Wednesday, November 9, 2011

நேஹா நேர‌ம் (after a long break!)

வ‌ள‌ர்ந்து வ‌ருகிறாள். ஓயாத ஆட்டமும் பேச்சும். இர‌வு அவ‌ள் தூங்கிய‌ பிற‌கு தான் (இளையவளும் கண்ணயர்ந்திருந்தால் தான்) த‌‌லை வ‌ருடிக் கொஞ்சி முத்த‌மிட‌ முடிகிற‌து.

Very very moody these days. தின‌மும் வ‌ருகிற‌ எதிர்வீட்டு ஆன்டியை ஒரு நேர‌ம் போ போ என்கிறாள். இன்னொரு நேர‌ம் "ஐல‌வ்யூ ஆன்ட்டி" என்று க‌ட்டிக் கொள்கிறாள்.

அவள் ஏதாவது ரசிக்கிற மாதிரி சொல்லிவிட்டாலோ செய்து விட்டாலோ நாம் ஏதாவது சொல்வதற்குள், ஒரு குறும்புப் பார்வையுடன் "ப்ரில்லியன்ட்", "அமேசிங்", "ரொம்ப ஓவர்" என்று எதையாவது சொல்லிக் கொள்கிறாள்.

சார்ட் வொர்க் செய்ய‌ப் பிடித்திருக்கிற‌து. சார்ட்டையும் வாட்ட‌ர் க‌லர் பாக்ஸையும் கொடுத்து விட்டால் ஒரு அரைம‌ணி நேர‌ம் நிம்ம‌தி.

குட்டிப்பாப்பாவைச் சீண்டுவ‌து அதிகமாகி விட்டது. அதே போல் கொஞ்சுவதும். (இரண்டுக்கும் பொம்மைகளைப் பரஸ்பரம் பிடுங்குவது, அம்மா மடியில் ஏறிக் கொள்வது என்று எல்லாவற்றிலும் போட்டி தொடங்கிவிட்டது. கூடியவிரைவில் இளையவள் முந்தி விடுவாள் என்றும் தோன்றுகிறது.) ஆனாலும் தின‌மும் தூங்கும் போதும் பள்ளிக்குப் புற‌ப்ப‌டும்போதும் எவ்வ‌ள‌வு தாம‌த‌மாகி விட்டாலும் ச‌ரி, "ஷைலாக்கு முத்த‌ம் குடுக்கணும்" என்று த‌ந்து விட்டால் தான் ஆயிற்று.

"இனிமே இப்படிப் பண்ணா குட்டிப்பாப்பாவை பக்கத்து வீட்ல கொடுத்துடுவேன்" என்ற மிரட்டலுக்கு மட்டும் இன்னும் பணிகிறாள். ம‌ற்ற‌ அத‌ட்ட‌ல் மிர‌ட்ட‌லுக்கெல்லாம் ப‌ளிச் ப‌ளிச் ப‌ல்பு தான். ("ஓகே, என‌க்கென்ன போச்சு!" "இல்ல‌, நான் பேட் கேர்ல் தான்.")

"ந‌ம்ம‌ ரென்டு பேரும் சேர்ந்து அம்மாவைப் படுத்தலாமா?"
"ஷைலா நீயும் சாப்பிடாதே."
"நாங்க‌ தூங்க‌வே மாட்ட்ட்டோம். ஆட்ட‌ம் போட‌ப் போறோம்" ‍
இதெல்லாம், "நீ ச‌ம‌த்தா இருந்தா தானே உன் த‌ங்க‌ச்சியும் உன்னை மாதிரியே இருப்பா" என்ற அதிபுத்திசாலித்த‌ன‌மான(!) வினையின் அதிர‌டி எதிர்வினைக‌ள்.


"சாமின்னா என்ன‌டா?"

"ஜீஸ‌ஸ்" (உபயம்: மாமியாரின் திடீர் விசிட்!)

"சாமி என்ன‌டா ப‌ண்ணும்?"

"ஒண்ணுமே ப‌ண்ணாது"

"உன‌க்கு சாமி பிடிக்குமா பேய் பிடிக்குமா?"

க‌ண்க‌ள் விரிய‌ "பேய்!" (காஞ்ச‌னா கொஞ்சம் பார்த்த‌ எஃபெக்ட்!)

முன்யோச‌னை இருக்கிற‌து. That's saying a lot, for being my daughter! ;-) அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது வ‌ண்டியெடுக்கும் முன் கேட் திற‌ந்திருக்கிற‌தா என்று பார்க்காம‌ல் கேட்டின‌ருகே வ‌ந்த‌வுட‌ன் அவ‌ளை இற‌ங்க‌ச் சொல்லிவிட்டு கேட்டைத் திற‌ந்தேன். சில‌நாட்க‌ளுக்குப் பின் ஒரு நாள் வ‌ண்டி எடுத்த‌போது அவ‌ளே சென்று பார்த்து "கேட் திற‌ந்திருக்கும்மா" என்றாள்.

ஒரு நாள் க‌ல‌ந்து வைத்த‌ காப்பி ஒன்று மேசை மீதிருந்த‌து. நான் பார்த்து விட்டு ப்ரியாவிடம், "ஏன் ப்ரியா காலையில் எழுந்து இன்னும் குடிக்கலை. எப்போ கலந்து கொடுத்தேன். காப்பி கூடக் குடிக்காம என்ன பண்றே.." என்று அர்ச்சனை ஆரம்பித்தேன். (ப்ரியா என் அத்தையின் பேத்தி. அவ‌ள் தான் இப்போது குழ‌ந்தைக‌ளைப் பார்த்துக் கொள்கிறாள்) ச‌ம‌ர்த்தாக‌ப் ப‌ள்ளிக்குத் தயாராகி நான் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருந்த‌ நேஹா அங்கு வ‌ந்தாள். காப்பியைப் பார்த்துவிட்டு, "அம்மா! இது உன்தும்மா...ப்ரியா அப்ப‌வே குடிச்சிட்டாம்மா..குடிச்சிட்டுச் சீக்கிரம் குளிக்கப் போம்மா" என்றாள். அப்போது தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ந்த‌து! ப்ரியா என்னைப் பார்த்த‌ பார்வையின் அன‌லையும் மீறி ஏனோ உச்சி குளிர்ந்த‌து!

ஒரு மாதமாக‌ ஊரிலில்லாத‌ அப்பாவை மிஸ் ப‌ண்ணினாலும் முதலில் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளவில்லை. ச‌ரி குழ‌ந்தை ப‌ழ‌கிவிட்டாள் என்று நினைத்திருந்தேன். அன்றொரு நாள் அவ‌ர் அழைத்த போது இவ‌ளைக் கூப்பிட்டுப் பேச‌ச் சொன்னேன். வெடித்து அழுத‌வ‌ள் என்னைக் க‌ட்டிக் கொண்டு பிடிவாதமாகப் பேச ம‌றுத்துவிட்டாள். Stunned!

சின்ன‌தாக‌ இருப்ப‌தால் குழ‌ந்தைக‌ள் சின்ன‌ விஷ‌ய‌ங்களா என்ன? இல்லவே இல்லை!

Saturday, October 29, 2011

முகில் பூக்கள்

மழையின் ரீங்காரப் பின்னணியில் அமைதியாய்க் குழந்தை மடியில் உறங்கி விட, நிச்சலனமாய் முகில்பூக்களை வாசித்த‌ அனுபவத்தை இன்னும் பெய்து கொண்டிருக்கும் இந்த மழையை விட அழகாய்ச் சொல்லிவிட முடியவில்லை

ஆம், மழை எப்போதையும் விட அழகாய்த் தெரிகிறது பிகு சரவணனின் முகில்பூக்களை வாசித்த பிறகு.

இக்கவிதைகளில் அழகு கொஞ்சுகிறது; உண்மையும் மிளிர்கிறது. கவிதைக்குப் பொய் அழகு என்பதை உடைத்தெறிகிறது எளிமையும் உண்மையும் கம்பீரமாய் நடைபயிலும் இக்கவிதைகள்.

கவிதை என்றாலே அலர்ஜி, யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் கவிதை, மடக்கி மடக்கி எதையோ எழுதி விட்டுக் கவிதை என்கிறார்கள் என்று கவிதைகள் குறித்த எதிர்மறையான பார்வை கொண்டோர் எல்லாம் இவரது கவிதைகளைப் படித்தால் கவிதைக் காதலர்களாகி விடுவது நிச்சயம்.

எல்லாமே நேரடிக் கவிதைகள். ஆனாலும் மீள்வாசிப்பில் பல கவிதைகளில் பலவிதமான மறைபொருள்களும் உருவகங்களும் தெரியவரும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது.

இயந்திரமயமாகிப் போன இப்பிளாஸ்டிக் உலகத்தில், பல்வேறு தர்க்கங்களும் வேறுபாடுகளும் நிறைந்த இணைய இலக்கியச் சூழலில், தான் மெய்மறந்து ரசிக்கும் இயற்கையையும் குறிப்பாய் மழையையும் விதவிதமாய் வியந்தோதிக் கொண்டிருப்பது பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது.

ரொம்பவும் பிடித்துப் போன சில இங்கே உங்களுக்காக:

பெய்கிறது மழை
அசைந்து
நடந்து ‍ பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை.
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்.

சிணுங்கிப் பூக்கும் அன்பு
மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்

வழித்துணை
யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது

இசைக் குறிப்புகள்
கடந்து போன‌
நாட்களில் தொலைந்த‌
இசைக் குறிப்புகளை
பாடிக் காட்டுகிறது
அந்தக் குயில்

நிறைய, இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கும் அற்புதமான எழுத்து.

முகில் பூக்கள்
பி.கு. சரவணன்
தகிதா பதிப்பகம்

Sunday, August 28, 2011

'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.

கேள்வியுற்றதும் நெஞ்சை உலுக்கிய சம்பவம் செங்கொடியின் வீர மரணம். ஆம், அது வீரமரணம் தான். உள்ளம் எத்தனை கொதித்தாலும் வெறுமனே கணினியில் விரல்களைத் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அதை முட்டாள்தனம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

யார் செத்தால் என்ன‌, எங்கே குண்டு வெடித்தால் என்ன, எல்லாமே நாளிதழில் இன்னொரு செய்திதான் என்றிருப்பவர்களுக்கு செங்கொடியின் தியாக‌ம் முட்டாள்த‌னமாக‌த் தெரிவ‌தில் விய‌ப்பென்ன‌?

என்ன‌ ஆயிற்று ந‌ம‌க்கு? கூட்டம் கூட்ட‌மாக அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் 'போரில் சாவு ச‌க‌ஜம்', தூக்குக்க‌யிற்றில் நிர‌ப‌ராதிக‌ள் தொங்கினால், 'அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜம்', விவ‌சாயிக‌ள் ப‌சிக் கொடுமையினால் த‌ற்கொலை செய்து கொண்டால், 'ஏழைக‌ளுக்கு இதெல்லாம் ச‌க‌ஜம்', த‌லித் பெண்க‌ளை ஊரே சேர்ந்து க‌ற்ப‌ழித்துக் கொன்றால், 'சாதிக்கல‌வ‌ர‌த்தில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்'.
தான் உயிராக‌ நினைக்கும் கொள்கை/கோரிக்கைக்காக‌ ஒரு போராளி உயிர் துற‌ந்தால் அது முட்டாள் த‌ன‌ம்! என்று 'ஜ‌‌ஸ்ட் லைக் த‌ட்' க‌ட‌ந்து போகும் நாம் தான், கோடிஸ்வரக்‌ கோமாளி ந‌டிக‌ன் ஒருவ‌ன் உட‌ல்நிலை பாதிக்க‌ப்பட்டால் 'தலைவா,...இறைவா' என்று க‌ண்ணிர் சிந்தி ஊர்வ‌ல‌ம்
போக‌த் த‌யாராக‌ இருக்கிறோம். உட‌ம்பு நோகாம‌ல் வீட்டுக்கு முன் மெழுகுவ‌ர்த்தி ஏற்றி வைத்து விட்டு ஊழலுக்கு எதிராய்ப் பெரும் புர‌ட்சி செய்து விட்ட‌தாய்ப் பெருமை கொள்கிறோம்.

செங்கொடி மூளைச் ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருப்பார், வ‌றுமை/கடன் தொல்லை தாங்க‌ முடியாம‌ல் த‌ற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கும். முத்துக் குமாரின் ம‌ர‌ண‌த்தையும் கொச்சைப் ப‌டுத்தியவ‌ர்க‌ள் தானே நாம்?

சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட்ட‌த்தில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே வ‌ருத்திக் கொள்ப‌வ‌ர்க‌ளையும் கேலிசெய்து இழிவு ப‌டுத்துவது வெகுகால‌மாக‌ ந‌ட‌ப்ப‌து தான். இவ்வாறாக‌த் த‌ன‌து உண‌ர்ச்சிக‌ளை ம‌ர‌த்துப் போன‌ நிலையில் வைத்திருப்ப‌து மாற்றங்களை விரும்பாத சோம்பேறிச் ச‌மூக‌த்துக்கும் அத‌ன் ஊட‌க‌ங்க‌ளுக்கும் வ‌ச‌தியாக‌ இருக்கிற‌து.

இப்பேர்ப்ப‌ட்ட‌வ‌ர்களையும் தங்கள் மரணத்தினால் த‌ட்டி எழுப்ப‌ முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததும், எத்தனையோ காலம் எழுச்சி மிக்க போராட்ட வாழ்வு வாழ்ந்து பல சாதனைகள் செய்திருக்கக் கூடிய உன் இன்னுயிரை உணர்ச்சி வேகத்தில் மாய்த்துக் கொண்டதும், இமாலயத் தவறு தான். ஆனாலும் ச‌கோதரி, நீ முட்டாள் அல்ல; அதுவும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரவர்க்கத்திடமும் தொடர்ந்து கேவலமாய் ஏமாந்து கொண்டிருக்கும் எங்களை விட ‌நீ முட்டாள் அல்ல; நிச்ச‌ய‌மாய் அல்ல‌.

செங்கொடிக‌ள் தீக்கிரையானாலும் ம‌டிந்து ம‌க்கிப் போவ‌தில்லை.

Monday, August 1, 2011

நேஹாவுடனான அவர்களின் நேரம்

நேற்று காலை உண‌வுக்கு ரொட்டி வாங்க வழக்கமாய்ச் செல்லும் க்ரேஸ் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள். அடுத்த நொடி அவர்கள் முகங்களில் பெருத்த ஏமாற்றம். "நேஹா வரலியா? நேஹாவை ஏங்க்கா கூட்டிட்டு வர்ல? அவளைப் பாத்து ஒருமாசம் இருக்கும், இல்ல?"

அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.

என‌க்கு ஏனோ க‌ண்ணில் ச‌ட்டென நீர் கோத்துக் கொண்ட‌து. வீட்டுக்கு விரைந்துவிட்டேன்.

"ஹை! பாப்பா உன் பேர் என்ன‌?...பாப்பா ட்ரெஸ் ந‌ல்லாருக்கே..த‌லை தான் கொஞ்ச‌ம் க‌லைஞ்சிருக்கு."

"போ! உன் த‌ல‌ தான் ந‌ல்லாவேல்ல‌..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்ன‌தை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுட‌ன் ந‌ட்பாகினாள். அங்கு போனாலே அவ‌ர்க‌ள் முறை வைத்துக் கொண்டு வ‌ந்து தூக்கிச் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப‌ நேர‌ம் ஒரு குழ‌ந்தையுட‌ன் விளையாடிக் கொண்டிருக்க‌ முடியாதே.

இத‌ற்கிடையில் என்ன‌ ச‌த்த‌ம் என்று பார்க்க‌ வ‌ந்த‌ சூப்ப‌ர்வைஸ‌ர் பெண்ம‌ணியையும் "ஹேய் நேஹா, இங்க‌பாரு மேட‌ம் கூட‌ உன் ஃபேன் ஆகிட்டாங்க‌" என்று க‌லாய்த்த‌ப‌டி சூழ‌லைச் ச‌க‌ஜ‌மாக்கி விடுவார்க‌ள்.

இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?

உட்காரவோ அலைபேசவோ கூட‌ அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற‌ அலுப்பூட்டும் கேள்விக‌ளையே இட‌மும் வ‌ல‌மும் ச‌ந்தித்த‌ப‌டி இருக்கும் அந்த‌ப் பெண்கள் எப்போதாவது வ‌ந்து வ‌ம்பிழுக்கும் ப‌ரிச்ச‌ய‌மான‌ குழ‌ந்தையின் வ‌ர‌வை ஆவ‌லுட‌ன் எதிர்பார்ப்ப‌தில் ஆச்ச‌ரிய‌மென்ன‌ இருக்க‌ முடியும்?

மாலையில் மென‌க்கெட்டு ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் க‌டைக்கு அனுப்பிவைத்தேன்.

Saturday, July 9, 2011

வாத்தும் மீனும்...

குட்டை வற்றி மூச்சு முட்டியது
வெளியேறிய வாத்துக்கோ
கரையின் வெம்மை பொசுக்கியது
நீரின்றியமையாத‌ மீனோ
சேற்றுக்குள் அமுங்கிய‌து
வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்
இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?

Monday, June 13, 2011

குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்

அது கிராமமெல்லாம் இல்லை. சென்னை நகரம் தான். ஆனால்...

"அனு, அனு, அனூஊஊ"

"ஏ அனும்மா...தீபா விளிக்கின்னு."

"அனு, அனு, அனூஊஊ!"

"ஏ..தோ வரேன்பா இரு"

"சீக்கிரம் வா விளையாடலாம்!"

ஓடி வ‌ந்த‌ அனு வீட்டுக் கேட்டையெல்லாம் ஒரு பொருட்டாக‌ ம‌திக்க‌வில்லை. இரு வீடுகளுக்கிடையே பேருக்கு இருந்த‌ க‌ம்பி வேலியின் பெரிய‌ ஓட்டை வ‌ழியே நுழைந்து இந்த‌ப்ப‌க்க‌ம் வ‌ந்து விட்டாள். (காம்பவுண்ட் சுவர்களெல்லாம் அரிது அப்போது.)

"கேக் ப‌ண்ணி விளையாட‌லாமா?"

"ஓ!"

"சரி போய் ஒரு ச‌ர்ட்டை எடுத்துட்டு வா!"

"ச‌ட்டையா அது எதுக்கு?, ம்...ச‌ரி" வேக‌மாக‌ உள்ளே ஓடியவள் வீட்டில் அம்மாவைப் பிடுங்கி ஒரு ப‌ழைய‌ ச‌ட்டையைக் கொண்டு வ‌ருகிறாள்.

"அய்யோ! ச‌ர்ட்டை, ச‌ர்ட்டை...தேங்காய் உடைச்சா கிடைக்குமே..."

"ஓ! கொட்டாங்குச்சியா? அப்ப‌டிச் சொல்ல‌ வேண்டிய‌து தானே?"

ஒரு வ‌ழியாக‌க் கொட்டாங்குச்சி ஒன்றைத் தேடி, வீட்டு முன்புறம் க‌ளிம‌ண்ணில் த‌ண்ணீர் ஊற்றிக் குழைத்துக் கொட்டாங்குச்சி அச்சைக் கொண்டு வித‌விதமாய்க் கேக்குக‌ள். பின்பு அதில் கனகாம்பரம், ந‌ந்தியாவ‌ட்டைப் பூ கொண்டு அல‌ங்கார‌ங்க‌ள். தீக்குச்சி தான் மெழுகுவர்த்தி. வீட்டு வ‌ராந்தா பூரா க‌ளிம‌ண் திட்டாக‌ அழுக்கு. அவர்கள் உடைக‌ளிலும் தான்.

ச‌மைய‌ல் ப‌ண்ண‌லாமா? க‌ளிம‌ண் சாத‌ம், கூழாங்க‌ல் பிரியாணி, ப‌ச்சை இலை காய்க‌றிகள், செங்க‌ல் பொடி அரைத்துக் குழ‌ம்பு. இந்த‌ச் செங்க‌ல்பொடியை ம‌ட்டும் நாளெல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள். யார் அதிக‌ம் அரைக்கிறார்க‌ள் என்று போட்டி வேறு.

எங்கிருந்தோ வ‌ந்து விடுவார்க‌ள் த‌ம்பி வான‌ர‌ங்க‌ள். "நாங்க‌ சாப்பிட்டுப் பாக்கிறோம்... நிஜ‌மாக‌வே வாயில் வைத்துச் சுவைத்துத் "அய்யோஒ தூ தூ" என்று துப்புவார்க‌ள். இத‌ற்கு அப்படி ஒரு சிரிப்பு, துர‌த்திக் கொண்டு அடிக்க‌ ஓடுவ‌து...

அடிபட்ட அணிலொன்றைப் பிடித்துக் கொண்டு வந்து அதைப் படுத்திய பாடு. "அதை விட்டுடுங்கடா, பாவம்" ன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை. இங்க்ஃபில்லரில் அதற்குப் பாலூட்டுவது, பழம் கொடுப்பது என்று இவர்களின் உற்சாக வைத்தியத்தில் அது விரைவில் குணமாகி ஓடிப் போய்விட்டது.

கிண‌ற்ற‌டியில் அடிமுத‌ல் கிளைக‌ள் ப‌ர‌ப்பி நின்ற‌ கொய்யா மர‌ம். அனு நிஜ‌மாக‌வே ந‌ன்றாக‌ ம‌ர‌மேறுவாள். ஆளுக்கொரு கிளையில் அம‌ர்ந்து கொண்டு ஏதாவ‌து விளையாட்டு.

பாண்டிக் க‌ட்ட‌ம் போட்டு நொண்டிய‌டித்து விளையாடுவ‌து. பாண்டிச்சில்லுக்கு ஒரு அஞ்சாறு சில்லு வைத்திருப்பது. அவ‌ர‌வ‌ர் அதிர்ஷ்ட‌ச் சில்லு கொண்டு தான் விளையாடுவ‌து.

குல்மோஹ‌ர் பூக்க‌ளின் மொட்டுக்க‌ளை உரித்து அந்த‌ இத‌ழ்க‌ளை ஐந்து விர‌ல்க‌ளிலும் ந‌க‌ம் போல் ஒட்டிக் கொள்வ‌து... (ச‌ரியாக‌ ஐந்து இத‌ழ்க‌ள் தான் இருக்கும் அதில்) ஆஹா!

தென்ன‌ங்குறும்பியில் ஈர்க் குச்சி குத்தி வ‌ண்டி, ப‌ம்ப‌ர‌ம், செய்வ‌து அதையே ஸ்ட்ராவாக‌ வைத்து இள‌நீர் விற்ப‌து...

இதெல்லாம் விரைவில் போரடித்து விடும். அப்புறம் இருக்கவே இருக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஓராயிரம் வகைகள். கண்ணா மூச்சி, கல்லா மண்ணா, லாக் அன்ட் கீ, நொண்டியடிப்பது, காலைத் தொட்டுப் பிடிப்பது, சங்கிலியாகச் சேர்த்துக் கொண்டி பிடித்து விளையாடுவது ...ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வகைகள்?
ஊரிலிருந்து வருபவர்கள் "இதை நாங்க‌ எப்ப‌டி விளையாடுவோம் தெரியுமா" என்று ஆர‌ம்பித்துச் சொல்லிக் கொடுப்ப‌து அந்த‌ப் புதிய‌வ‌ருக்கு இருக்கும் வ‌ர‌வேற்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள‌வோ நிராக‌ரிக்க‌வோ ப‌டும்!

கண்ணாமூச்சி என்றால் கையில் மண் குவித்து அதில் ஒரு பூவையோ கல்லையோ நட்டு வைத்து, அவர் கண்ணைமூடி வீட்டைச் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ அழைத்துச் சென்று ஒரு இடத்தில் மண்ணைக் கொட்டச் சொல்ல வேண்டும். பின்பு மீண்டும் கண்ணைமூடி அழைத்து வந்து வேறோரிடத்தில் விட்டு விட வேண்டும். இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். (இது நாங்கள் அதிகம் விளையாடாத, என‌க்கு ரொம்ப‌ப் பிடித்த‌ விளையாட்டு!)

உட்கார்ந்து விளையாடுவதென்றால் க‌ருங்க‌ல் பொறுக்கி, சிமென்டுத் த‌ரையில் ஓர‌த்தையெல்லாம் தேய்த்து ம‌ழ‌ம‌ழ‌வென்றாக்கி, அஞ்சு க‌ல் விளையாடுவ‌து...
குச்சிக‌ளைப் பொறுக்கிக் க‌லைத்துப் போட்டு அசையாம‌ல் எடுப்பது.

இது தவிர கதைகள் சொல்லி மகிழ்வது. விளையாட்டுகளில் பின் த‌யங்கினாலும் அம்புலிமாமா, ரத்னபாலா என்று க‌தைப் புத்தகங்கள் அதிகம் படிப்பவர்களுக்குத் மவுசு கூடுவது இப்போது தான்! :-)


ஆச்சு, பொழுதாகி விட்ட‌து. குளிக்க‌ வேண்டும். கிண‌ற்றடிக்குப் போய்க் க‌யிற்று வாளியைத் தொப்பென்று கிண‌ற்றில் போட்டு, 'ப்ளக்' என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் வாளி நிர‌ம்புகிற‌து. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌ க‌யிற்றை இழுப்ப‌த‌ற்குள் உள்ள‌ங்கை சிவ‌ந்து வ‌லிக்கிற‌து. வாளியைக் கைப்பிடித்து இழுத்து மேலே கொட்டிக் கொள்ளும் போது...ஆஹா!

குழந்தைகளின் பாத‌ங்க‌ளிலும் கைந‌க‌ங்க‌ளில் உறைந்து போன‌ க‌ளிமண் க‌ரைந்து வெளியேறுவ‌தைப் பார்த்துக் கொண்டே அந்திச் சூரிய‌ன் விடைபெறுகிற‌து.

இன்று...

இருந்த கொஞ்சம் க‌ல்லும் ம‌ண்ணும் கான்க்ரீட் க‌ல‌வையில் சேர‌ப் போய்விட்ட‌ன‌. ம‌ர‌ங்க‌ள் எல்லாம் ஃப்ளாட்டுக‌ள் க‌ட்ட‌ வ‌ழிவிட்டு பூமிக்குள் ப‌துங்கி ம‌க்கிவிட்டன. கூடுக‌ட்ட‌க் குச்சிக‌ளில்லாம‌ல் குருவிக‌ளே காணாம‌ல் போய்விட்ட‌ன‌.

அனுவுக்கு இருமகள்கள். தீபாவுக்கும் அப்படியே. இருவரும் இன்றும் அருகருகே தான் வசிக்கிறார்கள். குழ‌ந்தைகள் டிஸ்க‌வ‌ரி சான‌லில் "அணிலையும் குல்மோஹ‌ர் பூவையும் க‌ண்டு "இது என்னம்மா?" என்று அதிச‌யித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.
(பி.கு: அலுவலகத்தில் இருந்தபோது நேஹா நினைவு வந்தது. கொஞ்ச நேரம் டிவி பார்த்த பிறகு பாட்டியுடன் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அப்போது தோன்றியது, இதே வயதில் நம்ம என்ன பண்ணிட்டிருந்தோம்?)

Friday, June 10, 2011

எம்.எஃப்.ஹுஸைன்


இந்தப் பெயர் முதலில் தெரியவந்தது 1995 இல் ஹம் ஆப்கே ஹை கோன் ஹிந்தித் திரைப்படம் வெளிவந்தபோது தான். குமுதமோ விகடனோ நினைவில்லை, அதில் இந்த எண்பது வயது ஓவியர் மாதுரியின் தீவிர ரசிகராக அந்தப் படத்தை நாற்பது தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார் என்றும், கூட்டம் கூட்டமாக இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு தியேட்டர்களில் அந்தப் படத்தைக் கண்டு மகிழ்கிறார் என்றும் எழுதி இருந்தார்கள். கூடவே அந்தப் படத்தில் மாதுரி வரும் காட்சிகளை அவர் வரைந்திருந்த ஓவியங்களையும் வெளியிட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது.

ஹூம்...அப்ப‌டி ஒரு கோமாளியாக‌ ம‌ட்டும் அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ரை இந்நாடு ம‌தித்திருக்கும். விள‌ம்ப‌ர‌ப்பிரிய‌ராக‌ ம‌ட்டுமே அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ருக்குப் பேரும் புக‌ழும் கிடைத்திருக்கும்.

அர‌சிய‌லில் சேர்ந்து கோடிக் க‌ணக்காய் ஊழ‌ல் செய்திருந்தால் கூட‌ திஹார் ஜெயிலில் ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளுட‌ன் கூடிய‌ சொகுசு அறை கிடைத்திருக்கும்.

த‌லித் பெண்க‌ளைக் கிராம‌த்தோடு சென்று க‌ற்ப‌ழித்துக் கொன்றிருந்தால் கூட‌ நீதிம‌ன்ற‌ம் ஆயுள் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ மேலும் கீழும் யோசித்திருக்கும்.

அவ்வளவு ஏன், குஜராத்தைப் பிணக்காடாக்கிய‌ 'நரவேட்டை'மோடியைக் க‌ட‌வுளாக உருவகித்து வ‌ரைந்திருந்தால் (நிர்வாண‌மாகவே‌) அவரைக் கொண்டாடி ர‌த‌யாத்திரை எடுத்திருப்பார்க‌ளே?

ஆனால் எய்ட்ஸே அண்டாத‌ இப்புனித‌ தேச‌த்தில், பச்சிளம் பெண் குழ‌ந்தைகளுக்குக் கூடப் ப‌ரிபூர‌ண‌ பாதுகாப்பு சுத‌ந்திர‌மும் இருக்கும் இப்புண்ணிய‌ பூமியில் கோயில் சிற்ப‌ங்க‌ளில் காணாத‌ நிர்வாண‌த்தை, நீல‌ப்ப‌ட‌ங்க‌ளில் இல்லாத‌ ஆபாச‌த்தை வ‌ரைந்துவிட்டாரே!
உருவ‌ம‌ற்ற, உயிர‌ற்ற, க‌ற்ப‌னைப் பாத்திரத்தை (ஆம், க‌ட‌வுள் தான்) நிர்வாண‌மாக 'அவர்' வ‌ரைய‌லாமா? அவ‌ர் 'வேறு' அல்ல‌வா? 100 வயதை எட்டப் போகும் ஒரு க‌‌லைஞ‌னுக்குச் சொந்த‌ம‌ண்ணில் உயிர்விட‌க்கூட‌ அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து வேத‌னைய‌ளிக்கிற‌து.

காவிக் க‌றைப‌டிந்த‌ கோர‌ப்ப‌ற்க‌ளின் நிழ‌ல் க‌விந்து கிட‌க்கிற‌து இம்ம‌ண்ணின் மீது.

ஆழ்ந்த‌ அஞ்ச‌லிக‌ள்.

Thursday, May 26, 2011

நேஹா நேரம்!

"நேஹா, தண்ணி குடிச்சிட்டு டம்ளரை இப்படி தூக்கிப் போடற? இது என்ன பழக்கம்?"

கண்களைச் சிமிட்டித் தலையை ஆட்டி "நல்லப் பழக்கம்"

என்னது?

"ஹிஹி...கெட்டப்பழக்கம்மா"

மாடி வீட்டு ஆன்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது மகனிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த நேஹா அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் போனதும், கவலை தோய்ந்த முகத்துடன்,
"அம்மா, ஆன்ட்டிக்கு என்னம்மா ஆச்சு?"
"கால்ல அடிபட்டிருக்குடா"
"ரொம்ப‌ வ‌லிக்குமா?"
"ஆமாண்டா, க‌ட்டு போட்டு ஊசி போடுவாங்க‌, ச‌ரியாயிடும்"
"இப்ப‌ எங்க‌ இருக்காங்க‌?"
"ஹாஸ்பிட‌ல்ல‌.."
"ம்...ஹாஸ்டபல் பேர் என்ன? நாம போயிப் பாக்கலாமா?"
:)

ந‌ல்ல‌ மூடில் இருந்தால், அவ‌ளைச் செய்ய‌க் கூடாது என்று த‌டுத்து வைத்திருக்கும் வேலைக‌ளை நாம் செய்யும் போது,
"என‌க்கு இப்ப‌ தெரியாதும்மா, பெரிய‌ பொண்ணான‌வுட‌னே நானும் செய்வேன்." என்று சொல்லிக் கொள்கிறாள். இதில் ஸ்கூட்ட‌ர் ஓட்டுவ‌து, க‌த்தியை உபயோகிப்ப‌து, குழ‌ந்தையை குளிப்பாட்டுவது உட்ப‌ட‌ ப‌ல‌ அட‌க்க‌ம்.

அலுவ‌ல‌க‌த்துக்குக்க் கிள‌ம்பும் போது கேட்ட‌ருகே நின்று கொண்டு இருந்தாள். ஹெல்மெட்டை ம‌ற‌ந்து விட்டு மீண்டும் ஓடி வ‌ந்தேன். அய்யோ குழ‌ந்தை நாம் திரும்பி வ‌ந்து விட்ட‌தாக‌ ஏமாந்து விட‌ப் போகிற‌தே என்ற பயம் வேறு. ஆனால் "ஹெல்மெட் ம‌ற‌ந்துட்டியாம்மா? ஹையோ ஹையோ! என்ற‌ப‌டி ஓடிச் சென்று எடுத்து வ‌ந்ததுட‌ன் "போட்டுக்கிட்டுப் போம்மா, விழுந்துடப் போகுது!"

பெரிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ம‌ரியாதை கொடுத்துப் பேசுவ‌து என்ற‌ பேச்சே இல்லை. :‍( (உண்மையில் ரொம்ப‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து என‌க்கு.)

ஆனால் ஒன்ப‌து வ‌ய‌தாகும் என் அக்கா ம‌க‌னை, "நிகில‌ண்ணா, இங்கே உட்காருங்க" என்ப‌தும், அவ‌னை யாராவ‌து அத‌ட்டினால் அவ‌ர்க‌ளுக்கு வ‌சை மாரி பொழிவ‌தும் தாங்க‌ முடிய‌வில்லை.
ஆனால் ஒரு முறை அவனை அத‌ட்டிக் கொண்டிருந்த‌ அவ‌ன‌து அக்காவை எதிர்த்து ஏதோ சொன்னான். உட‌னே இவ‌ள்,
"டேய் நிகில், ம‌ரியாதையாப் பேசுடா."

ஒரு நாள் பக்கத்து ஃப்ளாட் காரரிடம் ஏதோ பேசச் சென்றிருந்தார் ஜோ. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. "அப்பா எங்கே" என்று கேட்டவளிடம், "தெரியாதுடா, பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருப்பாரு. என் கிட்ட சொல்லிட்டுப் போகல" என்று தான் சொன்னேன்.

ஜோ உள்ளே நுழைந்தது தான் தாமதம், "அப்பா! ஏன்பா அம்மாவை விட்டுட்டுப் போனீங்க. கூடக் கூட்டிட்டுப் போலாம்ல? பாவம் அம்மா!" இந்தப் பில்டப்பெல்லாம் நான் சொல்லித் தரவில்லை என்று ஜோவை நம்ப வைக்கப் படாத பாடு பட்டேன்.

அவளுக்குப் பிடித்த பாடல்களை மனப்பாடம் ஆகும் வரை என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறாள். ஓரளவு வார்த்தைகளும் ராகமும் பிடிபட்டவுடன், "நீ பாடாதேம்மா, நானே பாடறேன்!" என்று சொல்லி விட்டு என்னை விட நன்றாகவே பாடுகிறாள். So her claim is justified. :)

Monday, May 16, 2011

மீட்சி

சரியாய் வரவில்லை என்று கசக்கி எறிந்த கவிதை ஒன்று
ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது
செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...
முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை
ஆனாலும்...
எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.

Friday, April 15, 2011

சின்ன‌க் குயிலுக்கு...

என் இனிய சின்னக் குயில் சித்ராவுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக் கூடாது. எப்போதும் குழந்தை போலச் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. குழ‌ந்தைக‌ளுக்கான‌ பொருட்க‌ள் விற்கும் க‌டையொன்றில் "பாடகி சித்ரா எங்க‌ள் வாடிக்கையாள‌ர்" என்று சொன்னதால் அந்த‌ப் ப‌க்க‌ம் செல்லும் போதெல்லாம் அவ‌ர் வ‌ந்திருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பேன். 'அவ‌ர் குழ‌ந்தையை அழைத்துக் கொண்டு வ‌ரும் போது என‌க்குத் தெரிவியுங்கள்' என்று கூட‌ அந்த‌க் க‌டைக்கார‌ரிட‌ம் சொல்லி வைத்திருந்தேன். அந்த‌ அள‌வுக்குச் சித்ராவைப் பிடிக்கும். இசை என்னும் ச‌ஞ்சீவி அவரது துய‌ரை மாற்றட்டும். வேறெதுவும் சொல்ல‌ என‌க்குத் தோன்ற‌வில்லை.

Friday, March 25, 2011

நமக்குச் சுதந்திரம் த‌ரும் பெண்கள்

ஆயிற்று, பேறு கால‌ விடுமுறை முடிந்து அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ வேண்டும். அரை நாள் ப‌ள்ளிக்குச் செல்ல‌ ஆர‌ம்பித்திருக்கும் மூன்று வ‌ய‌துக் குழ‌ந்தை, கைக்குழ‌ந்தை இர‌ண்டையும் பாதுகாப்பாக‌ விட்டுச் செல்ல‌ வேண்டும். காலையிலேயே முழு நாளைக்குமான ச‌மைய‌ல் முடித்துக் கையிலும் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்தால் குழ‌ந்தைகளுட‌ன் நேர‌ம் செல‌விட‌ வேண்டும். இடையில் நம் ம‌ன‌த்திருப்திக்காக‌வும் ஆசைக்காக‌வும் இணைய‌த்தில் உல‌வ‌ வேண்டும். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் பேச‌ வேண்டும். இத்தனையும் எனக்குச் சாத்தியப்படுவது யாரால் என்று நினைக்கிறீர்கள்?

படித்து வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்க‌ளுக்கு அவ‌ர்க‌ள‌து க‌ண‌வ‌ர் பெற்றோரையும் விட‌ அதிக‌ அள‌வு உறுதுணையாக‌ இருப்ப‌து அவ‌ர்க‌ள் வீட்டு வேலைக்கு வ‌ரும் பெண்க‌ளே.


நாம் ந‌ம‌க்கு ர‌சனையான‌ வேலைக‌ளிலும், 'ந‌ம் திற‌மைக‌ள் வெளிப்ப‌டும்' வேலைக‌ளிலும் ஈடுப‌டுவ‌த‌ற்காக‌, ந‌ம‌து வீட்டின் ந‌ச்சுப் பிடித்த‌ வேலைக‌ளை அவ‌ர்க‌ள் வாங்கிக் கொள்கிறார்க‌ள்.

வீட்டு வேலைகளில் சரிசமமாகப் பங்கேற்கத் தயங்கும் ஆணாதிக்கம் இன்னும் ஒழியாத குடும்பச் சூழலில் நாம் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து இவ‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கிக் கொள்வ‌து வேலைகளை மட்டுமல்ல ந‌ம‌க்கான‌ சுத்ந்திர‌த்தை. இதை நாம் உண‌ர்ந்திருக்கிறோமா என்று தெரிய‌வில்லை.

ஆயிரம் முற்போக்குக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்தாலும் நம் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்களை எப்படி நடத்துகிறோம் என்றொரு சுயபரிசீலனை செய்வது மிக அவசியம் என்று தோன்றியது.

ஆணாதிக்கத்தின் பிடியில் இருக்கும் பெண்களுக்குத் தான் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நபர்களாக் இந்த வீட்டு உதவிக்கு வருபவர்கள் தான் மாட்டுகிறார்கள் போலும்; வீட்டு ஆண்களின் முன் இவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் இருப்பது போல்.

முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஓரளவு ஆண்களுக்குச் சமமான உரிமை பெற்றிருக்கும் பெண்கள் வீட்டு வேலைக்கு வருபவர்களைக் கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். ஆனால் சென்ற‌ த‌லைமுறையின் அழுக்கு போகாத‌ சில‌ர் அவ‌ர்க‌ளுக்குத் த‌ரும் அறிவுரைக‌ள் இருக்கின்ற‌ன‌வே. ஐய்யோ!

என் தோழியொருத்தியின் வீட்டில் அவரது வீட்டில் வேலை செய்பவர் தேனீர் அருந்திக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வ‌ந்த‌ தோழியின் உற‌வுக்கார‌ப் பெண்ம‌ணி ஒருவ‌ர் அதிர்ந்து விட்டாராம். வேலை செய்யும் பெண் போன‌ பின்பு என் தோழிக்கு செம டோஸாம். "என்ன‌ இது, வேலைக்காரியை எல்லாம் வைக்க‌ வேண்டிய‌ எட‌த்துல் அவெக்க‌ணும். சோஃபால‌ உட்கார‌ வெச்சு ச‌ரிக்குச் ச‌ம‌மா பேசிக்கிட்டிருக்கியே? இப்ப‌டியெல்லாம் பண்ணா அவ‌ உன்னை ம‌திக்க‌வே மாட்டா." ?!!

தங்கள் பணத்தேவைக்காக உங்கள் வீட்டு வேலைக‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌ வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்தால் தான் நீங்க‌ள் நிம்ம‌தியாக‌ வேலைக்குப் போய் உங்கள் தேவைக்காகச் ‌ச‌ம்பாதிக்க‌ முடியும். இதில் எங்கே வ‌ருகிற‌து ஏற்ற‌த் தாழ்வு? ப‌ர‌ஸ்ப‌ர‌த் தேவைக்கான‌ ஒப்ப‌ந்த‌த்தில் பொருளாதார‌த்தில் ஓங்கி இருக்கும் ஒரே கார‌ண‌த்தினால் அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌க் கூட‌ ம‌திக்காத‌ ந‌ட‌த்தை எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌து?

நான் அன்பாகத் தான் இருக்கிறேன். இரக்கம் பாராட்டுகிறேன் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்கள் அன்பும் இரக்கமும் அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னவிதமான மரியாதை எதிர்பார்ப்பீர்களோ அதை வழங்க வேண்டும் உங்கள் வீட்டு வேலைக்கு வருபவருக்கு.

யாரும் யார் வீட்டு வேலையையும் செய்து பிழைக்க வேண்டிய சூழல் இல்லாத, நச்சுப்பிடித்த வேலைகளுக்கெல்லாம் எந்திரங்கள் வந்துவிடும் காலம் ஒரு நாள் வரும். அதுவரை இந்தச் சூழலில் இருதரப்புக்கும் ஆதாயம் இருப்பதால் அதனை ஓரளவு நியாயமாக்கிக் கொள்ளலாமே.

த‌ங்க‌ள் வீட்டில் வேலை பார்ப்பவருடன் தாம் நல்லவிதமாகத்தான் ப‌ழ‌குவ‌தாக‌ ந‌ம்புப‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ கேள்விக‌ளுக்கு ம‌ன‌திற்குள் ப‌தில் சொல்லிச் சோதித்துக் கொள்ள‌லாம் (நானும் தான்) :

1. வீட்டின் மற்ற அறைகளை அவர்கள் சுத்தம் செய்யட்டும். கழிவ்றைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்கிறீர்களா?

2. சாப்பிட்ட தட்டுகளைச் சுத்தமாய் ஒழித்து ஒரு முறை நீரில் கழுவிப் போடுகிறீர்களா?

3. உங்க‌ள் ம‌னைவி அல்ல‌து க‌ண‌வ‌ர் வரவேற்பறையில் சோஃபாவில் அம‌ர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டுவேலைக்கு வ‌ருப‌வ‌ர் வேலைக‌ளை முடித்து விட்டு வ‌ந்து அவ‌ர் எதிரே அம‌ர்ந்து கொள்கிறார். உங்க‌ளுக்குக் கோப‌ம் வ‌ருகிற‌தா?

4. நீங்க‌ள் அவ‌ருக்காக‌த் தேனீரோ சிற்றுண்டியோ த‌யாரித்தால் உண‌வு மேஜை மீது உட்கார‌ச் சொல்லிக் கொடுக்கிறீர்க‌ளா? (அவரே மறுத்தாலும்)

5. உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் அவ‌ரை மரியாதையுடன் அழைக்கிறார்க‌ளா அல்ல‌து பெய‌ர் சொல்லியா?

6. அவ‌ர்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் வீட்டுக்கு வ‌ந்தால் உங்க‌ள் குழந்தைகளுடன் ச‌க‌ஜ‌மாக‌ விளையாடுகிறார்களா அல்ல‌து அமைதியாக மூலையில் அம‌ர்ந்து கொள்கிறார்க‌ளா?

7. அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள் என்ன‌ ப‌டிக்கிறார்க‌ள், எப்ப‌டிப் ப‌டிக்கிறார்கள் என்ப‌தில் உங்க‌ளுக்கு அக்க‌றை உண்டா?

8. வார‌ம் ஒரு நாள் விடுமுறை உண்டா அவ‌ர்க‌ளுக்கு?

9. உங்களை அவர் அம்மா/ஐயா என்று அழைக்கிறாரா பெயர் சொல்லியா?

10. இன்னும் தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள். I want to reform myself!

Wednesday, March 23, 2011

A handful of rice (ஒரு பிடி சோறு) - க‌ம‌லா மார்க்க‌ண்டேயா









ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை.

தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டிகளுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.

மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.


நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட‌ வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.


ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.

பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் க‌ன‌விலியும் ந‌ட‌க்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார்.

க‌டின‌ உழைப்பு, உற்சாக‌ம், காத‌ல், க‌ன‌வுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய‌ சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.


இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத‌ ப‌ட்ச‌த்தில் தாமோத‌ருட‌ன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ண‌ம் அவ‌ன் ம‌ன‌தோர‌த்தில் இருந்து வ‌ருகிற‌து.

இந்திய ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌க் கூட்டுக் குடும்ப‌த்தின் வாழ்க்கை முறை மிக‌வும் எதார்த்த‌மான‌ முறையில் க‌தையில் விரிகிற‌து. புதிதாக‌த் திரும‌ண‌மான‌வ‌ர்க‌ளுக்காகப் வாட‌கைக்குக் க‌ட்டில் எடுப்ப‌தும் ப‌த்து நாளான‌தும் அது திருப்ப‌ப்ப‌ட்டு விடுவ‌தும், ஒரே அறையின் இடையில் த‌டுப்பு அமைத்து இரு குடும்ப‌ங்க‌ள் ப‌டுத்துக் கொள்வ‌தும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை க‌ருவுறுவ‌தும் நம‌க்குப் புதிதான‌ ச‌ங்க‌திக‌ள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட‌‌ விதம் ந‌ம்மை அடித்துத் தான் போடுகிற‌து.


குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்கார‌ரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது ப‌ட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவ‌ர் ப‌த‌றுவ‌தும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு த‌ர‌வேண்டுமே என்று ர‌வி குழ‌ந்தையை அடித்து நொறுக்குவ‌தும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத‌ சோக‌ நாட‌க‌ம்.


மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.

அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.

'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான்.


கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.

ஆங்கில‌ வாச‌க‌ர்க‌ளுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் ப‌ட‌ம்பிடித்துக் காட்டுவ‌த‌ற்காக எழுதப்பட்ட புத்த‌க‌கமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் க‌ம‌லா மார்க்க‌ண்டேயா ச‌ந்தேக‌த்துக்கிட‌மின்றி ஓர் இட‌துசாரியாக‌ மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்ப‌தாலேயே இந்த‌க் க‌தை முக்கிய‌மாக‌ப் ப‌டுகிற‌து.

Sunday, March 6, 2011

நேஹா நேரம் (பிறந்தநாள் சிறப்பிதழ்!)

கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறாள். பால்கனியில் நின்று சாதம் ஊட்டும் போது ரோட்டில் போகிறவர்களை "அது யாரு, அவங்க எங்கே போறாங்க...", விளம்பரங்களைப் பார்த்து "அது என்ன இது என்ன, அவங்க என்ன பண்றாங்க..." என்பதாக ஆரம்பித்திருக்கிறது நேஹாவின் கேள்வி கேட்கும் படலம்.

புத்தகங்கள் மீது ஆசை இன்னும் போகவில்லை. பல முறை படித்த அரிச்சுவடிப் புத்தகங்களைக் கூட ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து வைத்து படங்கள் பார்த்துப் பெயர் சொல்லி விடுகிறாள். நான் படிக்க நினைத்து அருகில் வைத்துக் கொண்டிருக்கும் புத்த்கங்களை எடுத்து அம்மா புக் படிக்கிறேன் என்பதும் அதில் அட்டையில் அவளுக்குத் தெரிந்த எழுத்துக்களைச் சொல்லிப் பார்ப்பதும் நடக்கிறது.

கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம் இதெல்லாம் கூடிக் கொண்டே போகிறது; எப்போது குறைய ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.
ஏதாவது காரியம் ஆக, வேண்டுமென்றே கள்ளத்தொண்டையில், "அம்மா, சொன்ன பேச்சுக் கேக்றேம்மா..." என்று வேறு சொல்கிறாள்.

அவள் வயதுச் சிறுவர் சிறுமியர்களிடம் நட்புபாராட்ட ரொம்பவும் ஆசைப்படுகிறாள். பொது இடங்களில், கடைகளில் முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளிடம் கூடச் சிரித்துக் கொண்டே போய்க் கையைப் பிடிக்க எத்தனிக்கிறாள். பெரியவர்கள் பாடு தான் கஷ்டம்!

மேல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இவளைப் பார்த்து, "வாம்மா, மாமா கூட்டிட்டுப் போய் சாக்லெட் வாங்கித் தர்றேன்" என்று கூப்பிட்டிருக்கிறார். இவளோ கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று திரும்பி விட்டாளாம். அவர் சொன்னபோது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

Enough in third person...!

உனக்கு அடுத்து தங்கை பிறந்ததும் உன் மீது கவனம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தினாலேயே நீ இன்னும் செல்லமாகி விட்டாய் நேஹா. இதை நீ புரிந்து கொள்ளும் நாளும் வரும். ஆனால் இப்போதைக்கு உன் நடவடிக்கைகள் ஒரு சமயம் அம்பி, ஒரு சமயம் அன்னியன் ரேஞ்சுக்குத் தான் இருக்கின்றன.

நன்றியுள்ள விலங்கின் மீது என்ன பாசமோ, சில சமயம் (அன்னியன் டைம்ஸ்)சகட்டு மேனிக்கு எல்லாரையும் அதன் பெயர் சொல்லி அழைக்கிறாயே? சரி ஒரு விலங்கோடு போகிறதே என்று விட்டு விட்டேன். நல்லவேளை நீ அனிமல் ப்ளானட் இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை.

வேடந்தாங்கல் சென்ற போது குரங்குகளைப் பார்த்துக் குதூகலித்தாய். "பெரிய குரங்கு ப்ரட்டை மோந்து பாத்து தூஊஊக்கிப் போட்டுச்சு, சின்ன குரங்கு அழக்க்கா சாப்டுச்சு" என்பதில் உனக்கு அத்தனை பரவசம். அத்தனை என்றதும் நினைவுக்கு வருகிறது.

"எத்தன வாட்டி சொல்றது நேஹா உனக்கு?" என்றால் "அத்தன வாட்டி" "எவ்ளோ வேணும்" என்றால் "அவ்ளோ வேணும்" என்கிறாய்.
ஃபோட்டோ எடுத்தால் அழகாகப் போஸ் கொடுக்கிறாள்; மேலும் நான் பாக்கணும் என்று வாங்கிப் பார்க்கிறாய். நேரங்கெட்ட நேரங்களில் த‌ன் நண்பர்கள் வீடுகளுக்குப் போக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாய்.

உனக்குப் பிடித்தமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, "அன்னிக்கு அந்த ப்ளாக் நாய் பாத்துட்டே சாப்டோம்ல, அது மாரி...." என்று அதை மறுபடியும் செய்ய வேண்டுமென்று கேட்கிறாய்.

ஸ்கூலுக்குப் போவதற்கு உனக்குப் பிடித்துத் தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத் தான் பிடிப்பதில்லை. " போ நான் தூங்கப் போறேன்." என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திட்டிக் கொண்டே தான் எழுந்திருக்கிறாய். சட்டென்று ஏதோவொரு கணத்தில் மூடு மாறி குஷியாகி விடுகிறாய். அந்தத் தருணம் எப்போதென்று தான் இன்னும் பிடிபடவில்லை எனக்கு.

வேறென்ன சொல்வது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேஹா. Thanks for everything you are going to be!

Sunday, February 27, 2011

What's (not) in a name?!

என்னத்த எழுதறதுன்னு ஒரு மனநிலையில் இருக்கும் போது இப்படி தொடர் பதிவு, அதிலும் சொந்தக் கதை எழுதக் கூப்பிட்டா ஈஸியாத்தான் இருக்கு. அஃப்கோர்ஸ் எழுதற எனக்கு மட்டும் தான் ஈஸி!

என் முழுப்பெயர் தீபலக்ஷ்மி. இதை இப்போதெல்லாம் தீபலட்சுமி என்றும் எழுதினால் ஏற்றுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பிடிக்காது.

என் அக்காவுக்கும் அண்ணனுக்கும் உண்மையில் அரிதான் அழகான பெயர்கள். காதம்பரி, ஜெயசிம்மன். நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், உனக்கு மட்டும் ஏன் அப்படி அழகான பெயர் வைக்கலன்னு. என் அண்ணனும் அவன் பங்குக்கு முடிந்தவரை இது பற்றி வெறி கொட்டியிருக்கிறான்.

வீட்டில் கேட்ட போது நீ தீபாவளி அன்னிக்குப் பிறந்ததால் தீபான்னு வெச்சோம். லக்ஷ்மி சேத்தா இன்னும் நல்லா இருக்குமேன்னு நினைச்சோம்னு. எனக்கு என் பெயர் பற்றிப் பெருமையும் இல்லை, பெரிதாக வருத்தமும் இல்லை. என் நெருங்கிய தோழி ஜோதிலட்சுமி. அவளுக்கும் பெயரில் லட்சுமி இருப்பது பிடிக்காது. எங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. எந்த ஆசிரியையாவது என்னை தீபா எனறும் அவளை முழுப் பெயர் சொல்லியும் அழைத்து விட்டால் போச்சு. அவள் மூட் அவுட் ஆகி விடுவாள். இது ரிவர்சில் நடந்தால் நான் ரொம்பப் பொருட்படுத்த மாட்டேன். மீ குட் கேர்ல் நோ!?

ஆனால் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களான போது பலரும் எங்கள் பெயர்ப் பொருத்தத்தைக் குறிப்பிட்டுப் பேசும் போது இருவருக்குமே பெருமையாக இருக்கும். நாங்கள் சேர்ந்து சொந்தமாக லைபரரி வைக்க வேண்டும், ஸ்கூல் நடத்த‌ வேண்டும் என்றெல்லாம் கனவுகளுடன் பேசிக் கொண்ட போது அதற்கு 'தீப்ஜோதி' என்று நாமகரணம் சூட்டிப் பரவசப்பட்டிருக்கிறோம்.

ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் அதிகம் படித்த காலத்தில் இங்கிலிஷ் பெயர்களின் மீது மோகம் இருந்தது. எனிட் ப்ளைடன் கதைகளில் வரும் சிறுமிகளின் பெயர்களெல்லாம் அழகாகத் தோன்றி இருக்கின்றன. பெஸ்ஸி, கோனி, ஜார்ஜினா என்ற பெயர்களெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.அதே போல் ஆர்ச்சி காமிக்ஸில் வரும் பெட்டி, வெரோநிகா.

அம்புலி மாமா கதைகளில் வரும் அழகான தமிழ்ப்பெயர்கள் மீதும் காதல் இருந்தது. வெயில்கால மதிய‌ நேரங்களில் உட்கார்ந்து 'கதை பண்ணி' விளையாடும் போது ராஜா ராணி இளவரசிக்கெல்லாம் அழகழகாக்ப் பெயர் சூட்ட உதவியது அம்புலிமாமா கதை மாந்தர்கள் தாம்.

குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் தான் சூட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் நேஹா என்ற பெயருக்கு 'அன்பு' என்று அர்த்தம் இருப்பதாலும் ஏனோ ரொம்பப் பிடித்துவிட்டது.

என் சித்தப்பா தனது மூன்று மகள்களுக்கும் அழகான தமிழ்ப்பெயர் சூட்டி இருக்கிறார். பூங்குழலி (பொ.செ இன்ஸ்பிரேஷன்), வண்டார்குழலி, மற்றும் கார்குழலி.
வீட்டில் இவர்கள் முறையே அமுதா அருணா மற்றும் வனிதா. இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியைகள் "ஏங்க நீங்க மட்டும் வீட்ல கூப்பிட ஈஸியான பேரா வெச்சிட்டு, எங்கள இப்டி ட்ரில் வாங்குறீங்களே" என்று கமென்ட் அடித்ததுண்டு.

தன் பெயரைக் "காதுக்குள்ள ஈ" என்று சக மாணவர்கள் கேலி செய்வதாகக் கார்குழலி சொல்லிச் சிரித்ததுமுண்டு. ஆனாலும் குழலி சிஸ்டர்ஸ் பெயருக்காகவே பிரபலம் தான்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஊரெல்லாம் வைத்த அளவு என் பெயர் ரொம்பப் பிரபலமும் (common) அல்ல, ரொம்ப அரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. ஆனாலும் தீபா என்ற என்ற பெயர்ச் சுருக்கம் எனக்குப் பிடிக்கும் தான். அதிலும் என் மீது மிக்க அன்புள்ளவர்கள் தீபூ என்று அழைப்பது மிகவும் பிடிக்கும். அப்படி என்னை அழைப்பவர்கள் ரொம்பக் கம்மி. என் ரூம்மேட் சுதா, எப்போதாவது அங்கிள், சில உறவினர்க்ள், இப்போது ஜோ! என்ன கோபமாக இருந்தாலும் தீபூ என்று அழைத்துச் சண்டை போட்டால் நான் தணிந்து விடுவேன். இந்த ரகசியம் அவருக்குப்பல சமயம் மறந்து விடுகிறது, என்ன செய்வது!

கல்லூரியில் பெரும்பாலும் நண்பர்களுக்கு நான் 'தீப்ஸ்'. அப்போது தான் ஒரு சுவாரசியமான விஷயம் கண்டுபிடித்தேன். நடந்து செல்லும் போது சில சமயம் பசங்க ஸ்பீட் ஸ்பீட் என்று கத்துவார்கள். எதுக்குடா நமக்கு இப்படி ஒரு பெயர்னு எனக்குக் குழப்பம். பிறகு தெரிந்தது Deeps ஐத் திருப்பி எழுதினால் Speed என்று. அட நம்ம பேர்ல இப்படி ஒரு விஷய்ம் இருப்பது நமக்கே இதுவரை தெரியவில்லையே என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!

இத்துடன் என் பெயர்ப் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்! அழைத்த அகில்ஸுக்கு நன்றி!

Monday, February 21, 2011

சுனாமி



கனத்த மௌனத்தில் பாறைகள்
மோதி மோதிக் களைத்து
துவண்டு உள்வாங்குகிறது கடல்

Wednesday, February 2, 2011

செகாவின் மீது பனி பெய்கிறது

செகாவைப் பற்றி எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் நிறைய பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

"தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ர‌ஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின், துர்கனேவ், லெர்மந்தேவ், குப்ரின், கொரலெங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப் படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ். ராமகிருஷ்ணன் அது குறித்த் தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்."

பின்னட்டையில் கண்ட இந்தக் குறிப்பு புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக ரஷ்ய எழுத்தாளர்களோடு நிறுத்தி விடாமல், மாப்பசான், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஓவியர் வான்கோவின் எழுத்துக்கள், வர்ஜினியா வுல்ஃப் என்று சிறந்த‌ உலக இல‌க்கிய ஆளுமைகளை
சுவாரசியமான முறையில் அறிமுகம் செய்து தந்திருக்கிறார்.

ஒவ்வொரு எழுத்தாளரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுவதோடு அவர்களது தனித்துவத்தையும் ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்.

குறிப்பாக செகாவையும் மாப்பசானையும் "இரண்டு ஆசான்கள்" என்று குறிப்பிட்டது எனக்குத் தனிப்பட்ட முறையில் பரவசம் அளித்தது. அதிகம் இலக்கியம் வாசித்தறியாத நான் விரும்பிப் படித்ததில் அதிகம் இவர்களது சிறுகதைகள் தாம்.

செகாவின் மீது பனி பெய்கிறது என்ற கவிதையான தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

"செகாவ் மீது பனி பொழிந்து அவரை நடுங்கச் செய்கிறது. அவர் நோயாளி. ஆனாலும் குளிரோடு போராடியபடியே நின்று பார்க்கிறார். அந்த வீதியில் செகாவும் குதிரையும் மட்டுமே நிற்கிறார்கள். இருவர் மீதும் பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. செகாவ் துயரமடைகிறார். கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்ர குறிப்பை எழுதுகிறார்.அவரது கதைகள் இந்த இரண்டு உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன."
என்ன அற்புதமான உருவகம்? உன்னதமான படைப்பாளி இந்த உலகத்தைப் பார்ப்பதாகவே செகாவ் குதிரையைப் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.
செகாவின் எழுத்துக்கள் மீது ஆசிரியருக்கு உள்ள‌ ஆழமான அபிமானமும் புரிதலும் வெளிப்படுகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற வெண்ணிர இரவுகள் பற்றிய அலசல் 'இரவில் ஒளிரும் சூரியன்'. தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளில் வரும் ஆண்கள் விசித்திரமானவர்கள் என்றும் பேச முடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்றும் ஆசைப்படுகிற ஆண்கள் தான் அவரது கதை நாயகர்கள் என்றும் குறிப்பிடுகிறார். (இதில் என்ன விசித்திரம், ஊரில் பாதி ஆண்கள் இப்படித்தானே?!)

டால்ஸ்டாயின் வாழ்க்கையின் கடைசி நாட்களையும் அவரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களின் குறிப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

கடவுளின் எட்டாம் நாள் என்ற கட்டுரையில் ஆர்மினிய எழுத்தாளர் வில்லியம் மிகைலீனின் சிறுகதையொன்றை நமக்காகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். மிகவும் ரசிக்கத்தக்க பகடி.

இவ்வாறாகத் தான் வாசித்து ரசித்த எழுத்தாளர்களை வெற்றுக் குறிப்புகளாக இல்லாமல், கொஞ்சம் அவர்களது சொந்த வாழ்க்கை, அதில் நடந்த சுவையான சம்பவங்கள், அவர்களது வாய்மொழிகள், சிறந்த கதைகள், கதை மாந்தர்கள் பற்றிய அலசல்கள் என்று மிகவும் நூதனமான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார்.

சிறுகதைகளுக்கான செகாவின் ஆறு விதிகள் மற்றும் ஒரு சிறுகதையை எப்படி எடிட் செய்வது என்பதற்குச் செகாவின் சுவாரசியமான மறுமொழியும் இட்ம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இச்சிறு புத்தகம் உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய சுவையான Teaser trailer ஆக மட்டுமல்லாமல் பொதுவாக நல்ல இலக்கியம் படிக்கவும் புதிதாக எழுத விரும்புவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செகாவின் மீது பனி பெய்கிறது,
எஸ். ராமகிருஷ்ணன்
உயிர்மை பதிப்பகம்
விலை: 110

Saturday, January 29, 2011

மானமுண்டா இந்திய அரசே?!

எங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)
அவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.

பெருந்தலைவர்களே, மகாநடிகர்களே! அயல்நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்றுச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.

எங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும்? எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை!

தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு

அன்புடையீர்,

தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரோடு இரக்கமற்று விளையாடும் இலங்கைக் கடற்படையினரைத் தடுத்து நிறுத்தக் கோரி நம் பிரதமருக்கு விடுக்கும் மனு இது:

http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?TNfisher

மனசாட்சி உள்ள எவருக்கும் இதன் கருத்து நியாயமாகவே படும் என்று நம்புகிறேன்.

நம் மீனவச் சகோதரர்களின் உயிர் காக்க மனுவில் உங்கள் கையொப்பத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நான் பதிவு செய்து விட்டேன்.

மிக்க நன்றி,
தீபா

Friday, January 21, 2011

காகிதப் பூக்கள்

என் நெருங்கிய தோழி ஜோதிக்கு ஃபோன் செய்தேன். "ஜோதி, நீ காலேஜ்ல‌ ஃபர்ஸ்ட் செமஸ்டர்ல என்ன மார்க் வாங்கி இருந்தே தெரியுமா?" என்று கேட்டேன். "என்னடி திடீர்னு, இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கும்?" என்றாள். நான் உடனே. "மேஜர்ல 90%, கெமிஸ்ட்ரில 86, இங்க்லிஷ்ல 78" என்று அடுக்கவும் அரண்டு போனாள். "ஹேய் எப்பிட்ரி என்னோட மார்க்லிஸ்ட் உன் கையில கெடைச்சுது?" என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.

ஆச்சரியம் ஒன்றுமில்லை; கடிதங்கள்!

வீடு மாறும் போது மறக்காமல் அலமாரியின் மேல் தட்டில் மூட்டைகட்டிப் போட்ட கடிதங்கள் + க்ரீட்டிங் கார்டு கத்தைகளைக் கவனமாக‌ எடுத்தேன்.
நான் கல்லூரியில் இருந்த போது எனக்கு வீட்டிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வந்த கடிதங்கள் மட்டுமல்ல, அக்கா திருமணமான புதிதில் எழுதிய கடிதங்களும், ஏன் நான் வீட்டுக்கு எழுதிய சில கடிதங்களும் கூட அதில் இருக்கும்.

ஆறு மாதத்துக்கொரு முறை இதில் எதையாவது எடுத்துப் படித்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. பழைய காகிதத்தின் வாசனையினூடே நமக்காக நேரம் செலவழித்து, தங்கள் கைப்பட எழுத்தைக் கொட்டி அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தையும் நுகர முடியும்.
நிகழ்கால இறுக்கங்கள் சட்டென்று தளர்ந்து போய் மனம் மலர்வதை உள்ளபடியே உணர முடியும்.

நாமே மறந்து போன பல சுவாரசியமான‌ விஷயங்களை எப்போதோ எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. இன்று கல்லூரியில் படிக்கும் என் அக்கா மகளின் மழலைப் பேச்சுக்களைப் பதிந்து வைக்க அப்போது ப்லாக் இருக்கவில்லை. அக்காவின் கடிதங்கள் அந்த அழகான நாட்களை நினைவுகூரச் செய்கின்றன.

கல்லூரியில் மதிய உணவுக்காக விடுதிக்கு வரும் போது அந்த "லெட்டர்ஸ் காட்" நிறைய அன்றைக்கான கடிதங்கள், (கார்டுகள், இன்லேன்ட் லெட்டர்கள், தடித்த போஸ்டல் என்வெலப்கள், வாழ்த்து அட்டைகள்) நிறைந்து கிடக்கும். அதில் நம் பெயர் போட்ட ஒன்று கண்ணில் பட்டு விட்டால் போதும் உற்சாகம் பீறிடும்.

இன்று? பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் இருப்பவர்களிடம் கூட பத்து பைசாவில் தொலை பேசும் வசதி இருக்கிறது. எஸ்.எம்.எஸ், இமெயில் என்று உடனடியாகத் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. அவ்வளவு ஏன் மனதில் நினைத்ததை சட்சட்டென்று உலகில் எவருடனும் பகிர்ந்து கொள்ளும் பஸ், ட்விட்டர், ப்லாக்...

ஆனால், என் தோழிக்குக் கிடைத்தது போன்ற‌ இன்ப அதிர்ச்சியை இனி யாரும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

கடிதம் எழுதும் கவின்மிகு பழக்கத்தை ஏன் காலம் கரையச் செய்ய வேண்டும்?

சிறு வ‌ய‌தில் படித்துக் கிறுக்கி, நைந்து போன கதைப் புத்தகங்கள் ப‌ல இருக்கின்றன என்றாலும் தொலைந்து போய் விட்ட காலம் கடத்திச் சென்று விட்ட ஏராளமான புத்தகங்களின் இழப்பின் ஏக்கம் இன்னும் என் நெஞ்சிலே.
இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சேர்த்து வைக்க‌ என்ன‌தான் இருக்கும்? பிள்ளைக‌ள் விடுதியில் த‌ங்கிப் ப‌டிக்கிறார்க‌ளா? வீட்டை விட்டு வெளியில் த‌ங்கி வேலை பார்க்கிறீர்க‌ளா? க‌டித‌ங்க‌ள் எழுதுங்க‌ள் மாத‌மொரு முறையாவது; அல்லது வாழ்த்து அனுப்புங்க‌ள்.

ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ளாகத் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன அல்லவா?

Partially மீள் பதிவு!

Monday, January 17, 2011

நேஹா நேரம்

சின்னக் குழந்தை பிறந்தவுடன் வந்து பார்த்த போது,
"ஆஹா...பாப்பா ஜம்ப் பண்ணி வந்துட்டியா...வந்துட்டியா!" என்றெல்லாம் கை தட்டிக் குதூகலித்தாள்.
"பாப்பாக்கு முத்தம் குடுக்கறேன் கை புடிச்சிக்கிறேன்" என்றெல்லாம் பாசமழை பொழிந்தாள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்.
சில வாரங்களில் எதற்காவது பிடிவாதம் பிடித்து அழுகையில் போய்ப் பாப்பாவை அடித்து விடுவது, கையைப் பிடித்து இழுப்பது என்று செய்யத் தொடங்கினாள். ரொம்பவே பயந்து போனேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் குறைந்து வருகிறது என்றே நம்பவிரும்புகிறேன்!

ப்ளே ஸ்கூல் ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு.

"நேஹா! ஸ்கூல்ல உனக்கு யாரு ஃப்ரென்ட்ஸ்?"

"நேத்ரா, ராகவ், ம்ருத்துஞ்ஞ்ஞ்ஜெய், கனிஷ்கா..."

"ராம்?"

"ராம் பையன் புடிக்காது"

"ஏன்டா?"

"ராம் பையன் தல புட்ச்சி இழுக்க்க்க்க்க்குறான்"

"உங்க மிஸ் பேரென்ன?"

"அஞ்சும் மிஸ்..அஞ்சும் மிஸ் கிட்ட ஐ லவ் யூ சொன்னேன்."

"அம்மாவோட பொக்கிஷம் யாரு?"
"நேஹா"
"நேஹா வோட பொக்கிஷம் யாரு?"
"அம்மா"
இது அவள் நல்ல மூடில் இருந்தால் சொல்லிக் கொள்வது.
(ஓகே! ஓகே! நான் ட்ரெயினிங் கொடுத்துச் சொன்னது தான் :))

ஒரு நாள் இதைச் சொல்லிவிட்டு அவளாகவே நீள ஆரம்பித்தாள்:
"அப்பாவோட பொக்கிஷம் ஷைலா
மாது பெரியப்பாவோட பொக்கிஷம் ப்ரீத்து
அம்மு பெரிம்மாவோட பொக்கிஷம் நிகில்
டாரதி அத்தையோட பொக்கிஷம் சூர்யா"

"ஜான் மாமாவோட பொக்கிஷம்?" ‍ ‍
"ம்...டாரதி அத்தை"

"அப்பாயியோட (அவளுடைய பாட்டி) பொக்கிஷம்?"
"ம்...நெல்சன் தாத்தா!"

என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு,
"மாது பெரியப்பா என்னை இப்பிடித்தான் கொஞ்சினாங்க" என்றாள்.
பின்பு, "நான் ப்ரீத்துவை அடிக்கவே மாட்டேன். மாது பெரிப்பா அடிப்பாங்க."

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "நேஹா அந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்துத் தாடா" என்றேன்.

கொண்டு வந்து கொடுத்தாள். திறந்து எடுத்துக் கொண்டு மூடியைக் கீழேயே வைத்தேன்.
போகிற போக்கில் "மூடி வெச்சிடு, அது கொட்டிடும்" என்றாளே பார்க்கலாம், ஜோவின் எகத்தாளப் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை.

"நானே நானே" மேனியா ஆரம்பித்திருக்கிறது. எதையாவது தானே செய்ய விரும்பி அதில் இத்துனூன்டு நாம் செய்து விட்டாலும், கத்திக் கூப்பாடு போடுகிறாள்.
உதாரணம்: தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, நேரமாகிறதே என்று அவசரமாய் ஒரு துண்டு பிய்த்து வாயில் ஊட்டப் போனால் போச்சு! ஊரே இரண்டு படுகிறது. அவளாகவே அரை மணி கழித்து காய்ந்து போன‌ தோசையை ஊட்டிவிடச் சொல்வது வேறு கதை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா பாட்டு ரொம்பப் பிடிக்கும். சிம்பு நடித்த வேறேதோ படம் டிவியில் வந்த போது, அம்மா, "மன்னிப்பாயா மன்னிப்பாயா..." என்று கத்தியதோடு அவ்வப்போது "ஆமாம் கரெக்ட்.. கண்டுபிடிச்சிட்டேனே...." என்று கன்ஃபர்ம் வேறு செய்து கொண்டாள்.
சிம்புவை வில்லன்கள் அடித்த போது ஒரே அழுகை. "மன்னிப்பாயா அடிக்குறாங்க..." அவளுக்காக அன்றொரு நாள் சிம்பு ரசிகையாக மாறவேண்டி வந்தது!

ஸ்ரீ கோல்ட் பருப்பு வகைகளுக்கான‌ விளம்பரம். அதில் ஒரு சிறுவன் பாக்ஸிங் பழகிக் கொண்டிருந்தான். உன்னிப்பாகக் கவனித்த அவள், "அம்மா எனக்கும் நீ ஸ்ரீ கோல்ட் பருப்பு வாங்கிக் குடுக்குவேல்ல? நானும் டிஷ்யூம் டிஷூம் பண்ணுவேன்!" குழந்தைகளை மிகச் சரியாகத் தான் டார்கெட் செய்கின்றன விளம்பரங்கள்.

அவளுக்குப் பிடித்தது எதையாவது செய்து தர ஆரம்பித்தால் ஒரே கொஞ்சல் தான். கையில் தட்டோடு சமையல் கட்டு வாசலிலேயே நிற்கிறாள்."அம்மா, பாப்கார்ன் செய்றியா, நான் இங்கியே நிக்கவா? ஸோ ஸ்வீட்மா." (ரொம்பச் சமத்தாம். உள்ளே வந்து தொந்தரவு செய்ய மாட்டாளாம்!)
அதே போல் செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."