Sunday, December 30, 2012

ஒரு வேண்டுகோள்

நிர்பயாவுக்காகக் கண்ணீர் சிந்தும் அனைவருக்கும், குறிப்பாக சினிமாப் பிரபலங்களுக்கு ஒரு வேண்டுகோள்:


உங்கள் அறச்சீற்றத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் என் வணக்கங்கள். உங்கள் முக்கிய அலுவல்களுக்கிடையே கொடுமையான அநீதி இழைக்கப்பட்ட ஒரு சாமனியப் பெண்ணுக்காக நீங்கள் இரங்கலும் கோபமும் தெரிவிப்பது நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.


அத்துட‌ன்,

கயர்லாஞ்சியில் சாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவும், சுயகௌரவத்துடன் வாழவும் பௌத்த மதத்தைத் தழுவி இருந்த பய்யலால் போட்மாங்கேயின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா (அவர்களின் சடலங்கள் கூட) சந்தித்த சொல்லொணாக் கொடூரங்களையும்,

குஜராத்தில், கலவரத்துக்குச் சிலகாலம் முன்புவரை மகளே என்று அழைத்தவர்களே ஐந்து மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் வன்புணர்ச்சி செய்த பில்கிஸ் பானோவையும், அவர் கண்முன்னே கல்லில் தலை மோதிக் கொல்லப்பட்ட அவரது இரண்டு வயது மகளையும்,


சட்டீஸ்கர் காட்டில் பட்டாம்பூச்சியாய் உலவித்திரிந்த 16 வயது மீனா கால்கோவைக் காவல் துறையனரே கடத்திச் சென்று சின்னாபின்னப் படுத்தி, பின் அவளை நக்ஸல் என்றும் காமுகி என்றும் சித்தரித்த‌ அவலத்தையும்,



சோனி சூரியைச் சித்திரவதைக்கு ஆளக்கிய காவல் துறையினருக்கு நம் மாண்பு மிகு அரசு பதக்கம் அளித்து மகிழ்ந்ததையும்,



திருச்செந்தூர் அருகே கிராம‌த்தில் ப‌ள்ளி சென்று திரும்பிய 13 வயது சிறுமி புனிதாவை வ‌ன்புண‌ர்ச்சி செய்து கொல்ல‌ப்ப‌ட்டு முட்புத‌ரில் வீச‌ப்ப‌ட்ட‌தையும்,



மேலும், பல்லாயிரக்கணக்கான கொடூரத்தின் உச்சத்தை அனுபவித்த ஈழத் தமிழ்ச் சகோதர சகோத‌ரிகளையும்,


இன்னும் இன்னும் இளகிய மனங்களுக்குச் சட்டென்று எட்டிடாத வகையில் சின்ன எழுத்துக்களில், நாளிதழ் உள் பக்கத்தில் குற்றங்கள் பகுதியில் வந்து கொண்டிருக்கும், அல்லது மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கும், நாள்தோறும் பெண்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்டு வரும் எத்தனையோ அநீதிக‌ளையும்...


தயவு செய்து உங்கள் உணர்ச்சித் ததும்பும் உரைகளிலும் ட்வீட்டுகளிலும் முகநூல் நிலைச்செய்திகளிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சினிமா பிரபலங்களை சற்று அதிகமாகவே உற்று நோக்கும் கூட்டம் நாங்கள்.

Monday, December 10, 2012

பார‌தீ!

அக்கினிக் கவிஞன் அவதரித்த நாளின்று!





"கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும்

நடு வயதினனுக்குள்ள மனத் திடனும்

இளைஞனுடைய உத்ஸாகமும்

குழந்தையின் ஹ்ருதயமும்

தேவர்களே, எனக்கு எப்போதும்

நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”



"பொன்னை உய‌ர்வைப் புக‌ழை விரும்பிடும்

என்னைக் க‌வ‌லைக‌ள் தின்ன‌த் தகாதென்று"


பாடிய‌ க‌விஞ‌ன் வாழ்ந்த‌ இம்ம‌ண்ணில் தான்,

பொன் வேண்டும், பொருள் வேண்டும், புகழ் வேண்டும்...

