Wednesday, March 31, 2010

தெருவோடு உறவாடி...

நான் சிறுவயது முதல் இன்றுவரை ஒரே பகுதியில் ஒரே தெருவில் தான் வசித்து வருகிறேன் - நான்கு வருட வெளியூர் கல்லூரி வாழ்வைத் தவிர.
திரும‌ண‌த்துக்குப் பிற‌கும் அதே தெருவில் வேறு வீட்டில் தான் க‌ண‌வருட‌ன் இருக்கிறேன். இதைப் ப‌ற்றிப் பெரிதாக‌ நான் யோசித்த‌தில்லை; ஆனால் ஊர் உல‌க‌மெல்லாம் சுற்றி வ‌ரும் தோழிய‌ரைப் பார்த்து நான் விய‌க்கையில் அவ‌ர்க‌ளோ, 'நீ குடுத்து வெச்ச‌வ‌' என்ற‌ ரீதியில் பேசும்போது தான் யோசித்துப் பார்க்கிறேன்.

இதே தெருவில் அக்காவின் இடுப்பில் உட்கார்ந்து போயிருக்கிறேன். அம்மாவின் கைவிர‌லைப் பிடித்த‌ப‌டி ந‌டைப‌ழ‌கி இருக்கிறேன்.
ம‌ணி ரிக்ஷா எனக்காக‌ ம‌ணிய‌டித்துக் காத்து நின்றிருக்கிற‌து. சைக்கிளில் விழுந்து வாரி இருக்கிறேன். ஜோவுட‌ன் பைக்கில், என‌து ஸ்கூட்டியில்,...இப்போது என் ம‌க‌ளின் கை பிடித்து மெதுவாக‌ ந‌ட‌ப்ப‌தும் இதே தெருவில் தான்.

என்னைப் போலவே தெருவும் ஏகத்துக்கும் மாறி இருக்கிறது.தெரிந்தவர்கள் இருந்த பல‌ ப‌ழைய‌ வீடுக‌ள் இடித்து அடுக்குமாடிக் குடியிருப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌ன. அத‌ன் பிற‌கு அங்கு குடியிருப்போரும் மாற்றிச் செல்வோரும் ப‌ற்றி அவ்வ‌ளவாகப் ப‌ரிச்ச‌ய‌ம் இல்லாது போய்விட்ட‌து. டான்ஸ் மாஸ்ட‌ர் ஒருவ‌ர் இருந்த‌ வீட்டில் க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ந‌ர்ஸ‌ரி ப‌ள்ளி ஒன்று ந‌ட‌க்கிற‌து.

ஆனால் எங்கள் தெருவின் சுவார‌சிய‌மான‌ ப‌குதியே அத‌ன் இன்னொரு ப‌குதி தான். முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முந்தைய‌ விஷ‌ய‌ம் இது.
ஏழு தெருக்க‌ள் சேர்ந்த எங்கள் செக்ட‌ர் என‌ப்ப‌டும் தொகுதியின் திட்டத்தில் ஒரு பூங்கா அல்ல‌து விளையாட்டு மைதான‌மும் இட‌ம் பெற்றிருந்த‌து. எங்க‌ள் செக்ட‌ரைத் த‌விர‌ ஏனைய‌ செக்ட‌ர்க‌ளில் அப்ப‌டி உண்டு.

ஆனால் அர‌சாங்க‌ம், எங்கள் செக்டரில் மட்டும் பூங்காவுக்கான இட‌த்தைக் குடிசை மாற்று வாரிய‌ப் ப‌ணிக்காக‌ ஒதுக்கி ஹ‌வுசிங் போர்டு குடியிருப்புக‌ள் க‌ட்ட‌ப் போவ‌தாக‌ அறிவித்த‌து. அப்போது இப்ப‌குதியில் இருந்த சிலர் இதை எதிர்த்துப் போர‌டிய‌தாக‌வும் அப்பாவும் இன்னும் சிலரும் ந‌ம‌க்குப் பூங்கா என்ப‌தையும் விட‌ ப‌ல‌ நூறு பேர்க‌ளுக்கு வீடு என்ப‌து முக்கிய‌ம் என்று ம‌றுத்துவிட்ட‌தாக‌வும் சொல்வார்க‌ள்.

ஆக‌வே என‌க்கு நினைவு தெரிந்து எங்க‌ள் தெருவில் இர‌ண்டு வ‌ர்க்க‌ ம‌க்க‌ளும் வாழ்கிறார்க‌ள். இந்த‌ப்ப‌க்க‌ம் அமைதியாக‌ வீடுக‌ளுக்குள் பூட்டிக் கொண்டு வாழும் நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ம்.

அந்த‌ப் ப‌க்க‌ம், தெருவுக்கும் வீட்டுக்கும் அதிக‌ பேத‌மில்லாம‌ல் எந்நேர‌மும் ஜேஜேவென‌ இருக்கும் ச‌ற்றே எளிய ம‌‌த்திய வ‌ர்க்க‌ம்.வெளிப்படையாகப் பார்த்தால் நிறையவே வித்தியாசம் தெரியும் இரண்டு பகுதிக்கும். செக்டரின் சங்க நிர்வாகிகள் முயற்சி எடுத்து ரோடு போடும் போது கூட சரியாய்ச் சாலையின் பாதி வரை புதிய தார் போடப்பட்ட கூத்துகளும் அரங்கேறி இருக்கின்றன. அந்தப் பக்க அம்மன் கோயில் விசேஷத்துக்காக அலறும் மைக்செட்களில் தொடங்கி தண்ணீர் லாரிப் பிரச்னை வரை பல சண்டைகளும் நடந்திருக்கின்றன.

வீட்டிலிருந்து மெயின்ரோட்டுக்குச் செல்ல‌ இட‌து புற‌மும் போக‌லாம், வ‌ல‌து புற‌மும் போக‌லாம். இட‌து புற‌ம் சென்றால் அமைதியாக‌, வேக‌மாக‌ ந‌ட‌ந்து போய் விட‌லாம். வ‌ல‌து புற‌ம் திரும்பினாலோ, "அம்மூஊ... எப்டிரா இருக்கே.." என்ற பெரிய பொட்டு வைத்த மாவுக்கார‌ம்மாவின் அழைப்பையோ, (நிறைய பேர் அக்காவின் பெயரான அம்முவைச் சொல்லித் தான் என்னையும் அழைப்பார்கள். சிறுவயதில் திருத்திக் கொண்டிருந்தேன். இப்போது விரும்பி ரசிக்கிறேன்.) "பாப்பா எங்க? அம்மாவூட்ல வுட்டுட்டியா" என்ற தண்ணி விடும் கிழவியின் குரலையோ, தண்ணீர் குடத்துடன் எதிர்ப்படும் அவரது மகளின் சினேகமான சிரிப்பையோ லேசில் கடந்து போக முடியாது.

"டேய் டேய், அவுட்டுறா நீ, போடா‌ அந்த‌ண்ட" என்றும் "டேய் அக்கா வருது, இருடா.. நீ போக்கா" என்று பெரியமனுஷத்தனம் பேசியபடி அரை டவுசர் பொடியன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்க‌ள்.

ம‌தியான‌ வேளையில் ம‌ர‌நிழ‌லில் அம‌ர்ந்த‌ப‌டி இர‌ண்டு மூன்று கிழ‌வ‌ர் கிழ‌விக‌ள் ஆடுபுலி ஆட்ட‌மோ தாய‌பாஸோ விளையாடுவார்க‌ள். இன்னொரு ப‌க்கம் ஆடுகளும் எருமைமாடுக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு நின்று கொண்டிருக்கும். சின்னதாக இருப்பதால் எருமைக் க‌ன்னுக்குட்டியைப் பார்த்து நேஹா "மே மே ..ஆடு" என்றாள் ஒரு முறை. 'ஆடு அதில்ல‌டா.. இங்கெ இருக்கு பாரு' என்று சிரித்துக் கொண்டே காட்டினார் அங்கே அமர்ந்திருந்த ஒரு அம்மாள்..

இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாய் மடிசார் மாமி ஒருவரும் வெகு நாளாக அங்கொரு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார். படுத்தபடுக்கையாயிருந்த கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த அவர் வற்றல் வடகம் போட்டு விற்பது, மாவு அரைத்துக் கொடுப்பது என்று சதா உழைத்துக் கொண்டே இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்து விட்டார். இன்னும் அதே வேலையைத் தொடர்ந்து செய்தபடி அதே தெருவில் வளைய வருகிறார் மாமி. இந்தப் பக்கத்துப் பிராமணர்கள் சிலர் வீட்டில் சமையல் வேலையும் அவர் செய்ததுண்டு.

இந்தப்பக்க‌ ம‌க்க‌ளுக்கு வீட்டு வேலைக‌ளுக்கு வ‌ருவ‌தெல்லாம் வ‌ல‌து ப‌க்க‌ப் ப‌குதிப் பெண்க‌ள் தாம். வீட்டுக்கு அருகே இருக்கும் ரேஷ‌ன் க‌டையின் ம‌ண்ணெண்ணெய்க்காகவும் அரிசிக்காகவும் மணிக்கணக்காய் வெயிலில் உட்கார்ந்திருக்கும் கூட்ட‌த்தில் நன்கு ப‌ரிச்ச‌ய‌மான‌ முக‌ங்களைக் காண்பது சில நேரங்களில் ஏதோவொரு நெருட‌ல் ஏற்ப‌டுத்தும்.

முன்னை விட‌ இப்போது அங்கு ப‌ல‌ர‌து வாழ்க்கைத் த‌ர‌ம் உய‌ர்ந்திருக்கிற‌து. சில‌ குடியிருப்புக‌ளின் முன் பைக்குக‌ளும் ஆட்டோக்க‌ளும் நிற்கின்றன. ஆனாலும் தெருவோடு உறவாடி அவர்கள் வாழும் வாழ்க்கை முறை மட்டும் பெரிதாக மாறவில்லை.

முக்கியமாய் ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
நேஹா வ‌யிற்றில் இருந்த‌போது அப்பா உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்தார். அலுவ‌ல‌க‌ம், ம‌ருத்துவ‌ம‌னை, வீடு என்று சில‌ நாட்க‌ள் அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நாள் வீட்டுக்கு வ‌ந்த‌போது வீட்டு வேலை செய்ப‌வ‌ர் வ‌ந்திருக்க‌வில்லை. எல்லாம் போட்ட‌து போட்ட‌ப‌டி கிட‌ந்த‌து. ம‌ற்ற‌ ச‌ம‌ய‌ம் என்றால் எப்ப‌டியோ செய்திருப்பேன்; அன்று சுத்த‌மாக‌ முடிய‌வில்லை. அவ‌ர் வீட்டுக்குச் சென்று அழைத்துவ‌ர‌லாமென்று போனேன். போகும் வ‌ழியிலேயே ஒரு வீட்டில் என்னை ம‌றித்த‌ பெண்ணொருத்தி "என்ன‌ அக்கா, இந்நேர‌த்துல் யாரைத் தேடி வ‌ந்தீங்க‌?" என்றாள். அவ‌ள் புதிதாக‌க் க‌ல்யாண‌மான‌வ‌ள். அவ‌ளும் அப்போது மாச‌மாக‌ இருந்தாள்.

"அம்சா வீடு எங்க‌ம்மா...வேலைக்கு வரலம்மா அவங்க இன்னிக்கு" அவரது வீடு கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லையே என்று லேசான வெட்கத்துடன் கேட்டு வைத்தேன். இதற்கு முன் எப்போதோ இந்தப் பெண்ணைப் பார்த்ததோடு சரி, பெயரும் தெரியாது; பேசியதுமில்லை.

"நீங்க‌ இங்க‌ இருங்க‌க்கா. இதோ என் த‌ம்பியை அனுப்பிப் பாத்துட்டு வ‌ர‌ச் சொல்றேன். அந்தக் குடியிருப்பின் வாசலில் ஒரு சின்ன்னக் கோயில் உண்டு. அதன் திண்டில் அமர்ந்தேன்.

அங்கு கூடி இருந்த‌ ம‌ற்ற‌ பெண்க‌ளும் அன்புட‌ன் என்னை விசாரிக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

உள்ளே சென்ற‌வ‌ள் சூடாக‌க் காப்பியுட‌ன் வ‌ந்தாள். என‌க்குத் திடுக்கிட்டுப் போய்விட்ட‌து... யாரென்றே தெரியாத‌ என‌க்கு இவ்வள‌வு அன்புட‌ன் உப‌ச‌ரிக்கிறாளே. க‌ளைப்பும், ம‌ன‌ச்சோர்வும், அச‌தியுமாய் இருந்த‌ என‌க்கு அந்த‌ அன்பு ச‌ட்டென்று க‌ண்ணில் நீர் வ‌ர‌வ‌ழைத்து விட்ட‌து. வயதிலும் படிப்பிலும் வசதியிலும் கூட‌ அவளைவிட உயர்ந்தவளாகத் தென்படும் நான் முன்பின் தெரியாத‌ யாருக்காவது இம்மாதிரி குறிப்பறிந்து அன்பு செய்திருக்கிறேனா என்று நினைக்கும் போதே அவமானமாக இருந்தது.

ரொம்ப நாள் பழகியது போல் க‌ல‌க‌ல‌வென்று பேசிக் கொண்டே போன‌து அந்த‌ப் பெண். வ‌ர‌ப்போகும் குழ‌ந்தையைப் ப‌ற்றி, க‌ண‌வ‌ரைப் ப‌ற்றி, புகுந்த‌ வீட்டுக் காமெடிக‌ள் ப‌ற்றி என்று வெகுளித் த‌னமாக‌ப் பேசிக் கொண்டிருந்த‌வ‌ளை ர‌சித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நேர‌மாக‌வே, நீங்க வீட்டுக்குப் போங்க‌க்கா, நான் அம்சாக்காவை அனுப்பி வெக்கிறேன், என்றாள்.

அம்சா வ‌ர‌வில்லை. ஆனால் இந்த‌ப் பெண்ணின் எதிர்பாராத அன்பு கொடுத்த‌ தெம்பில் வீட்டுக்குப் போய் க‌ட‌க‌ட‌வென்று எல்லா வேலைக‌ளையும் நானே முடித்துவிட்டேன்.

என்ன தான் சொன்னாலும் நமது நடுத்தரவர்க்க சுகாதாரம், நாகரிகம், privacy இலக்கணங்களை அல‌ட்சிய‌மாக‌ மீறும் இப்ப‌குதியைக் க‌ட‌க்கையில் முன்பொரு ச‌ம‌ய‌ம் அசூசைப் ப‌ட்ட‌துண்டு. ஆட்டோவில் வ‌ரும்போது, நாங்க‌ள் இந்த‌ இட‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இல்லை' என்று சொல்ல‌ விரும்புவ‌து போல் "இந்த‌ இட‌ம் தாண்டி, அந்த‌ப் ப‌க்க‌ம்" என்று சொல்ல‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட்ட‌துண்டு. அத்த‌கைய போலி கௌரவங்கள் உடைந்து சிதறிய நாள் அது. முன்னெப்போதையும் விட‌ அப்ப‌குதியை ம‌ரியாதையுட‌னும் வாஞ்சையுட‌னும் பார்க்க‌ வைத்த‌து அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் தான்.

Tuesday, March 30, 2010

பேருந்து அவனது போதிமரம்!

அய்யோ! அலாரம் அடிச்சதே தெரியாம தூங்கிட்டேனே... மணி ஏழு இருபதா?
இன்னும் பத்து நிமிஷத்துல நான் சிக்னல் கிட்ட நிக்கணும்!

அவசர அவசரமா குளிச்சிட்டு வெளிய வரேன்.

பெட்ரூமுக்கு வந்து லைட்டைப் போட்டா...வயிறெரியுது! என்னமா அச‌ந்து தூங்கறாங்க அம்மாவும் பொண்ணும்...
என் குட்டிம்மா. குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச‌ணும் போல‌ இருக்கு. தொட்டா இவ‌ சாமியாடிடுவா. 'போற‌நேர‌த்துல என் தூக்க‌த்தை கெடுக்க‌ற‌துக்காக‌வே அவ‌ளை எழுப்பி விட்டுட்டுப்போற‌. ஸாடிஸ்ட்' அது இதுன்னு.. அம்மாடி, வேண்டாம்பா.

என்ன லைட்டா சிணுங்குறாங்க பெரியமேடம்! ஓ! லைட் போட்டது தொந்தரவா இருக்காம்மா.. ஸாரி ஸாரி. இரு என் ட்ரெஸ்ஸை எடுத்துக்கிட்டுப் போயிடறேன்... இந்தா, லைட்ட‌ ஆஃப் பண்ணியாச்சு.. நிம்மதியா தூங்குமா. ஹூம்!

காலங்காத்தால புருஷன்காரன் எழுந்து வெறும் வயித்தோட ஓடறானே. ஒரு காபி போட்டுக் குடுப்போம்.. மூச்! பேசக்கூடாது..எதையாவது கிறுக்கித் தொலைச்சு நமக்கும் அந்த லிங்கை அனுப்பி வைப்பா...எத்தனை நாளைக்குத் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? போக‌ட்டும் ந‌ம்ம‌ த‌லையெழுத்து ஓட‌றோம். அவ தூக்க‌த்தை ஏன் கெடுக்க‌ணும்.

எல்லாம் இந்த‌ புது க‌ம்பெனிக்குப் போக‌ ஆர‌ம்பிச்ச‌துலேந்து தான். அதுக்கு முன்னாடி ம‌காராஜா மாதிரி ஒன்பது மணி வ‌ரைக்கும் தூங்கிட்டிருந்தேன். மேட‌ம் பாவ‌ம் சீக்கிர‌ம் எழுந்து (என்னை வசை பாடிக்கிட்டே) ச‌மைய‌ல் செஞ்சுட்டுக் குளிக்கப் போகும் போது வந்து ஒரு எத்து விடுவாங்க...

அப்போதான் எழுந்திருப்பேன். ல‌ஞ்ச் பேக் ப‌ண்றதும் பாப்பாவை எழுப்பி அவங்க அம்மா வீட்ல கொண்டு விடறதும் தான் என் வேலை. அது ரொம்ப‌க் க‌ஷ்ட‌ம் மாதிரிக் கொஞ்ச‌ம் சீன் போட்டுக்கிட்டே செஞ்சுட்டிருந்தேன்.

ஊருக்கு வெளிய‌ இருக்க‌ ஐடி பார்க்ல ஜாயின் ப‌ண்ண‌துலேந்து எல்லாம் மாறிப்போச்சு.

அப்பாடி ஒரு வழியா பஸ் வந்துடுச்சு.. கடைசி சீட்ல மட்டும் தான் இடம் இருக்கு..உக்காந்தாச்சு.. போய்ச்சேர ஒண்ணரை மணிநேரம் ஆகுமே, விட்ட இடத்திலேந்து தூக்கத்தைக் கன்டினியூ பண்ணலாம்னா நமக்கு என்னமோ அந்த மாதிரி தூக்கமே வரமாட்டேங்குது. தூங்குனா குறைஞ்சது மூணு நாலு மணி நேரம் வேணும். வீட்ல இருக்காளே ஒரு குட்டிப் பிசாசு அஞ்சு நிமிஷம் கெடச்சாலும் குட்டித் தூக்கம் போட்டுடுவா.

முன்னாடி சீட்டுங்க நிறைய பொண்ணுங்க தான் ஜாஸ்தி. ஹேய் தப்பா நினைக்காதம்மா.. எல்லாம் சிஸ்டர்ஸ் அன்ட் ஆன்ட்டீஸ்!

எல்லார் கையிலையும் ஹேன்ட்பேக், ஒரு டப்பர்வேர். நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கறாங்க. இவங்கல்லாம் இன்னும் முப்பது கிலோமீட்டார் முன்னாடிலேந்து வராங்க.

பாவம் நடுராத்திரியே எழுந்து குளிச்சு, வேலையெல்லாம் முடிச்சு சமைச்சு எடுத்துக்கிட்டு ...ஹைய்யோ! நினைக்கும் போதே தலை சுத்துது...

முதல்நாள் பாத்தப்போ முக்காவாசிப் பொண்ணுங்க‌ தலையை விரிச்சு விட்டிருந்தாங்க.. அரை இருட்டில பாத்துட்டுப் பயந்துட்டேன். ஆஃபீஸ் கிட்ட பஸ் வரும் போது திடுதிப்னு எழுந்து அவசர அவசரமா பேகத் தொறக்கறாங்க‌. சீப்பை எடுக்கறாங்க. கிளிப்பை எடுக்கறாங்க...ரென்டு நிமிசத்துல தலையை வாரி..ஹேர்ஸ்டைல் ஓவர். ஓ!..குளிச்ச தலையைக் காய வைக்கக்கூட நேரமில்லாம ஓடி வர்ராங்க. பேசாம‌ அழ‌கா தலையை பாப் வெட்டிக்க‌லாம்; நேர‌மும் மிச்சம், வேலையும் மிச்சம்.

என்னடா பொண்ணுங்களைப் பத்தியே பேசறானேன்னு பாக்கறீங்களா? என்ன பண்றது, கம்பெனியில பாதிக்கு மேல பொண்ணுங்க தான். அப்புறம் பல் தேய்ச்சு குளிச்சு ட்ரஸ்ஸ மாட்டிட்டு வர்றதுக்கே நாம அலுத்துக்கறோமே, வீட்டு வேலங்களையும் முடிச்சு நமக்கு முன்னாடி பஸ்ல உக்காந்திருக்காங்களேன்னு இன்னொரு ஆச்சரியமும் அட்மிரேஷனும் தான்.
வேறென்ன?

நல்லவேளை அவளுக்கு ஆஃபிஸ் பக்கத்துல தான். இவ்ளோ தூரம்லாம் அவளால ட்ராவல் பண்ண முடியாது.

என்ன இது சத்தம்.. எவண்டா அவன்? பக்கத்து சீட்ல ஒரு பையன். காதுல என்னமோ மாட்டிருக்கானே..ஹியரிங் எய்டா? ஊமையோ...ஏதாவது வலியில கத்தறானோ? அடச்சே.. ஐபாட்!
மறுபடியும் ஆரம்பிச்சான்.
"என்னாவ.. ளே அடி என்னா வளேஏஏ " குரல் ஏகப் பிசிறல். இதைக் கேக்கணும் அவள். நானே சூப்பராப் பாடறேன்னு ஒத்துக்குவா.

ஏன் இப்டிக் க‌த்த‌றான். தாங்க‌ முடிய‌ல‌..தூக்க‌க் க‌ல‌க்க‌ம் வேற‌..

யாருக்குமே கேக்க‌லியா? எல்லாரும் ஒண்ணு ந‌ல்லாத் தூங்க‌றாங்க‌, இல்ல‌ இவ‌னை மாதிரியே காதுல‌ மாட்டி இருக்காங்க‌. நான் ம‌ட்டும் தான் மாட்டிக்கிட்டேன்!

ஹப்பாடி ஒரு வழியா நிறுத்திட்டான்..
"மும்பே வாஅ என் அம்பே வா..ஊஊ" அய்யோ! அடுத்ததா...கடவுளே
உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்கிக்கறேன்.


அடுத்த ஸ்டாப்பிங்கில் நாலு பேர் ஏற்ராங்க‌. நேரா இங்க தான் வ‌ராங்க‌..
"டேய் டேய், வால்யுமைக் குறைடா.."
க‌ண்ணைத் திற‌ந்து திருதிருன்னு முழிக்கிறான். "அவ்ளோ ச..த்..த‌மாவா கேட்டூதூ?"

"இல்ல‌ பாஸ்.. நானும் ட்ரைவ‌ரும் ம‌ட்டும் தான் கேட்டுக்கிட்டு இருந்தோம்"

"ஹீஹீ"

ஆச்சு.. காலையில‌க் க‌தை இப்ப‌டின்னா, சாய‌ங்காலம் இன்னொரு க‌தை...

இந்த‌ப் பொண்ணுங்க‌ இருக்காங்க‌ளே.. த‌ற்காத்துத் த‌ற்கொண்டார் பேணுவ‌து எப்ப‌டின்னு அவ‌ங்க‌ கிட்ட‌க் க‌த்துக்க‌ணும்.

ஆற‌ரை ம‌ணிக்குப் ப‌ஸ்ல‌ ஏறினா ஏழு ம‌ணிக்கு ஆளுக்கு ஒரு சின்ன‌ ட‌ப்பாவைத் திற‌க்க‌றாங்க‌.. இந்தா இந்தா ந்னு அவ‌ங்க‌ளுக்குள்ள‌ ஷேர் ப‌ண்ணிக்கிட்டு முறுக்கு பிஸ்க‌ட், ப‌ழ‌ம்னு ஏதோ ஒண்ணு...

'வீட்ல மேடத்தையும் இந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கிட்டுப் போக‌ச் சொல்ல‌ணும்.. நீட்டி முழக்கி நியாயம் பேசச் சொல்லு, பேசுவா... இதெல்லாம் தெரியாது. வீட்டுக்கு வ‌ரும்போதே பசியோட‌ ட‌ய‌ர்டா வ‌ர‌ வேண்டிய‌து. ந‌ம்ம‌ கிட்ட‌ எரிச்ச‌லைக் காமிக்க‌ வேண்டிய‌து'

நம்ம முன்சீட் அம்மணிகள் சாப்டுட்டுத் துப்பட்டாவை மூஞ்சில போத்திட்டுத் தூங்கிட்டாங்க‌. ஒரு அரை ம‌ணி நேர‌ம் போயிருக்கும். ஒரு மேட‌ம் எழுந்து ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌வ‌ர‌ங்க‌ளை எழுப்ப‌றாங்க‌..

என்ன இது, இவ‌ங்க‌ ந‌ம‌க்கும் அப்ப‌ற‌ம் போக‌ணுமே..எங்க‌ இற‌ங்க‌ப் போறாங்க‌ன்னு பாத்தா, த்தோடா.. ஏதோ க்ரீம் எடுத்துக் கையில‌ முக‌த்துல‌ எல்லாம் த‌ட‌விக்க‌றாங்க‌..

இப்ப‌ என்ன‌டா மேக்கப் வேண்டி இருக்குன்னு நான் கூட‌த் த‌ப்பா நின‌ச்சுட்டேன். கொஞ்ச நேர‌ம் க‌ழிச்சுத் தான் உண்மை புரிஞ்சுது.. பேயாப் ப‌டை எடுத்து வருது பெரிய பெரிய கொசுக்கள். அய்யோ... நாள் பூரா ப‌ஸ் ஸீட்க‌ளுக்கு அடியில ஒளிஞ்சு கெட‌ந்த‌ கொசு எல்லாம் வ‌ந்து பிச்சுப் பிடுங்குது. கவலையே இல்லாம‌ தூங்குறாங்க‌ முன்சீட் ம‌காராணிக‌ள். ஆஹா. அது க்ரீம் இல்ல‌டா சோச‌ப்பு, ஓடோமாஸ்!
இந்தப் பொண்ணுங்களோட முன் ஜாக்கிரதை உணர்வு தாங்கலடா சாமி!

வீட்டுக்குப் போய் சாப்டுட்டு நிம்ம‌தியா மேட்ச் முன்னாடி உக்கார‌ணும்னு நினைக்கும் போதே இந்த‌ப் பொண்ணுங்க‌ என்ன‌ ப‌ண்ணுவாங்க‌ன்னு நினைக்காம‌ இருக்க‌ முடிய‌ல. ஓடிப்போய்க் குழந்தைங்களைக் கவனிக்கணும். சமையல் பண்ணனும். வீட்ல புருஷன்காரன் ஏதாவது உதவி பண்ணுவானா தெரியாது...

ம்க்கும்.. நம்ம என்ன பண்றோம்? அவள் நாலு நாள் கத்தினா ரெண்டு நாள் ஹெல்ப் பண்றேன். அதுவும் சலிச்சுக்கிட்டே. சே... தப்புடா சோசப்பு.. இனிமே அவளுக்குச் சரிக்குச் சரியா வீட்ல வேலை செய்யணும்.

அட்லீஸ்ட அவளோட "டார்ச்ச‌ர் லின்க்ஸ்" வரவையாச்சும் குறைக்கலாம்னு ஒரு சுயநலம் தான்...பார்ப்போம்!

Friday, March 26, 2010

உதிரிப்பூக்கள்

அம்மாவுக்குக் கேடரக்ட் ஆப‌ரேஷ‌ன் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. வெளியே காத்திருந்த‌ போது அருகில் அம‌ர்ந்திருந்த‌ ஒரு பெண்ம‌ணியிட‌ம் பேச்சுக் கொடுத்தேன். அவ‌ர் க‌ண‌வ‌ருக்கு மாறுக‌ண் சிகிச்சையாம். ஆந்திராவைச் சேர்ந்த அவர் நான்கு முறை செய்து தோல்விய‌டைந்து ஐந்தாவ‌து முறையாக‌ இங்கே செய்து கொள்ள வ‌ந்திருக்கிறார்க‌ள். ஆச்சரிய‌ப்ப‌ட்டு ஏன் நான்கு முறை அப்ப‌டியான‌தென்று கேட்ட‌த‌ற்கு க‌ர‌க‌ர‌வென‌ அழ‌த்தொட‌ங்கி விட்டார்.

கொச்சையான இந்தியில் அவர் பேசியதைக் கஷ்டப்பட்டுத் தான் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. வசதியான முஸ்லிம் குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள். இரு ம‌க‌ள்க‌ள் ஒரு ம‌க‌ன். மூத்த‌ ம‌க‌ளைக் க‌ல்லூரி ப‌டிப்பு முடித்த‌வுட‌னே பெரும் ப‌ண‌க்கார‌ இட‌மொன்றில் க‌ட்டிக் கொடுத்திருக்கிறார்க‌ள். மிகப்பெரிய வீடு, அரசியல் செல்வாக்கு, வீடு நிறைய வேலைக்காரர்கள் என்று பிரமித்துப் போய் மகளைக்கொடுத்திருக்கிறார்கள்.

திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌ பிற‌கு பெண்ணை இவ‌ர்க‌ள் பார்க்க‌வோ அவ‌ளை இங்கு அனுப்ப‌வோ த‌டை விதித்து விட்டார்க‌ளாம். ஃபோன் கூடப் பேச முடியாத நிலை. ஏழுமாத‌ க‌ர்ப்பிணியாக‌ இருந்த‌போது பார்த்த‌ ம‌க‌ள் ப‌ய‌ந்து போய் சுத்த‌மாய் உருமாறிப் போயிருந்தாளாம். வீட்டில் வேலைக்காரி போல் நடத்துகிறார்களாம்.

என்னவென்று விசாரிக்கப் போய்த் தொடர்ந்து பல பிரச்னைகளுக்குப் பின் அங்கு வாழ விரும்பாத மகளின் கோரிக்கையை ஏற்று விவாகரத்துக்கு முயன்றிருக்கிறார்கள். மாப்பிள்ளையின் குடும்பம் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் காவல் துறையிலும் நீதிமன்றத்திலும் நல்லவிதமாக நடித்துப் பெண்ணை மீண்டும் அழைத்துப் போய்விட்டார்களாம். இப்போது மீண்டும் அவள் சிறையில். உற்றார் யார் சென்று பார்த்தாலும் அடையாளம் தெரியாதது போல் பேசுகிறாளம் அவள். ஒரு வயதுப் பேரக்குழந்தையைக் கூட இன்னும் கண்ணால் பார்க்கவில்லை, "என் பொண்ணுக்கு ஏதோ மருந்து வெச்சு எங்களையே தெரியாத மாதிரி பண்ணிட்டாங்க" என்று ஏதேதோ சொல்லி அழுதார் அந்த அம்மாள்.

மகள் நினைவால் சதா அழுது கொண்டே இருப்பதால் தான் ஒவ்வொரு தடவை கண் சிகிச்சையும் பயனளிக்காமல் போகிற‌தென்று அவர் சொன்ன போது என்ன சொல்வதென்றே தெரியாமல் அவர் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தேன். முப்ப‌து ல‌ட்ச‌ம் செல‌வு செய்தார்க‌ளாம் ம‌க‌ள் திரும‌ண‌த்துக்கு.
அடுத்த‌ ம‌க‌ள் என்ன‌ செய்கிறாள் என்று கேட்டேன். கல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருப்ப‌தாக‌ சொன்னார். "அவ‌ளை மேற்ப‌டிப்புப் ப‌டிக்க‌ வைத்து நல்ல‌ வேலைக்கு அனுப்புங்க‌ள்" என்றேன்.

"அது தான் எல்லாரும் சொல்கிறார்க‌ள். அப்ப‌டித் தான் செய்ய‌ வேண்டும். இவளையும் அவ‌சர‌ப்ப‌ட்டுக் க‌ல்யாண‌ம் செய்து கொடுக்க‌க்கூடாது" என்று த‌ன‌க்குத் தானே சொல்வ‌து போல் சொல்லிக் கொண்டார்.
'ஹும்..ஒரு க‌ண் கெட்ட‌ பின் சூர்ய‌ ந‌ம‌ஸ்கார‌ம். இன்னொரு க‌ண்ணுக்காவ‌து ந‌ல்வ‌ழி பிற‌க்க‌ட்டும்!'

________________________


"அங்காடித் தெரு" - 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...' என்ற பாட்டை டிவியில் பார்த்தேன்.வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்தைப் பார்த்தே ஆக‌ வேண்டும் என்று ஒரு வெறி வ‌ருகிற‌து. இந்த‌ யதார்த்த‌ நாய‌க‌ர்க‌ளின் காத‌லில் க‌சிந்துருகுவ‌து தான் ம‌ன‌துக்குப் பிடிக்கிற‌து.

டிசைன‌ர் ஆடைக‌ளில், ஆர்டிஃபிஷிய‌ல் லைட்டிங்கில், ஏ. ஆர். ர‌ஹ்மானின் ஊளை‌யின் பின்ன‌ணியோடு பின்ம‌ண்டையைச் சொறிந்து கொண்டு (ஸாரி சார், என‌க்கு உங்க‌ இசை பிடிக்கும்..குர‌ல் நோ!) என்ன‌ காத‌ல் வேண்டிக்கிட‌க்கிறது? மண்ணாங்கட்டி! (காதல்னா என்னனே தெரியாத, இல்லத் தெரிஞ்சுக்கற ஆர்வம் மட்டுமே இருந்த‌ விடலைப் பருவத்தில் இதெல்லாம் ரசித்தது உண்மை தான். இப்போ வயசாகிடலை, கொஞ்சூண்டு அறிவு வந்துடுச்சு!)

________________________


ராக‌வ‌ன் அவ‌ர்க‌ளும் த‌மிழ்ந‌தி அவ‌ர்க‌ளும் "நான் ச‌ந்தித்த‌ க‌தை சொல்லிக‌ள்" தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைக்க‌வில்லை என்று உரிமையுட‌ன் காதைத் திருகி இருந்தார்க‌ள். இன்ப அதிர்ச்சியாக இருந்தது! ராக‌வ‌ன் அருமையாக‌ அவ‌ர‌து அனுப‌வ‌த்தைப் ப‌திந்திருக்கிறார். த‌மிழ்ந‌தி அவ‌ர்க‌ளின் இடுகையை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன் என்று சொல்ல‌வும் வேண்டுமோ?
உமாருத்ரன் (Personal Pages) அவ‌ர்க‌ளும் காம‌ராஜ் (அடர்கருப்பு) அவ‌ர்க‌ளும் அடித்து ஆடியிருக்கிறார்க‌ள்.
சுட்டிகளுக்கு இட‌ப்ப‌க்க‌ம் பார்க்க‌வும்.
__________________________


கிரிக்கெட் என்றாலே வெறுத்து ஓடுகிற எனக்கு இந்த ஐபிஎல் கூடுதல் வெறுப்பைத் தருகிறது. ஏதோ சொந்த நாட்டுக்காக ஆடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. காசுக்கு ஏலமெடுத்தவர்களுக்காக ஆடுவதற்கும் கூலிக்கு மாரடிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று சத்தியமாகப் புரியவில்லை. ஹும்ம்.. சரி சரி. கிரிக்கெட் வெறியர்கள் சண்டைக்கு வரவேண்டாம். பார்த்துத் தொலையுங்கள். - சேச்சே! வேண்டாம்...தொலையாமல் பாருங்கள்!

Wednesday, March 24, 2010

நான் சந்தித்த கதை சொல்லிகள்

நேஹாவுக்குப் புத்தகங்கள் மீது ரொம்ப ஆர்வம் வந்து விட்டது. இத்தனைக்கும் (விரும்பினாலும்) இதற்கு முன் புத்தகங்களை வைத்துக் கொண்டு அவளிடம் கதை சொன்னதெல்லாம் இல்லை.

இப்போது நான் வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலையாக ஒரு புத்தகத்தைத் தூக்கி வந்து "அம்மா, வா.. படிச்சு, படிச்சு..." என்று கேட்கிறாள். ஒன்று, நானாக "இது என்ன அது என்னா" என்று படங்களைக் கை காட்டிக் கேட்க அவள் - "கோகடைல், மங்கி, பட்டர்ணை (பட்டர்ஃபளை!), சின்பன்ஸி" என்று சொல்வாள். மிருகங்கள், பூச்சிகள், காய்கறிகள் பெயரெல்லாம் சொல்கிறாள். :)

இல்லாட்டி பையரைச் சொல்லி எங்க இருக்கு? என்று கேட்டால், "இங்க" "இங்க" என்று கை காட்டுகிறாள்! Thanks to Mullai who introduced the right books to Neha. தத்தி நடக்கும் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு என்ன புத்த்கம் வாங்கலாம் என்று முல்லையிடம் தான் கேட்கவேண்டும்.

ஆனால் கதை மட்டும் அவள் அப்பா சொன்னால் தான் கேட்கிறாள். சிலருக்குத் தான் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கலை அழகாக, இயல்பாகக் கைவருகிறது. நாம் எல்லாருமே சிறுவயதில் கதைகேட்பதில் ஆர்வம் மிக்கவர்களாகவும் கதை சொல்பவர்களால் ஈர்க்கப்பட்டு அவர்களை விரும்புபவர்களாகவும் தான் இருந்திருப்போம்.

சின்னவயதில் எனக்கு வீட்டில் நிறைய கதை சொல்லிகள் இருந்தார்கள். எங்கள் மாமி, தினமும் காலையில் பள்ளிக்குச் செல்லும் முன்பு சாப்பாடு ஊட்டிக் கொண்டே சொன்ன கதைகள் ராமாயணம், கண்ணன் கதைகள், நீதிக் கதைகள். எபிசோட் எபிசோடாகத் தினமும் கொஞ்சம் சொல்வார்கள்.
அப்போது குழந்தைத்தனமாகக் அந்தக் கதைகளையும் சூழல்களையும் கற்பனை செய்து பார்த்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.


அடுத்த‌து அக்கா. பிர‌மாத‌மான‌ க‌தை சொல்லி இவ‌ர். பெரிய‌ம‌னுஷ‌த்த‌ன‌த்துட‌ன் இர‌வு என‌க்கு உண‌வூட்டித் தூங்க‌ வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட‌ இவ‌ர் ப‌ட்ட‌ பாட்டைச் சொல்லி முடியாது. ஏதாவ‌து க‌தைச் ஒன்னால் தான் சாப்பிடுவேன் என்று அட‌ம் பிடிக்கும் என‌க்காக‌ வித‌வித‌மாக‌க் க‌தைக‌ள் புனைவாள். அக்காவிட‌ம் மிக‌ப் பிடித்த‌து அவ‌ர‌து அபார‌ ந‌கைச்சுவை உண‌ர்வும், ப‌ழைய‌ க‌தைக‌ளைக் கூட‌ப் புதுவித‌மான‌ சேர்க்கைக‌ளுடன் சிரிக்க‌ச் சிரிக்க‌ச் சொல்லும் வித‌மும் தான்.
ஆனால் கடைசி கவளத்தை நான் வாங்கியதும், பட்டென்று நிறுத்தி விட்டு, "ஓடு, கதை அவ்ளோ தான்" என்று போய்விடுவாள். பின்னாலேயே போய் மிச்சக் கதைக்காகத் தொங்க வேண்டும்!

முட்டாள் ராஜா (Emperor's new clothes)க‌தையை இவ‌ர் அருமையான‌ உரையாட‌ல்க‌ளோடு விலாவ‌லிக்க‌ச் சிரிக்கும்ப‌டி சொன்ன‌து இன்னும் நினைவிலிருக்கிற‌து.

தூங்கும் போது க‌தை சொல்லும் வேலை அம்மாவுடைய‌து. கதைப் புத்தகத்தில் படிப்பது போலவே நிதானமாக, மென்மையான மாடுலேஷனுடன், பெரியவர்களிடம் பேசும் அதே சின்சியாரிட்டியுடன் கதை சொல்லும் அம்மாவின் பாணியிலும் தனி ஈர்ப்பு உண்டு. புராணக்கதைகள், நீதிக்கதைகள் எல்லாம் அம்மாவின் ஸ்பெஷாலிட்டி.

அப்பா பெரும்பாலும் பாட்டுக்க‌ள் தான் பாடுவார். உட்கார‌ வைத்துச் சொன்ன‌ இரு க‌தைக‌ள் "குர‌ங்கு பாய‌ச‌ம் தின்ற‌ க‌தையும்" "காட்டான் ஒருவ‌ன் ச‌ந்தியாவ‌ந்த‌ன‌ம் செய்த‌ க‌தையும்". அநியாய நையாண்டி டைப்!அவ்விர‌ண்டையும் இங்கு நிச்ச‌ய‌ம் ப‌கிர‌ முடியாது!

நானாக முத‌ன் முத‌லில் க‌தைப்புத்த‌க‌ங்க‌ள் வாசிக்க‌த் தொட‌ங்கிய‌து ஐந்து வ‌ய‌தில். அப்போதெல்லாம் மாதாமாத‌ம் என‌க்குக் காய்ச்ச‌ல் வ‌ந்து விடும். ம‌ருந்து கொடுத்து ப‌டுக்கைக்கு அருகில் கொள்ளைக் க‌தைப்புத்த‌க‌ங்க‌ளை நிறைத்து விட்டு அவ‌ர‌வ‌ர் வேலையைப் பார்க்க‌ப் போய்விடுவார்க‌ள் -"தூக்க‌ம் வ‌ர்ற‌வ‌ரைக்கும் தான் ப‌டிக்க‌ணும்" என்ற‌ க‌ட்ட‌ளையோடு. என‌க்கெங்கே தூக்க‌ம் வ‌ர‌ப்போகிற‌து?

அந்த‌ப் புத்த‌க‌ங்க‌ளெல்லாம் அக்காவும் அண்ண‌னும் ப‌டித்துக் கிழிந்து வீட்டிலேயே தைத்தும் வைக்க‌ப்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ள். ருஷ்ய‌ ப‌திப்ப‌க‌த்துக் க‌தைப்புத்த‌க‌ங்க‌ள், ர‌த்ன‌பாலா, அம்புலிமாமா முத‌லிய‌ன‌. புதிதாக‌ என‌க்கென்று க‌தைப் புத்த‌‌க‌ங்க‌ள் அதிக‌ம் வாங்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லாதிருந்த‌து. மிஷா ம‌ட்டும் வாங்கிக் கொண்டிருந்த‌ ஞாப‌க‌ம். கோகுலமும் சிலகாலம் வாங்க‌ப்ப‌ட்ட‌து.

படிக்க ஆரம்பித்தவுடன் கதை சொல்வதை நிறுத்தி விட்டார்கள். "அதான் சதா கவுந்தடிச்சுக் கதை படிக்கிறியே. உனக்குத் தனியா வேற சொல்லணுமா.. ஓடிப்போ!"


சின்ன‌ஞ்சிறுவ‌ர்க‌ள் ச‌ம‌யோசிதமாய் சூன்ய‌க்கார‌ர்க‌ளையும், ம‌ந்திர‌வாதிக‌ளையும் வெற்றி கொள்ளும் க‌தைக‌ள், ஏழை ம‌னிதனின் திடீர் அதிர்ஷ்டத்தைப் பார்த்துப் பொறாமை கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்ளும் ப‌ண‌க்காரன் க‌தைக‌ள், எத்த‌னுக்கு எத்த‌ன் க‌தைக‌ள், முல்லா க‌தைக‌ள், அச‌ட்டுச் சிறுவ‌ன் என்று தூற்ற‌ப்ப‌ட்ட‌ க‌டைசிச் சிறுவ‌ன் ராஜ‌குமாரியை ம‌ண‌ப்ப‌து, பீர்பால், தெனாலிராம‌ன், போன்ற‌ விக‌ட‌க‌வி க‌தைக‌ள். இவையெல்லாம் ப‌த்து வ‌ய‌து வ‌ரை ப‌டித்த‌ க‌தைப் புத்த‌க‌ங்க‌ளில் விரும்பி விரும்பிப் ப‌டித்த‌வை. பிடித்த‌ க‌தைக‌ளை மீண்டும் மீண்டும் படிக்கும் வ‌ழ‌க்க‌மும் இருந்த‌து.

பிற‌கு ஏழெட்டு வ‌ய‌துக்கு மேல் தான் ஆங்கில‌ப் புத்த‌க‌ங்க‌ள் ப‌டிக்க‌த் தொட‌ங்கினேன். சில‌ கால‌ம் வ‌ரை இர‌ண்டுக்கும் பேத‌ம் பெரிதாக‌த் தெரிய‌வில்லை. க‌தைக‌ள் சுவார‌சிய‌மாக‌ இருக்க‌வேண்டும். ப‌ட‌ங்க‌ள் ஈர்க்க‌ வேண்டும்! அவ்வ‌ள‌வு தான் வேண்டிய‌து.

ஆங்கிலத்தில் படித்ததும் பெரும்பாலும் ருஷ்யக் கதைப் புத்தகங்கள் தாம். சில புத்தகங்கள் இரு மொழியிலும் வீட்டில் இருந்திருக்கின்றன. பள்ளியிலும் அது தான் பரிசளிப்பார்கள்.

The elephant என்றொரு க‌தைப் புத்த‌க‌ம். வெகுநாட்க‌ளாக‌ உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் இருக்கும் த‌ன் ஆறு வ‌ய‌து ம‌க‌ள் கேட்டாள் என்ப‌த‌ற்காக‌ ஒரு யானையையே வீட்டுக்குள் அழைத்து வ‌ந்து விடுவார் அவ‌ள‌து அப்பா. அத‌னோடு ஒரு நாள் விளையாடிய‌துமே அவ‌ள் பூர‌ண‌ குண‌ம‌டைந்து விடுவாள். அப்பாவின் அன்பும், குழ‌ந்தை ம‌ன‌தும் அழ‌காக‌ப் ப‌ட‌ம்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ அந்தக் க‌தையை எழுதிய‌வ‌ர் அலெக்சாந்த‌ர் குப்ரின். இவ‌ர் பெரிய‌வ‌ர்க‌ளுக்காக‌வும் க‌தைக‌ள் எழுதியிருக்கிறார். "செம்ம‌ணி வ‌ளைய‌ல்" என்ற‌ அந்த‌த் தொகுப்பைப்ப‌டித்த‌ போது இந்த‌க் க‌தையும் ம‌ன‌தில் நிழ‌லாடிக் கொண்டே இருந்தது. அப்புறம் When daddy was a little boy. http://deepaneha.blogspot.com/2009_07_01_archive.html

ப‌த்து வ‌ய‌துக்கு மேல் அறிமுக‌மான‌து எனிட் ப்ளைட‌ன். (Enid Blyton)ஓ! இவ‌ர் உண்மையில் ஒரு சூன்ய‌க்காரி தான். கதைகள் என்னும் மாயவலையின் மூலம் சிறுவர்களை மீளவே முடியாமல் கட்டிப் போட்டு விடுபவர். இப்போது இவ‌ர‌து சில‌ க‌தைக‌ளைப் ப‌ற்றி ஆய்ந்து விம‌ர்சித்து, அதில் இருக்கும் பிற‌ழ்வுக‌ளையும், பிற்போக்குத்தனங்களையும் புரிந்து கொண்டாலும் சிறுவ‌ய‌தில் இவ‌ர் ஒரு தேவ‌தையாக‌வே தெரிந்தார்.

கையிலெடுத்தால் கீழே வைக்கவே முடியாத வகையில் இனிக்க இனிக்கக் கதை சொல்லும் பாங்கு இவருடையது. "The enchanted wood" "The folk of th faraway tree" என்ற புத்தகங்கள் அற்புதமான கற்பனைகள் நிறைந்தவை.

ஓர் அட‌ர்ந்த‌ காட்டுக்கு அருகே புதிதாக‌க் குடிவருகிறார்க‌ள் மூன்று சிறுவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து பெற்றோரும். சிறுவ‌ர்க‌ள் ஒரு நாள் காட்டுக்குள் விளையாட‌ச் செல்லும் போது அங்கே ஒரு வித்தியாச‌மான‌ மிக‌ப்பெரிய‌ ம‌ர‌த்தைக் காண்கிறார்க‌ள். அந்த‌ ம‌ர‌த்தில் ஆங்காங்கே பொந்துக‌ளில் வித‌வித‌மான‌ விந்தை ம‌னித‌ர்க‌ள் வாழ்கிறார்க‌ள். ம‌ர‌த்தின் உச்சியில் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு புதிய மாய‌உல‌க‌ம் ஒன்று வ‌ரும்.
ரசித்துப் படித்த புத்தகங்கள் அவை.
அதே போல் அவரது School series ம் Famous five ம் கூட விரும்பிப் படித்தவை.

வாசிப்பில் சிறுவயதில் இருந்த ஆர்வத்தையும் முனைப்பின் அளவையும் வளர வளர ஏனோ sustain செய்ய முடியாமல் போய்விட்டது. ‌சில காலத்துக்குப் பின்பு வாசிப்பில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டு விட்டது.

அதுவும் தவிர light reading என்று சில புத்தகங்கள் (Archies comics, கொஞ்சம் Mills n Boon(!)) Harry Potter) வாசிக்கத் தொடங்கி அவற்றில் ரசனையைத் திருப்பிக் கொண்டும் சென்றாகி விட்டது. ரமணிசந்திரனின் சில கதைகளை ரசித்துப் படித்ததும் உண்டு!

ஆனால் Horror novels ஓ, சிட்னி ஷெல்டன் வகை நாவல்களையோ தொட்ட கையால் தொட்டதில்லை. அதே போல் ராஜேஷ் குமார் நாவல்கள் மீதும் சொல்லத் தெரியாத வெறுப்பு. (அவரது ரசிகர்கள் பொறுத்தருள்க. எனக்குப் பிடிக்காது என்று தான் சொன்னேன்!)

க்ரைம் நாவ‌ல்களே பிடிக்காத என்னை மாற்றியது அகதா க்ரிஸ்டி. Queen of crime என்று புகழப்படும் இவர் குற்றம் நடந்த விதத்தை விலாவரிப்பதையும் விட அதிகமாய்க் குற்றம் நடந்த சூழலில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், அதன் பின்புலத்திலுள்ள மனவியல், கண்டுபிடிப்பதிலுள்ள நுணுக்கங்கள், ஆகியவற்றை மிக அழகாக எழுதுவார். ஹெர்குலே பைரோ என்ற குள்ளமான வழுக்கைத்தலை டிடெக்டிவ் மனதுக்கு மிகவும் நெருக்கமானவராகி விடுவார்.

நாவல்களை விட சிறுகதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் சிறுகதைகளின் முன்னோடிகளான மாப்பஸான், செகாவ், மற்றும் ஓ. ஹென்றி ஆகியோரது கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். இன்னும் படிக்கவும் விரும்புகிறேன்.

சிலருடைய வாசிப்பனுபவங்களைப் படிக்கும் போது பிரமிப்பும் நிறைய மிஸ் செய்து விட்டோமே என்றும் தோன்றுகிறது. அதுவும் தமிழ் இலக்கியம். வ‌லையுல‌கின் மிக‌ச்சிற‌ந்த இல‌க்கிய‌ வாச‌க‌ர்க‌ளின் வழிகாட்டுதலோடு தான் கொஞ்சம் கொஞ்சமாக‌ ஆரம்பிக்க வேண்டும்.

பெரியவர்களாகி விட்டால் கதைகள் படிப்பதைக் குறைத்துக் கொண்டு Non fic தான் நிறையப் படிக்க வேண்டும் என்று சிலருக்கு எண்ணம் இருக்கிறது. எனக்கென்னவோ அது சரியான கருத்தாகப் படவில்லை. சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வரையறைகள் இல்லை.

சொல்லாடல்கள் சிறப்பாக அமைவது ஒரு படைப்புக்கு அழகு தான். அதே சமயம் எளிய மொழியில் இருந்தாலும் உண்மையோடும் யதார்த்தத்தோடும் ஒட்டி நிற்கும் படைப்புகளும் 'உண்மையிலேயே சொல்ல ஏதாவது இருக்கும்' படைப்புகளும் தான் மிகவும் ஈர்க்கின்றன.

Back to Neha, இப்போது புத்தகம் கையுமாகத் திரிபவள் பெரிய படிப்பாளியாகா விட்டாலும் கூட திசை தவறிவிடாமல் நல்ல நூல் ரசனையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.
இவ்வளவு நேரம் என் ரம்பத்தைப் பொறுமையுடன் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

உங்களில் பலரது கதைகேட்ட அனுபவமும் வாசிப்பு அனுபவமும் என்னுடையதைக் காட்டிலும் பலமடங்கு சிறப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தங்களது அனுபவங்களைப் பகிர‌ நான் அன்புடன் அழைப்பது:

உமாருத்ரன்
அம்பிகா
முத்துலெட்சுமி
நிலாரசிகன்
காமராஜ்

Tuesday, March 23, 2010

பேருந்தில் காத‌ல்!

இந்தத் த‌லைப்பில் தொட‌ர்ப‌திவு எழுத‌ச் சொல்லி அழைத்திருக்கிறார் ச‌ங்க‌வி!
http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html


ச‌ரியாப் போச்சு!... நான் காத‌லில் விழாத‌ ஒரே இட‌ம் அது தான்.
ஏனென்றால் பேருந்தில் ப‌ய‌ண‌ம் செய்த‌து மிக‌க்குறைவு. நான் ப‌டித்த‌து வீட்டுக்கு அருகிலேயே இருந்த‌ ப‌ள்ளி. ஒன்ப‌தாம் வ‌குப்பு முத‌ல் ப‌ன்னிர‌ண்ட‌ம் வ‌குப்பு வ‌ரை சைக்கிள் தான்.
க‌ல்லூரியோ வெளியூரில் விடுதியில் த‌ங்கிப் ப‌டித்த‌தால் பேருந்துப் ப‌ய‌ண‌ம் எங்காவ‌து வெளியில் செல்ல‌த்தான்.

ஆனால் வேலைக்காக‌ச் சில‌ கால‌ம் பேருந்தில் சென்ற‌ போது நான் சந்தித்த மறக்க முடியாத அந்த இருவரைப் பற்றிச் சொல்கிறேன்.

அந்த‌ப் பெண்ணுக்கு இருபது இருபத்திரண்டு வ‌ய‌திருக்க‌லாம். மாநிறமும், சுருட்டை முடியும் குறுகுறு கண்களுமாய் அழ‌காக‌ இருப்பாள். நான் ஏறும் நிறுத்த‌த்துக்கு அடுத்த‌ நிறுத்த‌த்தில் ஏறுவாள்.

என் நிறுத்த‌த்துக்கு முன்பாக‌வே டெர்மின‌சில் ஏறி பின்சீட்டில் அவ‌ளுக்காக‌ இட‌ம் போட்டிருப்பான் அவ‌ன். அவள் வந்ததும் எழுந்து ஆண்கள் வரிசையில் கடைசி சீட்டுக்குப் பக்கவாட்டில் நின்று கொள்வான். இடமிருந்தால் அங்கேயே உட்கார்ந்து கொள்வான். இருவரும் அதிகம் கூடப் பேசி நான் பார்த்ததில்லை. நெருக்கமாய் அமர்ந்தும் பார்த்ததில்லை. ஆனால் இருவருக்கும் அப்படியொரு காதல் என்பது அவர்களின் பார்வையிலேயே புரிந்தது.அவன் ஒடிசலாகவும்‌ உயரமாகவும் இருந்தான். கலைந்த தலை; லேசான‌ தாடி, ர‌ப்ப‌ர் செருப்பு என்று மிக‌வும் சாதார‌ண‌மாக‌ இருப்பான். ஆனால் அவன் அவ‌ளைப் பார்க்கும் போது அவன் கண்களைப் பார்க்கவேண்டுமே!
உல‌க‌த்திலேயே அவ‌ள் ஒருத்தி தான் பெண் என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருப்பான்.

அவ‌ன் கையில் ஏதேதோ புத்த‌க‌ங்க‌ள் கொண்ட‌ ஜோல்னாப்பை தொங்கிக் கொண்டிருக்கும். சில‌ நாட்க‌ளில் இட‌ம் கிடைத்தால் உட்கார்ந்து கொண்டு பேனாவும் பேப்பருமாய் எதையோ திருத்திக் கொண்டிருப்பான். ஏதோ பத்திரிகையில் ப்ரூப் ரீட‌ர் என்று அனுமானிக்க‌ முடிந்த‌து. அப்போது அவ‌ள் அவ‌னைத் தொந்த‌ர‌வு செய்யாம‌ல் அவ‌ளும் ஒரு புத்த‌க‌த்தை எடுத்து வைத்துப் ப‌டித்துக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் அவ‌ன் வ‌ர‌வில்லை. அவள் புன்னைகையுட‌ன் என்னருகில் வ‌ந்த‌ம‌ர்ந்தாள். நான் மெல்ல‌ப் பேச்சுக் கொடுத்தேன். "என்ன‌ உங்க‌ ஃப்ரென்ட் இன்னிக்கு வ‌ர‌லையா?"

வெட்க‌த்திலும் ச‌ந்தோஷ‌த்திலும் அவ‌ளுக்கு முக‌ம் சிவ‌ந்த‌து. "ஆமாம், அவ‌ர் ஊருக்குப் போயிருக்கார்"

இன்னும் விசாரித்த‌தில் இருவ‌ரும் ஒரே ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் தான் வேலை பார்க்கிறார்க‌ளாம். இவ‌ளுக்குக் கல்லூரியில் சீனிய‌ராம் அவ‌ன். கல்லூரி மாணவர்கள் யூனியன் சேர்மனும் கூட.
இவ‌ள் வ‌ச‌தியான‌ வீட்டுப் பெண். அவ‌ன் ஏழை. ஜாதியும் வெவ்வேறாம்.எப்போதும் ஏதாவது போராட்டம், கூட்டம் என்று தீப்பொறி போல் இருக்கும் அவ‌னுடைய‌ மென்மையான‌ பொழுதுக‌ளே இந்த‌ப் பேருந்தில் ஏறி இற‌ங்கும் இந்த‌ அரை ம‌ணி நேர‌ம் தானாம்.
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் என்று நம்பி இருந்தவன் ஒரு முறை கல்லூரியில் அவனுக்குச் சரிக்குச் சரியாய் உண்ணாவிரதம் இருந்த இவளது மனோதிடத்தைப் பார்த்துத் தான் மனம் பறி கொடுத்தானாம். இவளோ ஏற்கெனவே அவனது பேச்சு, கவிதைகள் எல்லாவற்றையும் ரசித்து அவனையே ரசிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள்.

பெண்கள் மீது ரொம்பவும் மதிப்புள்ளவனாம். மாணவிகளை விளையாட்டுக்குக் கூடக் கேலி செய்வதோ ராகிங் செய்வதோ கூடாது என்று நண்பர்களுக்கும் அறிவுறுத்தி வைத்திருந்தானாம். எல்லாப் போட்டிகளிலும் பெண்களும் பங்கெடுக்கவேண்டும் என்று வகுப்புகளில் வந்து வலியுறுத்துவானாம்.

இவ‌ள் என்றால் அவ‌னுக்கு உயிராம். இவ‌ளுக்கும் அப்ப‌டித்தானாம். அவ‌ள் பேசுவ‌திலேயே தெரிந்த‌து இருவ‌ருக்குள்ளும் ஆழ்ந்த‌ முதிர்ந்த‌ நேச‌ம் இருப்ப‌து. ஆனால் திரும‌ண‌ம் எப்போது, எப்ப‌டி என்று தான் தெரிய‌வில்லை என்றாள்.

"வீட்ல‌ ஒத்த‌க்க‌லேன்னா என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?" என்றேன்.

ப‌ல‌மாக‌ச் சிரித்து விட்டு, "ஹைய்யோ, வீட்ல‌ எல்லாம் க‌ண்டிப்பா ஒத்துக்க‌ மாட்டாங்க. எங்க தூர‌த்துப்பெரியப்பா பொண்ணு ஒருத்தி ஜாதி விட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு அவ புருஷனை வெட்டிக் கொன்னுட்டாங்க.
அதுக்காக‌ விட்டுட‌ முடியுமா?
அவ‌ர் அக்காவுக்கு அடுத்த‌ மாச‌ம் க‌ல்யாண‌ம். அதை நல்ல‌ப‌டியா முடிச்சிட்டு ஒரு நாள் வீட்ல‌ சொல்லிட்டுக் கிள‌ம்பிடுவேன் அவ‌ர் கூட."

அந்த‌க் க‌ண்க‌ளில் தெரிந்த‌ உறுதியும் தைரிய‌மும் கையெடுத்து வ‌ண‌ங்க‌த் தோன்றிய‌து. அவ‌ள் கைக‌ளைப் பிடித்து ம‌ன‌தார‌ வாழ்த்தினேன்.

பின்பு ஒரு நாள் வீட்டுக்கு ஒரு திருமண அழைப்பித‌ழ் வ‌ந்த‌து. அவ‌ர்க‌ள் பெய‌ர்க‌ள் ம‌ற‌ந்திருந்தாலும் அந்த‌ அழைப்பித‌ழின் எளிமையிலும் வார்த்தைக‌ளில் இருந்த‌ த‌ன்ன‌ம்பிக்கையிலும் புரிந்த‌து இவ‌ர்க‌ள் தானென்று. திருமணம் வெளியூரில். போக‌ முடியாவிட்டாலும் மான‌சீக‌மாக‌ வாழ்த்துக்க‌ளை அனுப்பி வைத்தேன்.

இப்போ இவங்களைக் கொஞ்சம் கொசுவத்தி சுத்த வைக்கலாமா?

ராமலட்சுமி
Romeo
அண்ணாமலையான்
அமிர்தவர்ஷினி அம்மா
அமுதா
சந்தனமுல்லை


இயலும்போது எழுதுங்கள் மக்களே!

Monday, March 22, 2010

ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மரணம்

ஓர் இனிமையான மாலைப் பொழுதில், ஐவன் திமித்ரி என்ற அரசாங்க குமாஸ்தா தனது ஓபரா கண்ணாடியின் வழியாக "க்லாசஸ் த கார்ன்வில்" மேடை நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தார். நாடகத்துடன் ஒன்றி ஒருவித மனோலயத்தில் திளைத்திருந்தார்.

திடீரென்று... - இந்தத் "திடீரென்று" என்ற சொல் கதைகளில் நிறைய வருகின்றன. ஆனால் அதிலொன்றும் வியப்போ மிகைப் படுத்தலோ இல்லை. வாழ்க்கை என்பதே திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தானே!

அதைப் போல் திடீரென்று ஐவனின் முகம் சுழித்தது. கண்கள் செருகின...மூச்சு ஒரு கணத்துக்கு நின்றது; கண்ணாடிகளைக் கழற்றி விட்டுக் குனிந்து.. "ஹச்சூ" என்று தும்மினார். தும்முவதை யாரும் எப்போதும் குறை சொல்ல முடியாது. அரசன் ஆண்டி என்று பேதம் பார்க்காமல் வரும் விஷயம் அது. அதனால் ஐவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, நல்லியல்புள்ள ஒருவனைப் போல், யாரையாவது சங்கடப்படுத்தி விட்டோமா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

அப்போது தான் அந்தக் காட்சியைக் கண்டார். அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான கனவான் ஒருவர் தன்க்குள் ஏதோ முனகியவாறே, தனது கையுறையினால் த‌ன‌து வ‌ழுக்கைத் த‌லையையும் பின்ன‌ங்க‌ழுத்தையும் துடைத்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் வேறு யாருமல்ல‌, போக்குவ‌ர‌த்துத் துறையைச் சேர்ந்த‌ உய‌ர் அதிகாரி ப்ரிஜலோவ் என்ப‌தைக் க‌ண்டு கொண்டார் ஐவ‌ன்.

'அடடா இவ‌ர் மேல‌ துப்பிட்டோமே! இவ‌ர் ஒண்ணும் என் பாஸ் இல்ல‌.. இருந்தாலும் ச‌ங்க‌ட‌மா இருக்கு..ம‌ன்னிப்புக் கேட்க‌ணும்' என்று நினைத்துக் கொண்டார்.

லேசாக‌ச் செருமிக் கொண்டு த‌ன் முழு உட‌லையும் முன்னால் வ‌ளைத்து அந்த‌ அதிகாரியின் காத‌ருகே குனிந்தார் ஐவ‌ன்.

"ம‌ன்னிக்க‌ணும் ஸார். உங்க‌மேல‌ த‌வ‌றுத‌லா தும்மிட்டேன்"

"ப‌ர‌வால்ல‌, ப‌ர‌வால்ல...."

