Sunday, November 29, 2009

வற்றாத கிணறும் அதே போன்ற மனிதர்களும்!


கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளிப்பது போல் ஒரு காட்சி டி.வியில் வந்தது. இது போல் குளித்த அனுபவம் இருக்கிறதா என்று நானும் ஜோவும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம்.
சென்னையில் கோடை வந்தாலே ப்ளாஸ்டிக் குடமும் கையுமாய் அலைந்த காலங்களின் சூடு கூட முன்னொரு காலத்தின் பசுமையான நினைவுகளை உறிஞ்சிவிடவில்லை.

சிறுவயதில் கோடை விடுமுறையில் நாளெல்லாம் புழுதியிலும் மண்ணிலும் ஆசை தீர விளையாடிய பின் அந்தி சாயும் நெரத்தில் வாளி வாளியாய்க் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளித்த அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தோம்.
ஹூம்.. பேசி முடித்து நேஹாவைப் பார்த்த போது தான் உறைத்தது. கிணறு என்பது அவளுக்கெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அரிய பொருளாகி விடுமல்லவா?


கிணறு என்றவுடன் எங்கள் பக்கத்து வீடு தான் நினைவுக்கு வரும். என் விளையாட்டுத் தோழியின் வீடு அது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் சாப்பிடவும் தூங்கவும் தவிர எந்நேரமும் அவர்கள் வீட்டிலேயே தான் இருப்பேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். என் தோழியின் சித்தி பிள்ளைகள் தவிர அத்தை பிள்ளைகளும் விடுமுறை என்றால் வந்து விடுவார்கள். ஒரே விளையாட்டுத் தான். அப்புறம் எனக்கு மட்டும் வீட்டில் கால் தங்குமா என்ன?


அவர்கள் வீட்டில் வெகு காலத்துக்கு (2000 ஆண்டு வரை என்று நினைக்கிறேன்.) மோட்டாரும் குழாய் வசதிகளும் கிடையாது. ஒரே ஒரு கிணறு தான் உண்டு. வாளியால் இறைத்துத் தான் குளிப்பது, துணிதுவைப்பது, பாத்திரம் துலக்குவது, எல்லாமே. கார்ப்பரேஷன் தண்ணீருக்கு மட்டும் பின்னர் ஒரு அடிபம்ப் பொருத்தினார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், தெருவில் ஏனைய வீடுகளில் எல்லாம் மோட்டர் போட்டு அவரவர் கிணறுகளை வற்ற வைத்து விட்டோம். பற்றாக்குறைக்கு போர் போட்டு அதுவும் தண்டமாகத் தான் இருந்தது. ஆனால் இவர்கள் வீட்டுக் கிணறு மட்டும் இறைக்க இறைக்க ஊறும் அமுதசுரபியாக இருந்தது. யார் வந்து கேட்டாலும் தட்டாமல் தண்ணீர் தந்து உதவும் மனமும் அவர்களுக்கு இருந்தது.

கடும்உழைப்பு, எளிமை, ஒற்றுமை, அளவற்ற அன்பு என்று பல அரிய குணங்களின் எடுத்துக்காட்டு மட்டுமல்ல கருவூலமாகத் திகழ்பவர்கள் அந்த வீட்டு அங்கிளும் ஆண்டியும். பெரம்பூரில் ஐசிஎஃப் இல் வேலை பார்த்த அங்கிள் தினமும் ஆறு மணிக்கு வேலைக்குக் கிளம்புவார். அவரை அந்நேரத்துக்கு வேலைக்கு அனுப்பும் வகையில் ஆண்ட்டி எழுந்திருப்பது நான்கு மணிக்கு!

ஓய்வு நேரத்திலும் சும்மா இல்லாமல் கடை கண்ணிக்குப் போய் வருவது, வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு அதைக் கொத்திக் கொண்டிருப்பது, வீட்டில் பழுதடைந்த சாமான்களைத் தானே சரி செய்வது என்று சுறுசுறுப்பாகவே இருப்பார் அந்த அங்கிள். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.

இன்னொரு விஷயம், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சைக்கிள் தான் அவரது வாகனம். அப்புறம் தான் ஒரு டி.வி.எஸ் 50 வாங்கினார்.
பிள்ளைகள் எல்லாரும் சைக்கிள்களை மறந்து ஸ்கூட்டி, கார் என்று மாறி விட்டனர். ஆனாலும் இவர் பக்கத்தில் கடைத்தெருவுக்குப் போக வர, அவர்கள் கை விட்ட லேடி பேர்ட் சைக்கிளைத் தான் எடுத்துச் செல்வார். அந்த எளிமை அவரது தனித்துவம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்த எளிமையைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்.

