Saturday, January 29, 2011

மானமுண்டா இந்திய அரசே?!

எங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)
அவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.

பெருந்தலைவர்களே, மகாநடிகர்களே! அயல்நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்றுச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.

எங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும்? எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை!

தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு

அன்புடையீர்,

தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரோடு இரக்கமற்று விளையாடும் இலங்கைக் கடற்படையினரைத் தடுத்து நிறுத்தக் கோரி நம் பிரதமருக்கு விடுக்கும் மனு இது:

http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?TNfisher

மனசாட்சி உள்ள எவருக்கும் இதன் கருத்து நியாயமாகவே படும் என்று நம்புகிறேன்.

நம் மீனவச் சகோதரர்களின் உயிர் காக்க மனுவில் உங்கள் கையொப்பத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நான் பதிவு செய்து விட்டேன்.

மிக்க நன்றி,
தீபா

Friday, January 21, 2011

காகிதப் பூக்கள்

என் நெருங்கிய தோழி ஜோதிக்கு ஃபோன் செய்தேன். "ஜோதி, நீ காலேஜ்ல‌ ஃபர்ஸ்ட் செமஸ்டர்ல என்ன மார்க் வாங்கி இருந்தே தெரியுமா?" என்று கேட்டேன். "என்னடி திடீர்னு, இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கும்?" என்றாள். நான் உடனே. "மேஜர்ல 90%, கெமிஸ்ட்ரில 86, இங்க்லிஷ்ல 78" என்று அடுக்கவும் அரண்டு போனாள். "ஹேய் எப்பிட்ரி என்னோட மார்க்லிஸ்ட் உன் கையில கெடைச்சுது?" என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.

ஆச்சரியம் ஒன்றுமில்லை; கடிதங்கள்!

வீடு மாறும் போது மறக்காமல் அலமாரியின் மேல் தட்டில் மூட்டைகட்டிப் போட்ட கடிதங்கள் + க்ரீட்டிங் கார்டு கத்தைகளைக் கவனமாக‌ எடுத்தேன்.
நான் கல்லூரியில் இருந்த போது எனக்கு வீட்டிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வந்த கடிதங்கள் மட்டுமல்ல, அக்கா திருமணமான புதிதில் எழுதிய கடிதங்களும், ஏன் நான் வீட்டுக்கு எழுதிய சில கடிதங்களும் கூட அதில் இருக்கும்.

ஆறு மாதத்துக்கொரு முறை இதில் எதையாவது எடுத்துப் படித்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. பழைய காகிதத்தின் வாசனையினூடே நமக்காக நேரம் செலவழித்து, தங்கள் கைப்பட எழுத்தைக் கொட்டி அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தையும் நுகர முடியும்.
நிகழ்கால இறுக்கங்கள் சட்டென்று தளர்ந்து போய் மனம் மலர்வதை உள்ளபடியே உணர முடியும்.

நாமே மறந்து போன பல சுவாரசியமான‌ விஷயங்களை எப்போதோ எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. இன்று கல்லூரியில் படிக்கும் என் அக்கா மகளின் மழலைப் பேச்சுக்களைப் பதிந்து வைக்க அப்போது ப்லாக் இருக்கவில்லை. அக்காவின் கடிதங்கள் அந்த அழகான நாட்களை நினைவுகூரச் செய்கின்றன.

கல்லூரியில் மதிய உணவுக்காக விடுதிக்கு வரும் போது அந்த "லெட்டர்ஸ் காட்" நிறைய அன்றைக்கான கடிதங்கள், (கார்டுகள், இன்லேன்ட் லெட்டர்கள், தடித்த போஸ்டல் என்வெலப்கள், வாழ்த்து அட்டைகள்) நிறைந்து கிடக்கும். அதில் நம் பெயர் போட்ட ஒன்று கண்ணில் பட்டு விட்டால் போதும் உற்சாகம் பீறிடும்.

இன்று? பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் இருப்பவர்களிடம் கூட பத்து பைசாவில் தொலை பேசும் வசதி இருக்கிறது. எஸ்.எம்.எஸ், இமெயில் என்று உடனடியாகத் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. அவ்வளவு ஏன் மனதில் நினைத்ததை சட்சட்டென்று உலகில் எவருடனும் பகிர்ந்து கொள்ளும் பஸ், ட்விட்டர், ப்லாக்...

ஆனால், என் தோழிக்குக் கிடைத்தது போன்ற‌ இன்ப அதிர்ச்சியை இனி யாரும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

கடிதம் எழுதும் கவின்மிகு பழக்கத்தை ஏன் காலம் கரையச் செய்ய வேண்டும்?

சிறு வ‌ய‌தில் படித்துக் கிறுக்கி, நைந்து போன கதைப் புத்தகங்கள் ப‌ல இருக்கின்றன என்றாலும் தொலைந்து போய் விட்ட காலம் கடத்திச் சென்று விட்ட ஏராளமான புத்தகங்களின் இழப்பின் ஏக்கம் இன்னும் என் நெஞ்சிலே.
இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சேர்த்து வைக்க‌ என்ன‌தான் இருக்கும்? பிள்ளைக‌ள் விடுதியில் த‌ங்கிப் ப‌டிக்கிறார்க‌ளா? வீட்டை விட்டு வெளியில் த‌ங்கி வேலை பார்க்கிறீர்க‌ளா? க‌டித‌ங்க‌ள் எழுதுங்க‌ள் மாத‌மொரு முறையாவது; அல்லது வாழ்த்து அனுப்புங்க‌ள்.

ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ளாகத் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன அல்லவா?

Partially மீள் பதிவு!

Monday, January 17, 2011

நேஹா நேரம்

சின்னக் குழந்தை பிறந்தவுடன் வந்து பார்த்த போது,
"ஆஹா...பாப்பா ஜம்ப் பண்ணி வந்துட்டியா...வந்துட்டியா!" என்றெல்லாம் கை தட்டிக் குதூகலித்தாள்.
"பாப்பாக்கு முத்தம் குடுக்கறேன் கை புடிச்சிக்கிறேன்" என்றெல்லாம் பாசமழை பொழிந்தாள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்.
சில வாரங்களில் எதற்காவது பிடிவாதம் பிடித்து அழுகையில் போய்ப் பாப்பாவை அடித்து விடுவது, கையைப் பிடித்து இழுப்பது என்று செய்யத் தொடங்கினாள். ரொம்பவே பயந்து போனேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் குறைந்து வருகிறது என்றே நம்பவிரும்புகிறேன்!

ப்ளே ஸ்கூல் ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு.

"நேஹா! ஸ்கூல்ல உனக்கு யாரு ஃப்ரென்ட்ஸ்?"

"நேத்ரா, ராகவ், ம்ருத்துஞ்ஞ்ஞ்ஜெய், கனிஷ்கா..."

"ராம்?"

"ராம் பையன் புடிக்காது"

"ஏன்டா?"

"ராம் பையன் தல புட்ச்சி இழுக்க்க்க்க்க்குறான்"

"உங்க மிஸ் பேரென்ன?"

"அஞ்சும் மிஸ்..அஞ்சும் மிஸ் கிட்ட ஐ லவ் யூ சொன்னேன்."

"அம்மாவோட பொக்கிஷம் யாரு?"
"நேஹா"
"நேஹா வோட பொக்கிஷம் யாரு?"
"அம்மா"
இது அவள் நல்ல மூடில் இருந்தால் சொல்லிக் கொள்வது.
(ஓகே! ஓகே! நான் ட்ரெயினிங் கொடுத்துச் சொன்னது தான் :))

ஒரு நாள் இதைச் சொல்லிவிட்டு அவளாகவே நீள ஆரம்பித்தாள்:
"அப்பாவோட பொக்கிஷம் ஷைலா
மாது பெரியப்பாவோட பொக்கிஷம் ப்ரீத்து
அம்மு பெரிம்மாவோட பொக்கிஷம் நிகில்
டாரதி அத்தையோட பொக்கிஷம் சூர்யா"

"ஜான் மாமாவோட பொக்கிஷம்?" ‍ ‍
"ம்...டாரதி அத்தை"

"அப்பாயியோட (அவளுடைய பாட்டி) பொக்கிஷம்?"
"ம்...நெல்சன் தாத்தா!"

என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு,
"மாது பெரியப்பா என்னை இப்பிடித்தான் கொஞ்சினாங்க" என்றாள்.
பின்பு, "நான் ப்ரீத்துவை அடிக்கவே மாட்டேன். மாது பெரிப்பா அடிப்பாங்க."

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "நேஹா அந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்துத் தாடா" என்றேன்.

கொண்டு வந்து கொடுத்தாள். திறந்து எடுத்துக் கொண்டு மூடியைக் கீழேயே வைத்தேன்.
போகிற போக்கில் "மூடி வெச்சிடு, அது கொட்டிடும்" என்றாளே பார்க்கலாம், ஜோவின் எகத்தாளப் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை.

"நானே நானே" மேனியா ஆரம்பித்திருக்கிறது. எதையாவது தானே செய்ய விரும்பி அதில் இத்துனூன்டு நாம் செய்து விட்டாலும், கத்திக் கூப்பாடு போடுகிறாள்.
உதாரணம்: தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, நேரமாகிறதே என்று அவசரமாய் ஒரு துண்டு பிய்த்து வாயில் ஊட்டப் போனால் போச்சு! ஊரே இரண்டு படுகிறது. அவளாகவே அரை மணி கழித்து காய்ந்து போன‌ தோசையை ஊட்டிவிடச் சொல்வது வேறு கதை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா பாட்டு ரொம்பப் பிடிக்கும். சிம்பு நடித்த வேறேதோ படம் டிவியில் வந்த போது, அம்மா, "மன்னிப்பாயா மன்னிப்பாயா..." என்று கத்தியதோடு அவ்வப்போது "ஆமாம் கரெக்ட்.. கண்டுபிடிச்சிட்டேனே...." என்று கன்ஃபர்ம் வேறு செய்து கொண்டாள்.
சிம்புவை வில்லன்கள் அடித்த போது ஒரே அழுகை. "மன்னிப்பாயா அடிக்குறாங்க..." அவளுக்காக அன்றொரு நாள் சிம்பு ரசிகையாக மாறவேண்டி வந்தது!

ஸ்ரீ கோல்ட் பருப்பு வகைகளுக்கான‌ விளம்பரம். அதில் ஒரு சிறுவன் பாக்ஸிங் பழகிக் கொண்டிருந்தான். உன்னிப்பாகக் கவனித்த அவள், "அம்மா எனக்கும் நீ ஸ்ரீ கோல்ட் பருப்பு வாங்கிக் குடுக்குவேல்ல? நானும் டிஷ்யூம் டிஷூம் பண்ணுவேன்!" குழந்தைகளை மிகச் சரியாகத் தான் டார்கெட் செய்கின்றன விளம்பரங்கள்.

அவளுக்குப் பிடித்தது எதையாவது செய்து தர ஆரம்பித்தால் ஒரே கொஞ்சல் தான். கையில் தட்டோடு சமையல் கட்டு வாசலிலேயே நிற்கிறாள்."அம்மா, பாப்கார்ன் செய்றியா, நான் இங்கியே நிக்கவா? ஸோ ஸ்வீட்மா." (ரொம்பச் சமத்தாம். உள்ளே வந்து தொந்தரவு செய்ய மாட்டாளாம்!)
அதே போல் செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."