Wednesday, November 9, 2011

நேஹா நேர‌ம் (after a long break!)

வ‌ள‌ர்ந்து வ‌ருகிறாள். ஓயாத ஆட்டமும் பேச்சும். இர‌வு அவ‌ள் தூங்கிய‌ பிற‌கு தான் (இளையவளும் கண்ணயர்ந்திருந்தால் தான்) த‌‌லை வ‌ருடிக் கொஞ்சி முத்த‌மிட‌ முடிகிற‌து.

Very very moody these days. தின‌மும் வ‌ருகிற‌ எதிர்வீட்டு ஆன்டியை ஒரு நேர‌ம் போ போ என்கிறாள். இன்னொரு நேர‌ம் "ஐல‌வ்யூ ஆன்ட்டி" என்று க‌ட்டிக் கொள்கிறாள்.

அவள் ஏதாவது ரசிக்கிற மாதிரி சொல்லிவிட்டாலோ செய்து விட்டாலோ நாம் ஏதாவது சொல்வதற்குள், ஒரு குறும்புப் பார்வையுடன் "ப்ரில்லியன்ட்", "அமேசிங்", "ரொம்ப ஓவர்" என்று எதையாவது சொல்லிக் கொள்கிறாள்.

சார்ட் வொர்க் செய்ய‌ப் பிடித்திருக்கிற‌து. சார்ட்டையும் வாட்ட‌ர் க‌லர் பாக்ஸையும் கொடுத்து விட்டால் ஒரு அரைம‌ணி நேர‌ம் நிம்ம‌தி.

குட்டிப்பாப்பாவைச் சீண்டுவ‌து அதிகமாகி விட்டது. அதே போல் கொஞ்சுவதும். (இரண்டுக்கும் பொம்மைகளைப் பரஸ்பரம் பிடுங்குவது, அம்மா மடியில் ஏறிக் கொள்வது என்று எல்லாவற்றிலும் போட்டி தொடங்கிவிட்டது. கூடியவிரைவில் இளையவள் முந்தி விடுவாள் என்றும் தோன்றுகிறது.) ஆனாலும் தின‌மும் தூங்கும் போதும் பள்ளிக்குப் புற‌ப்ப‌டும்போதும் எவ்வ‌ள‌வு தாம‌த‌மாகி விட்டாலும் ச‌ரி, "ஷைலாக்கு முத்த‌ம் குடுக்கணும்" என்று த‌ந்து விட்டால் தான் ஆயிற்று.

"இனிமே இப்படிப் பண்ணா குட்டிப்பாப்பாவை பக்கத்து வீட்ல கொடுத்துடுவேன்" என்ற மிரட்டலுக்கு மட்டும் இன்னும் பணிகிறாள். ம‌ற்ற‌ அத‌ட்ட‌ல் மிர‌ட்ட‌லுக்கெல்லாம் ப‌ளிச் ப‌ளிச் ப‌ல்பு தான். ("ஓகே, என‌க்கென்ன போச்சு!" "இல்ல‌, நான் பேட் கேர்ல் தான்.")

"ந‌ம்ம‌ ரென்டு பேரும் சேர்ந்து அம்மாவைப் படுத்தலாமா?"
"ஷைலா நீயும் சாப்பிடாதே."
"நாங்க‌ தூங்க‌வே மாட்ட்ட்டோம். ஆட்ட‌ம் போட‌ப் போறோம்" ‍
இதெல்லாம், "நீ ச‌ம‌த்தா இருந்தா தானே உன் த‌ங்க‌ச்சியும் உன்னை மாதிரியே இருப்பா" என்ற அதிபுத்திசாலித்த‌ன‌மான(!) வினையின் அதிர‌டி எதிர்வினைக‌ள்.


"சாமின்னா என்ன‌டா?"

"ஜீஸ‌ஸ்" (உபயம்: மாமியாரின் திடீர் விசிட்!)

"சாமி என்ன‌டா ப‌ண்ணும்?"

"ஒண்ணுமே ப‌ண்ணாது"

"உன‌க்கு சாமி பிடிக்குமா பேய் பிடிக்குமா?"

க‌ண்க‌ள் விரிய‌ "பேய்!" (காஞ்ச‌னா கொஞ்சம் பார்த்த‌ எஃபெக்ட்!)

முன்யோச‌னை இருக்கிற‌து. That's saying a lot, for being my daughter! ;-) அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது வ‌ண்டியெடுக்கும் முன் கேட் திற‌ந்திருக்கிற‌தா என்று பார்க்காம‌ல் கேட்டின‌ருகே வ‌ந்த‌வுட‌ன் அவ‌ளை இற‌ங்க‌ச் சொல்லிவிட்டு கேட்டைத் திற‌ந்தேன். சில‌நாட்க‌ளுக்குப் பின் ஒரு நாள் வ‌ண்டி எடுத்த‌போது அவ‌ளே சென்று பார்த்து "கேட் திற‌ந்திருக்கும்மா" என்றாள்.

ஒரு நாள் க‌ல‌ந்து வைத்த‌ காப்பி ஒன்று மேசை மீதிருந்த‌து. நான் பார்த்து விட்டு ப்ரியாவிடம், "ஏன் ப்ரியா காலையில் எழுந்து இன்னும் குடிக்கலை. எப்போ கலந்து கொடுத்தேன். காப்பி கூடக் குடிக்காம என்ன பண்றே.." என்று அர்ச்சனை ஆரம்பித்தேன். (ப்ரியா என் அத்தையின் பேத்தி. அவ‌ள் தான் இப்போது குழ‌ந்தைக‌ளைப் பார்த்துக் கொள்கிறாள்) ச‌ம‌ர்த்தாக‌ப் ப‌ள்ளிக்குத் தயாராகி நான் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருந்த‌ நேஹா அங்கு வ‌ந்தாள். காப்பியைப் பார்த்துவிட்டு, "அம்மா! இது உன்தும்மா...ப்ரியா அப்ப‌வே குடிச்சிட்டாம்மா..குடிச்சிட்டுச் சீக்கிரம் குளிக்கப் போம்மா" என்றாள். அப்போது தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ந்த‌து! ப்ரியா என்னைப் பார்த்த‌ பார்வையின் அன‌லையும் மீறி ஏனோ உச்சி குளிர்ந்த‌து!

ஒரு மாதமாக‌ ஊரிலில்லாத‌ அப்பாவை மிஸ் ப‌ண்ணினாலும் முதலில் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளவில்லை. ச‌ரி குழ‌ந்தை ப‌ழ‌கிவிட்டாள் என்று நினைத்திருந்தேன். அன்றொரு நாள் அவ‌ர் அழைத்த போது இவ‌ளைக் கூப்பிட்டுப் பேச‌ச் சொன்னேன். வெடித்து அழுத‌வ‌ள் என்னைக் க‌ட்டிக் கொண்டு பிடிவாதமாகப் பேச ம‌றுத்துவிட்டாள். Stunned!

சின்ன‌தாக‌ இருப்ப‌தால் குழ‌ந்தைக‌ள் சின்ன‌ விஷ‌ய‌ங்களா என்ன? இல்லவே இல்லை!