Wednesday, April 28, 2010

பரிசுச்சீட்டு

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.
ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்.

"இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு"

"ஆமா, வந்திருக்கு. ஆனா உன் சீட்டு காலாவதியாயிருக்குமே?"

"இல்ல, செவ்வாய்க்கிழமை தான் வாங்கினேன்."

"நம்பர் என்ன?"

"வரிசை 9,499. நம்பர் 26"

"சரி, இரு பாக்கலாம்... 9,499 26...."

ஐவனுக்குப் ப‌ரிசுச்சீட்டுக‌ளிலெல்லாம் ந‌ம்பிக்கை இல்லை; பொதுவாக‌ இதையெல்லாம் பார்த்துச் சொல்ல‌ச் ச‌ம்ம‌தித்திருக்க‌ மாட்டான். ஆனால் இப்போது 'சும்மா தானே இருக்கோம்' என்றும், க‌ண்முன்னே நாளித‌ழ் கிட‌ந்த‌தாலும் அந்த‌ எண்க‌ளின் மீது விர‌லையோட்டிப் பார்க்க‌ ஆர‌ம்பித்தான்.

ச‌ட்டென்று அவ‌ன‌து ந‌ம்பிக்கையின்மையைக் கேலி செய்வ‌து போல், இர‌ண்டாவ‌து வ‌ரிசையிலேயே அந்த‌ எண் அவ‌ன் க‌ண்க‌ளில் ப‌ட்ட‌து ‍ 9,499.


தன் கண்களையே நம்ப முடியாமல், அடுத்து சீட்டுக்குரிய‌ எண்ணைக் கூடப் பார்க்காமல் பேப்பரை நழுவ விட்டான். திடுமென்று யாரோ வாளி நிறைய சில்லென்ற தண்ணீரை முகத்தில் கொட்டிவிட்டுப் போனதைப் போல் உணர்ந்தான். அடிவயிற்றில் ஜிலீரென்றது.

நடுங்கும் குரலில், "மாஷா 9,499 வரிசை வந்திருக்கு."

அதிர்ந்திருந்த அவ‌னது முகத்தைப் பார்த்த அவன் மனைவி அவன் விளையாடவில்லை என்று உணர்ந்தாள்.

மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டு விட்டு வெளிறிய முகத்துடன் கேட்டாள் ""9,499?"

"ஆமாம், ஆமாம். இதோ இங்கே..."

"சீட்டு நம்பர் என்ன வந்திருக்கு?"
"இரு இரு அதையும் தான் பார்க்க‌ணும்.அனா கொஞ்சம் இரு. எப்படியும் நம்ம வரிசை வந்திருக்கு. புரியுதா."


மனைவியைப் பார்த்து அர்த்தமில்லாமல் சிரித்தான். சின்னக் குழந்தை ஒன்று கண்கவரும் பொம்மையைப் பார்த்தவுடன் சிரிப்பது போல.

அவன் மனைவியும் புன்னகைத்தாள். அவளுக்கும் அவன் வரிசை எண்ணை மட்டும் பார்த்து சீட்டு எண்ணைப் பார்க்காமல் சற்றுத் தாமதித்தது பிடித்திருந்தது. ஆஹா! கிடைக்கப் போகும் புதையலைப் பற்றிக் கனவில் திளைப்பது தான் எவ்வளவு இன்பமானது!


"நம்ப வரிசை தான் வந்திருக்கு. நம்ப நம்பராக் கூட இருக்கலாம். ஒரு சான்ஸ்தான்... ஆனா அப்படியே இருந்துட்டா?"

"அய்யோ சீக்கிரம் பாரேன்!"

"கொஞ்சம் பொறு. ஏமாற்றமடைய நமக்கு நிறைய நேரமிருக்கு. மேலேர்ந்து ரெண்டாவது வரிசை. அதனால பரிசுத் தொகை எழுபத்திஅஞ்சாயிரம் ரூபிள்.
அது வெறும் ப‌ணம் இல்லம்மா. முதலீடு, அதிகாரம்! இதோ ஒரு நிமிஷத்துல பார்க்கப் போறேன். இருபத்திஆறாம் நம்பர் மட்டும் இருந்திச்சுன்னா? ஏய்! நாம நெஜம்மாவே ஜெயிச்சிட்டோம்னா?"


கணவனும் மனைவியும் கலகலவெனச் சிரித்து ஓய்ந்து ஒருவரை ஒருவர் மௌனத்துடன் வெறிக்க ஆரம்பித்தனர். அவ்வளவு பணத்தை ஜெயித்து விடக்கூடும் என்ற நினைப்பே அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.
எழுபத்தி ஐயாயிரம் ரூபிள்களுக்குத் தங்களுக்கு என்ன தேவை, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன வாங்குவது என்று அவர்களைக் கேட்டால் தெளிவாக நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. 9499 என்ற எண்ணையும் 75000 என்ற எண்ணையும் மாறி மாறிக் கற்பனை செய்து கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஐவன் பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினான். கொஞ்சம் படபடப்பு அடங்கியதும், பணம் கைக்கு வந்தால் என்ன செய்யலாமென்று நிதானமாக எண்ணமிட‌ ஆரம்பித்தான்.

"நாம மட்டும் ஜெயிச்சிட்டா, நமக்கு ஒரு புது வாழ்வு தொடங்கிடும்; அப்படியே எல்லாம் தலை கீழா. அந்தச் சீட்டு உன்னோடது. என்னோடதா மட்டும் இருந்தா முதல்ல இருபத்தையாயிரத்துக்கு ஒரு எஸ்டேட் வாங்குவேன். பத்தாயிரம் உடனடி செலவுகளுக்காக. வீட்டுக்குப் புது சாமான் செட்டுகள், ஊர் சுத்திப் பார்க்க, கடன்களை அடைக்க.. அப்புறம் மீதி நாற்பதாயிரத்தை பாங்க்ல போட்டு நிம்மதியா வட்டி வாங்கிட்டு இருக்கலாம்."


"ஆமா ஒரு எஸ்டேட் வாங்கினா நல்லாத் தான் இருக்கும்" என்றபடி நாற்காலியில் சாய்ந்தாள் அவன் மனைவி.

"டூலா, இல்லேன்னா ஓர்யோல்ல வாங்கணும். அப்போ தான் அதை டூரிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட்டா நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்."

அவனது மனதில் மேன்மேலும் செழிப்பான வாழ்க்கை குறித்து வரையறை இல்லாமல் சித்திரங்கள் பெருகத் தொடங்கின. அவற்றிலெல்லாம் தன்னை ஒரு வசதியான கனவானாக, இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த கவலையில்லாத மனிதனாகக் கண்டான். கோடைக்காலத்தில் வீட்டுக்கு வெளியே சின்னச் சிற்றோடையின் அருகே மரத்தடியில் படுத்திருக்கிறான். அவனது சின்ன மகனும் மகளும் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'இன்னிக்கு வேலைக்குப் போக‌ வேண்டாம்; 'இன்னிக்கு ம‌ட்டுமில்ல‌, இனி எப்ப‌வுமே போக‌ வேண்டாம்' என்ற‌ நினைப்பே அவ‌னுக்குச் சொல்ல‌ முடியாத‌ சுகமாக‌ இருக்கிறது. ச‌ற்று நேரம் க‌ழித்து வ‌ய‌ற்காட்டுப் ப‌க்க‌ம் போகிறான். அப்ப‌டியே காட்டுக்குள் காளான் சேக‌ரிக்க‌; இல்லையென்றால் ஆற்றுக்குப் போய் குடியான‌வ‌ர்க‌ள் மீன்பிடிப்ப‌தை வேடிக்கை பார்க்க‌.

அந்தி சாயும் நேர‌த்தில் பூத்துவாலையும் சோப்பும் எடுத்துக் கொண்டு மிக‌ அழ‌கிய‌ ப‌ளிங்கு குளிய‌ல‌றைக்குச் செல்கிறான். சாவ‌காச‌மாக‌ உடைக‌ளைக் க‌ளைந்து சோப்பு நுரைகள் நிறைந்த தொட்டியில் மூழ்கிக் குளிக்கிறான். குளித்த‌ பிற‌கு க்ரீம் ரொட்டிக‌ளும் தேனீரும் சாப்பிடுகிறான். மாலையில் வாக்கிங் போகிறான் அல்லது நண்பர்களுடன் கேளிக்கைக‌ளில் ஈடுப‌டுகிறான்.

"ஆமா, ஒரு எஸ்டேட் வாங்கினா ந‌ல்லாத்தானிருக்கும்" - அவ‌ன் ம‌னைவி அவ‌ன் நினைவுக‌ளைக் க‌லைத்தாள். அவ‌ள் முக‌பாவ‌னையிலிருந்து அவ‌ளும் ஆழ்ந்து க‌ற்ப‌னை செய்து கொண்டிருந்தாள் என்று தெரிந்த‌து.


ஐவ‌ன் இப்போது இலையுதிர்க் கால‌ங்க‌ளைப் ப‌ற்றிக் க‌ன‌வு காண‌ ஆர‌ம்பித்தான். அந்த‌ப் ப‌ருவ‌த்தில் தோட்ட‌த்திலும் ஆற்ற‌ங்க‌ரையோர‌மாக‌வும் நீள‌ ந‌டைக‌ள் ந‌ட‌ப்பான். பின்பு குளிர் அதிக‌மான‌வுட‌ன் வீட்டுக்கு வ‌ந்து ஒரு பெரிய‌ கோப்பை வோட்கா அருந்துவான்; காளான்களும் வெள்ளிரிகாய்களும் சேர்த்துச் ச‌மைத்த‌ க‌றி சாப்பிடுவான். தோட்ட‌த்திலிருந்து பிடுங்கிய‌ கார‌ட்டுக‌ளையும் முள்ள‌ங்கிக‌ளையும் அள்ளிக் கொண்டு குழ‌ந்தைக‌ள் ஓடி வ‌ருவார்க‌ள். பின்பு இவ‌ன் சோபாவில் நீட்டிப் ப‌டுத்துக் கொண்டு ப‌ள‌ப‌ள‌க்கும் அட்டை கொண்ட‌ ஏதாவ‌து வார‌ இத‌ழைப் புர‌ட்டிய‌வாறே தூங்கிவிடுவான்.

இலையுதிர் கால‌த்துக்குப் பிற‌கு க‌டுமையான‌ குளிர் மற்றும் மழைக் கால‌ம் வ‌ருமே. அப்போது எங்கும் போக‌ முடியாது. வீட்டு நாய்க‌ளும், மாடுக‌ளும் கூட‌ச் சோர்ந்து ப‌டுத்திருக்கும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டிய‌து தான். என்ன‌ கொடுமை!

அப்போது தான் க‌ற்ப‌னையை நிறுத்தி ம‌னைவியைப் பார்த்தான் ஐவ‌ன்.
"நான் வெளிநாடு போக‌ விரும்ப‌றேன் மாஷா."

அடுத்து குளிர்கால‌த்தில் போக‌ விரும்பும் நாடுக‌ளைப் ப‌ற்றி எண்ண‌மிட்டான்; இத்தாலி, இந்தியா?!

"நானும் க‌ண்டிப்பா போவேன். ஆனா முத‌ல்ல டிக்கட் ந‌ம்ப‌ரைப் பாரு!"

"இரு.. இரு..."

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ன் த‌ன் ம‌னைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றால் எப்ப‌டியிருக்கும் என்று எண்ணினான். த‌னியாகப் போவ‌து ஆன‌ந்தமாக‌ இருக்கும். இல்லாவிட்டால் குடும்ப‌ வாழ்க்கையைப் ப‌ற்றியும் நாளையைப் பற்றியும் பெரிதும் அக்க‌றையில்லாத‌ சில‌வ‌கைப் பெண்க‌ளுட‌ன் சென்றால் ந‌ன்றாக‌ இருக்கும்! ச‌தா குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றிய பேச்சும், ஒவ்வொரு பைசா செல‌வையும் க‌ண‌க்குப் பார்க்கும் புல‌ம்ப‌ல்க‌ளையும் த‌விர்க்க‌லாம்.

ஐவ‌ன் த‌ன் ம‌னைவியுட‌ன் ஏதோ ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வதை நினைத்துப் பார்த்தான். ஒரு பாடு மூட்டை முடிச்சுக‌ள், பைக‌ள் கொண்டு வ‌ருவாள். அத்தோடு 'ர‌யில் பிர‌யாண‌ம் ஒத்துக்க‌லை, த‌லை வ‌லிக்குது, இதுவரைக்கும் எவ்ளோ ப‌ண‌ம் விர‌ய‌ம் ப‌ண்ணிட்டோம்' என்று எதைப் ப‌ற்றியாவ‌து புல‌ம்பிக் கொண்டிருப்பாள். மேலும் ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் சுடு த‌ண்ணீர் பிடிக்க‌வும், தின்ப‌ண்ட‌ங்க‌ள் வாங்க‌வும் நாயாக‌ நாம் ஓட‌ வேண்டி இருக்கும். 'என‌க்குக் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கு அநியாய‌ பிசுநாரித்த‌ன‌ம் ப‌ண்ணிக்குவா! டிக்க‌ட் அவ‌ளுதாச்சே. என்னொட‌தில்லையே? த‌விர‌ அவ‌ளைக் கூட்டிக்க்கிட்டு வெளிநாடு போற‌துல‌ என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம்? அவ‌ளுக்கு அங்கே என்ன‌ வெச்சிருக்கு? ஹோட்டல் ரூம்ல‌யே அடைஞ்சு கிட‌ப்பா. என்னையும் எங்கையும் போக‌ விட‌மாட்டா; ஆமா!'

அப்போது தான் முத‌ன் முறையாக‌த் த‌ன் ம‌னைவிக்குக் வ‌யதாகி அவலட்சணமாகி விட்ட‌தாகவும், தானோ இன்னொரு முறை க‌ல்யாண‌ம் செய்து கொள்ளும் அள‌வு இளமை மாறாமல் இருப்பதாகவும் உண‌ர்ந்தான்.

'ஹூம் இவ‌ளுக்குப் ப‌ண‌ம் கிடைச்சிட்டா, என‌க்குத் தெரியாம‌ ம‌றைச்சிடுவா. அவ‌ சொந்த‌க் கார‌ங்க‌ளுக்கெல்லாம் ந‌ல்லாக் குடுப்பா. என‌க்குத் த‌ர்ர‌துக்கு ரொம்ப‌ அல‌ட்டிக்குவா.'

ஐவ‌ன் இப்போது அவ‌ள‌து உற‌வின‌ரைப் ப‌ற்றி நினைத்துப் பார்த்தான். அவளுடைய மாமா, ம‌ச்சான், அக்கா, த‌ங்கை, அண்ண‌ன் த‌ம்பி மார்க‌ளெல்லாரும் ப‌ரிசு விழுந்த‌ செய்தி கேட்ட‌தும் ஓடோடி வ‌ருகிறார்க‌ள். கூச்ச‌லும் போலி சிரிப்புமாய் பிச்சைக்கார‌ர்களைப் போல் இவ‌ர்க‌ள் வீட்டையே சுற்றிச் சுற்றி வ‌ருகிறார்க‌ள். எவ்வ‌ள‌வு கொடுத்தாலும் திருப்தியாகாம‌ல் திரும்ப‌த் திரும்ப் வ‌ருகிறார்க‌ள். கொடுக்க‌ முடியாதென்று ம‌றுத்தாலோ அடிவ‌யிறு குலுங்க‌ச் ச‌பித்து விட்டுப் போகிறார்க‌ள்.


பிற‌கு த‌ன் உற‌வின‌ர்க‌ளையும் நினைத்துப் பார்த்தான். இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி முன்பு விருப்பு வெறுப்பு ஏதுமில்லையென்றாலும் இப்போது இவ‌ர்க‌ளை நினைக்க‌வும் அருவ‌ருப்பாக‌ இருந்த‌து. "எல்லாம் ப‌ச்சோந்திக‌ள்."

பார்க்க‌ப் பார்க்க‌ ம‌னைவியின் முக‌மும் விகார‌மாக‌த் தெரிந்த‌து. அவ‌ளைப் ப‌ற்றிக் கோப‌மும் ஆத்திர‌மும் பொங்கி எழுந்த‌து. 'அவளுக்கு என்ன‌ தெரியும் ப‌ண‌த்தைப் ப‌த்தி? க‌ஞ்ச‌ப் பிசுனாறி! அவ மட்டும் ஜெயிச்சான்னா போனாப் போவுதுன்னு என‌க்கு நூறு ரூபிள் த‌ந்துட்டு எல்லாத்தையும் பூட்டி வெச்சுக்குவா."

ஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தான். அவளும் அதே வெறுப்பும் ஆத்திரமுமாய் அவனைப் பார்ப்பதைக் கண்டான். அவளுக்கும் சொந்தக் கற்பனைகள், திட்டங்கள் இருந்தனவே! கணவனின் மனவோட்டத்தையும் அவள் அனுமானித்திருந்தாள். தனக்குப் பரிசு கிடைத்தால் முதலில் பிடுங்கிக் கொள்ள நினைப்பவன் அவன் தான் என்று உணர்ந்திருந்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் அவ‌னைப் பார்த்து, 'அடுத்த‌வ‌ங்க‌ செல‌வில குளிர் காய‌ற‌து ரொம்ப‌ சுக‌மாத்தான் இருக்கும்; நினைச்சுக் கூட‌ப் பார்க்காதே' என்று சொல்வ‌தைப் போலிருந்த‌து.


ஐவ‌னுக்கு அது புரிந்த‌து. ம‌ன‌தில் மீண்டும் வெறுப்பு ம‌ண்ட, அவளை வெறுப்பேற்ற விரும்பி, அவசர அவசரமாய்ப் பேப்பரை எடுத்தான்; நாலாம் பக்கத்தைப் பிரித்து வெற்றிக் கூக்குரலுடன் படித்தான்.

"வ‌ரிசை 9,499. எண் 46, 26 இல்ல‌."

வெறுப்பும் கனவுகளும் ஒருசேர ம‌றைந்து போயின‌. திடீரென்று இருவருக்கும் தங்கள் வீடு இருண்டும் குறுகியும் தெரிந்தது. சற்று நேரத்துக்கு முன் ரசித்துச் சாப்பிட்ட‌ உண‌வு தொண்டையிலேயே நிற்ப‌தாக‌ப் ப‌ட்ட‌து. பொழுது க‌ன‌த்து வெறுமை ப‌ட‌ர்ந்தது.

"என்ன‌ எழ‌வு இதெல்லாம்?" சிடுசிடுக்க‌ ஆர‌ம்பித்தான் ஐவ‌ன். "வீட்ல‌ எங்க‌ பாத்தாலும் குப்பையும் கூள‌முமாய். வீட்டை ஒழுங்காக் கூட்டறதே இல்ல. எங்க‌யாவது வெளிய போய்த் தொலையலாமான்னு இருக்கு. போய் முதல் வேலையா தும்பைச் செடியில தூக்குப் போட்டுக்கப் போறேன்."

ஆன்டன் செகாவ் எழுதிய "The Lottery Ticket" என்ற ருஷ்யச் சிறுகதையின் தமிழாக்கம்.

Monday, April 19, 2010

இரண்டே இரண்டு வாழ்க்கை வேண்டும்!

தொடுவானம் வெறித்துச் சிற்றலைகள் கால்தழுவ,
கவனமாகக் காலூன்றிக் கரையோரம் நிற்க ஒன்று;
பொங்கியெழும் பிரவாகமும் 'ஹோ'வென்ற இரைச்சலுமாய்
கொந்த‌ளிக்கும் க‌ட‌லினுள்ளே பாய்ந்து செல்ல‌ இன்னொன்று

இருளட‌‌ர்ந்த‌ காட‌த‌னைக் க‌ட‌க்க‌ப் ப‌ய‌ந்து விடியும் வரை
ஆளரவம் காட்டாமல் கூடார‌த்தினுள் கிட‌க்க‌ ஒன்று
தீப்ப‌ந்த‌ம் கையிலேந்திக் காடே கிடுகிடுக்க,
ஏறுக‌ளும் அஞ்சியோட‌ வீறு ந‌டை ப‌யில‌ ஒன்று

சாலையோர‌ம் கையேந்தும் பச்சிளம் ம‌லரதனைப்
பார்த்தும் பார்க்காம‌ல் பெருமூச்சுடன் கடக்க‌‌ ஒன்று;
ஓடிச் சென்று அள்ளிய‌ணைத்து உற்றதோடு பெற்றதையும்
உயிராய் நினைத்தே அருமையுட‌ன் வ‌ள‌ர்க்க‌ ஒன்று

அடைப்பெடுக்க‌ வ‌ந்த‌வ‌ரைத் தெருவில் நிறுத்திக் கூலி தந்து
கைபடாமல் சோப்பும் தந்து முக‌ம்சுளித்து அனுப்ப‌ ஒன்று;
வெந்நீர்போட்டுக் குளிக்க‌வைத்து, வாய்க்குருசியாய் விருந்த‌ளித்துக்
குசலம்பேசிக் கும்பிட்டுக் கைகுலுக்கி அனுப்ப ஒன்று.

கட்டம்பார்த்துத் திட்டம்போட்டு, வெட்டுக்கஞ்சி எட்டி நின்று
சொக்கட்டான் காயாக அற்பமாக வாழ ஒன்று;
ம‌டியில் க‌னமுமின்றி வ‌ழியில் ப‌ய‌முமின்றி
ஒரு வாழ்வு ஒரு சாவென‌ப் போராளியாய் வாழ‌ ஒன்று.

Friday, April 16, 2010

மாயையே! மாயையே!

இந்தப் பாடலில் மகாகவியின் சீற்றமும் வேகமும் அதிகமாக வெளிப்பட்டாலும் எப்போது இதைப் படித்தாலும் மனதில் இனம்புரியாத சாந்தமும் அமைதியும் நிலவுகிறது.

என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப் போல் கனன்று எரிய‌வும் வ‌ல்ல‌து என்பதை பாரதியின் எழுத்துக்களில் தான் முழுமையாகக் கண்டுண‌ர்ந்தேன்!

ஏனோ இன்று இதைத் தேடி எடுத்துப் படிக்கவும் பகிரவும் தோன்றியது.


உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !

Thursday, April 15, 2010

கதைகளைப் பேசும் விழியருகே...

அங்காடித் தெரு...எல்லாரும் சென்று சிக்கி மீண்டு கொண்டிருந்த நேரத்தில் போய்ச் சிக்கிக் கொண்டேன். இன்னும் மீள‌ முடியாம‌ல் அங்கேயே உழ‌ன்று கொண்டிருக்கிறேன்.

ஒரு படத்துக்குச் சென்று டிக்கெட் இல்லை ஹவுஸ் ஃபுல் என்று சொன்னதற்காக முதன் முதலில் மகிழ்ந்தது இதற்குத் தான்! ஆம், முதல் நாள் போய்க் கேட்ட போது "பையா" க்கு வேணா இருக்கு. அங்காடித் தெரு இரண்டு நாளைக்கு ஃபுல்." என்று சொன்ன போது ஏமாற்றத்தையும் மீறி ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. யதார்த்தமான நல்ல படத்துக்கு மக்கள் அங்கீகாரம் அதிகரித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? அடுத்த நாள் இரவுக் காட்சிக்குத் தான் செல்ல முடிந்தது.

ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ விமர்சனமோ என் பார்வையோ எழுத என்னால் முடியாது. அதிர்ச்சி க‌ல‌ந்த‌ உண‌ர்வுக‌ளின் க‌ல‌வை ம‌னதை அந்த‌ப் ப‌க்குவ‌த்துக்குக் கொண்டு வ‌ர‌வில்லை. சுற்றி உள்ள வாழ்க்கையையே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைத்த படத்தைத் தள்ளி நின்று எந்தப் பார்வை கொண்டு பார்ப்பது? எனக்கெல்லாம் இப்படிப்பட்ட படைப்புகள் பலவிதத்தில் பாடங்கள். பாடங்களை விமர்சிப்பதை விடவும அவற்றிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் நலம்.

ஆனால் இசையைப் பொறுத்த‌வ‌ரை ம‌ட்டும் சொல்லக் கொஞ்சம் இருக்கிற‌து.
மூன்று பாட‌ல்க‌ள் போட்டி போட்டுக் கொண்டு ம‌ன‌தை ஆக்கிர‌மிக்கின்ற‌ன‌.

1. கதைகளைப் பேசும் விழியருகே - எப்போது கேட்டாலும் அற்புதமான அந்த ஒவ்வொரு காட்சியும் ம‌ன‌தில் திரையோடிக் க‌ண்க‌ளின் ஓர‌ம் க‌ரிக்கிற‌து.

2. உன் பேரைச் சொல்லும் போதே ‍- ஆஹா... ! சொல்ல‌ ஒன்றும் இல்லை. Wonderful rendering by Shreya Goshal and Haricharan.
இவ‌ர்க‌ள் இருவ‌ரையுமே என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும். வேற்று மொழிப் பாட‌கர்க‌ளில் த‌மிழைத் த‌மிழாக‌ப் பாடும் ஒரே பாட‌கி ஷ்ரேயா கோஷ‌ல் தான். அற்புதமான குரலும் திறமையும் ஒரு புறம்; மேலும் ஒரு மொழி தெரியாவிட்டாலும் அதன் ஜீவன் சிதையாமல் கற்றுக் கொண்டு பாடும் அவ‌ர‌து அந்த‌ சின்சியாரிடிக்கு Hats Off!

ஹ‌ரிச‌ரண்: காத‌ல் ப‌ட‌த்தில் பாடிய‌து முத‌லே இவ‌ர் all time favorite ஆகி விட்டார். எத்தனையோ பாடகர்கள் பெருகி விட்டாலும் உண‌ர்ச்சி, பாடலின் பாவ‌ம் உண‌ர்ந்து பாடுவ‌தில் இவ‌ருக்கு நிகர் இவர் தான். (உனக்கென இருப்பேன் ‍- காதல், தொட்டுத் தொட்டு என்னை ‍- காதல், சரியா தவறா ‍- கல்லூரி.)

3. அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை - ர‌ம்மிய‌மான‌ தாலாட்டைப் போல் இருக்கிற‌து. ஓகே!

இந்த அளவுக்குச் சிலாகித்துப் பின்னணி இசையைச் சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே பல இடங்களில் காட்சியுடன் ஒன்றுவதைத் தடுக்கும் வகையில் உறுத்தியது. அதனாலேயே அதன் பிழை கவனத்தையும் ஈர்த்தது.

கனியும் லிங்குவும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். மறக்கவே முடியாத பாத்திரப்படைப்பு. உயிர் கொடுத்த அஞ்சலிக்கும் மகேஷுக்கும்.. ஓஹோ! பிரமிக்க வைக்கும் நடிப்பு.
மாரிமுத்து வாக வந்த் "பாண்டி" அடேயப்பா... இவருக்குள் இத்தனை திறமையா? Overall, brilliant cast.

(பி.கு 1: ராம‌னாத‌ன் தெருவுக்குச் சென்று அந்த‌ மெஸ் இருக்கிற‌தா என்றும் அதைப் பார்வையிட‌ வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிற‌து. செய்வேனா என்று தெரியவில்லை.

பி.கு 2:
எத‌ற்காக‌ இந்த‌த் த‌லைப்பு என்று கேட்ப‌வ‌ர்க‌ள் இங்கே செல்ல‌வும்:
http://www.youtube.com/watch?v=tBkmKr0iVQk

இறுதியாக, நன்றி வசந்தபாலன்! மிக்க நன்றி.

Friday, April 9, 2010

எலிஃபென்ட் சாமியும் தாடி தாத்தாவும்

என் நாத்தனார் மகள் படு சுட்டி. ஒன்றரை வயதில் பேசத் தொடங்கிய அவள் மூன்று வயதுக்குள் நீட்டி முழக்கிப் பாட்டி கணக்காய்ப் பேசத் தொடங்கி விட்டாள். ஊருக்குப் போகும் போது அவள் வீட்டில் இருந்தால் பொழுது போவதே தெரியாது.

அவளது அம்மாச்சி (என் மாமியார்) பேசுவதைக் கேட்பது போலவே இருக்கும் பாவமும், பெரியமனுஷத்தனமும்.
அவள் பேசியதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் தனிப்பதிவே போட வேண்டும். முன்பொரு முறை போட்டும் இருக்கிறேன். இப்போது விஷயம் அதுவல்ல.

கடவுள் பக்தி அதிகம் உள்ள என் மாமியார் அவளுக்கு நிறைய ஜெபங்களூம் தோத்திரங்களும் சொல்லிக் கொடுத்திருந்தார். மேலும் "தற்குறிப்பேற்ற அணி" யாகக் குழந்தைக்கு இயற்கையிலேயே கடவுள் பக்தி அதிகம் எனவும் சொல்லி ம‌கிழ்வ‌து அவ‌ர்க‌ள் வ‌ழ‌க்க‌ம்.

ஒரு நாள் எல்லாரும் அம‌ர்ந்திருக்கத் தான் சொல்லிக் கொடுத்த‌ ஜெப‌ங்க‌ளையெல்லாம் வ‌ரிசையாக‌ச் சொல்ல‌ச் சொன்னார்க‌ள். அவ‌ள் அழ‌காக‌ ம‌ழ‌லைக் குர‌லில் சொல்லிக் கொண்டிருந்த‌தை எல்லாரும் ர‌சித்துக் கொண்டிருந்தோம். அத்தை மட்டும் க‌ண்க‌ள் மூடி ஜெபிக்க‌வே தொட‌ங்கி விட்டார்க‌ள். இறுதியாக‌ "ம‌ன்மத‌ராசா ம‌ன்ம‌த‌ராசா..." என்று அதே சிரத்தை‌யுட‌ன் குழ‌ந்தை பாட‌வும் ப‌த‌றிப் போய் அதை அத‌ட்டி உட்கார‌ வைத்தார்க‌ள்.

எல்லாருக்கும் சிரிப்புத் தாங்க‌ வில்லை. சுட்டித் தனமான குழந்தை எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பார்த்தாலும் பிடித்துக் கொண்டு அழகாகச் சொல்கிறது. அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுங்கள் என்று சமாதானப் படுத்தினோம்.

நான் குழ‌ந்தையாக‌ இருந்த‌ போதும் இப்ப‌டித் தான் அண்ண‌னும் அக்காவும் சொல்கிறார்க‌ள் என்று ஆவேச‌த்துட‌ன் நானும் க‌ந்த‌ர் ச‌ஷ்டிக் க‌வ‌ச‌ம் முழ்தும் க‌ஷ்ட‌ப்பட்டு வாசித்து முடிப்பேன். என் அம்மாவும் "பொண்ணுக்கு என்ன‌ ப‌க்தி" என்று ம‌கிழ்ந்திருக்க‌க் கூடும். ப‌க்த‌ துருவ‌ மார்க்க‌ண்டேய‌ன் ப‌ட‌ம் பார்த்து விட்டு வ‌ந்த போதோ, ஞாயிற்றுக் கிழ‌மை வீட்டில் "க‌ந்த‌ன் க‌ருணை" பார்த்த‌ போதோ ப‌க்தி பீறிட்டு ம‌ன‌தில் எழுந்த‌தை நானும் உண‌ர்ந்திருக்கிறேன்.

அது ம‌ட்டும‌ல்ல, மூன்றாவது படிக்கும் போது புனித‌ வெள்ளிய‌ன‌று "தேவ‌ மைந்த‌ன் போகின்றான்" பாட்டை ஒளியும் ஒலியும் ‍இல் பார்த்து விட்டுக் க‌த‌றிக் க‌த‌றி அழுததும் அத‌ற்காக‌ அண்ண‌னும் அக்காவும் என்னை ஓட்டித் த‌ள்ளிய‌தும் நான் ம‌ற‌க்க‌ விரும்பும் த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ங்க‌ள்.

வீட்டில் பெரிதாக‌ப் பூசை, விர‌த‌ம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அமாவாசை, கிருத்திகை, ச‌ஷ்டி இத்யாதிக‌ள் பார்க்கும் வ‌ழ‌க்க‌மெல்லாம் அம்மாவுக்கு இருந்த‌தில்லை. மாலையில் தின‌மும் சாமி விள‌க்கேற்றுவார்க‌ள்.ப‌ண்டிகைக‌ள் வ‌ந்தால் சாமி ப‌ட‌ங்க‌ளுக்குப் பூ போட்டு, ப‌டைய‌ல் வைத்துக் க‌ற்பூர‌ம் காட்டுவார்க‌ள். ச‌னிக்கிழ‌மைக‌ளில் காக்காவுக்குச் சாத‌ம் வைப்பார்க‌ள். அவ்வ‌ள‌வு தான்.

நானும் பெரிதாக‌ப் ப‌க்தி என்றும் இல்லாம‌ல், நாத்திக‌மென்றும் இல்லாம‌ல் கோயிலுக்கெல்லாம் போய் வ‌ந்து கொண்டு தானிருந்தேன்.எங்க‌ள் க‌ல்லூரிக்க‌ருகிலும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்த‌து. அதற்குப் பேரே செம‌ஸ்ட‌ர் பிள்ளையார் கோயில். ஏனென்றால் ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் காத்தாடும் அந்தக் கோவிலில் செம‌ஸ்ட‌ர் ச‌ம‌ய‌ம் கால் வைக்க‌ முடியாத் அள‌வு கூட்ட‌ம் அம்மும்.

அதே போல் மார்க‌ழி மாத‌ங்க‌ளில் காலையில் ஐந்து ம‌ணிக்குப் போனால் ச‌ர்க்க‌ரைப் பொங்க‌ல் பிர‌சாத‌ம் தொன்னையில் த‌ருவார்க‌ள். ஓரிரு முறை சென்று வாங்கிய‌தாக‌ ஞாப‌க‌ம். (காலை உண‌வுக்கு மெஸ்ஸுக்குப் போய் அழ‌ வேண்டாமே!)

ரொம்ப‌ எரிச்ச‌ல் வ‌ந்த‌து எத‌னாலென்றால் கூட்டம்; ஜ‌ன‌ நெருக்க‌டி. விசேஷ நாட்க‌ளில் கோவில் ப‌க்க‌ம் எட்டிக் கூட‌ப் பார்க்க‌ மாட்டேன்.‌
பூசாரிக‌ளின் அத‌ட்ட‌லும் அர்ச்ச‌னைத் த‌ட்டுக‌ளில் போட‌ப்படும் காசுக்கேற்ப‌ த‌ரும் ம‌ரியாதையும், பொது வ‌ழி சிற‌ப்பு வ‌ழி என்று பிரித்து வைத்து ர‌க‌வாரியாக‌ப் பிசின‌ஸ் செய்வ‌தும் கோவில் வ‌ழிபாடுக‌ள் மீது முத‌ல் அவ‌ந‌ம்பிக்கை ஏற்ப‌ட‌ச்செய்த‌து.

கடவுள் பக்தி அதிகமிருக்கும் சிலர் (எம்மதமாக இருந்தாலும்) பேசுவதில் ஒரு மேட்டிமைத் தனமும் Self righteousness ம் இருப்பதையும் உணர முடிந்தது. (சிறு வய‌தில் இப்ப‌டிப் பேசுப‌வ‌ர்க‌ளைப் பார்த்தால் ஒரு தாழ்வு ம‌ன‌ப்பான்மை தோன்றும். நாம் இப்ப‌டியெல்லாம் சாமி கும்பிடுவ‌தில்லையே, ந‌ம‌க்கு இந்த‌ அள‌வு ப‌க்தி இல்லையே என்று.)

எனக்கொரு தோழி இருந்தாள். நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருந்தாள். வயதும் அப்போது இருபத்திரண்டோ மூன்றோ தான். கல்யாணமாகவில்லை என்று அவளை அவள் பெற்றோர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை. 'வெள்ளிக் கிழமையா? ஒரே வேளை சாப்பிட்டு விரதம் இரு. திங்கட்கிழமையா? சோமவார விரதம் இரு. அஞ்சு விரல்லயும் அதிர்ஷ்டக் கல் மோதிரம் மாட்டு. பிரதோஷமா? சாயங்காலம் வேலை முடிஞ்சு எவ்ளோ நேரமானாலும் சரி, கோவிலுக்குப் போயிட்டு வா.'
பிரதோஷமென்றால் சிவன் கோவிலில் கூட்டம் கேட்கவே வேண்டாம். கூட்டத்தில் சென்று இடிபட்டு நசுங்கி, அதன் பின் பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அவள் விழி பிதுங்கி விடும். ஒரே ஒரு நாள் அவளுக்காகத் துணைக்குச் சென்று படாத பாடு பட்டேன்.

இது போன்ற சம்பவங்களால் பொதுவாக‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் மீதும், வ‌ழிபாடுக‌ளின் மீதும் கொஞ்ச‌ கொஞ்ச‌மாக‌ அசிர‌த்தை ஏற்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து. க‌ட‌வுள் ப‌க்திக்கும் ம‌த‌வெறிக்கும் இடையே பெரிதாக‌ வேறுபாடில்லை என்று ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளும் கொடூர‌ங்க‌ளும் ந‌ம்ப‌ வைத்த‌ன‌. (இது என் ஆழமான ந‌ம்பிக்கை ‍ அவ்வ‌ள‌வு தான்.)

மேலும், "நட்ட கல்லைத் தெய்வமென்று..." போன்ற பாடல்களும், அபு பென் ஆதம் கதைகளும், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள் பேச்சிலும் எழுத்திலும் (மதமென்பது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட அபினி) நாட்டமேற்பட்டதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஓஷோவின் discource களையும் ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தேன். போதாதா? Life is a better word than God என்ற அவரது வாசகம் மனதில் ஆழமாகப் பதிந்தது.

ஒன்று, இதையெல்லாம் நம்ப வேண்டும். இல்லை கடவுளை நம்ப வேண்டும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடியாது என்று தீர்மானம் ஏற்பட்டது.
கோவிலுக்குப் போவ‌தில்லை. சாமி கும்பிடுவ‌து என்றொரு வ‌ழ‌க்க‌ம் என்றுமே ஒழுங்காக‌ இருந்த‌தில்லை. இதனாலெல்லாம் பெரிதாக‌ எந்த‌ மாற்ற‌மும் ஏற்ப‌ட‌வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌து வேற்று ம‌த‌த்த‌வ‌ரை. அவ‌ரும் என்னைப் போல‌வே தான்; மதச் சம்பிரதாயங்களுக்கும் கற்பிக்கப்பட்ட புனிதங்களுக்கும் பின்னால் இருக்கும் போலித் தனங்களை உணர்ந்து வெறுத்தவர். இருவ‌ரும் எந்த‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌த்துக்கும் செல்வ‌தில்லை. எல்லாப் பண்டிகைகளையும் எந்தவிதமான பூசை வழிபாடுகள் இல்லாமலும் கொண்டாடப் பழகி விட்டோம். இருந்தாலும் திரும‌ண‌மான பின்பு சில‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளுக்கு உட்ப‌ட‌வேண்டி இருந்த‌து. பிற‌கு இருதரப்பினரும் எங்க‌ளைப் ப‌ற்றிப் புரிந்து கொண்டு விட்டார்க‌ள். வ‌ருத்த‌ம் தான் ஆனாலும் எங்கள் சுதந்திரத்தில் பெரிதாக‌த் த‌லையிடுவ‌தில்லை.

நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன். கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே! வாழ்க்கையில் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று. நான் கொண்டிருப்பது கடவுள் மறுப்பு என்பதை விடக் கடவுள் வழிபாட்டு மறுப்பு. இது என்னளவில் சரி. அவ்வளவு தான்.

கடவுள் நம்பிக்கை என்பதையெல்லாம் தாண்டி சில பழக்கங்களை (திருமணமானவர்கள் வீட்டுக்கு வந்து விடை பெறும் போது குங்குமம் கொடுப்பது, இளம் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் பூ வாங்கிச் செல்வது) போன்றவற்றை விட மனமில்லை; விடுவதாகவும் இல்லை! அவையெல்லாம் காரணமே இல்லாமல் பிடித்துத் தான் இருக்கின்றன‌.

நேஹாவும் மிக‌ச் சுத‌ந்திர‌மாக‌த் திரிகிறாள். இயேசு ப‌ட‌த்தைப் பார்த்தால் "தாத்தா தாடி" என்றும் பிள்ளையார் ப‌ட‌த்தைப் பார்த்தால் "எலிஃபென்ட்" என்றும் சொல்கிறாள். தாத்தா பாட்டிக‌ள் "அப்ப‌டிச் சொல்ல‌க் கூடாது... சாமி சொல்லு" என்று சொன்னாலும் நாங்கள் த‌டுப்ப‌தில்லை. நம்மை விட நிச்சயம் அறிவும் தெளிவுடனும் இருக்கப் போகும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவள் தனது விருப்ப‌த்தைத் தானே தேர்வு செய்ய‌ட்டுமே. அப்ப‌டி என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம் இது?

எல்லாருக்குள்ளும் ஏதாவ‌து ச‌ம‌ய‌ம் இப்ப‌டி ஒரு ம‌னப்போராட்ட‌ம் வ‌ந்திருக்கலாம்; அல்லது இவ்விதமான குழப்பங்களுக்கெல்லாம் இடமில்லாத வகையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கலாம். என்னவாக இருப்பினும் அவர்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.

அவ்விதம்‌ நான் அழைக்க‌ விரும்புவ‌து:

அண்ணாம‌லையான்
தமிழ்நதி
நாஸியா
ம‌யில் விஜி
ச‌ந்த‌ன‌முல்லை
ராகவ‌ன்

Tuesday, April 6, 2010

நீரோவின் விருந்தாளியா நீங்கள்?

தனது அரண்மனைத் தோட்டத்தில் பிரபுக்களுக்கும் ஏனைய பணக்காரர்களுக்கும் ஆடம்பரமான விருந்தொன்று ஏற்பாடு செய்கிறான் நீரோ மன்னன். ஆட்டம் பாட்டம், கேளிக்கை, உயர்தர உணவு, மது வகைகள் என்று தடபுடலாக‌ ந‌ட‌க்கிற‌து விருந்து. பொழுது சாய‌த் தொட‌ங்கும் போது தோட்ட‌த்தில் இருள் க‌விகிற‌து. கேளிக்கைக‌ளுக்கு இடையூறாக‌ இருள் சூழ்வ‌து ம‌ன்ன‌னுக்குப் பிடிக்க‌வில்லை. அர‌ண்ம‌னைச் சிறையிலிருக்கும் ஏழை எளிய‌ ம‌க்க‌ளைப் பிடித்து வ‌ந்து கூட்ட‌ம் கூட்ட‌மாக‌க் கொளுத்துகிறான். அந்த‌ வெளிச்ச‌த்தில் விருந்து தொட‌ர்ந்து ந‌ட‌க்கிற‌து.

நீரோ ம‌ன்ன‌ன் அதிப‌ய‌ங்க‌ர‌ ம‌னோ வியாதி பிடித்த‌வன் என்பது அறிந்ததே. ஆனால் அவ‌ன‌து விருந்தின‌ர்க‌ள்? அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இதை எதிர்க்காம‌ல் ச‌லன‌மின்றி எப்படி உண்டு க‌ளித்துக் கொண்டிருக்க‌ முடிந்த‌து?

தீபா பாட்டியாவும் சாய்நாத்தும் இணைந்து த‌யாரித்திருக்கும் "நீரோவின் விருந்தின‌ர்க‌ள்" என்ற‌ குறும்ப‌ட‌ம் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலைக‌ளைப் ப‌ற்றிய‌து.
நீரோவின் விருந்தின‌ர்க‌ள் வேறு யாரும‌ல்ல‌ நாம் தான் என்று ஓங்கிச் சாட்டையால் அடிக்கிறார் சாய்நாத்.

அக்டோப‌ர் 2002. ப‌ல‌ முக்கிய‌மான‌ நிக‌ழ்வுகளைக் கொண்டிருந்த‌து இந்த‌ மாத‌ம். காஷ்மீர் தேர்தல்கள், ஒரு பசுவைக் கொன்றதற்காக ஐந்து தலித்துகள் கொடூரமாக‌ கொல்ல‌ப்ப‌ட்ட‌து, மேலும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்து கொண்ட‌து எல்லாம் இந்த‌ மாத‌த்தில் தான்.

