைத்து விட்டோம். பற்றாக்குறைக்கு போர் போட்டு அதுவும் தண்டமாகத் தான் இருந்தது. ஆனால் இவர்கள் வீட்டுக் கிணறு மட்டும் இறைக்க இறைக்க ஊறும் அமுதசுரபியாக இருந்தது. யார் வந்து கேட்டாலும் தட்டாமல் தண்ணீர் தந்து உதவும் மனமும் அவர்களுக்கு இருந்தது.

கடும்உழைப்பு, எளிமை, ஒற்றுமை, அளவற்ற அன்பு என்று பல அரிய குணங்களின் எடுத்துக்காட்டு மட்டுமல்ல கருவூலமாகத் திகழ்பவர்கள் அந்த வீட்டு அங்கிளும் ஆண்டியும். பெரம்பூரில் ஐசிஎஃப் இல் வேலை பார்த்த அங்கிள் தினமும் ஆறு மணிக்கு வேலைக்குக் கிளம்புவார். அவரை அந்நேரத்துக்கு வேலைக்கு அனுப்பும் வகையில் ஆண்ட்டி எழுந்திருப்பது நான்கு மணிக்கு!

ஓய்வு நேரத்திலும் சும்மா இல்லாமல் கடை கண்ணிக்குப் போய் வருவது, வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு அதைக் கொத்திக் கொண்டிருப்பது, வீட்டில் பழுதடைந்த சாமான்களைத் தானே சரி செய்வது என்று சுறுசுறுப்பாகவே இருப்பார் அந்த அங்கிள். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.

இன்னொரு விஷயம், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சைக்கிள் தான் அவரது வாகனம். அப்புறம் தான் ஒரு டி.வி.எஸ் 50 வாங்கினார்.
பிள்ளைகள் எல்லாரும் சைக்கிள்களை மறந்து ஸ்கூட்டி, கார் என்று மாறி விட்டனர். ஆனாலும் இவர் பக்கத்தில் கடைத்தெருவுக்குப் போக வர, அவர்கள் கை விட்ட லேடி பேர்ட் சைக்கிளைத் தான் எடுத்துச் செல்வார். அந்த எளிமை அவரது தனித்துவம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்த எளிமையைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்.

ஆண்டியும் அன்பு செலுத்துவதில் அலாதியானவர். நான் கல்லூரியில் படித்த் போது செமஸ்டர் லீவுக்கு வந்திருந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பத்து நாட்கள் முன்னதாகவே புறப்பட்டுச் செல்ல வேண்டி வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பலகாரத்தை, முன்கூட்டியே எனக்காகச் செய்து கட்டிக் கொடுத்தார்கள் அனுவும் ஆண்டியும். என்னால் மறக்கவே முடியாத செயல் அது.

என் திருமணத்துக்குப் பின்பு அதே தெருவில் வேறு வீட்டில் ஜோவும் நானும் இருக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன் இரவு பத்து மணிக்கு ஆண்ட்டி வீட்டுக்கு வந்தார். ”காஸ் சிலிண்டர் இருக்காம்மா? தீர்ந்து விட்டது. புக் பண்ணி இரண்டு வாரம் ஆகிறது என்றார்”

அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அப்போது தான் வந்திருந்தது. பழைய சிலிண்டர் தீரவும் எங்களுக்கு இன்னும் நாள் இருந்தது. ஜோவும் அங்கிளும் எடுத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் வைத்து விட்டனர்.

சரியாக நான்கு நாட்களில் ஆண்ட்டியும் அங்கிளும் புது சிலிண்டரொன்றைத் தூக்கிக் கொண்டு வீட்டுக் கதவைத் தட்டினார்கள். பதறிப் போய் அவர்களைக் கடிந்து கொண்டேன். வேண்டிய போது நாங்களே வந்து எடுத்து வந்திருப்போம், இப்போது என்ன அவசரம் என்று.
”சின்னக் குழந்தையை வைத்திருக்கிறாய். திடீரென்று தீர்ந்து போனால் என்ன செய்வாய்” என்றார்கள். மேலும் சமயத்துக்குத் தந்ததாகச் சொல்லி நன்றி சொன்னவர்களை இடைமறித்து ஊருக்கெல்லாம் ஓடோடி உதவும் அவர்களுக்கு அந்தச் சின்ன உதவி செய்ய முடிந்தது எங்களுக்குத் தான் மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது என்றேன்.

இன்னும் எவ்வளவோ எழுதலாம், இது போல் தூய்மையான அன்பினால் நம் மனதில் உயர்ந்தவர்களைப் பற்றி. கையில் தான் வலிமை வேண்டும்!

Tuesday, November 24, 2009

வலி!




”எனக்குக் கண்வலி… என் கண்களைப் பார்க்காதே”
”பார்ப்பேன்! உன் வலி எனக்கும் வரட்டும்.”
சிவந்து வீங்கிய கண்ணில் அப்போது
நீரை விட அதிகமாய்க் காதல் வழிந்ததால்...
பார்க்க முடியவில்லை!

Sunday, November 22, 2009

A slice of life...

அலுவலகத்தில் அநியாயத்துக்கு வேலை. தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கு வேலை பார்க்க வேண்டி இருக்கிறது.

வேலை சுவாரசியமாக இருந்தாலும் சின்ன இடைவெளி கூட இல்லாமல் என்ன இது என்று ஒரு சலிப்பு வருகிறது. வீட்டுக்கு வரும் போது மணி எட்டரை ஆகி விடுகிறது. நல்லவேளை நேஹா இன்னும் ராக்கோழியாக இருப்பது ஒரு வகையில் நிம்மதி தான்! பன்னிரண்டரை வரை அவளோடு விளையாடிய பிறகு ஒரு மணி வாக்கில் தான் தூங்குகிறாள்.

சரி சனி ஞாயிறாவது குழந்தையுடன் முழுநேரமும் இருக்கலாமென்றால் கடந்த இரு வாரங்களாக சனிக்கிழமையும் வேலை வைத்து அழைத்து விட்டார்கள். மற்ற நாட்கள் வேலைக்குப் போகும் போது அழாத நேஹா சனிக்கிழமை அன்று எப்படியோ வித்தியாசத்தை உணர்ந்து முகம் சுணங்கினாள். அது தான் தாங்கவே முடியவில்லை.


நேஹா!

பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அரிய பொக்கிஷமாகவே தான் குழந்தையை ஓராண்டு வரை கருதி வந்தேன். இப்போது தான் அவள் ஒரு ”தனி கேரக்டராக” தனது குறும்புகளாலும், மழலைப் பேச்சுகளாலும் உருவெடுப்பதை நன்றாக உணர்கிறேன்!

விளம்பரங்கள் வந்தால் கண்கொட்டாமல் பார்ப்பதை நிறுத்தி விட்டாள். அதற்குப் பதிலாக விளம்பரத்தின் முதல் ஃப்ரேமிலேயே அடுத்து வரப்போவதைச் சொல்லிவிட்டு நகர்கிறாள்.

ஆனால் பாடல்கள் இன்னும் விரும்பிப் பார்க்கிறாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

மேல் வீட்டுப் பையன் (மூன்று வயது) வந்திருந்தான். பிஸ்கட் தின்று கொண்டிருந்த் நேஹா டப்பாவை அவளே திறந்து நான்கு பிஸ்கட்டுகளை அவன் கையில் கொடுத்தாள். அவன் அம்மா பதறி “அவனுக்கு வயிற்றுப் போக்கு, வேண்டாம் என்று அவனிடமிருந்து வாங்கி என் கையில் கொடுத்து விட்டார்கள்.
அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை. அந்தச் சிறுவன் அல்ல; நேஹா தான். ஒரே ஒரு பிஸ்கட்டையாவது அவன் கையில் கொடுத்த பிறகே அடங்கினாள். யம்மா. முடியலம்மா!

காய் வாங்கச் செல்லும் போது உடன் அழைத்துச் சென்றால் நமக்கு முன் “எவ்ளோ” என்று கேட்டாகிறது.
தக்காளியை எடுத்து ”மம் மம்.. ஆ” என்று நம் வாயில் வைக்கிறாள்! காய்காரர் ஒரு மாதிரி பார்த்தார். ஏதோ நான் தான் ட்ரெய்னிங் கொடுத்தது போல்... நேரம்!

ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ், அவள் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி ராகம் போட்டுச் சொல்கிறாள்.
இது அவளது பாட்டியும் அவளைப் பார்த்துக் கொள்ள வரும் அக்காவும் சொன்னது. ஹூம்.. அது ஒரு சின்ன நெருடல் எனக்கு. முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!

Thursday, November 19, 2009

தீபாவளி - தொடர் பதிவு!

ராஜாராம் அவர்கள் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்து இப்போது மறந்தே போயிருப்பார்.

ஏற்கனவே தீபாவளி பற்றி எழுதி விட்டதால் கொஞ்சம் இடைவெளி விடலாமென்று நினைத்து, பிறகு ரொம்பத் தாமத்மாகி விட்டது! மன்னிக்கவும் ஸார்! உங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி!

1. உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?

தீபா. நேஹாவின் தாய். அன்புக்கு நான் அடிமை! கொஞ்சம் கிறுக்கு.....வேன்னு சொல்ல வந்தேன், ப்ளாக்ல. நீங்க வேற எதுவும் நினைச்சுடாதீங்க!


2. தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

எட்டாவது படிக்கும் போது புஸ்வாணம் வெடித்துக் கை புண்ணானது.


3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில்.

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

It's a serious business affair! துணிக்கடைகளுக்கு, நகைக்கடைகளுக்கு, மற்றும் ஊடகங்களுக்கு!

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கென்று வாங்கவில்லை. புதிது இருந்தது.


6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

கேசரியும் வடையும்.


7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள்?

நாங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றோம். நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்!


9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த நாள் என்று குறிப்பிட்டுச் செய்ததில்லை.

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
நானே ரொம்ப லேட்டு. அதனால் யாரையும் அழைக்கவில்லை!

:-)

Monday, November 16, 2009

வாடா கோமாளி!

ஒரு நாட்டுப்புறப் பாடல்!

வெதை வெதைக்கணும் வெதை வெதைக்கணும் வாடா கோமாளி!
வெதை வெதைச்சா கோழி கிண்டும் போடா நா மாட்டேன்

கோழி கிண்டுனா வேலி போடலாம் வாடா கோமாளி
வேலி போட்டா மேலு வலிக்கும் போடா நா மாட்டேன்

மேலு வலிச்சா வென்னி வெச்சுத் தர்றேன் வாடா கோமாளி
வென்னி வெச்சுக் குளிச்சா வவுறு பசிக்கும் போடா நா மாட்டேன்

வவுறு பசிச்சா சோறு போடறேன் வாடா கோமாளி
சோறு தின்னா விக்கலெடுக்கும் போடா நா மாட்டேன்

விக்கலெடுத்தா தண்ணி தர்றேன் வாடா கோமாளி
தண்ணி குடிச்சா பொறைக்கு ஏறும் போடா நா மாட்டேன்

பொறைக்கு ஏறுனா தலையில தட்டறேன் வாடா கோமாளி
தலையில தட்டுனா செத்துப் போவேன் போடா நா மாட்டேன்
*****************
இது எப்போதோ சிறு வயதில் ஒரு புத்தகத்தில் படித்து அண்ணன் சொல்லிக் கொடுத்த பாட்டு! ரொம்பப் பிடித்துப் போனதால் மறக்கவே இல்லை!

Saturday, November 14, 2009

மழை...பள்ளி...அப்பா!

எல்லோரையும் போல எனக்கும் சிறுவயது முதலே மழையில் நனைய கொள்ளை ஆசை. அதைவிட மழை நீர் தேங்கி இருக்கும் தெருக்களில் காலை அளைந்து கொண்டு வருவதென்றால்... ரொம்ம்ம்ம்ம்ப இஷ்டம்!

ஆனால் நான் குழந்தையாய் இருந்த போது இளம்பிள்ளைகளுக்கு வரும் காச நோய் வந்து படாத பாடு பட்டுப் பிழைத்தேனாம். இரண்டு மாதங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி வந்தது. அப்பாவோ அக்காவோ அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் என் மழை ஆசையெல்லாம் அப்பாவால் நிராசை ஆகிவிடும். மழை வந்தால் பள்ளிக்கு அனுப்புவதில் அப்பா ரொம்ப சிரத்தையுடன் இருப்பார். தப்பித் தவறிக் கூட மழையில் நனைந்து விடாதவாறு ஏற்பாடு செய்துவிடுவார்.

பள்ளி விட்டு வரும் போதாவது மழையில் நனைந்து கொண்டு வரலாம் என்று நினைப்பேன். வழக்கமாகச் செல்லும் ரிக்‌ஷாக்காரர் வராவிட்டால் மற்ற பிள்ளைகளுடன் நனைந்து கொண்டு வரலாம் என்று ஆசையோடு இருப்பேன். ஆனால் அப்பாவோ மோகனைக் குடையுடன் அனுப்பிவிடுவார்.

ஆங்காரமும் அழுகையுமாய் வரும். மோகன் அவர்கள் மிகவும் கண்டிப்பு. குடையை விட்டுக் கொஞ்சம் நகர்ந்தாலும் அதட்டுவார். மீறினால் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அப்பா அடிக்கவே மாட்டார்; ஆனாலும் ரொம்பப் பயம் இருந்தது எங்களுக்கு!

நான்காவது படித்த போது மழைக்காலத்தில் ஒரு நாள்.
மாதத்தேர்வு (தமிழ் என்று நினைக்கிறேன்) முடிந்த மதிய நேரம்.
ரிக்‌ஷாக்காரர் வரவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் மோகனும் வரவில்லை. குடையுடன் என்னை அழைத்துப் போக வந்தது அப்பா!
வராத அப்பா வந்தது சந்தோஷமாக இருந்தாலும், மோகனையாவது அப்படி இப்படி ஏமாற்றி விட்டுக் குட்டைத் தண்ணியில் காலை அளையலாம். அப்பாவாச்சே... வாலைச் சுருட்டிக்கிட்டுப் போக வேண்டியது தான் என்று நினைத்தேன்.

அமைதியாக நடந்து கொண்டிருந்த போது வெள்ளக்காடாக நிரம்பியிருந்த ஒரு தெருவுக்குள் திரும்பவேண்டி வந்தது. பெருமூச்சுடன் அதைப் பார்த்த நான் அப்பா நம்மைத் திருப்பி வேறு பக்கமாகத் தான் அழைத்துப் போகப் போகிறார் என்று நின்று அவர் முகத்தைப் பார்த்தேன்!

என்ன அதிசயம்! என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “தண்ணியில ஜல் ஜல்னு போலாமா” என்று கேட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டார். எனக்குக் குஷி தாங்க முடியவில்லை. ஏன் நிற்கிறேன்? அப்பா மனம் மாறுவதற்குள் காலை வீசி வீசி தண்ணீரில் நடக்கலானேன். தேர்வு எழுதியது பற்றி, பள்ளியில் என்ன நடந்தது பற்றி என்று என்னென்னவோ கேட்டார்; நானும் தண்ணியில் நடக்கும் சந்தோஷத்தில் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து உடை மாற்றிக் கொண்ட பின்னும் வெகு நேரமான பின்னும் சில்லென்ற அந்தத் தண்ணிரின் ஸ்பரிசம் காலிலும் அப்பாவுடன் கும்மாளமடித்துக் கொண்டு வந்த அந்த கணங்கள் மனதையும் நனைத்துக் கொண்டிருந்தன.

கண்டிப்பான அப்பா, ஏராளமான விஷயங்களில் புரிபடாத அப்பா, எத்தனையோ விஷயங்களில் இலகுவாகப் பழக முடியாத அப்பாவாக இருந்தாலும் அன்று ஒரு நாள் என் குழந்தை உள்ளத்தைப் புரிந்து நடந்த அந்தச் சிறிய ஆனால் அரிய செய்கையை என்னால் என்றுமே மறக்க முடியாது.

தொடர் பதிவு என்று போட்டுப் பெயரிட்டு அழைக்கத் தோன்றவில்லை. விருப்பமுள்ளவர்கள் தங்கள் இளம் வயது மழைக்காலத்தில் இது போன்ற மறக்க முடியாத அனுபவங்களைப் பகிருங்களேன். சுவாரசியமாக இருக்கும்!