Sunday, October 25, 2009

இதெல்லாம் என்னைக்குத் தான் ஒழியுமோ!

வரதட்சணை.

எனக்குச் சில விஷயங்கள் புரிவதே இல்லை. அதில் ஒன்று:
அருமை பெருமையாய் மகளைப் பெற்று வளர்த்து விட்டு, தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுதும் கொட்டிக் கொடுத்து அவளை எவனோ ஒரு கோயான் தலையில் கட்டிவிட்டுப் (படிப்பு, நல்லவேலை, சொத்து சுகம் என்று ஆயிரம் காரணங்களுக்காக; அது பொய்யா உண்மையா என்று கூட சரியாகத் தெரியாமல்) பின்பு மகள் கஷ்டப்படும் போது தலையில் கை வைத்துக் கொள்கிறார்களே இந்தப் பெற்றோர்களை என்னவென்று சொல்வது?

இவர்கள் சொல்படி கேட்டுச் சமர்த்தாக இருந்தது தான் அப்பெண்ணின் தவறா?

பக்கத்துத் தெருவுக்குக் கூட அண்ணன் தம்பி துணையில்லாமல் என் மகள் போக மாட்டாள் என்று பொத்திப் பொத்தி வளர்த்து விட்டு எவனோ ஒரு ______ நம்பி அவளது வாழ்நாளையே மேளதாளத்துடன் ஒப்படைக்கிறீர்களே? உங்களை எல்லாம்...........
வேண்டாம்!

வரதட்சணை கொடுக்காமல் மகளைக் கட்டிவைத்தால் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் மரியாதை இருக்காது என்று ஏன் நினைக்கிறார்கள்? இது அபத்தமில்லையா?

சரி, பொருளாதாரச் சமன்பாடு அவ்வளவு முக்கியமென்றால் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து சொந்தக் காலில் நிற்க வையுங்கள்.
ஆனால் அப்படிப் பட்ட பெண்களாவது வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்க வேண்டும்.

”நாங்கள் வானில் பறந்தாலும், உயரங்களைத் தொட்டாலும் திருமணம் என்று வந்தால் வீட்டினர் சொல்படி தான் கேட்போம், எங்கள் ஜாதியில் ஜாதகம் பார்த்து அப்பா அம்மா சொல்ற ஆளைத் தான் கட்டிக்குவோம்” என்று சொல்வதில் இவர்களுக்கு இருக்கும் பெருமை எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

சரி, பெற்றோர் மனம் இணங்கத் திருமணம் செய்து கொள்வது நல்ல விஷயம் தான். எல்லாரும் காதலித்துத் திருமணம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. குறைந்த பட்சம், இந்த ஜாதி, ஜாதகம் இதெல்லாம் பார்க்க வேண்டாம் என்றாவது பெற்றோரிடம் சொல்லலாம் இல்லையா?

ஜோசியம், ஜாதகம், இதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று புரிந்தாலும், ஒரேயடியாக விட்டொழிக்காமல் ஓரளவுக்குப் பார்த்தல் பரவாயில்லை, அதிகமானால் தான் தவறு என்று சப்பைக் கட்டுக்களுடன் ஊறுகாயைப் போலவாவது ஏன் இன்னும் தொட்டுக் கொண்டிருக்கிறோம்? அது கெட்டுப் போய் நாறுவது தெரியவில்லையா?

அடிப்படை உரிமையையே விட்டுக் கொடுத்து விட்டு, பின்னாளில் கஷ்டப்பட்டு நஷ்டப்படும் போது வாய்கிழிய உரிமைப் போராட்டம் பேசி என்ன பயன்?

எப்படியும் திருமணம் என்று வந்தபின் ஆணும் பெண்ணும் ஓரளவு போராடித் தான் ஆக வேண்டும். அது யாராலும் உங்கள் மீது திணிக்கப் படவில்லை. உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நீங்களே தீர்மானித்தீர்கள் என்ற திருப்தியை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

சுருங்கச் சொன்னால், திருமணத்துக்குத் தயாராக இருக்கிறீர்களா? கிணற்றில் விழுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். குறைந்த பட்சம் கண்ணைத் திறந்து கொண்டு, அடி கிடி படாமல், பாழும் கிணறாக இல்லை என்று தெரிந்து கொண்டு விழுங்கள்.