ஆனால் பிற்கால‌ வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர்க‌ளுக்கு இதெல்லாம் பெரிதாக‌த் தெரிய‌ வாய்ப்பில்லை. ஏனென்றால் நாட்டின் முக்கிய‌ நாளேடுக‌ள் அப்போது கர்ம சிரத்தையாகப் பல பக்கங்களில் வண்ணப்படங்களுடன் வெளியிட்டிருந்தது அமிதாப் ப‌ச்ச‌னின் பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌ச் செய்திக‌ளைத் தாம்.

இன்னும் ப‌ல‌ முர‌ண்பாடுக‌ளையும் நாட்டில் விவ‌சாயிக‌ளுக்குத் தொட‌ர்ந்து இழைக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் கொடுமைக‌ளையும் இக்குறும்ப‌ட‌த்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

ஊடகங்களைப் பொறுத்தவரை ஏனிந்த அவலமான‌ நிலை?

பொதுவாக நாலுபேர் கூடினால் பேசிக் கொள்ளும் விஷ‌ய‌ங்க‌ளிலிருந்து,
நமது ஆக்கிரமிக்கக் கூடிய விஷயங்கள் வரை வெகுவாகப் பாதிக்கும் அரிய சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. பொதுவாக நாட்டு நடப்புகளில் ஓரளவு பரிச்சய்ம் கொள்ள விரும்பும் சராசரி மனிதன் நம்பி இருப்பது நாளேடுகளையும் தொலைக்காட்சி செய்திகளையும் தான்.

நாம் என்ன‌ தெரிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌தையும், (க‌ண்டிப்பாக‌த் தெரிந்து கொள்ள‌க் கூடாது) என்ப‌தையும் முடிவு செய்யும் பெரிய‌ அர‌சிய‌லைத் தாண்டி உண்மைக‌ளை அறிந்து கொள்ள‌ வேண்டிய‌ பொறுப்பு ந‌மக்கு இருக்கிற‌து.

ஒரு கிராமமே திரண்டு ப்ரிய‌ங்கா போட்மாங்கே எனும் ப‌தினேழு வ‌ய‌துப் பெண்ணையும் அவ‌ள‌து தாயையும் கொடூர‌மான‌ முறையில் வ‌ன்புண‌ர்ச்சி செய்து கொன்றதையும், அவ‌ள‌து அண்ண‌ன்களையும்) குற்ற‌வாளிக‌ளைக் காவ‌ல் துறையே ம‌றைக்க‌ முற்ப‌ட்டு சாட்சிக‌ளை அழித்ததும் செய்தித்தாளின் மூன்றாம் ப‌க்க‌த்தில் சின்ன‌ த‌லைப்பின் கீழ் வெளியாகிற‌து.

திரு. மாதவராஜ் எடுத்திருந்த "இது வேறு இதிகாசம்" என்ற‌ குறும்ப‌ட‌த்தைப் பார்த்துத் தான் இந்த‌ச் செய்தியை முதன் முதலில் தெரிந்து கொள்ளும் போது இந்த‌க் குற்ற‌ம் ந‌ட‌ந்து ஓராண்டுக்கு மேலாகி இருந்த‌து. வெட்க‌மாக‌ இருந்த‌து.
இது போல் இன்னும் எத்த‌னை த‌லித் கொலைக‌ள்? விவ‌சாயிக‌ள் த‌ற்கொலைக‌ள்? நீரோவின் பிணைக்கைதிக‌ள்?

ஆனால் நித்தியான‌ந்தா விவ‌காரமோ நேற்றுப் ப‌ல்முளைத்த‌ குழ‌ந்தைக்குக் கூட‌த் தெரியும்.

குற்ற‌ம் முழுக்க‌ முழுக்க‌ ந‌ம் மீது ம‌ட்டும் இல்லை.
ஊட‌க‌த் துறை நீரோவின் முன் கை க‌ட்டிச் சேவ‌க‌ம் புரிந்தால் நாம் நீரோவின் விருந்தின‌ர்க‌ளாக‌த் தான் க‌ண்ணைக் க‌ட்டிக் கொண்டு நிற்க‌ வேண்டி இருக்கும். அறியாமை என்ற காரணத்துக்காக மட்டும் வ‌ரலாறு நிச்ச‌ய‌ம் ந‌ம்மை ம‌ன்னிக்காது.

(பி.கு: ப‌ட‌த்தைப் ப‌ற்றி மேலும் விவ‌ர‌ங்க‌ள் அறிய‌ www.nerosguests.com த‌ள‌த்துக்குச் செல்லுங்க‌ள்.

மேலும், நீரோவின் விருந்தாளியா நீங்கள்? என்ற தெரிந்து கொள்ள இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதிலளித்துப் பாருங்கள்.
http://alternativeperspective.blogspot.com/2007/03/are-you-among-neros-guests.html)

நன்றி:
http://mathavaraj.blogspot.com/2009/08/blog-post_17.html
www.anniezaidi.com
http://www.hrw.org/en/iff/neros-guests

Monday, April 5, 2010

நேஹா நேரம்!

ஒரு நாள் வீட்டுக்கு வந்தவுடன் "அம்மா.. மணீ ஊந்துத்தான்... ஊந்துத்தான்..."

"எங்க‌ம்மா?"
"ஜூலா..ஜூலா...டொம் ஊந்த‌த்தான்." உதட்டைப் பிதுக்கிச் சோகமாகச் சொன்னாள்.

மறுநாள் விசாரித்ததில் உண்மையில் மணி ஊஞ்சலிலிருந்து விழுந்து தலையில் அடியும் பட்டிருக்கிறது.

அறையிலிருந்த‌ ஃபான் ரிப்பேருக்காக க‌ழ‌ற்ற‌ப்ப‌ட்டிருந்த‌து.
"அம்மா!
ஃபான் பிஞ்சிட்டா! கானும்!"

"நேஹா! சிம்ப‌ன்ஸி வ‌ந்தா என்ன‌டா‌ சொல்லுவே?"

"ஏய், பாப்பா உன்னை அடி...கொன்னு!"

வீட்டுக்கு வ‌ந்த‌தும் அவ‌ளை ம‌டியில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.

"அம்மா போ! த‌ண்ணி ஊத்திக் குளிச்சி...டெச்சு மாத்தி..."


"படிச்சி" யுடன் இப்போது "எழுதி...எழுதி" யும் ஆர‌ம்பித்திருக்கிறாள். க்ர‌யான்ஸைக் கொண்டு வீடு பூராக் கிறுக்கியாகிற‌து.

'என்ன‌ எழுதி இருக்கே' என்று கேட்டால் தெரிந்த‌ எல்லாவ‌ற்றையும் வரிசையாகச் சொல்கிறாள்.

ஃபோன் ரிப்பேர் ஆகிவிட்டதென யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த இவள்,
"அம்மா த‌ண்ணீ கொட்டீட்டா.. !"
வாரன்டி சர்வீஸ் செய்யப் போகும் போது இவளை அழைத்துச் செல்லக் கூடாது!

Thursday, April 1, 2010

செல்லமே!

ஒலென்கா, ஓய்வு பெற்ற கல்லூரிப் பணியாளரின் மகள், எதையோ யோசித்துக் கொண்டு வீட்டுப் பின்கட்டில் உட்கார்ந்திருந்தாள். நல்ல வெயில், ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பொழுது சாய்ந்து விடும் என்பதே ஆறுதலான விஷயமாக இருந்தது. கீழ்வானத்தில் திரண்டிருந்த கரிய மழைமேகங்கள் அவ்வப்போது லேசான ஈரக்காற்றை அனுப்பிக் கொண்டிருந்தன.

அந்த‌ வீட்டின் ஒரு ப‌குதியில் வாடகைக்குத் த‌ங்கியிருந்த‌ குகின் அப்போது அங்கே வ‌ந்தான். அவ‌ன் டிவோலி என்ற‌ திற‌ந்த‌வெளி நாடக‌க் க‌ம்பெனியை ந‌ட‌த்தி வ‌ந்தான். தோட்ட‌த்தின் ந‌டுவே நின்று கொண்டு வான‌த்தைப் பார்த்தான்.

"போச்சு, ம‌றுப‌டியும் இன்னிக்கு மழை பெய்யப் போகுது! என்னைச் சோதிக்கிற‌துக்காகவே தின‌மும் ம‌ழை பெய்யுது. நாண்டுக்கிட்டுச் செத்துட‌லாமான்னு இருக்கு. ஒவ்வொரு நாளும் எவ்வ‌ளோ ந‌ஷ்ட‌மாகுது." - கைக‌ளை விரித்துக் கொண்டு ஒலென்காவிட‌ம் புல‌ம்பினான் குகின்.

"பாருங்க‌ ஓல்கா எங்க‌ நெல‌மையை. கேட்டா அழுதுடுவீங்க‌. ராப்ப‌க‌லா தூங்காம‌ ஓய்வொழிச்ச‌லில்லாம‌ நாட‌க‌ம் எழுத‌றேன். சிற‌ந்த‌ ப‌டைப்புக‌ளை நாட‌க‌மாத் த‌ர‌ப் ப‌டாத‌ பாடு ப‌டறேன். க‌டைசில‌ என்ன‌ ஆகுது? இந்த முட்டாள் ஜ‌ன‌ங்க‌ளுக்கு எங்கே அதோட அருமை புரியுது? அவ‌ங்க‌ளுக்கு வேண்டிய‌தெல்லாம் கோமாளிக் கூத்துங்க‌ தான்.

அப்புற‌ம் இந்த‌ ம‌ழை. சொல்லி வெச்சா மாதிரி தின‌மும் சாய‌ங்கால‌ம் வ‌ந்து தொலைக்குது. மே ப‌த்தாம் தேதி ஆர‌ம்பிச்ச‌ ம‌ழை, இதோ ஜூன் தொடங்கியும் விட‌மாட்டேங்குதே. கொடுமை, கொடுமை. ஜ‌ன‌ங்க‌ வ‌ராங்க‌ளோ இல்லியோ, நான் மட்டும் வாட‌கையும் கொடுத்தாக‌ணும், நடிக‌ர்க‌ளுக்குச் ச‌ம்பள‌மும் கொடுத்தாக‌ணும்."


அத‌ற்கு ம‌று நாளும் ம‌ழைக்கான‌ அறிகுறிக‌ள் தோன்றும். வேத‌னையோடு சிரித்த‌ப‌டி குகினும் மழையிடம் புல‌ம்ப‌த் தொட‌ங்குவான்.

"ம்..ந‌ல்லா கொட்டித்தீர்த்துக்கோ. ஒரேயடியா என்னை மூழ்க‌டிச்சுடு! காச‌க் கொடுக்க‌ முடியாததால‌ என்னை உள்ள‌ த‌ள்ள‌ப் போறாங்க‌. சைபிரியாவுக்குத் தான் போக‌ப் போறேன் நான்... ஹா ஹா ஹா"

ஒவ்வொரு நாளும் ஒலென்கா வேத‌னையா‌க‌ மௌன‌த்துட‌ன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள். ச‌ம‌ய‌த்தில் அவ‌ள் க‌ண்க‌ள் க‌ல‌ங்கி விடும். இறுதியில் அவன‌து ப‌ரிதாப‌மான‌ நிலை அவ‌ள் ம‌ன‌த்தைக் கொள்லை கொன்டுவிட்ட‌து. அவ‌ள் அவனை நேசிக்க‌த் தொட‌ங்கினாள்.

ஒல்லியான‌ தேக‌மும் சோகையில் வெளுத்த‌ முக‌மும், நெற்றியில் ப‌டிய‌ வாரிய‌ சுருள் முடிக‌ளுமாய் இருந்தான் குகின். மெல்லிய‌ குர‌லில் தான் பேசுவான். அவ‌ன் முக‌த்தில் நிர‌ந்த‌ர‌மான‌ நிராசை குடிகொண்டிருந்த‌து. இத்த‌னை குறைக‌ள் இருந்தாலும் அவன்பால் அவ‌ள் ம‌ன‌தில் உண்மையான‌ ஆழ்ந்த காதல் ஏற்ப‌ட்ட‌து. எப்போதுமே யாரையேனும் நேசிப்பதே அவளின் இயல்பாக இருந்தது. யார் மீதும் அன்பு கொள்ளாம‌ல் அவ‌ளால் உயிர் வாழ‌வே முடியாது. சிறுவ‌ய‌தில் அவ‌ள் த‌ன் த‌ந்தையை மிக‌வும் நேசித்தாள். பின்பு, ஒவ்வோராண்டும் பைரான்ஸ்கிலிருந்து அவ‌ளைப் பார்க்க‌ வ‌ரும் அத்தையை; அத‌ற்கு முன்பு ப‌ள்ளிடில் படித்த போது ஃப்ரெஞ்சு ஆசிரிய‌ரை.

இள‌கிய‌ ம‌ன‌மும் இர‌க்க‌ குண‌மும், க‌னிவு த‌தும்பும் க‌ண்க‌ளும், ஆரோக்கிய‌மான‌ உட‌ற்க‌ட்டும் ஒருங்கே பெற்ற‌வ‌ள் அவ‌ள்.
அவ‌ள‌து அழகிய க‌ன்ன‌ங்க‌ளையும், சிறிய‌ ம‌ச்ச‌மொன்று காண‌ப்ப‌டும் அவ‌ள‌து மெல்லிய‌ க‌ழுத்தையும், பிற‌ர் பேசுவ‌தைக் க‌வ‌ன‌மாக‌க் கேட்கையில் அவ‌ள‌து முக‌த்தில் தோன்றும் அந்த‌க் க‌ள்ள‌ங்க‌ப‌ட‌மில்லாத‌ புன்ன‌கையையும் பார்க்கும் ஆண்க‌ள் கூட‌, "பாவ‌ம், ந‌ல்ல‌ பொண்ணுடா அது..." என்று த‌ங்க‌ளுக்குள் சிரித்த‌ப‌டி சொல்லிக் கொள்வார்க‌ள்.
பெண்க‌ளுக்கோ, "என் செல்லமே!" என்று உண‌ர்ச்சிப் பெருக்கோடு அவ‌ள் கைக‌ளைப் பிடித்துக் கொள்ளாம‌ல் அவ‌ளுட‌ன் பேச‌வே முடியாது.

