Wednesday, July 1, 2009

நகைப்புக்காக அல்ல!

கழுத்தை அடைத்து, கிட்டத் தட்ட துப்பட்டாவைப் போல் படர்ந்து இருக்கும் நெக்லஸ்கள், உடைந்த கைக்குப் போடப்படும் மாவுக்கட்டு சைஸில் கங்கணங்கள், அக்குபங்சர் செய்தது போல் காதில் துளி இடம் விடாமல் குத்தி அதில் வளையங்கள் என்று நகைக்கடை விளம்பர மாடல்கள் வருவதைப் பார்த்தாலே மூச்சு முட்டுகிறது. என்ன தான் தங்கம் விலை விஷம் போல் ஏறினாலும் நகைக்கடைகளில் கூட்டமும் குறைவதில்லை, பெண்களின் நகை மோகமும் விடுவதில்லை.

சரி விடுங்கள், விசேஷங்களுக்கு, சுபகாரியங்களின் போது பெண்கள் நன்றாக உடுத்தி நகைகள் அணிவது ஓ.கே. வீட்டில் இருக்கும் போது கூட கழுத்தில் கையில், காலில் என்று நகைகள் ஸ்டாண்டாக எப்படி இருப்பது?

எப்படித்தான் நமது பெண்கள் எப்போதும் வளையல் அணிந்த கையோடு இருக்கிறார்கள்? அதுவும் அத்தோடு சமையல் செய்வது மிகவும் சிரமம். தங்கமோ வேறு உலோகமோ என்றால் கையில் சூடு படும். ப்ளாஸ்டிக் கண்ணாடி வகையறா வென்றால் ஆபத்துக்கள் சொல்லவே வேண்டாம்! இந்த லட்சணத்தில், வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு உணவு பரிமாறும் போது கைகள் மொட்டையாக இருக்கக் கூடாது, ஒரு வளையாவது அணிந்திருக்க வேண்டும் என்று என் பாட்டி கூறுவார். ஹீம்!

என்னால் வளையல் போட்டுக்கொண்டு எந்த காலத்திலும் எந்த வேலையுமே செய்ய முடிந்ததில்லை. பள்ளி செல்லும் காலத்தில் வளை அணிந்த கரத்தை மேஜை மீது வைத்து எழுதும் போது அழுத்தி வலிக்கும். நல்லவேளை நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் பள்ளியில் எல்லா வகையான நகைகளுக்கும் தடை போடப்பட்டது. நிம்மதி!


கல்லூரியிலும் அதே கதை. வேலைக்குச் செல்லும் போதும் வளை அணிந்த கையால் கீ போர்டில் டைப் செய்வது கூட எனக்குக் கஷ்டம். ஆனால் புறப்படும் முன் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் சில சமயம் அணிந்ததுண்டு. அணிந்து சென்றபின் கீ போர்டின் மீது கழற்றி வைத்து விட்டு வேலை பார்ப்பதற்கு ஏன் அணிய வேண்டும் என்று அதையும் விட்டு விட்டேன்!

என் திருமணம் வரையில் தங்க நகைகள் என்று பார்த்தால் ஒரு மெல்லிய சங்கிலியும் ஒரிரு வளையல்களும் தான் என்னிடம் இருந்தன. என் அப்பா நகைகள் வாங்கிச் சேர்த்து வைப்பதை அறவே வெறுத்தார். அவருக்கு Hats off!
திருமணத்தின் போது சமூகத்தோடு ஒத்துப் போவதற்காக நகைகள் வாங்க வேண்டி இருந்தன. அவற்றை ஒரு சேமிப்பாக மட்டுமே கருதுகிறோம்!

