Monday, December 13, 2010

கந்தர்வன் கதைகள்

கந்தர்வன் என்கிற எழுத்தாளரைப் பற்றி எப்போதோ செம்மலரில் வாசித்ததோடு சரி. அவர் கவிஞர் என்றும் அறிந்திருக்கிறேன். காளை மாடுகளை வசக்கி வண்டிகளில் பூட்டும் வழக்கத்தை விவரிக்கும் ஒரு கதையையும் மனம் பதை பதைக்க வாசித்த ஞாபகம். மற்றபடி அவர் எழுத்துகளை அதிகம் வாசித்ததில்லை.

கந்தர்வன் கதைகள் என்ற பெயரில் அவரது சிறுகதைத் தொகுப்பை வம்சி புக்ஸ் வெளியிட்டு அந்தப் புத்தகமும் ஓராண்டுக்கு மேல் வீட்டிலிருக்கிறது. இப்போது தான் நேரம் கிடைத்தது வாசிக்க.

மிக நாசுக்காக நாத்திகம் பேசும் மங்கலநாதர், சீவன், கிரகசாரம் இவற்றுள் எனக்கு மங்கல்நாதர் கதை மிகவும் பிடித்திருந்தது. இருபது மூட்டை நெல், தூண் தூணாக வாழை இலைக்கட்டுகள் என்று ஊருக்கே சாப்பாடு போட்டு மூத்த மகளுக்குத் திருமணம் நடத்தியவர் திடீரென்று உத்திரகோச மங்கைக் கோயில் மங்கல்நாதருக்குத் தன் குடும்பத்தையே அடிமையாக்கிய கதை.

சவடால் நாம் சாதாரணமாகப் பேருந்துகளில் ரயில்களில் பார்த்து முகம் சுளிக்கும் அல்லது பெருந்தன்மையோடு சகித்துக் கொள்ளும் மனிதர்களின் மறுபக்கத்தைக் காட்டும் கதை.

பங்களாவாசிகளின் தாகம் தீர்க்க இளநீர் கொண்டு வருபவரின் தாகத்தைத் தீர்ப்பது எது? ‍ தனித்தனியாய் தாகம் எதார்த்தத்தை முகத்தில் அறைவது போல் சொல்கிறது.

துண்டு கிராமப்புறப் பண்ணையார்களின் ஆண்டை மனப்பான்மையை, தலித்களுக்கு எதிரான அவர்களது நயவஞ்சகத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறது.

தான் தனித்துவம் மிக்க கதை. மனிதாபிமானத்தின் உன்னதம் எந்த ரூபத்திலும் எங்கு வேண்டுமானாலும் எளிமையுடன் வெளிப்படலாம் என்பதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது.

எங்கெங்கும் அம்மாக்கள், இரண்டாவது ஷிப்ட் ஆகியவை பெண்களின் வேதனைகளைப் பேசும் கதைகள். இரண்டாவது ஷிப்ட் எழுதியது ஓர் ஆண் தான் என்றால் நம்ப முடியவில்லை.

உலகம் முழுதும் பெண்களுக்கான கொடுமைகளில் வேறுபாடு எதுவும் இல்லை. அவரவர் தேசத்துக் கலாசாரத்துக்கேற்ப அவற்றை அவர்கள் அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதை எங்கெங்கும் அம்மாக்கள் கதை சொல்கிறது. வெள்ளைக்காரப் பெண்மணியுடன் நம்மூர்காரரின் ஒருவரின் உரையாடலில் கதை போகிறது.

மொத்தம் 61 கதைகள். முழுதும் வாசித்து முடிக்கவில்லை. படித்த‌தையே திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் எழுத்து. தேவையற்ற வார்த்தை ஜாலங்கள் இல்லை. நீண்ட வர்ணனைகள் இல்லாமலேயே காட்சிகள் கண்முன் விரிகின்றன. சிக்கலான வட்டார வழக்குச் சொலவடைகள் இல்லாமலே மண்வாசனை மணக்கிறது. வெகு இயல்பான உரையாடல்களிலேயே கதை மாந்தர் அழுத்தமாக மனதில் நிற்கிறார்கள்.