உய‌ர்வைப் ப‌ற்றி என‌க்கேன் க‌வ‌லை என்று பொய் ப‌க‌ர்ந்து திரியும் பித்த‌ர்க‌ள் உல‌வுகிறார்கள்.




ச‌த்திய‌த்தின் நாடி துடிக்க‌ வேண்டும் க‌விஞ‌ன‌து எழுத்தில்.



சீற்றம் அழகு

காதல் அழகு

காமம் அழகு

சோகம் அழகு



க‌விதைக்கு ம‌ட்டும‌ல்ல‌, அலங்காரங்கள் எத்தனை புனைந்த போதும் பொய் என்றுமே அழ‌கில்லை.

மாயையே! மாயையே!

இந்தப் பாடலில் மகாகவியின் சீற்றமும் வேகமும் அதிகமாக வெளிப்பட்டாலும் எப்போது இதைப் படித்தாலும் மனதில் இனம்புரியாத சாந்தமும் அமைதியும் நிலவுகிறது.



என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப் போல் கனன்று எரிய‌வும் வ‌ல்ல‌து என்பதை பாரதியின் எழுத்துக்களில் தான் முழுமையாகக் கண்டுண‌ர்ந்தேன்!

ஏனோ இன்று இதைத் தேடி எடுத்துப் படிக்கவும் பகிரவும் தோன்றியது.

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?

மாயையே - மனத்

திண்மையுள்ளாரை நீ செய்வது

மொன்றுண்டோ ! - மாயையே !



எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்

மாயையே - நீ

சித்தத் தெளிவெனுந் தீயின்முன்

நிற்பாயோ ? - மாயையே!



என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்

கெட்ட மாயையே ! - நான்

உன்னைக் கெடுப்ப துறுதியென்

றேயுணர் - மாயையே !



சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு

மாயையே ! - இந்தத்

தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்

செய்வாய் ! - மாயையே !



இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப

மாயையே ! - தெளிந்

தொருமை கண்டார் முன்னம் ஓடாது

நிற்பையோ ? - மாயையே !



நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ

மாயையே - சிங்கம்

நாய்தரக் கொள்ளுமோ நல்லர

சாட்சியை - மாயையே !



என்னிச்சை கொண்டுனை யெற்றி விட

வல்லேன் மாயையே ! - இனி

உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்

வராது காண் - மாயையே !



யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை - மாயையே !


(மீள்பதிவு)

Monday, July 23, 2012

A few angles of my angels!

...அவர்களின் அழகிய உலகத்தை நானே முற்றும் ஆக்கிரமித்துச் சிதைத்துவிடலாகாதே என்பதற்காகவே சற்று விலகியும் போகிறேன்.


நேஹா, ஷைலா - என் குட்டி தேவ‌தைக‌ள். அம்மா என்ற‌ மிக‌ப்பெரிய‌ பொறுப்பையும் என் த‌குதிக்கு மீறிய‌ ச‌ந்தோஷ‌த்தையும், என் பொறுமைக்கு விஞ்சிய குறும்புத் தொல்லைகளையும் அன்றாடம் அளித்துச் சோதித்துக் கொண்டிருக்கும் என் ம‌ழ‌லைக‌ள்.


நோ, நேஹாவுக்கு ம‌ழ‌லையே கிடையாது. ப‌ளிச் ப‌ளிச் சென்று அவ‌ள் பேசுவ‌தைப் பார்த்தே இளைய‌வளும் ஒன்ற‌ரை வ‌ய‌திலேயே முழு நீள‌ வாக்கிய‌ங்க‌ள் பேச‌த் தொட‌ங்கி விட்டாள்.

அவ‌ள் பேசும் அழகையும் குறும்புகளின் அழகையும் நிச்சய‌ம் எழுத்தில் வ‌டிக்க‌ முடியாது; முய‌ற்சி கூட‌ செய்ய‌ப் போவ‌தில்லை நான். :-)

வயதுக்கே உரிய பிடிவாத‌ம் அவ்வ‌ப்போது த‌லை தூக்கினாலும் பொதுவாக‌ப் புரித‌லும் பொறுமையும் கூட‌ நேஹாவுக்கு இருக்க‌த் தான் செய்கிற‌து.



மிக‌ந‌ல்ல‌ மூடில் இருந்தால், சின்ன‌வ‌ள் அடித்துவிட்டால் கூட‌, "இட்ஸ் ஓகே மா, சின்ன‌ப் பொண்ணு தானே..." பின்பு தான் தெரியும் அவள் எதற்கு இவளை அடித்தாள் என்று! ;-)



நான் மாலை வருவதற்குள் பாட்டியுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதி விடுகிறாள். வெள்ளிக்கிழமையன்று கடைசியில் கொஞ்சம் மட்டும், இதை அம்மாவுடன் எழுதுகிறேன் என்று வைத்து விட்டாளாம். நேற்று அதை எடுத்து வைத்து அழைத்தவுடன் அவளே அழகாக எழுதி விட்டாள். நானும் அவள் அக்காவும் அசந்து போய்ப் பாராட்டியும் ஆகி விட்டது.



இர‌வு தூங்கும் போது "நேஹா சீக்கிரம் தூங்குடா...காலையில ஸ்கூலுக்குப் போகணும்".
நேஹா; "அம்மா ஒரு விஷயம்..."
"என்னடா?"
"நான் B எழுதினது உனக்குப் பிடிச்சுதாம்மா?"
"அதுக்கென்னடா, அழகா எழுதினே. இதே மாதிரி எப்பவும் அழகா எழுதணும், படிக்கணும், என்ன? இப்போ தூங்கு"


"அம்மா...E எப்ப‌டிப் போட‌னும் தெரியுமா, ஒரு ஸ்டான்டிங் லைன், அப்புறம் ஸ்லீப்பிங் லைன், இன்னொரு ஸ்லீப்பிங் லைன், ஸ்லீப்பிங் லைன்..." என்று ஆர‌ம்பித்து R வ‌ரைக்கும் காற்றில் விரல்களை அசைத்து அழ‌காக‌ச் சொன்ன‌ போது ப‌ல‌ச‌ம‌ய‌ங்க‌ளில் தோன்றும் அதே எண்ண‌ம் த‌லை தூக்கிய‌து: "Do I really deserve such a delightful blessing?"

ம்...எழுத்துக்களை நேசிக்கத் தொடங்கி விட்டாள், விரைவிலேயே தானே வாசிக்கத் தொடங்கி விடுவாளல்லவா? :-))



X ம‌ட்டும் ஒரு ஸ்லான்டிங் லைன் ஒரு ஸ்லீப்பிங் லைன் என்று சொன்ன‌ போது திருத்த‌ முய‌ன்றேன். உட‌னே, "நோ அம்மா... இப்ப‌டித் தான். இரு, எங்க‌ மிஸ் கிட்ட‌ சொல்றேன்."

"என்ன‌ சொல்லுவே?"

"எங்க‌ அம்மாக்கு தெரிய‌ல‌...X போட‌ச் சொல்லித் தாங்க‌ன்னு சொல்வேன். அவ‌ங்க‌ ந‌ல்ல‌ மிஸ். உன‌க்குச் சொல்லித் த‌ருவாங்க‌..ஒக்கேவாம்மா?"


*********************************************************************

Tuesday, March 13, 2012

குலாபி கேங் - பிங்க் நிற‌ப் புர‌ட்சிப் பூக்க‌ள்

குலாபி கேங் - இந்தப் பெயரை நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்போம்? சமீபத்தில் தான் ஒரு ந‌ட்பின் மூல‌ம் (www.facebook.com/hannah.priya) இந்தப் புரட்சிகர அமைப்பினைப் பற்றி அறிந்து கொண்டேன்.

யார் இவர்கள்? உத்திரப்பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பண்டாவைச் சேர்ந்த உழைப்பாளிப் பெண்கள். இம்மாவ‌ட்ட‌த்தில் 20% மேல் மிக‌வும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ச் ச‌மூக‌த்தைச் சேர்ந்த‌ ஏழை ம‌க்க‌ள்.

பிங்க் நிறச் சேலையை அடையாளமாகவும் கையில் லத்திகளையும் தங்கள் ஆயுதமாகவும் கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவர்களைப் படையெடுத்துச் சென்று நையப்புடைப்பதில் தொடங்கியது இவர்களின் புரட்சி.
2008 ல் எடுத்த‌ க‌ண‌க்குப் ப‌டி 20,000 உறுப்பின‌ர்க‌ளும் ஃப்ரான்ஸ் நாட்டின் த‌லைந‌க‌ரான‌ பாரிசில் ஒரு கிளையும் கொண்டு வ‌ள‌ர்ந்திருக்கிறார்க‌ள்.

சீரிய‌லில் வ‌ரும் கொடுமைக‌ளைப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டு "அடப்பாவி, இவனையெல்லாம் அடிச்சுச் சாத்தணும்" என்று வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் பெண்கள் இப்ப‌டி ஒன்றை உண்மையில் செய்ய‌ முடியும் என்று நினைத்துப் பார்த்திருப்பார்க‌ளா?

ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌தில் திரும‌ண‌ம் செய்து கொடுக்க‌ப்ப‌ட்டு ப‌தின்மூன்று வ‌ய‌தில் முத‌ல் குழ‌ந்தையைப் பெற்று, ஐந்து குழ‌ந்தைக‌ளுக்குத் தாயுமான‌ ச‌ம்ப‌த் பால் தேவி என்ற பெண்மணி ஆரம்பித்தது தான் இந்தக் குலாபி கேங். இவர் முன்னாள் அர‌சுச் சுகாதார‌ ஊழிய‌ர்.

வ‌ழ‌க்கேதுமின்றி கைது செய்ய‌ப்ப‌ட்டுத் துன்புறுத்த‌ப்ப‌ட்ட பிற்படுத்தப்பட்ட‌ இன‌த்தைச் சேர்ந்த‌ ஓர் ஆணுக்காக‌வும் காவ‌ல்நிலைய‌த்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்க‌ள்.
அத‌னால் தான் பெண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, ஒடுக்க‌ப்ப‌டுகிற‌ ஆண்க‌ளும் இவ‌ர்க‌ளுட‌ன் இணைந்து ஆர்வத்துடன் போராடுகிறார்க‌ள். த‌ங்க‌ள் ப‌குதியில் ந‌ட‌க்கும் பல்வகை ஊழல்கள் ம‌ற்றும் குற்ற‌ங்க‌ளுக்கு எதிராக‌ப் ப‌ல போராட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொண்டிருக்கிறார்க‌ள்.

"இந்தியாவின் கிராமப் புறச் சமூகம் பெண்க‌ளுக்கு மிக‌வும் அநீதி இழைப்பதாக இருக்கிற‌து. அங்கு பெண்க‌ள் ப‌டிப்ப‌த‌ற்கு அனும‌தி இல்லை, இள‌ம்வ‌ய‌திலேயே க‌ட்டாய‌த் திரும‌ண‌ம் செய்விக்க‌ப்ப‌ட்டு, ப‌ண‌த்துக்காக‌ விற்க‌ப்ப‌டும் ப‌ண்ட‌ங்க‌ளாய் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிறார்க‌ள். கிராம‌ப்புற‌ப் பெண்க‌ள் க‌ல்வி பெற்றுச் சுத‌ந்திர‌ம் அடைய‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌மாகிற‌து."

