Sunday, February 22, 2009

ஹாரி பாட்டர் - ஒரு சின்ன அறிமுகம்


குறிப்பு: நிச்சயம் இது விளம்பரம் அல்ல. எனக்கு இதற்காக யாரும் பணம் கொடுக்கவும் இல்லை!

அதீத விளம்பரமும் ஆரவாரமும் சில நல்ல விஷயங்களில் கூட நமக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. நிறைய புருவங்கள் உயர்வதை உணர முடிகிறது! ஆனால் ஹாரி பாட்டர் நாவல்கள் 1 முதல் ஏழு வரை எல்லாவற்றையும் பல முறை படித்து ரசித்து அனுபவித்த தகுதியுடன் இதை எழுத முற்படுகிறேன். ஹாரி பாட்டரும் அப்படித்தான். ஹாரிபாட்டர் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் கூறுபவர்கள் அனேகமாக (100% என்று சொல்லலாம்) அதைப் படித்திருக்க மாட்டார்கள். முழுதும் படித்து விட்டும் அதை வெறுப்பவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். (படம் மட்டும் பார்த்தவர்கள் அல்ல)
அப்படியென்ன இருக்கிறது இதில், மந்திரம், மாயாஜாலம், பேய், சூனியக்கரிகள், காரர்கள் இவர்கள் தானே என்று இளக்காரத்தோடு தான் நானும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் மேற்கூறிய இவை அல்லாமல் ரசிக்கவும் சிலாகிக்கவும் ஏராளம் உண்டு. சுருக்கமாக:
குழந்தைகளைக் கவரும் மந்திரமும் மாய நிகழ்வுகளும் மட்டும் இல்லை. அழுத்தமான பாத்திரப் படைப்புக்கள் தான் ஹாரி பாட்டரின் வெற்றியின் ரகசியம் என்று கருதுகிறேன் நான்.
1. ஹாரியின் நண்பர்கள் ரான் மற்றும் ஹெர்மியோனி. ரானுக்கும் ஹாரிக்கும் குடும்பப் பின்னணியில் வேறுபாடுகள் இருந்தாலும் குணாதிசய்ங்களில் இருவரும் ஒரே மாதிரி. படிப்பில் இருவரும் வெகு சுமார். மற்றபடி பிரபுத்துவக் குடும்பத்தில்ல் பிறந்த மால்ஃபாய் என்ற சிறுவனுடன் ச்ண்டை போடுவதிலும், பள்ளியின் கட்டுப்படுகளை மீறி சாகசம் புரிந்து மாட்டிக் கொண்டு முழிப்பதிலும், அதிபுத்திசாலியான ஹெர்மியோனியை எப்போதும் கிண்டலடிப்பதிலும் இவர்கள‌து நட்பு அலாதியானது. ரானுக்குப் பாசமான அம்மா, அப்பா, ஐந்து அண்ணன்க‌ள், ஒரு தங்கை என்று பெரிய குடும்பம். ஏழைகளாக இருந்தாலும் இவர்கள் ஹாரியைச் சொந்த மகன் போல அரவணைத்து ஆபத்து நேரத்திலும் புகலிடம் தருகிறார்கள்.
2. ஹெர்மியோனி - அற்புதமான கதாபாத்திரம் இது. இவளது புத்தி சாதுரியமும், அரிய குணங்களும், வீரமும், ஹாடியய் விட அதிகப் புகழ் ஈட்டித் தருகிறது. ஆனாலும் பெண், அதிலும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவள் சந்திக்கும் சங்கடங்கள், அதை எல்லாம் மீறி அவள் சாதிக்கும் சாகசங்கள் அசர வைக்கின்றன.
4. ஹாரியுடன் பரஸ்பரம் எப்போதும் வெறுப்பு பாராட்டும் பேராசிரியர் ஸ்னேப். அலாதியான் பாத்திரம் இவ‌ர். எப்போதும் வெறுப்பும் நையாண்டியுமே சரளமாகக் கையாளும் இவர் ஹாரியின் நலம் விரும்பியா துரோகியா என்பது கடைசி அத்தியாயம் வரை மர்மமாகவே இருந்தது.
5. டம்பிள்டோர் - தலைமை ஆசிரியரும் மந்திர உலகமே வியந்து போற்றும் சக்திவாய்ந்த மந்திரவாதியும் ஆவார் இவர். எத்தனையோ உயர் பத‌விகள் காத்திருந்தும் அவ்ற்றை உதறித்தள்ளி விட்டுக் கல்விப்பணிக்குத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஹாரிக்கு இவர் விளையாட்டாகக் கூறும் பல அறிவுரைகள் உண்மையில் இள நெஞ்சங்களைப் பண்படுத்தும்.
மேலும்...
1. கதை நாயகன் ஹாரி ஒரு இராஜகுமாரன் அல்ல. தீயவனை எதிர்த்துப் போரிட்டுக் கொல்லப்பட்ட இரு வீரர்களின் (கவனியுங்கள்அவன் அம்மாவும் போரிட்டிருக்கிறாள்) குழந்தை. அனாதையான அவன் தன் பணக்காரச்சித்தப்பா சித்தி வீட்டில் கஷ்டப்பட்டு வளர்கிறான். ஆனாலும் அங்கும் அவன் குறும்புத்தனமும் விவேகமும் உள்ளவனாகக் காட்டப்படுகிறான். அதுவும் முட்டாள் சித்தி தன் தத்தி மகனைச் செல்லம் கொடுத்துக் கெடுப்பதைப்பார்த்து மனதுக்குள் எள்ளி நகையாடுபவனாக்ச் சித்தரித்திருப்பது புதிது.

2. அதீத கற்பனையில் சிருஷ்டிக்கப் பட்ட கனவுலகம் தான் ஹாரி போகும் பந்திர உலகம் என்றாலும், நடைமுறைக்கு ஒத்த ஏராளமான‌ உருவகங்கள் சுவாரசியமானவை. உதாரணத்துக்கு,

அ. பரம்பரை மந்திரவாதிகளைப் பொறுத்தவரை சாதாரண‌ மனிதர்க்ளுக்குப் பிறக்கும் மந்திர சக்தி உடையவர்கள் தாழ்ந்த ஜாதியாம். ஆனால் சமத்துவச் சிந்தனை உள்ளவர்கள் இப்பிரிவினை வாதத்தை எதிர்ப்பதும் போராடுவதும்.
ஆ. "கு க்லக்ஸ் க்லான்" என்ற வெள்ளை நிறவெறி அமைப்புக்கு நிகரான தோற்றமும் பழக்கங்களும் கொண்ட தீயவர் கூட்டம்.
இ.மந்திர உலகின் அரசாங்கமும் அரசியலும்.
ஈ. எல்லாவற்றையும் விட ஹாரி ப்டிக்கும் பந்திரப் பள்ளியான "ஹாக்வார்ட்ஸ்". அங்கு ஹாரியும் அவன் நண்பர்களும் அடிக்கும் லூட்டிகள் அவ்ரகளின் வீர திரச் செயல்களை விட ரசமானவை.
3. ஹாரியின் உயிர்த் தோழி ஹெர்மியோனி பேரும் புகழும் கிடைத்த நாயகனான ஹாரியை விட்டு அவனுக்கு எப்போதும் உற்ற உயிர் நண்பனான ரானை நேசிப்பது. ஹாரியும் அவளை ஒரு சகோதரியாக‌ மட்டுமே பார்ப்பது.
நட்புக்கு இலக்கணம் கூறும் விதத்தில் நடக்கும் இவர்கள் கொஞ்சம் கூடச் சுயந‌லம் இல்லாம‌ல் எப்போதும் துன்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தங்கள் நண்பர்களின் நலனுக்காகவுமே சிந்திப்பது.
4. பேய் பிசாசுகள் எல்லாம் நடமாடினாலும் அவை பாவம் சமர்த்தாக முகமன் கூறி விட்டுச் செல்கின்றன. மேலும் மந்திர உலகில் மட்டுமே அவை இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் குழந்தைகளுக்குப் பேய் பயம் தோன்ற வாய்ப்பில்லை.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அதே போல் குறைகளும் இருக்கலாம், இருக்கின்றன. கட்டாயம் படியுங்கள், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் உங்கள் குழந்தை (பத்து வயதுக்கு மேற்பட்ட) ஹாரிபாட்டர் படிக்க விரும்பினால் தடுக்க ஒன்றும் இல்லை. பயப்பட ஒன்றுமில்லை. "ஸ்லாங்" எனப்படும் கெட்ட வார்த்தைகள் இல்லை. கலாசாரச் சீரழிவு இல்லை. போற்றத்தக்க குழந்தை இலக்கியமா என்று தெரியாது. ஆனால் உங்கள் குழந்தைக்குப் படிக்கும் ஆர்வத்தையும் பழக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும். முன்பின் தெரியாத ஏதோ பூதாகாரமான உலகத்துக்குக் கொண்டு சென்று விடும் என்று அஞ்சத் தேவையே இல்லை.

பி.கு. எல்லா குழந்தை இலக்கியம் போலவே இதை ரசிப்பதற்கும் ஒரு குழந்தையின் உள்ளம் வேண்டும். :-)

13 comments:

Anonymous said...

ஹாரி பாட்டர் புத்தக வரிசை ஏழுடன் முடிந்து விட்டாலும், விசிறிகள் கூட்டத்தில், ஃபேன் பிக்ஷன் என்று ஒன்று பிரபலம். விசிறிகள் எழுதும் ஹாரி பாட்டர் கதைகள் தாம் அவை.

என் மகன் கூட ஒன்று இருக்கிறது. அதை இங்கே படிக்கலாம்

மாதவராஜ் said...

தீபா!

ஹாரிபாட்டரை நான் வாசித்ததில்லை.
ஆனால் மேற்கத்திய சிறுவர் நாவலொன்று இந்த அளவுக்கு நம் சமூகத்தில், அதுவும் சிறுவர் உலகத்தில் நுழைந்திருப்பது இப்போதுதான்.காமிக்ஸ் நாவலின் இடத்தை இந்த ஹாரிபாட்டர் பிடித்துக் கொண்டதற்கு தொலைக்காட்சிகளும், நம் மெட்ரிக்குலேசன் பள்ளி உரையாடல்களும்தான் காரணம் என்று சொல்வேன்.
இதைவிட அற்புதமான கதைகள் அண்டரெண்டா பட்சிகளாக நம் கிராமத்தின் த்மிழ்மொழியில் கவனிப்பாரற்று பறந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரும் அதைக் கவனிக்கக் காணோம்.

ரமேஷ் வைத்யா said...

தீபா,
சபாஷ்! (என்னா ஒரு சமூகப் பார்வை..!)

Deepa said...

ச‌த்திய‌மூர்த்தி!

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி. த‌ங்க‌ள் ம‌க‌னின் கதையைப் ப‌டித்து விட்டுப் பின்னூட்ட‌ம் போடுகிறேன்.
Fan Fiction எனக்குக் கூட முதலில் மிகவும் பிடித்தது. ஆனால் அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் மகன் தன் சுய சிந்தனையுட‌ன் பாத்திரங்கள் உருவக்கிக் கதைகள் எழுதச் சொல்லுங்கள்.

Deepa said...

ர‌மேஷ் வைத்யா!

வ‌ருகைக்கும் நையாண்டிகும் மிக்க‌ ந‌ன்றி!
இது என் ச‌மூக‌ப் பார்வ‌யை வெளிப்ப‌டுத்தும் ப‌திவு அல்ல‌. என‌க்குப் பிடித்த‌ ஒரு புத்த‌க‌ம் ப‌ற்றிய‌து. அவ்வ‌ள‌வே.

Deepa said...

ந‌ன்றி Uncle.

//மேற்கத்திய சிறுவர் நாவலொன்று இந்த அளவுக்கு நம் சமூகத்தில், அதுவும் சிறுவர் உலகத்தில் நுழைந்திருப்பது இப்போதுதான்.//

இதில் நான் சற்று மாறுபடுகிறேன். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது ஊடகக் கவனம் அதிகம் இத்ற்கு கிடைத்திருக்கிறது. என் சிறு வயது முதலே "எனிட் ப்ளைட்டன்" என்ற ஆங்கிலக் குழந்தை எழுத்தாளரின் எழுத்துக்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிக் குழந்தைகளிடயே மிகவும் பிரபலம். எனக்கு அவர் கதைகள் என்றால் உயிர். அம்புலிமாமாவும் ரத்னபாலாவும் எவ்வளவு விரும்பிப் படித்தேனோ அவ்வளவு இதையும் விரும்பி இருக்கிறேன். குழந்தைகளுக்கு ஆங்கில மோகம், மேலை நாட்டு மோகம் எல்லாம் கிடையாது என்பதற்கு வெறென்ன சாட்சி வேண்டும்?
மேலும் ஹாரி பாட்டர் முதல் நாவல் வெளிவந்தது 1997-ல். அப்போது புத்தகம் படிப்பவர்கள் மத்தியில் அது சிறந்த வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் அதைத் திரைப்படமாக எடுத்த பின்பு தான் மிதமிஞ்சிய வெளிச்சம் அதற்குக் கிடைத்தது.

//இதைவிட அற்புதமான கதைகள் அண்டரெண்டா பட்சிகளாக நம் கிராமத்தின் த்மிழ்மொழியில் கவனிப்பாரற்று பறந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரும் அதைக் கவனிக்கக் காணோம்.//

ஆங்கிலேயர் ஆட்சியும் ஆங்கிலமும் நம் நாட்டில் இறக்குமதி ஆனதால் ஆங்கில இலக்கியமும் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டது. வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் நமது பழம்பெருங் கதைக்களஞ்சியங்களைக் க‌ண்டிப்பாக‌ வெளிக் கொண‌ர‌ வேண்டும். ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு அத‌ன் பெருமையை உண‌ர்த்த‌ வேண்டும். படிக்கும் ஆர்வமுள்ள குழ‌ந்தைக‌ள் சுவார‌சிய‌மான‌ எதையும் ப‌டிப்பார்க‌ள். சுட்டிக்காட்டுவ‌து ந‌ம‌து க‌ட்மை..

சரி நானே ஆரம்பிக்கிறேன். என் ஆங்கிலப் பக்கத்தில் என் அடுத்த பதிவு நம் பண்டைய பாட்டி கதைகள் பற்றி. உங்க‌ள் மேலான கருத்தூட்டங்களை எதிர்பார்க்கிறேன். !
:-)

Blogger said...

Harry Potter Movies are Just Hyped Up!!I wonder how people watch it!!
May be books would be Better,I never Read 'em.

கார்க்கிபவா said...

எனக்கும் பிடித்த புத்தகம் இது

Deepa said...

The Rebel!

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி!

கார்க்கி!

Thanks! :-)

narsim said...

good wrieup deepa.

Deepa said...

Thanks Narsim!

Aba said...

சார், நான் நினைத்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். ஏழு புத்தகத்தையும் ஒரே மாதத்தில் முடித்துவிட்டு மேலும் இரு மாதங்கள், ஏன் சிலவேளை இன்றும் அந்த நினைவுகளில் உழல்பவன் நான். ஆறாம் பாகத்தில் டம்பிள்டோர் இறப்பு முன்னமே தெரிந்தாலும் வாசிக்கும்போது அழுகையைத் தவிர்க்க இயலவில்லை. ஏழாம் பாகம் ஒரு அற்புதமான த்ரில்லர். ரௌலிங் கதையை நகர்த்தியிருக்கும் விதமும் முடித்திருக்கும் விதமும் அலாதியானது. ரௌலிங்கின் மிதமான நகைச்சுவையும் அற்புதம். நீங்கள் கூறியதுபோல அரசியல் போன்ற விடயங்களையும் கையாண்டிருப்பது நேர்த்தி.

123 said...

Harry potter is very nice story.Excellent.and making of film is very very super.