ஆண்டியும் அன்பு செலுத்துவதில் அலாதியானவர். நான் கல்லூரியில் படித்த் போது செமஸ்டர் லீவுக்கு வந்திருந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பத்து நாட்கள் முன்னதாகவே புறப்பட்டுச் செல்ல வேண்டி வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பலகாரத்தை, முன்கூட்டியே எனக்காகச் செய்து கட்டிக் கொடுத்தார்கள் அனுவும் ஆண்டியும். என்னால் மறக்கவே முடியாத செயல் அது.

என் திருமணத்துக்குப் பின்பு அதே தெருவில் வேறு வீட்டில் ஜோவும் நானும் இருக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன் இரவு பத்து மணிக்கு ஆண்ட்டி வீட்டுக்கு வந்தார். ”காஸ் சிலிண்டர் இருக்காம்மா? தீர்ந்து விட்டது. புக் பண்ணி இரண்டு வாரம் ஆகிறது என்றார்”

அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அப்போது தான் வந்திருந்தது. பழைய சிலிண்டர் தீரவும் எங்களுக்கு இன்னும் நாள் இருந்தது. ஜோவும் அங்கிளும் எடுத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் வைத்து விட்டனர்.

சரியாக நான்கு நாட்களில் ஆண்ட்டியும் அங்கிளும் புது சிலிண்டரொன்றைத் தூக்கிக் கொண்டு வீட்டுக் கதவைத் தட்டினார்கள். பதறிப் போய் அவர்களைக் கடிந்து கொண்டேன். வேண்டிய போது நாங்களே வந்து எடுத்து வந்திருப்போம், இப்போது என்ன அவசரம் என்று.
”சின்னக் குழந்தையை வைத்திருக்கிறாய். திடீரென்று தீர்ந்து போனால் என்ன செய்வாய்” என்றார்கள். மேலும் சமயத்துக்குத் தந்ததாகச் சொல்லி நன்றி சொன்னவர்களை இடைமறித்து ஊருக்கெல்லாம் ஓடோடி உதவும் அவர்களுக்கு அந்தச் சின்ன உதவி செய்ய முடிந்தது எங்களுக்குத் தான் மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது என்றேன்.

இன்னும் எவ்வளவோ எழுதலாம், இது போல் தூய்மையான அன்பினால் நம் மனதில் உயர்ந்தவர்களைப் பற்றி. கையில் தான் வலிமை வேண்டும்!

Tuesday, November 24, 2009

வலி!




”எனக்குக் கண்வலி… என் கண்களைப் பார்க்காதே”
”பார்ப்பேன்! உன் வலி எனக்கும் வரட்டும்.”
சிவந்து வீங்கிய கண்ணில் அப்போது
நீரை விட அதிகமாய்க் காதல் வழிந்ததால்...
பார்க்க முடியவில்லை!

Sunday, November 22, 2009

A slice of life...

அலுவலகத்தில் அநியாயத்துக்கு வேலை. தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கு வேலை பார்க்க வேண்டி இருக்கிறது.

வேலை சுவாரசியமாக இருந்தாலும் சின்ன இடைவெளி கூட இல்லாமல் என்ன இது என்று ஒரு சலிப்பு வருகிறது. வீட்டுக்கு வரும் போது மணி எட்டரை ஆகி விடுகிறது. நல்லவேளை நேஹா இன்னும் ராக்கோழியாக இருப்பது ஒரு வகையில் நிம்மதி தான்! பன்னிரண்டரை வரை அவளோடு விளையாடிய பிறகு ஒரு மணி வாக்கில் தான் தூங்குகிறாள்.

சரி சனி ஞாயிறாவது குழந்தையுடன் முழுநேரமும் இருக்கலாமென்றால் கடந்த இரு வாரங்களாக சனிக்கிழமையும் வேலை வைத்து அழைத்து விட்டார்கள். மற்ற நாட்கள் வேலைக்குப் போகும் போது அழாத நேஹா சனிக்கிழமை அன்று எப்படியோ வித்தியாசத்தை உணர்ந்து முகம் சுணங்கினாள். அது தான் தாங்கவே முடியவில்லை.


நேஹா!

பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அரிய பொக்கிஷமாகவே தான் குழந்தையை ஓராண்டு வரை கருதி வந்தேன். இப்போது தான் அவள் ஒரு ”தனி கேரக்டராக” தனது குறும்புகளாலும், மழலைப் பேச்சுகளாலும் உருவெடுப்பதை நன்றாக உணர்கிறேன்!