"இங்கு யாருமே எங்க‌ள் உத‌விக்கு வ‌ருவ‌தில்லை. அதிகாரிக‌ளும் காவ‌ல்துறையும் ஊழ‌லில் ஊறிய‌வ‌ர்க‌ளாக‌வும் ஏழைக‌ளுக்கு எதிரான‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள். அதனால் எங்களுக்கு நீதி வேண்டியும் த‌வ‌று செய்ப‌வ‌ர்க‌ளை உண‌ர‌ வைக்கவும் ச‌ட்ட‌த்தை எங்க‌ள் கையிலெடுக்க‌ வேண்டி வ‌ருகிற‌து. த‌ற்காப்புக்காக‌ ல‌த்தியை எப்ப‌டிக் கையாள வேண்டும் என்று ஒரு பெண்ணுக்குக் க‌ற்பித்த‌ப‌டியே பேசுகிறார் ச‌ம்ப‌த் பால் தேவி.

பெண் ச‌க்தி எவ்வ‌ள‌வு ம‌க‌த்தான‌து என்ப‌த‌ற்கு எடுத்துக்காட்டு இந்த‌க் குலாபி கேங் பெண்க‌ள் தாம். பெண்ணைக் காளியாகவும் அம்மனாகவும் வ‌ழிபட்டாலும் அவ‌ள‌து ச‌க‌ல‌ ச‌க்திக‌ளையும் ப‌றிப்ப‌தைய‌ன்றி இச்ச‌மூக‌ம் வேறென்ன‌ செய்திருக்கிற‌து. இச்ச‌மூக‌த்தில் இனி அதிக‌ம் தேவை இந்த‌ நித‌ர்ச‌ன‌க் காளிக‌ள் தாம்.


மேலும் விவ‌ர‌ங்க‌ளுக்கு...

http://news.bbc.co.uk/2/hi/7068875.stm

http://www.gulabigang.org/?page_id=196

http://en.wikipedia.org/wiki/Gulabi_gang

Friday, February 10, 2012

ஏன் இப்ப‌டிச் செய்தாய் இர்ஃபான்?

எல்லாரையும் நேற்று அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஆசிரியையை மாணவன் குத்திக் கொலை செய்தது.

பிரம்பு கொண்டடித்த ஆசிரியரைக் கோபத்தில் பிரம்பைப்பிடுங்கித் திருப்பியடித்து ஓடிய குறும்புக்கார மாணவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கரும்பலகையில் கேலிச்சித்திரம் வரைந்து செய்து தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டதை அறிந்திருக்கிறோம். அவ்வளவு ஏன், என் தோழி தன்னைத் திட்டிய, அல்லது குறைத்து மதிப்பெண் இட்ட ஆசிரியையை நாயே பேயே என்று நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பின் பக்கங்களைக் கிழித்தெறிந்து விடுவாள்.

ஆனால், இது என்ன? திட்டமிட்டுக் கத்தியை ஒளித்தெடுத்து வந்து, கெஞ்சக் கெஞ்சக் குத்திக் கொல்வது என்பது, அதுவும் 14 வயதேயான சிறுவன் செய்திருப்பது மிகுந்த அச்சமூட்டுகிறது.

ந‌ட‌ந்த‌து மிக‌ப்பெரிய‌ அச‌ம்பாவித‌ம். கொலையுண்ட‌ ஆசிரியைக்கும் அவ‌ர்த‌ம் குடும்ப‌த்துக்கும் என் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள். பிள்ளைக‌ள் ந‌ன்றாக‌ப் ப‌டிக்க‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் க‌ண்டிக்க‌ப் போய் உயிரையே விட்ட‌ அந்த‌ ஆசிரிய‌ரின் நிலை ப‌ரிதாப‌மான‌து.

என் மாண‌வ‌ப்ப‌ருவ‌த்தைச் ச‌ற்றே பின்னோக்கிப் பார்த்தால்...

