Sunday, August 28, 2011

'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.

கேள்வியுற்றதும் நெஞ்சை உலுக்கிய சம்பவம் செங்கொடியின் வீர மரணம். ஆம், அது வீரமரணம் தான். உள்ளம் எத்தனை கொதித்தாலும் வெறுமனே கணினியில் விரல்களைத் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அதை முட்டாள்தனம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

யார் செத்தால் என்ன‌, எங்கே குண்டு வெடித்தால் என்ன, எல்லாமே நாளிதழில் இன்னொரு செய்திதான் என்றிருப்பவர்களுக்கு செங்கொடியின் தியாக‌ம் முட்டாள்த‌னமாக‌த் தெரிவ‌தில் விய‌ப்பென்ன‌?

என்ன‌ ஆயிற்று ந‌ம‌க்கு? கூட்டம் கூட்ட‌மாக அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் 'போரில் சாவு ச‌க‌ஜம்', தூக்குக்க‌யிற்றில் நிர‌ப‌ராதிக‌ள் தொங்கினால், 'அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜம்', விவ‌சாயிக‌ள் ப‌சிக் கொடுமையினால் த‌ற்கொலை செய்து கொண்டால், 'ஏழைக‌ளுக்கு இதெல்லாம் ச‌க‌ஜம்', த‌லித் பெண்க‌ளை ஊரே சேர்ந்து க‌ற்ப‌ழித்துக் கொன்றால், 'சாதிக்கல‌வ‌ர‌த்தில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்'.
தான் உயிராக‌ நினைக்கும் கொள்கை/கோரிக்கைக்காக‌ ஒரு போராளி உயிர் துற‌ந்தால் அது முட்டாள் த‌ன‌ம்! என்று 'ஜ‌‌ஸ்ட் லைக் த‌ட்' க‌ட‌ந்து போகும் நாம் தான், கோடிஸ்வரக்‌ கோமாளி ந‌டிக‌ன் ஒருவ‌ன் உட‌ல்நிலை பாதிக்க‌ப்பட்டால் 'தலைவா,...இறைவா' என்று க‌ண்ணிர் சிந்தி ஊர்வ‌ல‌ம்
போக‌த் த‌யாராக‌ இருக்கிறோம். உட‌ம்பு நோகாம‌ல் வீட்டுக்கு முன் மெழுகுவ‌ர்த்தி ஏற்றி வைத்து விட்டு ஊழலுக்கு எதிராய்ப் பெரும் புர‌ட்சி செய்து விட்ட‌தாய்ப் பெருமை கொள்கிறோம்.

செங்கொடி மூளைச் ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருப்பார், வ‌றுமை/கடன் தொல்லை தாங்க‌ முடியாம‌ல் த‌ற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கும். முத்துக் குமாரின் ம‌ர‌ண‌த்தையும் கொச்சைப் ப‌டுத்தியவ‌ர்க‌ள் தானே நாம்?

சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட்ட‌த்தில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே வ‌ருத்திக் கொள்ப‌வ‌ர்க‌ளையும் கேலிசெய்து இழிவு ப‌டுத்துவது வெகுகால‌மாக‌ ந‌ட‌ப்ப‌து தான். இவ்வாறாக‌த் த‌ன‌து உண‌ர்ச்சிக‌ளை ம‌ர‌த்துப் போன‌ நிலையில் வைத்திருப்ப‌து மாற்றங்களை விரும்பாத சோம்பேறிச் ச‌மூக‌த்துக்கும் அத‌ன் ஊட‌க‌ங்க‌ளுக்கும் வ‌ச‌தியாக‌ இருக்கிற‌து.

இப்பேர்ப்ப‌ட்ட‌வ‌ர்களையும் தங்கள் மரணத்தினால் த‌ட்டி எழுப்ப‌ முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததும், எத்தனையோ காலம் எழுச்சி மிக்க போராட்ட வாழ்வு வாழ்ந்து பல சாதனைகள் செய்திருக்கக் கூடிய உன் இன்னுயிரை உணர்ச்சி வேகத்தில் மாய்த்துக் கொண்டதும், இமாலயத் தவறு தான். ஆனாலும் ச‌கோதரி, நீ முட்டாள் அல்ல; அதுவும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரவர்க்கத்திடமும் தொடர்ந்து கேவலமாய் ஏமாந்து கொண்டிருக்கும் எங்களை விட ‌நீ முட்டாள் அல்ல; நிச்ச‌ய‌மாய் அல்ல‌.

செங்கொடிக‌ள் தீக்கிரையானாலும் ம‌டிந்து ம‌க்கிப் போவ‌தில்லை.

Monday, August 1, 2011

நேஹாவுடனான அவர்களின் நேரம்

நேற்று காலை உண‌வுக்கு ரொட்டி வாங்க வழக்கமாய்ச் செல்லும் க்ரேஸ் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள். அடுத்த நொடி அவர்கள் முகங்களில் பெருத்த ஏமாற்றம். "நேஹா வரலியா? நேஹாவை ஏங்க்கா கூட்டிட்டு வர்ல? அவளைப் பாத்து ஒருமாசம் இருக்கும், இல்ல?"

அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.

என‌க்கு ஏனோ க‌ண்ணில் ச‌ட்டென நீர் கோத்துக் கொண்ட‌து. வீட்டுக்கு விரைந்துவிட்டேன்.

"ஹை! பாப்பா உன் பேர் என்ன‌?...பாப்பா ட்ரெஸ் ந‌ல்லாருக்கே..த‌லை தான் கொஞ்ச‌ம் க‌லைஞ்சிருக்கு."

"போ! உன் த‌ல‌ தான் ந‌ல்லாவேல்ல‌..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்ன‌தை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுட‌ன் ந‌ட்பாகினாள். அங்கு போனாலே அவ‌ர்க‌ள் முறை வைத்துக் கொண்டு வ‌ந்து தூக்கிச் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப‌ நேர‌ம் ஒரு குழ‌ந்தையுட‌ன் விளையாடிக் கொண்டிருக்க‌ முடியாதே.

இத‌ற்கிடையில் என்ன‌ ச‌த்த‌ம் என்று பார்க்க‌ வ‌ந்த‌ சூப்ப‌ர்வைஸ‌ர் பெண்ம‌ணியையும் "ஹேய் நேஹா, இங்க‌பாரு மேட‌ம் கூட‌ உன் ஃபேன் ஆகிட்டாங்க‌" என்று க‌லாய்த்த‌ப‌டி சூழ‌லைச் ச‌க‌ஜ‌மாக்கி விடுவார்க‌ள்.

இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?

உட்காரவோ அலைபேசவோ கூட‌ அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற‌ அலுப்பூட்டும் கேள்விக‌ளையே இட‌மும் வ‌ல‌மும் ச‌ந்தித்த‌ப‌டி இருக்கும் அந்த‌ப் பெண்கள் எப்போதாவது வ‌ந்து வ‌ம்பிழுக்கும் ப‌ரிச்ச‌ய‌மான‌ குழ‌ந்தையின் வ‌ர‌வை ஆவ‌லுட‌ன் எதிர்பார்ப்ப‌தில் ஆச்ச‌ரிய‌மென்ன‌ இருக்க‌ முடியும்?

மாலையில் மென‌க்கெட்டு ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் க‌டைக்கு அனுப்பிவைத்தேன்.