Monday, June 29, 2009

அம்மா எழுதிய பாட்டு!

ஆரா அமுதே அருமருந்தே

அம்பிகையே அருள் மீனாட்சி

காரார் குழலி கருங்கண்ணி

களி நடமிடுவாய் என் மனதில்!


சீரார் பொன்னே சிறப்பே புகழே

சிந்தை இனிக்கும் சிவசக்தி

பேரார் பெரியோர் போற்றும் அழகி

எழில் நடமிடுவாய் என் மனதில்!


தேனே பாலே கற்கண்டே

திகட்டாச் சுவையே திரவியமே

மானே மணியே மரகதமே

மகிழ் நடமிடுவாய் என் மனதில்!

வானே வயிரக் குன்றே ஒளியே

வளர் புகழுடையாய் மீனாட்சி

கோனே கொடியே கோபுர விளக்கே

குதி நடமிடுவாய் என் மனதில்!


பூவே பூவின் மணமே பொறையே

புகழ் வளமுடையாய் மீனாட்சி

தாயே சேயே தவழ்வெண் ணிலவே

தனி நடமிடுவாய் என் மனதில்!


இது என் அம்மா நான் குழந்தையாக இருந்த போது என்னைத் தொட்டிலில் இட்டுப் பாடிய பாடல். அவர்களே இயற்றியது. நேஹா வயிற்றில் இருக்கும் போது இப்பாடல் வரிகளைக் கேட்டு எழுதிக் கொண்டேன். அவள் பிறந்தது முதல் தூங்க வைக்க இந்தப் பாடல் தான் அதிகமாகப் பாடுவது.

மிக எளிய வார்த்தைகள் தான். ஆனால் நானும் இளவயதில் கேட்டுக் கண்ணயர்ந்த பாடல் என்பதாலோ, அந்த வார்த்தைகளில் ஒரு இனம் புரியாத மன அமைதி கிட்டுவதினாலோ தெரியாது, நேஹா இதன் மூன்றாவது சரணத்துக்குள் சொக்கி விழுந்து விடுவாள்!

அம்மா ரொம்ப் சென்டிமென்டல் எல்லாம் கிடையாது. ஆனால் சில மாதங்களுக்கு முன் என் வீட்டில் வந்து தங்கி இருந்த போது நான் இப்பாடலைப் பாடி நேஹாவைத் தூங்க வைப்பது பார்த்து அவர்கள் முகத்தில் தெரிந்த பூரிப்பு! ரொம்ப ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தார்கள்.


கிட்டத் தட்ட ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற பழைய பாட்டின் மெட்டில் பாடவேண்டும். கொஞ்சம் மெட்டு இடிக்கும் போது உங்கள் வசதிக்கேற்ப வார்த்தைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். :-)

Thursday, June 25, 2009

ராஜாங்கம் முடிந்தது

டிஸ்க்லெய்மர்: இது சாதத் ஹாஸன் மாண்டோவின் இன்னொரு சிறுகதையின் தமிழாக்கம்.
*****************

ராஜாங்கம் முடிந்தது

ஃபோன் மணியடித்தது. மன்மோகன் எடுத்தான். “ஹலோ 44457”.

“ஸாரி, ராங் நம்பர்” - என்றது ஒரு பெண் குரல்.

ரிசீவரை வைத்து விட்டுப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தான் மன்மோகன்.
அதை ஏற்கனவே இருபது முறையாவது படித்திருப்பான். அப்படி ஒன்றும் விசேஷமில்லை அதில்.
அந்த அறையிலிருந்த ஒரே புத்தகம் அது தான். அதிலும் கடைசிப் பக்கங்களைக் காணோம்.

ஒரு வாரமாக இந்த அலுவலக அறையில் மன்மோகன் தனியாகத் தான் இருக்கிறான். வியாபார நிமித்தம் வெளியூர் சென்றிருந்த அவனது நண்பன் ஒருவனுக்குச் சொந்தமானது இந்த அறை.

தான் ஊரில் இல்லாத போது இம்மாநகரின் ஆயிரக்கணக்கான ப்ளாட்ஃபார்ம் வாசிகளில் ஒருவனான மன்மோகனை அறையில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி அழைத்திருந்தான்.

மன்மோகன் பெரும்பாலும் அறையிலேயே அடைந்து கிடந்தான். அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊதியத்துக்காகச் செய்யும் எல்லாவகை வேலைகளையும் அவன் வெறுத்தான். அவன் மட்டும் முயன்றிருந்தால் ஏதாவது ஒரு சினிமாக் கம்பெனியில் இயக்குநராக இருக்கலாம், முன்பு இருந்தமாதிரி. ஆனால் அவனுக்கு மீண்டும் அடிமையாகும் எண்ணம் இல்லை. அவன் அமைதியானவன்; இனிமையானவன்; யாருக்கும் தீங்கு எண்ணாதவன். அவனுக்கென்று சொந்தச் செலவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் காலையில் ஒரு கப் டீயும் இரண்டு ரொட்டிகளும். மதியம் கொஞ்சம் கூட்டுடன் இரண்டு ரொட்டிகளும் ஒரு பாக்கெட்
சிகரெட்டுகளும் தான். அதிர்ஷ்டவசமாக இவற்றை மனமுவந்து அளிக்க அவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர்.

மன்மோகனுக்குக் குடும்பமோ உறவினரோ யாரும் கிடையாது. சமயத்தில் நாட்கணக்கில் கூடச் சாப்பாடு இல்லாமல் கிடப்பான். அவன் நண்பர்களுக்குக் கூட அவ்னைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், அவன் சிறுவனாக இருந்தபோதே வீட்டை விட்டு ஓடி வந்து பம்பாயின் நடைபாதைகளிலேயே வளர்ந்தவன் என்பது தான்.
அவன் வாழ்வில் இல்லாதது ஒன்றே ஒன்று தான் - பெண்கள்.

அவன் சொல்வதுண்டு, “ஒரு பெண் என்னைக் காதலித்தால் போதும். என் வாழ்வே மாறி விடும்.”
அவன் நண்பர்கள் உடனே அவனைக் கேலி செய்வர், “ அப்போ கூட நீ வேலை செய்ய மாட்டியே”
”அப்படி ஒன்று மட்டும் நிகழ்ந்தால் எப்படி உழைக்கிறேன் என்று பாருங்கள்”

“அப்போ நீ ஏன் யாரையாவது காதலிக்கக் கூடாது?”

“ஒரு ஆண் வலிந்து போய்த் தேடுவது எப்படிக் காதலாக இருக்க முடியும்? ஒரு பெண் அவளாக என்னை விரும்ப வேண்டும்”

மதியம் ஆகிவிட்டது. உணவு வேளையும் வந்தது. திடீரென்று தொலைபேசி மணியடித்தது.

“ஹலோ 44457”

”44457?” - ஒரு பெண் குரல்.

“ஆம், சரி தான்” என்றான் மன்மோகன்.

“யார் நீங்கள்” - அந்தக் குரல் கேட்டது.

“நான் மன்மோகன்”

எதிர் முனையில் பதிலில்லை.

“நீங்கள் யாரோட பேச விரும்பறீங்க” அவன் கேட்டான்.

“உங்களோட தான்” என்றது அந்தக் குரல்.

“என்னோடயா?”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா”

“ஐயோ, அப்படி ஒண்ணும் இல்லை”

“உங்கள் பெயர் என்ன சொன்னீங்க, மதன் மோகனா?”

“இல்ல, மன்மோகன்”

“மன்மோகன்?”

மீண்டும் அமைதி.

“என்னோட பேச விரும்பறதாச் சொன்னீங்க” - அவன் சொன்னான்.

“ஆமாம்”

“அப்போ பேசுங்க”

“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. நீங்க ஏதாவது சொல்லுங்களேன்.”

“ரொம்ப நல்லது. நான் ஏற்கனவே என் பெயரைச் சொல்லிட்டேன். தற்காலிகமா இந்த அலுவலகம் தான் என் வீடு. வழக்கமா இரவில் நடைபாதையில தான் தூங்குவேன். ஆனா இந்த ஒரு வாரமா இந்தப் பெரிய ஆஃபிஸ் மேஜை மேல தூங்குறேன்.”

”நடைபாதையில கொசுக் கடிக்காம இருக்க என்ன பண்ணுவீங்க. கொசுவலை பயன்படுத்துவீங்களா?”

மன்மோகன் சிரித்தான். “இதுக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னே நான் ஒரு விஷயம் தெளிவு படுத்திடறேன். நான் பொய் சொல்றதில்ல. நான் வருஷக்கணக்கா ப்ளாட்ஃபார்ம் தான். இந்த
ஆஃபிஸ் இப்போ இருக்கறதாலே இங்கே பொழுதைப் போக்கறேன்.”

“எப்படி?”

“இதோ இங்க ஒரு புத்தகம் இருக்கு, கடைசில கொஞ்சம் பக்கங்கள் இல்லாம. ஆனா நான் இதை ஒரு இருபது தடவை படிச்சிட்டேன். என்னைக்காவது மீதிப் பக்கங்கள் கிடைக்கறப்போ
தெரிஞ்சிக்குவேன், அந்தக் காதலர்கள் ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லியான்னு.”

“ரொம்ப சுவாரசியமான ஆளாத் தெரியறீங்க” என்றது அந்தக் குரல்.

“சும்மா சொல்லாதீங்க”

“நீங்க என்ன பண்றீங்க?”

“பண்றேன்னா?”

“அதாவது என்ன தொழில் உங்களுக்கு?”

“தொழிலா? ஒண்ணுமில்ல. வேலையே இல்லாதவனுக்கு என்ன தொழில் இருக்கப் போகுது?
ஆனா உங்க கேள்விக்குப் பதில் சொல்லணுமின்னா பகல் பூரா ஊரச் சுத்திட்டு ராத்திரி தூங்கறது தான் என் தொழில்.”

“உங்க வாழ்க்கை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“இருங்க, இந்த ஒரு கேள்வியை நான் என்னையே கேட்டுக்கிட்டதில்ல. இப்ப் நீங்க கேட்டதால என் கிட்ட நானே முதல் தடவையா கேட்கறேன். என் வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கா?”

“என்ன பதில்?”

“ம். எந்தப் பதிலும் இல்லை. ஆனா இப்படியே ரொம்ப காலமா நான் வாழ்ந்துட்டு இருக்கறதால எனக்கு இது பிடிச்சிருக்குன்னு தான் எடுத்துக்கணும்”

தொடர்ந்து எதிர்முனையில் சிரிப்பொலி.