ப‌த்தாவ‌து ப‌டிக்கும் போது எங்க‌ள் வ‌குப்பில் க‌டைசியாக‌ வ‌ரும் மாண‌வனுக்கு எங்க‌ள் ஆசிரியை (அவ‌ருக்கு அறுப‌து வ‌ய‌திருக்கும்) த‌னியாக அழைத்து பாட‌ம் சொல்லிக் கொடுப்பார். எங்க‌ளையெல்லாம் ப‌டிக்க‌ச் சொல்லிவிட்டு அவ‌னை அம‌ர்த்தி வைத்து ம‌ண்டையில் கொட்டிக் கொண்டிருப்பார். பிரம்பால் அடித்துத் துவைப்பார். எங்க‌ளுக்கே பாவமாக‌ இருக்கும்.

ஆனால் தேர்வுக்கு முன் நடந்த பிரிவுபசார விருந்தில் அவன் எழுந்து பேசினான். "நான் இதுவரை ரொம்ப மோசமாகத் தான் படித்தேன். ஆனால் பொதுத்தேர்வில் நான் நிச்ச‌ய‌ம் நல்ல மதிப்பெண் வாங்கித் தேர்ச்சியடைவேன். அத‌ற்கு முழுக்காரணம்....மிஸ் தான்" என்றதும் அவ‌ர் அவ‌னைக் க‌ட்டிக் கொண்டு ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் விட்ட‌து இன்னும் என் நினைவிலிருக்கிற‌து.

அவ்வளவு அடியையும் மீறி எங்கோ அவர்களிடையே ஆசிரியர் மாணவர் நல்லுறவு இருந்திருக்கிறது. ஆசிரியையின் உண்மையான அக்கறையும் அதை மாணவன் புரிந்து கொண்ட‌த‌ற்குமான‌ இடம் இருந்திருக்கிறது.

இதற்கு மாறான இன்னொரு நிகழ்ச்சி...என‌க்கு ஒரே ஒரு ஆசிரியை மீது தான் அதிக‌ அள‌வில் கோப‌ம் வ‌ந்திருக்கிற‌து. மிகவும் கண்டிப்பு வாய்ந்த, - வ‌குப்பில் எல்லோருக்கும் பிடித்த‌ ஆங்கில‌ ஆசிரியை அவ‌ர். என‌க்கும் ஆர‌ம்ப‌த்தில் அவ‌ரைப் பிடித்துத் தானிருந்த‌து; அவ‌ர் என் தோழியுட‌ன் என்னை ஒப்பிட்டுப் பேசும் வ‌ரை. முத‌ல் ம‌திப்பெண் வாங்கும் அவ‌ளையும் என்னையும் தேவையில்லாம‌ல் ஒப்பிட்டு என்னை ம‌ட்ட‌ம் த‌ட்டுவார். அதாவ‌து நான் த‌லைக்க‌ன‌த்தால் ம‌திப்பெண்க‌ளைத் த‌வ‌ற‌ விடுவ‌தாக‌வும், த‌லைக்க‌ன‌மில்லாத‌தால் என் தோழி எப்போதும் முத‌லாவ‌தாக‌ வ‌ருவ‌தாக‌வும். (என‌க்குத் த‌லைக்க‌ன‌ம் என்று சொன்ன‌ ஒரே ஆசிரியையும் அவ்ர் தான்) அதுவாவ‌து போக‌ட்டும்,
நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்து க‌ட்டுரைப் போட்டியில் எழுதிய‌ என் தோழிக்க்கு முத‌ல் ப‌ரிசினையும், என‌க்குத் திருடி என்ற‌ப் ப‌ட்ட‌ப்பெய‌ரினையும் விசாரிக்காம‌ல் அளித்த‌ போது நொறுங்கிப் போனேன்.

