Thursday, May 28, 2009

ஒரு மனசாட்சியின் குரல்

சிங்களர் ஒருவர் தனது வலைப்பூவில எழுதிய பதிவிது.

நன்றி: இதனைச் சுட்டிக்காட்டி மொழியாக்கம் செய்யுமாறு சொன்ன திரு. மாதவராஜ் அவர்களுக்கு நன்றி.

அத்திறந்த வெளியில் நின்று கொண்டிருக்கும் மக்கள் சிலர் சிரித்துக் கொண்டும் ஆரவாரமிட்டுக் கொண்டும் இருக்கின்றன. முக்கியமாக வெற்றிக் களிப்பில் உள்ளனர். அவர்கள் முன் புல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இறந்த உடல்கள் மீது காமிரா நகர்கிறது. இராணுவ அடையாள அட்டை ஒன்றை தங்களுக்குள் கைமாற்றியபடி
புகைப்படக்காரரை அதையும் படமெடுக்கும்படி கேட்கின்றனர். வெற்றிப் பூரிப்பு அந்த இடமெங்கும் தெறிக்கிறது.

இத்தகைய காட்சிகளை நான் முன்பு கண்டிருக்கிறேன். துப்பாக்கிகள் ஏந்தியபடி, வெற்றிக்களிப்பு முகத்தில் கூத்தாடக் காலனியாதிக்கவாதிகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வெற்றி கொண்டாடிய காட்சிகள் தாம் அவை. பெரும்பாலும் அந்த நிலத்தின் உண்மையான குடிமகன்கள் இருவர் அடிமைகளாக இருபுறமும் வெறித்த பார்வையுடன் நின்றிருப்பார்கள். வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தின் ஆவணமாகக் கொண்டாடப்படும் அப்புகைப்படங்கள். மிகப்பெரியதொரு வேட்டையாடலின் வெற்றிப் பரிசுகள் அவை. சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டை அவை.

மே 19, 2009 தொலைக்காட்சியில் காட்டப்பட்டதும் அப்படியொரு பெரும் வேட்டையைப் பற்றியது. மனித்ப் புலிகள் வேட்டை. உலகின் மிக பயங்கரத் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, வீழ்த்தப்பட்டுக் கிடந்தது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்படங்கள் காட்டப்பட்டன. சில நேரங்களில் மிகக் குரூரமாக, தேவையில்லாமல் மீண்டும் மீண்டும்...

வார இறுதியில், விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள் என்று முற்றும்
அறிந்தபின் கொழும்பு மக்களும், தீவின் இன்னபிற மக்களும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். வாணங்கள் வெடித்து, பெரிய பெரிய லாரிகளிலும் ட்ரக்குகளிலும் சிங்களக் கொடியைப் பறக்க விட்டபடி, வீதிகளில் வலம் வந்தனர். ஆண்களும் பெண்களும் தெருக்களில் ஆடிப்பாடினர், இனிப்புகளும் பால்பாயசமும் விநியோகித்தனர். எங்கு பார்த்தாலும் இலங்கை தேசியக் கொடி பறந்தது. வீடுகளின் கூரையில், கடைகளில், வணிகக் கட்டடங்களில், தெருவோரங்களில்.. வாகனங்கள் கூட அணிந்து சென்றன. போர், கலகம், பயங்கரவாதம், தற்கொலைப் படை வெடிகுண்டுகள், கன்னிவெடிகள், சிறுவர் சிப்பாய்கள் இவற்றால் பெருஞ்சோர்வடைந்திருந்த சலிப்படைந்த சிங்களர்கள் தீவிரவாதம் வீழ்த்தப்பட்டதில் மிகப் பெருமிதம் கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.

ஒவ்வொரு நாளும் வெற்றிக் கூச்சல்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும்
வீழ்த்தப்பட்ட அந்த மக்களின் கனத்த மௌனத்தையும் கேட்கிறேன். கூரையைக் கிழித்துக் கொண்டு கேட்கும் இக்கூச்சல்களில் சொல்லப்படாத செய்தி அது தான். நாம் வெற்றி பெற்று விட்டோம். அதனால் என்ன? யாரோ தோற்று விட்டார்கள். யார் அது? என்னைக் கேட்டால் நாம் அனைவருமே என்று தான் சொல்வேன். இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்களை நினைத்துப்பார்க்கிறேன் நான்.
அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்
அவர்கள் இப்போது? பீதியிலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பார்களா? அல்லது அவர்களுக்கும் இந்தப் போர் முடிவு சந்தோஷத்தைத் தருகிறதா?
அவர்களால் சிங்களக் கொடியைப் பறக்க விட்டு மகிழ முடியுமா? இந்தப் போர் முடிவை நாம் இவ்வாறு ”கொண்டாடக்” கூடாது என்றே எனக்குப் படுகிறது. யாரோ சொன்னார்கள். இதற்குப் பதில் கோயில்களுக்குப் போய் வேண்டிக் கொள்ளலாம். ஆம், அது சாலச் சிறந்ததென்றே தோன்றுகிறது; எத்தனையோ மடங்கு.ஒவ்வொரு வெற்றிக் கூச்சலைக் கேட்டும் நான் கூனிக் குறுகுகிறேன்.
ஆடிப்பாடும் கூட்டங்களைக் கண்டு திரும்பிக் கொள்கிறேன். ஏன் எனக்கு
இப்படித் தோன்றுகிறது. எனக்கு என்ன போயிற்று? ஆனால் என் நண்பர்கள்
பலரும் இப்படித் தான் எண்ணமிடுவார்கள் என்றும் உணர்கிறேன். நாங்கள்
அனைவருமே சிந்திப்பது தவறாக முடியாது.


இப்போர் முடிவை இந்நாடு பார்க்கும் பார்வை எனக்கு மிகுந்த
வருத்தமளிக்கிறது என்றே நினைக்கிறேன். தத்தா காமினி கூட ஈழாராவின்
மரணத்தைக் கண்ணியத்துடன் கையாண்டான். எனக்கு அந்த அரசன் மீது பெரிய மதிப்பு இல்லாவிடினும் இன்றைய இலங்கைத்தலைமைக்கு இல்லாத
கண்ணியம் அவனிடம் இருந்தது. 2500 ஆண்டுகள் கூடுதல் நாகரிக வளர்ச்சி
அடைந்த மக்களுக்கு இது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி, இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது?


பிரபாகரன் ஒன்றும் திடீரென்று தீவிரவாதியாக முளைத்து விடவில்லை.
அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிடில் 26 ஆண்டுகால போருக்குப் பின் நாம் பாடம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தையே படிக்க வேண்டி வரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை.


இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான். என் அறையில்
சிங்களக் கொடியொன்று மடித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை எழும்
போதும் இரவு தூங்கும் போதும் அதைப் பார்க்கிறேன். என்றைக்கு ”நான் ஒரு சிங்களன்” என்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேனோ அன்று அதைப் பறக்க விடுவேன். தற்போது அது மடித்துத் தான் வைக்கப் பட்டுள்ளது.




31 comments:

செந்தில்குமார் said...

மீ த பர்ஸ்ட்... உள்ளேன் மேடம்..

ILA (a) இளா said...

ஒரு மனிதனின் பதிவு..

சரவணன் said...

இந்த சிங்களவரைப் போல் மற்ற எல்லா சிங்களவர்க‌ளும் நினைத்திருந்தால் இலங்கையில் இனப் பிரச்சினையே வந்திருக்காது. உலகத்தில் நல்ல எண்ணங்கள் கொண்ட உள்ளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றது.

ISR Selvakumar said...

மொழி பெயர்த்து எழுதியது போலவே இல்லை. தங்களின் உள் மன உணர்வை எழுதியது போலவே உள்ளது. மிகவும் ஆழமான செதுக்கிய எழுத்துக்கள்.

ஒரு வேளை நீங்கள் தான் அந்த சிங்களவரோ? என்று இன்னமும் கூடத் தோன்றுகிறது.

Deepa said...

அனைவரின் வருகைக்கும் நன்றி

செல்வக்குமார்!
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நிச்சயமாய் நான் அல்ல அந்த சிங்களவர். நசியா பரூக் என்பவர்.

நர்சிம் said...

நல்ல பணி.மிக நேர்த்தியான வார்த்தைகள். குமுறள்!

சந்தனமுல்லை said...

அழுத்தமான பதிவு தீபா! மிக அருமையான மொழிபெயர்ப்பு! நன்றிகள்!

கே.என்.சிவராமன் said...

தீபா,

அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு.

தொடர்ந்து இதுபோல் முக்கியமான ஆங்கில மொழி பதிவுகள் அல்லது கட்டுரைகளை தமிழாக்கம் செய்யுங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கானா பிரபா said...

சொந்த நாட்டுக்குள் பேசித் தீர்க்க இப்படியான மனமாற்றங்கள் இருபக்கமும் தேவை என்பது காலத்தின் கட்டாயம்,

Dhiyana said...

அருமையான மொழிபெயர்ப்பு தீபா.. நல்ல படைப்பு.

ஆயில்யன் said...

//கோயில்களுக்குப் போய் வேண்டிக் கொள்ளலாம். ஆம், அது சாலச் சிறந்ததென்றே தோன்றுகிறது; எத்தனையோ மடங்கு.//

உண்மைதான் எத்தனை எத்தனையோ பேர் தம் உடைமைகளை உறவுகளை இழந்து அகதிகளாகி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் சமயத்தில் இப்படியான நிகழ்வுகளையும் தேசியவிடுமுறையும் அளித்த அரசின் வக்கிர எண்ணத்துக்கு மேலும் தீனி போட்டனர் சிங்களவர்கள் தெருக்களில் ஆடிப்பாடி...!

மாதவராஜ் said...

நன்றி தீபா!
அருமையான மொழிபெயர்ப்பு.
அவசியமான பதிவு.
மீண்டும் நன்றி.

payapulla said...

மிகவும் தெளிந்த பார்வையுடன் எழுதப்பட்டுள்ள பதிவு . மொழிபெயர்ப்பும் மிக நேர்த்தி.

Anonymous said...

நசியா பரூக் சிங்களவரா? கெட்டது குடி. இலங்கையிலே இருப்பது இனப்பிரச்சனையே அல்ல, பாட்டாளி முதலாளி பிரச்சனையே என்று மாதவராஜ், அவருடைய லங்காரத்னா காம்ரேட்பாஸுக்கள் நினைக்கும்வரை, இப்படியாகத்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அடிநுனி தெரியாது சிங்களவர்கள் நல்லவர்களே என்று நியாயயப்படுத்த பத்தி எழுத்தினைத் தேடுவீர்கள்.

சிங்களவர்களோ தமிழர்களோ தனிப்பட்ட அளவிலே நல்லவர்களும் கெட்டவர்களுமேதான். இரண்டு மொழி பேசும் இனங்கள் என்று பார்க்கும்போதுதான் பிரச்சனையே வருகிறது. இலங்கையிலே நாசியா பாருக் சிங்கள(வ)ர் என்றால், நீங்களும் வாழ்க. மாதவராஜும் வாழ்க. கிரவுண்ட்வியூவிலேயே உண்மையாகவே ஒற்றை இரட்டைச்சிங்களவர்கள் எழுதிய நிதானமான பத்திகள் உள்ளன. எடுத்துப்போட்டிருக்கலாம்.

நாசியா பாருக் ஒரு முஸ்லீம். இலங்கைப்பிரச்சனையிலே முஸ்லீங்கள் தங்களை மூன்றாவது குடிகளாகக் கருதுபவர்கள்.

ஜனகன் ஞானேந்திரன் said...

தொடர்புள்ள பாடல் ஒன்று:

http://irukkumo.blogspot.com/2009/05/blog-post_28.html

ராம்.CM said...

அருமையான பதிவு. அவசியமான படைப்பு. அருமை தீபா.

வனம் said...

வணக்கம்

ஆம்
\\ ILA said...

ஒரு மனிதனின் பதிவு..\\

வழிமொழிகின்றேன்

\\பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தையே படிக்க வேண்டி வரும் என்பது அனுபவபூர்வமான உண்மை.\\

சத்தியமான வார்த்தைகள் ஒரு மனிதனாய் நானும் உணர்ந்தது, ஈழ விடயம் மட்டுமல்ல வாழ்வில் எல்லா தளங்களிலும்

இராஜராஜன்

ganesh said...

நல்ல பதிவு.. நேர்த்தியான மொழி பெயர்ப்பு. உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது என்றாலும் காலத்தே பதிவு செய்யுப்பட்டுள்ளது. யார் எழுதியது என்று பதிவுப்பக்கத்திலேயே கொடுத்திருந்தால் நல்லது. இல்லையென்றால் செல்வக்குமார் எழுப்பிய கேள்வி தவிர்க்க முடியாததுதான்.

பிளாக்குகளோடு உங்களைப் போன்றவர்களின் பதிவுகள் நின்று போய்விடுகிறதே...??

ganeshwrites.blogsot.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல மொழிபெயர்ப்பு திறன் உங்களுக்கு.