அவ‌ள் த‌ந்தை அவ‌ளுக்கு விட்டுச் சென்ற‌ அவ‌ள‌து பூர்விக‌ வீடு ந‌க‌ர‌த்தின் எல்லையில் டிவோலிக்கு அருகே இருந்த‌து. மாலை நேர‌ங்க‌ளில் அங்கு ந‌டைபெறும் ஒத்திகைக‌ளையும் பாட்டு கூத்துக்க‌ளையும் கேட்ட‌ப‌டி வீட்டில் அம‌ர்ந்திருப்பாள். இர‌வு நேர‌ம் தாண்டியும் முடியாத‌ அந்த‌ச் ச‌த்த‌ங்க‌ளைக் கேட்கும் போது குகினின் வாழ்க்கைப் போராட்ட‌த்தையும் அவ‌ன‌து க‌லையை ம‌திக்காத‌ பொதும‌க்க‌ளையும் நினைத்துப் ப‌ரிதாப‌ப்ப‌ட்டுக் கொண்டிருப்பாள்.
காலையில் அவ‌ன் வீடு திரும்பிய‌தும் அவ‌ன் அறைக் கதவோரம் நின்று மெதுவாக‌ எட்டிப் பார்த்துப் புன்ன‌கைப்பாள்.

அவ‌ன் அவ‌ளைத் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌க் கேட்டான். அவ‌ளும் ச‌ம்ம‌தித்தாள். திரும‌ண‌த்துக்குப் பிற‌கு அவ‌ள‌து அழ‌கிய‌ க‌ழுத்தையும் தோள்க‌ளையும் நெருக்க‌மாக‌க் க‌ண்டு ம‌கிழ்ந்த‌ அவ‌ன் உற்சாக‌த்துட‌ன் சொன்னான், "என் செல்ல‌மே!"

அவ‌ன் ச‌ந்தோஷ‌மாக‌வே இருந்தான். ஆனாலும் அவ‌ர்க‌ள் திரும‌ண‌த்த‌ன்று கூட‌ விடாம‌ல் ம‌ழை பெய்த‌தால் அவ‌ன் முக‌ம் ஏனோ சுண‌க்க‌மாக‌வே இருந்த‌து.

அவ‌ர்க‌ள் மிக‌வும் இனிமையாக‌ வாழ்க்கை ந‌ட‌த்தினார்க‌ள். அவ‌ள் அவ‌ன‌து அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்று க‌ண‌க்கு வ‌ழ‌க்குகளைக் க‌வ‌னித்துக் கொண்டாள். அவள் தன் அழகிய கன்னங்கள் மின்ன, க‌ள்ள‌மில்லா சிரிப்பு சிரித்தபடி அவனுடைய‌ அலுவ‌ல‌க‌த்திலும், கான்டீனிலும், நாடக மேடைக்குப் பின்புறமும் ச‌ர‌ள‌மாக‌ வ‌ளைய‌ வ‌ந்தாள்.

த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் உற்றாரிட‌மும், மேடை நாட‌க‌ங்க‌ள் தான் உல‌கிலேயே மிக‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌மென்றும், ம‌னித‌ வாழ‌க்கையைச் செம்மைப் ப‌டுத்த‌ நாட‌க‌ங்க‌ள் எவ்வ‌ள‌வு இன்றிய‌மையாத‌வை என்றும் அள‌க்க‌ ஆர‌ம்பித்திருந்தாள்.

"ஆனா இதெல்லாம் யாருக்குப் புரியுது? எல்லாருக்கும் தேவை ஒரு கோமாளி. நேத்திக்கு நாங்க‌ அற்புத‌மான‌ ஒரு இலக்கிய‌ நாவ‌லை நாட‌க‌மாப் போட்டோம். ஆளே இல்லை. இதே வானிட்ச்காவும் நானும் ஏதாவ‌து கேவ‌ல‌மான‌ ஒரு மொக்கை நாட‌க‌ம் போட்டிருந்தா நீ நான்னு கூட்ட‌ம் அலை மோதியிருக்கும். நாளைக்கு வானிட்ச்காவும் நானும் "ந‌ர‌க‌த்தில் ஆர்ஃப்யூஸ்" போட‌ப்போறோம். க‌ண்டிப்பா வாங்க‌."

நாட‌க‌ங்க‌ளைப் ப‌ற்றியும் ந‌டிக‌ர்க‌ளைப் ப‌ற்றியும் குகின் சொல்வ‌தையெல்லாம் அப்ப‌டியே அவ‌ளும் ஒப்பித்தாள். அவ‌னைப் போல‌வே பொதும‌க்க‌ளை அவ‌ர்க‌ள் அறியாமைக்காகவும் ரசனைக்குறைவுக்காகவும் ப‌ழித்தாள்; ஒத்திகைக‌ளில் ப‌ங்கேற்றாள்; ந‌டிக‌ர்க‌ளைத் திருத்தினாள்; இசைக்க‌லைஞ‌ர்க‌ளைப் பார்வையிட்டாள். தாங்க‌ள் ந‌ட‌த்திய‌ நாட‌க‌த்தைப் ப‌ற்றிப் பத்திரிகைகளில் மோச‌மாக‌ விம‌ர்ச‌ன‌ம் வ‌ந்தால் வ‌ருந்திக் க‌ண்ணீர் விட்டாள். குறிப்பிட்ட‌ ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்று ச‌ம‌ர‌ச‌ம் பேசித் திருத்தி எழுத‌ச் செய்தாள்.

ந‌டிக‌ர்க‌ள் அவ‌ள் மேல் ப்ரிய‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் அவ‌ளை 'வானிட்ச்காவும் நானும்' என்றும் 'செல்ல‌மே' என்றும் ப‌ரிகாச‌மாக‌ அழைத்த‌ன‌ர். அவ‌ள் அவ‌ர்க‌ள் மேல் இர‌க்க‌ங்கொண்டு அவர்கள் கேட்கும் போதெல்லாம் சிறு சிறு தொகைக‌ள் க‌ட‌ன் கொடுத்து வ‌ந்தாள். அவ‌ர்க‌ள் திருப்பித் த‌ராம‌ல் ஏமாற்றினால் த‌னிமையில் வ‌ருந்தினாளே ஒழிய‌ க‌ண‌வ‌னிட‌ம் புகார் செய்ய‌வில்லை.

குளிர்கால‌ம் வ‌ந்த‌து. அப்போதும் அவ‌ர்க‌ள் ந‌ன்றாக‌வே இருந்த‌ன‌ர். ந‌க‌ர‌த்தின் மைய‌த்திலிருந்த‌ ஒரு தியேட்ட‌ரை விலைக்கு வாங்கி அவ்வ‌ப்போது அதைச் வேறு சிறிய‌ க‌ம்பெனிக‌ளுக்கோ,மேஜிக் ஷோக்க‌ளுக்கோ வாடகைக்கு விட்ட‌ன‌ர்.

எப்போதும் திருப்தியும் சந்தோஷ‌முமாக‌ இருந்த‌ ஒலென்கா பூரிப்பில் இன்னும் ஒரு சுற்றுப் பெருத்திருந்தாள். குகினோ இன்னும் மெலிந்தும் சோகையில் வெளுத்துக் கொண்டும் போனான். நிலைமை எவ்வ‌ள‌வோ தேறிவிட்டாலும் இன்னும் நஷ்‌ட‌ங்க‌ள் பற்றியே புல‌ம்பிக் கொண்டிருந்தான். இரவெல்லாம் இருமிக் கொண்டிருக்கும் அவ‌னுக்குக் க‌ஷாய‌ம் வைத்துக் கொடுத்தும் தைல‌ங்க‌ள் த‌ட‌வி விட்டும் ப‌ரிவுட‌ன் பார்த்துக் கொன்டாள் ஒலென்கா. க‌த‌க‌த‌ப்பான‌ க‌ம்ப‌ளிப்போர்வைக‌ளைப் போர்த்திவிட்டுப் பாச‌த்துட‌ன் அணைத்துக் கொள்வாள்.

அவ‌ன் த‌லையை ஆத‌ர‌வுட‌ன் கோதிவிட்டு, "என் செல்ல‌ம் தெரியுமா நீ! என் அழ‌குச் செல்ல‌ம்" என்று அன்புடன் கொஞ்சுவாள்.
பிப்ர‌வ‌ரி மாத‌த்தில் புதிய‌ ந‌டிக‌ர் குழுவைத் தேர்வு செய்ய‌ அவ‌ன் மாஸ்கோவுக்குப் போனான். அவ‌னைப் பிரிந்து அவளால் இர‌வில் தூங்க‌வே முடிய‌வில்லை. இர‌வெல்லாம் ஜ‌ன்ன‌ல‌ருகே அம‌ர்ந்து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை எண்ணிக் கொண்டிருந்தாள். சேவ‌லைப் பிரிந்து தவிப்புடன் அலைந்து கொண்டிருக்கும் ராக்கோழிக‌ளுட‌ன் த‌ன்னை ஒப்பிட்டுக் கொண்டாள்.

ஈஸ்ட‌ர் ப‌ண்டிகை வ‌ரை மாஸ்கோவில் இருக்க‌ வேண்டி இருப்ப‌தாக‌வும், டிவோலியின் நிர்வாக‌ம் குறித்துச் செய்யவேண்டியது பற்றியும் அவ‌ளுக்குக் கடிதம் எழுதினான் குகின். ஆனால் ஈஸ்ட‌ருக்கு முந்தைய‌ ஞாயிற‌ன்று யாரோ க‌த‌வைத் த‌ட்டினார்க‌ள். ஏனோ அவ‌ளுக்கு அது ஓர் அபாய‌ அறிவிப்பாக‌த் தோன்றிய‌து. அத‌ற்கேற்றாற்போல் க‌ன‌த்த‌ குர‌லில் யாரோ அழைத்தார்க‌ள். "த‌ய‌வு செஞ்சு க‌த‌வைத் திற‌ங்க‌. உங்க‌ளுக்குத் த‌ந்தி வ‌ந்திருக்கு."

க‌ண‌வ‌னிட‌மிருந்து இத‌ற்கு முன்பு த‌ந்திக‌ள் நிறைய‌ வ‌ந்திருந்தாலும் இப்போது ஏனோ ப‌கீரென்ற‌து ஒல‌ன்காவுக்கு. ந‌டுங்கும் கைக‌ளால் த‌ந்தியை வாங்கிப் ப‌டித்தாள்.
"ஐவ‌ன் பெட்ரோவிச் குகின் இன்று திடீரென்று இற‌ந்து விட்டார். செவ்வாய‌ன்று அவ‌ர‌து இஇறுதி அட‌க்க‌ம். மேனும் விவ‌ர‌ங்க‌ளுக்காக‌க் காத்திருக்கிறோம்."

அப்ப‌டித்தான் இருந்த‌து அந்த‌த் த‌ந்து. "இஇறுதி" என்றும், பொருளே இல்லாத‌ "மேனும்" என்ற‌ வார்த்தையோடும். ஓப‌ராக் க‌ம்பெனி மேலாள‌ர் ஒருவ‌ர் அத‌னை அனுப்பியிருந்தார்.

"அய்யோ! வானிட்ச்கா என் அன்பே!" - நெஞ்சு வெடிக்கக் க‌த‌றிய‌ழுதாள் ஒலென்கா. "என் செல்வ‌மே! உன்னை ஏன் நான் ச‌ந்திச்சேன். ஏன் தான் உன்னைக் காத‌லிச்சுக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டேன். அய்யோ! உன் ஓல்காவை இப்ப‌டித் த‌னியா விட்டுட்டுப் போயிட்டியே"

குகினின் இறுதி ஊர்வ‌ல‌ம் செவ்வாய‌ன்று மாஸ்கோவில் ந‌டைபெற்ற‌து. புத‌ன் கிழ‌மையன்று த‌ன்ன‌ந்த‌னியாக‌ ஊர் திரும்பிய‌ ஒலென்கா வீட்டுக்குள் நுழைந்து ப‌டுக்கையில் வீழுந்து நெஞ்சுடைய‌ அழுதாள். அவ‌ள‌து ஓல‌ங்க‌ள் அடுத்த‌ தெரு வ‌ரைக்கும் கேட்ட‌ப‌டி இருந்த‌ன‌.

"பாவ‌ம் பொண்ணு... எப்ப‌டித் துடிக்கிறா பாருங்க‌" என்று ப‌ச்சாதாப‌ப்ப‌ட்ட‌ன‌ர் அவ‌ள‌து அண்டை வீட்டார்.

மூன்று மாத‌ங்க‌ள் க‌ழித்து ச‌ர்ச்சிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள் ஒலென்கா. அப்போது அவள் அண்டை வீட்டாரில் ஒருவனான வாஸிலி புஸ்தாலோவ் என்ப‌வ‌ன் அவ‌ளுட‌ன் சேர்ந்து ந‌ட‌ந்து வ‌ந்தான். அவ‌ன் விற‌குக்க‌டை முத‌லாளி ஒருவ‌ரிட‌ம் மேலாள‌னாக‌ வேலை பார்த்து வ‌ந்தான். ஆனால் வைக்கோல் தொப்பியும், வெள்ளி நிற‌ உள்கோட்டும், த‌ங்க‌க் கைக்கடிகார‌முமாய், ஒரு கிராம‌த்துக் க‌ன‌வான் போல‌வே தோற்ற‌ம‌ளித்தான்.

"எல்லாம் விதிப்ப‌டி தான் ந‌ட‌க்குது ஓல்கா. க‌ட‌வுள் மேல‌ பார‌த்தைப் போட்டுட்டுத் தைரிய‌மா இரு..." என்று அவ‌ளைப் ப‌ரிவான‌ குர‌லில் தேற்றிக் கொண்டிருந்தான்.

அன்று அவள் வீட்டு வாசல்வரை வந்து விட்டுச் சென்றான். அன்று முழுதும், அவனது கண்ணியமான கனத்த குரல் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் எப்போது கண்களை மூடினாலும் அவனது முகமும் கறுத்த தாடியுமே அவள் நினைவில் நின்றது. அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதே போல் அவளும் அவனை ஈர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் சில நாட்களுக்கெல்லாம் அவளுக்கு ரொம்பவும் பரிச்சயமில்லாத‌ ஒரு முதிய பெண்மணி அவளைச் சந்திக்க வந்தாள். வ‌ந்த‌வ‌ள் புஸ்தாலோவைப் பற்றியே பேசலானாள். அவ‌ன் எவ்வ‌ள‌வு சிற‌ந்த‌ ம‌னித‌னென்றும், அவ‌னைத் திரும‌ண‌ம் செய்ய‌ப் போகும் பெண் கொடுத்து வைத்த‌வ‌ள் என்றும் அவ‌ன் புக‌ழ் பாடினாள்.

மூன்று நாட்க‌ள் க‌ழித்து புஸ்தாலோவே நேரில் வ‌ந்தான். அவளிடம் அதிகம் பேசக்கூட இல்லை; ப‌த்து நிமிட‌ம் இருந்து விட்டுச் சென்று விட்டான். ஆனால் அவ‌ன் சென்ற‌வுட‌ன் அவ‌ன் நினைவாக‌வே இருந்த‌து ஒலென்காவுக்கு. அவ‌னை ம‌ன‌தார‌ நேசிக்க‌த் தொட‌ங்கினாள். அன்று இர‌வு முழுதும் க‌ண்விழித்துக் காய்ச்ச‌லுற்ற‌வ‌ள் போல் கிட‌ந்தாள். ம‌றுநாள் உட‌ன‌டியாக‌ அந்த‌ முதிய‌ பெண்ம‌ணியைக் கூப்பிட்ட‌னுப்பினாள். இவ‌ர்க‌ளிருவ‌ருக்கும் அவ‌ள் திரும‌ண‌ம் பேசி முடித்தாள்.

ஒலென்காவும் புஸ்த‌லோவும் இனிதே வாழ்க்கை ந‌ட‌த்தினார்க‌ள். மதிய‌ உண‌வு வேளை வ‌ரை அவ‌ன் அலுவ‌ல‌க‌த்தில் அம‌ர்ந்திருப்பான். பிற‌கு வியாபார‌ விஷ‌ய‌மாய் வெளியில் செல்வான். அவ‌ன் சென்ற‌வுட‌ன் ஒலென்கா அவ‌ன‌து அலுவ‌ல‌க‌த்தில் அம‌ர்ந்து க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளைப் பார்ப்பாள். ஆர்ட‌ர்க‌ள் வ‌ந்தால் குறித்து வைப்பாள்.

"ம‌ர‌ விலை ஏறிட்டே போகுது. ஒவ்வொரு வ‌ருஷ‌மும் இருப‌து ச‌த‌ம் ஏறுது. முன்னெல்லாம் உள்ளூர்லையே வாங்கி வித்துட்டு இருந்தோம். இப்போ பாருங்க‌, வாஸிட்ச்கா ம‌ர‌ம் வாங்க‌ மொகிலேவுக்குப் போக‌ வேண்டி இருக்கு. வண்டிச் செல‌வு வேற‌." என்று மிகுந்த க‌‌‌வ‌லையும் க‌ரிச‌ன‌முமாய்த் த‌ன‌து தோழியரிடமும் வாடிக்கையாள‌ர்க‌ளிட‌மும் பேசிக் கொண்டிருப்பாள்.

என்ன‌மோ கால‌ம் கால‌மாய் ம‌ர‌வியாபார‌ம் செய்த‌வ‌ள் போல‌வும், உல‌கிலேயே அதைத் த‌விர‌ முக்கிய‌மானது வேறெதுவும் இல்லாத‌து போல‌வும் இருக்கும் அவ‌ள் பேச்சு. பேச்சினூடாக‌, "ம‌ர‌ம், ச‌ட்ட‌ம், தேக்கு, ப‌டாக்கு" என்று வார்த்தைக‌ளை அவ‌ள் அள்ளி விடுவ‌து சிரிப்பாக‌வும் ஏதோ வகையில் பரிதாபமாகவும் இருக்கும்.

இர‌வெல்லாம் அவள் கனவில் ம‌லை ம‌லையாய்க் குவிக்க‌ப் ப‌ட்டிருக்கும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ங்க‌ளும், லாரி நிறைய‌ ம‌ர‌க்க‌ட்டைக‌ளும் வ‌ரும். ஒரு நாள் ஆறடி உய‌ர‌த்துக்கு அடுக்கி வைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌க்க‌ட்டைக‌ள் ஒன்றோடொன்று மோதிச் ச‌ட‌ச‌ட‌வென்று கீழே ச‌ரிவ‌து போல் க‌ன‌வு க‌ண்டு திடுக்கிட்டுக் க‌த்தி விட்டாள்.
"என்ன‌டா ஆச்சு, கனவு கண்டு ப‌ய‌ந்துட்டியா... சாமிய‌ வேண்டிட்டுப் ப‌டு" என்று இத‌மாக‌ அவ‌ளைத் தேற்றினான் புஸ்தாலோவ்.

அவ‌ள் க‌ண‌வ‌ன‌து எண்ண‌ங்க‌ள் அவ‌ளுடைய‌துமாயின. அறை புழுக்க‌மாக‌ இருப்ப‌தாக‌ அவன் நினைத்தால் இவ‌ளுக்கும் உட‌னே விய‌ர்க்க‌த் தொட‌ங்கிவிடும்! வியாபார‌ம் ம‌ந்த‌மாக‌ப் போவ‌தாக‌ அவ‌ன் நினைத்தால் இவ‌ளுக்கும் அதே க‌வ‌லை தொற்றிக் கொள்ளூம்.

புஸ்தாலோவுக்குக் கேளிக்கைக‌ளில் விருப்ப‌மில்லை. விடுமுறை நாட்க‌ளில் வீட்டிலேயே இருக்க‌ விரும்பினான். இவ‌ளுக்கும் அதுவே ப‌ழ‌க்க‌மாயிற்று.
"ஏன் இப்படி வீட்ல‌யே அடைஞ்சு கிட‌க்கே ஒலென்கா. நாட‌க‌ம், ச‌ர்க்க‌ஸ், இப்ப‌டி எதுக்காவ‌து போயிட்டு வ‌ர‌லாம்ல‌?" என்று அவ‌ள‌து ந‌ண்பர்க‌ள் கேட்டால்,

"வாஸிட்ச்காவுக்கும் என‌க்கும் நாடகம் பாக்கவெல்லாம் நேர‌மே இல்ல‌. அந்த‌ மாதிரி வெட்டிப் பொழுது போக்க‌ என்ன‌ அவ‌சிய‌ம்?"

ச‌னிக்கிழ‌மைக‌ளில் புஸ்தாலோவும் அவ‌ளும் மாலை ச‌ர்ச்சுக்குச் செல்வார்க‌ள். விடுமுறை நாட்க‌ள‌ன்று காலையிலேயே சென்று விடுவார்க‌ள். அழ‌கிய‌ ப‌ட்டாடை ப‌ள‌ப‌ள‌க்க‌ அவ‌னுட‌ன் அவ‌ள் ந‌ட‌ந்து செல்கையில் அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் சுற்றி இனிய‌ ந‌றும‌ண‌மும் சாந்த‌மான‌ ஒரு அமைதியும் நில‌வுவ‌தை உண‌ர‌ முடியும்.

அவ‌ர்க‌ள் ஓர‌ள‌வு வ‌ச‌தியாக‌வே இருந்த‌ன‌ர். வீட்டில் எப்போதும், ப‌ல‌வ‌கை ரொட்டிக‌ளும் ஜாம்க‌ளும் கேக்குக‌ளும் இருந்த‌ன‌. தின‌மும் ப‌க‌ல் ப‌ன்னிர‌ண்டு ம‌ணிக்கு இறைச்சியும் காய்க‌றி வ‌கைக‌ளும் கொதிக்கும் ம‌ண‌மும், நோன்பு நாட்க‌ள‌ன்று மீன் வ‌றுக்கும் ம‌ண‌மும் அவ‌ர்க‌ள் வீட்டைக் க‌ட‌ந்து செல்ப‌வ‌ர்கள் வாயில் நீரூற வைக்கும்.

அலுவ‌ல‌க‌த்திலும் தேனீர் த‌யாரிக்கும் ச‌மோவார் கொதித்துக் கொண்டே இருக்கும். வரும் எல்லா வாடிக்கையாளர்களுக்குப் பிஸ்கெட்டுகளுடன் தேனீர் உப‌சரிப்பாள் ஒலென்கா.

வார‌ம் ஒருமுறை ஏரிக்க‌ரைக்குச் சென்று ஆசைதீர‌ நீராடி விட்டு வ‌ருவார்க‌ள்.

"ஆமாம், எங்க‌ளுக்கு ஆண்ட‌வ‌ன் புண்ணிய‌த்தால‌ ஒரு குறையுமில்ல‌. எல்லாரும் எங்க‌ளைப் போல‌ ச‌ந்தோஷ‌மா இருக்க‌ணும்னு நினைக்கிறேன்." என்பாள் ஒலென்கா.

புஸ்தாலோவ் ம‌ர‌ம் வாங்க‌ மொகிலேவுக்குச் செல்லும் போது ஒலென்கா பெரிதும் ஏக்க‌ம‌டைவாள். இர‌வெல்லாம் விழித்துக் கிட‌ந்து அழுவாள். அப்போது அவ‌ர்க‌ள் வீட்டின் ஒரு ப‌குதியில் வாட‌கைக்கு இருந்த‌ ஸ்மிர்ணின் என்ற‌ கால்ந‌டை ம‌ருத்துவ‌ன், அவ‌ளுட‌ன் சில‌ ச‌ம‌ய‌ம் வ‌ந்து பேசிக் கொண்டிருப்பான். மாலை வேளைக‌ளில் அவ‌ள் த‌னிமையைப் போக்க‌ அவ‌ளுட‌ன் வ‌ந்து சீட்டு விளையாடுவான்.
அவ‌ன் சொந்த‌ வாழ்க்கையைக் கேட்ட பிறகு ஒலென்காவுக்கு அவன் மீது மிகுந்த‌ க‌ரிச‌ன‌ம் ஏற்ப‌ட்ட‌து. அவ‌னுக்குத் திரும‌ண‌மாகி ஒரு சின்ன‌ ம‌க‌னும் இருந்தான். ஆனால் அவ‌ன் ம‌னைவி அவ‌னுக்குத் துரோக‌மிழைத்து விட்ட‌தால் அவ‌ளிட‌மிருந்து பிரிந்து வாழ்கிறான். அவ‌ளை வெறுத்தாலும் ம‌க‌னுக்காக‌ வேண்டி மாத‌ம் அவ‌ளுக்குப் ப‌ண‌ம் அனுப்பும்ப‌டி க‌ட்டாய‌த்திலிருக்குறான். இதையெல்லாம் கேட்ட‌ பின்பு ஒலென்காவுக்கு மிகுந்த‌ ப‌ரிதாப‌மேற்ப‌ட்ட‌து.

"க‌ட‌வுள் உன்னை ஆசிர்வ‌திக்க‌ட்டும். எனக்காக இங்கே வ‌ந்திருந்து பேசிக்கிட்டிருந்த‌துக்கு ந‌ன்றி." என்று அவ‌ன் விடை பெறும் போது அவன் கையில் ஒரு மெழுகு வர்த்தியையும் ஏற்றிக் கொடுத்து வ‌ழிய‌னுப்புவாள்.

மேலும், எப்போதும் த‌ன‌து க‌ணவனிடம் கண்டது போல‌வே பேச்சிலும் ந‌ட‌த்தையிலும் ஒரு மிடுக்கையும் நாக‌ரிக‌த்தையும் ப‌ழ‌க்கிக் கொண்டாள்.அவன் கடைசிப் படி இறங்கும் போது சொல்வாள்:
"இங்க‌ பாரு, நீ உன் ம‌னைவியோட‌ ச‌மாதான‌மா போயிட‌ற‌து தான் ந‌ல்ல‌து. உன‌க்காக‌ இல்லாட்டியும் உன் ம‌க‌னுக்காக‌ நீ அவ‌ளை ம‌ன்னிச்சுட‌ணும்."

புஸ்தாலோவ் திரும்பி வ‌ந்த‌தும் அவனிடம் ஸ்மிரினினைப் ப‌ற்றியும் அவ‌ன‌து துய‌ர‌மான‌ குடும்ப‌ வாழ்வைப் ப‌ற்றியும் சொன்னாள். இருவ‌ரும் அப்பாவைப் பிரிந்து ஏங்கும் அந்த‌ச் சிறுவ‌னை நினைத்து வ‌ருந்துவார்க‌ள். பின்பு ஏதேதோ பேச்சின் இறுதியாக‌ இருவ‌ரும் க‌ட‌வுள் படத்துக்கு முன் சென்று வ‌ண‌ங்கித் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென‌ வேண்டிக்கொள்வார்க‌ள்.

இப்ப‌டியாக மிகுந்த அன்போடும் இசைவோடும் அவர்கள் வாழ்ந்து ஆறு ஆண்டுக‌ள் ஓடி விட்ட‌ன‌.

என்ன‌ கொடுமை...குளிர்கால‌த்தில் ஒரு நாள், ஏதோ அவ‌ச‌ர‌ வேலையாக‌ வெளியில் சென்றான் புஸ்தாலோவ். த‌லைக்குத் தொப்பி அணிந்து கொள்ளாம‌ல் கொடும்ப‌னியில் ந‌னைந்து வ‌ந்த‌ அவ‌ன் க‌டுமையாக‌க் காய்ச்ச‌லுற்றான். எவ்வ‌ள‌வோ சிற‌ந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைத்துப் பார்த்தாலும் ப‌ல‌ன‌ளிக்காம‌ல் நான்கு மாத‌ங்க‌ளுக்குப் பின் உட‌ல் மோச‌ம‌டைந்து இற‌ந்து போனான். ஒலென்கா ம‌றுப‌டியும் வித‌வையானாள்.

"அய்யோ! என‌க்கு யாருமே இல்லியே. கொடுமையான வேதனையைத் தந்துட்டு, இந்த‌ உல‌க‌த்துல‌ என்னைத் த‌னியா விட்டுட்டுப் போயிட்டியே... என‌க்காக‌ இர‌க்க‌ப்ப‌ட‌ யாருமே இல்லையா... " நெஞ்சொடியக் கதறினாள் ஒலென்கா.

அதன் பிறகு, இழ‌வுக்காக‌ அணியும் க‌றுப்பு உடைக‌ளையே எப்போதும் அணிய‌த் தொட‌ங்கினாள். தொப்பிக‌ளும் கையுறைக‌ளும் அணிவ‌தையே விட்டு விட்டாள். ச‌ர்ச்சுக்கும் த‌ன் க‌ண‌வ‌னின் க‌ல்ல‌றைக்கும் த‌விர‌ எங்கும் வெளியில் செல்வ‌தில்லை. ஒரு துற‌வியைப் போல‌ வாழ‌ ஆர‌ம்பித்தாள். ஆறு மாத‌ங்க‌ளுக்குப் பிற‌கு தான் வீட்டின் ஜ‌ன்ன‌ல்க‌ளையே திற‌ந்து விட்டாள். கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ க‌டைத்தெருவுக்கும் செல்ல‌ ஆர‌ம்பித்தாள். ஆனாலும் அவ‌ள் வீட்டில் எப்ப‌டித் தன்னந்தனியாகப் பொழுதைப் போக்கினாள் என்ப‌து எல்லாருக்கும் புதிராக‌வே இருந்த‌து.

பிறகு அதுவும் கொஞ்ச‌ம் புரிய‌ ஆர‌ம்பித்த‌து. சில‌ நாள் அவ‌ள் த‌ன‌து தோட்ட‌த்தில் அம‌ர்ந்து அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌ன் ஸ்மிரினினுட‌ன் தேநீர் அருந்துவ‌தையும் அவ‌ன் அவ‌ளுக்குச் செய்தித் தாள்க‌ள் வாசித்துக் காட்டுவ‌தையும் சில‌ர் பார்த்த‌ன‌ர். மேலும் ஒரு நாள் அவ‌ளைச் சாலையில் ச‌ந்தித்த‌ பெண்ணிட‌ம் அவ‌ள் பேசும் போது, "இந்த‌ ஊர்ல‌ ஆடு மாடுங்க‌ளுக்கு ஒழுங்கான‌ ஆஸ்ப‌த்திரியே இல்ல‌. அதான் எல்லா நோய்த் தொற்றுக்கும் கார‌ண‌ம். குதிரைங்க‌ கிட்டேந்தும், மாடுங்க‌ கிட்டேந்தும், பால்லெந்தும் தான் ஜ‌ன‌ங்க‌ளுக்கு நிறைய‌ நோய் ப‌ர‌வுது. ம‌னுச‌ங்களுக்குப் பாக்கற‌ மாதிரியே அதுங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ வைத்திய‌ம் பாக்க‌ணும்."

அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌னின் வார்த்தைக‌ளை அப்ப‌டியே ஒப்பித்தாள். இப்போது எல்லாவற்றிலும் அவ‌னுடைய‌ நிலைப்பாடு தான் அவ‌ளுக்கும்!யாரையும் நேசிக்காம‌ல் அவ‌ளால் ஒரு வ‌ருட‌ம் கூட‌ உயிர் வாழ‌ முடியாது என்ப‌து இப்போது தெள்ள‌த் தெளிவாகி விட்ட‌து.

வேறு யாராவ‌தென்றால் இம்மாதிரியான‌ ந‌ட‌த்தை கேள்விக்குள்ளாக்க‌ப் ப‌ட்டிருக்கும். ஆனால் ஒலென்காவைப் ப‌ற்றி யாராலும் த‌ப்பாக‌ நினைக்க‌ முடிய‌வில்லை. அவளது இய‌ல்புக்கு அது மிக‌வும் பொருத்த‌மாக‌வே இருந்த‌து. அதனால் அவளுக்கும் அவளது புதிய நண்பனுக்கும் எவ‌ரிட‌மும் த‌ங்க‌ள் செய‌ல்க‌ளுக்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏற்ப‌ட‌வில்லை. த‌ங்க‌ள் உற‌வை ம‌றைக்க‌வும் வேண்டி இருக்க‌வில்லை. அப்ப‌டியே முய‌ன்றிருந்தாலும் எந்த‌ ர‌க‌சிய‌த்தையுமே காப்பாற்ற‌ இய‌லாத‌ ஒலென்காவால் அது முடிந்திருக்காது.

அவ‌னைச் ச‌ந்திக்க‌ அவ‌ன‌து மருத்துவ‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரும் போது அவ‌ர்க‌ளுக்குத் தேனீரோ உண‌வு வ‌கைக‌ளோ கொடுத்து உப‌ச‌ரிக்க‌ வ‌ரும் ஒலென்கா கால்ந‌டை நோய்க‌ளைப் ப‌ற்றியும், க‌சாப்புக் க‌டைக‌ளின் சுத்த‌மின்மை ப‌ற்றியும் விலாவாரியாக‌ப் பேச‌த் தொட‌ங்குவாள். அவ‌னுக்கோ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌மாக‌ இருக்கும். விருந்தின‌ர்க‌ள் போன‌ பின்பு, அவ‌ள் கைக‌ளைப் ப‌ற்றி ஆத்திர‌த்துட‌ன்:

"உன‌க்கு எத்த‌னை வாட்டி சொல்ற‌து? உன‌க்குப் புரியாத‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌த்திப் பேசாதே. நாங்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் சீரியஸாப் பேசிக்கிட்டிருக்கும் போது வ‌ந்து க‌ண்ட‌ப‌டி இடையில‌ உள‌றாதே. ம‌கா எரிச்ச‌லா இருக்கு."

ஆச்ச‌ரிய‌மும் வ‌ருத்த‌முமாய் அவ‌னைப் பார்த்துக் கேட்பாள் ஒலென்கா."ஆனா நான் என்ன‌ தான் பேச‌ற‌து விள‌திமீர்?"

க‌ண்க‌ளில் க‌ண்ணீருட‌ன் அவ‌னை அணைத்துக் கொண்டு த‌ன்னிட‌ம் கோப‌ம் கொள்ள‌ வேண்டாமென்று இறைஞ்சுவாள். அவ‌ன் ச‌மாதான‌ம‌டைவான். இருவ‌ரும் ச‌க‌ஜ‌நிலைக்குத் திரும்பிவிடுவார்க‌ள்.

ஆனால் இந்த‌ ம‌கிழ்ச்சி ரொம்ப‌ நாள் நிலைக்க‌வில்லை. இராணுவ‌த்தைச் சேர்ந்த‌ மருத்துவனான‌ அவ‌ன் சைபீரியாவோ ஏதோ ஒரு இட‌த்துக்கு மாற்ற‌ப்ப‌ட்டான். ஒலென்கா மீண்டும் த‌னிய‌ளானாள்.

இப்போது தான் அவ‌ள் முற்றும் த‌னிமையை உண‌ர்ந்தாள். அவ‌ள‌து த‌ந்தை இற‌ந்து வெகு கால‌மாகி விட்ட‌து. அதோ, அவ‌ர‌து சாய்வு நாற்காலி ஒரு கால் உடைந்து ப‌ர‌ணில் கிட‌க்கிற‌து. அவ‌ள் உடல் மெலுந்து பொலிவிழ‌ந்து வ‌ந்தாள். தெருவில் அவ‌ளைப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் முன்போல் அவ‌ளைக் க‌ண்டு கொள்வ‌தோ சிரித்துப் பேசுவ‌தோ இல்லை. அவ‌ள் இள‌மையின் உச்ச‌க‌ட்ட‌ கால‌ங்க‌ள் முடிவ‌டைந்து விட்ட‌ன‌. எதிர்ப்ப‌டும் கால‌ம் எப்ப‌டி இருக்குமென‌ யோசிக்க‌வே அவ‌ளால் முடிய‌வில்லை.

இன்றும் வீட்டு வ‌ராந்தாவில் அம‌ர்ந்து டிவோலியின் நாட‌க‌ ஒத்திகைச் ச‌த்த‌ங்க்ளைக் கேட்கிறாள். ஆனால் இப்போது அது அவளுள் எவ்வித‌ ச‌ல‌ன‌த்தையும் ஏற்ப‌டுத்த‌வில்லை.எதையுமே சிந்திக்காம‌ல், எதையுமே விரும்பாம‌ல், எத‌ற்காக‌வும் ஏங்காம‌ல் இர‌வு வ‌ரை அங்கு அம‌ர்ந்திருந்து விட்டு ப‌டுக்கைக்குச் சென்றாள். இய‌ந்திர‌ம் போல் உண்டு உற‌ங்கினாள்.

அதை விட‌க் கொடுமை என்ன‌வென்றால் இப்போதெல்லாம் அவ‌ளுக்கென்று அபிப்பிராயங்களே இல்லை. எல்லாவ‌ற்றையும் பார்க்கிறாள், புரிந்து கொள்கிறாளே ஒழிய‌ எதைப் ப‌ற்றியும் ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியாம‌ல் த‌வித்தாள். குகினோ, புஸ்தாலொவோ அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌னோ அவ‌ளுட‌ன் இருந்த‌ போது எல்லாவ‌ற்றையும் ப‌ற்றிக் அழுத்த‌மான‌ க‌ருத்துக்க‌ள் வைத்திருந்தாள். இப்போது அவ‌ள‌து வீட்டைப் போல‌வே சிந்தையிலும் ஒரு வெறுமை குடி கொண்டிருந்த‌து. எட்டிக்காயை வாயிலிட்ட‌து போல் அது அவ‌ளுக்கு சொல்ல‌வொணாக் க‌ச‌ப்பைத் த‌ந்து கொண்டிருந்த‌து.

கால‌ம் வேக‌மாக ஓடி விட்ட‌து. ஊர் வ‌ள‌ர்ந்து கொண்டே இருந்த‌து. டிவோலி இருந்த‌ இட‌த்தில் புதிய‌ வீடுக‌ளும் க‌ட்ட‌ட‌ங்க‌ளும் வ‌ந்து விட்ட‌ன‌. ஒலென்காவின் வீடு ப‌ழுத‌டைந்து கூரையும் துருப்பிடித்து விட்ட‌து. தோட்ட‌ம் முழுதும் முட்செடிக‌ளும் புத‌ர்க‌ளும் நிறைந்திருந்த‌ன‌. ஒலென்காவும் இள‌மையின் ஒளி நீங்கிய‌வ‌ளாய் வ‌ய‌தாகிக் க‌ளைத்திருந்தாள். தாங்க‌ முடியாத வெறுமையோடு இர‌வு ப‌க‌லைக் க‌ட‌த்திக் கொண்டிருந்தாள்.

வ‌ச‌ந்த‌ கால‌ங்க‌ளில் ச‌ர்ச் ம‌ணிக‌ள் ஒலிக்கும் போது திடீரென்று ஏதேதோ ப‌ழைய‌ நினைவுக‌ள் அவ‌ள் நெஞ்சில் வ‌ந்து மோதும். ச‌ட்டென்று க‌ண்க‌ள் நிர‌ம்பும். ஆனால் அடுத்த‌க‌ண‌மே அவ‌ள்வாழ்வின் நீக்க‌ம‌ற‌ நிறைந்திருந்த‌ வெறுமை எட்டிப் பார்த்து எல்லாம் மாயையென்று உண‌ர‌ வைக்கும்.

அவ‌ள‌து செல்ல‌ப் பூனை வ‌ந்து அவள் காலை உர‌சிக் கொஞ்சுவ‌து கூட‌ அவ‌ள் ம‌ன‌துக்கு இத‌ம‌ளிப்ப‌தில்லை. அவ‌ளுக்கு அதெல்லாம் போத‌வில்லை. அவ‌ள் உட‌லையும் ஆன்மாவையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும்ப‌டியான‌தொரு அன்பை எதிர்பார்த்தாள். அவ‌ள் வாழ்க்கைக்கு ஒரு நோக்க‌மும் அர்த்த‌மும் அளிக்க‌க்கூடிய‌, சில்லிட்டுப் போன‌ அவ‌ள‌து உடலில் புது இர‌த்த‌ம் பாய்ச்ச‌க் கூடிய‌, அப்ப‌டி ஒரு அன்புக்காக‌ ஏங்கினாள். காலை ஒண்டிய பூனையை உத‌றிய‌ப‌டி, "போ அந்த‌ண்ட‌.." என்று எரிச்ச‌லுட‌ன் க‌த்துவாள்.

இப்ப‌டியாக‌ ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ன‌ - எந்த‌ ச‌ந்தோஷ‌மும் இல்லாம‌ல்; எவ்வித‌ நிலைப்பாடுக‌ளும் இல்லாம‌ல். வீட்டுச் ச‌மைய‌ல்காரி மாவ்ரா எது சொன்னாலும் ஆமோதித்தாள்.

ஜூலை மாத‌த்தில், க‌டுமையான‌ கோடைகால‌த்தில் ஒரு நாள், யாரோ வீட்டுக் க‌தவைத் த‌ட்டினார்க‌ள். க‌த‌வைத் திற‌ந்த ஒலென்கா ஆச்ச‌ரிய‌த்தில் பேச்சிழ‌ந்து போனாள். அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌ன் ஸ்மிரினின் தான் நின்று கொண்டிருந்தான். த‌லையெல்லாம் ந‌ரைத்துப் போய்ச் சாமான்ய‌ ம‌னித‌னாய்க் காட்சிய‌ளித்தான்.

ச‌ட்டென்று அவ‌ன் நெஞ்சில் த‌லையைச் சாய்த்து அழ‌த்தொட‌ங்கினாள். உடைந்து பொங்கிய‌ உண‌ர்ச்சிக‌ளின் வீரிய‌த்தில், எப்ப‌டி அவனுடன் உள்ளே வ‌ந்து அம‌ர்ந்தோம் என்று கூட‌ அவ‌ளுக்குத் தெரிய‌வில்லை.

"என் அன்பே விள‌திமீர்...எப்ப‌டி இங்கே திடீர்னு?" ம‌கிழ்ச்சியில் அவ‌ளுக்குக் குர‌ல் ந‌டுங்கிய‌து.

"நான் இங்கேயே த‌ங்கிட‌லாம்னு வ‌ந்துட்டேன் ஓல்கா. இராணுவத்துல என் வேலையை ராஜினாமா ப‌ன்ணிட்டேன். சொந்த‌மா ம‌ருத்துவ‌ம் ப‌ண்ண‌லாம்னு. என் பைய‌னையும் இனிமே ப‌ள்ளிக்கூட‌த்துல‌ சேர்க்க‌ணும். இப்போ பெரிய‌ பைய‌னாயிட்டான். தெரியுமா, என் பொண்டாட்டியோட‌ நான் இப்ப‌ ராசியாயிட்டேன்."

"அவ‌ எங்கே?" ஒலென்கா கேட்டாள்.

அவ‌ பைய‌னோட‌ ஹோட்ட‌லில் இருக்கா. நான் வீடு தேடி இந்த‌ப் ப‌க்க‌ம் வ‌ந்தேன்.

"ந‌ல்லாக் கேட்டே போ. வீடு தேட‌றியா? ஏன், என் வீடு போதாதா? அட‌க்க‌ட‌வுளே! இங்கே தாராள‌மா இருந்துக்கோங்க‌. நான் வாட‌கை கூட‌ வாங்க‌ மாட்டேன். நீங்க‌ இங்க‌ பெரிய‌ வீட்ல‌ இருந்துக்கோங்க‌. நீ முன்ன‌ த‌ங்கின‌ சின்ன‌ போர்ஷ‌ன் என‌க்குப் போதும். ஹைய்யோ! எவ்ளோ ச‌ந்தோஷ‌மா இருக்கு என‌க்கு." ப‌ட‌ப‌ட‌வென‌ப் பேசிய‌தில் ஒலென்காவுக்கு மீண்டும் க‌ண்க‌ள் நிறைந்து வ‌ழிந்த‌ன‌.

அடுத்த‌ நாள் கூரைகளுக்குப் புது வ‌ர்ண‌ம‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. சுவ‌ர்க‌ள் வெள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஒலென்கா புதுத் தெம்புட‌ன் கைக‌ளை இடுப்பிலூன்றிய‌ப‌டி எல்லாவ‌ற்றையும் சிர‌த்தையுட‌ன் மேற்பார்வையிட்டாள்.

அவ‌ள் முக‌த்தில் ப‌ழைய‌ சிரிப்பும் குதூக‌ல‌மும் தென்ப‌ட்ட‌து. நீண்ட‌ துயிலிலிருந்து எழுந்த‌வ‌ள் போல் சுறுசுறுப்பாக‌வும் உற்சாக‌த்துட‌னும் அங்குமிங்கும் அலைந்து ஆட்க‌ளை ஏவிக் கொண்டிருந்தாள். ம‌ருத்துவ‌னின் ம‌னைவி வ‌ந்து சேர்ந்தாள். அவ‌ள் பார்க்க ரொம்பவும் சாதாரணமாக, ஒல்லியாகவும் குட்டையான‌ த‌லைமுடியுடனும், சதா எரிச்சலான‌ முக பாவத்துடனும் இருந்தாள்.

அவ‌ளுட‌ன் அவ‌ள‌து பத்துவயது மகன் சாஷாவும் வ‌ந்திருஇந்தான். நீல நிறக் கண்களுடன், குழிவிழுந்த‌ க‌ன்ன‌ங்க‌ளோடு, அவ‌ன் வ‌ய‌துக்கு ரொம்ப‌ச் சின்ன‌ப் பிள்ளை போன்றிருந்தான். உள்ளே வ‌ந்த‌து தான் தாம‌த‌ம், தோட்ட‌த்தில் திரிந்து கொண்டிருந்த‌ பூனையின் பின் ஓடினான். சிரித்துக் கொண்டே ஒலென்காவிடம் கேட்டான். "இது உங்க பூனையா ஆன்ட்டி? இது குட்டி போட்டா எங்களுக்கு ஒண்ணு குடுக்க்றீங்களா? அம்மாவுக்கு எலிங்கன்னா ரொம்பப் பயம்."

ஒலென்கா அவ‌னுட‌ன் அன்பாக‌ப் பேசி அவ‌னுக்குத் தேனீர் கொடுத்தாள். அவ‌ள் இத‌ய‌த்தில் சொல்ல‌த் தெரியாத‌ ஒரு சுக‌மான‌ வ‌லி ஏற்ப‌ட்ட‌து. அவ‌ள் பெறாத‌ குழ‌ந்தையிட‌ம் உண‌ர்வ‌தைப் போன்றதொரு தனிப்பாச‌த்தை அவ‌னிட‌ம் உண‌ர்ந்தாள்.

மாலை வேளைகளில் அவன் தன் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் அவனருகே அமர்ந்து அன்பு ததும்ப அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

"என் அழகுச் செல்லமே...! என் தங்கம், எவ்ளோ சமத்து, எவ்ளோ அறிவு" என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்.

"தீவு எனப்படுவது எல்லாப்பக்கமும் நீரால் சூழப்பட்ட இடமாகும்" - அவன் உர‌க்க‌ப் ப‌டித்தான்.

"தீவு என‌ப்ப‌டுவ‌து...." அவ‌ள் திருப்பிச் சொன்னாள். வெறுமையும் மௌனமுமாய்க் கழித்த எத்தனையோ வருடங்களுக்குப் பிற‌கு அவ‌ள் அழுத்த‌மான‌ ந‌ம்பிக்கையுட‌ன் கொண்ட‌ முத‌ல் க‌ருத்து இது தான்.

இப்போது அவ‌ளுக்கு மீண்டும் நிலைப்பாடுக‌ளும் க‌ருத்துக்க‌ளும் ஏற்ப‌ட‌த் தொட‌ங்கின. தின‌மும் இர‌வு உண‌வின் போது சாஷாவின் பெற்றோரிட‌ம் பேசுவாள். ப‌ள்ளிக‌ளில் பாட‌ங்க‌ள் எவ்வ‌ள‌வு க‌டினமாய் இருக்கின்ற‌ன‌ என்றும், ஆனாலும் அது பிள்ளைக‌ள் ந‌ல்ல‌ நிலைக்கு வர ‍‍ (டாக்ட‌ராக‌வோ இஞ்சினிய‌ராக‌வோ) எவ்வ‌ள‌வு முக்கிய‌மென்றும்.

சாஷா ஒழுங்காகப் ப‌ள்ளி செல்ல‌த் துவ‌ங்கினான். அவ‌ன் அம்மா த‌ன‌து த‌ங்கை வீடு இருக்கும் ஹார்கோவ் என்ற‌ ஊருக்குச் சென்று விட்டாள்; திரும்பி வ‌ர‌வே இல்லை. அவ‌ன் அப்பாவோ கால்நடைக‌ளைப் ப‌ரிசோதிக்க‌ ஊர் ஊராக‌ச் சுற்றிக் கொண்டிருந்தார். சாஷா முற்றிலும் கைவிட‌ப்ப‌ட்ட‌வ‌னாக‌ ஒலென்காவுக்குத் தோன்றிய‌து. பிள்ளை ஒழுங்காக‌க் க‌வ‌னிக்க‌க் கூட‌ ஆளில்லாம‌ல் ப‌ட்டினி கிட‌ப்ப‌தாக‌ எண்ணிய‌ ஒலென்கா அவ‌னைத் தன் பகுதிக்கு அழைத்து வ‌ந்து த‌ங்க‌ வைத்தாள்.

அடுத்த‌ ஆறு மாத‌ங்க‌ள் சாஷா அவ‌ளுட‌ன் த‌ங்கி இருந்தான். தின‌மும் காலையில் ஒலென்கா அவ‌ன‌து அறைக்கு வருவாள். கன்னத்தின் அடியில் கை வித்து ஆழ்ந்து உற‌ங்கிக் கொண்டிருக்கும் அவனை பார்த்து அவ‌ளுக்கு எழுப்ப‌வே ம‌ன‌ம் வ‌ராது. மிக‌வும் க‌னிவாக‌, மெதுவாக‌ அழைப்பாள், "சாஷாக் க‌ண்ணு, எழுந்திருடா செல்லாம். ஸ்கூலுக்கு நேர‌மாச்சு பாரு."

அவ‌ன் எழுந்து குளித்து உடை மாற்றிச் சாப்பிட‌ வ‌ருவான். அவ‌னுக்குத் தேநீரும் பிஸ்க‌ட்டுக‌ளும், வெண்ணெய் த‌ட‌விய‌ ரொட்டியும் த‌ருவாள். தூக்க‌க்க‌ல‌க்க‌த்தில் ச‌ற்று எரிச்ச‌லுட‌ன் சாப்பிட்டுக் கொண்டிருப்பான் அவ‌ன்.

"நீ வாய்ப்பாடே ஒழுங்கா சொல்ற‌தில்ல‌ சாஷாக்குட்டி. உன்னால‌ என‌க்கு எவ்ளோ க‌வ‌லை தெரியுமா. நீ ந‌ல்லாப் ப‌டிக்க‌ணும். டீச்ச‌ருங்க‌ சொல்ற‌ப‌டி கேக்க‌ணும்." என்று நீண்ட தூரம் பயணம் போகிறவனுக்குச் சொல்வதைப் போல அவ‌னுக்கு அறிவுரை ம‌ழை பொழிய‌ ஆர‌ம்பிப்பாள்.

"அய்யோ..ஆளை விடு" என்பான் சாஷா.

பின்பு அவ‌ன் தலைக்குத் தொப்பியும் தோளில் புத்தகப் பையையும் மாட்டிக் கொண்டு ப‌ள்ளிக்கு ந‌ட‌ந்து செல்வான். ஒலென்கா ச‌த்த‌மில்லாம‌ல் அவ‌னைப் பின் தொட‌ருவாள்.

"சாஷாக் குட்டி" என்று அவ‌னை அழைத்து அவ‌ன் கையில் ஏதோ ஒரு தின்ப‌ண்ட‌த்தைத் திணிப்பாள். அவ‌ன் ப‌ள்ளி இருக்கும் தெரு வ‌ந்த‌தும், அவ்வள‌வு பெரிய மனுஷி ஒருத்தி த‌ன்னைப் பின்தொட‌ர்வ‌து ப‌ற்றி அவ‌ன் வெட்கம‌டைவான்.

"நீ வீட்டுக்குப் போ ஆன்ட்டி. நானே போய்க்கிறேன்."

அவ‌ள் அங்கேயே நின்று ப‌ள்ளி வாச‌ல் தாண்டி அவ‌ன் ம‌றையும் வ‌ரை பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஓ! அவ‌ள் தான் அவ‌னை எப்ப‌டி நேசித்தாள். அவ‌ள‌து முந்தைய பிரிய‌ங்க‌ளெல்லாம் இந்த‌ அள‌வு ஆழ‌மாக இருந்த‌தில்லை. இந்த‌ அள‌வு த‌ன்னிச்சையாக‌, எந்த‌வித‌ எதிர்பார்ப்புமில்லாம‌ல், முற்றிலுமாய் அவ‌ளது ஆன்மா எங்குமே ச‌ர‌ண‌டைந்த‌தில்லை. இந்த‌ச் சிறு பைய‌னுக்காக‌வும் அவ‌ன் க‌ன்ன‌த்தில் விழும் குழிக்காக‌வும் அவ‌ள் த‌ன் உயிரையே கொடுக்க‌த் த‌யாராக இருந்தாள்‍ ‍- அதுவும் ப‌ரிபூர‌ண‌ ச‌ந்தோஷ‌த்துட‌ன். ஏன்? ஏனென்று யாரால் தான் சொல்ல‌ முடியும்?

சாஷாவைப் ப‌ள்ளி வ‌ரையில் கொண்டு விட்ட‌தும் மிகுந்த‌ ம‌ன‌நிறைவுட‌னும் நெஞ்ச‌ம் நிறைந்து த‌ளும்பும் அன்புட‌னும் நிம்ம‌தியாக‌ வீடு திரும்புவாள். இந்த் ஆறுமாத‌ங்க‌ளாக லேசாகச் சதை போட்டுச் ச‌ற்று இள‌மை திரும்பி இருக்கும் அவ‌ள‌து முக‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌மெல்லாம் சிரித்துப் பேசும்.

அவ‌ர்க‌ளும் அதே உற்சாக‌த்துட‌ன் கேட்பார்க‌ள்: "வ‌ண‌க்க‌ம் ஓல்கா செல்ல‌ம், எப்ப‌டி இருக்கே?"

"அதை ஏன் கேக்க‌றீங்க‌. ஸ்கூல்ல‌ பாட‌மெல்லாம் ரொம்ப‌க் க‌ஷ்ட‌மா இருக்கு. சேர்ந்த முதல் நாள்ளயே வாய்ப்பாட்டை ம‌ன‌ப்பாட‌ம் செய்ய‌ச் சொல்லி இருக்காங்க‌. அப்புற‌ம் ஒரு ல‌த்தீன் மொழிபெய‌ர்ப்பு, அப்புற‌ம் க‌ண‌க்குல வேற‌ வீட்டுப் பாட‌ம். சின்ன‌ப் பைய‌னுக்கு இதெல்லாம் ரொம்ப‌ அதிக‌மில்ல?"

அப்புற‌ம் ஆசிரிய‌ர்க‌ளைப் ப‌ற்றி, பாட‌ங்க‌ளைப் ப‌ற்றி, புத்த‌க‌ங்க‌ளைப் ப‌ற்றியெல்லாம் சாஷா என்னென்ன சொல்லி இருந்தானோ அதையெல்லாம் அப்படியே திருப்பிச் சொல்வாள்.

மூன்று ம‌ணிக்கு அவ‌ன் திரும்பிய‌தும் இருவ‌ரும் ஒன்றாக‌ அம‌ர்ந்து சாப்பிடுவார்க‌ள். அவ‌னுட‌ன் உட்கார்ந்து அவ‌ளும் பாட‌ம் ப‌டிப்பாள். அவ‌னைப் ப‌டுக்க‌ வைத்து வெகு நேர‌ம் ஜெப‌ம் செய்து அவ‌ன் நெஞ்சில் சிலுவைக் குறியிடுவாள். பின்பு த‌ன் ப‌டுக்கைக்குத் திரும்பி சாஷா ப‌டித்து முடித்து டாக்டாராவ‌து மாதிரி, இஞ்சினிய‌ராவ‌து மாதிரி எல்லாம் க‌ன‌வு காணுவாள்.

அவ‌ன் பெரிய‌ வீடு, குதிரைவ‌ண்டிக‌ள் வைத்திருப்பானாம். திரும‌ண‌மாகிக் குழந்தைக‌ள் இருக்குமாம். ஒவ்வொரு நாளும் இதே மாதிரிக் க‌ன‌வுக‌ளுட‌ன் அவ‌ள் தூங்கிப் போவாள். அவ‌ள் தூங்கிய‌ பின்பும் அவ‌ள் க‌ண்க‌ள் நிறைந்து க‌ண்ணீர் அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை ந‌னைத்த‌வாறிருக்கும்.

அவ‌ள‌து பூனை ம‌ட்டும் அவ‌ள‌ருகில் அம‌ர்ந்திருக்கும் "மியாவ்..." என்று மெல்லக் க‌த்திய‌படி.

திடீரென்று யாரோ க‌தவைத் த‌ட்டும் ச‌த்த‌ம் கேட்கும். ஒலென்கா ப‌ட‌ப‌ட‌க்கும் இத‌ய‌த்துட‌ன் எழுந்திருப்பாள். அரை நிமிட‌ம் க‌ழித்து மீண்டும் கேட்கும்.

'ஹார்கோவ்ல‌ருந்து த‌ந்தி வ‌ந்திருக்கும்" த‌லை முத‌ல் கால் வ‌ரை ந‌டுங்கிய‌ப‌டி எண்ண‌மிடுவாள். "சாஷாவோட‌ அம்மா அவ‌னைக் கூப்பிட்ட்ட‌னுப்பி இருப்பாங்க‌..அய்யோ அப்படி இருக்கக் கூடாது, க‌ட‌வுளே இர‌க்க‌ம் காட்டு!"

உட‌லெல்லாம் சில்லிட்டுப் போக‌ உல‌கிலேயே துய‌ர‌ம் தோய்ந்த பெண் தான்தான் என்று அவளுக்கு தோன்றும். அடுத்த‌ நிமிட‌ம் சமையற்காரியின் குர‌லிலிருந்து புரிந்து கொள்வாள். ம‌ருத்துவ‌ர் தான் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பி வ‌ருவ‌தாக‌.

"ஹ‌ப்பாடா. க‌ட‌வுளுக்கு ந‌ன்றி!"
மெல்ல‌ மெல்ல‌ இத‌ய‌த்தில் ஏறி இருந்த‌ பார‌ம் நீங்கி அமைதிய‌டைவாள். மிண்டும் ப‌டுக்கையில் வீழ்ந்து சாஷாவின் எதிர்கால‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ற்ப‌னையில் மூழ்கி விடுவாள். அவ‌னோ சில‌ ச‌ம‌ய‌ம் தூக்க‌த்தில் உள‌றுவ‌தைக் கேட்க‌லாம்.

"நல்லா குடுப்பேன் உன‌க்கு. எட்டிப் போ என்கிட்டேந்து... வாயை மூடு."

பின் குறிப்பு: ருஷ்ய எழுத்தாளர் ஆன்ட‌ன் செகாவ் எழுதிய‌ The Darling என்ற‌ சிறுக‌தையின் த‌மிழாக்க‌ம். (ஆங்கில‌த்திலிருந்து)