நாட்க‌ண‌க்கில் அவ‌ரைப் ப‌ழிதீர்ப்ப‌து ப‌ற்றிச் சிந்தித்திருக்கிறேன். (யாருக்கும் தெரியாம‌ல் எப்ப‌டி அவ‌ர‌து டூவீல‌ரைப் ப‌ஞ்ச‌ர் செய்வ‌து என்று). அவ்வ‌ள‌வு திற‌மை போதாத‌தால் என் க‌ன‌வு நிறைவேறாம‌லே போயிற்று. ஏதோ ந‌ல்ல‌ நேர‌ம் அவ‌ர் விரைவில் ப‌ள்ளியை விட்டுச் சென்று விட்டார்.

நான் சொல்ல‌ வ‌ருவ‌தென்னவென்றால் ப‌தின்ம‌ வ‌ய‌தில் இந்த‌ ஒப்பீடு என்ப‌தும் ப‌க்கசார்புட‌ன் ந‌ட‌த்துவ‌து என்ப‌தும் எந்த‌ அள‌வு ம‌ன‌ உளைச்ச‌லைத் த‌ரும் என்ப‌தை லேசில் ஒதுக்கி விட‌ முடியாது. இதை உமா ம‌கேஸ்வ‌ரியின் கொடுமையான‌ ம‌ர‌ண‌ம் ந‌ம‌க்கு உண‌ர்த்தும் எத்த‌னையோ பாட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று என்ப‌தை ம‌ற‌ந்து விட‌க்கூடாது.

நாளைய தலைமுறை மலர்ந்து செழிக்க வேண்டிய ப‌ள்ளி வ‌குப்ப‌றைகள் கொலைக்கூடங்களாகாமல் த‌டுக்க‌ வேண்டிய‌து குறித்து அனைவ‌ருமே சிந்திக்க‌ வேண்டும்.

Tuesday, January 3, 2012

மயக்கம் என்ன - திரைப்பார்வை

செல்வராகவன் இத‌ற்கு முன் எடுத்த‌ எந்த‌ப் ப‌ட‌த்தையும் முழுமையாக‌ப் பார்க்க‌முடிந்த‌தில்லை. ரெயின்போ காலனி படம் பார்க்கப் போன போது தியேட்ட‌ரை விட்டுத் திட்டிக் கொண்டே வெளியே வ‌ந்திருக்கிறேன். வித்தியாச‌மா எடுக்கிறேன்னு விள‌ங்காத‌ ஒரு குப்பையை எடுத்திருப்பார், பொண்ணுங்களை அநியாயத்துக்குக் கேவலப்படுத்தி இருப்பார், சில‌ சீன்க‌ள் ம‌ட்டும் ர‌சிக்கிற‌ மாதிரி இருக்கும், அத‌ற்காக‌ மூன்று ம‌ணிநேர‌த்தை வீண‌டிக்க‌ப் போகிறோம் என்று நினைத்துத் தான் ப‌ட‌ம் பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். ப‌ட‌ம் பார்த்தால் பைத்திய‌ம் பிடிப்ப‌து நிச்ச‌ய‌ம் என்ற‌ ரீதியில் ஒரு விம‌ர்ச‌ன‌ம் வேறு ப‌டித்திருந்தேன்.

ஆனால் ஒரு (புகைப்ப‌ட‌க்) க‌லைஞ‌னின் ஆசைக‌ள், நிராசைகள் இவ‌ற்றை ஒரு சாமானிய‌ன் உண‌ர்ந்து கொள்ளும் அள‌வு உண்மையாகவும், அல‌ட்ட‌ல்க‌ள் இல்லாம‌லே ம‌ன‌தைத் தொடும் அள‌வுக்கும் ரொம்ப‌ நேர்த்தியாக‌க் காட்டி இருக்கிறார். த‌னுஷ் பிர‌மிக்க‌ வைக்கிறார். ப‌ல‌ இட‌ங்க‌ளில் வாய் விட்டு வாவ் சொல்ல‌வைத்த‌து அவரது ந‌டிப்பு.

