Saturday, October 29, 2011

முகில் பூக்கள்

மழையின் ரீங்காரப் பின்னணியில் அமைதியாய்க் குழந்தை மடியில் உறங்கி விட, நிச்சலனமாய் முகில்பூக்களை வாசித்த‌ அனுபவத்தை இன்னும் பெய்து கொண்டிருக்கும் இந்த மழையை விட அழகாய்ச் சொல்லிவிட முடியவில்லை

ஆம், மழை எப்போதையும் விட அழகாய்த் தெரிகிறது பிகு சரவணனின் முகில்பூக்களை வாசித்த பிறகு.

இக்கவிதைகளில் அழகு கொஞ்சுகிறது; உண்மையும் மிளிர்கிறது. கவிதைக்குப் பொய் அழகு என்பதை உடைத்தெறிகிறது எளிமையும் உண்மையும் கம்பீரமாய் நடைபயிலும் இக்கவிதைகள்.

கவிதை என்றாலே அலர்ஜி, யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் கவிதை, மடக்கி மடக்கி எதையோ எழுதி விட்டுக் கவிதை என்கிறார்கள் என்று கவிதைகள் குறித்த எதிர்மறையான பார்வை கொண்டோர் எல்லாம் இவரது கவிதைகளைப் படித்தால் கவிதைக் காதலர்களாகி விடுவது நிச்சயம்.

எல்லாமே நேரடிக் கவிதைகள். ஆனாலும் மீள்வாசிப்பில் பல கவிதைகளில் பலவிதமான மறைபொருள்களும் உருவகங்களும் தெரியவரும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது.

இயந்திரமயமாகிப் போன இப்பிளாஸ்டிக் உலகத்தில், பல்வேறு தர்க்கங்களும் வேறுபாடுகளும் நிறைந்த இணைய இலக்கியச் சூழலில், தான் மெய்மறந்து ரசிக்கும் இயற்கையையும் குறிப்பாய் மழையையும் விதவிதமாய் வியந்தோதிக் கொண்டிருப்பது பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது.

ரொம்பவும் பிடித்துப் போன சில இங்கே உங்களுக்காக:

பெய்கிறது மழை
அசைந்து
நடந்து ‍ பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை.
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்.

சிணுங்கிப் பூக்கும் அன்பு
மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்

வழித்துணை
யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது

இசைக் குறிப்புகள்
கடந்து போன‌
நாட்களில் தொலைந்த‌
இசைக் குறிப்புகளை
பாடிக் காட்டுகிறது
அந்தக் குயில்

நிறைய, இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கும் அற்புதமான எழுத்து.

முகில் பூக்கள்
பி.கு. சரவணன்
தகிதா பதிப்பகம்