விளம்பரங்கள் வந்தால் கண்கொட்டாமல் பார்ப்பதை நிறுத்தி விட்டாள். அதற்குப் பதிலாக விளம்பரத்தின் முதல் ஃப்ரேமிலேயே அடுத்து வரப்போவதைச் சொல்லிவிட்டு நகர்கிறாள்.

ஆனால் பாடல்கள் இன்னும் விரும்பிப் பார்க்கிறாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

மேல் வீட்டுப் பையன் (மூன்று வயது) வந்திருந்தான். பிஸ்கட் தின்று கொண்டிருந்த் நேஹா டப்பாவை அவளே திறந்து நான்கு பிஸ்கட்டுகளை அவன் கையில் கொடுத்தாள். அவன் அம்மா பதறி “அவனுக்கு வயிற்றுப் போக்கு, வேண்டாம் என்று அவனிடமிருந்து வாங்கி என் கையில் கொடுத்து விட்டார்கள்.
அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை. அந்தச் சிறுவன் அல்ல; நேஹா தான். ஒரே ஒரு பிஸ்கட்டையாவது அவன் கையில் கொடுத்த பிறகே அடங்கினாள். யம்மா. முடியலம்மா!

காய் வாங்கச் செல்லும் போது உடன் அழைத்துச் சென்றால் நமக்கு முன் “எவ்ளோ” என்று கேட்டாகிறது.
தக்காளியை எடுத்து ”மம் மம்.. ஆ” என்று நம் வாயில் வைக்கிறாள்! காய்காரர் ஒரு மாதிரி பார்த்தார். ஏதோ நான் தான் ட்ரெய்னிங் கொடுத்தது போல்... நேரம்!

ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ், அவள் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி ராகம் போட்டுச் சொல்கிறாள்.
இது அவளது பாட்டியும் அவளைப் பார்த்துக் கொள்ள வரும் அக்காவும் சொன்னது. ஹூம்.. அது ஒரு சின்ன நெருடல் எனக்கு. முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!

Thursday, November 19, 2009

தீபாவளி - தொடர் பதிவு!

ராஜாராம் அவர்கள் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்து இப்போது மறந்தே போயிருப்பார்.

ஏற்கனவே தீபாவளி பற்றி எழுதி விட்டதால் கொஞ்சம் இடைவெளி விடலாமென்று நினைத்து, பிறகு ரொம்பத் தாமத்மாகி விட்டது! மன்னிக்கவும் ஸார்! உங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி!

1. உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?

தீபா. நேஹாவின் தாய். அன்புக்கு நான் அடிமை! கொஞ்சம் கிறுக்கு.....வேன்னு சொல்ல வந்தேன், ப்ளாக்ல. நீங்க வேற எதுவும் நினைச்சுடாதீங்க!


2. தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

எட்டாவது படிக்கும் போது புஸ்வாணம் வெடித்துக் கை புண்ணானது.


3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில்.

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

It's a serious business affair! துணிக்கடைகளுக்கு, நகைக்கடைகளுக்கு, மற்றும் ஊடகங்களுக்கு!

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கென்று வாங்கவில்லை. புதிது இருந்தது.


6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

கேசரியும் வடையும்.


7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள்?

நாங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றோம். நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்!


9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த நாள் என்று குறிப்பிட்டுச் செய்ததில்லை.

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
நானே ரொம்ப லேட்டு. அதனால் யாரையும் அழைக்கவில்லை!

:-)

Monday, November 16, 2009

வாடா கோமாளி!

ஒரு நாட்டுப்புறப் பாடல்!

வெதை வெதைக்கணும் வெதை வெதைக்கணும் வாடா கோமாளி!
வெதை வெதைச்சா கோழி கிண்டும் போடா நா மாட்டேன்

கோழி கிண்டுனா வேலி போடலாம் வாடா கோமாளி
வேலி போட்டா மேலு வலிக்கும் போடா நா மாட்டேன்

மேலு வலிச்சா வென்னி வெச்சுத் தர்றேன் வாடா கோமாளி
வென்னி வெச்சுக் குளிச்சா வவுறு பசிக்கும் போடா நா மாட்டேன்

வவுறு பசிச்சா சோறு போடறேன் வாடா கோமாளி
சோறு தின்னா விக்கலெடுக்கும் போடா நா மாட்டேன்

விக்கலெடுத்தா தண்ணி தர்றேன் வாடா கோமாளி
தண்ணி குடிச்சா பொறைக்கு ஏறும் போடா நா மாட்டேன்

பொறைக்கு ஏறுனா தலையில தட்டறேன் வாடா கோமாளி
தலையில தட்டுனா செத்துப் போவேன் போடா நா மாட்டேன்
*****************
இது எப்போதோ சிறு வயதில் ஒரு புத்தகத்தில் படித்து அண்ணன் சொல்லிக் கொடுத்த பாட்டு! ரொம்பப் பிடித்துப் போனதால் மறக்கவே இல்லை!

