Sunday, August 29, 2010

யாரிடம் சொல்லி அழ?

அந்திமாலைப் பொழுது. தெருவிளக்குகளின் மீதும் சாலையோரம் படுத்துக் கிடந்த குதிரைகளின் முதுகின் மீதும் பனித்துளிகள் மெல்ல விழுந்து படிந்து கொண்டிருந்தன. குதிரை வண்டிக்காரன் ஐயோனா உடல் முழுதும் வெள்ளைப் பனியால் மூடப்பட்டுப் பிசாசு போல் உட்கார்ந்திருந்தான். வண்டியின் மீது அமர்ந்திருந்த அவன் உடல் எவ்வளவு மடங்க முடியுமோ அப்படி மடங்கி இருந்தது. தன் மீது விழும் பனியை உதறிக் கொள்ளக்கூடத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனது குதிரையும் செயலற்று நின்றிருந்தது.

அசையாமல் அது நின்றிருந்த கோலமும், குச்சிபோல் நேராக இருந்த அதன் கால்களும், ஏதோ அரையணாவுக்குக் கிடைக்கும் பொம்மைக் குதிரையோ எனும்படியான தோற்றத்தைக் கொடுத்தது. குதிரையும் ஏதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. ஆம், ஏர் கலப்பைகளிடமிருந்தும், நன்கு பரிச்சயமான வயல்வெளிகளிலிருந்தும் பிரிக்கப்பட்டு, கூச்சலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கொடூரமான நகரவெளியில், யந்திர மனிதர்களுக்கிடையே எறியப்பட்டால், மிருகங்கள் கூட கனத்த மௌனத்துடன் யோசனையில் ஆழ்ந்து விடக்கூடும்.

வெகு நேரமாக ஐயோனாவும் அவன் குதிரையும் அப்படியே இருந்தார்கள். மாலை மயங்கும் போதே அவர்கள் இங்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு சவாரி கூட வரவில்லை. ஆனால் இப்போது அந்தி சாயத் தொடங்கி விட்டது. இருளின் அடர்த்தியில் தெருவிளக்குகள் பளிச்சென்று எரியத்துவங்கின; சாலையில் நடமாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.

"ஹேய், குதிரை வண்டி, பஜாருக்கு வருமா?" ஒரு அதட்டலான குரல் வண்டிக்காரனின் காதில் விழுந்தது.

அவசரமாக எழுந்தவன் பனி மூடிய தன் கண்ணிமைகளின் வழியாகப் பார்த்தான்; இராணுவ அதிகாரி ஒருவன் கோட்டும் தொப்பியும் அணிந்து மிடுக்காக நின்று கொண்டிருந்தான்.

"என்னா தூங்க்குறியா? பஜாருக்குப் போகணும்யா" என்றான் அவன் மீண்டும்.
வண்டிக்காரன் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். பனித்துகள்கள் நாலாபக்கமும் சிதறின. குதிரை வேண்டாவெறுப்பாக எழுந்து நடக்கத் தொடங்கியது.

"யோவ், எங்கய்யா போறே? ஓரமாப் போய்யா" எதிரே வந்த ஒருவன் திட்டி விட்டுப் போவது லேசாகக் கேட்டது. உடனே வண்டியிலிருந்தவனும் கத்தினான். "வண்டி ஓட்டத்தெரியுமாய்யா உனக்கு? ஒழுங்காப் போய்யா..."

வண்டிக்காரன் குழப்பமும் பதற்றமுமாக குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். வண்டி தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த இன்னொரு வண்டிக்காரனும் இவனை நாராசமாகத் திட்டிவிட்டுக் கடந்தான். இன்னொரு நடைபாதை வாசியும் சடாலென்று நகர்ந்து இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.

"பொறுக்கிப் பயலுக..வேணும்னே நம்மளை விழவெக்கிறதுக்காக இதெல்லாம் பண்ணுவானுங்க..." மிலிட்டரிக்காரன் பின்னாலிருந்து முணுமுணுத்தது கேட்டது.

