Wednesday, March 23, 2011

A handful of rice (ஒரு பிடி சோறு) - க‌ம‌லா மார்க்க‌ண்டேயா









ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை.

தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டிகளுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.

மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.


நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட‌ வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.


ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.

பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் க‌ன‌விலியும் ந‌ட‌க்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார்.

க‌டின‌ உழைப்பு, உற்சாக‌ம், காத‌ல், க‌ன‌வுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய‌ சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.


இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத‌ ப‌ட்ச‌த்தில் தாமோத‌ருட‌ன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ண‌ம் அவ‌ன் ம‌ன‌தோர‌த்தில் இருந்து வ‌ருகிற‌து.

இந்திய ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌க் கூட்டுக் குடும்ப‌த்தின் வாழ்க்கை முறை மிக‌வும் எதார்த்த‌மான‌ முறையில் க‌தையில் விரிகிற‌து. புதிதாக‌த் திரும‌ண‌மான‌வ‌ர்க‌ளுக்காகப் வாட‌கைக்குக் க‌ட்டில் எடுப்ப‌தும் ப‌த்து நாளான‌தும் அது திருப்ப‌ப்ப‌ட்டு விடுவ‌தும், ஒரே அறையின் இடையில் த‌டுப்பு அமைத்து இரு குடும்ப‌ங்க‌ள் ப‌டுத்துக் கொள்வ‌தும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை க‌ருவுறுவ‌தும் நம‌க்குப் புதிதான‌ ச‌ங்க‌திக‌ள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட‌‌ விதம் ந‌ம்மை அடித்துத் தான் போடுகிற‌து.


குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்கார‌ரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது ப‌ட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவ‌ர் ப‌த‌றுவ‌தும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு த‌ர‌வேண்டுமே என்று ர‌வி குழ‌ந்தையை அடித்து நொறுக்குவ‌தும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத‌ சோக‌ நாட‌க‌ம்.


மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.

அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.

'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான்.


கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.

ஆங்கில‌ வாச‌க‌ர்க‌ளுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் ப‌ட‌ம்பிடித்துக் காட்டுவ‌த‌ற்காக எழுதப்பட்ட புத்த‌க‌கமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் க‌ம‌லா மார்க்க‌ண்டேயா ச‌ந்தேக‌த்துக்கிட‌மின்றி ஓர் இட‌துசாரியாக‌ மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்ப‌தாலேயே இந்த‌க் க‌தை முக்கிய‌மாக‌ப் ப‌டுகிற‌து.

4 comments:

காமராஜ் said...

மிக மிக எளிமையும் அடக்கமுமான விமர்சனம்.அந்தக்காலத்தில் வக்கீல் மாரிமுத்து அவர்கள் அடிக்கடி இந்தப்புத்த்கம் குறித்துப்பெசுவார்.ஆங்கிலம் என்பதால் கொஞ்சம் ஒதுங்கி இருந்துவிட்டோம். அதை இப்போது தீபா உங்கள் பதிவு சரிசெய்துவிட்டது.

நன்றி

ponraj said...

very nice!!

ரிஷபன் said...

//உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்//
யோசிக்க வைத்தது..

Deepa said...

நன்றி காமராஜ் அங்கிள்!
நன்றி பொன்ராஜ்!
நன்றி ரிஷபன்!