சிரிப்பு!

Sense of humor!

சிரிக்க‌ச் சிரிக்க‌ப் பேசுவ‌தும் எழுதுவ‌தும் ஒரு அலாதியான‌ க‌லை. வெகு சில‌ருக்கே இல‌குவாக‌க் கைவ‌ரும் இக்க‌லையை நான் வெகுவாக‌ ர‌சிக்கிறேன்.

இதில் ப‌ல‌வ‌கைக‌ள் உண்டு. சிரிக்க‌ வைக்க‌ வேண்டும் என்று வ‌லிந்து வார்த்தைக‌ளையும் பாவ‌னைக‌ளையும் வ‌ர‌வ‌ழைத்துக் கொண்டு சிலர் பேசுவார்கள்; எழுதுவார்கள். முத‌லில் ஒரிரு முறை சிர்ப்பு வ‌ரும். பிற‌கு ச‌லித்து விடும். (தொழில் ரீதியான சிரிப்பாளர்கள் விதிவிலக்கு! )


நாம் சிரிக்கும் வ‌ரை அது ந‌கைச்சுவையாக‌ இருந்த‌து என்ற‌ உண‌ர்வே இல்லாம‌ல் சில‌ர் அடிக்கும் க‌மென்டுக‌ளே என்னைப் பெரிதும் க‌வ‌ர்கின்ற‌ன‌. இத்தகையவ்ர்கள் சீரிய‌ஸாக‌ முக‌த்தை வைத்துக் கொண்டு சீரியஸாக‌வே ஏதாவ‌து பேசினாலும் ந‌ம‌க்குச் ச‌ட்டென்று சிரிப்பு வ‌ந்து விடும். இய‌ல்பான‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌கைச்சுவை தான் என் சாய்ஸ்.


என‌க்குத் தெரிந்த‌ ஒருவ‌ர் இருக்கிறார். பிற‌ரைச் சிரிக்க‌ வைப்ப‌த‌ற்காக‌ ச‌தா ம‌னைவிய‌க் கிண்ட‌ல‌டித்துக் கொண்டே இருப்பார். நான்கு நாள் ஊறவைத்த உளுந்தில் மனைவி வடை சுட்டதைப் போல் ஒரு சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அவ‌ர் விவ‌ரித்த‌ வித‌ம் உண்மையிலேயே ந‌ன்றாக‌ இருந்த‌து. ஆனால் தொட‌ர்ந்து அவ‌ர் இதையே செய்ய‌வும், அவ‌ர் ம‌னைவி நெளிய‌வும், எங்க‌ளுக்கு அவ‌ர் மீது வெறுப்பே மேலிட‌த் தொட‌ங்கிவிட்ட‌து. எதை அவர் தன் மனைவியுடன் மட்டும் பகிரும் போது அன்பின், செல்லத்தின் வெளிப்பாடாக இருந்ததோ அதைச் சபையைச் சிரிக்க வைக்கப் பயன்படுத்தும் போது அநாகரிகமாகி விடுகிறது.

ந‌கைச்சுவை உண‌ர்வு என்றால் சிரிக்க‌ வைப்ப‌து ம‌ட்டுமே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சில‌ருக்குச் சிரிக்க‌ வைப்ப‌தில் ஆர்வ‌ம் இருக்கும். அடுத்த‌வ‌ர் பேச்சை ர‌சித்துச் சிரிக்க‌ மாட்டார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு நல்ல ந‌கைச்சுவை உண‌ர்வே கிடையாது என்பேன். அத்த‌கைய‌வ‌ர்களைக் கண்டால் பெரும்பாலும் ஒதுங்கி விடுவேன்.
தனக்குச் சிரிக்க‌ வைக்க‌த் தெரியாவிட்டாலும் அடுத்த‌வ‌ர் பேச்சில் ம‌கிழ்ந்து ர‌சித்துச் சிரிப்பது, ஒரு சூழ்நிலையில் உள்ள நகைச்சுவையை முதலில் கண்டுப்பிடிப்பதும் தான் sense of humor என்பதன் உண்மையான பொருள். பிறரைத் தவிர்த்து தன்னைத் தானே கிண்டலடிப்பது தான் இதில் மிக முக்கியமான அம்சம்.

எந்த‌ ஒரு பிர‌ச்னையையும் ப‌த‌ட்ட‌மில்லாம‌ல் இல‌குவாக‌க் கையாள்வ‌து, எதிராளி கோப‌த்தைக் க‌க்கினாலும் அச‌ராம‌ல் எள்ள‌லுட‌ன் ப‌திலிறுப்ப‌து, அப்ப‌டி ஒரு ப‌திலைக் கேட்ட‌வுட‌ன் ச‌ட்டென்று கோப‌ம் ம‌ற‌ந்து சிரித்து விடுவ‌து, இது எல்லாமே ந‌கைச்சுவை உண‌ர்வில் அட‌ங்கும்.


காலை நேர அவ‌சர‌த்தில் சின்ன‌ச் சின்ன‌ சிடுசிடுப்புக்க‌ளுக்கிடையில் மின்ன‌ல் கீற்றுப் போல‌ ஏதோ ஒரு வார்த்தையும் பாவ‌னையும் ச‌ட்டென்று சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்து ம‌ன‌தை லேசாக்கிவிடும். அந்த‌ நேர‌ம், அந்த‌ச் சிரிப்பு ம‌ட்டும் வ‌ரா விட்டால் நாளெல்லாம் ஒரு உறுத்த‌ல் ம‌ன‌தில் இருந்து எல்லா வேலைக‌ளையுமே பாதிக்க‌க் கூடும்.

இந்த‌ ஒரு அம்ச‌ம் தான் என்னைப் பொறுத்த‌வ‌ரை மணவாழ்க்கையில் மிக‌ மிக‌ முக்கிய‌மான‌து. To be able to laugh at yourself and make the other person laugh. க‌ண‌வ‌ன் ம‌னைவி ஒருவ‌ரை ஒருவ‌ர் நையாண்டி செய்ய‌லாம். உண்மையான‌ அன்பு என்னும் அஸ்திவார‌ம் இருக்கும் போது ம‌ற்ற‌வ‌ர் ம‌ன‌து புண்ப‌டும் அபாயமே இருக்காது.

அந்த‌ நையாண்டியில் அன்பு இருக்கும், ம‌றைமுக‌மான‌ பெருமை இருக்கும், அன்பில் மொத்த‌மாக‌ ச‌ர‌ண‌டைந்த‌த‌ன் குறிப்பும் இருக்கும்.
கோபமாக ஏதாவது முனகி விட்டாலும் கூட, கடைசியில் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசிவிட்டு "என் சோக‌க் க‌தையைக் கேட்டா ம‌ட்டும் எப்ப‌டிப் பொங்கிப் பொங்கிச் சிரிப்பு வ‌ருது பாரு இவ‌ளுக்கு!" என்ற வார்த்தைகளுக்குப் பின் உண்மையிலேயே சிரிப்பு பொத்துக் கொண்டு வ‌ரும். அத‌ன் பின் எங்கே கோப‌ப்ப‌ட‌?

ஜோவும் நானும் சண்டை போட்டு விட்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் டிவி பார்த்துக் கொண்டிருப்போம். வடிவேலு காமெடி சீன் அல்லது சூழலுக்குப் பொருத்தமாக ஏதேனும் வசனம் வ‌ந்தால், யார் முத‌லில் சிரிப்ப‌து என்ற‌ சொல‌லாத‌ போட்டி ந‌ட‌க்கும். பெரும்பாலும் நான் தான் தோற்று விடுவேன். அதில் இருவ‌ருக்குமே வெற்றி தான்.
"உள்ளதிலேயே ரோஷ‌ங்கெட்ட‌ உற‌வுன்னா அது புருஷ‌ன் பொண்டாட்டி உற‌வு தான்" என்று வேதாந்த‌த்துட‌ன் ச‌மாதான‌ம‌டைந்த‌ நாட்க‌ள் ஏராள‌ம்!

பி.கு: இப்படி சிரிப்பாய்ச் சிரிக்கும் போது, ரொம்பப் புரிந்தது போல் கைதட்டிக் கொண்டு, உடம்பையே ஆட்டிக் கொண்டு நேஹாவும் அழகாய்ச் சேர்ந்து கொள்கிறாள்.
அவ நல்லாப் பேச ஆரம்ப்பிக்கும் போது இருக்கு எங்களுக்கு
:-)

பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு

பிடித்தவர் பிடிக்காதவர் தலைப்பில் எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார் மாதவராஜ் அங்கிள்.

அவரே சொல்லி இருப்பது போல் இது ஒரு குழந்தைத் தனமான விளையாட்டுத் தான். ஆனால் குழந்தைத் தனங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு செயலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என்னைக் கேட்ட போது உடனே சம்மதித்து விட்டேன்!