Saturday, November 14, 2009

மழை...பள்ளி...அப்பா!

எல்லோரையும் போல எனக்கும் சிறுவயது முதலே மழையில் நனைய கொள்ளை ஆசை. அதைவிட மழை நீர் தேங்கி இருக்கும் தெருக்களில் காலை அளைந்து கொண்டு வருவதென்றால்... ரொம்ம்ம்ம்ம்ப இஷ்டம்!

ஆனால் நான் குழந்தையாய் இருந்த போது இளம்பிள்ளைகளுக்கு வரும் காச நோய் வந்து படாத பாடு பட்டுப் பிழைத்தேனாம். இரண்டு மாதங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி வந்தது. அப்பாவோ அக்காவோ அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் என் மழை ஆசையெல்லாம் அப்பாவால் நிராசை ஆகிவிடும். மழை வந்தால் பள்ளிக்கு அனுப்புவதில் அப்பா ரொம்ப சிரத்தையுடன் இருப்பார். தப்பித் தவறிக் கூட மழையில் நனைந்து விடாதவாறு ஏற்பாடு செய்துவிடுவார்.

பள்ளி விட்டு வரும் போதாவது மழையில் நனைந்து கொண்டு வரலாம் என்று நினைப்பேன். வழக்கமாகச் செல்லும் ரிக்‌ஷாக்காரர் வராவிட்டால் மற்ற பிள்ளைகளுடன் நனைந்து கொண்டு வரலாம் என்று ஆசையோடு இருப்பேன். ஆனால் அப்பாவோ மோகனைக் குடையுடன் அனுப்பிவிடுவார்.

ஆங்காரமும் அழுகையுமாய் வரும். மோகன் அவர்கள் மிகவும் கண்டிப்பு. குடையை விட்டுக் கொஞ்சம் நகர்ந்தாலும் அதட்டுவார். மீறினால் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அப்பா அடிக்கவே மாட்டார்; ஆனாலும் ரொம்பப் பயம் இருந்தது எங்களுக்கு!

நான்காவது படித்த போது மழைக்காலத்தில் ஒரு நாள்.
மாதத்தேர்வு (தமிழ் என்று நினைக்கிறேன்) முடிந்த மதிய நேரம்.
ரிக்‌ஷாக்காரர் வரவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் மோகனும் வரவில்லை. குடையுடன் என்னை அழைத்துப் போக வந்தது அப்பா!
வராத அப்பா வந்தது சந்தோஷமாக இருந்தாலும், மோகனையாவது அப்படி இப்படி ஏமாற்றி விட்டுக் குட்டைத் தண்ணியில் காலை அளையலாம். அப்பாவாச்சே... வாலைச் சுருட்டிக்கிட்டுப் போக வேண்டியது தான் என்று நினைத்தேன்.

அமைதியாக நடந்து கொண்டிருந்த போது வெள்ளக்காடாக நிரம்பியிருந்த ஒரு தெருவுக்குள் திரும்பவேண்டி வந்தது. பெருமூச்சுடன் அதைப் பார்த்த நான் அப்பா நம்மைத் திருப்பி வேறு பக்கமாகத் தான் அழைத்துப் போகப் போகிறார் என்று நின்று அவர் முகத்தைப் பார்த்தேன்!

என்ன அதிசயம்! என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “தண்ணியில ஜல் ஜல்னு போலாமா” என்று கேட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டார். எனக்குக் குஷி தாங்க முடியவில்லை. ஏன் நிற்கிறேன்? அப்பா மனம் மாறுவதற்குள் காலை வீசி வீசி தண்ணீரில் நடக்கலானேன். தேர்வு எழுதியது பற்றி, பள்ளியில் என்ன நடந்தது பற்றி என்று என்னென்னவோ கேட்டார்; நானும் தண்ணியில் நடக்கும் சந்தோஷத்தில் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து உடை மாற்றிக் கொண்ட பின்னும் வெகு நேரமான பின்னும் சில்லென்ற அந்தத் தண்ணிரின் ஸ்பரிசம் காலிலும் அப்பாவுடன் கும்மாளமடித்துக் கொண்டு வந்த அந்த கணங்கள் மனதையும் நனைத்துக் கொண்டிருந்தன.

