Friday, June 4, 2010

நான் அறிந்த முல்லை!



நேற்றே இந்த இடுகையை எழுத நினைத்தேன். பிர‌ச்னைக‌ள் ப‌ல‌வித‌மாய்த் திரிந்து போனதாலும், என் தனிப்பட்ட அலுவல்களாலும் இயலாமல் போனது.


நான் அறிந்த முல்லையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முல்லையை எனக்குப் பதிவுலகம் வந்த பின் தான் பழக்கம். "தலைகுனிகிறேன்" என்ற இடுகையை நான் எழுதியதை ஒட்டி எனக்குப் பின்னூட்டமிட்டார். பின்பு ராம்சேனா பிரச்னை தொடர்பாகச் சுவாரசியமாகக் கருத்துப் பரிமாறிக் கொண்டது தான் எங்கள் முதல் உரையாடல். நாங்க‌ள் நேரில் ச‌ந்தித்த‌து வெகு சொற்ப‌மான‌ த‌ட‌வைக‌ள். நாங்க‌ள் இணைந்த‌து ஒத்த‌ சிந்த‌னைக‌ளால் அன்றி வேறு தனிப்பட்ட காரணங்களால் இல்லை.

அவரது இயல்பான எழுத்து நடையும் கூர்மையான பார்வையும் என்னை வெகுவாக வசீகரித்தது.
மேலும், ப‌திவுல‌கில் ப‌ல‌ர‌து எழுத்துக்க‌ளை (குறிப்பாகப் பெண் பதிவர்கள், புதிதாக எழுத வருபவர்கள்) "ந‌ல்லாருக்கும் ப‌டிச்சுப்பாரு" என்று என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்தி வைத்த‌வ‌ர் முல்லை. அந்த‌ வ‌கையில் 'மூத்த‌ ப‌திவர்' என்ற‌ பெருமை இவ‌ருக்குச் சால‌ப் பொருந்தும். யாரைப் ப‌ற்றியும் என்னிட‌ம் அவ‌தூறாக‌ப் பேசிய‌வ‌ரில்லை.

மாத‌வ‌ராஜ் அங்கிளின் புத்த‌க‌த்தொகுப்புக்காகவும் வாடாத பக்கங்களுக்காகவும் 250க்கும் மேற்ப‌ட்ட பலதரப்பட்ட தரமான எழுத்துக்களை, புதியவர்களின் சுட்டிக‌ளை அனுப்பித் த‌ள்ளிய‌வ‌ர். "முல்லை அனுப்ப‌ற‌தை எல்லாம் த‌னியா ஒரு நாள் ப‌டிக்க‌ணும், அனுப்பி வெச்சிட்டே இருக்காங்க‌" என்பார் அங்கிள்.

எழுத்தில் சுய‌ந‌ல‌ம் சிறிதும் இல்லாத ஒருவரால் தான் இந்த அளவு மெனக்கெட்டு மற்றவர் எழுத்துக்களை அறிமுகப்படுத்த முடியும். அழுத்த‌மான‌ ச‌மூக‌ப் பார்வையுட‌ன், எழுத்தை விரும்பி நேசிக்கும், ப‌ழக‌வும் ப‌டு ஜாலியான‌வ‌ர் முல்லை. இதெல்லாம் என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பெண்க‌ள் எல்லாருக்கும் தெரியும்.

யாரைப் ப‌ற்றி அந்த இடுகை? எழுதியது யார்? - என்று எதுவும் தெரியாம‌ல், யதேச்சையாகப் பார்த்த‌மாத்திர‌த்தில் அருவருப்படைந்து ப‌திவுல‌கில் த‌ன் முத‌ல் மைன‌ஸ் ஓட்டைப் போட்டு விட்டு ந‌க‌ர்ந்தார் அம்பிகா அக்கா.

அப்படி இருக்கையில், முல்லையுட‌ன் இத்த‌னை ஆண்டுக‌ள் ப‌ழ‌கி, அவ‌ர‌து எழுத்துக்களையும் ம‌க‌ளின் செல்ல‌ப் பேச்சுக்க‌ளையும் ர‌சித்துப் பின்னூட்ட‌மிட்டு, அவ‌ர் தொட‌ங்கிய‌ அம்மாக்க‌ளின் வ‌லைப்பூக்க‌ளில் உறுப்பினராகி இடுகைக‌ள் எழுதிக் கை கோர்த்து வ‌ந்த‌ ச‌கோத‌ரிகளில் குறைந்தது நான்கைந்து பேராவது கண்டனம் தெரிவிப்பார்கள் என்று மிகவும் எதிர்பார்த்தேன்.

நான் ஏற்கனவே மோதிக் கொண்டவள் என்பதால் ரொம்பச் சொல்ல வேண்டாம், நிச்சயம் மற்ற பெண்பதிவர்கள் காட்டமாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று உறுதியாக நம்பினேன். ஏமாந்து போனேன். வருந்துகிறேன். யாரையும் புண்படுத்துவதோ குத்திக் காட்டுவதோ நோக்கமல்ல. ஆனால் மனதில் உள்ளதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஒரே ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் அதுவே எனக்குப் போதும்.

No comments: