Wednesday, January 13, 2010

என் கனவுப் பொங்கல்!

சிறுவயதிலிருந்தே எனக்குக் கிராமங்கள், வயல்வெளி, திண்ணை வீடுகள் என்றால் ரொம்ப ஆசை.
கல்லூரி செல்லும் வரை நான் சென்னையை விட்டு எங்கும் சென்று தங்கியதில்லை. ஓரிரு முறை அக்கா வீட்டுக்குச் சென்றது தவிர.

அக்கா திருமணமாகிச் செல்லும் போது கூட நான் கேட்டது இது தான்; “அம்மு உங்க ஊர்ல வயல் இருக்குமா?”
அம்புலிமாமா போன்ற கதைப் புத்தகங்களில் வரும் கிராமம், ஆலமரம், குளத்தங்கரை, தோட்டம், சோலை, திண்ணை வீடு, முற்றம், இதையெல்லாம் கற்பனையிலேயே கண்டு திளைப்பதும், பெரியவளானதும் நிச்சயம் ஒரு கிராமத்தில் தான் சென்று வசிக்க வேண்டும் என்பதும் சிறுவயதில் எடுத்த தீர்மானங்களில் ஒன்று.

பொங்கல் பண்டிகையின் போது இந்த ஏக்கம் பன்மடங்கு கூடும். பாடப்புத்தகங்களில் வேறு ”பொங்கல்” என்ற தலைப்பில் பாடம் வந்தால் நம்மை வெறுப்பேற்றுவது போல் அழகிய மலையடிவாரத்தில் ஒரு வயல் படமும், திண்ணை வீடும், அதன் முன் அப்பா அம்மா சிறுவர்கள் என்று ஒரு குடும்பமும், மண்பானையில் பொங்கல் பொங்கி வழிய, அருகே கரும்புகளும், அலங்கரிக்கப்பட்ட இரு மாடுகளும் போட்டிருக்கும்.

”மாட்டுப் பொங்கலன்று மக்கள் தம் மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்துப் பொங்கலும் பழமும் ஊட்டுவர், பின்பு தம் மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வர்” என்று படித்து விட்டு அம்மாவிடம் சென்று ”இந்தப் பொங்கலுக்கு எனக்கு ஒரு மாடு வாங்கி வந்தா தான் ஆச்சு” என்று அடம்பிடித்ததும் அம்மா, ”நம்ம பால்காரரை அவரோட மாட்டைக் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன், (அவர் பாக்கெட் பால் போடுபவர்) நீ பொங்கல் ஊட்டலாம்” என்று ஏமாற்றிச் சமாதானப் படுத்தியதும் ஞாபகம் வருகிறது.

என்றாவது ஒரு நாள் அந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இத்தனை வருடங்கள் ஓடி விட்டன.

ஹும், சூரியனின் கண்ணில் படுகிற மாதிரி பொங்கலும் வைத்ததில்லை, மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டியதுமில்லை.
இதில் என் மகளுக்குப் பொங்கல் பண்டிகை என்றால் என்ன என்று நான் சொல்லித் தருவது?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

13 comments:

தமிழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

கிரேட்!

பாரம்பர்ய எழுத்து.

இனிய பொங்கள் வாழ்த்துக்கள் தீபா!

மாதவராஜ் said...

நல்ல கனவு.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

பொங்கல் வாழ்த்துகள் தீபா!
நல்லாருக்கு இடுகை! :-)

அம்பிகா said...

தீபா,
பொங்கலுக்கு கிளம்பி இங்கே வந்திரு. மலையடிவாரம் மட்டும் தான் இல்லை. உன் கனவுப் பொங்கலை சந்தோஷமாக கொண்டாடலாம்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

அதான் அழைக்கிறாங்களே போய்ட்டு வாங்க....

நேசமித்ரன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் !

இடுகை செம்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய பொங்கள் வாழ்த்துக்கள் தீபா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

Muruganandan M.K. said...

உங்கள் கனவுப் பொங்கல் இனிக்கிறது.
இனிய பொங்கல் வாழ்த்துகள்

Deepa said...

நன்றி திகழ்!

நன்றி ராஜாராம்!

நன்றி அங்கிள்!

நன்றி உலவு.காம்!

நன்றி முல்லை!

நன்றி அம்பிகா அக்கா!
இன்னொரு சமயம் கண்டிப்பா வரேன். :)

நன்றி அண்ணாமலையான்!

நன்றி நேசமித்ரன்!

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி மயில்!

நன்றி செந்தில்வேலன்!

நன்றி டாக்டர்.முருகானந்தன்!

Radhakrishnan said...

//என்றாவது ஒரு நாள் அந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இத்தனை வருடங்கள் ஓடி விட்டன.//

கிராமத்திலேயே வளர்ந்து பொங்கல் திருநாள் தனை பல வருடங்களாக சந்தோசமாக கொண்டாடிய காலங்கள் நினைவுக்கு வருகிறது.

அது போன்ற அழகிய பொங்கல் பார்த்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிப்போனது. கனவாகத்தான் இருக்கிறது நான் கொண்டாடிய கிராமத்து பொங்கல் தினங்களும்.