இவரைப் போன்றே மீதமிருப்போரின் எண்ணங்களும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்

ம்ஹூம் :((

அகநாழிகை said...

தீபா,
அருமையான பதிவு.
புதிய விவரங்கள் பல அறிந்து கொண்டேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Deepa said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மொழிபெயர்ப்புத் திறனை ஊக்குவித்த அனைவருக்கும் கூடுதல் நன்றி!


அனானி அவர்களுக்கு,
நசியா பாருக் சிங்களர் அல்ல என்று திருத்தியமைக்கு நன்றி. யாராக இருந்தால் என்ன? அந்த மண்ணில் தமிழ்மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு மத்தியில் நடைபெறும் வெறியாட்டங்களை வெறுத்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அதனை மாதவராஜ் அவர்கள் தமிழ்ப் பதிவர்கள் பலருக்குப் போய்ச்சேரும் வண்ணம் மொழியாக்கம் செய்யச் சொன்னார். உங்களுக்கு இது போன்ற அல்லது இதை விட வேறு நல்ல பதிவுகள் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும். அதை விடுத்து நையாண்டி ஏன்? அப்புறம் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

ganesh,
பதிவு ஆரம்பத்திலேயே மூலப் பதிவுக்கும் மாதவராஜ் அவர்களின் பதிவுக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேனே!

venu's pathivukal said...

அன்பு தீபா அவர்களுக்கு

மிகவும் நேர்மையான ஒரு மனசாட்சியின் குரலை உங்களது மொழியாக்கம் இன்னும் உரத்த குரலில் பேச வைக்கிறது. பேசியவரும் சிங்களரல்ல. வாசிப்பவரும் தமிழரல்ல. மனிதர்கள். பூகோள வரைபடங்களாலும், ஆதிக்க அரசியலாலும், மஞ்சள் பிசாசின் சாபத்தாலும் கிழித்துப் போடப்பட்டிருக்கும் சாதாரண மனிதர்கள்.......ஆனாலும், நம்பிக்கை இழக்காத உரமிக்க ஜ“வன்கள்.

எஸ் வி வேணுகோபாலன்

மயாதி said...

சிங்களவர்களில் இருக்கும் இந்த நல்ல மனிதர்களைவிட தமிழர்களில் இருக்கும் எட்டப்பன்கள் அதிகம்...

Anonymous said...

super........this is true.....

Sanjai Gandhi said...

இது மொழிபெயர்ப்பு போலவே இல்லை தீபா. சொந்தக் கட்டுரை போலவே இருக்கு. பொதுவாக மொழி பெயர்ப்பின் பலவீனமே மூல மொழிக்கு இணையாக, மாற்றப்படும் மொழியில் திணிக்கப் படும் சில வார்த்தைகள் தான். இந்தக் கட்டுரையில் அபப்டி எதுமே இல்லை. அங்க சிங்கள நண்பர் தமிழில் எழுதியது போல் இருக்கு. பாராட்டுகள்.


அதிகாரத்தில் இருக்கும் இனவெறியர்களுக்கும் பொதுமக்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. பொதுமக்களில் சிலரும் இன வெறி பிடித்து இருப்பதையும் மறுக்க முடியாதெனினும் இது போன்ற நல்ல உள்ளங்களையும் புரக்கணிக்க முடியாது.

மீண்டும் என் பாராட்டுகள்.

Deepa said...

மிக்க நன்றி திரு.வேணுகோபாலன்

//பேசியவரும் சிங்களரல்ல. வாசிப்பவரும் தமிழரல்ல. மனிதர்கள்// எவ்வளவு உண்மை.

மயாதி, அனானி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

$anjaiGandh!

ரொம்ப நன்றி. உங்கள் பாராட்டுக்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன.

ganesh said...

ஹலோ... தீபா, இந்தக்கட்டுரை அப்படியே தீக்கதிரில்(ஜூன் 2) பிரசுரமாகியுள்ளது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி திரு கணேஷ். அங்கிள் சொன்னார். எனக்கு அனுப்பி வைப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
:-)
மீண்டும் நன்றி!

kgp said...

arumaiyana mozhipeyarpu.BANK WORKERS'UNITY JUNE IDHAZHIL idhaip padhippithullathu.DEEPAvukku nandri.kgp

Deepa said...

நன்றி திரு. kgp

Shan Nalliah / GANDHIYIST said...

Great...we need dialogue with good Sinhalese! and support from them for life with justice and peace!