Wednesday, December 30, 2009

உதிரிப்பூக்கள் - 31/12/09

ஊருக்குப் போய் விட்டு வ‌ந்தோம். ஆஹா, ஏழு நாட்க‌ள் சென்னையை முற்றிலும் ம‌ற‌ந்து வேறொரு உல‌க‌த்தில் இருந்து விட்டு வ‌ந்த‌து போலிருந்த‌து.

ஒன்றும் பெரிதாக‌ இல்லை. குடும்ப‌த்தில் ஒவ்வொரு வேளையும் அனைவ‌ரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்ட‌து, அர‌ட்டை அடித்த‌து, குழ‌ந்தைக‌ளின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் குடும்பமே க‌வ‌னித்து ம‌கிழ்ந்த‌து, வாச‌ல் தெளித்துக் கலர் கோல‌ம் போட்ட‌து, அத்தை அதிர‌ச‌ம் சுட உத‌வியாக‌ மாவு த‌ட்டிக் கொடுத்த‌து, அவ்வளவு ஏன், மொட்டைமாடியில் காய்ந்த‌ துணிக‌ளை அவ‌ச‌ர‌மில்லாம‌ல், காற்று வாங்கிக் கொண்டே ம‌டித்த‌து கூட‌ பேரின்ப‌மாக‌ இருந்த‌து.

நேஹாவை அவளது தாத்தா, பாட்டி, அத்தை, மாமா , சித்தி, சித்தப்பா, அத்தாச்சி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணா, என்று உறவுகளின் அன்பில் நனைய விட்டதும், அவ‌ள் எல்லாரையும் முறை சொல்லி அழைக்கப் பழகிவிட்டதும் சொல்லிலட‌ங்கா சந்தோஷங்கள்! தரையிலிறங்கியாயிற்று இன்று! ஹூம்!

புத்தகக் கண்காட்சி
ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்க்கிறேன் . முத‌ல் முறை நான் சென்ற‌து அக்காவுட‌ன் தான். அக்கா ப‌டித்த‌ க‌ல்லூரியில் தான் அப்போது கண்காட்சி ந‌ட‌க்கும். எட்டு வ‌ய‌தான் என்னை அழைத்துச் சென்று ப‌ழ‌னிய‌ப்பா பிர‌தர்ஸ் ஸ்டாலில் கதைப்புத்த‌க‌ங்க‌ள் வாங்கிக் கொடுத்து (”எல்லாத்தையும் வீட்டுக்குப் போன‌வுட‌னே ப‌டிச்சுத் தீர்த்துடாதே. ஒவ்வொண்னா மெதுவா ப‌டி!”) கேன்டீனில் ஐஸ்க்ரீமும் ம‌சாலா தோசையும் வாங்கிக் கொடுத்த‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.
ப‌ள்ளியிலிருந்து ஒரு முறை சென்றிருந்தோம்; க‌ண்காட்சி திற‌ப்பு விழாவில் சேர்ந்திசை பாடுவதற்காக. "உண்மை அழ‌கு" என்ற பாட‌ல். பின்ன‌ணி இசையோடு பாட‌ல் முழுதும் நினைவிருக்கிற‌து. அப்போது செயின்ட் எப்பாஸ் ப‌ள்ளியில் நட‌ந்த‌து. பிற‌கு ப‌ல‌ ஆண்டுக‌ள் செல்ல‌ இய‌ல‌வில்லை. 2003க்குப் பின் தொடர்ந்து சென்றேன். க‌ட‌ந்த‌ இரு ஆண்டுக‌ளாக‌ மீண்டும் இடைவெளி.

இந்த ஆண்டு ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரின் ப‌டைப்புக்க‌ள் வெளிவ‌ருவ‌தில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். படைப்பாளிகளாகப் பரிணமித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்க‌ள்!
ஒவ்வொருமுறையும் கை நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளோடு தான் திரும்ப‌ வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் தேன் குடத்தினுள் விழுந்து மயங்கிய‌ வண்டு கணக்காய், கடல் போல் குவிந்த புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்து விட்டு வீட்டுக்கு வ‌ந்த‌தும், இவ்வ‌ள‌வு தானா வாங்கினோம் என்று ஏக்க‌ம‌டைவேன். இம்முறை அதை மாற்ற‌ வேண்டும்!

கார்க்கியின் தாய்
இந்த‌ நாவலை ebookகாக‌ ப் ப‌டித்து முடித்து வெகு நாட்க‌ளாகின்ற‌ன‌. ப‌கிர‌த்தான் ‌சமய‌ம் கிடைக்க‌வில்லை. படித்து முடித்த கையோடு ஆங்கிலத்தில் ஒரு பதிவு எழுதினேன். அந்த இளைஞர்களைப் பற்றிப் படிக்கையில் பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் எத்தகைய உலகத்துக்காகப் போராடினார்களோ அது இன்னமும் நிறைவேறவில்லை. ஆனாலும் போராடுவ‌தற்கும் புரட்சிக்குமான‌ இட‌ம் சிறிதும் இல்லாமல் இன்றைய ச‌முதாய‌ம் மழுங்கடிக்கப் ப‌ட்டுள்ள‌தோ என்று ம‌ன‌ம் வெதும்புகிற‌து.
ராதிகா (தாய்), பா.விஜ‌ய் (பாவ ‌ல்) ந‌டிக்க‌ க‌லைஞ‌ர் எழுதிய‌ தாய் காவிய‌ம் திரைப்ப‌ட‌மாக‌ வெளிவ‌ர‌ப்போவ‌தாக‌ இணைய‌ செய்திக‌ள் அறிவிக்கின்ற‌ன‌. பார்ப்போம்!

இன்னொரு புதிய ஆண்டு
Roller coaster ride என்பார்க‌ளே அதைப் போல் தான் இருநத‌து க‌ட‌ந்த‌ ஆண்டு! ப‌ல‌வித‌மான‌ புது அனுப‌வ‌ங்க‌ள். முக்கியமாக என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
நானும் ப‌திவெழுத‌ வ‌ந்து ஓராண்டு நிறைவுறுகிற‌து. இன்னும் எதையும் ஒழுங்காக‌ எழுத வில்லையென்றாலும், த‌மிழ் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும், அற்புத‌மான நட்புகள் கிடைத்ததற்கும் ப‌திவுல‌க‌ம் தான் கார‌ண‌ம். ந‌ன்றி ப்லாக்க‌ர்.காம்!

அனைவ‌ருக்கும் ம‌ன‌ம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!