Friday, April 16, 2010

மாயையே! மாயையே!

இந்தப் பாடலில் மகாகவியின் சீற்றமும் வேகமும் அதிகமாக வெளிப்பட்டாலும் எப்போது இதைப் படித்தாலும் மனதில் இனம்புரியாத சாந்தமும் அமைதியும் நிலவுகிறது.

என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப் போல் கனன்று எரிய‌வும் வ‌ல்ல‌து என்பதை பாரதியின் எழுத்துக்களில் தான் முழுமையாகக் கண்டுண‌ர்ந்தேன்!

ஏனோ இன்று இதைத் தேடி எடுத்துப் படிக்கவும் பகிரவும் தோன்றியது.


உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !

10 comments:

Radhakrishnan said...

மிகவும் ரசித்தேன். இப்பொழுதுதான் முதன் முதலாக படிக்கிறேன். அருமை. பகிர்வுக்கு நன்றி தீபா.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு.

Dr.Rudhran said...

சரியானது, சந்தர்ப்பத்திலும், அன்றும், என்றும்.
வாழ்துகள்

காமராஜ் said...

//யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !//


ஆமாம், இந்த மகாகவி கனல் தெறிக்கும் சீற்றக்காரன்.பகிர்ந்தமைக்கு நன்றி தீபா

மாதவராஜ் said...

பிடித்தமான கவிதை. என்ன கம்பீரமும், துணிவும் வரிகளில்! நல்ல நினைவூட்டல்.

AkashSankar said...

மிக மிக அருமையான கவிதை...பாரதியை பகிர்துகொண்டதில் மகிழ்ச்சி...
மன அழுத்தங்களுடன் திரிபவர்களுக்கு நல்ல மருந்து இந்த கவிதை....

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை, அழகான பகிர்வு...

அம்பிகா said...

நல்ல பகிர்வு தீபா.

சந்தனமுல்லை said...

தங்கள் பகிர்வினால் முழுவதுமாக வாசித்தேன். நன்றி! :-)

ரிஷபன் said...

வலிமையான வரிகள்.. எப்போது படித்தாலும் மந்திரம் போல.. நினைவூட்டியதற்கு நன்றி..