(தோழி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது வாழ்க்கை தான் நினைத்த படி அமையாமல் போனதற்குத் தனது அருமைத் தந்தை தான் காரணம் என்று அவர் சொல்லி வருந்தினார். மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அந்தத் தந்தையைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவே இந்தப் பதிவு.)

Saturday, October 24, 2009

அன்பைப் பகிர ஒரு வாய்ப்பு...

அளித்த முல்லைக்கு மனமார்ந்த நன்றிகள்.














Scrumptious blog விருதை இவர் எனக்குத் தந்து சில நாட்களாகின்றன. முன்னம் ஒரு முறை சுவாரசிய வலைப்பதிவு விருது தந்த போது அதைப் பதிவிடவும் பகிரவும் வாய்ப்பு அமையவில்லை. அதற்கும் சேர்த்துப் பன்மடங்கு உவகையுடன் இந்த விருதை இப்போது நான் கொடுக்க விரும்புவது:

நேசமித்ரன் - நேசமும் நேட்டிவிட்டியும் நீங்காமல் நிறைந்திருக்கும் கவிதைகளுக்காக!

அய்யனார் - எழுத்தில் வெளிப்படும் அறச்சீற்றத்துக்காக!

ஆசிப்மீரான் - வாஞ்சையான நெல்லை மொழியில் இவர் எழுதும் எதற்காகவும்!

அமிர்தவர்ஷினி அம்மா - அமித்துவுக்கு மட்டுமல்ல தனது கதை மாந்தர்களுக்கும் காட்டும் தாயன்புக்காகவும், படிப்பவர் மனதோடு சட்டென்று நெருங்கி வசியப்படுத்தும் எழுத்து வன்மைக்காகவும்!

செந்தில்வேலன் - ”பயனில சொல்லாமை” என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் பயனுள்ள சிறந்த பல தகவல்களுடன் ஒவ்வொரு பதிவையும் எழுதும் பாங்குக்காக

காமராஜ் - சமூக சிந்தனை மிளிரும் மிகச்சில சிறந்த பதிவுகளுள் முக்கியமான ”அடர்கருப்பு” க் காக

அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
:)

Monday, October 19, 2009

ஜாதீ!

அலுவலகத்தில் உணவு இடைவேளை.

"ஹேய் ஷைனி, இது கண்டா..ஈ ஓணத்தினு..." ஒன்றாய் கூடி கொஞ்சு மலையாளத்தில் அரட்டை ஒரு புறம்.

"ஹேய், இன்னிக்குத் தான்யா தெரிஞ்சுது, நம்ப பி.எம் மும் "....." தான்; க்ரேட். என‌க்கு அப்ரெய்ச‌ல் ப்ராப்ள‌ம் இல்லை! நீ தான் பாவம்!...ஹீ ஹி.. ஜ‌ஸ்t ஜோக்கிங் யார்!"


"ஹலோ! டேய், வ‌ச‌ந்த் மெயில் ப‌ண்ணிருக்கான்டா‌.. ஆன்சைட்ல‌ இன்னும் ரென்டு பேர் வேணுமாம். என்னையும் ரெக்கமென்ட் பண்ணி இருக்கான்....
ஆமாம் ம‌ச்சான், அவ‌ன் எங்காளுங்க‌ தான்."...

தெளிந்த குளத்தில் கல்லெறிந்தது போல் ஏதேதோ தோன்ற‌, தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.
நான் என்ன‌ ஜாதியில் பிற‌ந்தேன் என்று நினைவு கூர்ந்து யாரையாவ‌து அதில் தெரியுமா என்று யோசித்து முடிப்ப‌த‌ற்குள், என்மீது எனக்கே வெறுப்பு வந்து அடிநாக்கில் கசந்தது. "சீ " என்று உர‌க்க‌க் க‌த்தி விட்டேன். த‌லையை உத‌றிக் கொண்டு போய் சிங்கில் காறித் துப்பி விட்டு வ‌ந்தேன்.

"என்ன... என்ன ஆச்சு?" என்று ப‌தறினார்கள்;

"ஒண்ணுமில்ல, சாப்பாட்டில‌ முடி" என்று சிரித்தேன்.

தீபாவ‌ளி!

தீபாவ‌ளி என்றாலே சிறு வ‌ய‌து முத‌ல் தோன்றுவ‌து... அதிக‌ம் எதிர்பார்க்க‌வைத்து ஏமாற்றும் ப‌ண்டிகை என்ப‌து தான்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ப‌ள்ளியில் தோழிக‌ளைக் க‌ட்டிய‌ணைத்து வாழ்த்துக்க‌ள் ப‌ரிமாறிக் கொள்ளும் போதும், க‌ரும்ப‌ல‌கையில் "ஹாப்பி தீபாவ‌ளி" எழுதி அழ‌க‌ழ‌காய்ப் ப‌ட‌ம் வ‌ரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வ‌ழ‌க்காமாய்ப் ப‌ருப்பும் புளியும் கொதிக்கும் சமைய‌ல‌றை ப‌ல‌கார‌ங்க‌ளும் எண்ணெய் ஸ்ட‌வ்வுமாய்ப் புதுக்கோல‌ம் கொள்ள, அம்மாவுக்கு உத‌வும் போது பெருமித‌ம் பொங்கும். வாங்கிய‌ ஒரே புத்தாடையைப் ப‌த்து த‌ட‌வை திற‌ந்து பார்க்கும் போது ம‌ன‌ம் புல்ல‌ரிக்கும். டமால் டுமீல் வெடிச்ச‌த்த‌ங்க‌ளுட‌ன் பொழுது விடிவ‌த‌ற்க்குள் ஏனோ ப‌ண்டிகையின் மொத்த‌ க‌ளையும் வ‌டிந்து விடும்.

அதான் தீபாவ‌ளி வ‌ந்துடுச்சே..! இனி போக‌த் தானே போகுது என்று!எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர‌ என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)

அக்காவும் அங்கிளும் வ‌ந்திருந்த‌ அவ‌ர்க‌ளின் த‌லை தீபாவ‌ளி தான் நாங்கள் மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌க் கொண்டாடிய‌ தீபாவ‌ளி. சிவ‌ப்பு நிற‌த்தில் என‌க்கு ஒரு "கீதாஞ்ச‌லி ட்ரெஸ்" வாங்கி வ‌ந்திருந்தார்க‌ள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்க‌ள் வ‌ரை அதை ஆசையாக‌ப் போட்டுக் கொண்டிருந்தேன்.

அத‌ற்க‌டுத்த் ஆண்டுகள் அவ‌ர்க‌ள் வ‌ர‌வில்லை என்ப‌தாலேயே சுர‌த்திழ‌ந்த‌து. க‌ல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு த‌விர‌ தீபாவ‌ளிக்கு வீட்டுக்கே வ‌ர‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ தீபாவ‌ளிக்கு அடுத்த‌ நாள் செம‌ஸ்ட‌ர் ப்ராக்டிக‌ல் வைத்திருப்பார்க‌ள். அத‌னால் ப‌க்க‌த்து ஊர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விடுதியிலேயே தீபாவ‌ளியைக் க‌ழித்தோம். அதுவும் ஒரு தினுசாக‌ ந‌ன்றாகத்தா‌ன் இருந்த‌து. இறுதியாண்டு டே ஸ்கால‌ர்ஸ் வீடுக‌ளுக்குச் சென்றோம்.

வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எந்த‌ப் ப‌ண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாக‌த் தெரிய‌வில்லை. தீபாவ‌ளிக்கென்று ஆட‌ம்ப‌ர‌மாக‌ ஆடைக‌ள் வாங்குவ‌தும் அற்வே பிடிக்காத‌ ஒன்றாகி விட்ட‌து. புதிதாக‌ ஏதாவ‌து அணியப் பிடிக்கும்; அது வ‌ழக்க‌மாக‌ அலுவ‌ல‌க‌த்துக்கு அணிகிறாற் போல் உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி. "இதுவா உன் தீபாவ‌ளி ட்ரெஸ்" என்ற‌ கேள்விக்குப் புனன‌கைப்ப‌து வெகு நாட்களுக்கு முன்பே ப‌ழ்க்க‌மாகி விட்ட‌து. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்தில்கிருந்து புத்த‌கங்கள் வாங்கி வந்து நிம்ம‌தியாக‌ நாள் பூராவும் ப‌டித்துக் க‌ழித்த‌ தீபாவ‌ளிக‌ள் உண்டு.

காசு கொடுத்துப் ப‌ட்டாசு வாங்கிப் ப‌ழ‌க்க‌மே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் ந‌ண்ப‌ர் தீபாவ‌ளிக்கு ஒரு வார‌ம் முன்பே பெரிய‌ ப‌ட்டாசுப் பொட்ட‌ல‌ம் ஒன்றை அன்புட‌ன் அனுப்பி விடுவார். "ப‌ட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வ‌ய்தில் அவ‌ரை அழைப்போம்.நாங்க‌ள் மட்டுமே வெடித்துத் தீர்வ‌தில்லை அது. வீட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் அக்க‌ம் ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்தும் தீர்க்க‌ வேண்டியிருக்கும்.
வெடிச்ச‌த்த‌ம் என‌க்குப் பிடிக்காது, வெடி வெடிக்க‌வும் ப‌ய‌ம். !ஆனால் வாண‌ங்க‌ளும் ம‌த்தாப்புக்க‌ளும் மிக‌வும் பிடிக்கும். சில‌ ஆண்டுக‌ளாக‌ அந்த‌ ஆர்வ‌மும் அற்றுப் போய் விட்ட‌து.

"பண்டிகையை வரவேறக" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப்ண்டிகைகள் அழகாக அமைதியாக் வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.

ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிம‌ருந்தின் வாடையில் க‌ருகும் பிஞ்சுகளும் ப‌லியாகும் ச‌கோத‌ர‌ர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.

ப‌ட்டாசுக‌ளையே மொத்த‌மாக‌த் த‌டை செய்ய‌ வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், ம‌த்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழ‌ந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவ‌து ச‌ரியா த‌வ‌றா என்று புரிய‌வில்லை.
ஆனால் அப்ப‌டித் தானே நுழைகிற‌து ஒவ்வொரு வீட்டிலும் தீபாவ‌ளி?

Thursday, October 8, 2009

கனவு

நான் வீசியெறிந்த மாவிதை வேர் பிடித்து நின்றது;
கனிகளும் தந்தது; வெயிலுக்கு ஒதுங்கிய எனக்கு நிழலும் தந்தது
கறைபட்ட நினைவுகளைக் கழுவும் ரசவாதம் - கனவு

Sunday, October 4, 2009

அம்மாவின் பிறந்த நாள்!

பிறந்த நாள் என்பது எல்லாருக்குமே மனதுக்கினிய நாள் தான். என்னதான் ’என்ன் பெரிய பிறந்த நாள், it’s just another day, அதெல்லாம் பெரிசா கண்டுக்கறது கிடையாது’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், கொண்டாடுகிறோமோ இல்லையோ,
அன்றைய தினம் நண்பர்களும் அன்புக்குரியவர்களும் நம்மை வாழ்த்தும் போது கிடைக்கிற மகிழ்ச்சியே அலாதி தான்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு நம்மை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தவர்களின் பிறந்த நாள் தெரியும், அல்லது தெரிந்தாலும் நினைவிருக்கும்? (அவர்களின் திருமண நாள் கூட நினைவில் இருக்கும்.)

இன்று அம்மாவுக்குப் பிறந்த நாள் என்று எழுதும் போதே உண்மையில் இந்தத் தேதி தானா என்றவொரு ஐயமும் மனதில் தோன்றுகிறது.

வீட்டில் ஒவ்வொருவர் பிறந்த நாளையும் நினைவில் வைத்துப் பாயசத்துடன் விருந்து சமைத்து மகிழ்விக்கும் அம்மா தனது பிறந்த நாள் என்னவென்பதை வெகு நாட்கள் குழப்பத்திலேயே வைத்திருந்தார்.

அக்டோபர் 15 என்று தான் முதலில் ஞாபகம். பின்பு ஏதோ பழைய சான்றிதழ்களைக் கண்டெடுத்தபோது அக்டோபர் நான்கு என்று இருந்தது. எப்படி இருந்தாலும் அம்மா பிறந்த நாளை அம்மா மட்டும் அல்ல, வீட்டில் அனைவருமே எளிதாக மறந்து விடுவது தான் வழக்கமாகிறது.

அப்பா பிறந்த நாளில் அப்பாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அவரை வாழ்த்துவது வழக்கம். அதுவும் ஏப்ரல் மாதம், கோடை விடுமுறையில் வரும் என்பதால் அப்பா பிறந்த நாள் என்றாலே சிறு வயது முதல் வீடே களைகட்டும் குதூகலமான நாளாக மனதில் பதிந்திருக்கிறது. அது எவ்வளவு சந்தோஷமோ அதே சமயம் அம்மா பிறந்த நாளைக் குறைந்த பட்சம் பிள்ளைகளான நாங்க்ளாவது ஒழுங்காக நினைவு கூர்கிறோமா என்றால் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.

’அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அம்மா அதையெல்லாம் பொருட் படுத்த மாட்டார்கள்’ என்று நாம் சமாதானம் கொள்ளலாம். அது உண்மையும் கூட. ஆனாலும் நினைவு வைத்திருந்து ஒரு முறை வாழ்த்துச் சொல்லிப் பாருங்களேன்.
அந்தத் தாயுள்ளம் எப்படி பூரித்து மகிழும் என்பதை.

வெட்கச் சிரிப்புடன் அன்று நாளெல்லாம், “எனக்கே நினைவில்ல... இந்தப் புள்ள ஞாபகமா ஃபோன் பண்ணுது” என்று பிறரிடம் சொல்லி மகிழும் போது நமக்குப் புரியும் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று!

பலர் வீட்டில் அப்பாக்களுக்கும் கூட இதே நிலை தான் இருக்கும்.

அதனால் இப்பதிவைப் படிப்பவர்கள் இதுவரை இல்லாவிடினும் இனி உங்கள் அம்மா அப்பா பிற்ந்த நாளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தத் தேதியில் சென்று அவர்களிடம் செல்லம் கொஞ்சிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

(பி.கு: தவறாமல் அப்பா அம்மா பிறந்த நாளை நினைவு வைத்து அவர்களை மகிழ்விக்கும் நல்ல பிள்ளைகளுக்குச் சிறப்பு பாராட்டுக்கள். அவர்கள் தங்கள் அனுப்வங்களைப் பகிரும் படியும் கேட்டுக் கொள்கிறேன்)

Thursday, October 1, 2009

வறட்சி

தளும்பித் தளும்பி வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல், தீரவே தீராதோ எனும்படியாக
என்றோ ஒரு நாள் தடாலென்று கவிழ்ந்தது...
மிச்சம் மீதி இருந்ததும் இன்னொரு பொழுதில் காய்ந்து போனது
வாசமாவது மிஞ்சட்டும் என்று மூடி மூடி வைக்கிறேன்

கூத்தாடி

இருபதடி உயரத்தில் கயிற்றின் மீது நடந்தான்;

வாய் பிளந்து அதிசயித்தது

உடலை மடக்கி மடக்கிக் கரணம் அடித்தான்;

கை தட்டி மகிழ்ந்தது

முகத்தை அஷ்ட கோணலாக்கி ஏதேதோ பேசினான்;

வாய் விட்டுச் சிரித்து ரசித்தது - அதில் பொன்னும் ம‌ணியும் சித‌றின‌

போதையில் கிறுகிறுத்தான்;

உடல் இருபதடி, மனம் இருநூறடி சென்றது - கால் ச‌றுக்கிய‌து

ஆட்டமெல்லாம் முடிந்து ஊர்செல்லும் முன் ஒரே முறை அதைக் காண‌ விரும்பினான்;

நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு