Thursday, May 26, 2011

நேஹா நேரம்!

"நேஹா, தண்ணி குடிச்சிட்டு டம்ளரை இப்படி தூக்கிப் போடற? இது என்ன பழக்கம்?"

கண்களைச் சிமிட்டித் தலையை ஆட்டி "நல்லப் பழக்கம்"

என்னது?

"ஹிஹி...கெட்டப்பழக்கம்மா"

மாடி வீட்டு ஆன்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது மகனிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த நேஹா அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் போனதும், கவலை தோய்ந்த முகத்துடன்,
"அம்மா, ஆன்ட்டிக்கு என்னம்மா ஆச்சு?"
"கால்ல அடிபட்டிருக்குடா"
"ரொம்ப‌ வ‌லிக்குமா?"
"ஆமாண்டா, க‌ட்டு போட்டு ஊசி போடுவாங்க‌, ச‌ரியாயிடும்"
"இப்ப‌ எங்க‌ இருக்காங்க‌?"
"ஹாஸ்பிட‌ல்ல‌.."
"ம்...ஹாஸ்டபல் பேர் என்ன? நாம போயிப் பாக்கலாமா?"
:)

ந‌ல்ல‌ மூடில் இருந்தால், அவ‌ளைச் செய்ய‌க் கூடாது என்று த‌டுத்து வைத்திருக்கும் வேலைக‌ளை நாம் செய்யும் போது,
"என‌க்கு இப்ப‌ தெரியாதும்மா, பெரிய‌ பொண்ணான‌வுட‌னே நானும் செய்வேன்." என்று சொல்லிக் கொள்கிறாள். இதில் ஸ்கூட்ட‌ர் ஓட்டுவ‌து, க‌த்தியை உபயோகிப்ப‌து, குழ‌ந்தையை குளிப்பாட்டுவது உட்ப‌ட‌ ப‌ல‌ அட‌க்க‌ம்.

அலுவ‌ல‌க‌த்துக்குக்க் கிள‌ம்பும் போது கேட்ட‌ருகே நின்று கொண்டு இருந்தாள். ஹெல்மெட்டை ம‌ற‌ந்து விட்டு மீண்டும் ஓடி வ‌ந்தேன். அய்யோ குழ‌ந்தை நாம் திரும்பி வ‌ந்து விட்ட‌தாக‌ ஏமாந்து விட‌ப் போகிற‌தே என்ற பயம் வேறு. ஆனால் "ஹெல்மெட் ம‌ற‌ந்துட்டியாம்மா? ஹையோ ஹையோ! என்ற‌ப‌டி ஓடிச் சென்று எடுத்து வ‌ந்ததுட‌ன் "போட்டுக்கிட்டுப் போம்மா, விழுந்துடப் போகுது!"

பெரிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ம‌ரியாதை கொடுத்துப் பேசுவ‌து என்ற‌ பேச்சே இல்லை. :‍( (உண்மையில் ரொம்ப‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து என‌க்கு.)

ஆனால் ஒன்ப‌து வ‌ய‌தாகும் என் அக்கா ம‌க‌னை, "நிகில‌ண்ணா, இங்கே உட்காருங்க" என்ப‌தும், அவ‌னை யாராவ‌து அத‌ட்டினால் அவ‌ர்க‌ளுக்கு வ‌சை மாரி பொழிவ‌தும் தாங்க‌ முடிய‌வில்லை.
ஆனால் ஒரு முறை அவனை அத‌ட்டிக் கொண்டிருந்த‌ அவ‌ன‌து அக்காவை எதிர்த்து ஏதோ சொன்னான். உட‌னே இவ‌ள்,
"டேய் நிகில், ம‌ரியாதையாப் பேசுடா."

ஒரு நாள் பக்கத்து ஃப்ளாட் காரரிடம் ஏதோ பேசச் சென்றிருந்தார் ஜோ. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. "அப்பா எங்கே" என்று கேட்டவளிடம், "தெரியாதுடா, பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருப்பாரு. என் கிட்ட சொல்லிட்டுப் போகல" என்று தான் சொன்னேன்.

ஜோ உள்ளே நுழைந்தது தான் தாமதம், "அப்பா! ஏன்பா அம்மாவை விட்டுட்டுப் போனீங்க. கூடக் கூட்டிட்டுப் போலாம்ல? பாவம் அம்மா!" இந்தப் பில்டப்பெல்லாம் நான் சொல்லித் தரவில்லை என்று ஜோவை நம்ப வைக்கப் படாத பாடு பட்டேன்.

அவளுக்குப் பிடித்த பாடல்களை மனப்பாடம் ஆகும் வரை என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறாள். ஓரளவு வார்த்தைகளும் ராகமும் பிடிபட்டவுடன், "நீ பாடாதேம்மா, நானே பாடறேன்!" என்று சொல்லி விட்டு என்னை விட நன்றாகவே பாடுகிறாள். So her claim is justified. :)

Monday, May 16, 2011

மீட்சி

சரியாய் வரவில்லை என்று கசக்கி எறிந்த கவிதை ஒன்று
ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது
செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...
முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை
ஆனாலும்...
எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.