திருமணத்துக்குப் பின் நான் சந்தித்த மிகப் பெரும் சோதனை இது தான். தாலி என்ற பெயரில் கனமான சங்கிலி ஒன்றைக் கழுத்தில் மாட்டி விட்டனர். தாலி என்ற அந்தச் சிறு பதக்கமோ கூர்மையாக ஏதோ ஆயுதம் வடிவில் செய்யப்பட்டிருந்தது. இது ஏதடா வம்பு! இதை என்னால் சில மணி நேரங்கள் கூடக் கழுத்தில் போட்டிருக்க முடியாதே, எப்படி இதைக் காலம் பூராச் சுமக்கிறார்கள் என்று மலைத்தேன். என் மாமியாரும் நாத்தனாரும் அதே போன்ற தாலி தான் அணிந்திருந்தனர். என் அம்மா கல்யாணத்தன்று போடப்பட்ட தாலிச் சங்கிலியை இன்று வரை எக்காரணம் கொண்டும் கழற்றியதில்லை, என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் அப்போது புதிதாக நினைவு வந்து தலை சுற்றியது.

எனக்கு மே மாதம் கல்யாணம். திருமணம் முடிந்து வீட்டுக்கு மதியம் வந்த போதே மாலையோடு சேர்ந்து தாலியும் கழுத்தில் கசகசக்க ஆரம்பித்தது. மற்ற நகைகளை எல்லாம் ஒரு வித வன்மத்தோடு கழற்றி எறிந்தேன். இதைக் கழற்றி வைக்கவும் கைகள் துறுதுறுத்த போதிலும் தயங்கினேன். செண்டிமெண்ட் எதுவும் எனக்கும் இல்லை. அதை அணிவித்தவருக்கும் இல்லை. மற்றவர்களுக்கு அநியாயத்துக்கு இருக்கிறதே. அவர்கள் மனதை வந்த அன்றே புண்படுத்துவானேன் என்று தான்.

அடுத்து வந்த நாட்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. நான் பொதுவாக வீட்டில் வளையல் கொலுசு கூட அணிவதில்லை. கழுத்தில் மெல்லிய சங்கிலி மட்டுமே. அதற்கு மேல் என்னால் சுமக்க முடியாது. தனிக்குடித்தனம் வந்தவுடன் முதல் வேலையாகத் தாலியைக் கழற்றி ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தினேன். மாமியார் வீட்டிலிருந்து யாராவது வரும் போது அணிவது; மற்றபடி அதற்கு விடை கொடுப்பது என்று சில காலம் இருந்தேன்.

ஒரு முறை வீட்டில் ஏதோ விசேஷம் என்று உறவினர் எல்லாரும் கூடியிருந்த சமயம். நான் வேலையோடு வேலையாக எங்கோ கழற்றி வைத்திருந்த தாலியை என் ஐந்து வயது அக்கா மகன் கழுத்தில் மாட்டிக் கொண்டு கூடத்தில் போய் நின்று விட்டான்! எல்லோரும் சிரித்து அடங்கியபின், என் மாமியார் சொன்னார், “இந்தாம்மா, நீ போட்டுக்காட்டியும் பரவாயில்ல, யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வாவது வைத்துக் கொள் என்று!” அப்பாடா, அவருக்கும் ஒரு Hats off!

அதே போல் கொலுசு. என்ன விதமான கொலுசாக இருந்தாலும் ஈரம் இருக்கும் போது அரிக்கத் தொடங்கிவிடும். நாற்காலியில் கூடச் சம்மணம் போட்டு உட்கார்வது என் வழக்கம். அப்போது மற்ற காலின் மீது பட்டு உறுத்தும். அதனால் கொலுசுக்கும் குட்பை!

அடுத்து மெட்டி! ஐயோ... பெண்கள் நிம்மதியாகத் தூங்கக் கூடாது என்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ இந்த நகையும் அலங்காரங்களும்! ஒரு முறை தூங்கும் போது போர்வையில் சிக்கிக் கொண்டு விரல் பிசகப் பார்த்தது எனக்கு. இன்னும் சில சங்கடங்களால் ஒரு சுபயோக சுபதினத்தில் அதற்கும் விடை கொடுத்தாகி விட்டது.