கண்டிப்பான அப்பா, ஏராளமான விஷயங்களில் புரிபடாத அப்பா, எத்தனையோ விஷயங்களில் இலகுவாகப் பழக முடியாத அப்பாவாக இருந்தாலும் அன்று ஒரு நாள் என் குழந்தை உள்ளத்தைப் புரிந்து நடந்த அந்தச் சிறிய ஆனால் அரிய செய்கையை என்னால் என்றுமே மறக்க முடியாது.

தொடர் பதிவு என்று போட்டுப் பெயரிட்டு அழைக்கத் தோன்றவில்லை. விருப்பமுள்ளவர்கள் தங்கள் இளம் வயது மழைக்காலத்தில் இது போன்ற மறக்க முடியாத அனுபவங்களைப் பகிருங்களேன். சுவாரசியமாக இருக்கும்!

Friday, November 6, 2009

நாய்க்குட்டி!

(இது குழந்தைகளுக்கான கதை தான். பெரியவர்களும் படிக்கலாம்!)

”டேய், டேய், வேணாண்டா, பாவம் டா…”

”போம்மா, அது என் கூட எப்பிடி வெளையாடுது பாரு...”

மகேஷுக்கு ஏகக் கொண்டாட்டம் தான். அந்தச் சிறிய நாய்க்குட்டியை அவன் படுத்திய பாடுகளை அஞ்சலைக்குப் பார்க்க முடியவில்லை.

அழகான நாய் அது. வெண்பழுப்பு நிறத்தில் பளபளவென்று கருவண்டுக் கண்களோடு பொம்மை போல் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது எங்கிருந்தோ தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.

பாலை ஊத்தும்மா, சோறு போடும்மா என்று முதல் நாள் அவன் பண்ணிய அலம்பல் தாங்கவில்லை.

அதன் பிறகு மெல்ல தன் வாலை அவிழ்த்து விட்டான். சும்மாவா அந்த ஏரியாவில் அறுந்த வால் என்று பெயர் வைத்திருந்தார்கள் அவனுக்கு?

அதைத் தூக்கிக் கொண்டு போய் தண்ணி டாங்கின் மேடையில் உட்கார வைத்து விடுவான். சின்னக் குட்டியான அது இறங்க அஞ்சிச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பான்.

ஒரு துளி டூத்பேஸ்டை எடுத்து அதன் மூக்கின் மேல் வைப்பான். அது நாக்கை நீட்டி நீட்டி நக்க முயன்று சோர்ந்து தரையில் விழுந்து பிறாண்டும்.

”அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன்.” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பான்.

அக்கா தூங்கிக் கொண்டு இருக்கும் போது பொத்தென்று அவள் மீது போட்டு அலறி ஓட வைப்பான்.

எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் கேட்க மாட்டான்.
சில சமயம் அவனைப் பார்த்தாலே வாலைக் கால்களுக்கிடையில் ஒடுக்கிக் கொண்டு போக ஆரம்பித்தது.

அம்மாவுக்கு அதைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆசையாக வளர்ப்பான் என்று விட்டால் அந்த வாயில்லா ஜீவனை இந்தப் பாடு படுத்துகிறானே என்று.
*******************

”மகேஷ் அம்மா!”

“யாரு?”

“நான் தாம்மா வர்ஷினி அம்மா”

“ஓ, நீங்களா, வாங்க வாங்க”

“பரவாயில்ல இருக்கட்டும். இந்த நாய்க்குட்டி ஏது?”

“அதுவா, என் பையன் தான் எங்கிருந்தோ தூக்கிட்டு வந்தான். பாடா படுத்தறான். யாராவது கேட்டா குடுத்துடலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப நல்லதாப் போச்சு. என் பொண்ணு இதைப் பாத்துட்டு இதே மாதிரி நாய் வேணும்னு கேட்டு அழுதா. உங்க கிட்ட கேக்கலாம்னு வந்தேன்.“

”இதையே எடுத்துக்கிட்டுப் போங்க. நல்லாயிருப்பீங்க. அந்தத் துஷ்டப்பயகிட்டேந்து தப்பிச்ச மாதிரி இருக்கும்.”

“எம்பொண்ணு ஆசையாப் பாத்துக்கும்.“ என்றபடி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டாள் அந்த அம்மாள்.

**************

”அம்மா, மணி எங்கேம்மா?”

”ஆங்?”

“மணிம்மா, மணி நாய்க்குட்டி...எங்கேம்மா? வீட்டுக்கு வந்ததுலேர்ந்து தேடிட்டே இருக்கேன்” குரல் கம்மியது

இவனிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்த் அம்மா, “தெரியலடா உன் தொல்லை தாங்காம ஓடிப் போயிடுச்சு போல.”

அம்மாவை முறைத்து விட்டு வெளியில் போனான்.

இருட்டிய பின்பும் வெகு நேரம் கழித்துத் தான் திரும்பி வந்தான்.

“டேய், எங்கடா போனே? படிக்காம ஊரச்சுத்திட்டு வரியா? உங்கப்பா வரட்டும். தோலை உரிக்கச் சொல்றேன்.”
என்றவாறே திரும்பிப் பார்த்த அம்மா திடுக்கிட்டாள்.
அழுதழுது வீங்கிய முகமும் சோர்ந்து போன நடையுமாய் வந்து அமர்ந்தான் மகேஷ்.

“என்னடா கண்ணா, ஏண்டா இப்படி இருக்கே? என்ன ஆச்சு?”

“அம்மா, மணி என்னை விட்டுட்டு ஏன்மா போனான்? நான் நல்ல பையன் இல்லியா?“ என்று விசும்பியவனை அம்மா பதறி அணைத்துக் கொண்டாள்.

அழுது கொண்டே தூங்கிப் போனான் மகேஷ்.

’காலையில் அவன் எழுந்திருக்கறதுக்குள்ள வர்ஷினி அம்மா கிட்ட கெஞ்சி நாய்க்குட்டியைத் திரும்ப கொண்டாந்துடணும்’ என்று நினைத்துக் கொண்டாள் அம்மா.

இரவு இடி இடித்து மழை பெய்தது. குளிரில் சுருண்டு படுத்திருந்த மகேஷ் தூக்கத்தில் ”மணி, மணி” என்றவாறே உளறிக் கொண்டிருந்தான்.

*************

“அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன். யார் வந்திருக்கான்னு?”

மகேஷின் கூக்குரலைக் கேட்டு விழித்தாள் அம்மா. அதற்குள் வவ் வவ் என்று பரிச்சயமான அந்தச் செல்லக் குரலும் சேர்ந்து வந்தது.

”ராத்திரியே வந்து நம்ம வீட்டு வாசலோரமா ப்டுத்திருந்திச்சும்மா.
காலையில என்னைப் பாத்தவுடனே குஷியா வாலாட்டிக்கிட்டு வந்துடுச்சி. மழையில நல்லா நனைஞ்சிருக்கு. அதுக்கு சூடா பால் கொண்டு வாம்மா!”

“என் செல்ல மணி! பட்டு மணி” என்று உற்சாகமாய் நாயைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தவனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.

***********

மறு நாள்...

“அம்மா இங்கே பாரேன்...”

“மணீ....ஜம்ப்!!!”

மணி தண்ணி டாங்கின் மேடையிலிருந்து அழகாய் டைவ் அடித்து ஓடி வந்தது.

அம்மா அதிசயமாய்ப் பார்த்தாள்; சந்தோஷமாகவும்!

Monday, November 2, 2009

சிரிப்பு!

Sense of humor!

சிரிக்க‌ச் சிரிக்க‌ப் பேசுவ‌தும் எழுதுவ‌தும் ஒரு அலாதியான‌ க‌லை. வெகு சில‌ருக்கே இல‌குவாக‌க் கைவ‌ரும் இக்க‌லையை நான் வெகுவாக‌ ர‌சிக்கிறேன்.

இதில் ப‌ல‌வ‌கைக‌ள் உண்டு. சிரிக்க‌ வைக்க‌ வேண்டும் என்று வ‌லிந்து வார்த்தைக‌ளையும் பாவ‌னைக‌ளையும் வ‌ர‌வ‌ழைத்துக் கொண்டு சிலர் பேசுவார்கள்; எழுதுவார்கள். முத‌லில் ஒரிரு முறை சிர்ப்பு வ‌ரும். பிற‌கு ச‌லித்து விடும். (தொழில் ரீதியான சிரிப்பாளர்கள் விதிவிலக்கு! )


நாம் சிரிக்கும் வ‌ரை அது ந‌கைச்சுவையாக‌ இருந்த‌து என்ற‌ உண‌ர்வே இல்லாம‌ல் சில‌ர் அடிக்கும் க‌மென்டுக‌ளே என்னைப் பெரிதும் க‌வ‌ர்கின்ற‌ன‌. இத்தகையவ்ர்கள் சீரிய‌ஸாக‌ முக‌த்தை வைத்துக் கொண்டு சீரியஸாக‌வே ஏதாவ‌து பேசினாலும் ந‌ம‌க்குச் ச‌ட்டென்று சிரிப்பு வ‌ந்து விடும். இய‌ல்பான‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌கைச்சுவை தான் என் சாய்ஸ்.