முக்கியமாக ஹீரோயிசம் இல்லாமல் ஹீரொவைக் காட்ட முடிவதற்கே ஒரு தைரியம் வேண்டுமே! அதற்காகவே பாராட்டலாம். புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் தான் எடுத்த புகைப்படத்தைத் தனதென்று சொல்லி பேட்டி கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொப்புளிக்க அவனை உதைக்கக் கிளம்பாமல், அவரிடம் மெல்லச் சென்று, "அது என்னோடதுன்னு சொல்லிடுங்க ஸார், உங்களுக்கு இது ஒரு விஷயமா, ஆனா எனக்கு இது லைஃப் ஸார்..." என்று கையாலாகாத்தனத்துடன் தனுஷ் கெஞ்சுவது புதுமை தானே?

தனுஷ் பாட்டியைப் ப‌ட‌ம் எடுக்கும் காட்சி, அது முடிந்த‌தும் த‌லை நிமிர்ந்து யாமினிக்குப் ஃபோன் செய்து பேசுவ‌து - க்ளாஸ்!!

யாமினியாக‌ வ‌ரும் ரிச்சா கண்டிப்பாக வரவேற்க வேண்டிய நடிகை. க‌ண்க‌ள் அப்ப‌டிப் பேசுகின்ற‌ன. சிரிப்பும் கொள்ளை அழகு! வீட்டைக் காலிசெய்ய‌ச் சொல்லும் ந‌ர‌சிம்ம‌னிட‌ம் அவ‌ர் பேசுவது அதிரடி. திரும‌ண‌ம் ஆன‌தும் ஹீரோயின்க‌ள் மொத்த‌மாக அவுட் ஆஃப் கேர‌க்ட‌ர் ஆகிவிடுவார்க‌ள். இந்தப் படத்தில் அது ரொம்ப இல்லையென்றாலும் திரும‌ண‌த்துக்குப் பின் முழுதும் சேலையிலேயே வ‌ருவது, சாமி ப‌ட‌த்துக்கு முன் நின்று கும்பிடுவ‌து போல் காண்பிப்ப‌து எல்லாம் கொஞ்ச‌ம் அந்த‌ ர‌க‌த்தில் இழுத்துக் கொண்டு தான் போகிற‌து. கடைசியில் பாசிட்டிவாக‌ முடித்திருப்ப‌து ச‌ந்தோஷ‌மே என்றாலும் ப‌ட‌ம் முழுதும் இருந்த‌ க்ளாஸ் மிஸ்ஸிங்.

காட்சிகளை மீறி உறுத்தாம‌ல் ர‌ம்மிய‌மாக‌ இசை அமைத்திருக்கிறார் ஜீவீ பிர‌காஷ்.
எங்கிருந்து சுட்டாரோ, ஆனால் ந‌ன்றாக‌வே சுட்டுப் போட்டிருக்கிறார் பாட‌ல்க‌ளை. :-)

ஒரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ச‌க‌ல‌ வித‌ க‌ஷ்ட‌ங்க‌ளையும் ச‌கித்துக் கொள்வ‌தைத் த‌விர‌ வேறு சிற‌ப்பில்லையா பெண்ணுக்கு? அவ‌ன‌து ப‌ர்ஸில் காத‌ல்ம‌னைவி ஃபோட்டோவாக‌ இடம் பெறுவதும் அவனின் குழந்தையைச் சுமப்பதும் தான் அவள்‌ அடைய‌க் கூடிய‌ அதிக‌ப‌ட்ச சந்தோஷம், அந்தஸ்து எல்லாமா? என்றெல்லாம் மனதில் தோன்றினாலும், யாமினியும் கார்த்திக்கும் ம‌ன‌தில் அதைவிட‌ அதிக‌ இடத்தைப் பிடித்து கொண்டுவிட்டார்கள்! ஸோ, எனக்குப் படம் பிடித்திருந்தது.