வண்டிக்காரன் திரும்பி ஏதோ சொல்ல நினைத்தான். ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்டது ஒரு மெல்லிய விசும்பல் மட்டுமே.

"என்னய்யா?" அதட்டினான் மிலிட்டரிக்காரன்.
அவன் ஒரு கைத்த சிரிப்புடன் வறண்ட தொண்டையிலிருந்து அந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு உதிர்த்தான்: " எம்மகன், எம்மகன் போனவாரம் இறந்து போயிட்டான் சார்."

"ஹும்ம்..எப்படி இறந்தான்?"
அவ‌ன் தன் உடலை முழுதும் திருப்பி மிலிட்டரிக்காரனைப் பார்த்து, "ஏன்னு யாருக்கு சார் தெரியும்; அவனுக்குக்க் காய்ச்சல் வந்துது. மூணு நாள் ஆஸ்பத்திரியிலயே கெடந்தான்; போயிட்டான், எல்லாம் ஆண்டவன் சித்தம்."

அப்போது ஒரு இருண்ட திருப்பத்திலிருந்து மீண்டும் ஒரு குரல்:
"டேய் சாவு கிராக்கி, எங்கெடா போறே? ரோட்டைப் பாத்து வண்டிய ஓட்டு."

உடனே மிலிட்டரிக் காரனும், "ஆமா, நேராப் பாத்து வண்டிய ஓட்டு. இந்த மாதிரி நீ போனா விடிஞ்சுடும். உம்! சீக்கிரம் சீக்கிரம்"

வண்டிக்காரன் பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்தான். அவ்வப்போது திரும்பிப் பார்த்தான். ஆனால் அந்த மிலிட்டரிக்காரனோ கண்களை இறுக்கி மூடியபடி, இவனிடம் தான் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் வகையில் அமர்ந்திருந்தான்.

பஜாரில் மிலிட்டரிக்காரனை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அமைதியாக வண்டிக்குள் சுருண்டு உட்கார்ந்தான் வண்டிக்காரன். ஒரு மணி நேரம் போயிருக்கும்...இரண்டு மணி நேரம்...

அப்போது மூன்று வாலிபர்கள் வந்தார்கள். இருவர் ஒல்லியாக உயரமாக இருந்தனர். மூன்றாமவன் குள்ளமாகச் சற்றுக் கூன் முதுகுடன் இருந்தான்.
"ப்ரிட்ஜ் ஹோட்டலுக்குப் போகணும்; நாங்க மூணுபேர். இருபது கோபெக். ஓகேவா?"

வண்டிக்காரன் பதில்பேசாமல் குதிரையைக் கிளப்பினான். இருபது கோபெக் என்பது ரொம்பக் குறைவு தான். ஆனால் அவனுக்கு இப்போது ஐந்து கோபெக் கிடைத்தாலும் ஒரு முழு ரூபிளே கிடைத்தாலும் அதெல்லாம் பொருட்டில்லை. யாராவது சவாரிக்கு வரவேண்டும்; அவ்வளவு தான்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டும் வண்டியில் ஏறினர். இப்போது யார் பின்னால் அமர்வது, யார் வண்டிக்காரனுடன் நின்று கொண்டு வருவது என்ற சர்ச்சை கிளம்பியது. இறுதியில் குள்ளமாக இருப்பதனால் கூனுடையவனே நிற்பது என்று முடிவானது.

அவனோ வண்டிக்காரனிடம் எரிந்து விழுந்தான். "என்ன நிக்கிறே. சீக்கிரம் போய்த்தொலை. இது என்ன தொப்பிய்யா போட்டிருக்கே. கண்ராவியா இருக்கு."
"ஹீ..ஹீ, அது சும்மாய்யா..." சிரித்தான் வண்டிக்காரன்.
"சரி சரி..போ. என்ன‌ இவ்ளோ மெதுவாப் போறே. உன் முதுகுல ஒண்ணு குடுக்கவா?"

பின்னாலிருந்த ஒருவன் சொன்னன், "தலை ரொம்ப வலிக்குது. நேத்து நானும் வாஸ்காவும் நாலு பாட்டில் பிராந்தி அடிச்சோம்."
"எப்படிரா இப்படி அள்ளி வுடரே? நீயாவது நாலு பாட்டிலாவது..." சிரித்தான் இன்னொருவ‌ன்.
"டேய், சத்தியமாடா..." ரோஷமானான் முதலாமவன்.

வண்டிக்காரன் இவர்களின் உரையாடலை ரசித்துச் சிரித்தான், "கவலையில்லாத சின்னப் பசங்க..."
உடனே குள்ளமானவன் கத்தினான். "யோவ், வேகமாப் போய்யா...இப்படியா குதிரைக்கு வலிக்காம் ஓட்டுவே? நல்லா சாட்டைய வீசி அடிய்யா..."

இவனது வசவில் அவனது நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். தன்னை அவர்கள் திட்டத் திட்ட, வண்டிக்காரனின் மனம் லேசாகியது. தனது கொடுமையான தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சில் ஒரு சின்ன இடைவெளிக்குக் காத்திருந்த வண்டிக்காரன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்," என்மகன் செத்துப் போயிட்டான்யா.."

"ஹூம்..நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போறோம்..." அசுவாரசியமாகப் பதிலளித்தான் அவனுடன் நின்றிருந்தவன். உடனேயே, "ம்..ம்.. சீக்கிரம் போ. டேய், எவ்வளோ நேரம் தாண்டா நான் இவன் கூட நெருக்கியடிச்சிக்கிட்டு நிக்கிறது. எப்போடா போய்ச் சேருவோம்?"

"அவன் முதுகுல ஒண்ணு போட்டா சரியாப் போகும்." சிரித்தனர் மற்ற இருவரும்.
"யோவ் கெழவா, கேட்டியா. உன்னோட வண்டியில வரதுக்கு நாங்க நடந்தே போயிருக்கலாம். சீக்கிரம் போய்யா." நிஜமாகவே அவன் முதுலில் ஒரு தட்டு தட்டினான் கூட இருந்தவன்.

"யோவ், உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சாய்யா? பொண்டாட்டி புள்ள இருக்கா?" பின்னாலிருந்த ஒருவன் கேட்டான்.
"எனக்கா? ஹும்ம் இருக்கா சுடுகாட்டுல. அவளும் என் மகனும். அய்யோ..என்ன கொடுமை! நான் உயிரோட இருக்க, எம்மவன் போயிட்டான்யா...சாவு தப்பான கதவைத் தட்டிடுச்சே..."

வண்டிக்காரன் இது தான் சமயமென்று தன் மகன் இறந்த கதையைச் சொல்வதற்காகத் திரும்பினான். ஆனால் அதே கணம், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக ஒருவன் அறிவிக்கவே, மூவரும் "அப்பாடா வென்று பெருமூச்சு விட்டபடி வண்டியிலிருந்து குதித்தனர். இருபது கோப்பெக்குக்ளை வண்டிக்காரனிடம் வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினர்.

அவர்கள் போய் வெகு நேரமாகியும் வண்டிக்காரன் காசைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் சென்று மறைந்த திக்கையே வெறித்தபடி இருந்தான்.

மீண்டும் அவன் தனியனானான். வெறுமையும் அமைதியும் அவனைச் சூழ்ந்தது. ஏக்கமும் தவிப்புமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான். பல ஆயிரம் பேர் குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்லும் இந்தச் சாலையில் அவன் பேசுவதைக் கேட்க ஒருவர் கூட இல்லையா? ஆனால் அந்த மாநகரமோ அவனது துயரத்தைப் பற்றிய பிரக்ஞையே இன்றிப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவன் மனப்பாரம் அதிகரித்துக் கொண்டே போனது. அப்போது மட்டும் அவன் இதயம் வெடித்துச் சிதறி இருந்தால் அவன் நெஞ்சில் இருந்த சோகம் அந்த ஊரையே முழ்கடித்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சிறிது நேரத்துக்குக்குப் பிறகு ஒரு போர்ட்டர் அங்கு வந்தான்.

அவனிடம் பேசலாமென்று, "தம்பி மணி என்னப்பா" என்றான்.
"பத்தாகப் போகுது. இன்னும் இங்கெ என்ன பண்றே.. போ போ..." என்று விட்டு அவன் தன் நடையைத் தொடர்ந்தான்.

மெல்ல வண்டியைச் செலுத்தத் தொடங்கினான். அவன் நெஞ்சில் தேங்கி இருந்த சோகத்தைத் தாங்கவியலாமல் அவன் உடல் மேலும் வளைந்தது. பயங்கரமாகத் தலை வலித்தது. அவ்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. இனிமேலும் மனிதர்களுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை என்று புரிந்தது.

"ஷெட்டுக்கே போயிடலாம், வா", குதிரையைத் திருப்பினான்.
அரை மணி நேரம் கழித்து அவன் குதிரை வண்டிக்காரர்கள் தங்கும் ஷெட்டில் அடுப்பின் முன்னால் அமர்ந்திருக்கிறான். பெஞ்சுகளின் மேல், தரையின் மேல், அடுப்புப் பரணின் மேல் என்று அங்கங்கு பல வண்டிக்காரர்கள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்க‌ள்.

அறை முழுதும் நைத்துப் போன வாடை வீசியது. தாடையைச் சொறிந்து கொண்டே தூங்குபவர்களைப் பார்த்தான்.

"ஹூம் தவிடு வாங்கக் கூட‌ இன்னிக்குக் காசு கிடைக்கல. ரொம்பக் கஷ்டமா இருக்கு. சே...தன் வேலையை ஒழுங்கா செய்யத் தெரிஞ்சவனுக்கு, வயிறாரச் சாப்பாடு இருக்கிற‌வனுக்கு, குதிரைக்கு ஒழுங்காத் தீனிகுடுக்க முடிஞ்சவனுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. "

அப்போது மூலையில் படுத்திருந்த ஒரு இளம் வண்டிக்காரன் எழுந்து இருமிக் கொண்டே தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றான். அள்ளி அள்ளித் தண்ணீர் குடித்தான்.

"என்ன, ரொம்பத் தாகமா?" இவன் அவனைப் பார்த்துக் கேட்டான்.
"ம்..ஆமாம்."
"குடி குடி. இருமலுக்கு நல்லது. சரி, இங்கெ கேளேன், என் மகன்..என் மகன் இறந்துட்டான்யா இந்த வாரம். ஆஸ்பத்திரியில. திடீர்னு...கொடுமை தெரியுமா.."

சொல்லி விட்டுத் தன் வார்த்தைகள் அவனிடம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறதென்று பார்த்தான். அவனோ அதற்குள் படுத்துத் தூங்கிவிட்டிருந்தான். கிழவன மறுமடியும் முகத்தைச் சொறிந்து கொண்டு பெருமூச்செறிந்தான். யாரிடமாவது பேச‌ வேண்டுமென்று அளவற்ற‌ தாகம் ஏற்பட்டது அவனுக்கு; சற்று முன் அந்த இளைஞனுக்கு ஏற்பட்டக் குடிநீர் தாகத்தைப் போல.

இதோ, அவன் மகன் இறந்து ஒரு வாரமாகப் போகிறது. இன்னும் யாரிடமும் அதைப் பற்றி அவன் துக்கம் தீரப் பேசியாகவில்லை. அவனுக்கு உணர்ச்சிததும்ப அதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. எப்படி அவன் மகன் நோய்வாய்ப்பட்டான், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான், சாகும் முன் என்ன பேசினான், எப்படிச் செத்துப் போனான்...எல்லாம்.

அவனது இறுதி ஊர்வலம், ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் அணிந்திருந்த உடைகளை எடுத்து வந்தது, எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. அவனது ஒரே மகள் அனிஸ்யா கிராமத்தில் இருக்கிறாள். அவளைப் பற்றியும் யாரிடமாவது பேச வேண்டும். ஆம், அவனுக்குப் பேச ஏராளமாய் இருந்தன. யாராவது பெருமூச்சுடன், அவன் புலம்பல்களுக்கு ஈடுகொடுத்துக் கேட்க வேண்டும்.
பெண்களிடம் பேசுவது இன்னும் நன்றாக இருக்கும்; ஆனால் பெண்கள் பாவம், சில சமயம் முதல் வார்த்தையிலெயே கண்ணீர் சிந்தத் தொடங்கி விடுவார்கள்.

"வெளிய போய்க் குதிரையைப் பார்க்கலாம். தூக்கத்துக்கென்ன; மெதுவா வந்து தூங்கிக்கிட்டா போச்சு..." தனக்குள் பேசியவாறே வெளியே சென்றான்.
கோட்டை மாட்டிக் கொண்டு குதிரை லாயத்துக்குச் சென்று தன் குதிரையருகே போய் நின்று கொண்டான். குதிரைக்கு வாங்க வேண்டிய தவிடு பற்றி, வைக்கோல் பற்றி, பனி அதிகமாகப் பெய்வதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான். தனியாக இருக்கும் போது அவனால் தன் மகனைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. யாராவது அருகில் இருந்தால் அதைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியதே தவிர தனிமையில் அந்நினைவுகள் அவனைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கின.

"வைக்க‌ல் திங்கிறியா?" இருளில் பளபளத்த தன் குதிரையின் கண்களைப் பார்த்துக் கேட்டான்." "நல்லா தின்னு...தவிடு வாங்கத் தான் காசில்ல. வைக்கலயாச்சும் நல்லா தின்னு. ஹும்! என்ன பண்றது. எனக்கு வயசாயிப் போச்சு. முன்ன மாதிரி வண்டியோட்ட முடியல. என் மகன் இருந்திருந்தா நல்ல வண்டிக்காரனா இருந்திருப்பான். அவன் வாழ்ந்திருக்கணும்..."

சில கணங்கள் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தான்,
"ஆமாம்மா, நம்ம பையன் போயிட்டான்மா, என்னைத் தனியா விட்டுட்டு. எந்தக் காரணமுமே இல்லாம திடீர்னு செத்துப் போயிட்ட்டான்மா. இதோ பாரு, உனக்கு ஒரு குதிரைக் குட்டிப் பிறந்து அதுக்கு நீ தாயா இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ...ஒரு நா திடீர்னு உன் குட்டி இறந்து போச்சுன்னா உனக்கு எப்படி இருக்கும்? சொல்லு...ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்ல?"

அவன் குதிரை வைக்கலை மென்றபடியே தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி அவன் கைகளில் தன் மூக்கைத் தேய்த்தது. அதன் சூடான‌ சுவாசம் கைகளில் பட்டதும் அவனுக்கு நெஞ்சமெல்லாம் சிலிர்த்தது. சட்டென்று உடைந்து குதிரையிடம் தன் துக்கமெல்லாம் சொல்லி அழத் தொடங்கினான்.
********************************************************************************

பின் குறிப்பு:
சென்ற முறை பேச்சாளர் என்ற தலைப்பில் செக்காவ் கதையைத் தமிழாக்கம் செய்த போது செகாவ் கதைகளை ஏற்கனவே தமிழறிஞர்கள் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்களே, நீங்கள் மீண்டும் செய்வதனால் என்ன பயன் என்று ஒருவர் என்று கேட்டிருந்தார். அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை இங்கே தருகிறேன்.

நான் ஆங்கில‌த்தில் தான் இக்க‌தைக‌ளைப் ப‌டித்திருக்கிறேன். த‌மிழில் பிறமொழி எழுத்தாளர்களின் எந்தெந்த‌க் க‌தைக‌ள் மொழிபெய‌ர்க்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து என‌க்குத் தெரியாது. அப்ப‌டி த‌மிழில் ப‌டித்த‌ க‌தையை நான் மீண்டும் செய்ய‌ மாட்டேன்.

நான் முத‌லில் செய்த‌ போது அதற்கு வரவேற்பு இருந்ததாலும் சிலர் அப்போது தான் இக்கதைகளைப் படிப்பதாகவும் கூறவே அவ்வப்போது செய்து வ‌ருகிறேன்.

மேலும் ஒரு படைப்பை மொழியாக்கம் செய்யும் போது அதற்கு மூலப்படைப்பிலிருந்து மொழியாக்கம் செய்தவர்கள் பற்றிய‌ குறிப்புகளையும் தர வேண்டும் என்றும் ஒரு கருத்து வந்தது.

செய்தால் சிறப்பாகத் தான் இருக்கும். நான் இணையத்திலிருந்து ஆங்கில மொழியாக்கத்தை எடுத்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

மேலும், நண்பர்களின் ஆசைக்காகவும், என் சுய‌திருப்திக்காகவும், பயிற்சிக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறேன். வியாபார ரீதியாக மொழியாக்கம் செய்யும் பட்சத்தில் நிச்சயம் இந்த விதிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

புரித‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி. எனது புரிதலில் ஏதாவ‌து த‌வ‌றிருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

13 comments:

ஜெய்லானி said...

மொழியாக்கம் நல்லாவே வந்திருக்கு..

Gokul Rajesh said...

Nice story... Very well written...

Unknown said...

Thanks for a nice story. Translation is very good. I wish you utilize this great skill to translate many excellent books to our great tamil readers and a wider audience.

You may contact my friend sahas.sasi@gmail.com (who is running a book store), if there is a need for them to translate something worthful for a cause.

I request you not to publish this comment as I have given my friend's email address without his concern. Thanks

அம்பிகா said...

படிக்கும் போதே மனம் கனத்துப் போனது. அருமையான மொழிநடை. நல்ல பகிர்வு. நன்றி தீபா.

மாதவராஜ் said...

இந்தக் கதை நான் படித்திருக்கவில்லை. மீண்டுமொரு அருமையான மொழியாக்கம். சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ள முடியாமல் போவதின் வலியை செக்கோவ் எவ்வளவு அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். தீவுகளாய் உறவுகள் சிதறிக்கிடக்கும் இந்தக் காலத்துக்கும் எவ்வளவு சரியாக பொருந்துகிறது!

பகிர்வுக்கு மிக்க நன்றி தீபா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பகிர்வு. நன்றி தீபா.

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கு; ஆனா நீஈஈளமாருக்கு; ஆனா ரெண்டு பாகமா போடவும் முடியாத கதை.

Asiya Omar said...

அருமையான மொழியாக்கம்.கதை உருக்கமாக இருந்தது.

பொ.வெண்மணிச் செல்வன் said...

"அவலம்" என்ற தலைப்பில் இக்கதையினை ஏதோவொரு தொகுப்பில் படித்திருக்கிறேன். படித்து பல வருடங்கள் ஆகியும் நினைவிலேயே நிற்கிற கதை. கதை முடிகிற இடத்தில் தலைப்பு நெஞ்சில் அறைவது போலிருக்கும். இது போன்ற கதையை காட்சிப்படுத்த எந்த இயக்குனரால் முடியும் என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. அலுவலகத்தில் இருப்பதால் தங்களின் இந்த மொழிபெயர்ப்பை இன்னும் முழுதாய் படிக்கவில்லை. நல்ல முயற்சி! மாப்பசானையும் தொடருங்கள். வாழ்த்துக்கள்!

Sriakila said...

கதை நல்லாருக்கு தீபா! கடைசி வரிகள் மனதில் நிற்கிறது.

Unknown said...

As my son insisted on a story this morning, I narrated this to him with slight twist (cat died instead of son). His face was grim until he heard the last part.

Nice translation. Thanks.

'பரிவை' சே.குமார் said...

மொழியாக்கம் நல்லா வந்திருக்கு..

GSV said...

தனிமை எனது மிக பெரிய எதிரி நான் நினைத்த நாட்கள் உண்டு. அந்த நாட்களை நினைவு படுத்தறது. வாழ்த்துக்கள்.