"க‌ட‌வுள் பேரால‌ என்னை ம‌ன்னிச்சுடுங்க‌. நான் வேணும்னு ப‌ண்ண‌ல‌."

"அட‌, பேசாம‌ உட்காருய்யா! நாட‌க‌த்தைக் கவ‌னிக்க‌ விடு."

ஐவ‌னுக்கு த‌ர்ம‌ச‌ங்க‌டமாகிப் போன‌து. அச‌ட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நாட‌க‌த்தைப் பார்க்க‌லானார். ஆனால் அவர் ம‌ன‌ம் அதில் முன் போல் லயிக்க‌வில்லை. ந‌ட‌ந்த‌தையே நினைத்துச் ச‌ங்க‌ட‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தார்.

இடைவேளையின் போது ப்ரிஜலோவின் அருகே சென்றார். மிகவும் கஷ்டப்பட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முணுமுணுத்தார்:

"உங்க‌ மேல தெரியாமத் துப்பிட்டேன், பெரியவங்க நீங்க, என்னை ம‌ன்னிச்சுடுங்க‌... நான் வேணும்னே செய்ய‌ல‌ பாருங்க‌..."


"ஐயோ! போதும்! நான் அதை மறந்தே போயிட்டேன். நீ ஏன் அதையே பேசிக்கிட்டு? " - பொறுமையிழந்து கத்தியதில் அவர‌து கீழ் உத‌டு துடித்த‌து.

'அவ‌ர் ம‌ற‌ந்திருக்க‌லாம், ஆனா அவ‌ர் க‌ண்ணுல‌ கோப‌ம் இன்னும் தெரியுது' என்று ம‌ன‌ம் ச‌மாதான‌மாகாம‌ல் அவ‌ரையே பார்த்தார் ஐவன். 'அவ‌ருக்கு என்னோட‌ பேச‌வே பிடிக்க‌ல‌. நான் வேணும்னே பண்ணல, இயல்பா தும்மல் வந்துடுச்சுன்னு அவ‌ருக்குப் புரிய‌வெச்சாக‌ணும். இல்லாட்டி இப்ப‌ இல்லான்னாலும் நாளைக்கு என் மேல‌ அவ‌ருக்குத் த‌ப்பெண்ண‌ம் வ‌ர‌லாம்!'

வீட்டுக்குப் போன‌தும் ம‌னைவியிட‌ம் த‌ன்னுடைய‌ ம‌ரியாதை கெட்ட‌ ந‌ட‌த்தையைப் ப‌ற்றிச் சொன்னார். அவ‌ர் ம‌னைவி அதைப் பெரிதாக‌ எடுத்துக்கொள்ளாத‌து அவ‌ருக்கு விய‌ப்பாக‌ இருந்த‌து. முத‌லில் ச‌ற்றுப் ப‌ய‌ந்தாலும் ப்ரிஜ‌லோவ் வேறு இலாகாவைச் சேர்ந்த‌வ‌ர் என்று அறிந்த‌தும் அவ‌ருக்குக் கொஞ்ச‌ம் தைரிய‌மாக‌ இருந்த‌து. இருந்தாலும் அவ‌ர் ஐவ‌னிட‌ம் சொன்னார், "நீ எதுக்கும் போய் ம‌ன்னிப்புக் கேட்டுடு. இல்லாட்டிப் பொது இட‌த்தில‌ எப்ப‌டி ந‌ட‌ந்துக்க‌ணும்னு கூட‌த் தெரியாத‌வ‌ர்னு உன்னை நென‌ச்சிட‌ப் போறார்."

"அதே தான். அதுக்காக‌த் தான் நான் உட‌னே ம‌ன்னிப்புக் கேட்டேனே. ஆனா அவ‌ர் அதைச் ச‌ரியா எடுத்துக்கிட்ட‌ மாதிரி தெரிய‌ல. ஒழுங்காப் பேச‌ அங்க‌ நேர‌மும் கிடைக்க‌ல‌."

ம‌றுநாள், புத்த‌ம்புதிய‌ சீருடை அணிந்து கொண்டு, த‌லைமுடியைச் சீராக‌ வெட்டிவிட்டுக் கொண்டு, ப்ரிஜ‌லோவிட‌ம் ம‌ன்னிப்புக் கேட்க‌ச் சென்றார் ஐவன். அவ‌ர‌து அலுவ‌ல‌க‌ வாயிலில் எண்ண‌ற்ற‌ பேர் ம‌னுக்க‌ளோடு காத்திருந்த‌ன‌ர். ஒவ்வொருவ‌ராக‌ விசாரித்துக் கொண்டு வ‌ந்த‌ ப்ரிஜ‌லோவ் ஐவனை ஏறிட்ட‌ போது, "அது வந்து ஸார்...நேத்திக்கு நாட‌க‌த்துல‌, ஞாப‌க‌மிருக்கா ஸார்? வ‌ந்து...நான் திடீர்னு தும்மி... "

"நான்சென்ஸ்! என்ன‌ பைத்திய‌க்கார‌த்த‌ன‌ம் இது...அடுத்த‌து யாருப்பா?" என்று ஐவ‌னுக்கு அடுத்த‌ ம‌னுதார‌ரை அழைத்தார் ப்ரிஜ‌லோவ்.

புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ராய்த் திரும்பிய‌ ஐவ‌ன், "அவ‌ர் என் கூட‌ பேச‌வே மாட்டேங்குறாரு. அப்ப‌டின்னா எவ்வ‌ளோ கோவ‌மா இருப்பாரு? இல்ல.. இதை இப்ப‌டியே விட‌க்கூடாது. நான் அவ‌ர் கிட்டெ பேசியே ஆக‌ணும்."

க‌டைசி ஆளையும் பார்த்து அனுப்பிவிட்டு உள்ளே போக‌ ய‌த்த‌னித்த‌ ப்ரிஜ‌லோவின் அருகே மீண்டும் சென்று குள‌றினார் ஐவன்:

"யுவ‌ர் எக்ஸ‌லென்ஸி, உங்க‌ளைத் தொந்த‌ர‌வு செய்றேன்னா அதுக்கு என் குற்ற‌வுண‌ர்ச்சி தான் கார‌ண‌ம். நான் வேணும்னு செய்ய‌ல‌ன்னு ம‌ட்டும்
த‌ய‌வு செஞ்சு ந‌ம்புங்க‌.."

"ஏன்யா என்னைக் கிண்ட‌ல் ப‌ண்றியா?" என்று கர்ஜித்து விட்டுக் க‌த‌வைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார் அந்த‌ அதிகாரி.


'அய்யோ நான் எங்க‌ கிண்ட‌ல் ப‌ண்ணேன்? இவ்ளோ பெரிய‌ அதிகாரியா இருந்துக்கிட்டு இந்த‌ச் சின்ன‌ விஷ‌ய‌த்தைப் புரிஞ்சுக்க‌ மாட்டேங்க‌றாரே? ச‌ரி இவ‌ர் இப்ப‌டி நினைச்சார்னா நான் அவ‌ர்கிட்ட‌ இனிமே போய் ம‌ன்னிப்புக் கேட்க‌ மாட்டேன். ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதி அனுப்பிட‌றேன். நேர்ல‌ இனிமே போய்ப் பேச‌ வேணாம்' என்று எண்ண‌மிட்ட‌ப‌டி வீடு நோக்கி ந‌ட‌ந்தார் ஐவ‌ன்.

வீட்டுக்குப் போய் ரொம்ப‌ நேர‌ம் யோசித்துப் பார்த்தார். அவ‌ரால் க‌டித‌ம் எழுத‌ முடிய‌வில்லை. ம‌றுநாளும் நேரிலேயே போய் ம‌ன்னிப்புக் கோருவ‌து என்று முடிவு செய்தார்.

அதிகாரி அவ‌ரைப் பார்த‌த‌தும், "உங்க‌ளை நேத்திக்குத் தொந்த‌ர‌வு செஞ்சுட்டேன். ஆனா நீங்க‌ சொன்ன‌ மாதிரி உங்க‌ளைக் கிண்ட‌ல் ப‌ண்ண‌ல‌ ஸார். உங்க‌ மேல‌ த‌வ‌றுத‌லா துப்பிட்ட‌துக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌த் தான் வ‌ந்தேன். உங்க‌ளைக் கிண்ட‌ல் ப‌ண்ண‌னும்னு க‌ன‌வுல‌ கூட‌ நினைக்க‌ மாட்டேன் ஸார்!"


"போய்யா இங்கேர்ந்து" க‌டும் கோப‌த்துட‌ன் க‌த்தினார் அதிகாரி ப்ரிஜ‌லோவ்.


"என்ன‌ ஸார்?" ப‌ய‌த்தில் ந‌டுங்கிய‌ப‌டியே கேட்டார் ஐவ‌ன்

"வெளிய‌ போய்யா " எழுந்து நின்று முக‌ம் சிவ‌க்க‌க் க‌த்தினார் அதிகாரி.

ஐவ‌னுக்கு வ‌யிற்றை என்ன‌மோ செய்த‌து. பிர‌க்ஞைய‌ற்று வாச‌ல் வ‌ழியே வெளியேறிய‌வ‌ர், தெருவில் இற‌ங்கித் த‌ள்ளாடி ந‌ட‌ந்தார். இய‌ந்திர‌க‌தியில் வீட்டை அடைந்த‌வ‌ர், உடையைக் கூட‌ மாற்றாம‌ல் சோஃபாவில் ச‌ரிந்து இறந்து போனார்.

Disclaimer: புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் ஆன்ட‌ன் செக்கோவ் எழுதிய‌ "Death of a government clerk" என்ற‌ சிறுகதையின் தமிழாக்கம்(ஆங்கிலத்திலிருந்து).

Thursday, March 18, 2010

நேஹா நேரம்

அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் கண்டபடி தரையில் இறைந்து கிடந்தன.

"யாரோட வேலை இது?" என்று அதட்டல் போட்டேன்.

ஓடி வந்து என் முகத்தைத் தொட்டுத் திருப்பி,"அப்பா! அப்பா... அப்பா!" என்று அவள் அப்பாவைக் கை காட்டுகிறாள். பிழைத்துக் கொள்வாளோ?!
________________________________________


"அம்மா! முய் ஏனும்..." (முறுக்கு)
எடுத்துத் தந்தேன்.

"தட்டு ஏனும்..."
தட்டில் வைத்துத் தந்தேன்.

"பூன்..பூன் ஏனும்"

ஸ்பூனால் முறுக்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ளைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?
____________________________________________

"நேஹா, ஏ ஃபார்?"
"ஆப்பிள்"

"பி ஃபார்?"
"பேபி"

"சி ஃபார்?"
"காண்டில்"

"டி ஃபார்?"
"நாய்" !!!


"ஈ ஃபார்?"
"ம்..ம்.. முட்டை!"

________________________________

அவள் பேசப் பேச மொபைலில் ரெகார்ட் செய்தேன். திரும்ப‌ ஒலிக்க‌ச் செய்த‌ போது மேட‌முக்கு உற்சாக‌ம் தாங்கவில்லை.. என் கையிலிருந்து ஃபோனைப் பிடுங்கிக் காதில் வைத்து "ஹலோ" என்றாள்.

"ஃபோன்ல யாரும்மா பேச‌றாங்க?"

"நேக்கா"

:)
________________________________________________

Tuesday, March 16, 2010

கோகபாம்பா, சென்னை, மற்றும் போபால்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலின் முக்கிய அம்சங்களின் வாயிலாக, தனியார்மயம், நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், நுகர்வுக்கலாசாரத்தின் இன்னொரு கோரமான முகம் ஆகியவற்றை அவருக்கே உரிய இயல்பான பாணியில் அநாயாசமாகச் சொல்லி இருக்கிறார் முல்லை.

அவ‌ருக்கு முன்பாக‌ சிறு முய‌ற்சி முத்துலெட்சுமி சென்னை போன்ற‌ பெருந‌க‌ர‌ங்க‌ளில் த‌ண்ணீர் என்ப‌து இய‌ற்கை வ‌ள‌மாக‌ இல்லாம‌ல் மாந‌க‌ராட்சி த‌ரும் ஒரு செய‌ற்கை வ‌ள‌மாக‌ இருப்ப‌தும், வ‌ராத‌ நாட்க‌ளில் ப‌டும் திண்டாட்ட‌ங்க‌ளையும், குழாயைத் திற‌ந்த‌தும் வ‌ரும் கால‌ங்க‌ளில் அச‌ட்டையாக‌ இருக்கும் போக்கையும் க‌ண்டித்து "Never take water for granted" என்ற‌ க‌ருத்தை அழுத்த‌மாக‌ வைத்திருக்கிறார்.


உண்மை தான். ந‌க‌ர்ப்புற‌ங்க‌ளில் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் கார்ப்ப‌ரேஷ‌ன் த‌ண்ணீர் தான். குடிப்ப‌த‌ற்கு ம‌ட்டும‌ல்லாம‌ல் எல்லா வேலைகளுக்கும் இந்த‌த் த‌ண்ணீரைத் தான் உப‌யோகிக்க‌ வேண்டியிருக்கிற‌து. வேறெந்த‌ நீர்வ‌ர‌த்தும் இல்லை. பல்விளக்கக் கூட தண்ணீரில்லாமல் லாரித் த‌ண்ணீரை எதிர்பார்த்துக் குட‌ங்க‌ளோடு சாலையில் த‌வ‌ம் கிட‌ந்த‌ கால‌த்தில் காப்பாற்றிய‌ நீர் சிக்க‌ன‌ ஒழுக்க‌த்தை ச‌ம்ப் க‌ட்டித் த‌ண்ணீர் விழ‌ ஆவ‌ன‌ செய்து விட்ட‌ நிலையில் த‌வ‌ற‌விட்டுவிடுகிறோம்.

அப்படியும் சில நாள் தண்ணீர் வரவில்லையென்றால் தனியார் தண்ணீர் சப்ளைகளுக்கு ஃபோன் செய்து ஒரு டாங்குக்கு ஐநூறு முதல் அறுநூறு ரூபாய் வரை கொடுத்து வாங்கி நிரப்பிக் கொள்ளப் பழகி விட்டோம்.

இன்னும் சிலர், மாநகராட்சி வைத்திருக்கும் பொதுத்தொட்டிகளுக்கு நிரப்பத் தண்ணீர் எடுத்துச்செல்லும் லாரிகளை மடக்கி, நூறொ இருநூறோ லஞ்சம் கொடுத்து அதை வீடுகளில் வாங்கி விட்டுக் கொள்கிறோம்.

காசில்லையென்றால் குடிக்கத் த‌ண்ணீர் கூட‌க் கிடைக்காது என்ப‌து எவ்வ‌ள‌வு கொடூர‌மான‌ விஷ‌ய‌ம்?
தனியார்மயம் நம்மை அச்சுறுத்திச் செல்வது இப்படி ஒரு பயங்கரத்தை நோக்கித் தான்.

2000 ல் போலிவியா நாட்டைச் சேர்ந்த கோகபாம்பாவில் நடந்தது இது தான். உலகத்தின் குபேரர்களான உலகவங்கி தன்னிடம் 25 மில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்தி நின்ற பொலிவியன் அரசிடம் அதன் நீர்வளத்தின் தனியார் உரிமையைக் கேட்டு வாங்கியது.
மோச‌மான‌ நிர்வாகம், நிதிப்ப‌ற்றாக்குறை, ஊழ‌ல்க‌ள் கார‌ண‌மாக‌ பொலிவிய‌ அர‌சின் நீர் விநியோகம் மோசமாகச் செயல்பட்டு வந்ததாக‌ இதற்குக் கார‌ண‌ங்க‌ள் சொல்ல‌ப்ப‌ட்டன. இருபது வருடங்களாக உலகவங்கியின் கடனாளியாக இருந்து ரயில்வே, தொலைதொடர்புத் துறை, ஹைட்ரோகார்பன் ஆலைகள் உட்பட பல்வேறு துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்த்து விட்ட பொலிவிய அரசு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் கடைசி வீழ்ச்சியாக இதற்கும் சம்மதித்தது.


அமெரிக்காவின் பெச்டெல் (Bechtel) நிறுவ‌ன‌த்தின் துணைநிறுவ‌ன‌மான‌ அக்வாஸ் டெல் துனாரி (Aguas del Tunari) என்கிற‌ த‌னியார் நிறுவ‌னத்துக்கு கான்ட்ராக்ட் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. நாற்ப‌து ஆண்டுகால‌த்துக்குத் குடிநீர், மின்சார‌ம், ம‌ற்றும் விவ‌சாய‌ப்பாச‌ன‌த்துக்கும் நீர் வ‌ழ‌ங்க‌ வேண்டுமாய் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌ட்ட‌து.

கான்ட்ராக்ட் கைக்குக் கிடைத்த‌ ம‌றுக‌ண‌ம் குடிநீர்வ‌ரி மும்ம‌ட‌ங்காக‌ உய‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து - முந்தைய அர‌சு கான்ட்ராக்ட் நிறுவ‌ன‌ம் சேர்த்து வைத்த‌ க‌ட‌ன்க‌ளை அடைக்க‌ வேண்டி இருப்ப‌தான‌ ச‌ப்பைக்க‌ட்டுட‌ன்.

ஒரே நாளில், ஆயிரக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளுக்குத் த‌ண்ணீர் என்ப‌து கிடைத்த‌ற்க‌ரிய‌ பொருளாகிப் போன‌து. அவ்வ‌ள‌வு தான். ம‌க்க‌ள் தெருவில் இற‌ங்கிப் போராட‌த்துவ‌ங்கின‌ர்.

போக்குவரத்து வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. பொலிவிய சர்வாதிகாரி அதிபர், போலிஸ் தடியடி கொண்டு போராட்டங்களை ஒடுக்கப் பார்த்தார். இந்தக் கொடூரச்செயலால் நுற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். ஆறு பேர் உயிரிழந்தனர். இரு குழந்தைகள் பார்வையிழந்தனர். ஆனாலும் மக்களுக்கு வேறு வழியிருக்கவிலை. தொடர்ந்து போராடி பெச்டெல் நிறுவனத்தை ஓட்டமெடுக்கச் செய்தனர். த‌ற்போது அந்நிறுவனம் பொலிவிய‌ அர‌சை ந‌ச்ச‌ரித்து ந‌ஷ்ட‌ ஈடு பெற‌ப் போராடி வ‌ருகிற‌து.

ம‌க்க‌ள் ச‌க்தியால் முடியாத‌து எதுவுமில்லை என்ப‌த‌ற்கு இத‌ற்கு மேல் வேறென்ன‌ ஆதார‌ம் வேண்டும்?
ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட கோகபாம்பாவால் சாதிக்க முடிந்ததை நம் பெருநகரங்களால் சாதிக்க முடியாதது ஏன் என்று நாம் சிந்திக்க‌ வேண்டும்.

“ஊரான் ஊரான் தோட்ட‌த்துல‌ ஒருத்த‌ன் போட்டானாம் வெள்ள‌ரிக்காய் - ‍ அதைக்
காசுக்கு ரெண்டா விக்க‌ச் சொல்லிக் காயித‌ம் போட்டானாம் வெள்ளைக்கார‌ன்”

என்ற‌ ப‌ண்டைப் பாட‌லை இன்றும் பாடித்திரியும் நிலையில் உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் ந‌ம்மை வைத்திருக்கிற‌து. வெள்ள‌ரிக்காயுட‌ன் திருப்திய‌டையும் விஷ‌ய‌மா அது?

வேலை வாய்ப்பு என்ற சிறு எலும்புத்துண்டைக் காரணம் காட்டி நமது நிலத்த‌டி நீரைச் சுர‌ண்டி, ந‌ம‌க்கே ப‌ல‌ ம‌ட‌ங்கு விலைக்கு விற்கும் முத‌லாளிக‌ளின் சாம‌ர்த்திய‌த்தையும் அத‌ற்குப் பட்டுக் கம்பளம் விரித்துத் தரும் ந‌ம‌து ம‌க்க‌ளாட்சிப் பிர‌திநிதிக‌ளையும் அடையாள‌ம் க‌ண்டு கொள்வோம்.

இப்படியே போனால் நல்ல காற்றைக் கூட விதவிதமான சைசில் பலூன்களில் அடைத்து, சுவாசித்துப் புத்துணர்ச்சி பெறுங்கள் என்று விளம்பரம் செய்யும் நிலை வரலாம்.

போபால் பயங்கரத்துக்கு எதிராக நம் நாடு எடுத்த முயற்சி என்ன? பல்லாயிரக்கணக்கன உயிர்களை ஒரே இரவில் கொன்றழித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளி வாரன் ஆண்டர்சன் சுதந்திர மனிதனாய் சுகபோகியாய் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறான். கோல்ஃப் க்ளப்புக்கு அவன் கட்டும் ஆண்டுச்சந்தா மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த நஷ்ட ஈட்டுப் பணத்தை விடப் பன்மடங்கு அதிகமாம்!

அது மட்டுமல்ல அக்கொடிய விஷவாயு அம்மக்களின் மரபணுக்களைச் சிதைத்திருப்பதால் சந்ததி சந்ததியாகக் குறையுடனும் அங்க ஊனங்களுடனும் குழந்தைகள் பிறக்கிறார்
கள்.
"இப்பூவுல‌கை நாம் ந‌ம‌து முன்னோர்க‌ளிட‌மிருந்து கொடையாக‌ப் பெற‌வில்லை. ந‌ம‌து ச‌ந்த‌தியின‌ரிட‌மிருந்து க‌ட‌ன் வாங்கி இருக்கிறோம்."
அவர்களுக்கு நாம் தரக்கூடிய பரிசு இது தானா?

Disclaimer: இதுவரை எந்தத் தொடர் இடுகைக்கும் இவ்வளவு மெனக்கெட்டு முயற்சி எடுத்ததில்லை. முக்கியமான பல விஷயங்களை அறிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தது இந்த முயற்சி.
இவ்விடுகையை எழுத அழைத்த முல்லைக்கும், முத்துலெட்சுமிக்கும் முக்கியமாக‌ இதைத் தொடங்கி வைத்த மரவளம் வின்சென்ட் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் விரும்புப‌வ‌ர் யார் வேண்டுமானாலும் தொட‌ரலாம் என்று அன்புட‌ன் அழைக்கிறேன்.

நன்றி:
விக்கிப்பீடியா
The algebra of infinite justice – Arundhati Roy
http://www.worldwaterday.org/

Friday, March 12, 2010

ஸ்காலர்ஷிப்!

என் பேர் செல்வி. பி.எஸ்ஸி ஃபைனல் இயர் படிக்கறேன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. எங்க‌ம்மா பேர் சரசு. வீட்டு‌ வேலை செய்ய‌றாங்க‌. திவ்யா அக்கா வீட்ல‌ காலைல‌ எட்டு ம‌ணிலேந்து ப‌த்து ம‌ணி வ‌ரைக்கும், அப்புற‌ம் ஜெஸ்ஸீ அக்கா வீட்ல பத்துலேந்து ப‌ன்னெண்டு ம‌ணிவ‌ரைக்கும். சாயங்காலம் நாலு மணிக்கு கே.கே ஸார் வீட்ல. எங்க‌ப்பா மீன்பாடி வ‌ண்டி வெச்சிருக்கார். என்னைப் ப‌டிக்க‌வெக்கிற‌துக்கான்டி தான் எங்க‌ம்மா இத்த‌னை வீட்டுல‌ வேலை செய்ய‌றாங்க. என் அட்மிஷன் ஃபீஸுக்காகவும் கம்ப்யூட்டர் கோர்ஸ்க்காகவும் எல்லா வீட்லயும் அட்வான்ஸ் வாங்கி இருக்காங்க. அதனால அறுமாசத்துக்கு எந்த வீட்லயும் ச‌ம்ப‌ளமே வ‌ராது.

இத‌ எதுக்கு இப்ப‌ சொல்றேனா? இன்னிக்கு எங்கம்மாவுக்கு உட‌ம்பு ச‌ரியில்லை. நானும் காலேஜ்க்கு போகல. இப்ப‌
கே.கே ஸார் வீட்ல மட்டும் என்னை வேலை செய்ய‌ப் போக‌ச் சொல்லி இருக்காங்க‌ அம்மா. நானும் ச‌ரினு சொல்லிட்டேன். என்ன‌ பிர்ச்னைன்னா அவ‌ங்க‌ வீட்ட‌ம்மாவை என‌க்குப் பிடிக்காது.

மத்தவங்கல்லாம் அம்மா ஒரு நாள் லீவ் போட்டா அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க. இவங்க உன் பொண்ணு இருக்கால்ல அவளையாவது அனுப்பேன். என்னால் முடியலல்லன்னு அலுத்துக்குவாங்க. பாவம் வயசானவங்கடின்னு அம்மாவும் என்ன போகச் சொல்லும். 'அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கேம்மா' ன்னு ஒரு நா சொன்னதுக்கு தலையில கொட்டிடுச்சு.

வேலை ஒண்ணும் கஷ்டமில்ல. எங்கம்மாவெ செய்யறப்போ நான் போய் அதை விட சீக்கிரமா கடகடன்னு முடிச்சிடுவேன். ஆனா அவங்க பேசற பேச்சு இருக்கே. சரியான இத்துப் போன ரம்பம்!

வீட்டக் கூட்டிட்டுப் பாத்திரம் வெளக்கிட்டுப் பின்கட்டுல துணி துவைச்சிட்டு இருக்கேன்.
சேரை இழுத்துப் போட்டு உக்காந்துகிட்டு "ஆமா, நீ என்ன படிக்கிறேன்னு" ஆரம்பிச்சாங்க. "பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்... மா" (ஆமா, நான் ஏன் இவங்கள அம்மான்னு கூப்புடனும்? இவங்க என் அம்மாவா என்ன? ஆன்ட்டின்னு கூப்பிடட்டான்னு அம்மாகிட்ட கேட்டேன். அதுக்கும் என் தலையில கொட்டிடுச்சு.)

"ஹூம்..ப‌ர‌வாயில்ல‌..சரசு ராங்கிக்காரி தான். ப‌டாத‌ பாடு ப‌ட்டு உன்னைக் காலேஜ் வ‌ரைக்கும் ப‌டிக்க‌ வெச்சிட்டாளே!"(எங்க‌ம்மா ராங்கியாம்!)

நான் பதில் பேசாம சிரிச்சேன்.

"நல்லாப் படிக்கிறியா?"

"ம்.." (ஏன், இல்லன்னா எனக்கு டியூஷன் சொல்லித் தரப்போறிங்களா?)

"உங்கம்மா உயிரைக் கொடுத்து உழைச்சு உன்னைப் படிக்கவெக்கிறா. அதை மறந்துடாதே."(ம்க்கும்... அவங்க கொடுக்கலன்னா விடவா செய்றீங்க. குடுக்கற எழுநூறு ரூபா சம்பளத்துக்கு பாதி உயிரை வாங்கிட்டுத் தானே அனுப்பறீங்க.)

"பி.எஸ்.ஸி முடிச்சிட்டு என்ன‌ ப‌ண்ண‌ப் போறே?"

"எம்.பி.ஏ" ப‌ண்ண‌ப் போறேம்மா."

அவ்வ‌ள‌வு தான், முக‌ம் க‌டுகடுன்னு ஆயிடுச்சு அந்த‌ம்மாவுக்கு.

"என்னாது எம்.பி.ஏ வா? ஏண்டி உனக்கு ம‌ன‌சாட்சி இருக்கா? ஏதாச்சும் வேலைக்குப் போய் ஆயிர‌மோ ரெண்டாயிர‌மோ ச‌ம்பாரிச்சுக் குடுத்தா உங்க‌ வீட்டுக்கு ஒத்தாசையா இருக்கும். உன‌க்கும் ந‌கை ந‌ட்டு சேத்து ஒண்ணு ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ உன்னைக் க‌ட்டிக் குடுத்துருவா உங்க‌ம்மா. அத்தை விட்டுட்டு ம‌த்த‌ புள்ளைன்க‌ள‌ப் பாத்துட்டு இப்பிடி அக‌ல‌க்கால் வெக்கிறியே?"
ப‌ட‌ப‌ட்ன்னு பொரிஞ்ச‌துல‌ மூச்சிறைக்குது அந்த‌ம்மாவுக்கு.

"ஏம்மா, நான் எம்.பி. ஏ ப‌டிக்க‌க் கூடாதா?" (இவ‌ங்க‌ளுக்கென்ன‌ எங்க‌ மேல‌ திடீர்னு இவ்வளவு அக்க‌றை?)

"அதுக்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும்னு தெரியுமா? உங்க‌ம்மா அதுக்கும் என் உசிர‌த்தான் வ‌ந்து வாங்குவா?" (அப்ப‌டிப் போடு, அதானே பாத்தேன்!)
"ஏண்டி நிலமை தெரியாம‌ ஆடுறீங்க‌. துரையோட‌ சொக்க‌ட்டான் போட‌ணும்னு எல்லாரும் நின‌ச்சா ஆகுமா? எங்க குட்டி படிக்கிறாளே செகன்ட் இயர்.
இது வரைக்கும் எவ்வளவு செலவாச்சு தெரியுமா?"
(யாரு குட்டி, ஓ, இவங்க பொண்ணு... !)

விடாம‌ பேசிக்கிட்டே போச்சு அந்த‌ம்மா. என‌க்குக் க‌டுப்பான‌ க‌டுப்பு. அம்மாவை நின‌ச்சுக்கிட்டுப் பல்லைக்கடிச்சுக்கிட்டுப் பொறுமையா இருந்தேன்.
"எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்மா. எங்க லெக்சரர் ஏற்பாடு பண்றேன்னு சொல்லி இருக்காங்க." சொல்லிட்டு நகர்ந்துட்டேன்.

ஒரே ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். பேச்சு இந்த விஷ‌யத்துக்குத் திரும்பிட்டதால, "கால‌ரைப் பாரு அப்ப‌டியே அழுக்கு இருக்கு, இன்னும் ந‌ல்லாத் தேய்" , "அந்த‌ச் சுடிதார் க‌ல‌ர் போகும்.. த‌னியா ந‌னைச்சுத் துவை" அப்ப‌டி இப்ப‌டின்னு உசிரை வாங்கல‌ அந்தம்மா. துவைச்சு முடிச்சு துணிங்களைக் காய‌ப் போட்டுட்டேன்.

"நான் கிள‌ம்ப‌றேம்மா." ந்னு புற‌ப்ப‌ட்ட‌வ‌ளை,

"இந்தாடி வ‌ந்து இந்தக் காபிய‌க் குடிச்சிட்டுப் போ" னாங்க‌.

வழக்க‌த்தை விட திக்காவும் சர்க்கரை கூடுதலாவும் இருந்துச்சு காபி. ரசிச்சுக் குடிக்கும் போது கேட்டாங்க.

"செல்வி ('இந்தாடி' எங்க போச்சு?)அது என்ன ஸ்காலர்ஷிப்புடா? எங்க குட்டிக்கும் வாங்க முடியுமா? உங்க மிஸ் கிட்ட விசாரிச்சு சொல்லேன்!"

Tuesday, March 9, 2010

வஞ்சகம்

இருண்ட கூட்டுக்குள் சுருண்டு கிட‌ந்தேன்
இமைகளே தேவையற்ற க‌ண்க‌ளோடு;
நிசப்தமும் சூன்யமும் விழுங்கிவிடும்முன்
உடைத்தெறிந்தேன் கூட்டின் க‌தவை;
முதன் முதலாக ஸ்பரிசித்த‌ ஒளி
சுட்டெரித்தது சருமத்தை;
அனுபவித்தறியா குளிர் காற்று
உடலுக்குள் கூசி உன்மத்தம் தந்தது;
புதிதாக‌ முளைத்த‌ சிற‌குக‌ளால்
விலாவில் கொஞ்ச‌ம் சுக‌மாய் வ‌லித்தது

இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள்.

Monday, March 8, 2010

பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்!

http://farm4.static.flickr.com/3377/3339230539_e1861a3173.jpg

அனைவ‌ருக்கும் இனிய‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்!!!

பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்!

http://farm4.static.flickr.com/3377/3339230539_e1861a3173.jpg

அனைவ‌ருக்கும் இனிய‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்!!!

Wednesday, March 3, 2010

நித்யாவும் நாமும்

பொது வழி - 5 ரூபாய்
சிறப்பு தரிசனம் ‍- 20 ரூ
அர்ச்சனை ‍- 25 ரூ

- இது தான் க‌டவுளை அடையும் வ‌ழி என்று நாம் ஒத்துக் கொள்ளும் போது,

"இந்த‌ இட‌த்துக்கு மேல் பிற‌ ம‌த‌த்த‌வ‌ர்க்கு அனும‌தி இல்லை."

இது தான் ஒரு மதத்தின் தர்மம் எனும் போது,

க‌ட‌வுள் ப‌க்தி என்ற‌ பெய‌ரில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான‌ ம‌க்க‌ள் கூட்ட‌ நெரிச‌லில் ந‌சுங்கிச் சாகும் போது,

பங்குத் தந்தைகளின் கேளிக்கைக்காகக் கேள்வி கேட்காமல் காணிக்கைகளை அள்ளி வழங்கத் தயாராயிருக்கும் போது,

சாமியார், துற‌வ‌ற‌ம் என்ப‌த‌ன் பொருள் புரிந்தும் புரியாம‌லும், சாமியார் என்று சொல்லிக் கொள்பவர் சொகுசு வாழ்க்கை வாழ‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌மென்ன‌ என்று நாம் கேள்வி கேட்காத போது,

புனிதம் என்று போற்றினாலும் அதில் கலந்து விட்ட வியாபாரத்தைக் கண்டும் காணாமல் போவதோடு அதற்கு ஒத்துழைப்பும் நாம் வழங்கும் போது (ஒரு புத்த‌க‌த்தைக் காசு கொடுத்து வாங்குவது உட்பட‌)


க‌ல‌ர் க‌ல‌ராக‌க் க‌ண்ணாடிக் க‌ற்க‌ளை ஆயிர‌ம் இர‌ண்டாயிர‌ம் கொடுத்து வாங்கிக் கைக‌ளில் அணிந்து அற்புத‌ங்க‌ளுக்காக‌க் காத்திருக்கும் போது;

இது ம‌ட்டும் ஏன் அதிர்ச்சியாக‌ இருக்கிறது?


சத்யம் மோசடிக்கும் இதற்கும் வேற்பாடு ரஞ்சிதாவா ராகசுதாவா என்ற கூடுதல் பரபரப்பு மட்டுமே.

அதனால் சாமியார் வியாபாரிக‌ளுக்கு ஒரு வேண்டுகோள்:உங்க‌ள் சாமியார் புனித‌ம் என்றால் அவருடன் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்கள் ம‌ட்டும் என்ன‌வாம்? அவ‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட சாமியாரின் திருச்செய‌ல்க‌ளை ம‌ட்டும் ஏன் ரகசியமாய் வைத்திருக்கிறீர்கள்? அது தான் உங்க‌ளுக்கு ஆப்பு வைக்க‌ப்ப‌டுகிற‌து!

இனி சாமியாரைத் த‌லையில் தூக்கி வைத்து ஆடும் முன், அவ‌ர்க்கு இன்னாருட‌ன் இந்த‌மாதிரித் தொட‌ர்பு இருக்கிற‌து; அவ‌ர‌து தெய்வீக‌ச் ச‌க்திக்கே இவர்கள் தான் கார‌ண‌ம் என்று சொல்லி அந்த‌ப் பெண்க‌ளையும் சேர்த்தே விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துங்க‌ள். அவ‌ர்க‌ளை ரிஷிப‌த்தினிக‌ள் என்று சொல்லிக் கொள்ள‌லாம். மற்றபடி உங்களை நாங்கள் எதுவுமே கேட்கமாட்டோம்.

மொத்த‌மாக‌ எல்லாருக்கும் வியாபார‌ம் ஆன‌மாதிரியும் இருக்கும், நாளை இப்ப‌டி ஏதாவ‌து விடியோ லீக் ஆனால், அதையும் பார்த்துக் க‌ன்ன‌த்தில் போட்டுக்கொள்ளக் கூட்ட‌மும் கிடைக்கும்.

பின்னே, க‌ழுதை மூ....தைக் கூட‌ப் ப‌ள‌ப‌ள‌க்கும் பாட்டிலில் அடைத்து, கலர்க்லராய் விளம்பரம் செய்தால், தலையால் வாங்கிக் குடிப்பதற்குத் தயாராக இருப்பவர்கள் தானே நாம்!

Tuesday, March 2, 2010

நேஹா நேரம்

"ஏ காக்கா, சூ போ! உன்ன‌க் கொன்னு!"
"நாமு நாமு, பா பா!" (ராமு என்கிற நாய்)

ஏன் இந்தப் பாரபட்சமோ தெரியவில்லை!


இர‌வு ப‌தினொரு ம‌ணியாகியும் தூங்காம‌ல் அவ‌ள் போட்ட‌ ஆட்ட‌ம் தாங்க‌ முடியாம‌ல் ப‌டுக்கைக்குத் தூக்கிச் சென்றேன். கதவைச் சாத்தி விள‌க்கை அணைத்த‌தும் க‌த்திக் கூப்பாடு போட்டாள். என்ன‌ செய்தாலும் ச‌ரி, க‌த‌வைத் திற‌‌‌க்க‌க் கூடாது என்று உறுதியாக‌ இருந்தேன். ச‌ற்று நேர‌த்துக்குப் பின்,
"அம்மா.. த‌ண்ணீ..."
அருகிலிருந்த‌ த‌ண்ணிபாட்டிலைத் த‌ந்தேன். வாங்கினாள்; குடிக்க‌வில்லை.

கொஞ்ச‌ நேர‌த்துக்குப் பின், "அம்மா.. பாலு, பாலு ஏனும்"
பால் பாட்டிலையும் ப‌க்க‌தில் வைத்திருந்தேன். அதையும் தந்த போது குடிக்க‌வில்லை.

"ஆ...அம்மா, டீஈ..டீஈ..பாட்டா பாட்டா...பும்பா..."
:((((

பார்க்கில் ந‌ன்கு விளையாடிய‌ பின் வீட்டுக்குத் திரும்ப‌ அழைத்தால்,
"ஆனாம், பை!" கை காட்டுகிறாள்.(நீ வேணா போ, நான் வ‌ர்ல‌)


மொழி ப‌ட‌ம் ஓடிக் கொண்டிருந்த‌து டிவியில். "காற்றின் மொழி" பாட‌ல் வ‌ந்த‌து தான் தாம‌த‌ம். அதுவரை தனக்குள் ஏதோ பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த‌வ‌ள் கீச்சென்று கத்திக் கொண்டே ஓடி வ‌ந்து சோஃபாவில் ஏறினாள். அமைதியாக‌ச் சாய்ந்து அந்த‌ப் பாட‌ல் முடியும் வ‌ரை ல‌யித்துப் பார்த்தாள். !!!!


கோப‌ம் வ‌ந்தால் அடித்து விடுகிறாள். நாம் கோப‌மாக‌ முறைக்க‌வும், "சா..ரி" என்று க‌ழுத்தைக் க‌ட்டிக் கொண்டு ஒரு முத்தம்!
இத‌ற்காக‌வே அவ‌ளிட‌ம் அடிக்க‌டி அடி வாங்குகிறேன் நான்!