முன்னுரையாகப் எழுத்தாளருக்கும் பதிப்பாசிரியர் பவா செல்லதுரை அவர்களுக்கும் இடையிலான உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. சுவாரசியமாகவும் எழுத்தாளரைப் பற்றிய புரிதலுக்கு மேலும் உதவுவதாகவும் அமைந்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
இந்த அரிய படைப்பாளி நம்முட்ன் இப்பொது இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் இவரைப் பற்றிச் சொல்வது:
"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்."

"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்."

படித்துப் பாருங்கள், இந்த வார்த்தைகளுட‌ன உடன்படுவது நிச்சயம்.

கந்தர்வன் கதைகள்
வம்சி புக்ஸ்
டி.எம். சாரோன்,
திருவண்ணாமலை ‍ 606601
தொ.பே. 04175 ‍ 238826
விலை: ரூ: 300

Saturday, December 11, 2010

பாரதீ! உன் நினைவாக...



கிழவனுடைய 
அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், 
இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும்,
தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்த் தின்ன தகாதென்று
மிடிமையும் அச்சமு
ம் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்வது நிறைவு பெறும்வணம்

துன்ப மினில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது தீயது நாமறியோம்! அன்னைநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

ண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீசித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ
விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய் மின்மினி கொள்வாரோ? 
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?  

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? 
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  
வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவாரோ? 
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ?

Thursday, December 9, 2010

சைக்கிள்...


எனக்கு மிகவும் பிடித்த வாகனம் என்றால் யோசிக்காமல் சொல்வேன், சைக்கிள் தான்.
சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி, செலவும் இல்லை, சுற்றுச் சூழல் மாசும் இல்லை. இருந்தும் இந்த அழகிய வாகனத்தை நாம் புறக்கணிப்பது ஏன்? பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் டூ வீலர் வாங்கித் தருகிறார்கள். இது சரியான போக்காக எனக்குப் படவில்லை.

எனக்குச் சைக்கிள் ஆசை வந்ததே பள்ளியில் பெரிய வகுப்புப் பெண்கள் ஒயிலாக ஏறி அமர்ந்து வருவதைப் பார்த்துத் தான். அதுவும் துப்பட்டாவைப் பின்புறம் கவனமாக முடிச்சிட்டு, ஸ்டாண்டைத் தள்ளி விட்டு ரன்னிங்கில் ஏறும் அக்காக்களைக் கண் கொட்டாமல் பார்ப்பேன்.முதன் முதலில் சைக்கிள் கற்றுக் கொண்டது அண்ணன் வைத்திருந்த சின்ன பைசைக்கிளில்.

நான் ஆறாவது வரை ரிக்ஷாவில் தான் பள்ளிக்கூடம் போனேன். ஏழாவது வரும் போது 'சே, இன்னுமா இந்த ரிகஷாவில் சின்னப் பிள்ளைகளுடன் போவது? எப்படியாவது இந்த வருடத்துக்குள் சைக்கிள் வாங்கி விட வேண்டும்' என்ற எண்ணத்தில், ரிக்ஷாவில் போகமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் ஏழாவதும் எட்டாவதும் நடந்தே சென்றேன். ஒன்பதாம் வகுப்பு வந்த போது தான் அப்பாவுக்கு எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க மனம் வந்தது. அப்போது தான் நான் ஓரளவு ஒழுங்காக ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.

சைக்கிள் ஓட்டப் பழகிய காலங்கள்...ஆஹா! எட்டாவது லீவில் எனக்கும் பக்கத்து வீட்டு அனுவுக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலையே வாடகை சைக்கிள் எடுக்க‌ச் செல்வது தான். இரண்டு ரூபாய் கொடுத்து "அனு, தீபா" என்று பெயர் சொல்வாள். (எப்போதும் அவள் பெயரைத் தான் முதலில் சொல்வாள். டாமினேட்டிங் ஃப்ரென்ட்!)

சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும்.
பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது. போனால் போகிறதென்று கடைசி பத்து நிமிடங்கள் அவளது தம்பிகளுக்குக் கொடுப்போம். அவர்களிட்மிருந்து சைக்கிளைப் பிடுங்கிக் கடைக்குக் கொண்டு செல்வது பெரும்பாடு.

சைக்கிளின் மீது தீராத மோகம் வந்ததற்கு இன்னொரு காரணம் நூலகம். அப்போதெல்லாம் உலகிலேயே நீ மிகவும் விரும்பும் பொருள் என்னவென்று கேட்டால் அசோக் பில்லர் பப்ளிக் லைபரரியில் ஒரு மெம்பர்ஷிப் கார்டும் ஒரு சைக்கிளும் தான் என்று சொல்லி இருப்பேன். சைக்கிளில் லைப்ரரிக்குச் சென்று கேரியர் கொள்ளாமல் புத்தகங்கள் அள்ளி வருவது தான் என் கனவு. ஆனால் அந்த மெம்பர்ஷிப் கார்டு வேண்டுமென்றால் பள்ளித் தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும். போய்க் கேட்டிருந்தால் "அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம், பாடங்களைப் படிக்கிறதை விட்டுட்டு லைப்ரரி கார்ட் எதுக்கு?" என்று கடி வாங்குவது நிச்சயம் என்பதால் கேட்கத் தைரியம் வரவே இல்லை.

ஆசைகளில் ஒன்று நிறைவேறியது. ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் சைக்கிள் வந்தது. ஆனால் வாடகைக் கடையில் எடுத்து ஓட்டியதெல்லாம் ட‌யர் பெரிதாகவும் உயரம் கம்மியாகவும் இருந்த‌ ஹீரோ சைக்கிள்கள். புதிதாக வாங்கிய பி.எஸ்.ஏ எஸ் எல் ஆர் உயரமாகவும் டயர்கள் மெலிதாகவும் கொஞ்சம் பயமுறுத்தியது. அதனால் பேலன்ஸ் தவறி விழுந்து வாரியது, மெயின் ரோட்டில் புத்தகப்பை கேரியரிலிருந்து நழுவி ஓடிச் சென்று எடுத்தது என்று காமெடிகள் ஏராளம் அரங்கேறின.

ஆனால் ஒரு சில வருடங்களிலேயே பெல்லும் இல்லாமல் ப்ரேக்கும் இல்லாமல் துரைசாமி சப்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓட்டும் அளவுக்குக் கேடி ஆகி விட்டேன்! டபிள்ஸ் அடிக்கவும் தான்.

அந்தச் சைக்கிளைத் தான் கல்லூரிக்கும் கொண்டு சென்றேன். கோவை மாநகர வீதிகளிலும் கல்லூரி கேம்பஸிலும் ஆனந்தமாய் உலா வந்தது என் அருமை பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆரில் தான்.

கல்லூரி விட்டு வரும் போது யாரோ கேட்டார்கள் என்று யோசனையில்லாமல் அதை முன்னூறு ரூபாய்க்கு விற்று விட்டு வந்து விட்டேன். (அது இருந்த நிலைமைக்கு அது நல்ல பேரம் தான்!)

வீட்டுக்கு வந்ததும் வேலை தேடும் படலங்களில் முக்கிய அம்சங்களான கம்ப்யூட்டர் க்ளாஸ், ப்ரௌசிங் சென்டர், இவற்றுக்குப் போய் வருவதற்காக வாகனம் தேவைப்பட்டது. வழக்கமாக இந்தக் காலகட்டத்திலாவது சைக்கிளிலிருந்து பலரும் ஸ்கூட்டி அல்லது கைனடிக் ஹோண்டாவுக்கு மாறுவார்கள். என் தோழிகளில் பலரும் கல்லூரிப் பருவத்திலேயே அவற்றுக்கு மாறி இருந்தார்கள். அனு சைக்கிளை விட்டொழித்து டிவிஎஸ் 50 வைத்திருந்தாள் அப்போது. ஆனால் நான் சைக்கிளே வேண்டுமென்று கேட்டேன். ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது என்பதும், பெட்ரோல் செலவுக்கு அப்பாவைத் தொந்தரவு செய்யப் பிடிக்கவில்லை என்பதும் காரணம்.

மீண்டும் ஒரு சைக்கிளே வாங்கினேன். (செகன்ட் ஹான்ட் என்றாலும் நன்றாகவே இருந்தது.)

இந்தச் சைக்கிளில் தான் என் முதல் வேலைக்குச் சென்றது. வீட்டுக்கு மிக அருகிலேயே அலுவலகம் இருந்ததால் பஸ், ஆட்டோ, நடை என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல் சைக்கிளில் சென்றேன். ஆனால் அதே தொலைவில் இருந்து வந்த என் மற்ற அலுவலகத் தோழிகள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தும் கூட அதில் வரக் கூச்சப்பட்டது ஏனென்று எனக்குப் புரியவே இல்லை.

அனுவின் தம்பி (அப்போது கல்லூரி மாணவனாகி இருந்தான்) நான் சைக்கிளில் கிளம்பும் போதெல்லாம் "அய்யோ தீபா, ஏன் இப்படி தம்பி மானத்த வாங்கறே. ஆட்டோல போகக் கூடாதா" என்று கிண்டல் செய்வான். சிரித்து விட்டுச் சொல்வேன். "டேய், உங்கப்பா ரிட்டையராகற வரைக்கும் அதோ நிக்குதே அந்த சைக்கிளில் தானேடா 35 கிலோமீட்டர் ஒட்டிட்டு வேலைக்குப் போனார்? எனக்கு சைக்கிள்ல போறது பெருமையாத் தான் இருக்கு." அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு முறை சிக்னலில் நிற்கும் போது, கேரியரில் வைத்திருந்த என் பர்ஸை எவனோ (அல்லது எவளோ) அடித்து விட்டார்கள். அதனால் அப்பா என் சைக்கிளுக்குப் பக்கவாட்டில் பூட்டுப் போட்ட ஒரு பெட்டி பொருத்தித் தந்தார். இது இன்னும் கேலிப் பேச்சுகளுக்கு வழி வகுத்தது. "டப்பா சைக்கிள்!" நான் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே.
விபத்து ஒன்றுக்குள்ளாகி அந்தச் சைக்கிள் நசுங்கிப் போகும் வரை அதில் தான் அலுவலகம் சென்று வந்தேன்.

அலுவலகத்துக்கு மட்டுமல்ல, டி.நகரில் ஷாப்பிங் செய்ய, துரைசாமி சப்வேக்கு மேலே இருந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் அம்மாவுக்கு மருந்து வாங்கி வர, தண்ணி டாங்கிலிருந்து கயிறுகட்டிக் குடங்கள் எடுத்து வர என்று எல்லாவற்றுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது சைக்கிள் தான். அது நொறுங்கிய போது மிகவும் வேதனைப்பட்டேன்.

சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சைக்கிள் வாங்கினேன்; அது வீம்புக்காக. ஜோவை நேசிக்கத் தொடங்கிய காலத்தில் அவன் சொன்னான், "நான் பைக் வாங்கும் போதே ஸாரி கார்ட் எல்லாம் வெச்சு வாங்கினேன். என்னிக்காவது நீ உட்காருவேன்னு." என்று. ஏனோ இது சந்தோஷம் அளித்தாலும், 'பைக்கின் பின்னாடி உட்கார்வது' என்பது ஏனோ என் கௌரவத்துக்கு இழுக்காகத் தோன்றியத.

அடுத்த சில நாட்களிலேயே ஒரு புத்தம்புதிய லேடிபேர்ட் சைக்கிள் வாங்கினேன். அதிலேயே அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தேன். ஜோவுக்குச் செம கடுப்பு. ரொம்பக் கோபமாக இருந்தான், சைக்கிள்லே வராதே என்று கெஞ்சவும் ஆரம்பித்தான்.

சில மாதங்களுக்குள் இருவருக்கும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துப் பிரிந்தவுடன், சைக்கிளுக்கு வேலையில்லாமல் போனது. (பைக்குக்கு அதிகமாக வேலை வந்தது!)
அவசர வாழ்க்கைக்கு உதவும் வகையில் இப்போது ஸ்கூட்டி இருந்தாலும் சைக்கிள் மீதிருந்த ஆசையும் மதிப்பும் என்றுமே போகாது.

Friday, November 12, 2010

மாமாவின் பிறந்தநாள் விருந்து!

