(வேறு என்ன தலைப்பு வைப்பது?)
”இனிமே அங்க போனியோ காலை உடைச்சிடுவேன்.”
”அந்த அங்கிள் கைவலிக்க வலிக்க வா வா” ன்னு கூப்பிடறார்ப்பா. நான் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரேன். அந்த நான்கு வயதுச் சிறுமி அப்பாவிடம் அழுது மன்றாடுகிறாள். வழக்கமாக அவள் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று விளையாடுவதைத் தடுக்காத அவளது அப்பா இதற்கு மட்டும் மறுக்கிறார்.
அண்ணனுடன் அங்கு ஒரு தடவை சென்ற போது அந்த அங்கிளும் அவரது வீட்டில் ஒரு ஆண்ட்டியும் (அவரது அம்மாவோ அண்ணியோ) அவளைத் தூக்கிக் கொஞ்சியதும் ஆசையோடு விளையாடியதும் நினைவுக்கு வந்தது. அழகாகப் படம் வரையும் அந்த அங்கிள் அவளை உட்கார வைத்து அப்படியே அசலாகப் படம் கூட வரைந்து தந்தாரே. இவ்வளவு நல்ல அங்கிள் வீட்டுக்குப் போகக் கூடாது என்கிறாரே அப்பா.
அந்தச் சிறுமிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவளுடைய அங்கிள் அவளது அக்காவைக் காதலிக்கிறார். அதனால் தான் அப்பா தன்னைத் தடுக்கிறார் என்பது.
பிறகு ஒரு நாள் அவர்கள் ஊரை விட்டே போய் விட்டார்கள். மாது அங்கிள் என்றொரு ”உயர்ந்த!” அன்பு உருவம் லேசான பசுமையோடு எப்போதாவது நினைவில் வரும்.
ஐந்தாறு வருடங்களுக்குப் பின்பு அக்காவுக்குக் கல்யாணம். வீட்டில் கொஞ்ச நாளாகவே அக்கா அழுது கொண்டிருக்கிறாள். அப்பா கோபமாக இருக்கிறார். அண்ணன் அக்காவை ஏதோ கேலி செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான். மாது என்ற பெயரும் அடிபடுகிறது. அக்கா அந்த மாது அங்கிளைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்பது புரிந்தது. ஆனால் அந்த அங்கிள் தான் எப்போதோ ஊரைவிட்டுப் போய் விட்டாரே. பின்பு எப்படி? எப்படியோ மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
ஒருவழியாகத் திருமண நாளும் வந்தது. அக்கா பூரிப்பும் சந்தோஷமுமாக இருந்தாள். எளிமையாக ஆனால் சிறப்பாக நடந்த அந்தத் திருமணத்தில் சிறுமி தீபா வெகு உற்சாகமாக இருந்தாள். சரி மூன்றாம் நபரைப் போல் பேசியது போதுமென்று நினைக்கிறேன், நான் தான் அந்தச் சிறுமி!
திருமணம் முடிந்த கையோடு அக்காவும் அங்கிளும் ஊருக்குக் கிளம்பி விட்டார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த ஊரில் இன்னொரு அப்பா அம்மா அவளூக்காக எப்போதும் இருக்கிறார்கள்.
அக்கா விரும்பிய போதெல்லாம், அல்லது அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போன போதெல்லாம், “உன் மனதுக்குத் திருப்தியேற்படும் வரை இருந்து எல்லோரையும் கவனித்து விட்டு வா” என்று அவர் அக்காவை வீட்டில் விட்டுச் சென்று விடுவார். அந்த் சமயத்திலெல்லாம் ஊரில் தனியாக இருந்து வெளியில் சாப்பிட்டுக் கொண்டு... அந்தச் சிரமங்களையெல்லாம் அவர் பெரிது படுத்தியதில்லை.
அக்காவும் பெரும்பாலான பெண்களைப் போல் பிறந்த வீட்டுக்கு வந்தால் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டு.. மூச்! இழுத்துப் போட்டுக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வாள். அம்மா அப்பாவுக்குப் பணிவிடை செய்வது, வீட்டை ஒழுங்கு படுத்துவது, எனக்கு உணவூட்டுவது(!), அண்ணனுக்குக் (அவளுக்குத் தம்பி) தலைக்கு எண்ணெய் தேய்த்து விடுவது, ஏங்கிப் போயிருந்த என்னைப் பிரிந்திருந்த நாட்களுக்கெல்லாம் சேர்த்து வைத்துக் கொஞ்சிக் கெடுப்பது என்று!
அக்கா வரும் நாட்களை எதிர்பார்த்தே வருடத்தின் மிச்ச நாட்களை ஓட்டுவது இன்று வரை பழக்கமாகி விட்டது. திருமணமான பின்பும் கூட. அதாவது பேசும் போது கூட “அம்மு வந்துட்டுப் போனாளே அப்போ..” , ”அம்மு வரும் போது பார்த்துக்கலாம்” - இது எங்கள் வீட்டில் எல்லாருக்குமே பொருந்தும்.
என் திருமணம் நடக்க முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அக்காவும் அங்கிளும் தான். அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைத்ததும் ஜோவின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியதும் கூட அவர்கள் தான்.
என்னிடம் காட்டிய அதே வாஞ்சையை ஜோவிடம் காட்டுவதும் ஜோவும் ”அண்ணா அண்ணியிடம்” உண்மையான பாசத்தோடு இருப்பதும் என் வாழ்வின் வரம் என்றே நினைக்கிறேன். ஆனால் இவர்கள் சேர்ந்து கொண்டால் எங்கள் தலைகள் (அக்கா, நான்) உருள்வது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக இருப்போம்!
இதையெல்லாம் விட, எந்தச் சந்தர்ப்பத்திலும், நான் எப்படி நடந்துகொண்ட போதிலும் “நீ ரொம்ப நல்ல பெண் தெரியுமா” என்ற அவரது வார்த்தைகள் எனது மனசாட்சியை எப்போதும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பவை. அதற்காக நான் என்றென்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் மீது வேறு எவருக்கும் இல்லாத நம்பிக்கையும் கனவுகளும் அங்கிளுக்கு உண்டு என்று சில சமயம் தோன்றும். (சற்று மிகையாகவே!) அதில் எவ்வளவு நான் நிறைவேற்றுவேன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ரொம்பவும் ஏமாற்றிவிடக் கூடாதென்று நினைத்துக் கொள்கிறேன்.
என் அன்புக்குரிய அக்காவை ஒருமையில் குறிப்பிட்டிருப்பது பற்றி விளக்கம். என்னை விட பத்து வயதுக்கு மேல் மூத்தவளாயினும் அக்கா என்று அழைப்பது அவளுக்கு அறவே பிடிக்காது. அங்கிள் என்று நான் அவரை அழைப்பதும் அக்காவின் விருப்பம் தான். மேலும் சிறு வயதில் ஒரு தாய் போல் அரவணைத்தவள், இப்போது நெருங்கிய தோழியாக ஆகிவிட்டாள். அது தான் அவளது சிறப்பம்சம். அவளது இளமையின் ரகசியமும் அது தான்!
பி.கு1: அங்கிள் என்ற படைப்பாளியும் சிந்தனாவாதியும் தொடர்ந்து பிரமிப்பூட்டிக் கொண்டு வருவதால் அவரின் அந்த முகங்களைப் பற்றி எழுத என் எழுத்துக்களுக்கு வலிமை போதாது. மன்னிக்கவும்.
பி.கு 2: அடடா! இது அங்கிளைப் பற்றிய பதிவாயிற்றே. அக்கா தவிர்க்க முடியாமல் இடையில் வந்து விட்டாள். அவர்களைப் பிரிப்பது அழகல்ல. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். அக்கா பற்றிய தனிப்பதிவு விரைவில்.