“நீங்க ரொம்ப அழகா சிரிக்கறீங்க”, என்றான் மன்மோகன்.

”நன்றி” - அந்தக் குரல் சற்றுக் கூச்சத்துடன் ஒலித்தது. அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

வெகு நேரம் ரிசீவரைக் கையிலேயே வைத்துக்கொண்டு தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டிருந்தான் மன்மோகன்.

அடுத்த நாள் காலை எட்டுமணிக்குத் தொலைபேசி மீண்டும் அடித்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவன் சப்தம் கேட்டு விழித்தான். கொட்டாவி விட்டவாறே ரிசீவரை எடுத்தான்.

”ஹலோ, 44457”

“குட் மார்னிங், மன்மோகன் சார்”

“குட் மார்னிங், ஓ! நீங்களா. குட் மார்னிங்”

“தூங்கிக்கிட்டு இருந்தீங்களா?”

“ஆமாம். ஒண்ணு தெரியுமா, நான் இங்க வந்து நல்லாக் கெட்டுப் போயிட்டேன். திரும்பவும் ப்ளாட்ஃபார்முக்குப் போனதும் அவஸ்தைப் படப்போறேன்.”

“ஏன்?”

“ஏன்னா நடைபாதையில தூங்கினா காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடணும்”

அவள் சிரித்தாள்.

”நீங்க நேத்திக்கு திடுதிப்னு கட் பண்ணிட்டுப் போயிட்டீங்க”

“ஆமாம், நீங்க ஏன் நான் அழகா சிரிக்கறேன்னு சொன்னீங்க?”

“இது என்ன கேள்வி! அழகா இருக்கறதைப் பாராட்டக் கூடாதா என்ன?”

“கூடாது”

“இப்படி எல்லாம் சட்டதிட்டம் போடக்கூடாது. நான் எப்போவுமே சட்டதிட்டங்களை ஏத்துக்கறது கிடையாது. நீங்க சிரிச்சா, நீங்க அழகா சிரிக்கறீங்கன்னு நான் சொல்லத்தான் செய்வேன்.”

“அப்படின்னா நான் ஃபோனைக் கட் பண்ணப் போறேன்”

“உங்க இஷ்டம்”

“நான் சங்கடப்படறது பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா?”

“முதல்ல நான் சங்கடப்படறது பத்தி நான் கவலைப்படணும். அதாவது நீங்க சிரிக்கும் போது நீங்க அழகா சிரிக்கறீங்கன்னு நான் சொல்லாட்டி என் நல்ல ரசனைக்கு நான் துரோகம் செய்யறதா அர்த்தம்.“

சற்று நேரம் அமைதி. பின் திரும்பவும் அந்தக் குரல், “ ஸாரி, என் வேலைக்காரி கிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போ உங்க நல்ல ரசனை பத்தி சொல்லிட்டு இருந்தீங்க. உங்களுக்கு வேற என்ன ரசனை எல்லாம் உண்டு?”

“அப்படின்னா?”

“அதாவது, வேறு என்ன பொழுது போக்கு, விருப்பம்? சுருக்கமாச் சொல்லணும்னா உங்களுக்கு என்ன தான் செய்யப் பிடிக்கும்?”

மன்மோகன் சிரித்தான். “ஒண்ணும் பெரிசா இல்ல, ஆனா எனக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும்; கொஞ்சம்”

“அது ரொம்ப நல்ல ஹாபியாச்சே”

“அது நல்லதா கெட்டதான்னு எல்லாம் நான் யோசிச்சதில்ல”

“உங்க கிட்ட நல்ல காமிரா இருக்கணுமே”

“என் கிட்ட காமிரால்லாம் இல்ல. எப்போவாவது தேவைப்பட்டா யார் கிட்டயாச்சும் இரவல் வாங்குவேன். ஆனா என்னைக்காவது பணம் சம்பாதிச்சா சொந்தமா வாங்கணும்னு நினைக்கிற காமிரா ஒண்ணு இருக்கு”

”என்ன காமிரா அது”

”எக்ஸாக்டா. அது ஒரு ரிஃப்லெக்ஸ் காமிரா. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

சற்று அமைதி. “நான் ஒண்ணு யோசிச்சிட்டு இருந்தேன்”

“என்ன?”

“நீங்க என் பேரும் கேக்கல, ஃபோன் நம்பரும் கேக்கலியே”

“எனக்குக் கேக்கணும்னு தோணலை”

“ஏனோ?”

“உங்க பெயர் என்னவா இருந்தா என்ன? உங்க கிட்ட என் நம்பர் இருக்கு. அது போதும். நான் உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு உங்களுக்குத் தோணினா நிச்சயம் உங்க பெயரையும் நம்பரையும் எனக்குத் தருவீங்கன்னு நம்பறேன்.

“இல்ல, மாட்டேன்”

“உங்க இஷ்டம். நானா கேக்கப் போறதில்ல”

“நீங்க ரொம்ப வித்தியாசமானவர்”

”உண்மை தான்”

மீண்டும் சற்று அமைதி.

“திரும்பவும் யோசிச்சிட்டு இருந்தியா?” அவன் கேட்டான்.

“ஆமாம், ஆனா என்ன யோசிக்கிறதுன்னே எனக்குத் தெரியல.”

“அப்போ ஃபோனை வெச்சிடுங்களேன். அப்புறம் பேசலாம்”

“நீங்க ரொம்பத் திமிர் பிடிச்சவர், நான் வெக்கிறேன்.” அந்தக் குரலில் சற்றுக் கோபம் தெரிந்தது.

மன்மோகன் சிரித்துக் கொண்டே ரிசீவரை வைத்தான். முகத்தைக் கழுவி, உடையணிந்து கொண்டு வெளியில் புறப்படத் தயாரான போது மீண்டும் மணியடித்தது; எடுத்தான். “44457”

“மிஸ்டர் மன்மோகன்” என்றது அந்தக் குரல்.

“என்ன, சொல்லுங்கள்”

“வந்து, எனக்குக் கோபம் போயிடுச்சுன்னு சொல்ல வந்தேன்”

“ரொம்ப சந்தோஷம்”

“நான் சாப்பிட்டுட்டு இருக்கும் போது தோணிச்சு. உங்க கிட்ட கோபிச்சுக்கறது சரியில்லன்னு? நீங்க சாப்பிட்டிங்களா?”

“இல்லை, அதுக்குத்தான் கிளம்பிட்டிருந்தேன், நீங்க ஃபோன் பண்ணும் போது”

“ஓ, அப்படின்னா நான் உங்களைத் தடுக்கலை. போயிட்டு வாங்க”

“எனக்கொண்ணும் அவசரமில்ல. ஏன்னா என் கிட்ட சுத்தமா காசில்ல. அதனால் இன்னிக்குக் காலையில சாப்பாடு ஒண்ணும் கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.”

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? உங்களை நீங்களே வருத்திக்கறதுல என்ன சந்தோஷம்?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன்”

“உங்களுக்கு நான் ஏதாவது பணம் அனுப்பட்டுமா?”

“நீங்க விரும்பினா. எனக்குப் படியளக்கற எத்தனையோ நல்ல நண்பர்களில் நீங்களும் சேர்ந்துடுவீங்க”

“அப்படின்னா நான் அனுப்பமாட்டேன்”

“உங்க இஷ்டம்”

“நான் ஃபோனை வைக்கிறேன்”

“சரி”

மன்மோகன் ஃபோனை வைத்துவிட்டு வெளியில் போனான். மாலை வெகு நேரம் கழித்து அறைக்குத் திரும்பினான். நாள் முழுதும் தன்னை அழைக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தமானவளைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அவள் இளமையாகவும் படித்தவளாகவும் தோன்றினாள். அவள் தான் எவ்வளவு அழகாகச் சிரிக்கிறாள். இரவு பதினோரு மணிக்கு மீண்டும் தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ”

“மிஸ்டர் மன்மோகன்”

“நான் தான் பேசறேன்”

“நான் நாள் பூரா உங்களுக்குப் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன். எங்கே இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

“எனக்கு வேலைன்னு ஒண்ணும் இல்லாட்டியும் நான் செய்ய விரும்பற காரியங்கள் சிலது இருக்கு”

“என்னது அது?”

“ஊர் சுத்தறது”

“எப்போ திரும்பி வந்தீங்க?”

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி”

“நான் ஃபோன் பண்ணும் போது என்ன பண்ணிட்டிருந்தீங்க”

“மேஜை மேல படுத்து நீ எப்படி இருப்பேன்னு கற்பனை பண்ணிட்டிருந்தேன். ஆனா உன் குரலுக்கு மேல எனக்குக் கற்பனைக்கு என்ன இருக்கு?”

“கற்பனை பண்ண முடிஞ்சுதா?”

“இல்ல”

“முயற்சி பண்ணாதீங்க. ஏன்னா நான் ரொம்ப அவலட்சணமா இருப்பேன்.”

“அப்படின்னா தயவு செய்து ஃபோனை வெச்சிடு. எனக்கு அவலட்சணங்கள் பிடிக்காது”

“அப்படியா சங்கதி. நான் ரொம்ப அழகு, போதுமா. நீங்க வெறுப்பை வளர்த்துக்கறதை நான் விரும்பல.”

வெகு நேரம் இருவரும் பேசவில்லை. பின்பு மன்மோகன் கேட்டான். “என்ன மறுபடியும் யோசிச்சிட்டு இருந்தியா?”

“இல்ல, உங்களை ஒண்ணு கேட்க இருந்தேன்”

“நல்லா யோசனை பண்ணிட்டுக் கேள்”

“நான் உங்களுக்காகப் பாடவா?”

“ஓ!”

”சரி, இருங்க!”

தொண்டையைச் செருமிக் கொண்டு மிகவும் மெல்லிய மிருதுவான குரலில் அவனுக்காக ஒரு பாட்டுப் பாடினாள் அவள்.

“ரொம்ப அழகா இருந்தது”

“நன்றி” - சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

இரவெல்லாம் அவள் குரலைப் பற்றியே கனவு கண்டான் அவன். வழக்கத்தை விட முன்னதாக எழுந்து அவளது அழைப்புக்காகக் காத்திருந்தான். ஆனால் அவள் அழைக்கவில்லை.
பொறுமையிழந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். மேஜை மீது படுத்து இருபது முறை படித்து முடித்த அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்தான். நாள் முழுதும் கழிந்தது. மாலை சுமார் ஏழு மணிக்குத் தொலைபேசி அழைத்தது. ஓடிச் சென்று எடுத்தான்.

“யாரது”

”நான் தான்”

“எங்கே போயிருந்தே நாள் பூரா” - வெடுக்கென்று கேட்டான்.

“ஏன்?” அந்தக் குரல் நடுங்கியது.

“நான் காத்துக்கிட்டே இருந்தேன். கையில காசிருந்தும் நான் இன்னிக்கு பூரா சாப்பிடப் போகல.”

”நான் எனக்கு எப்போ தோணுதோ அப்போ தானே ஃபோன் பண்ணுவேன். நீங்க..”

மன்மோகன் அவசரமாக மறித்தான். “இங்க பாரு, ஒண்ணு இந்த வேலையை இத்தோட நிறுத்திக்கோ, இல்ல எப்போ ஃபோன் பண்ணுவேன்னு எனக்குச் சொல்லு. என்னால இப்படிக் காத்துக் கிடக்க முடியாது”

“இன்னிக்கு நடந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க. நாளையிலிருந்து காலைலயும் சாய்ந்திரமும் தவறாம ஃபோன் பண்றேன்.”

“ரொம்ப நல்லது”

“நான் நினைக்கவே இல்ல, நீங்க இப்படி...”

“என்னால் எதுக்கும் காத்திருக்க முடியாது. அப்படி முடியாம போகும் போது என்னை நானே தண்டிச்சுக்கறேன்.”

”எப்படி?”

”நீ ஃபோன் பண்ணல. நான் வெளிய போயிருக்கணும்; ஆனா நான் போகல. “

“நான் வேணும்னே தான் ஃபோன் பண்ணாம இருந்தேன்”

“ஏன்?”

“நீங்க என்னை மிஸ் பண்றீங்களான்னு பார்க்கத் தான்”

“நீ ரொம்பக் குறும்புக் காரி. சரி இப்போ ஃபோனை வை. நான் போய் சாப்பிடணும்.”

“எப்போ திரும்பி வருவீங்க?”

“அரைமணி நேரத்துல.”

அரைமணி நேரம் கழித்து அவன் திரும்பினான். அவள் ஃபோன் செய்தாள். வெகு நேரம் இருவரும் பேசினார்கள். அவன் அவளை அதே பாடலை மீண்டும் பாடச் சொன்னான். அவளும் சிரித்துக் கொண்டே பாடினாள்.

இப்போது அவள் தவறாமல் காலையும் மாலையும் அவனை அழைக்க ஆரம்பித்தாள். சில நேரம் மணிக்கணக்காய்ப் பேசுவார்கள். ஆனால் இதுவரை மன்மோகன் அவள் பெயரையும் கேட்கவில்லை. அவள் நம்பரையும் அறிந்துகொள்ளவில்லை. ஆரம்பத்தில் அவளது முகத்தைக் கற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனானே. இப்போது அது கூட அவனுக்குத் தேவைப்படவில்லை. அவள் குரல் தான் அவனுக்கு எல்லாமே. அவளது முகம், ஆன்மா, உடல் அனைத்தும். ஒரு நாள் அவள் கேட்டாள், “மோகன் என் பெயரைக் கூட நீ கேட்கலியே ஏன்?”

“ஏன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் குரல் தான் உன் பெயர்”

இன்னொரு நாள் கேட்டாள், “மோகன், நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?”

“இல்லை”

“ஏன்?”

அவன் சோகமானான். “இதற்குப் பதில் சொல்றதுக்கு நான் என் வாழ்க்கையின் குப்பைகளை எல்லாம் கிளற வேண்டி இருக்கும். கடைசியில் ஒண்ணுமே மிஞ்சாம போனால் எனக்கு ரொம்பக் வருத்தமா இருக்கும்”

“அப்படின்னா வேண்டாம், விட்டுடு.”

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் மோகனின் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. போன வேலை முடிந்ததாகவும் அடுத்த வாரம் ஊர் திரும்புவதாகவும் எழுதி இருந்தான். அன்று மாலை அவள் ஃபோன் செய்த போது அவன் சொன்னான், “என் ராஜாங்கம் முடியப் போகிறது.”

“ஏன்?”

”என் நண்பன் திரும்பி வரப் போறான்”

“உனக்கு வேற நண்பர்கள் இல்லையா? அவங்க கிட்ட ஃபோன் இருக்குமே”

“உண்மை தான். ஆனால் அவங்க நம்பரெல்லாம் நான் உனக்குத் தர மாட்டேன்”

“ஏன்?”

“வேறு யாரும் உன் குரலைக் கேட்கறதை நான் விரும்பலை”

“ஏன்”

“நான் ரொம்பப் பொறாமைக்காரன்னு வெச்சிக்கோயேன்”

“என்ன செய்றது சொல்லு?”

“நீயே சொல்லு”

“உன் ராஜாங்கம் முடியற நாளன்னிக்கு நான் என்னோட ஃபோன் நம்பரை உனக்குத் தருவேன்”

அவனுள் கவிந்திருந்த கவலை சட்டென்று மறைந்தது. அவன் மீண்டும் அவளைக் கற்பனையில்
காண முயன்றான்; ஆனால் முடியவில்லை. அவள் குரல் மட்டுமே ஒலித்தது. இன்னும் சில
நாட்களுக்குப் பின் அவளை நேரிலேயே காணலாம் என்று நம்பிக்கை கொண்டான். அந்தக் கணத்தின் மகத்துவத்தை அவனால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

மறு நாள் அவள் அழைத்த போது அவன் சொன்னான், “நான் உன்னைக் காண வேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருக்கிறேன்”

“ஏன்?”

“என் ராஜாங்கம் முடியற அன்னிக்கு உன் நம்பரைத் தர்றதாச் சொன்னியே”

”ஆமாம்”

“அப்படினா, நீ இருக்கிற இடத்தையும் எனக்குச் சொல்லுவே இல்ல? எனக்கு உன்னைப் பார்க்கணும்”

“நீ எப்போ விரும்பினாலும் என்னைப் பார்க்கலாம். இன்னிக்கே கூட”

“இல்லை, இன்னிக்கு வேண்டாம். நான் நல்லா உடுத்திட்டிருக்கும் போது உன்னைச் சந்திக்க விரும்புகிறேன். என் நண்பன் ஒருத்தன் கிட்ட நல்ல டிரெஸ் கேட்டிருக்கிறேன்.”

“நீ ஒரு குழந்தை மாதிரி இருக்கே. நாம சந்திக்கும் போது உனக்கு நான் ஒரு பரிசு தருவேன்.”

“உன்னைச் சந்திக்கிறதை விட உலகத்துல வேறு என்ன பரிசு இருக்க முடியும் எனக்கு?”

“நான் உனக்காக ஒரு எக்ஸாக்டா காமிரா வாங்கி வெச்சிருக்கேன்!”

“ஓ!”

“ஆனால் ஒன்று. நீ என்னைப் படமெடுக்கணும்!”

“அது உன்னைப் பார்த்த பிறகு நான் முடிவு செய்றேன்!”

“இன்னும் இரண்டு நாள் நான் உனக்கு ஃபோன் பண்ண மாட்டேன்”

“ஏன்?”

“நான் என் குடும்பத்தோட வெளியூர் போறேன். இரண்டே நாள் தான்.”

மன்மோகன் அன்று அறையை விட்டு வெளியில் செல்லவில்லை. மறுநாள் காலை காய்ச்சல்
வந்தது போல் உணர்ந்தான். முதலில் அவளுடன் பேசாததனால் வந்த உளச் சோர்வு
என்றெண்ணினான். மதியத்துக்குள் உடல் அனலாகக் காயத் தொடங்கியது. அவன் கண்கள்
தீப்பற்றியது போல் எரிந்தன. மேஜை மீது கவிழ்ந்து படுத்தான். தாகமாய் எடுத்தது. நாளெல்லாம்
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். நெஞ்சின் மீது என்னவோ பாரமாக அழுத்தியது.
அடுத்தநாள் ஒரேயடியாகச் சோர்வடைந்தான். அவனால் மூச்சு விட இயலவில்லை. நெஞ்சு மிகவும் வலித்தது.

ஜுர வேகத்தில் அவனுக்கு நினைவு தப்பிப் போனது. ஃபோனை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.
அவள் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தான். மாலை ஆகும் போது அவனது உடல் மேலும் மோசமடைந்தது. அவன் மண்டைக்குள் ஆயிரமாயிரம் குரல்களும் ஆயிரமாயிரம் டெலிஃபோன் மணிகளும் ஒலித்த வண்ணம் இருந்தன. மூச்சிறைத்தது.

மெய்யாகவே ஃபோன் அடித்தபோது அவனுக்குக் கேட்கவில்லை. வெகு நேரம் மணியடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று தெளிந்த மணிச்சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்தான்.
நடுங்கும் கரங்களால் சுவரைப் பிடித்தபடி வந்து ரிசீவரை எடுத்தான். மரம் போல் காய்ந்திருந்த உதட்டை நாவால் ஈரப்படுத்த முயன்றான்.

“ஹலோ”

”ஹலோ மோகன்” - அவள் தான் பேசினாள்.

“நான் மோகன் தான்” அவன் குரல் நழுவியது

“எனக்கு நீ பேசறது கேட்கலை”

அவன் ஏதோ சொல்ல முயன்றான், ஆனால் அவன் குரல் தொண்டையிலேயே அடைத்துக் கொண்டது.

அவள் சொன்னாள், “நாங்க சீக்கிரமே திரும்பிட்டோம். ரொம்ப நேரமா உனக்கு ஃபோன் பண்ணிட்டிருக்கேன். எங்கே போயிருந்தே?”

மன்மோகனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது.

”ஏதாவது பிரச்னையா?” அவள் கேட்டாள்.

மிகவும் சிரமப்பட்டு அவன் சொன்னான், “என் ராஜாங்கம் இன்னிக்கு முடியப் போகுது.”

அவன் வாயிலிருந்து மெல்லிய கோடாக இரத்தம் வழிந்து அவன் தாடையைத் தாண்டி அவன் கழுத்தை நனைத்தது.

அவள் சொன்னாள் ”என் நம்பரைக் குறிச்சுக்கோ. 50314, 50314. காலையில என்னைக் கூப்பிடு. நான் இப்போ போகணும்” - சொல்லிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அவன் வாயிலிருந்து இரத்தம் கொப்புளிக்க, அந்தப் ஃபோனின் மீது அவன் தலை சரிந்தது.

Wednesday, June 24, 2009

சாலையோரமாய்....

Disclaimer: இது சாதத் ஹஸன் மாண்டோவின் சிறுகதைகளில் ஒன்று. அவரைப் பற்றி எனது முந்தைய பதிவு இங்கே. பாகிஸ்தான் பிரிவினை பற்றியே அதிகமாக எழுதியவர் என்ற கணிப்பை மாற்றுவதற்காகவே இச்சிறுகதையைத் தேர்ந்தெடுத்தேன். என் மொழி அவரது கதையின் வலிமையைக் குறைத்திருப்பின், அறிந்தவர்கள் மன்னிப்பீர்களாக.
*************

சாலையோரமாய்....

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. குதூகலமானதொரு கனவைப் போல் வெயில் இதமாகக் காய்ந்து கொண்டிருந்தது. மனதை மயக்கும் மண்ணின் வாசம் என் நெஞ்சமெல்லாம் பொங்கி எழ, அவன் அருகில் கிடந்த நான் துடிக்கும் என் ஆவியை அவனுக்குச் சமர்ப்பித்தேன்.

அவன் சொன்னான்: “என் வாழ்வில் இதுவரை இருந்து வந்த பெருங்குறையை நீ நிவர்த்தி செய்து விட்டாய். அற்புதமான இந்தப் பொழுது என்னுள்ளே இருந்த வெற்றிடத்தைப் போக்கி பெரும் நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது. உன் காதல் மட்டும் இல்லாது போயிருந்தால் என் வாழ்வு சூன்யமாக இருந்திருக்கும், அல்லது அரைகுறையாக. உனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன், நீ இன்று என்னை முழு மனிதனாக்கிவிட்டாய். இனி உன் தேவை எனக்கு இருக்காது என்றே தோன்றுகிறது.

அவன் சென்று விட்டான், திரும்ப வரவே மாட்டான் எனும்படியாக.

நான் அழுதேன். எனக்கு ஒரு பதில் சொல்லி விட்டுப் போகும்படி இறைஞ்சினேன் அவனை.
எப்படி நான் உனக்கு வேண்டாதவளாகிப் போனேன்? என் உயிரும் உடலும் உன் காதலுக்காக ஏங்கித் தீயில் எரிகிறதே? உன் வெறுமையைப் போக்கியதாக நீ சொல்லும் அதே அற்புதக் கணங்கள் என் ஆன்மாவில் மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கிச் சென்று விட்டனவே!

அவன் சொல்லி இருந்தான். “உன்னுடன் நான் பகிர்ந்த இந்தப் பொழுதில் உன் உயிரின் அணுக்கள் என்னை சேர்ந்து என்னை பரிபூரணம் அடையச் செய்து விட்டன. நம் உறவு திட்டமிட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”

இந்தக் குரூரமான வார்த்தைகள் என் மேல் கல்லெறிந்தது போலிருந்தன. நான் கதறியழுதேன். புலம்பினேன். ஆனால் அவன் மனம் கல்லாகி விட்டிருந்தது. நான் அவனிடம் சொன்னேன்.
“உன்னை முழுமையடையச் செய்ததாக நீ சொல்லும் அந்த உயிர் அணுக்கள் என் உடலுக்குச் சொந்தமல்லவா? நான உனக்கு அதைக் கொடுத்தேன். ஆனால் அத்துடன் நம் உறவு முடிந்து விடுமா என்ன? என்னிடம் விட்டுச் சென்ற உன் உயிருக்கும் உனக்குமான பிணைப்பை அறுத்து விட முடியுமா?

நீ முழுமை அடைந்தாய். ஆனால் என்னைப் பலவீனமாக்கி விட்டாயே? ஐயோ! உன்னைக் கடவுள் போல வணங்கினேனே!

அவன் சொன்னான், “மடலவிழ்ந்த மலர்களில் அமர்ந்து தேனருந்தும் வண்டுகள் ஒரு போதும் அந்த மலர்களை இருப்பிடமாக்கிக் கொள்வதில்லை, அவற்றின் மனக்கசப்பைப் போக்குவதுமில்லை.
ஆண்டவனே வணக்கத்துக்குரியவன். அவன் எதையும் வணங்குவதற்கில்லை. அவன் மாபெரும் சூன்யத்துடன் புணர்ந்து இவ்வுலகைப் படைத்தான். உடனே அச்சூன்யவெளி அற்றுப் போனது. பிரசவம் முடிந்ததும் தாய் இறந்து போனாள்.

பெண்ணால் அழ முடியும். வாதம் செய்ய முடியாது. அவளது மிகப்பெரும் வாதமும் ஆயுதமும் அவளது கண்ணீர் தான். கண்களில் பொங்கிவரும் கண்ணீருடன் நான் சொன்னேன், “என்னைப் பார், நான் கண்ணீர் சிந்துகிறேன். நீ போய்த்தான் ஆக வேண்டுமென்றால், உன் கைக்குட்டையில் இக்கண்ணீர்த் துளிகளைச் சுற்றி எடுத்துக் கொண்டு போய் எங்காவது தகனம்
செய்துவிடு. அடுத்த முறை நான் அழும் போது அவற்றின் நினைவு வரும். என் கண்ணீருக்கு உரிய இறுதி அஞ்சலி உன்னால் செலுத்தப்பட்டது என்ற உணர்வில் திருப்தியடைவேன். எனக்காக, என் மகிழ்ச்சிக்காக இச் சிறு செயலைச் செய்வாயா?’

அவன் சொன்னான், “ நான் ஏற்கெனவே உனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட்டேன். அதுவரை கானல் நீர் போல் இருந்த உன் வாழ்வில் மிக உன்னதமான இன்பத்தை நான் வந்ததால் நீ அடைந்தாய்.
அந்த நினைவில் உன்னால் உன் வாழ்நாளின் மிச்சத்தைக் கழிக்க முடியாதா? நான் முழுமையடைந்ததால் நீ முழுமையற்றுப் போனதாகச் சொல்கிறாயே? முழுமையற்ற நிலை தான் வாழ்வு தொடர்வதற்கான உந்துசக்தியல்லவா? நான் ஆண். இன்று நீ என்னை முழுமையாக்கினாய். நாளை அது வேறொரு பெண்ணாக இருக்கும். இதே இன்பத்தைப் பல கோடி முறை பெற்று அனுபவிக்கும் படியாக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். நீ நிரப்பிய வெற்றிடம் மறுபடியும் உருவாகும் போது அதை நிரப்ப வேறு யாராவது இருப்பார்கள்.

நான் அழுதுகொண்டே இருந்தேன்.

”அந்த மகத்தான பொழுது என் கையில் பிடித்து வைத்த தண்ணீர் போல வடிந்து போய் விட்டதே.

ஐயோ! ஏன் நான் அந்த மாய வலையில் கட்டுப்படச் சம்மதித்தேன்? கட்டுக்கடங்காமல் துடிதுடித்துக் கொண்டிருந்த என் ஆத்மாவைச் சிறையில் அடைத்துவிட்டேனே. ஆம் அந்தப் பரவசத்தை விளக்க வார்த்தைகளே இல்லை தான்! நாங்கள் இரண்டறத் தழுவிக் கிடந்தது ஒரு கனவு போலவே இருக்கிறது. ஆம் அது ஒரு விபத்து தான். ஆனால் அந்த விபத்திலிருந்து கொஞ்சமும் சேதமில்லாமல் முழுமையாக அவன் வெளியேறிச் சென்று விட்டான், என்னை சேதப்படுத்தி உடைத்துவிட்டு. ஏன் நான் அவனுக்கு வேண்டாதவளாகிப் போனேன்? அவன் மீது எனக்குள்ள ஆசை என் உடலையும் ஆவியையும் ஒரு சேரத் தீ வைத்து எரிக்கும் போது?

என் சக்தியை நான் அவனுக்குக் கொடுத்து விட்டேன். நாங்கள் இரண்டு மேகங்கள் போல இருந்தோம். ஒன்று கடும் மழையுடன் சூல் கொண்டு; இன்னொன்று பேரிடியையும் மின்னலையும்
வெட்டி விட்டு மறைந்து விட்டது. என்ன விதமான நீதி இது? இயற்கையின் நியதியா? அல்லது இறைவனின் நியதியா?

ஆம், இதையெல்லாம் நான் யோசித்தேன்.

இரு ஆன்மாக்கள் சந்தித்துக் கொண்ட பின் ஒ்று சாகாவரம் பெற்று விலகிச் செல்கிறது. இரு ஆன்மாக்கள் இணையும் போது பிரபஞ்சம் எனும் புள்ளியில் இரண்டும் ஒருமித்துக் கலந்துவிட வேண்டாமா?

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. குதூகலமானதொரு கனவைப் போல் வெயில் இதமாகக் காய்ந்து கொண்டிருந்தது. மனதை மயக்கும் மண்ணின் வாசம் என் நெஞ்சமெல்லாம் பொங்கி எழ, அவன் அருகில் கிடந்த நான் துடிக்கும் என் ஆவியை அவனுக்குச் சமர்ப்பித்தேன்.

அவன் இங்கே இல்லை. அந்த மின்னல் தற்போது வேறு மழை மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கூடும். முழுமை அடைந்ததாகச் சொல்லி என்னை விட்டு விலகியவன் அவன். ஒரு பாம்பைப் போல் என்னக் கடித்தவுடன் நகர்ந்து சென்று விட்டான். ஆனால் இது என்ன? என் அடிவயிற்றில் என்னவோ புதிதாகத் துடிக்கிறதே. நான் முழுமை பெறுவதற்கான ஆரம்பமா இது?

இல்லை. இருக்க முடியாது. இது என் கையில் இருக்கிறது. ஆனால் ஏன் என் உடலின் வெற்றிடங்கள் நிரம்பி வருகின்றன? என்ன விதமான குப்பை இந்தப் பாழ் உடம்பை நிறைக்கிறது?
என்ன விந்தையான உணர்ச்சிகள் என் நரம்புகளில் ஓடுகின்றன? ஏன் நான் என் மொத்த ஆவியையும் திரட்டி என் வயிற்றில் இருக்கும் அந்தச் சின்ன உயிருடன் கலந்து விடத் துடிக்கிறேன்? மூழ்கும் எனது வாழக்கைக் கப்பல் எந்தப் பெருங்கடலில் உயிர்பெற்றுக் கரை சேரப் போகிறது?

என் உடலில் பற்றி எரியும் தீயில் பால் கொதிப்பதை உணர்கிறேன். வரப்போகும் அந்த விருந்தாளி யார்? யாருக்காக என் இதயம் இரத்தம் சிந்தி மென்மையான படுக்கைகள் நெய்து
கொண்டிருக்கிறது? என் மனக்கண்ணும் பல்லாயிரம் வண்ணங்களில் நூல் நூற்றுக் கண்ணைப் பறிக்கும் ஆடைகள் தைத்து அழகு பார்க்கிறதே!

யாருக்காக என் மேனி பொன் வண்ணமாக மாறி வருகிறது?

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. ஆனால் ஏன் அந்த வானம் இப்போது என் வயிற்றின்
மீது வந்து குடை பிடிக்கிறது? ஏன் அவன் கண்களின் நீலம் என் உடலில் இரத்தமாகச் சீறிப் பாய்கிறது?

ஏன் என் உருண்ட தனங்கள் கோயில் கோபுரங்களைப் போல் புனிதமாகக் கூம்பி நிற்கின்றன?

இல்லை! இந்நிகழ்வுகளில் யாதொரு புனிதமும் இல்லை. இக்கோபுரங்களை நான் நொறுக்கி விடப் போகிறேன். வேண்டாத விருந்தாளிக்காக விருந்து சமைத்துக் கொண்டிருக்கும் என்
உடலின் நெருப்பை நான் நீரூற்றி அணைக்கப் போகிறேன். அந்த வண்ண வண்ண நூல்களைச் சிக்கலாக்கிப் பிய்த்தெறியப் போகிறேன்.

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. ஆனால் ஏன் அவன் சுவடே மறைந்து விட்ட அந்த
இடங்களையும் பொழுதுகளையும் மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறேன்? ஆனால் இது என்ன புதுச் சுவடு என் வயிற்றினுள்? ஒரு சின்னஞ்சிறு பாதமா? உண்மைதானா?

இல்லை நான் அதை அழிக்கப் போகிறேன். இது என்னைப் பீடித்திருக்கும் புற்று நோய். தீராப்பழி.

ஆனால் ஏன் அமுதினும் இனிய மருந்தாக என் காயங்களை ஆற்றுகிறது? எந்தக் காயத்தை ஆற்ற வந்த மருந்து இது? அவன் விட்டுச் சென்ற காயத்தையா?

இல்லை நான் பிறவி எடுத்தது முதல் சுமந்து வந்திருக்கும் காயத்தை. என் கருவறையில் எப்போதும் மறைமுகமாக இருந்து வந்துள்ள காயம் அது.

ஹீம். கருவறை. என்ன அது. வேண்டாத வெறும் மண்கலம் தான் அது. அதைச் சுக்கு நூறாக்க உடைத்தெறியப் போகிறேன்.

ஆனால் என் செவிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வுலகம் ஒரு நாற்சந்தி. அதன் நடுவில் உன் மண்கலத்தை உடைக்காதே. உன்னை நோக்கி விரல்கள் நீட்டப்படும்.

ஆம் இவ்வுலகம் ஒரு நாற்சந்தி தான். அவன் என்னை முடிவில்லாத இரு வீதிகளின் இடையே விட்டு சென்றுவிட்டான், கண்ணீரை மட்டுமே தந்து விட்டு.

ஒரு கண்ணீர்த்துளி நழுவி என் சிப்பியில் விழுந்து முத்தாகி இருக்கிறது. யாரை அலங்கரிக்க?
இந்தச் சிப்பி திறந்து முத்து வெளிவரும் போதும் தான் விரல்கள் நீட்டப்படும் என்னை நோக்கி.
வெறும் விரல்கள் அல்ல. அவை பாம்புகளாக மாறி இந்த முத்தைக் கடித்து விஷமேற்றப் பார்க்கும்.

வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே.
ஐயோ! அது இற்று வீழக் கூடாதா இப்போது? எந்தத் தூண்கள் அதைத் தாங்கி நிற்கின்றன?
பிரளயம் வந்து இப்பூமியின் ஆதாரத்தையே அசைக்கக் கூடாதா? ஏன் அந்த வானம் என் தலை மீது குடையாக ஆதரவளிக்கிறது?

எனக்கு வியர்த்து விறுவிறுக்கிறது. என் உடலின் சகல துவாரங்களும் திறக்கின்றன. எங்கும்
தீப்பற்றி எரிகிறது. என் கலத்தில் பொன் உருக்கப்படுகிறது. தீ நாக்குகள் அதைத் தழுவத் தழுவ எரிமலைக் குழம்பாகப் பொன் உருகி வழிகிறது. அவன் கண்களின் நீல நிறம் என் நரம்புகளில் பாய்ந்தோடுகிறது. எங்கோ மணியடிக்கும் சப்தம். யாரோ ஓடி வந்து கதவடைக்கிறார்கள்.

அது வரும் நேரமாகிவிட்டது.

என் கண்களில் தூக்கத்தில் களைத்திருக்கின்றன. நீலவானம் அழுக்கடைந்தாகி விட்டது. சற்று நேரத்தில் இடிந்து வீழும்!

யாருடைய அழுகுரல் அது? தயவு செய்து அதை நிறுத்துங்கள். என் நெஞ்சில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது.

என் மடி காத்திருக்கிறது. என் கரங்கள் அதைத் தழுவிக்கொள்ள நீள்கின்றன. என் உடலின் வெப்பத்தில் பால் காய்ந்து கொதித்துக் கொண்டிருக்கிறது. என் உருண்ட தனங்கள் கிண்ணங்களாக மாறியுள்ளன. என் உயிரை என்னிடம் கொண்டுவாருங்கள். இதமாக என் மடியில் கிடத்துங்கள்.

இல்லை. அதை என்னிடமிருந்து பறித்து விடாதீர்கள். எங்கே கொண்டு போகிறீர்கள்?

வேண்டாம். கடவுள் பெயரால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

விரல்கள்..விரல்கள்..நீட்டட்டும் அவர்கள். எனக்குக் கவலை இல்லை. உலகம் நாற்சந்தியாகவே இருக்கட்டும் என் மண்கலத்தைத் தைரியமாக நான் அங்கு நின்று உடைப்பேன்.

என் வாழ்க்கை நாசமாகி விடுமா? போகட்டும். என் உயிர்ச்சதையை என்னிடம் தாருங்கள். என் ஆன்மாவை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். அது எனக்கு எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். என்னை முழுமையடையச் செய்த அந்த மாயக் கணங்கள் செய்த அற்புதக் கனி அது. இதுவல்லவோ என் பிறவிப்பயன்?

நம்பிக்கை இல்லாவிடில் இதோ என் காலி வயிற்றைக் கேளுங்கள். பால் நிரம்பி வழியும் என் தனங்களைக் கேளுங்கள். என் உடலின் ஒவ்வோர் அணுவும் இசைக்கும் தாலாட்டினைக்
கேளுங்கள். தொட்டிலாக ஆடத் துடிக்கும் என் கரங்களைக் கேளுங்கள்.

குற்றம் சாட்ட நீளும் விரல்கள் நீண்டு விட்டுப் போகட்டும். அவற்றை வெட்டி எடுத்து என் காதுகளை அடைத்துக் கொள்ளுவேன்; நானும் ஊமையாகி விடுவேன்; குருடும் ஆகிவிடுவேன்.
இந்தச் சின்னஞ்சிறு சிசு என்னை அறிந்து கொள்ளும். என் விரல்கலால் தடவி நான் அதை அறிந்து கொள்வதைப் போலவே.

உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். அதைக் கொண்டு சென்றுவிடாதீர்கள்.

என் பாற்செம்பைக் கவிழ்த்துக் கொட்டிவிடாதீர்கள். என் குருதியால் நான் நெய்த பட்டு மெத்தைக்குத் தீ வைத்து விடாதீர்கள். தொட்டிலாக ஆடும் என் கரங்களை வெட்டி விடாதீர்கள்.
அமுதகானமாக ஒலிக்கும் அந்த அழுகுரல் என் காதுக்கெட்டாதபடி செய்துவிடாதீர்கள்.

அதை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.

லாகூர், 21 ஜனவரி

புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையொன்றை இன்று போலிசார் சாலையோரத்தில் கண்டெடுத்தனர்.
அதன் பிஞ்சு உடல் ஈரத்துணியால் போர்த்தப்பட்டு, குளிரிலும் பசியிலும் இறந்து போகவேண்டும் என்ற திட்டத்தோடு கிடத்தப்பட்டிருந்தது. ஆனால் குழந்தை என்னவோ நலமுடன் பிழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதன் கண்கள் அழகிய நீல நிறமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 18, 2009

’புறக்’கணிப்பு

”ஏய் கமலா இங்கே வா!”

”இன்னா ஐயிரே?”

கடுகடுவென்ற முகத்துடன், கோபத்துடன் நின்று கொண்டிருந்தார் சிவராமன்.

அதற்கெல்லாம் அசருபவளா பால்காரி கமலா. தனது டிரேட் மார்க் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி ஒய்யாரமாய் பால் வண்டியைத் தள்ளியவாறு வந்தாள்.

”அய்ய இன்னான்னு சீக்கிரம் சொல்லு. மத்த தெருவுக்கெல்லாம் போணுமில்ல..”


முஷ்டியை மடக்கி அவள் முகத்தின் முன் நீட்டி நீட்டி கர்ஜிக்கிறார் சிவராமன்.

”இரும்புக்கம்பிய எடுத்துண்டு போனது யாரு? என் ரப்பர் செருப்பைத் தூக்கிண்டு போனது யாரு? எலிப்பொறியை இழுத்துண்டு போன...”

அலட்சியமாக அவரை இடைமறித்து,
“அய்யே நிர்த்து ஐயிரே. லூஸா நீ? இன்னாமோ அடுக்கிக்கினே போற? எனுக்கின்னா தெரியும்?”

“ஏய் கமலா.. எனக்கு நல்லாத் தெரியும். காலையில பால் போட வரச்சே ஒவ்வொருத்தர் வீட்டுலயும் ஏதாவது அபேஸ் பண்றதே வேலயா போய்டுத்து உனக்கு. உன் வண்டியக் காமி. செக் பண்ணனும்”

அவ்வளவு தான். குய்யோ முறையோ என்று பெருங்குரலெடுத்து, கதவிடுக்கில் அகப்பட்ட பெருச்சாளி மாதிரி கத்த ஆரம்பிக்கிறாள் கமலா.

தெருவில் வாக்கிங் போகிறவர்கள் ஏளனமாக அவரையும் கமலாவையும் பார்க்கிறார்கள். சிவராமனுக்கு முகம் சிவந்து அவமானமாகிப் போகிறது.

”சரி சரி, வாய மூடு. இது தான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே எதையாச்சும் திருடினே, காலனி செக்ரட்டரி கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணி உன்னை இந்த ஏரியா பக்கமே வர விட மாட்டேன்.” சொல்ல் விட்டு குடு குடுவென ஃப்ளாட்டுக்குள் ஓடுகிறார்.

கமலா ஆரம்பித்த ஒப்பாரியைப் பாதியிலேயே முடிக்க மனமின்றி வழியெல்லாம் புலம்பிக் கொண்டே போகிறாள்.
கமலா! அந்தத் தெருவில் முப்பது வருடங்களாகப் பால் பாக்கெட் விநியோகம் செய்பவள். கறுப்பான ஒல்லியான சிறிய உருவம். பொக்கை வாய்க்குப் பொருந்தாத கறுத்த தலைக் கேசம். குறு குறுவென்று அலையும் கண்கள், கீச்சுக் குரலில் வெடுக் வெடுக்கென்ற பேச்சு. அநாயாசச் சுறு சுறுப்பு.

அடை மழை, புயல் எதற்கும் அசர மாட்டாள். ப்ளாஸ்டிக் பை எதையாவது தலையில் போர்த்திக் கொண்டு பால் போட வந்து விடுவாள்.

அவளுக்கு இரு மகன்கள். கணவன் சீக்காளி, வீட்டோடு இருக்கிறான்.இப்படிக் கஷ்டப்பட்டுத் தன் மகன்களை நன்கு படிக்க வைத்தாள். அவர்களும் டி.எம்.இ முடித்து நல்ல வேலைக்குச் சென்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். தாயின் மீது பாசத்துடனும். ஆனாலும் கமலாவுக்குப் பால் போடுவதை நிறுத்தவும் மனமில்லை. ஹாபியான இந்த அபேஸ் குணமும் விடவில்லை!

ஆம், சிவராமன் ஒன்றும் அபாண்டமாகச் சொல்லவில்லை. அவள் வண்டியை அனாமத்தாக விட்டிருக்கும் போது அதற்குள் எட்டிப் பார்த்தவர்கள் அசந்து போவார்கள். ஓட்டைக் குடை, பிய்ந்து போன செருப்பு, துணி ஹாங்கர், சாக்கடை குத்தும் இரும்புக் கம்பி, குப்பை முறம் என்று பொதுவாக வீட்டுக்கு வெளியே போட்டு வைத்திருக்கும் உபயோகமுள்ள, அற்ற பல பொருள்களின் கண்காட்சியே பார்க்கலாம்.

இதெல்லாம் தெரிந்தும் யாரும் அந்தத் தெருவில் இது வரை பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அவள் பால் போட வரும் விடியலில் பெரும்பாலும் யாரும் விழித்திருக்க மாட்டார்கள். இன்று சிவராமன் அவளைப் பிடிப்பதற்காகவே விழித்துக் காத்திருந்தார் போலும்.

அவர் எப்போதுமே அப்படித்தான். எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார். ஆனால் கொஞ்சம் வம்பு பிடித்தவர். அந்தக் காலனியில் முதலில் குடிவந்தவர். ஒரே மகள், இரண்டு மகன்கள். எல்லோரும் திருமணமாகி வெளிநாட்டில். மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்துகிறார்.வந்த புதிதில் அந்த ஏரியா பிரௌசிங் செண்டர் ஓனர் சங்கரை முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவு படுத்தி எடுத்தார்.

அப்போது அவர் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தது. இண்டெர்னெட் வசதி இல்லை. தினமும் அங்கு சென்று விடுவார். ஒன்று மகன்களுக்கோ மகளுக்கோ மெயில் அனுப்ப, இல்லை சி.டியில் பேரக் குழந்தைகள் ஃபோட்டோ ஏதாவது காப்பி செய்ய.
”கொடுங்க ஸார், காப்பி பண்ணித் தரேன்” என்று கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார். தானே செய்ய வேண்டும், ஆனால் அவன் உதவி செய்ய வேண்டும். வயதானவர்களுகே உரிய நடுக்கமும் நிதானமுமாக ஐந்து நிமிடங்களில் முடிக்கக் கூடிய வேலைக்கு அரைமணியாக்குவார். அவன் எரிச்சலடைய, இவர் கோபமடைய, ஒரு கட்டத்தில் இவர் வருவதைப் பார்த்தாலே ஒளிந்துகொள்ள ஆரம்பித்தான் அவன்.

**********”

ஐயிரே, இன்னா, பிள்ளைங்க எல்லாம் ஊருக்குப் போயிட்டாங்களா?”
”ம்? ” எங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவர் கமலாவின் குரல் கேட்டுத் திரும்பினார்.
“ப்ச், ஆமாம், பேசாம நானும்...” வார்த்தைகள் வெளிப்படுமுன் கண்களிலிருந்து நிறுத்தமுடியாமல் நீர் தளும்பியது. சே இவள் முன் அழுவதா என்ற சிறு சுய கண்டிப்புடன் அதை அடக்க முயன்று தோற்றார்.

பால் வண்டியை ரோட்டில் விட்டு விட்டு வந்த கமலா, ”இன்னா ஸார் இது, பச்சக் குழந்தை மாதிரி அழுதுக்கினு.. அம்மா புண்ணியவதி, சும்ங்கலியாப் போய்ச் சேந்துக்கிறா. நீ இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. ஆமாம் தனியாவா கீறே? சமையலுக்கு ஆள் யார்னா வோணுமா சொல்லு..."

அவர் பிள்ளைகள் ஏன் அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ஏனோ அதைப் பற்றி அவள் கேட்க விரும்பவில்லை.

“அதெல்லாம் வேண்டாம் கமலா. நாளைக்கு வீட்டைக் காலி பண்ணப் போறேன். அடையாறில் ஒரு ஹோம்ல எனக்கு இடம் பாத்திருக்கான் புள்ள. அங்க போயிடுவேன். இந்த வீட்டை வாடகைக்கு விடப் போறானாம்.”

“ஓமுன்னா...?” புரியாமல் இழுத்தாள்.

ஒரு வெற்றுச் சிரிப்புடன், “முதியோர் இல்லம். அது, பெரியவன் கூப்பிடத்தான் செஞ்சான். நான் அங்க போய் அவங்களுக்குத் தொந்தரவா எப்படி? மருமகளும் வேலைக்குப் போறா. இங்கயாவது, தெரிஞ்ச ஊரு. ஆனா இவ்ளோ பெரிய வீடு என் ஒருத்தனுக்கு எதுக்கு.. அதான்..” என்று பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் ஆரம்பித்தவர், ”நீ ரொம்பக் குடுத்து வெச்சவ கமலா. ”


கமலாவின் கண்களில் நீர் சுரந்தது. மௌனமாக அவரைப் பார்த்தாள்.
”அடக் கவலைய வுடு ஐயிரே. அதெல்லாம் அங்க போனீன்னா நல்லாத் தான் இருக்கும். உனக்கென்னா, நீ தான் எங்க போனாலும் வாய் பேசியே எல்லாரோடவும் ராசியாயிடுவியே” என்று இன்னும் என்னென்னவோ பேசி அவரைக் கொஞ்சம் தேற்றினாள் கமலா.

**********


வந்த ஒரு மாதத்தில் இல்ல வாழ்க்கைக்கு ஓரளவு பழகி விட்டிருந்தார் சிவராமன். அழகான பெரிய தோட்டத்துடன் அமைந்திருந்த அந்த முதியோர் இல்லம் வசதியாகவே இருந்தது. அவருக்கு ஒத்த சிந்தனையில் சில நண்பர்கள், லைப்ரரி, டி.வி, மாலையில் பஜன்ஸ், நல்ல சாப்பாடு, வாக்கிங், இண்டெர்நெட் என்று சௌகரியத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனாலும் பழைய வாழ்க்கையின் சுவடே இல்லாமல் திடீரென்று வேரோடு எங்கோ பிடுங்கி வைத்தது மாதிரி ஒரு உணர்வு. முக்கியமாகப் பேரப்பிள்ளைகளோடு விளையாடத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற கழிவிரக்கத்தைத் தவிர்க்கவே முடியவில்லை.

”மிஸ்டர் சிவராமன், உங்களுக்கு விசிட்டர்ஸ் வந்திருக்காங்க.”
யாராக இருக்கும், இன்னும் ஒரு தடவை கூட எட்டிக் பார்க்காத உள்ளூர் உறவுக்காரர்களில் ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டே ரிசப்ஷனை அடைந்தவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை.

”நல்லாருக்கீங்களா?” வழக்கமான தனது தோரணையைத் துறந்து அந்தப் புதிய சூழலில் அவரைச் சந்திக்கும் நிலைமையால் லேசான சங்கோஜச் சிரிப்புடன் நின்றிருந்தாள் கமலா. அருகில் அவள் மகன் குமார்.

”வணக்கம் சார், ரொம்ப நாளா உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சிட்டிருந்தோம். இன்னிக்குத் தான் வர முடிஞ்சுது. எப்படி இருக்கீங்க சார்?” என்று புன்னகையுடன் தான் கொண்டு வந்திருந்த பழப்பையை நீட்டினான்.


தொண்டையில் ஏதோ அடைக்க, புதிதாகப் பிறந்த ஓர் உணர்வுடன், அவனை வாரி அணைத்துக் கொண்டார் சிவராமன்.

Friday, June 12, 2009

தூக்கம் இழுக்கும் கண்களுக்குள்...

சிலேட்டில் தப்பாக எழுதி எழுதி அழித்த திட்டுக்கள்

பகலெல்லாம் விளையாடிய கல்லாங்காய்கள், சொப்பு சாமான்கள்

அழுது கொண்டே டூ விட்ட தோழியின் முகம்

ஃபார்முலாக்கள், ரெக்கார்டு நோட்டின் கோடுகள், எண்ணற்ற குறியீடுகள்

சீட்டுக்கட்டு ராணி, ராஜா, ஜாக்கி

ரசித்துப் பார்த்த படத்தின் பாடல் காட்சி

காலையில் விளக்க வேண்டி சிங்கில் போட்டிருக்கும் அழுக்குப் பாத்திரங்கள்

குழந்தையின் சிரிப்பும் அழுகையும்

இப்போதெல்லாம்...

எழுத்துக்கள்...வண்ண வண்ணத் திரைகளில், விதவிதமான அச்சு வடிவங்களில், கவிதைகள், கதைகள், நெஞ்சை வருடும் நினைவுகள்,

முகமறியா எழுத்துக்களுடன் பரிமாறும் உணர்வுகள், இனம் புரியா நெகிழ்வுகள்...

கொண்டாடுவோம் இந்த அழகிய உறவுப்பாலத்தை.

பேசுவோம், வாழ்த்துவோம், கற்போம், கற்பிப்போம், சிரிப்போம், சிந்திப்போம்.

நல்ல விவாதங்களை வளர்ப்போம்!

வேண்டாத விவாதங்களை மறப்போம் மன்னிப்போம்! ப்ளீஸ்!

:-)

பி.கு: இது என் ஐம்பதாவது பதிவு

Wednesday, June 10, 2009

இன்னொரு ஆட்டோகிராஃப்

"ஹலோ! என் பெயர் செல்வி. சென்னையில் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில வேலை பார்க்கறேன். எனக்குக் கல்யாணம். அதுக்கு எனக்குத் தெரிஞ்சவங்க, எனக்குப் பிடிச்சவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்கணும். அதான் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல போயிட்டு இருக்கேன்.”

அடுத்த காட்சி.
செல்வி - ட்.ஷர்டும் ஜீன்ஸும் அணிந்து வயல் வரப்புகளை ரசித்தபடி சைக்கிள் ஓட்டிச் செல்கிறாள்.
பின்னணியில் “ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...”ஆற்றங்கரையருகே அந்த சிமெண்ட் திண்டின் அருகே வருகையில் ஃப்ளாஷ் பாக்கில் ஒரு பதினான்கு வயதுச் சிறுவன் சிரித்தபடி புத்தகப்பையோடு வருவதை நினைத்துப்
பார்த்துச் சிரிக்கிறாள்.
கட்!
ரசிக்க முடியல இல்ல?


அடுத்து கேரளாவுக்கு ஒரு படகில் பயணப்படுகிறாள். முகம் இறுகுகிறது. நினைவுகள் பின்னோக்கி....
தூக்கிக் கட்டிய வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக நாயர் லக்‌ஷ்மணனுடனான தனது காதலை ஓட்டிப் பார்க்கிறாள். அது தோல்வியடைந்ததும் அவள் மனம் நொறுங்கி ஊர் திரும்புவதும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குக் காட்சிகளாக...
சகிக்க முடியல இல்ல?

பின்பு சென்னையில் ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியில் சேருகிறாள். அங்கு திவாகர் என்னும் இனிய நண்பன் அவளுக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்கிறான். தனது தாயின் மரணத்தைக் கூட மறைத்து விட்டு அவள் புகழ் பெற வேண்டும் என்று அவளுடன் மும்பைக்குச் செல்கிறான். தனது ”தோழி” வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பாடுபடுகிறான்.
செல்வி அவனை நினைத்து நெகிழ்வாகப் பேசுகிறாள் தனது தோழியிடம்.
மனதில் ஒட்டவே இல்லை இல்ல?

ஆம்! ஆட்டோகிராஃப் எனக்கு மிகவும் பிடித்த படம். பல வகைகளில் தமிழ்
சினிமாவின் அழுக்கு ஃபார்முலாக்களை உடைத்தெறிந்து, கண்ணியமான காட்சிகள் மட்டுமே கொண்டு வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம்.

ஆனால் அதுவும் கூட ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமே ஒரு பெண் - அல்லது பல பெண்கள் என்ற பழைய சகதியில் சிக்குண்ட படம் தான். சரி விடுங்கள் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல நான் செய்ய எண்ணியது.

ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு
விருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?

சிறந்த பதிவுகள் எழுதி வரும் இளம் பதிவரொருவர் (பெயர் கூற விருப்பமில்ல) சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

இது ஒரு பெருமை என்றோ அல்லது ஒரு சராசரி மனிதனின் சாதாரண தேவைகள் தானே, இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றோ சத்தியமாக நினைக்க முடியவில்லை.

இதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் இப்படியெல்லாம் பேசினால் என்ன என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம்? அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம்? இது துரோகம் இல்லையா?

ரொம்பப் பழைய கதைகளையும், எல்லோரும் அறிந்த ஏற்றுக் கொண்ட கசப்பான உண்மைகளைத் தான் பேசுகிறேன். தெரிகிறது. ஆனால் இனி வரும் காலத்துக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, ஆண் பெண் ஏற்றத் தாழ்வினிறி கருட்துப் பரிமாற்றங்கள் நடக்கும் பதிவுலகத்தில், இலக்கியம் மட்டுமே படைக்கும் ஒரு பதிவரிடமிருந்து இப்படி எண்ணங்கள் வெளிப்படும் போது பயமாக இருக்கிறது. யாரை நம்புவது?நான் எழுதுவது எனக்காக இல்லை. என் மகளுக்காக, அமித்துவுக்காக, பப்புவுக்காக, உங்கள் மகள்களுக்காக...

நாம் முன்பு முல்லையின் பதிவில் சொன்னதையே சொல்கிறேன், எங்களை விடுங்கள். நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்... நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது. இப்படிப்பட்ட சிந்தனைகள் (மது, மாது) நம்மை எங்கும் கொண்டு செல்லாது.

இல்லை, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.

பின் குறிப்பு 12 Jun 09: என் பதிவில் ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்று உணர்கிறேன். மன்னிக்கவும்!

“மது, மாது” என்று பெண்ணையும் ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் அந்த சொற் பயன்பாட்டுக்குத் தான் வருந்தினேன். மற்றபடி மது அருந்துபவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்ற மனப்பான்மை எனக்கு அறவே கிடையாது.

Cheers!

தீபா








Sunday, June 7, 2009

டோபா டேக் சிங்

சாதத் ஹஸன் மாண்டோவின் மிகப் புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்றான ”டோபா டேக் சிங்” திரைப்படமாக வெளிவர உள்ளது.
பான் நளின் என்ற இயக்குநர் எடுக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஆமிர் கானும் ”டைட்டானிக்” நாயகி கேட் வின்ஸ்லெட்டும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

2005 ல் இதே கதை ஆஃபியா நதானியல் என்ற பாகிஸ்தானி இயக்குநரால் குறும்படமாக வெளிவந்துள்ளது.

டோபா டேக் சிங் என்பது தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ள சிற்றூர் ஆகும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரண்டு நாடுகளிலும் உள்ள
மனநலம் பாதிக்கப் பட்டவர்களின் இடமாற்றம் பற்றியும் அவர்களது பார்வையில் பிரிவினையும் இடப் பெயர்ச்சியும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை
நையாண்டியாகவும அதே சமயம் நெஞ்சை உருக்கும் உணர்வுகளுடனும் சொல்லும் கதை தான் டோபா டேக் சிங்.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சாதத் ஹஸன் மாண்டோ. உருது எழுத்தாளர்; இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மனித வெறியாட்டங்களையும் இவர் அளவுக்கு அழுத்தமாகப் பதிவு செய்தவர் யாருமில்லை எனலாம்.

சர்ச்சைக்குரிய பல களங்களில் அநாயாசமாய் எழுதக் கூடிய இவர் சமூகத்தின் அவலங்களை இடக்கரடக்கலின்றி அப்பட்டமாகத் தோலுரித்து எழுதினார். தனது பாத்திரங்கள் எத்தன்மையினராக இருந்த போதும் அவர்களை எந்த விதப் போலிப் பூச்சுமின்றி உலவ விட்டார்.

தனது எழுத்துக்கள் பற்றி அவர் கூறுவது: ”எனது கதைகள் உங்களுக்கு அருவருப்பாக இருந்தால் அப்படிப்பட்ட அருவருப்பான சமூகத்தில் தான் வாழ்கிறீர்கள் என்று
உணருங்கள். என் கதைகளின் மூலம் உண்மையைத் தான் வெளிப்படுத்துகிறேன்”

காலீத் ஹாசன் என்பவர் இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றைப் படித்து இரவில் தூக்கம் வராமல் தவித்த நாட்கள் பல. அப்படி ஒரு ஆளுமை உண்டு அவரது எழுத்துக்களில்.

தமிழில் யாராவது இவரது படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

என் மொழிபெயர்ப்பு சகிக்கும் படியாக இருப்பதாகப் பலர் ஒத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் பதிவுலக நண்பர்களூக்காக இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!

Friday, June 5, 2009

32 கேள்விகள் - சங்கிலிப் பதிவு, மற்றும் தீக்கதிர்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தீபாவளி அன்று பிறந்ததால். ரொம்பப் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
Bipolar disorder இருக்குமோன்னு பயப்படற அளவுக்கு mood swings இருக்கற ஆளு நான். நான் அழறதுக்கும் சிரிக்கறதுக்கும் கணக்கே கிடையாது, பெரிசா காரணமும் கிடையாது!

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து ஓகே. கையொப்பம் ரொம்பப் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட காம்பினேஷன்கள் உள்ளன.
முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல்
வத்தக்குழம்பு+ பாசிப்பருப்பு-கத்திரிக்காய்க் கூட்டு+அப்பளப்பூ
தாளித்து விட்ட தயிர்சாதம்+ஊறுகாய்

சைவத்துல தான் இவ்ளோ லிமிட்ஸ். அசைவம்னா காரசாரமா சமைச்ச எதுவாக இருந்தாலும்!குறிப்பாக, பிரியாணி, மீன்குழம்பு.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நட்பு வெச்சுக்கறேனோ இல்லையோ, கண்டிப்பா பகைச்சுக்க மாட்டேன்! (பயமுறுத்தறேனாம்!)

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில். கடல் உப்புத்தண்ணில்ல?

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் சிரிப்பு. நல்லாச் சிரிக்கலேன்னா எனக்குப் பிடிக்காது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம் பிடிக்காதது: அதனாலேயே சில சமயம் சின்னப்புள்ளத் தனமா நடந்துக்கறது!

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது: அன்பு, எனக்கும் சேர்த்து வைத்திருக்கும் நிதானம், பொறுமை, மெச்சூரிட்டி
பிடிக்காதது: அதனாலேயே என்னை ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடத்துவது

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அக்கா

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை நிற குர்தா. கறுப்பு நிற பைஜாமா.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நிசப்தம். நேஹா தூங்குகிறாள்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிவப்பு!

14. பிடித்த மணம்?
சின்னக் குழந்தை வைத்திருக்கும் எல்லோருக்கும் பிடித்தது, பேப் சோப் அல்லது பவுடர் மணம் தான். எனக்கும் அதே!
மற்றபடி ஜோவின் பெர்ஃப்யூம், தலைக்குக் குளித்தபின் கமழும் ஷாம்பு மணம், மசாலா டீ மணம், நிறைய இருக்கு.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அகநாழிகை - இவரது கவிதைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் மிகவும் ரசிக்கும் எழுத்து ந்டை இவருடையது. இவரது பின்னூட்டங்களில் உண்மையும் கருத்தாழமும் இருக்கும். இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமே என்று தான் அழைக்கிறேன்.
அங்கிள் (மாதவராஜ்) - பிடித்த விஷங்களைப் பற்றித் தனிப்பதிவே போட்டாச்சு. அழைக்கக் காரணம்? சும்மா வம்பிழுக்கலாமேன்னு தான்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அமிர்தவர்ஷினி அம்மா - இவரது அமித்து அப்டேட்ஸ் அனைத்தும்.
வித்யா - இவரது ரம்மியமான காதல் பதிவுகள் அனைத்தும்

17. பிடித்த விளையாட்டு?
பேட்மிண்டன், டென்னிக்காய்ட் (பள்ளி நாட்களில்)

18. கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
இயல்பான, யதார்த்தத்திலிருந்து விலகாத ரியலிஸ வகைப் படங்கள்.ஆனால் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் படங்களும் உருகி உருகிக் காதல் செய்யும் படங்களுக்கும் கொஞ்சம் விதி விலக்கு!

20. கடைசியாகப் பார்த்த படம்?
எரின் ப்ரோக்கோவிச் (டி.வியில்)

21. பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம். சென்னையில் அது வருவதே இரண்டு மூன்று மாதங்களுக்குத் தான். அதை அனுபவிக்காமல் எப்படி?

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஏங்க வெறுப்பேத்தறீங்க. புத்தகங்கள் படிச்சு ரொம்ப நாளாச்சு. நேஹா என்னைப் பதிவுகள் பக்கம் வர விடறதே பெரிசு.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நேஹா பிறந்தது முதல் அவள் படம் தான். மாற்றி இரண்டு மாதங்களாகின்றன.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : நேஹாக்குட்டி பேசுவது, ஜோ வந்திறங்கும் பைக் சத்தம், வெகு நேரமாக மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், கடலலைகள், புல்லாங்குழல்..நிறைய இருக்கு!
பிடிக்காத சத்தம் : அதிக சத்தத்தில் டி.வி, கட்டடங்கள் கட்டும் போது கம்பியடிக்கும் சத்தம், வீதிகளில் மைக் செட்களின் அலறல்கள்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஹைதராபாத்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம்!

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனசாட்சி இல்லாத சுயநலம், இரக்கமின்மை, தற்பெருமை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம், கொஞ்சூண்டு அகங்காரம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போனது - ஊட்டி, பைக்காராபோக விரும்புவது - சிம்லா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
உணர்வுகளைக் கம்மி பண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் அறிவு பூர்வமா

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சொல்லாமல் எதுவும் செய்வதில்லை.
இல்லாம? அப்படி எதுவும் இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே

தீக்கதிர் நாளிதழில் (ஜூன் 2, செவ்வாய்) நான் மொழியாக்கம் செய்த “ஒரு மனசாட்சியின் குரல்” பதிவு வெளிவந்துள்ளது. தீக்கதிர் ஆசிரியர் குழுவுக்கும், திரு. மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.
http://theekathir.in

Tuesday, June 2, 2009

அங்கிள்!

(வேறு என்ன தலைப்பு வைப்பது?)

”இனிமே அங்க போனியோ காலை உடைச்சிடுவேன்.”

”அந்த அங்கிள் கைவலிக்க வலிக்க வா வா” ன்னு கூப்பிடறார்ப்பா. நான் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரேன். அந்த நான்கு வயதுச் சிறுமி அப்பாவிடம் அழுது மன்றாடுகிறாள். வழக்கமாக அவள் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று விளையாடுவதைத் தடுக்காத அவளது அப்பா இதற்கு மட்டும் மறுக்கிறார்.


அண்ணனுடன் அங்கு ஒரு தடவை சென்ற போது அந்த அங்கிளும் அவரது வீட்டில் ஒரு ஆண்ட்டியும் (அவரது அம்மாவோ அண்ணியோ) அவளைத் தூக்கிக் கொஞ்சியதும் ஆசையோடு விளையாடியதும் நினைவுக்கு வந்தது. அழகாகப் படம் வரையும் அந்த அங்கிள் அவளை உட்கார வைத்து அப்படியே அசலாகப் படம் கூட வரைந்து தந்தாரே. இவ்வளவு நல்ல அங்கிள் வீட்டுக்குப் போகக் கூடாது என்கிறாரே அப்பா.
அந்தச் சிறுமிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவளுடைய அங்கிள் அவளது அக்காவைக் காதலிக்கிறார். அதனால் தான் அப்பா தன்னைத் தடுக்கிறார் என்பது.

பிறகு ஒரு நாள் அவர்கள் ஊரை விட்டே போய் விட்டார்கள். மாது அங்கிள் என்றொரு ”உயர்ந்த!” அன்பு உருவம் லேசான பசுமையோடு எப்போதாவது நினைவில் வரும்.

ஐந்தாறு வருடங்களுக்குப் பின்பு அக்காவுக்குக் கல்யாணம். வீட்டில் கொஞ்ச நாளாகவே அக்கா அழுது கொண்டிருக்கிறாள். அப்பா கோபமாக இருக்கிறார். அண்ணன் அக்காவை ஏதோ கேலி செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான். மாது என்ற பெயரும் அடிபடுகிறது. அக்கா அந்த மாது அங்கிளைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்பது புரிந்தது. ஆனால் அந்த அங்கிள் தான் எப்போதோ ஊரைவிட்டுப் போய் விட்டாரே. பின்பு எப்படி? எப்படியோ மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

ஒருவழியாகத் திருமண நாளும் வந்தது. அக்கா பூரிப்பும் சந்தோஷமுமாக இருந்தாள். எளிமையாக ஆனால் சிறப்பாக நடந்த அந்தத் திருமணத்தில் சிறுமி தீபா வெகு உற்சாகமாக இருந்தாள். சரி மூன்றாம் நபரைப் போல் பேசியது போதுமென்று நினைக்கிறேன், நான் தான் அந்தச் சிறுமி!

திருமணம் முடிந்த கையோடு அக்காவும் அங்கிளும் ஊருக்குக் கிளம்பி விட்டார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த ஊரில் இன்னொரு அப்பா அம்மா அவளூக்காக எப்போதும் இருக்கிறார்கள்.

அக்கா விரும்பிய போதெல்லாம், அல்லது அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போன போதெல்லாம், “உன் மனதுக்குத் திருப்தியேற்படும் வரை இருந்து எல்லோரையும் கவனித்து விட்டு வா” என்று அவர் அக்காவை வீட்டில் விட்டுச் சென்று விடுவார். அந்த் சமயத்திலெல்லாம் ஊரில் தனியாக இருந்து வெளியில் சாப்பிட்டுக் கொண்டு... அந்தச் சிரமங்களையெல்லாம் அவர் பெரிது படுத்தியதில்லை.

அக்காவும் பெரும்பாலான பெண்களைப் போல் பிறந்த வீட்டுக்கு வந்தால் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டு.. மூச்! இழுத்துப் போட்டுக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வாள். அம்மா அப்பாவுக்குப் பணிவிடை செய்வது, வீட்டை ஒழுங்கு படுத்துவது, எனக்கு உணவூட்டுவது(!), அண்ணனுக்குக் (அவளுக்குத் தம்பி) தலைக்கு எண்ணெய் தேய்த்து விடுவது, ஏங்கிப் போயிருந்த என்னைப் பிரிந்திருந்த நாட்களுக்கெல்லாம் சேர்த்து வைத்துக் கொஞ்சிக் கெடுப்பது என்று!


அக்கா வரும் நாட்களை எதிர்பார்த்தே வருடத்தின் மிச்ச நாட்களை ஓட்டுவது இன்று வரை பழக்கமாகி விட்டது. திருமணமான பின்பும் கூட. அதாவது பேசும் போது கூட “அம்மு வந்துட்டுப் போனாளே அப்போ..” , ”அம்மு வரும் போது பார்த்துக்கலாம்” - இது எங்கள் வீட்டில் எல்லாருக்குமே பொருந்தும்.


என் திருமணம் நடக்க முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அக்காவும் அங்கிளும் தான். அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைத்ததும் ஜோவின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியதும் கூட அவர்கள் தான்.


என்னிடம் காட்டிய அதே வாஞ்சையை ஜோவிடம் காட்டுவதும் ஜோவும் ”அண்ணா அண்ணியிடம்” உண்மையான பாசத்தோடு இருப்பதும் என் வாழ்வின் வரம் என்றே நினைக்கிறேன். ஆனால் இவர்கள் சேர்ந்து கொண்டால் எங்கள் தலைகள் (அக்கா, நான்) உருள்வது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக இருப்போம்!
இதையெல்லாம் விட, எந்தச் சந்தர்ப்பத்திலும், நான் எப்படி நடந்துகொண்ட போதிலும் “நீ ரொம்ப நல்ல பெண் தெரியுமா” என்ற அவரது வார்த்தைகள் எனது மனசாட்சியை எப்போதும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பவை. அதற்காக நான் என்றென்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீது வேறு எவருக்கும் இல்லாத நம்பிக்கையும் கனவுகளும் அங்கிளுக்கு உண்டு என்று சில சமயம் தோன்றும். (சற்று மிகையாகவே!) அதில் எவ்வளவு நான் நிறைவேற்றுவேன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ரொம்பவும் ஏமாற்றிவிடக் கூடாதென்று நினைத்துக் கொள்கிறேன்.

என் அன்புக்குரிய அக்காவை ஒருமையில் குறிப்பிட்டிருப்பது பற்றி விளக்கம். என்னை விட பத்து வயதுக்கு மேல் மூத்தவளாயினும் அக்கா என்று அழைப்பது அவளுக்கு அறவே பிடிக்காது. அங்கிள் என்று நான் அவரை அழைப்பதும் அக்காவின் விருப்பம் தான். மேலும் சிறு வயதில் ஒரு தாய் போல் அரவணைத்தவள், இப்போது நெருங்கிய தோழியாக ஆகிவிட்டாள். அது தான் அவளது சிறப்பம்சம். அவளது இளமையின் ரகசியமும் அது தான்!

பி.கு1: அங்கிள் என்ற படைப்பாளியும் சிந்தனாவாதியும் தொடர்ந்து பிரமிப்பூட்டிக் கொண்டு வருவதால் அவரின் அந்த முகங்களைப் பற்றி எழுத என் எழுத்துக்களுக்கு வலிமை போதாது. மன்னிக்கவும்.

பி.கு 2: அடடா! இது அங்கிளைப் பற்றிய பதிவாயிற்றே. அக்கா தவிர்க்க முடியாமல் இடையில் வந்து விட்டாள். அவர்களைப் பிரிப்பது அழகல்ல. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். அக்கா பற்றிய தனிப்பதிவு விரைவில்.