நான் ஒன்பதாவது படிக்கும் போது எங்கள் பள்ளியில் நடந்த ஒரு குழந்தைகள் தினத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. ஆம், வித்தியாசம் தான். வழக்கமாக குழந்தைகள் தினமென்றால், விடுமுறை இருக்கும். முதல் நாளே மூன்று மணிக்கு மைதானத்தில் கூடுவோம். பெரிய வகுப்பு பிள்ளைகள் யாரேனும் நேருவைப் பற்றி ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து மைக்கின் முன் ஒப்பிப்பார்கள். மூன்று நான்கு சமர்த்துப் பெண்கள் சேர்ந்திசை பாடுவார்கள். பின்பு தலைமை ஆசிரியையின் உரையுடன் இனிப்புகள் வழங்கப்பட்டு, ஜனகண மண பாடி முடித்து கேட் திறக்கப்பட்டவுடன் "ஹேப்பி சில்ரன்ஸ் டே, ஹேப்பி சில்ரன்ஸ் டே" என்று கத்தியபடி வெளியே ஓடிவிடுவோம்.

ஆனால் மேற்சொன்ன வருடம் எங்கள் பள்ளியில் "ஏழைகளுக்கு உணவளிக்கும் விழாவாக" நடத்த ஆசைப்பட்டார் எங்கள் பள்ளித் தாளாளர். அதற்கு Poor feeding என்று பெயரும் வழங்கி வந்தது. அதற்குக் காரணம் எங்களுக்குப் பின்னாளில் தான் புரிந்தது. தாளாளரின் மகள் தான் பள்ளியை நிர்வகித்து வந்தார். அவர் அந்த ஆண்டோடு வெளிநாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கை தொடங்கும் திட்டத்திலிருந்ததால் போகும் முன் ஏதாவது 'நல்ல காரியம்' செய்யவோ அல்லது கிடைத்த நல்ல வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ இதைச் செய்ய முன்வந்திருக்கிறார் என்பது.

முதல் நாள் மாலை, ஒன்பதாவது பத்தாவது படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் சிலருடன் அருகில் இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்றோம்.
அங்கு ஒவ்வொரு குடிசையாகச் சென்று குழந்தைகள் இருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களைக் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்.

பள்ளியை ஒட்டியே இருந்தாலும் அந்தக் குடிசைப் பகுதிக்குள் அதுவரை நாங்கள் சென்றதே இல்லை. சொல்லவே வேண்டாம் மழைக்காலத்தில் சென்னையில் அப்படிப்பட்ட பகுதிகள் எப்படி இருக்குமென்று.
வெள்ளை ஷூக்கள் அழுக்காகிறதே என்ற பெருங்கவலையுடனும் ஒரு வித அசூசையுடனும் சென்று குழந்தைகளை அழைத்தோம்.

அங்கிருப்பவர்களிடம் நாங்கள் பேசியது அதை விடக் கொடுமையான ஜோக்.

வயதான கிழவி ஒருவர் குடிசையில்:
"எங்க ஸ்கூல்ல குழந்தைகள் தினவிழா. உங்க வீட்டுக் குழந்தைகளை அனுப்பி வைங்க."

"குழந்தைகள் தினம்னா?"

"நேரு பிறந்த நாள்."

"நேருவா, ....ஆங்! சரி சரி."

"வரோங்க..."

"சரி, அவருக்கு எப்போ ஓட்டுப் போடனும்?"

ஙேஏஏஏஏஏஎ!!!

சில குடிசைகளில் படித்த இளைஞர்கள் இருந்தார்கள்.

"சில்ரன்ஸ் டேவாப்பா, கண்டிப்பா அனுப்பி வைக்கிறோம்" என்று வறுமையில் இருந்தாலும், அறிவிலும் நாகரிகத்திலும் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்று காட்டிக் கொள்ள முனைந்த அவர்களிடம் பேசும் போது அந்தப் "புவர் ஃஃபீடிங்" என்ற வார்த்தை ஏனோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

முதலில் சந்தித்த அந்த மூதாட்டியைப் போல் வெகுளித்தனமாய்க் கேள்வி கேட்ட பெரியவர்களையும் குழந்தைகளையும் அதட்டி அடக்குவதையும் அவர்களுக்கு நேரு, குழந்தைகள் தினம் ஆகிய ஆகப் பெரும் விஷயங்களை விளக்கும் பொறுப்பையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தோம். ஆம், அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகளுக்குத் தங்கள் நேரு மாமாவைத் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாளும் வந்தது. எல்லோருக்கும் உணவு பரிமாறுவது எங்கள் வேலை தான். இரண்டு இட்லி, ஒரு வடை, சட்னி, சாம்பார், ஒரு வாழைப்பழம். இது தான் மெனு. இட்லி இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் பரிமாறக் கூடாது என்றும் சட்னி சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றலாம் என்றும் எங்களுக்கு அறிவுரைக்கப்பட்டது. பிறகு கூட வந்த பெரியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் வைபவம் ஆகியவை புகைப்படப் பதிவுடன் இனிதே நடந்தேறியது. (பள்ளி ஆண்டிறுதி அறிக்கையில் இவை அனைத்தும் பெருமையோடு வாசிக்கப்பட்டது. ) இவ்வாறாகத் தங்கள் உள்ளம் கவர்ந்த நேருமாமாவின் பிறந்த நாளை அக்குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வீடு திரும்பினர்.

Thursday, November 4, 2010

தீபாவளி!

தீபாவ‌ளி என்றாலே சிறு வ‌ய‌து முத‌ல் தோன்றுவ‌து... அதிக‌ம் எதிர்பார்க்க‌வைத்து ஏமாற்றும் ப‌ண்டிகை என்ப‌து தான்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ப‌ள்ளியில் தோழிக‌ளைக் க‌ட்டிய‌ணைத்து வாழ்த்துக்க‌ள் ப‌ரிமாறிக் கொள்ளும் போதும், க‌ரும்ப‌ல‌கையில் "ஹாப்பி தீபாவ‌ளி" எழுதி அழ‌க‌ழ‌காய்ப் ப‌ட‌ம் வ‌ரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வ‌ழ‌க்க‌மாய்ப் ப‌ருப்பும் புளியும் கொதிக்கும் சமைய‌ல‌றை ப‌ல‌கார‌ங்க‌ளும் எண்ணெய் ஸ்ட‌வ்வுமாய்ப் புதுக்கோல‌ம் கொள்ள, அம்மாவுக்கு உத‌வும் போது பெருமித‌ம் பொங்கும். வாங்கிய‌ ஒரே புத்தாடையைப் ப‌த்து த‌ட‌வை திற‌ந்து பார்க்கும் போது ம‌ன‌ம் புல்ல‌ரிக்கும். டமால் டுமீல் வெடிச்ச‌த்த‌ங்க‌ளுட‌ன் பொழுது விடிவ‌த‌ற்க்குள் ஏனோ ப‌ண்டிகையின் மொத்த‌ க‌ளையும் வ‌டிந்து விடும்.

அதான் தீபாவ‌ளி வ‌ந்துடுச்சே..! இனி போக‌த் தானே போகுது என்று! எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர‌ என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)

அக்காவும் அங்கிளும் வ‌ந்திருந்த‌ அவ‌ர்க‌ளின் த‌லை தீபாவ‌ளி தான் நாங்கள் மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌க் கொண்டாடிய‌ தீபாவ‌ளி. சிவ‌ப்பு நிற‌த்தில் என‌க்கு ஒரு "கீதாஞ்ச‌லி ட்ரெஸ்" வாங்கி வ‌ந்திருந்தார்க‌ள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்க‌ள் வ‌ரை அதை ஆசையாக‌ப் போட்டுக் கொண்டிருந்தேன்.

அத‌ற்க‌டுத்த‌ ஆண்டுகள் அவ‌ர்க‌ள் வ‌ர‌வில்லை என்ப‌தாலேயே சுர‌த்திழ‌ந்த‌து. க‌ல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு த‌விர‌ தீபாவ‌ளிக்கு வீட்டுக்கே வ‌ர‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ தீபாவ‌ளிக்கு அடுத்த‌ நாள் செம‌ஸ்ட‌ர் ப்ராக்டிக‌ல் வைத்திருப்பார்க‌ள். அத‌னால் ப‌க்க‌த்து ஊர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விடுதியிலேயே தீபாவ‌ளியைக் க‌ழித்தோம். அதுவும் ஒரு தினுசாக‌ ந‌ன்றாகத்தா‌ன் இருந்த‌து. இறுதியாண்டு டே ஸ்கால‌ர்ஸ் வீடுக‌ளுக்குச் சென்றோம்.

வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எந்த‌ப் ப‌ண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாக‌த் தெரிய‌வில்லை. தீபாவ‌ளிக்கென்று ஆட‌ம்ப‌ர‌மாக‌ ஆடைக‌ள் வாங்குவ‌தும் அற‌வே பிடிக்காத‌ ஒன்றாகி விட்ட‌து. புதிதாக‌ ஏதாவ‌து அணியப் பிடிக்கும்; அது வ‌ழக்க‌மாக‌ அலுவ‌ல‌க‌த்துக்கு அணிகிறாற் போல் உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி. "இதுவா உன் தீபாவ‌ளி ட்ரெஸ்" என்ற‌ கேள்விக்குப் புனன‌கைப்ப‌து வெகு நாட்களுக்கு முன்பே ப‌ழ்க்க‌மாகி விட்ட‌து. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்திலிருந்து புத்த‌கங்கள் வாங்கி வந்து நிம்ம‌தியாக‌ நாள் பூராவும் ப‌டித்துக் க‌ழித்த‌ தீபாவ‌ளிக‌ள் உண்டு.
காசு கொடுத்துப் ப‌ட்டாசு வாங்கிப் ப‌ழ‌க்க‌மே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் ந‌ண்ப‌ர் தீபாவ‌ளிக்கு ஒரு வார‌ம் முன்பே பெரிய‌ ப‌ட்டாசுப் பொட்ட‌ல‌ம் ஒன்றை அன்புட‌ன் அனுப்பி விடுவார். "ப‌ட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வய‌தில் அவ‌ரை அழைப்போம்.நாங்க‌ள் மட்டுமே வெடித்துத் தீருவ‌தில்லை அது. வீட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் அக்க‌ம் ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்தும் தீர்க்க‌ வேண்டியிருக்கும். வெடிச்ச‌த்த‌ம் என‌க்குப் பிடிக்காது, வெடி வெடிக்க‌வும் ப‌யம்! ஆனால் வாண‌ங்க‌ளும் ம‌த்தாப்புக்க‌ளும் மிக‌வும் பிடிக்கும். சில‌ ஆண்டுக‌ளாக‌ அந்த‌ ஆர்வ‌மும் அற்றுப் போய் விட்ட‌து.

"பண்டிகையை வரவேற்க" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப‌ண்டிகைகள் அழகாக அமைதியாக‌ வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.

ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிம‌ருந்தின் வாடையில் க‌ருகும் பிஞ்சுகளும் ப‌லியாகும் ச‌கோத‌ர‌ர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.
ப‌ட்டாசுக‌ளையே மொத்த‌மாக‌த் த‌டை செய்ய‌ வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், ம‌த்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழ‌ந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவ‌து ச‌ரியா த‌வ‌றா என்று புரிய‌வில்லை. ஆனால் அப்ப‌டித் தானே நுழைகிற‌து ஒவ்வொரு வீட்டிலும் தீபாவ‌ளி?

Sunday, October 24, 2010

என்ன கொடுமை ஸார் இது?

http://www.zeenews.com/news662852.html

இந்துக்கள் நம்புவதாலேயே ராமர் பிறந்த இடமென்று அறிவித்தது.
இப்போது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று பயந்து வரதட்சணை கொடுத்தால் அது குற்றமல்ல என்கிறது. இதில் எது மிகப்பெரிய அபத்தம் என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல.
இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆவது? யோசித்துப் பார்க்கலாமா?

1. கொலை மிரட்டலுக்குப் பணிந்து லஞ்சம் கொடுக்கலாம்.

2. ஆட்டோ அனுப்புவேன் என்று அச்சுறுத்தினால் கஞ்சா கடத்தலாம்

3. அட, உன் பிள்ளைக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது என்று பயமுறுத்தினால் ஊழலுக்குத் துணை போகலாம்.

இப்ப‌டி அடுக்கிக் கொண்டே போக‌லாமே?

வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தும் வாங்குவ‌தும் குற்ற‌ம் என்ற‌ ச‌ட்டமே எழுத்தளவில் தான் இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கே நமது பலவீனமான சமுதாயத்தால் முடியவில்லை. ஏற்கென‌வே ஆயிர‌ம் ஓட்டை உடைச‌ல்க‌ள் இருக்கும் ச‌ட்ட‌த்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது?