Tuesday, January 3, 2012

மயக்கம் என்ன - திரைப்பார்வை

செல்வராகவன் இத‌ற்கு முன் எடுத்த‌ எந்த‌ப் ப‌ட‌த்தையும் முழுமையாக‌ப் பார்க்க‌முடிந்த‌தில்லை. ரெயின்போ காலனி படம் பார்க்கப் போன போது தியேட்ட‌ரை விட்டுத் திட்டிக் கொண்டே வெளியே வ‌ந்திருக்கிறேன். வித்தியாச‌மா எடுக்கிறேன்னு விள‌ங்காத‌ ஒரு குப்பையை எடுத்திருப்பார், பொண்ணுங்களை அநியாயத்துக்குக் கேவலப்படுத்தி இருப்பார், சில‌ சீன்க‌ள் ம‌ட்டும் ர‌சிக்கிற‌ மாதிரி இருக்கும், அத‌ற்காக‌ மூன்று ம‌ணிநேர‌த்தை வீண‌டிக்க‌ப் போகிறோம் என்று நினைத்துத் தான் ப‌ட‌ம் பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். ப‌ட‌ம் பார்த்தால் பைத்திய‌ம் பிடிப்ப‌து நிச்ச‌ய‌ம் என்ற‌ ரீதியில் ஒரு விம‌ர்ச‌ன‌ம் வேறு ப‌டித்திருந்தேன்.

ஆனால் ஒரு (புகைப்ப‌ட‌க்) க‌லைஞ‌னின் ஆசைக‌ள், நிராசைகள் இவ‌ற்றை ஒரு சாமானிய‌ன் உண‌ர்ந்து கொள்ளும் அள‌வு உண்மையாகவும், அல‌ட்ட‌ல்க‌ள் இல்லாம‌லே ம‌ன‌தைத் தொடும் அள‌வுக்கும் ரொம்ப‌ நேர்த்தியாக‌க் காட்டி இருக்கிறார். த‌னுஷ் பிர‌மிக்க‌ வைக்கிறார். ப‌ல‌ இட‌ங்க‌ளில் வாய் விட்டு வாவ் சொல்ல‌வைத்த‌து அவரது ந‌டிப்பு.

முக்கியமாக ஹீரோயிசம் இல்லாமல் ஹீரொவைக் காட்ட முடிவதற்கே ஒரு தைரியம் வேண்டுமே! அதற்காகவே பாராட்டலாம். புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் தான் எடுத்த புகைப்படத்தைத் தனதென்று சொல்லி பேட்டி கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொப்புளிக்க அவனை உதைக்கக் கிளம்பாமல், அவரிடம் மெல்லச் சென்று, "அது என்னோடதுன்னு சொல்லிடுங்க ஸார், உங்களுக்கு இது ஒரு விஷயமா, ஆனா எனக்கு இது லைஃப் ஸார்..." என்று கையாலாகாத்தனத்துடன் தனுஷ் கெஞ்சுவது புதுமை தானே?

தனுஷ் பாட்டியைப் ப‌ட‌ம் எடுக்கும் காட்சி, அது முடிந்த‌தும் த‌லை நிமிர்ந்து யாமினிக்குப் ஃபோன் செய்து பேசுவ‌து - க்ளாஸ்!!

யாமினியாக‌ வ‌ரும் ரிச்சா கண்டிப்பாக வரவேற்க வேண்டிய நடிகை. க‌ண்க‌ள் அப்ப‌டிப் பேசுகின்ற‌ன. சிரிப்பும் கொள்ளை அழகு! வீட்டைக் காலிசெய்ய‌ச் சொல்லும் ந‌ர‌சிம்ம‌னிட‌ம் அவ‌ர் பேசுவது அதிரடி. திரும‌ண‌ம் ஆன‌தும் ஹீரோயின்க‌ள் மொத்த‌மாக அவுட் ஆஃப் கேர‌க்ட‌ர் ஆகிவிடுவார்க‌ள். இந்தப் படத்தில் அது ரொம்ப இல்லையென்றாலும் திரும‌ண‌த்துக்குப் பின் முழுதும் சேலையிலேயே வ‌ருவது, சாமி ப‌ட‌த்துக்கு முன் நின்று கும்பிடுவ‌து போல் காண்பிப்ப‌து எல்லாம் கொஞ்ச‌ம் அந்த‌ ர‌க‌த்தில் இழுத்துக் கொண்டு தான் போகிற‌து. கடைசியில் பாசிட்டிவாக‌ முடித்திருப்ப‌து ச‌ந்தோஷ‌மே என்றாலும் ப‌ட‌ம் முழுதும் இருந்த‌ க்ளாஸ் மிஸ்ஸிங்.

காட்சிகளை மீறி உறுத்தாம‌ல் ர‌ம்மிய‌மாக‌ இசை அமைத்திருக்கிறார் ஜீவீ பிர‌காஷ்.
எங்கிருந்து சுட்டாரோ, ஆனால் ந‌ன்றாக‌வே சுட்டுப் போட்டிருக்கிறார் பாட‌ல்க‌ளை. :-)

ஒரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ச‌க‌ல‌ வித‌ க‌ஷ்ட‌ங்க‌ளையும் ச‌கித்துக் கொள்வ‌தைத் த‌விர‌ வேறு சிற‌ப்பில்லையா பெண்ணுக்கு? அவ‌ன‌து ப‌ர்ஸில் காத‌ல்ம‌னைவி ஃபோட்டோவாக‌ இடம் பெறுவதும் அவனின் குழந்தையைச் சுமப்பதும் தான் அவள்‌ அடைய‌க் கூடிய‌ அதிக‌ப‌ட்ச சந்தோஷம், அந்தஸ்து எல்லாமா? என்றெல்லாம் மனதில் தோன்றினாலும், யாமினியும் கார்த்திக்கும் ம‌ன‌தில் அதைவிட‌ அதிக‌ இடத்தைப் பிடித்து கொண்டுவிட்டார்கள்! ஸோ, எனக்குப் படம் பிடித்திருந்தது.