ந‌கைச்சுவை உண‌ர்வு என்றால் சிரிக்க‌ வைப்ப‌து ம‌ட்டுமே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சில‌ருக்குச் சிரிக்க‌ வைப்ப‌தில் ஆர்வ‌ம் இருக்கும். அடுத்த‌வ‌ர் பேச்சை ர‌சித்துச் சிரிக்க‌ மாட்டார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு நல்ல ந‌கைச்சுவை உண‌ர்வே கிடையாது என்பேன். அத்த‌கைய‌வ‌ர்களைக் கண்டால் பெரும்பாலும் ஒதுங்கி விடுவேன்.
தனக்குச் சிரிக்க‌ வைக்க‌த் தெரியாவிட்டாலும் அடுத்த‌வ‌ர் பேச்சில் ம‌கிழ்ந்து ர‌சித்துச் சிரிப்பது, ஒரு சூழ்நிலையில் உள்ள நகைச்சுவையை முதலில் கண்டுப்பிடிப்பதும் தான் sense of humor என்பதன் உண்மையான பொருள். பிறரைத் தவிர்த்து தன்னைத் தானே கிண்டலடிப்பது தான் இதில் மிக முக்கியமான அம்சம்.

எந்த‌ ஒரு பிர‌ச்னையையும் ப‌த‌ட்ட‌மில்லாம‌ல் இல‌குவாக‌க் கையாள்வ‌து, எதிராளி கோப‌த்தைக் க‌க்கினாலும் அச‌ராம‌ல் எள்ள‌லுட‌ன் ப‌திலிறுப்ப‌து, அப்ப‌டி ஒரு ப‌திலைக் கேட்ட‌வுட‌ன் ச‌ட்டென்று கோப‌ம் ம‌ற‌ந்து சிரித்து விடுவ‌து, இது எல்லாமே ந‌கைச்சுவை உண‌ர்வில் அட‌ங்கும்.


காலை நேர அவ‌சர‌த்தில் சின்ன‌ச் சின்ன‌ சிடுசிடுப்புக்க‌ளுக்கிடையில் மின்ன‌ல் கீற்றுப் போல‌ ஏதோ ஒரு வார்த்தையும் பாவ‌னையும் ச‌ட்டென்று சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்து ம‌ன‌தை லேசாக்கிவிடும். அந்த‌ நேர‌ம், அந்த‌ச் சிரிப்பு ம‌ட்டும் வ‌ரா விட்டால் நாளெல்லாம் ஒரு உறுத்த‌ல் ம‌ன‌தில் இருந்து எல்லா வேலைக‌ளையுமே பாதிக்க‌க் கூடும்.

இந்த‌ ஒரு அம்ச‌ம் தான் என்னைப் பொறுத்த‌வ‌ரை மணவாழ்க்கையில் மிக‌ மிக‌ முக்கிய‌மான‌து. To be able to laugh at yourself and make the other person laugh. க‌ண‌வ‌ன் ம‌னைவி ஒருவ‌ரை ஒருவ‌ர் நையாண்டி செய்ய‌லாம். உண்மையான‌ அன்பு என்னும் அஸ்திவார‌ம் இருக்கும் போது ம‌ற்ற‌வ‌ர் ம‌ன‌து புண்ப‌டும் அபாயமே இருக்காது.

அந்த‌ நையாண்டியில் அன்பு இருக்கும், ம‌றைமுக‌மான‌ பெருமை இருக்கும், அன்பில் மொத்த‌மாக‌ ச‌ர‌ண‌டைந்த‌த‌ன் குறிப்பும் இருக்கும்.
கோபமாக ஏதாவது முனகி விட்டாலும் கூட, கடைசியில் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசிவிட்டு "என் சோக‌க் க‌தையைக் கேட்டா ம‌ட்டும் எப்ப‌டிப் பொங்கிப் பொங்கிச் சிரிப்பு வ‌ருது பாரு இவ‌ளுக்கு!" என்ற வார்த்தைகளுக்குப் பின் உண்மையிலேயே சிரிப்பு பொத்துக் கொண்டு வ‌ரும். அத‌ன் பின் எங்கே கோப‌ப்ப‌ட‌?

ஜோவும் நானும் சண்டை போட்டு விட்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் டிவி பார்த்துக் கொண்டிருப்போம். வடிவேலு காமெடி சீன் அல்லது சூழலுக்குப் பொருத்தமாக ஏதேனும் வசனம் வ‌ந்தால், யார் முத‌லில் சிரிப்ப‌து என்ற‌ சொல‌லாத‌ போட்டி ந‌ட‌க்கும். பெரும்பாலும் நான் தான் தோற்று விடுவேன். அதில் இருவ‌ருக்குமே வெற்றி தான்.
"உள்ளதிலேயே ரோஷ‌ங்கெட்ட‌ உற‌வுன்னா அது புருஷ‌ன் பொண்டாட்டி உற‌வு தான்" என்று வேதாந்த‌த்துட‌ன் ச‌மாதான‌ம‌டைந்த‌ நாட்க‌ள் ஏராள‌ம்!

பி.கு: இப்படி சிரிப்பாய்ச் சிரிக்கும் போது, ரொம்பப் புரிந்தது போல் கைதட்டிக் கொண்டு, உடம்பையே ஆட்டிக் கொண்டு நேஹாவும் அழகாய்ச் சேர்ந்து கொள்கிறாள்.
அவ நல்லாப் பேச ஆரம்ப்பிக்கும் போது இருக்கு எங்களுக்கு
:-)

Sunday, November 1, 2009

பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு

பிடித்தவர் பிடிக்காதவர் தலைப்பில் எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார் மாதவராஜ் அங்கிள்.

அவரே சொல்லி இருப்பது போல் இது ஒரு குழந்தைத் தனமான விளையாட்டுத் தான். ஆனால் குழந்தைத் தனங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு செயலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என்னைக் கேட்ட போது உடனே சம்மதித்து விட்டேன்!

ஒருவரைப் பிடிக்கக் கூடப் பெரிதாகக் காரணம் இல்லாமல் போகலாம். ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்.
அதைச் சொல்ல வைப்பது தான் இந்த விளையாட்டின் வெற்றி.


எனக்குப் பொதுவாக strong likes and dislikes உண்டு.
(But no preconceived prejudices. And I definitely do not hate anybody in cold blood. :-) )

பிரபலங்களைப் பொறுத்தவரை strong likes and dislikes கிடையாது. மனதில் உடனே தோன்றுபவர்களைத் தான் இங்கே எழுதுகிறேன். உதாரணமாக நான் ரொம்ப மதிக்கின்ற, என்றுமே பிடித்த நடிகை என்று யோசித்தால் மனோரமா தான். ஆனால் சட்டென்று தமன்னாவின் துறுதுறு முகம் வருகிறது. அதனால் இப்போதைக்குத் தமன்னா தான்!

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: பெருந்தலைவர் காமராஜர்.
பிடிக்காதவர்: சுப்ரமணியம் சுவாமி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: தமிழ்ச்செல்வன்
பிடிக்காதவர்: தேவிபாலா (தெரியாமல் சில கதைகள் படித்துத் தலைவலியில் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்)

3. கவிஞர்:
பிடித்தவர்: பாரதியார்
பிடிக்காதவர்: வாலி

4. இயக்குனர்:
பிடித்தவர்: பாலுமகேந்திரா
பிடிக்காதவர்: எஸ் பி முத்துராமன்

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம்
பிடிக்காதவர்: அஜீத்

6. நடிகை:
பிடித்தவர்: தமன்னா
பிடிக்காதவர்: த்ரிஷா

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: How to name him? The one and only maestro!
பிடிக்காதவர்: இந்த நகை ஸ்டாண்ட் மாதிரி ஒருவர் வருவாரே சில்க் ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, (சங்கர்) கணேஷ்

8. பாடகர்:
பிடித்தவர்: ஹரிசரண்
பிடிக்காதவர்: ஷங்கர் மகாதேவன்

9. பாடகி:
பிடித்தவர்: என்றும் என்றென்றும், குரலிலும் குழந்தைச் சிரிப்பிலும் வசியப்படுத்தும் சித்ரா.. சித்ரா... சித்ரா
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: கிரிக்கெட் ஆடாத அனைத்து விளையாட்டுக் காரர்களும்
பிடிக்காதவர்: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்! :)

ஆட்டத்தைத் தொடர நான் அன்புடன் அழைப்பது:

சென்ஷி

ஆயில்யன்

சின்ன அம்மிணி

ராப்

பி.கு: மன்னிக்கவும். விதிகளை எழுத மறந்து விட்டேன். விதிமுறைகளுக்குத் தொடரின் முதல் பதிவைப் பார்க்கவும்.