ஒரேயடியாக நகைகளை வெறுக்கிறேன் என்று சொல்ல முடியாது. அழகுபடுத்திக் கொள்ள எந்தப் பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. (இல்லாத ஒரு சில அபூர்வப் பெண்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!) வெளியில் செல்லும் போது, அழகாக உடுத்திக் கொள்ளும் போது அதற்கேற்ற நகைகள் (தங்கம் தான் என்றில்லை) அணிந்தால் பார்க்க நன்றாகத் தான் இருக்கும். அதுவும் எளிமையாக யார் கண்ணையும் உறுத்தாமல் இருந்தால் நம் மீது மதிப்பு கூடத் தான் செய்யும்!

அதை விட்டு விட்டு குடும்ப கௌரவத்துக்காக, வீண் பெருமைக்காக என்று எந்நேரமும் சில பவுன்களைக் கழுத்திலும் கையிலும் சுமக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது? சொந்த ஆசையினாலோ நிர்பந்தத்தினாலோ சில பெண்கள் இப்படித் திரிவது உண்மை.

ஆனால் ஒரு குன்றுமணி நகை கூடக் கனவாக ஏங்கும் பெண்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதும் நாம் வாங்கித் தேவையில்லாமல் பூட்டி வைக்கும் ஒவ்வொரு நகைக்கும் தங்கம் விலை ஒவ்வொரு படியாக ஏறும் என்பதும் நினைவில் கொண்டால் கொஞ்சம் இந்த மோகம் மட்டுப்படும் என்பது என் கருத்து!




41 comments:

Anonymous said...

மிக சரியாக சொன்னீங்க.. எனக்கும் எதுவுமே பிடிக்காது. பெரியவர்களின் கடும் எதிர்ப்பினால் வெறும் கயிறில் தாலி சேர்த்து போட்டுளேன். வளையல், கொலுசு, ஜிமிக்கி நினைத்தாலே டென்ஷன் ஆகும். அதுவும் ஒரு மதிய நேரம் பட்டு புடவை நகை ஐயோஓஓ ஆளை விடுங்கப்பா.

Vidhya Chandrasekaran said...

சேம் பிளட். இதைப் பத்தி அமித்து அம்மா, முல்லை, நான் எல்லாரும் ஒரு பதிவு எழுதிருக்கோம்.

அமுதா said...

/*ஐயோ... பெண்கள் நிம்மதியாகத் தூங்கக் கூடாது என்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ இந்த நகையும் அலங்காரங்களும்!*/
கண்டிப்பா அப்படி தான் இருக்கும். நாம் விரும்பி போட்டுக் கொள்வது ஆசை, மற்றவர் விருப்பத்துக்கு விருப்பமின்றி போடுவது எரிச்சல். நீங்க சொன்ன மாதிரி தான் முதல்ல தாலி,வளையல், மெட்டி எல்லாம் இம்சையா இருந்தது, இப்ப கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிப் போய்டிச்சு :-)

Deepa said...

:-) நன்றி மயில்!
//எனக்கும் எதுவுமே பிடிக்காது. பெரியவர்களின் கடும் எதிர்ப்பினால் வெறும் கயிறில் தாலி சேர்த்து போட்டுளேன். //

இந்தத் தாலியை எதிர்த்து நாம் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்!
நான் என்னளவில் மௌனமாக நடத்தி வெற்றி பெற்றுவிட்டேன்! இருந்தாலும் எல்லாருக்காகவும் :-)

நன்றி வித்யா!
//இதைப் பத்தி அமித்து அம்மா, முல்லை, நான் எல்லாரும் ஒரு பதிவு எழுதிருக்கோம்.//
அப்படியா?


நன்றி அமுதா!
//நீங்க சொன்ன மாதிரி தான் முதல்ல தாலி,வளையல், மெட்டி எல்லாம் இம்சையா இருந்தது, இப்ப கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிப் போய்டிச்சு :-)//
:-) சமத்து நீங்க!

துபாய் ராஜா said...

நல்லதொரு அனுபவபதிவு.

உங்களை மாதிரியே எல்லா இந்திய பெண்களும் மாறிவிட்டால் தங்கம் விலையும் ஏறாது.கணவர்களும் கஷ்டப்படவேண்டாம்.

சந்தனமுல்லை said...

ஆகா..தீபா..நல்ல போஸ்ட்! சேம் பிளட்! ஆமா, வித்யா சொன்னமாதிரி கொஞ்ச நாள் முன்னாடி ஒரு தொடர்பதிவு மாதிரி எழுதினோம்! நேரம் இருக்கும்போது வாசிங்க...http://sandanamullai.blogspot.com/2008/12/blog-post_6525.html!

வாழ்த்துகள்!

Deepa said...

நன்றி ராஜா!

நன்றி முல்லை!
உங்க பதிவைப் படிச்சேன்.
வழக்கம் போல் கலக்கல். பாருங்கள் நீங்கள் என்னை அழைக்காமலே எனக்கும் இது பற்றி எழுதத் தோன்றி இருக்கிறது. அப்படி ஒரு சேம் ப்ளட் மேட்டர் இது :-)

மணிஜி said...

”தாலி காத்த காளியம்மன்” கருணநிதியின் 32 பதில்கள் படிச்சீங்களா?

Vidhoosh said...

சேம் பிளட்.

"உழவன்" "Uzhavan" said...

நீங்கள் சொன்ன அனைத்துமே ஏற்கக்கூடிவைகளே..
அவருக்கு Hats off!.. இவருக்கு Hats off! என்று சொல்லுற உங்களுக்கும் ஒரு Hats off! :-)

butterfly Surya said...

துபாய் ராஜாவை வழி மொழிகிறேன்.

Deepa said...

நன்றி தண்டோரா!
படித்தேன், அருமை!

நன்றி விதூஷ்!

நன்றி உழவன்!

நன்றி வண்ணத்துப்பூச்சியார்!

ராம்.CM said...

நன்றாக இருந்தது.நல்ல அனுபவ பதிவு.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//இதைப் பத்தி அமித்து அம்மா, முல்லை, நான் எல்லாரும் ஒரு பதிவு எழுதிருக்கோம்.//

அக்காக்களும், அம்மாக்களும் ஒன்னா சேர்ந்து நகை மேட்டருக்கு ஒரு முடிவு கெட்டுனா என் ஓட்டு உங்களுக்குத்தான் ... ( என்ன பண்ணுறது என் கஷ்ட்டம் என்னக்கு ...) ஆமா, இதுல மாமியார் யார் ?

மாதவராஜ் said...

நல்ல பதிவு. நிறைய அர்த்தங்களோடும், சுவையோடும் இருந்தது. இல்லாதவர்கள் குறித்தும் யோசித்த இடங்கள் முக்கியமானவை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
திருமணத்துக்குப் பின் நான் சந்தித்த மிகப் பெரும் சோதனை இது தான். தாலி என்ற பெயரில் கனமான சங்கிலி ஒன்றைக் கழுத்தில் மாட்டி விட்டனர். தாலி என்ற அந்தச் சிறு பதக்கமோ கூர்மையாக ஏதோ ஆயுதம் வடிவில் செய்யப்பட்டிருந்தது. இது ஏதடா வம்பு
//

அருமையான பதிவு.. பெண்களின் கவலை ஒரு பெண்ணிற்குத்தான் புரியும் என்பது சரிதான்! தாலியைப் பற்றிய பயம் அனைவருக்கும் வருமா என்று தெரியவில்லை.

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாம் வாங்கணும்ன்னு ஆசை வந்து

வீட்டுக்காரய்ங்கள மண்ட காய விடுறது

அப்பறம் வெயிட்டா இருக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்ல வேண்டியது......

ஏன் இந்த நகை வெறி பெண்களிடம்

Deepa said...

நன்றி ராம்!

நன்றி அங்கிள்!

நன்றி செந்தில்வேலன்!

நன்றி வசந்த்!
:-)வாங்கணும்னு ஆசை வந்ததாக என் பதிவில் எங்கே சொல்லி இருக்கிறேன்? முழுதும் படித்தீர்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

அய்யோ நான் உங்கள சொல்லவில்லை

பொதுவில் கூறினேன் தப்பாயிருந்தால்

மன்னித்துவிடுங்கள்

Anonymous said...

your posting is in youthful vikatan. congrats

மாதவராஜ் said...

தீபா, உன் அக்கா அம்மு இப்போதுதான் இதைப்படித்தாள். விழுந்து விழுந்து சிரித்தாள்.நீ இன்னும் முழுமையாக எழுதவில்லையென்று சொன்னாள். ஜோவுக்கு அந்தத் தாலியை மாட்டி விட்டு “நீ ஒரு மாசம், நான் ஒரு மாசம் சுமப்போம்” என்று சொல்வியாமே! hats off to deepa and joe!!!!!!

Anonymous said...

Even i got rid of every "symbol" successfully. Thank God,...
-Eeena

Suresh said...

அருமையான கதை எழுத்து நடை படித்ததும் உங்க பாலோவர் ஆகியாச்சு

நம்ம காதலுக்கு கண்ணில்லை பதிவை முடிச்சா படிங்க

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

Vetirmagal said...

Yes. Hats off to you too..
I appreciate the younger generation thinking on these lines.
I think,wearing too much gold on daily basis is more in South India.

Hope more young people will follow your idea.

jothi said...

எல்லா பெண்களும் உங்களை மாதிரியே இருந்துட்டா??? நல்ல படைப்பு,..

//எளிமையாக யார் கண்ணையும் உறுத்தாமல் இருந்தால் நம் மீது மதிப்பு கூடத் தான் செய்யும்!//


நிறைய நகை அணிந்து போனால்தானே மதிப்பு கூடும். கணக்கு இடிக்குதே. எப்படி?

Deepa said...

மீள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மயில்!

அங்கிள்!
ஏதாவது பிரச்னைன்னா பேசித் தீர்த்துக்கலாம். இப்படிப் பப்ளிக்கா டேமேஜ் பண்றீங்களே!
:-))

நன்றி அனானி!

நன்றி Suresh! படிக்கிறேன்.

நன்றி வெற்றிமகள்!

நன்றி ஜோதி!

அகநாழிகை said...

நல்ல பதிவு தீபா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பட்டாம்பூச்சி said...

nanum unga koottudhaanungo :)

Joe said...

அருமையான இடுகை.

//
திருமணத்தின் போது சமூகத்தோடு ஒத்துப் போவதற்காக நகைகள் வாங்க வேண்டி இருந்தன. அவற்றை ஒரு சேமிப்பாக மட்டுமே கருதுகிறோம்!
//
நீங்க வேற, எந்த நகையையும் எந்த வீட்டிலும் விக்கவே விட மாட்டார்கள். இது என் பாட்டி செஞ்சு கொடுத்தது, இது எங்கம்மா ஆசையா போட்டதுன்னு எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒரு வகையில், jewels are dead assets.

லெமூரியன்... said...

சற்று வித்தியாசமான பதிவு....வாழ்த்துக்கள்......சங்க இலக்கியத்திலே நம் பெண்கள் வாழ்வில் ஆபரணங்கள் ஒன்றிஇருந்தது என்பதற்க்கு சான்று இருக்கின்றது.....அனால் கிலோ கணக்கில் அணிந்தார்களா என்பது தெரியவில்லை....அனால் தாலி என்பது நமது சங்க காலத்தில் இல்லாத கலாசாரம்...கடந்த சில நூற்றாண்டுகளே இந்த வழக்கம் உள்ளது....மெல்லிய கண்ணுக்குருத்தாத நகைகள் அணியலாம் என்ற உங்கள் கருத்துக்கு வரவேற்ப்புகள்.........(பொதுவாக ஆண்களை விட பெண்களின் உடல் உஷ்ணம் அதிகம் என்றும் அதனாலேயே உடற்சூடு தணிக்க கூடிய உலோகங்கள் பெண்கள் பயன் படுத்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..)

Deepa said...

நன்றி வாசுதேவன்!

நன்றி பட்டாம்பூச்சி!

நன்றி ஜோ!
//jewels are dead assets// அவற்றின் மீது ஏதாவது செண்டிமெண்ட் இருந்தால் தானே!
இருந்தாலும் நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி தான். சேமிப்புக்கு வேறு வழிகள் இல்லையா என்ன?

நன்றி ரமேஷ்!

//உடற்சூடு தணிக்க கூடிய உலோகங்கள் பெண்கள் பயன் படுத்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..)//
ஓ! இப்படி ஒரு மேட்டர் இருக்கா!

Anonymous said...

நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க, நகை அணிந்து இருக்கும் பெண்கள் தான் மிகவும் அழகாக தெரிகிறார்கள்!

யாத்ரா said...

hats off

Deepa said...

நன்றி அனானி!
நன்றி யாத்ரா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வித்யா சொன்னதுதான் தீபா.


முடிஞ்சா என் பதிவ தேடி லிங்கறேன், படிச்சு பாருங்க. :)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

http://amirdhavarshini.blogspot.com/2008/12/blog-post_04.html

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

உங்கள் பதிவைப் படித்தேன். அங்கேயே பின்னூட்டம் இட்டிருக்கிறேன். பாருங்கள்!

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பரா சொல்லிருக்கீங்க. நான் சின்ன வயசுலல்லாம், சும்மா சசியக்கா கணக்கா, போட்டுட்டு சுத்தி வருவேன். அப்புறம், பருப்பு வேகவைக்கிற அளவுக்குப் பொறுப்பு வந்தவுடனே, இதெல்லாம் கொஞ்சம் பேஜாராகிடுச்சி.

//“இந்தாம்மா, நீ போட்டுக்காட்டியும் பரவாயில்ல, யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வாவது வைத்துக் கொள் என்று!” அப்பாடா, அவருக்கும் ஒரு Hats off!//

ஹி ஹி, என் மாமியார் அதை கழட்டி வெச்சுட்டு போ, நீச்சல் குளத்துக்குப் போகும்போதாவதுன்னு சொன்னதுலருந்து, தாலி மேல மட்டும் கூடுதல் பாசம் வந்து, குடும்ப இஸ்திரி டிராமா போடுறது:):):)

//நாற்காலியில் கூடச் சம்மணம் போட்டு உட்கார்வது என் வழக்கம்.//

ஹையா மீ டூ:):):) இதாலயே குளிர் காலங்களில் நீண்ட பயணங்கள் போறதுக்கு சிரமப்படுவேன்(ஷூ போடனும்லையா).

//ஆனால் ஒரு குன்றுமணி நகை கூடக் கனவாக ஏங்கும் பெண்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதும் நாம் வாங்கித் தேவையில்லாமல் பூட்டி வைக்கும் ஒவ்வொரு நகைக்கும் தங்கம் விலை ஒவ்வொரு படியாக ஏறும் என்பதும் நினைவில் கொண்டால் கொஞ்சம் இந்த மோகம் மட்டுப்படும் என்பது என் கருத்து//

இதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.

Deepa said...

நன்றி rapp!

:-))) LOL!

Anonymous said...

CLAP CLAP!!!!!!!!!!!! attakasama irukkunga... mom only wears thali in a mangal kayiru (she wanna be simple as many ppl dun have money to even wear ear ring). One small ring, ear ring. No other jewels. I am dun wear anythin than ear ring. even my ear rings are too small. am lucky that amma somehow let me do what i wanna do. i clearly told her that if am getting married i will wear the yellow rope only and not the big one. and i wont wear any jewels than that. if i get married kandippa iraq war than veettila nadakkum..

Sriakila said...

அருமையான பதிவு தீபா. இப்போது தான் படிக்கிறேன். படிக்கும்போது என் மனதை அப்படியே படிப்பது போன்ற உணர்வு. என்னுடைய முற்போக்கு சிந்தனைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில் எனக்கு இஷ்டமில்லை. நம் குழந்தைகளுக்காவது அந்த சிந்தனைகளைக் கொடுப்போம்.