ஒருவரைப் பிடிக்கக் கூடப் பெரிதாகக் காரணம் இல்லாமல் போகலாம். ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்.
அதைச் சொல்ல வைப்பது தான் இந்த விளையாட்டின் வெற்றி.


எனக்குப் பொதுவாக strong likes and dislikes உண்டு.
(But no preconceived prejudices. And I definitely do not hate anybody in cold blood. :-) )

பிரபலங்களைப் பொறுத்தவரை strong likes and dislikes கிடையாது. மனதில் உடனே தோன்றுபவர்களைத் தான் இங்கே எழுதுகிறேன். உதாரணமாக நான் ரொம்ப மதிக்கின்ற, என்றுமே பிடித்த நடிகை என்று யோசித்தால் மனோரமா தான். ஆனால் சட்டென்று தமன்னாவின் துறுதுறு முகம் வருகிறது. அதனால் இப்போதைக்குத் தமன்னா தான்!

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: பெருந்தலைவர் காமராஜர்.
பிடிக்காதவர்: சுப்ரமணியம் சுவாமி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: தமிழ்ச்செல்வன்
பிடிக்காதவர்: தேவிபாலா (தெரியாமல் சில கதைகள் படித்துத் தலைவலியில் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்)

3. கவிஞர்:
பிடித்தவர்: பாரதியார்
பிடிக்காதவர்: வாலி

4. இயக்குனர்:
பிடித்தவர்: பாலுமகேந்திரா
பிடிக்காதவர்: எஸ் பி முத்துராமன்

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம்
பிடிக்காதவர்: அஜீத்

6. நடிகை:
பிடித்தவர்: தமன்னா
பிடிக்காதவர்: த்ரிஷா

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: How to name him? The one and only maestro!
பிடிக்காதவர்: இந்த நகை ஸ்டாண்ட் மாதிரி ஒருவர் வருவாரே சில்க் ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, (சங்கர்) கணேஷ்

8. பாடகர்:
பிடித்தவர்: ஹரிசரண்
பிடிக்காதவர்: ஷங்கர் மகாதேவன்

9. பாடகி:
பிடித்தவர்: என்றும் என்றென்றும், குரலிலும் குழந்தைச் சிரிப்பிலும் வசியப்படுத்தும் சித்ரா.. சித்ரா... சித்ரா
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: கிரிக்கெட் ஆடாத அனைத்து விளையாட்டுக் காரர்களும்
பிடிக்காதவர்: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்! :)

ஆட்டத்தைத் தொடர நான் அன்புடன் அழைப்பது:

சென்ஷி

ஆயில்யன்

சின்ன அம்மிணி

ராப்

பி.கு: மன்னிக்கவும். விதிகளை எழுத மறந்து விட்டேன். விதிமுறைகளுக்குத் தொடரின் முதல் பதிவைப் பார்க்கவும்.

இதெல்லாம் என்னைக்குத் தான் ஒழியுமோ!

வரதட்சணை.

எனக்குச் சில விஷயங்கள் புரிவதே இல்லை. அதில் ஒன்று:
அருமை பெருமையாய் மகளைப் பெற்று வளர்த்து விட்டு, தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுதும் கொட்டிக் கொடுத்து அவளை எவனோ ஒரு கோயான் தலையில் கட்டிவிட்டுப் (படிப்பு, நல்லவேலை, சொத்து சுகம் என்று ஆயிரம் காரணங்களுக்காக; அது பொய்யா உண்மையா என்று கூட சரியாகத் தெரியாமல்) பின்பு மகள் கஷ்டப்படும் போது தலையில் கை வைத்துக் கொள்கிறார்களே இந்தப் பெற்றோர்களை என்னவென்று சொல்வது?

இவர்கள் சொல்படி கேட்டுச் சமர்த்தாக இருந்தது தான் அப்பெண்ணின் தவறா?

பக்கத்துத் தெருவுக்குக் கூட அண்ணன் தம்பி துணையில்லாமல் என் மகள் போக மாட்டாள் என்று பொத்திப் பொத்தி வளர்த்து விட்டு எவனோ ஒரு ______ நம்பி அவளது வாழ்நாளையே மேளதாளத்துடன் ஒப்படைக்கிறீர்களே? உங்களை எல்லாம்...........
வேண்டாம்!

வரதட்சணை கொடுக்காமல் மகளைக் கட்டிவைத்தால் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் மரியாதை இருக்காது என்று ஏன் நினைக்கிறார்கள்? இது அபத்தமில்லையா?

சரி, பொருளாதாரச் சமன்பாடு அவ்வளவு முக்கியமென்றால் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து சொந்தக் காலில் நிற்க வையுங்கள்.
ஆனால் அப்படிப் பட்ட பெண்களாவது வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்க வேண்டும்.

”நாங்கள் வானில் பறந்தாலும், உயரங்களைத் தொட்டாலும் திருமணம் என்று வந்தால் வீட்டினர் சொல்படி தான் கேட்போம், எங்கள் ஜாதியில் ஜாதகம் பார்த்து அப்பா அம்மா சொல்ற ஆளைத் தான் கட்டிக்குவோம்” என்று சொல்வதில் இவர்களுக்கு இருக்கும் பெருமை எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

சரி, பெற்றோர் மனம் இணங்கத் திருமணம் செய்து கொள்வது நல்ல விஷயம் தான். எல்லாரும் காதலித்துத் திருமணம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. குறைந்த பட்சம், இந்த ஜாதி, ஜாதகம் இதெல்லாம் பார்க்க வேண்டாம் என்றாவது பெற்றோரிடம் சொல்லலாம் இல்லையா?

ஜோசியம், ஜாதகம், இதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று புரிந்தாலும், ஒரேயடியாக விட்டொழிக்காமல் ஓரளவுக்குப் பார்த்தல் பரவாயில்லை, அதிகமானால் தான் தவறு என்று சப்பைக் கட்டுக்களுடன் ஊறுகாயைப் போலவாவது ஏன் இன்னும் தொட்டுக் கொண்டிருக்கிறோம்? அது கெட்டுப் போய் நாறுவது தெரியவில்லையா?

அடிப்படை உரிமையையே விட்டுக் கொடுத்து விட்டு, பின்னாளில் கஷ்டப்பட்டு நஷ்டப்படும் போது வாய்கிழிய உரிமைப் போராட்டம் பேசி என்ன பயன்?

எப்படியும் திருமணம் என்று வந்தபின் ஆணும் பெண்ணும் ஓரளவு போராடித் தான் ஆக வேண்டும். அது யாராலும் உங்கள் மீது திணிக்கப் படவில்லை. உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நீங்களே தீர்மானித்தீர்கள் என்ற திருப்தியை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

சுருங்கச் சொன்னால், திருமணத்துக்குத் தயாராக இருக்கிறீர்களா? கிணற்றில் விழுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். குறைந்த பட்சம் கண்ணைத் திறந்து கொண்டு, அடி கிடி படாமல், பாழும் கிணறாக இல்லை என்று தெரிந்து கொண்டு விழுங்கள்.

(தோழி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது வாழ்க்கை தான் நினைத்த படி அமையாமல் போனதற்குத் தனது அருமைத் தந்தை தான் காரணம் என்று அவர் சொல்லி வருந்தினார். மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அந்தத் தந்தையைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவே இந்தப் பதிவு.)

அன்பைப் பகிர ஒரு வாய்ப்பு...

அளித்த முல்லைக்கு மனமார்ந்த நன்றிகள்.














Scrumptious blog விருதை இவர் எனக்குத் தந்து சில நாட்களாகின்றன. முன்னம் ஒரு முறை சுவாரசிய வலைப்பதிவு விருது தந்த போது அதைப் பதிவிடவும் பகிரவும் வாய்ப்பு அமையவில்லை. அதற்கும் சேர்த்துப் பன்மடங்கு உவகையுடன் இந்த விருதை இப்போது நான் கொடுக்க விரும்புவது:

நேசமித்ரன் - நேசமும் நேட்டிவிட்டியும் நீங்காமல் நிறைந்திருக்கும் கவிதைகளுக்காக!

அய்யனார் - எழுத்தில் வெளிப்படும் அறச்சீற்றத்துக்காக!

ஆசிப்மீரான் - வாஞ்சையான நெல்லை மொழியில் இவர் எழுதும் எதற்காகவும்!

அமிர்தவர்ஷினி அம்மா - அமித்துவுக்கு மட்டுமல்ல தனது கதை மாந்தர்களுக்கும் காட்டும் தாயன்புக்காகவும், படிப்பவர் மனதோடு சட்டென்று நெருங்கி வசியப்படுத்தும் எழுத்து வன்மைக்காகவும்!

செந்தில்வேலன் - ”பயனில சொல்லாமை” என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் பயனுள்ள சிறந்த பல தகவல்களுடன் ஒவ்வொரு பதிவையும் எழுதும் பாங்குக்காக

காமராஜ் - சமூக சிந்தனை மிளிரும் மிகச்சில சிறந்த பதிவுகளுள் முக்கியமான ”அடர்கருப்பு” க் காக

அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
:)

ஜாதீ!

அலுவலகத்தில் உணவு இடைவேளை.

"ஹேய் ஷைனி, இது கண்டா..ஈ ஓணத்தினு..." ஒன்றாய் கூடி கொஞ்சு மலையாளத்தில் அரட்டை ஒரு புறம்.

"ஹேய், இன்னிக்குத் தான்யா தெரிஞ்சுது, நம்ப பி.எம் மும் "....." தான்; க்ரேட். என‌க்கு அப்ரெய்ச‌ல் ப்ராப்ள‌ம் இல்லை! நீ தான் பாவம்!...ஹீ ஹி.. ஜ‌ஸ்t ஜோக்கிங் யார்!"


"ஹலோ! டேய், வ‌ச‌ந்த் மெயில் ப‌ண்ணிருக்கான்டா‌.. ஆன்சைட்ல‌ இன்னும் ரென்டு பேர் வேணுமாம். என்னையும் ரெக்கமென்ட் பண்ணி இருக்கான்....
ஆமாம் ம‌ச்சான், அவ‌ன் எங்காளுங்க‌ தான்."...

தெளிந்த குளத்தில் கல்லெறிந்தது போல் ஏதேதோ தோன்ற‌, தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.
நான் என்ன‌ ஜாதியில் பிற‌ந்தேன் என்று நினைவு கூர்ந்து யாரையாவ‌து அதில் தெரியுமா என்று யோசித்து முடிப்ப‌த‌ற்குள், என்மீது எனக்கே வெறுப்பு வந்து அடிநாக்கில் கசந்தது. "சீ " என்று உர‌க்க‌க் க‌த்தி விட்டேன். த‌லையை உத‌றிக் கொண்டு போய் சிங்கில் காறித் துப்பி விட்டு வ‌ந்தேன்.

"என்ன... என்ன ஆச்சு?" என்று ப‌தறினார்கள்;

"ஒண்ணுமில்ல, சாப்பாட்டில‌ முடி" என்று சிரித்தேன்.

தீபாவ‌ளி!

தீபாவ‌ளி என்றாலே சிறு வ‌ய‌து முத‌ல் தோன்றுவ‌து... அதிக‌ம் எதிர்பார்க்க‌வைத்து ஏமாற்றும் ப‌ண்டிகை என்ப‌து தான்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ப‌ள்ளியில் தோழிக‌ளைக் க‌ட்டிய‌ணைத்து வாழ்த்துக்க‌ள் ப‌ரிமாறிக் கொள்ளும் போதும், க‌ரும்ப‌ல‌கையில் "ஹாப்பி தீபாவ‌ளி" எழுதி அழ‌க‌ழ‌காய்ப் ப‌ட‌ம் வ‌ரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வ‌ழ‌க்காமாய்ப் ப‌ருப்பும் புளியும் கொதிக்கும் சமைய‌ல‌றை ப‌ல‌கார‌ங்க‌ளும் எண்ணெய் ஸ்ட‌வ்வுமாய்ப் புதுக்கோல‌ம் கொள்ள, அம்மாவுக்கு உத‌வும் போது பெருமித‌ம் பொங்கும். வாங்கிய‌ ஒரே புத்தாடையைப் ப‌த்து த‌ட‌வை திற‌ந்து பார்க்கும் போது ம‌ன‌ம் புல்ல‌ரிக்கும். டமால் டுமீல் வெடிச்ச‌த்த‌ங்க‌ளுட‌ன் பொழுது விடிவ‌த‌ற்க்குள் ஏனோ ப‌ண்டிகையின் மொத்த‌ க‌ளையும் வ‌டிந்து விடும்.

அதான் தீபாவ‌ளி வ‌ந்துடுச்சே..! இனி போக‌த் தானே போகுது என்று!எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர‌ என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)

அக்காவும் அங்கிளும் வ‌ந்திருந்த‌ அவ‌ர்க‌ளின் த‌லை தீபாவ‌ளி தான் நாங்கள் மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌க் கொண்டாடிய‌ தீபாவ‌ளி. சிவ‌ப்பு நிற‌த்தில் என‌க்கு ஒரு "கீதாஞ்ச‌லி ட்ரெஸ்" வாங்கி வ‌ந்திருந்தார்க‌ள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்க‌ள் வ‌ரை அதை ஆசையாக‌ப் போட்டுக் கொண்டிருந்தேன்.

அத‌ற்க‌டுத்த் ஆண்டுகள் அவ‌ர்க‌ள் வ‌ர‌வில்லை என்ப‌தாலேயே சுர‌த்திழ‌ந்த‌து. க‌ல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு த‌விர‌ தீபாவ‌ளிக்கு வீட்டுக்கே வ‌ர‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ தீபாவ‌ளிக்கு அடுத்த‌ நாள் செம‌ஸ்ட‌ர் ப்ராக்டிக‌ல் வைத்திருப்பார்க‌ள். அத‌னால் ப‌க்க‌த்து ஊர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விடுதியிலேயே தீபாவ‌ளியைக் க‌ழித்தோம். அதுவும் ஒரு தினுசாக‌ ந‌ன்றாகத்தா‌ன் இருந்த‌து. இறுதியாண்டு டே ஸ்கால‌ர்ஸ் வீடுக‌ளுக்குச் சென்றோம்.

வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எந்த‌ப் ப‌ண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாக‌த் தெரிய‌வில்லை. தீபாவ‌ளிக்கென்று ஆட‌ம்ப‌ர‌மாக‌ ஆடைக‌ள் வாங்குவ‌தும் அற்வே பிடிக்காத‌ ஒன்றாகி விட்ட‌து. புதிதாக‌ ஏதாவ‌து அணியப் பிடிக்கும்; அது வ‌ழக்க‌மாக‌ அலுவ‌ல‌க‌த்துக்கு அணிகிறாற் போல் உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி. "இதுவா உன் தீபாவ‌ளி ட்ரெஸ்" என்ற‌ கேள்விக்குப் புனன‌கைப்ப‌து வெகு நாட்களுக்கு முன்பே ப‌ழ்க்க‌மாகி விட்ட‌து. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்தில்கிருந்து புத்த‌கங்கள் வாங்கி வந்து நிம்ம‌தியாக‌ நாள் பூராவும் ப‌டித்துக் க‌ழித்த‌ தீபாவ‌ளிக‌ள் உண்டு.

காசு கொடுத்துப் ப‌ட்டாசு வாங்கிப் ப‌ழ‌க்க‌மே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் ந‌ண்ப‌ர் தீபாவ‌ளிக்கு ஒரு வார‌ம் முன்பே பெரிய‌ ப‌ட்டாசுப் பொட்ட‌ல‌ம் ஒன்றை அன்புட‌ன் அனுப்பி விடுவார். "ப‌ட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வ‌ய்தில் அவ‌ரை அழைப்போம்.நாங்க‌ள் மட்டுமே வெடித்துத் தீர்வ‌தில்லை அது. வீட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் அக்க‌ம் ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்தும் தீர்க்க‌ வேண்டியிருக்கும்.
வெடிச்ச‌த்த‌ம் என‌க்குப் பிடிக்காது, வெடி வெடிக்க‌வும் ப‌ய‌ம். !ஆனால் வாண‌ங்க‌ளும் ம‌த்தாப்புக்க‌ளும் மிக‌வும் பிடிக்கும். சில‌ ஆண்டுக‌ளாக‌ அந்த‌ ஆர்வ‌மும் அற்றுப் போய் விட்ட‌து.

"பண்டிகையை வரவேறக" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப்ண்டிகைகள் அழகாக அமைதியாக் வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.

ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிம‌ருந்தின் வாடையில் க‌ருகும் பிஞ்சுகளும் ப‌லியாகும் ச‌கோத‌ர‌ர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.

ப‌ட்டாசுக‌ளையே மொத்த‌மாக‌த் த‌டை செய்ய‌ வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், ம‌த்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழ‌ந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவ‌து ச‌ரியா த‌வ‌றா என்று புரிய‌வில்லை.
ஆனால் அப்ப‌டித் தானே நுழைகிற‌து ஒவ்வொரு வீட்டிலும் தீபாவ‌ளி?

கனவு

நான் வீசியெறிந்த மாவிதை வேர் பிடித்து நின்றது;
கனிகளும் தந்தது; வெயிலுக்கு ஒதுங்கிய எனக்கு நிழலும் தந்தது
கறைபட்ட நினைவுகளைக் கழுவும் ரசவாதம் - கனவு